21.5.26

தாழ்ப்பாள் போட முடியலைங்க...

 

கணினியோ, கதவோ..  ரிப்பர் வேலைக்கு வருகிறவர்கள் எப்படி ஒரு சுலபமான வேலை முறைக்கு பழகுகிறார்கள் என்பதை முன்னரே சொல்லி இருந்தேன்.  எதற்கு, எதில், எங்கே பிரச்னை, என்ன பிரச்னை என்று தேடி நேரத்தை வீண் செய்து கொண்டு...    சமயங்களில் அது அவர்களுக்கு தெரியவும் தெரியாது.  எனவே ஒரு வழி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

"இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல..  எந்தப் பொருளும் ஒரு வருஷத்துக்கு மேல வர்றதில்லை..   தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்க வேண்டியதுதான்.  இதை ரிப்பேர் செஞ்சா ஆகற செலவுக்கு புதுசே மாட்டிடலாம்!"

​சோம்பேறித்தனம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாமல் வேலை தெரியாத அறியாமையும் இதில் உண்டு.  பழையதை கழற்றவும், புதியதை மாட்டவும் தெரிந்திருந்தால் அவர் ஒரு நல்ல மெக்கானிக் ஆகி விடலாம்.  ஆனால் இது எண்ணிக்கை அளவில் குறைவு என்றே நினைக்கிறேன்.

இரண்டு வருடங்களுக்குமுன் எங்கள் அறைக்கதவு படாரென்று அறைந்து சாத்திக்கொள்ள, உள்ளே யாரும் இல்லை என்றாலும் கதவைத் திறக்க வேண்டிய நிர்ப்பந்தம்.  என் மகன் உடனடியாக ஒரு அபாயகரமான வழியில் இறங்கி கதவைத் திறந்தான்.  மொட்டை மாடி சென்று, அங்கிருந்து எங்கள் வீட்டு ஓபன் டெரஸில் மெல்ல இறங்கி நல்லவேளையாக திறந்திருந்த டெரஸ் கதவின் வழியே உள்ளே நுழைந்து சிரமப்பட்டு கதவைத்திறந்தான்.  தாழ்ப்பாள் செட் உடனடியாக மாற்றப்பட்டது.

இன்னொரு அறையில் தாள் இதேபோல சண்டி செய்யத் தொடங்கும்போதே நாங்கள் ஆளை வரவழைத்து விட்டோம்.  அவர் அங்கும் செட்டை மாற்றி விட்டார்.

இப்போது சமீபத்தில் எங்கள் அறைக்கதவு மீண்டும் தொந்தரவு கொடுக்கத் தொடங்கியது.  மூடிக்கொண்டால் திறப்பது மிகவும் கடினமானது.  என் லெவலில் எனக்குத் தெரிந்த ஆயில் வைத்தியம் செய்தேன்.  கொஞ்சம் சரியானாலும் மறுபடி மறுபடி பிரச்னை செய்தது.

பழைய ஆள் இப்போதெல்லாம் ராங்கி பண்ணிக்கொண்டு வருவதில்லை.  ஊரில் இல்லை என்பார்.  வெளியூரில் இருக்கிறேன் என்பார்.  நாம் வெளியே தாண்டிச் செல்லும்போது அவர் கடை தாண்டிதான் செல்ல வேண்டும்.  அங்குதான் நின்று வேலை செய்துகொண்டிருப்பார்.  இது ஒருவகை அலட்சியம்.

எனவே "கொஞ்சம் வந்து தாழ்ப்பாள் மட்டும் மாற்றிக் கொடுத்து விட்டுப் போகவும்" என  புது ஆளைக் கூப்பிட்டோம். 

அவர் இரண்டு நாட்கள் டைம் எடுத்துக் கொண்டு வந்தார்.  தாளை சோதித்தார்.  உள்ளே நின்று தாழிட்டுப் பார்த்தார்.  கதவைத் திறந்தார்.  சுத்தியலை எடுத்தார்.  நிலையில் தாள் நுழையும் இடத்தில இரண்டு உலோக பட்டைகள் இருந்தன.  அவற்றை உள்பக்கமாகவே கொஞ்சம் அடித்து,அப்புறம்கொஞ்சம் ஆழ அடித்து இறுக்கினார்.  அவ்வளவுதான்.





"அவ்வளவுதானா?"

"அவ்வளவுதான்.  செக் செய்து பாருங்க.."

சரியாய் இருந்தது.

''இது தெரியாதவர்கள்தான் உடனே தாளையே மாற்றச் சொல்வார்கள்'' என்று விட்டு மேலும் அவர் சொன்னதும் சுவாரஸ்யம்.  

" நான் இப்போ உங்களுக்காக என் ஏரியா விட்டு இங்க வந்திருக்கேன்.  சுத்தியலால் ரெண்டு தட்டு தட்டிட்டு ஐநூறு ரூபா கொடுங்கன்னா நிறையபேர் யோசிப்பாங்க...  இதுக்கு ஐநூறு ரூபாயான்னு..  கொஞ்சம் வேலை பார்த்துட்டு கேட்டா....?  ஆனா உங்களுக்கு தெரியும் இது நியாயம்னு..  இந்த டெக்னிக்குக்குதானே காசு.. இல்லையா?  இது உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா என்னை ஏன் கூப்பிட்டிருக்கப் போறீங்க?  இல்லையா?"

மௌனமாய் தலையசைத்தேன்.  ஐநூறு ரூபாயா?  இது சமபந்தமான ஒரு குட்டிக் கதையும் இதேபோல நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  கே ஜி எஸ்ஸும் இதே மாதிரி அவர் சர்வீஸில் ஒரு சம்பவம் சொல்லி இருக்கிறார்.

பையில் தன் உபகரணங்களை சேமித்துக் கொண்ட மணிமாறன் - அதுதான் அவர் பெயர் - என்னைப் பார்த்து புன்னகைத்து, "இருநூறு ரூபாய் போடுங்க" என்று சொல்லி  "கதவை மூடும்போது கைப்பிடியை திருகாமல் அப்படியே அடிக்கற மாதிரி மூடுங்கள்.  திறக்கும்போது மட்டும் கைப்பிடியை திருகினால் போதும்" என்று ஒரு டிப்ஸும் தந்து  புறப்பட்டார்.

