1.6.26

"திங்க"க்கிழமை  :  மகாராஷ்டிரா டெச்சா - ठेचा - ராதா சுரேஷ் ரெஸிப்பி 

 

 மகாராஷ்டிரா டெச்சா - ठेचा

பூண்டு வேர்க்கடலை பச்சை மிளகாய் சட்னி

ராதா சுரேஷ் 

 

2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்

30 பச்சை மிளகாய், முழுதாக, காம்புகள் நீக்கப்பட்டவை

15 பூண்டு பற்கள், 

½ தேக்கரண்டி உப்பு

2-3 கொத்தமல்லி தண்டுகள் மற்றும் இலைகள்

2 மேசைக்கரண்டி வறுத்த, தோல் நீக்கிய வேர்க்கடலை


ஒரு தவாவில் அல்லது வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டைச் சேர்க்கவும். அவை எல்லாப் பக்கங்களிலும் நன்றாக வதங்கட்டும் – இதற்கு 2-3 நிமிடங்கள் ஆகும்.


வதக்கிய எல்லாவற்றையும் ஒரு சின்ன உரலில் போட்டு அதோடு கொத்தமல்லி தண்டுகள், இலைகள், வேர்க்கடலை, உப்பு எல்லாம் சேர்த்து குழவியால் கொரகொரப்பான விழுதாக இடிக்கவும். 

மஹாராஷ்ட்ரா பூண்டு வேர்க்கடலை பச்சை மிளகாய் சட்னி தயார்.

 


============================================================================================

இட்லியே​ நீ வாழ்க..  



நடுவில்
யார் உன்னை முந்திச் சென்றாலும்
உண்போர் மனதில் என்றும் நீ.


இட்லி...
நீ பிள்ளையார் மாதிரி
ஹோட்டலில் ஆர்டர் கொடுப்போர்
பெரும்பாலும்
சுக்லாம்பரதாரம் சொல்வது போல
"முதலில் இரண்டு இட்லி"
என்றுதான் தொடங்குகிறார்கள்!

உண்ணும் பதிவுகள் என்றுமே சுவாரஸ்யமானவை!  இட்லி அப்பா மாதிரி.  முதலில் பிடிக்கும்.  குறிப்பிட்ட வயதில் அதன்மேல் கோபமும் வெறுப்பும் வரும்.  குறிப்பிட்ட வயது கடந்தவுடன் மேகம் கலைந்தது போல மறுபடி அதன்மேல் பிடிப்பு உண்டாகி விடும், அதன் அருமை தெரிந்து விடும்!

இட்லிக்கு அரைக்கும் மாவிலேயே எதையெதையோ கலந்து ரகளை செய்ய ஆரம்பித்து விட்டோம்!  அவல், பீட்ரூட் (உடனே வார்த்து விடவேண்டும்) உருளைக்கிழங்கு இப்படி...


வீட்டில் அன்பாய் ஆடு வளர்ப்பார்கள், கொஞ்சிக் குலாவுவார்கள்.  ஒரு விசேஷ தினத்தில் அதை அறுத்து சாப்பிட்டு விடுவார்கள்.  அதுபோல மாவு அரைத்து. இட்லி குண்டானில் துணியெல்லாம் அன்பாய்க் கட்டி, அழகாய் இட்லி வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி...அப்புறம் அதன்மேல் கத்தி கபடாவுடன் பாய்ந்து துண்டாக்கி, காரப்பொடி தடவி கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுத்து என்று கொலை செய்வோம்!

பிரமையா நிஜமா தெரியவில்லை, கல்லுரலில் ஆட்டி வார்க்கும் இட்லிதான் ருசியாகத் தெரிகிறது.பஞ்சுபோல இட்லியைப் பார்த்து பலநாட்கள் ஆகிறது!  இப்போதெல்லாம் இட்லியே செயற்கையாக இருக்கிறது!  ஆயிரம் வழிமுறைகளைக் கையாண்டாலும் வீட்டிலும் பஞ்சு போல இட்லி பலநாட்கள் வருவதில்லை.  