=========================================================================================

ஜீவி ஸார் இது மாதிரி போட்டி அறிவிப்புகளை எபியில் பகிர்ந்து கொள்ளலாமே என்று சொல்லி இருக்கிறார்...


============================================================================================

கலைஞானம் அவர்களின் ஆதங்கம்...!

"பாகவதர் தன் காதலியை தூக்கி கட்டிலில் போட்ட 'அம்பிகாபதி' படத்தைப் பார்த்து யாரோ ஒருவர் தன் மனைவியை தூக்கி கட்டிலில் போட்டு இடுப்பை ஒடித்த விஷயம் என் காதிற்கு எட்டாமல் இருந்திருந்தால்... நான் மிளகாப் பழம் திருடி விற்று அந்தப் படத்தைப் பார்த்திருக்க மாட்டேன். தாத்தாவிடம் அடி வாங்கியிருக்கமாட்டேன். ஊரைவிட்டு ஓடியிருக்க மாட்டேன். என் அக்கா கண்ணில் பட்டிருக்கமாட்டேன். அக்கா என்னை மதுரைக்கு க்கு அழைத்துச் சென்றிருக்காது. இதனால் மாமா என்னை அடித்திருக்க மாட்டார். அக்காவும், மாமாவை விட்டு வடக்குப்பட்டி வந்திருக்காது. கொள்ளை நோயால் செத்திருக்காது. ஆனால் என் படம் பார்க்கும் ஆசை... என் அக்காவின் மரணத்திற்கு மூலகாரணமாய் அமைந்துவிட்டதே... என்கிற குற்ற உணர்ச்சி. வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பினேன். சுவரில் 'கண்ணகி' பட போஸ்டரில் கண்ணாம்பா ஆவேசமாக சிலம்புடன் நின்றார்.
மறுபடியும் எனக்கு சினிமா பைத்தியம் பிடித்தது."

தனது திரையுலக அனுபவங்கள் பற்றி சொல்லும் புத்தகத்தில் திரு கலைஞானம்.  அவர் சொல்லி இருக்கும் அனுபவங்களை விலாவாரியாக ஒவ்வொன்றையும் எழுதி இருக்கிறார்.

======================================================================================

அழையாமல்
வா மழையே.......
மனம் வறண்ட மக்களின்
வனம் அழித்த செயலை
மன்னித்து
மண் காக்க, வளம் காக்க
மண் நனைக்க, மனம் நனைக்க
மழையே, வா!
இயற்கையை மீறும்
இவ்வுலக மக்களின்
விஞ்ஞான இம்சையை
அஞ்ஞான அம்சமாய் நினைத்து
மனம் குளிர வைக்க
மழையே, வா
இந்தியர்கள் என்ற நிலை மறந்து
மொழியால் பிரிந்து
நீர் தடுக்கும்
நீசர்கள் செயல் மாற,
மாறி மனம் வருந்த,
பயிர் செழிக்க
கரு மேகப்
படையெடுத்து
மழையே, வா
பஞ்சம் என்ற நிலையால்
மீண்டும் பூமியில்
வஞ்சம் பரவச் செய்ய வேண்டாம்
நெஞ்சம் பதற வேண்டுகிறோம்
கொஞ்சம் இரங்கி
வா மழையே
கண் நனைய வேண்டுகிறோம்
மண்குளிர
வா மழையே... 2013

இங்கு வேண்டாம்...
இங்கில்லை...
இங்கும் வேண்டாம்..
எங்கு பொழியவேண்டும்
என்கிற முடிவு
தங்களிடம் இருப்பதாகவே
நம்பி
நகர்ந்துகொண்டிருக்கின்றன
மேகங்கள் - 2020


=============================================================================================

1986 ல் தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கும், இளையராஜாவுக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டு பொதுவெளியில் சண்டையிட்டு பிரிந்ததாய் கேள்வி.  ஆயிரம் போஓக்கள் மலரட்டும் படத்துக்கு இசை வி எஸ் நரசிம்மன்.  பாடல்கள் ஹிட் ஆகி படமும் வெற்றி பெற்றது.  மோகன் சீதா நடித்திருந்தார்கள்.  அதிலிருந்து இரண்டு பாடல்கள்.  

பாடல் தளத்தில் ஒரு ரசிகரின் ரசனை....  பரிமள்ஜெய் 

V.S.நரசிம்மன் அவர்களின் அற்புதமான மெட்டமைப்பு. வாஸந்தி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட மெட்டு. நரசிம்மன் ஐயா சிறந்த வயலின் இசைக் கலைஞர் என்பதால் அந்த நாதமே இதயத்தை அதிகம் மீட்டுகிறது. தாளக் கட்டு இந்த சோகத்தை இன்னும் அதிகப் படுத்துகிறது. SPB SIR போல இந்த பாடலை இத்தனை உணர்ச்சியோடு , எழுத்துக்கு கூட கனம் கொடுத்து யாராலும் பாட முடியாது என்றே நான் நினைக்கிறேன். "நீ கேட்கலாம் யாவுமே கிடைக்காது.." வரியைப் பாடும் போது அந்த விரக்தி, சலிப்பு அத்தனையும் கொட்டி இருப்பார். "உன் வீணையில் கேட்கலாம் வேறு கீதம்.. உன் பாடலில் சேரலாம் வேறு ராகம்.. இதைத் தானோ தேவன் நினைத்தான்.." வாலி ஐயாவின் வரிகள் கண்களில் நீர் வார்க்கின்றன.
நிசப்தமான இந்த இரவில் இந்த பாடலை இத்தனை தெளிவான பதிவில் தந்து, நாடி நரம்பெங்கும் சோகம் பாய்ச்சி, நெகிழச் செய்து விட்டீர்களே.! பாடல் முடிந்தும் மீண்டு வர முடியவில்லை. அருமையான பதிவுக்கு நன்றிகள்




இரண்டாவதுக்கு பாடலாக மேகம் பாடலா, பூமேடையோ பாடலா என்று பூவா தலையா போட்டுப் பார்த்து மேகம் அந்த இகம் பாடலையே இரண்டாவது பாடலாய் தெரிவு செய்தேன்!! 

========================================================================================

பீஜிங்: சீனா - ஜப்பான் இடையே, 1937ல் நடந்த போரின் போது சீன போர்க்களத்தில் பணியாற்றி நுாற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இந்திய டாக்டர் துவாரகநாத் கோட்னிஸை கவுரவிக்கும் விதமாக, சீனாவின் ஹெபே மாகாணத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபத்தை அந்நாட்டு அரசு திறந்துள்ளது.  சீனா - ஜப்பான் இடையே, 1937 - 45 காலகட்டத்தில் போர் நடந்தது.

சீனாவின் நண்பர்  : ம் சீன தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐந்து தன்னார்வ டாக்டர்கள் அடங்கிய மருத்துவ உ தவிக்குழுவை இந்திய தேசிய காங்கிரஸ் சீனாவுக்கு அனுப்பி வைத்தது.  இந்த குழுவில், நம் நாட்டைச் சேர்ந்த டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் இடம் பெற்று இருந்தார்.  இந்த குழு, போரில் காயம் அடைந்த சீன வீரர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தது. ஒரு கட்டத்தில் கோட்னிஸ் உடன் சென்ற டாக்டர்கள் இந்தியா திரும்பினர்.  ஆனால், கோட்னிஸ் அங்கேயே தங்கி போர்க்களத்தில் பணியாற்றினார்.  

மின்சாரம் இல்லாத நிலையிலும் அறுவை சிகிச்சைகளை செய்து, ஒரு நாளில், 18 மணி நேரம் உழைத்தார். 1,000க்கும் மேற்பட்ட சீன வீரர்களின் உயிரை காப்பாற்றினார்.  உள்ளுர் மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்தார். அவருக்கு உதவியாக இருந்த சீன நர்ஸ் குவோ கிங்லானை, 1941ல் மணந்தார்.  போர் அழுத்தங்களால் அவரின் குழந்தை பருவ வலிப்பு நோய் தீவிரமடைந்தது.  கடந்த 1942 டிச., 9ல் சீனாவின் ஹெபே மாகாணத்தின் குவோலியாங்லியாங் கிராமத்தில், அறுவை சிகிச்சை செய்யும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

அப்போது அவருக்கு வயது 32.  சீனாவின் மாமனிதராக கோட்னிஸ் போற்றப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் தலைவரான மா சேதுங் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'சீனாவின் நண்பர்' என கோட்னிசுக்கு புகழாரம் சூட்டினார்.  அவரது சேவை குறித்து, 'இந்தியாவில் இருந்து வந்த டாக்டர் கோட்னிஸ்' என்ற புத்தகம் 1941ல் வெளியிடப்பட்டது.  சக்திவாய்ந்த சின்னம்  :  கடந்த, 1949க்கு பின் கோட்னிஸ் பெயரில் சீனா ஒரு மருத்துவ கல்லுாரியை கட்டியதுடன், அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது. மேலும், சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு நகருக்கு கோட்னிஸ் பெயரை சூட்டியது.  கோட்னிஸ், இந்திய - சீன நட்புறவின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக இன்று வரை திகழ்ந்து வருகிறார்.  

இந்நிலையில், சீனாவின் ஹெபே மாகாணத்தில் டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ் பெயரில் நினைவு மண்டபம் கட்டிய சீன அரசு, அதை சில தினங்களுக்கு முன் திறந்து மரியாதை செய்துள்ளது.

==============================================================
க டல் அலைகளுக்குள் எத்தனையோ நாகரிகங்கள் பிறந்து, வளர்ந்து, மறைந்து விட்டன. அந்த மறைந்த நகரங்களின் மவுனமான கதைகளையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும் ஒவ்வொரு நாடும் முயல்கின்றன.

அத்தகைய ஒரு வர லாற்றுத் தேடலின் மையமாக இன்றைக்கும் புதுச்சேரி கடல் திகழ்கிறது. சங்க இலக்கியங்களில் பெருமையாக பேசப்படும், காவி ரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார் கடலில் மூழ்கியது என்பது இன்று வரலாற்று உண்மையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பூம்புகார் மட்டுமல்ல; அதனுடன் சமகாலத்தில் திகழ்ந்த பல துறைமுக நகரங்களும் அதே கடல் கொந்தளிப்பில் மறைந்திருக்கலாம் என்ற கருத்து நீண் ட காலமாக வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வருகிறது. அந்த வரிசையில் முக்கியமாகக் கருதப்படுவது - சங்ககாலத் துறைமுகமான பு துச்சேரியின் பொதுக்கே.

பூம்புகாரின் சமகால நகரமாகக் கருதப்படும் பொதுக்கேவும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில், இந்தியத் தொல்பொருள் துறை 2007ம் ஆண்டு புதுச்சேரி கடற்பகுதியில் ஒரு கடலாய்வை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆய்வின் முழுமையான அறிக்கைகளோ, தெளிவான தரவுகளோ இன்று வரை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிவரவில்லை. அதனால் பொதுக்கே என்பது இலக்கியங்களில் வாழ்ந்த ஒரு பெயராக மட்டுமே நீண்ட காலம் இருந்தது.

கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மதில் இந்த மவுனத்தை உடைத்ததுள்ளது.

இது ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு. புதுச்சேரியில் டெம்பில் அட்வென்சர் என்ற 'ஸ்கூபா டைவிங்' பள்ளியை நடத்தி வரும் அரவிந்த், தனது மாணவர்களுடன் கடலுக்குள் பயிற்சி மேற்கொண்டபோது, கரையிலிருந்து சுமார் 16 கி.மீ., தொலைவில், 42 மீட்டர் ஆழத்தில், கடலின் அடியில் பரந்து விரிந்த ஒரு பிரமாண்டமான நீண்ட மதிற்சுவரைக் கண்டுள்ளார்.