அன்று இட்லிகள் தினம் என்று தெரியாமலேயே அதை நினைவு கூர்ந்தேன்.

எப்படி என்றால், நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு குண்டன் வந்து எங்களிடம் 'பசிக்கிறது..  இட்லிக்கு பத்து பைசா கொடு' என்று கேட்பான்.  ஒருநாள் பார்த்தல் நாங்கள் தியேட்டரில் சிறிய வகுப்பில் அமர்ந்து படம் பார்க்கிறோம், அவன் மேல்வகுப்பில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தான்.  பத்துப் பத்து பைசாவாக பார்த்துப் பார்த்துச் சேர்த்த காசு!

இவனை நினைவுறுத்தும் வகையில் சமீபத்தில் அதே மாதிரி டிராயர் அணிந்த குண்டன் ஒருவன் வந்து என்னை நிறுத்தி 'பஸ் மிஸ் ஆகிவிட்டது இருவது ரூபா கொடு' என்றான் நேற்று.  அங்கே உள்ளே பஸ்ஸே வராத இடம் அது.  பஸ் பிடிக்க இரண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும்!  

இட்லி குண்டன் (குண்டான் அல்ல!) நினைவு வந்து விட்டது!

14 கருத்துகள்:

  1. வீட்டு இட்லி இந்தக் காலத்தில் நல்லா வருவதில்லை. காரணம் அவை குக்கர் தட்டு இட்லிகள்.

    இட்லி நல்லா இருக்கணும் என்றால் துணி போட்டு பழைய முறையில் இட்லி வார்க்கணும். அதை யாரு செய்யறா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  நடுவில் கொஞ்ச நாள் ச்சே இட்லியா வேணாம்னு தோன்றியதா உங்களுக்கு?

      நீக்கு
  2. சிறிய வயதிலிருந்தே, இட்லி, என் அம்மா வார்த்ததும் நான் மி.பொடி எண்ணெய் தயாராக இருக்கும் என் தட்டில் எடுக்க முடியாத சூட்டுடன் அம்மா போடுவார்.

    அரிசி உளுந்து ஊற வைத்து, பிறகு அரைத்து, மாவு பொங்கி, அடுப்பில் இட்லியாக வருவதற்கு பத்து மணி நேரங்களுக்கு மேல் ஆகும். அதற்கான உழைப்பு வேறு.

    ஆனால் அதெல்லாம் மனதில் தோன்றாமல் நிமிடத்துக்கு ஒரு இட்லி என சுடச் சுட காலி பண்ணியது நினைவுக்கு வருது.

    அம்மாவுக்கு என்ன செய்திருக்கிறேன்? உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன், உவத்த நீர் போல எந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் என்ற பிரபந்த வரிகள் நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இப்போல்லாம் இட்லி குண்டானில் துணி வைத்து இட்லி வார்க்கும் முறையே இருப்பதில்லை.  சாலையில் தாண்டிச் செல்லும்போது ஏதாவது ஒரு கடையில் அப்போதுதான் அடுப்பிலிருந்து இறக்கி துணியிலிருந்து இட்லிகளை சூடாக பிய்த்தெடுத்தால் கால்கள் அங்கு நிற்கிறதோ இல்லையோ மனம் அங்கு நின்று விடுகிறது!  மிகவும் பிரியமான ஒரு வஸ்துவைப் பார்ப்பது போல ஒரு மிருது மனதில் உண்டாகிறது!

      நீக்கு
  3. கர்நாடகாவில் நான் பார்த்த அடுக்கு இட்லி வேகவைக்கும் பாத்திரம் (இதன் பெயர் சொல்லத் தெரியலை). மனைவியிடம் பல முறை சொல்லி, நான் 12-15 இட்லி வார்க்கும் அந்த அடுக்கு வாங்கறேன். அதில் இட்லி பண்ணி சாப்பிட ஆசை என்றதற்கு, இட்லி பண்ணச் சொல்லுவதே அபூர்வம், கார்போ என்று சொல்லி 2-3 இட்லியே சாப்பிடுவதில்லை, இதற்கு எதற்கு இடத்தை அடைத்து இன்னொன்று எனச் சொல்லிவிட்டாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சொல்வதும் சரிதானே... 