அந்தக் காட்சி, கடலுக்குள் மூச்சை நிறுத்தும் அதிசயம் போல இருந்தது. 2.5 கி.மீ., துாரமுள்ள அந்த மதில், காலத்தின் கொடுமையையும் கடலின் தாக்குதலையும் தாங்கி இன்றும் நிமிர்ந்து நிற்பது போலத் தோன்றியது. அதன் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்துவாரம் வரையிலும், மற்றொரு பகுதி புதுச்சேரியின் எல்லையிலுள்ள நரம்பை பகுதி வரையிலும் நீள்கிறது.

அந்த மதிலுக்கு அருகே, மரக்கலங்கள் சென்று வரக்கூடிய வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தடயங்களும் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், அந்த மதில் ஒரு கோட்டையின் சுவராகவோ அல்லது கடல் நீர் தடுப்புச் சுவராகவோ இருந்திருக்கலாம் என, அரவிந்த் கருத்து தெரிவித்தார்.

அந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் தந்த பெயர் 'அரவிந்த் வால்'.

தாலமியும், பிளினியும் தங்கள் வரலாற்றுக் குறிப்புகளில், காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து பொதுக்கே, அதனையடுத்து சோபட்டனம் இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட இந்த மதில் சோபட்டனம் ஆக இருக்க முடியாது என்பது தெரிய வருகிறது. சோபட்மா எனப்படும் எயிற்பட்டினம் இன்றைய மரக்காணம் பகுதி என்பதைக் குறித்து இலக்கியச் சான்றுகளும், அகழ்வாய்வு ஆதாரங்களும் தொல்லியலாளர்களால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, காவிரிப்பூம்பட்டினத்துக்கும் சோபட்மாவுக்கும் இடையில் இருப்பதாகக் கூறப்படும் பொதுக்கே என்ற துறைமுகத்துடன் இந்த மதில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

இதுவரை கற்பனையிலும், இலக்கியங்களிலும் மட்டுமே வாழ்ந்த பொதுக்கே, இந்த மதிலின் மூலம் முதல் முறையாக கடலின் அடியில் இருந்து தன் இருப்பை அறிவித்திருக்கிறது. இது கடலில் மூழ்கிய பொதுக்கே துறைமுகத்தின் முதல் தொல்லியல் தடயமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த புதுச்சேரி கடற்பகுதியில், இந்தியக் கடல்சார் தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து, திட்டமிட்ட மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டால், சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படாத பொதுக்கே துறைமுகம் பற்றிய பல அரிய உண்மைகள் வெளிப்படும்.

அந்த ஆய்வுகள் மூலம், பொதுக்கே என்பது ஒரு சிறு துறைமுகம் அல்ல; அது ஒரு நகர நாகரிகம், கடல் வணிகத்தின் மையம், தமிழரின் தொழில்நுட்ப அறிவின் சாட்சி என்பதும் நிரூபிக்கப்படும். அப்போது கடலின் அடியில் மறைந்திருந்த பொதுக்கே, மீண்டும் வரலாற்றின் மேடையில் தலை நிமிர்ந்து நிற்கும்.

புதுச்சேரி கடல் இன்று மவுனமாக கரையில் மோதி விளையாடி கொண்டு இருக்கலாம். ஆனால் அதன் அடியில், புதுச்சேரியின் பெருமை இன்னும் உயிரோடு இருக்கிறது.

அதை வெளிக்கொணர வேண்டியது - புதுச்சேரி அரசின் கடமை.

==========================================================================================================

'தில்லானா மோகனாம்பாள்’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்த ஏபிஎன் வைத்தி என்ற பிம்ப் வேடத்தில் ‘கூட்டி’க் கொடுக்கும் ஏஜெண்டாக நாகேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மேனேஜரை அனுப்பி கால்ஷீட் கேட்டு வரச் சொன்னார்.
புகழின் உச்சத்தில் நாகேஷ் இருந்த அந்த நேரத்தில், குடும்பத்தில் ஒரு கொலை விழுந்து, போலீஸ் மாமனார், மாமியார், மைத்துனர்கள் என்று ஒவ்வொருவராக அழைத்துக் கடுமையாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் ஏபிஎன் மேனேஜர் போய் நிற்கிறார். ‘இந்த வழக்கில் ஒரு வேளை என்னையும் போலீஸ் கைது செய்யலாம். நான் பாதியில் உள்ளே போய்விட்டால் படம் நின்று விடும். என்னால உங்களுக்கு தர்மசங்கடம் வேண்டாம். வேறு நடிகரைப் பாருங்கள்!’ என்று சொல்லி அனுப்பினார்.
மேனேஜர் இதைச் சொன்னதும், 'அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சுன்னா, அவர் விடுதலையாகி வெளியே வந்ததுக்கப்புறம் நாகேஷ் சீன்களை ஷூட் பண்ணிக்கலாம். நாகேஷ் இல்லாம மோகனாம்பாள் படம் வராது. போய் அட்வான்ஸ் குடுத்திட்டு வாங்க!'ன்னு ஏபிஎன் சொன்னதைக் கேட்டு, 'என் மேல அவரு இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காரா?'ன்னு கண்ணீர் விட்டு அழுதார் நாகேஷ்.
அவர் நடிக்காத கம்பெனியோ -அவர் போடாத வேஷமோ- அவரை டைரக்ட் பண்ணாத டைரக்டரோ- அவர் கூட 40 வருடத்தில் நடிக்காத ஹீரோவோ யாருமே இருக்க முடியாது. 1000க்கும் மேல் படங்கள், ‘காக்கும் கரங்கள்’ என் முதல் படம், 'பூவெல்லாம் உன் வாசம்' 192-வது படம். முதல் படத்திலும் இருந்தாரு. 192-வது படத்திலும் நாகேஷ் இருந்தாரு. இடையில் கிட்டத்தட்ட 30 படங்களில் நாங்கள் சேர்ந்து நடிச்சிருக்கோம்.
என்னை அழகுப் பையான்னுதான் ரொம்ப வருஷம் கூப்பிடுவாரு. கடைசி நாட்களில் கவுண்டரே என்று செல்லமா கூப்பிடுவாரு.
திடீர்னு ஒருநாள் சீதம்மா கல்யாண மண்டபத்துக்கு 10 நிமிஷம் வந்திட்டுப் போப்பான்னு கூப்பிட்டாரு.
மொபரீஸ் ரோட்ல உள்ள அந்த மண்டபத்துக்குப் போனேன். அவர் பேரனுக்கு பூணூல் கல்யாணம் நடந்திட்டிருந்தது. ‘பையனை ஆசீர்வதிச்சுட்டுப் போ!’ன்னாரு.
மனுஷங்க வாழ்க்கையில விபத்துங்கிறது பலவிதமா நடக்குது. என் வாழ்க்கையில் காதல்ங்கிற பேர்ல அந்த விபத்து நடந்தது.
‘கிறிஸ்தவப் பெண் ரெஜினா. நான் கன்னட பிராமணன். என் பேரை பீட்டர்னு மாத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க. எப்படியோ திசைமாறிப் போன வாழ்க்கை- மீண்டும் பழைய பாதைக்கே வந்திருச்சு. என் பேரன் உபநயனம் பண்ணி என் வம்சத்தை விருத்தி செய்யப்போறான். இனி நான் நிம்மதியா கண்ணை மூடலாம்’ன்னு சொன்னார்.
நாகேஷ் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்னு எல்லோருக்கும் தெரியும். அதையெல்லாம் தவிர்த்திருந்தா ஒரு வேளை அந்த ஸ்ட்ரெஸ்லயே அவர் தற்கொலை கூட பண்ணியிருக்க வாய்ப்புண்டு என்று நினைப்பேன்.
2009 -ஜனவரி 26-ம் தேதி ‘கம்பன் என் காதலன்’ ங்கிற தலைப்பில ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில நான் கம்பராமாயண உரை 8000 பேர் முன்னாடி நிகழ்த்தி விட்டு, 31-ம் தேதி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லியிலிருந்தபோது நாகேஷ் உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் போய் விட்டார்ங்கிற செய்தி வந்திச்சு.
என் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இதை அறிவித்து ஒரு நிமிடம் மெளனம் அனுசரித்தபின் என் உரையைத் தொடங்கினேன்.
சென்னை வந்து நாகேஷ் இல்லம் போனேன். பரந்து விரிந்து வெறிச்சோடி கிடந்த ஹாலில் நடுவில் மாலையுடன் ஓரு படம். நான் வரைந்த நாகேஷின் ஓவியம். அந்த ஒன்றே ஒன்றுதான் அந்த வீட்டில் வைக்கப்படிருந்தது.
1970-ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில், ‘இது என் அன்பளிப்பு!’ என்று கொடுத்தபோது, அதைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.
- சிவக்குமார்
நன்றி: இந்து தமிழ்திசை நன்றி R கந்தசாமி ஸார்

====================================================================================


இவை ஓவியங்களுக்காகத்தானே தவிர, கதை படிப்பதற்கல்ல! 
 

இந்த TSR ஊறுகாய்.... இன்னும் என் நாக்கில் அந்த ருசியின் மீதம் இருக்கிறது.  இப்போது கிடைப்பதில்லை.









72 கருத்துகள்:

  1. இன்றைய பகுதிகளை, பாடல் தவிர, அனேகமாகப் படித்து முடித்துவிட்டேன்.

    கருத்துகள் பிறகுதான். மேகத்தைப் பற்றிய இரண்டாவது கவிதை 2020, மனதைக் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   ஆச்சர்யம், எல்லாவற்றையும் படித்து விட்டீர்கள்.  பாடல்களையும் கேட்டு விடுங்களேன்!

      நீக்கு
  2. சிறிய மூட்டு பிசகாக இருக்கலாம். மருத்துவர் ஒரு செகன்டில் குணப்படுத்திவிடலாம். இல்லைனா நமக்குத்மானே பெரும் கஷ்டம்.

    எக்ஸ்ரே, மருத்துவம் செலவுக்கு 2000 ரூ கொடுக்க அஞ்சுவதில்லை. தாழ்ப்பாள் ரிப்பேர் செய்பவரும் அது மாதிரித்தானே

    என்ன ஒண்ணு... ஐயாயிரம் பெருமானமுள்ள தாழ்ப்பாளுக்கு ஐந்நூறு கொடுத்தால் மனதுக்கு ஓக்கே என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் பார்க்க முடியாதே..  பெரிய செலவு இப்போது செய்யாமல் சிறிய செலவு.  அவ்வளவுதான்.  கே ஜி எஸ் தான் சர்வீஸ் பார்த்த பெரிய கம்பெனிகளில் அவர் இப்படி சிறிய திருகாணித் திருகல்களில் சரி செய்ததையும், அதற்கு அவர் போட்ட கட்டணத்துக்கு கம்பெனி கேள்வி கேட்டதையும், தான் சொன்ன பதில்களையும் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். வீட்டு ரிப்பேர் என்கிற பெயரில் நமக்கு வரும் செலவுகள். தி நகரிலிருந்து வரும் செல்வம் என்பவர் அத்தனை அருமையாகச் செய்து கொடுப்பார். சத்தமே இல்லாமே நாலு மணி நேரம் வேலை செய்து, நானூறு ரூபாய் வாங்கிச் செல்வார்,. அது 20 வருடங்களுக்கு முன்னால். இப்போது வீத்தின் மராமத்து செய்பவர் ஆயிரத்துக்குக் குறைந்து வருவதில்லை. உங்கள் வீட்டுக்கு மீண்டும் தொந்தரவு வராமல் இருக்கட்டும். மணி மாறன் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கம்மா..   சில பேர் செய்த வேலைக்கு தகுந்த கூலி வாங்கி கொள்வார்கள்,.  சிலர் அரை நாள் கட்டணம், முக்கால் நாள் கட்டணம் என்று வாங்கி விடுவார்கள்!

      நீக்கு
  4. ஓவியங்கள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கின்றன. ஜெய காந்தன் பெயர் பார்த்ததும் படிக்க ஆசை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஆனால் கதை பெயர் முழுசாகத் தெரியாமல் படம் எடுத்துள்ளேனே...!

      நீக்கு
  5. பாடல்கள் நான் கேட்டதில்லை.மோஹனுக்கும் இசைக்கும் நல்ல ராசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ கேட்டீங்களாம்மா?