      எங்கள் வீட்டில் பெரிய குக்கர் இரண்டு வைத்திருப்போம்.  அதுதவிர மினி இட்லி குக்கர் இரண்டு..  சட்டென்று வீட்டுக்கு விருந்தினர் வந்து விட்டால் 'இருங்கள் எங்கள் வீட்டு குக்கர் பனிரெண்டு பனிரெண்டரைதான் வார்க்கும்' என்று சொல்ல முடியாதே...  வார்த்து வைத்தாலும் ஆறிவிடும்!

      நீக்கு
  4. கர்நாடகாவில் இட்லி ரவை போட்டுத்தான் இட்லி மாவு தயார் செய்வர். கடைகளிலும் இட்லி ரவை கிடைக்கும்.

    அந்த இட்லி எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் இட்லிகள் மாத்திரம் வாங்கி, மி.பொடி எண்ணெய் தடவி, நெடிய இரயில் பயணங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துகள் துகளாக இட்லி இருந்தாலே எனக்கு அலர்ஜி.

      இட்லி பஞ்சு போல, தொட்டாலே...  அட பார்த்தாலே அமுங்கறா மாதிரி இருக்கணும்.  அதுல சூடான சாம்பார் ​ஊற்றி சட்னி போட்டு..... ஸ்ஸ்ஸ்ஸ்......

      நீக்கு
  5. ஹோட்டலைக்குப் போனால் மனைவி தோசை ஆர்டர் செய்வாள், நிச்சயம் சூடாத்தான் வரும் என்று. இட்லி சூடாக வர, பெரும்பாலும் முன்வினைப் பயன் இருந்தால் இருபது தடவை ஹோட்டல்களில் இட்லி ஆர்டர் செய்தால் இரண்டு தடவை சூடாக வந்தாலே அதிகம்.

    அவங்க, சுடச் சுட சாம்பார் விட்டாலே போதும், கஸ்டமர்களுக்கு சூடான இட்லினா, பாக்ஸ்ஸில் வைத்திருப்பதைப் போடலாம்னு சொல்றாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் ஆயிரக்கணக்கில் மெஷினில் ஏற்கனவே இட்லி வார்த்து வைத்து ஹாட்பேக்கில் வைத்திருக்கிறார்கள்.  அது வேலைக்காகாகது. 

      ஒருமுறை சங்கீதா சென்றபோது "இட்லி காலியாயிடுச்சு இப்போதான் இறக்கப் போறாங்க..  லேட்டாகும்..  வேறு ஏதும் கொண்டு வரவா"  என்று சர்வர் கேட்டதும், 'அட கடவுளே..  இன்று எனக்கு என்ன ஒரு அதிருஷ்டம்' என்று நினைத்துக்கொண்டு,  புது ரத்தம் பாய்ந்தது போல நிமிர்ந்து "காத்திருக்கிறேன்...  எவ்வளவு நேரமானாலும் சரி..  இரண்டு இல்லை, ஆறு இட்லி கொண்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டேன்! 

      நீக்கு
  6. மற்றபடி, மிஞ்சின காய்கறிகளைச் சேர்த்து, கேரட் இட்லி, பீட்ரூட் இட்லி, கீரை இட்லி... உடலுக்கு நல்லது என ஜல்லியடிப்பது எனக்குப் பிடிப்பதில்லை.

    காரணம் என் அம்மா எனக்குச் செய்து தராதவைகள் என் விருப்பமாக இருந்ததே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம்தான் இப்போல்லாம் எப்பவும் செய்யறோமே...   

      அதுசரி, டெச்சா பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே நீங்கள்....

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா .அக்கா..  வணக்கம்.  உடம்பு தேவலாமா?  அப்பப்போ தேட வச்சுடறீங்க! 

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!