      நீக்கு
    2. கேட்கிறேன் அப்பா. டிவி தமிழ் செய்திகளை அலறிக் கொண்டிருக்கிறது:)

      நீக்கு
    3. நன்றிம்மா.  செய்தியில் எனி விசேஷம்?

      நீக்கு
  6. சிவக்குமாரின் நாகேஷ் பற்றிய உரை மனதை உருக்குகிறது.
    நல்ல கலைஞரின் வாழ்வு இப்படிச் சீர்குலைந்ததே.

    தவறான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கெடுத்துக் கொண்டாரே.
    பேரன் வாழ்க்கையாவது சிறக்கட்டும். மிக வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "யாராருக்கு எதுவென்று விதி போடும் பாதை..  போனாலும் வந்தாலும் அதுதான்!" - பாடல் வரி!

      நீக்கு
  7. அருமையான கவிதை மா. மழைக்காலம் என்று ஒன்று இல்லையே. எப்பவோ பெய்ய வேண்டிய மழை இப்போது கண்டிப்பாகப் பெய்ய வேண்டும். இந்த அக்கினி வெப்பம் குறைய, கத்திரி வெய்யிலில் மழை எப்பவும் பெய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா. வெப்பமும் வெக்கையும் மிக பயங்கரமாக இருக்கும்மா..  நேற்று தி, நகரில் இரவிலேயே இருக்க முடியவில்லை.  ஏதாவது ஒரு கடையில் இருக்கும்போது கஷ்டம் தெரியவில்லை.  வெளியே வந்தால் வெக்கை..

      நீக்கு
  8. ''மனம் வறண்ட மக்களின்
    வனம் அழித்த செயலை
    மன்னித்து
    மண் காக்க, வளம் காக்க
    மண் நனைக்க, மனம் நனைக்க
    மழையே, வா!'' மனம் நிறை பாராட்டுகள் ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. இந்த வார வியாழன் இலவச இணைப்பு போல சிறியதாக இருக்கிறது. சில வாரங்கள் நீண்டும், சில வாரங்கள் இப்படி சிறியதாகவும் அமைவதை தடுக்க முடியாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியலையே... அதிகமாக இருப்பதை எல்லாம் அந்த சிறப்பிதழ், இந்த சிறப்பிதழ் என்று சொல்லி விட வேண்டியதுதான்! வாங்க பானு அக்கா.

      நீக்கு
  10. மழை பற்றிய இரண்டு கவிதைகளுமே சிறப்பாக இருக்கின்றன. இரண்டாவதை படித்த ஞாபகம். அக்னி நட்சத்திர காலத்தில் மழை வருவது அத்தனை சிலாக்கியம் கிடையாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.   சும்மா கொஞ்சம் மட்டும் பெய்துவிட்டு போனால் அதைவிட வேறு வினை கிடையாது!

      நீக்கு
  11. மாயாவின் ஓய்யங்களைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன?. அதில் இரண்டாவது படத்தில் இருக்கும் ஆண், எம்.ஜி.ஆரையும், மூன்றாவது பட ஆண் ரவிச்சந்திரனையும், பெண் ஜெயலலிதாவையும் நினைவு படுத்தகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவர்களை மனதுக்குள் மாடலாக நிறுத்திக் கொள்வார்கள் போல...!

      நீக்கு
  12. *ஓய்யங்களை - ஓவியங்களை. முன்பெல்லாம் ப்ளாகில் கருத்திடும்பொழுது நேரும் தவறுகளை திருத்த முடியும், இப்பொழுது இயலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து எப்பவுமே பிளாக்கில் போட்ட கமெண்ட்டுகளை திருத்த முடியாது! அழித்து விட்டு வேறு போடலாம்!

      நீக்கு
    2. எடிட், டெலிட் என்று இரண்டு ஆப்ஷன்கள் பார்த்த நினைவு.. வேறு எதிலாவது பார்த்திருப்பேனோ?

      நீக்கு
    3. நிச்சயமாக பிளாக்கரில் இல்லை

      நீக்கு
  13. கடலுக்கடியில் உறங்கும் புதுச்சேரியின் வரலாற்றுச் சுவடு செய்தி சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  14. ஜெ.. ஓவியங்களில் சிலவற்றில் இயல்பான போஸ் இருக்காது. ஓவியத்துக்காகவே போட்ட போஸ் போல இருக்கும்.

    விளம்பரத்துக்கு அடுத்த மூன்றாவது ஓவியம் அப்படித்தான் இருக்கு. பெண்ணின் அந்த போஸுக்கு கதையில் சம்பவம் இருக்குமாதெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் கதாசிரியர்களுடன் கலந்து பேசி எந்த இடத்தில் ஓவியம் போடலாம் என்று பேசி போடுவதுண்டு.  சமயங்களில் கதாசிரியர் முன்னதாகவே சொல்லி விடுவார்.  சமயங்களில் ஓவியர் இஷ்டத்துக்கு ஒரு பெண் படமோ, ஆண் படமோ வரைந்து விடுவார்!

      நீக்கு
  15. நாகேஷ் பற்றிய சிவகுமாரின் கருத்துகள் அனுபவம்..

    வாழ்க்கைல முழுதும் வெற்றி பெற்றவர்று யாரேனும் இருக்காங்களா என்ன?

    முழுமையான வாழ்க்கைல, ப்ரொஃபஷன்ல வெற்றி பெறுவதற்கே பல கஷ்டங்களைச் சந்திக்கணும். குடும்பம், பசங்க அவங்க வாழ்க்கைல வெற்றி பெறுவது.... எல்லாமே ஒருவருக்குக் கிடைக்காது, அவர் யாராக இருந்தாலும்.

    இதையும் மீறி, அவர்களது திறமையை நாம் நினைவுகூறுகிறோமே... அதுவே பெரிய விஷயம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  சரியாய்ச் சொன்னீர்கள்.  யார் ஒருவர் வாழ்க்கையிலாவது துன்பமே இல்லாமல், தவறே நிகழாமல், இன்பம் மட்டுமே, எல்லாமே சரியாக இருக்க முடியுமா என்ன!  மிகை நாடி மிக்க கொள்வதுதான்.

      நீக்கு
  16. கடலுக்குள் ஒரு அல்லது இரண்டு கிமீ தூரத்திற்கு நீல் சில நாட்கள் உள்வாங்கினால் எத்தனையோ அதிசயங்களைக் காண இயலும்.

    பூம்புகார் முன்பு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர், அவருடைய சிறிய வயதில் கடல் 200 மீட்டர் அப்பால் இருந்தது, இப்போ ஊருக்குள் வந்துவிட்டது எனச் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  17. இந்தச் சிறுகதைப் கோட்டிகளைப் பகிரச்்சொல்லும் ஜீவி சார், இவற்றிர்க்கு கதைகள் எழுதுகிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவார் என்றுதான் நினைக்கிறேன்.  நான் கலந்து கொள்ளவில்லை என்பதை பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்!

      நீக்கு
  18. ​என் வீட்டில் இது போன்று மார்ட்டிஸ் லாக் மக்கர் செய்த சங்கதியை அப்புறம் என்ன ஆச்சு பகுதியில் எழுதியிருந்தேன். ஆக பழைய போல்ட் அண்ட் திண்டுக்கல் லாக் தான் நல்லது என்பது திண்ணம்.

    //இந்த KTR ஊறுகாய்.... இன்னும் என் நாக்கில் அந்த ருசியின் மீதம் இருக்கிறது. இப்போது கிடைப்பதில்லை.//
    TSR ஊறுகாய் படம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட..  ஆமாம்.  மாற்றிச் சொல்லி விட்டேனோ...  KTR என்பது வாசனாதி திரவியம். என் அப்பாவின் நண்பர் கவிஞர் மா வரதராஜன் நிறுவனம் அது.

      நீக்கு
  19. "இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.. எந்தப் பொருளும் ஒரு வருஷத்துக்கு மேல வர்றதில்லை.. தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்க வேண்டியதுதான். இதை ரிப்பேர் செஞ்சா ஆகற செலவுக்கு புதுசே மாட்டிடலாம்!"//

    உண்மையாகவே இத கேட்டு கேட்டுப் புளிச்சு போச்சு...நாமதான் ஐடியா கொடுத்து தூக்கிப் போடாம சிலதை செஞ்சு வாங்க வேண்டியதாக இருக்கிறது.

    இப்ப ஜஸ்ட் ஒரு குழாய, ட்யூபை செருகற வேலைக்கு service charge 500 ரூ!!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரிதான் கீதா... வாங்க....  ஆனால் டியூபை சொருகனும்னோ, எங்கே சொருகணும்னோ நமக்கு தெரியாததற்குதானே அந்தக் காசு!

      நீக்கு
  20. அடுத்த பாரா டிட்டோ, ஸ்ரீராம்

    skilled நபர்கள் மிகமிகக் குறைவு. செய்யும் வேலையிலும் நேர்த்தி இருப்பதில்லை.

    இங்கு நம்ம ஊர் டாய்லெட் ஒரு குளியலறை/கழிவறையில் . இங்கு வந்த போது அது சரியாகத்தான் இருந்தது. தீடிரென்று எலி கழிவில் புரண்ட எலி வீட்டுக்குள் கழிவறை முழுவதும் கழிவு வேறு...கடவுளே! பார்த்தால் கழிவு செல்லும் குழாயில் பெரிய ஓட்டை. உரிமையாளரிடம் சொல்லி முழுவதையும் மாற்றி வேறு புதுசு வைத்த அந்த ப்ளம்பர் அதை ஃபிக்ஸ் செய்துவிட்ட தரைக்குச் சமமாக நன்றாகப் பதிய வைக்காலம் கொஞ்சம் உயர்த்திப் பூசி விட்டார்...பாருங்க என்ன ஒரு நேர்த்தி!!! நாம் கால் வைக்கும் பகுதியில் ஒரு புறம் இப்ப தண்ணீர் தேங்குகிறது ஒவ்வொரு முறையும் வைப்பர் வைச்சு தண்ணீரைத் தள்ள வேண்டும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்கள் பாடம் கற்றுக் கொடுக்கின்றன என்றாலும்... சமயங்களில் இப்படியும் நேர்கிறது!

      நீக்கு
  21. பூங்கதவே தாழ் திறவாய்!!!!! மணிச்சித்திரத்தாழ்!!!! ஆகிடுச்சு உங்க அறைக் கதவு!!!!

    இந்த வீட்டு வாசல் கதவும் இப்படியேதான் வந்த புதிதில் அப்புறம் உரிமையாளரிடம் சொல்லி இதே போலதான் இரண்டாவது படம்....புதுசா லாக் போட்டாச்சு.

    ஆனா இங்கு தாளையே மாற்ற வேண்டியதாச்சு...ஏனென்றால் சாவியை நுழைத்துத் திருகோ திருகுன்னு திருகினாலும் டக்கென்று திறக்கவே திறக்காது. சாவியை நுழைப்பதே சில சமயம் கஷ்டமாக அது சரியாகத் திறக்கும் இடத்தில் ஃபிக்ஸ் ஆகாமல்...படுத்தியது. இப்ப பிரச்சனை இல்லை

    மணி மாறன் - மணி அதிகம் கேட்காமல் போனாரே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பூங்கதவே தாழ் திறவாய்!!!!! மணிச்சித்திரத்தாழ்!!!! //

      ஹா.. ஹா.. ஹா... நல்ல பாடல்கள் ரெபரென்ஸ்..

      மணிமாறன் மணி அதிகம் கேட்காதது ஓகே தான்!

      நீக்கு
  22. writer's cafe போட்டி பற்றி இன்று பானுக்கா சொல்லிக் கொண்டிருந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. திரு கலைஞானம். அவர் சொல்லி இருக்கும் அனுபவங்களை விலாவாரியாக ஒவ்வொன்றையும்//

    10 வரிக்கதை போன்று, ஃபுல்ஸ்டாப் இல்லாத கதையாகவும் கூட யோசிக்க முடிகிறது.....அழகாக எழுதியிருக்கிறார்.

    ஸ்ரீராம் நீங்க அந்த நீலக்கலரோ, இல்லை கடைசியில் அனுபவம் என்று இருந்திருககவிட்டால் கண்டிப்பாக ஒரு குமுதம் 10 வரிக் கதை என்றே நினைத்திருப்பேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் நீளமாக கொடுத்திருந்ததை நான் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன்.  ஆனால் அந்தப் பாரா..  ஆமாம், அது அவர் தந்ததுதான்.  எங்கள் ஸ்கவுட் மாஸ்டர் ஒரு பாடல் சொல்லிக் கொடுப்பார்..  முத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியை என்று..  அதுபோல.

      நீக்கு
  24. கவிதைகள் ரொம்ப நலலருக்கு ஸ்ரீராம். அதுவும் மேகம் கவிதை சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஆயிரம் போஓக்கள் - ஆயிரம் பூக்கள்?

    பாட்டு செம ஸ்ரீராம் இப்பதான் கேட்கிறேன்....வாசந்தி !!!!

    குறுக்குச் சிறுத்தவளே!!! வாசந்தி....பாடும் நிலாவே பாடலில் தேன் கவிதை அந்த இடம் வாசந்தியைக் காட்டிக் கொடுக்கும் ஆனால் அப்பாடல் வேறு ஒரு ராகமும் கலந்து வரும்.

    சோகத்தை ஜீஸாக்கி வார்த்தைகளில் கலந்து கொடுக்கிறார் நம்ம தலைவர்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  திருத்தி விட்டேன் கீதா..   ஓ..  வாஸந்தி ராகமா?  ஆனால் பாடல் செம செம செமதான்.

      நீக்கு
  26. கேட்கலாம் யாவுமே கிடைக்காது என்ற இடத்தில் ஒரு சின்ன சோகச்சிரிப்பு கொடுக்கறார் பாருங்க தலைவர்!!! அங்க நிக்கிறார் இதெல்லாம் அவருக்கே உரித்தான சொந்த சாகித்தியங்கள்!!!!!!! விரக்த்திச் சிரிப்பு...செம இல்ல? ஃபீல் பண்ணி வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துப் பாடுவது என்பது எல்லாருக்கும் வராது, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இந்தப் பாட்டைக் கேட்டுட்டுப் பார்த்தா மோகனின் பிறந்தநாள் ஒரு ஷார்ட்ஸ் அவர் கோயிலுக்குச் சென்ற போது ரசிகர் ஒருவர் ஓடிவந்து அவருக்குச் சாமி படம் கொடுபப்து போன்ற ஷார்ட்ஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. மேகம் மேகம் தொடக்கமே ஸ்பீட் பல்லவி... இடையில் வரும்வ் அரி போல பல்லவி ஸ்பீட். ஸ்ரீராம், நீங்க பூவா தலையா போட்டுப் பார்த்த அந இன்னொரு பாடலையும் கேட்க வேண்டும். இந்தப் பாடல் ஓகே

    ஜாலி பாட்டு போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. சீதா க்ளோஸப்பில் புன்னகையை விரியவிடுவது அந்த ஷாட் இன்னும் கொஞ்சம் இயல்பாக எடுத்திருக்கலாம் போன்று தோன்றியது அப்பலாம் இப்படித்தானே க்ளோஸப் ஷாட் வைக்கும் போது சிரிப்பது புன்னகைப்பது ஆனால் அதையும் அது தெரியாமல் எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது அந்தப் புன்னகை செயற்கையாக இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் சீதா அழகுதான்.  அவர் அழகை உன்னால் முடியும் தம்பியில் கேபி அழகாக காண்பித்திருப்பார்.

      நீக்கு
  30. மின்சாரம் இல்லாத நிலையிலும் அறுவை சிகிச்சைகளை செய்து,//

    ஆச்சரியம் இல்லையா ஸ்ரீராம்...அறுவை சிகிச்சைக்குச் சில உபகரணங்களுக்கு மின்சாரம் தேவைப்படும் இல்லையா? ஆனால் அக்காலகட்டத்தில் இதெல்லாம் இலலத சூழலில் பெரிய விஷயம் தான். இப்ப எவ்வளவோ வளர்ச்சியடைந்தும் கூட அறுவை சிகிச்சைகள் தோல்வி அடைகின்றன இல்லைனா ஏதாவது தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றனவே!

    நம்ம ஊர் மருத்துவருக்கு சீனாவில் மரியாதை! சூப்பர்ல?!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கடந்த 1942 டிச., 9ல் சீனாவின் ஹெபே மாகாணத்தின் குவோலியாங்லியாங் கிராமத்தில், அறுவை சிகிச்சை செய்யும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்//

    ஓ மை! வருத்தமாக இருநது இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவருக்கு வலிப்பு நோய்...
    அப்ப அந்த நோயாளிக்கும் என்னாச்சோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. உங்க கவலை வித்தியாசமானது.

      நீக்கு
  32. அப்போது அவருக்கு வயது 32. சீனாவின் மாமனிதராக கோட்னிஸ் போற்றப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் தலைவரான மா சேதுங் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'சீனாவின் நண்பர்' என கோட்னிசுக்கு புகழாரம் சூட்டினார். //

    மெய்சிலிர்ப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. அரிக்கமேடு முகத்துவாரம் சென்றிருட்ந்தார்கள் என் மகன் மற்றும் அவன் வகுப்பு பிள்ளைகளை அப்ப கூட்டிப் போனாங்க. மிகச் சிறந்த வரலாற்று இடம் என்று மகன் சொன்னான் என்னை அப்புறம் தனியாகக் கூட்டிச் செல்வதாகச் சொல்லியிருந்தான் ஆனால் வாய்க்கவில்லை. அங்கு அப்பொது இத்தகவ்ல் சொல்லப்பட்டதாகச் சொல்லியிருந்தான், இப்ப அட! சமீபத்திய நிகழ்வு போல அச்செய்தியை சுட்டிக்குச் சென்று வாசித்தேன், ஸ்ரீராம். சூப்பர்ல அடில இன்னமும் இருப்பது ஆச்சரியம் அதுவு ம் 2.5 கிமீ!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை அதிசயங்கள் எப்போதுமே சுவாரஸ்யம்.  இல்லை?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!