26.6.26

நரேந்திரன் ஓடிப்போனதன் காரணம் 

இளையவன் திருமண விஷயமாக ஜவுளிக்கடைக்குச் சென்றபோது பாஸ் புடவைகள், பிளவுஸ் பிட் என்று பிஸியாக, நான் ரெடிமேட் ஷர்ட்ஸ் பக்கம் ஒதுங்கி விரைவாக வேலையை முடித்து விட்டு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்க்காத தொடங்கினேன்.

நடுவில் சற்றே ஓய்வு எடுப்பதற்கு கூட விற்பனையாளர்கள் சக விற்பனையாளர்களை நம்பி இருக்க வேண்டி இருந்தது என்பதை பார்த்தேன். பிணைக்கு ஒருவரைக் காட்டி விட்டுதான் ஒருவர் வெளியே நகரமுடியும்.  'நான் உனக்கு போன வாரம் கூட இப்படி ஹெல்ப் பண்ணினேனே..',  'நேத்து சரின்னு சொன்னேனே' என்றெல்லாம் வசனங்கள் போய்க்கொண்டிருந்தன.

முதலாளி தரப்போ, கண்காணிப்பாளர்களோ பார்ப்பார்களே, நம் டெக்னிக்கெல்லாம் வெளி வந்து விடுமே என்கிற அச்சமே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று பார்த்தால், கண்காணிப்பாளர்கள் கூட வந்து ஜமாவில் சேர்ந்து கொண்டார்கள்.

ஒருவர் 'மாத்திரை சாப்பிட்டேன், மயக்கமா இருக்கு,,, இருபது நிமிஷம் தலையை சாய்ச்சுட்டு வர்றேன்' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதென்ன கால்மணி அரைமணி என்றில்லாமல் இருபது நிமிஷ கணக்கோ! இன்னொருவரும் காஃபி சாப்பிட்டு வருகிறேன் என்று இருபது நிமிஷம்தான் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாய் சிறிய போட்டி, விவாதங்களுக்கு பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் தலை மறைந்தததும் இங்கே கிண்டலும், நக்கலும், கேலியுமாயாக பேச்சு ஆரம்பித்தது. நாளை நாம் அந்தப் பக்கம் சென்றதும் கூட எல்லோரும் இப்படிதான் பேசுவார்கள் என்பதை மறந்து பெண் ஊழியர்கள் உட்பட கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமே...

அப்போது பார்த்த காட்சி ஒன்று..

ஒரே குடும்பத்திலிருந்து சற்றே பருமனாக நான்கு ஐந்து பேர்கள் வந்து புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று வயதானவராக தெரிந்த சேல்ஸ்மேன் பொறுமையாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட அலமாரியில் இருந்து 70% புடவைகளை பார்த்து விட்டார்கள். பிறகு எதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அகன்று விட்டார்கள். அவர்கள் அகன்றதும் அந்த இடத்தில் வேறு கஸ்டமர்கள் இல்லாததால் இரண்டு சேல்ஸ்மேன்களும் பேசிக் கொண்டார்கள்.

"என்ன ஒன்றும் வாங்கவில்லையா?" என்று அருகில் இருந்தவர் கேட்க, இவர் கைகளை வீசிக்காட்டி, "இவ்வளவு பார்த்தார்கள் எதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள். இதில் நான் சரியாக எடுத்துக் காட்டவில்லை என்று குறை வேறு.." என்று சொன்னவர் கொஞ்சம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லாததால் "புளி மூட்டை மாதிரி இருக்கிறார்கள். இவர்களுக்கு நான் புடவை சரியாக காட்ட வேண்டுமாம்..." என்ற சொல்லிவிட்டு சேல்ஸ் டேபிளில் கலைந்து கிடந்த புடைவைகளை எடுத்து மடித்து வைக்க ஆரம்பித்தார்!

நம்மையெல்லாம் பற்றி என்ன பேசுவார்களோ என்கிற எண்ணமும் என் மனதில் ஓடியது.

அந்தக் குடும்பம் சற்றுத்தள்ளி இருந்த இன்னொரு டேபிளை துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தது.  அங்கும் எதுவும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

இங்கு எல்லாத் துணிகளையும் நீட்டாக மடித்து, மீண்டும் அதனதன் இடத்தில் அடுக்கி வைத்து விட்டு திரும்பினார் இந்த சேல்ஸ்மேன். அவர் முகம் வியர்த்தது. மீண்டும் அதே கும்பல் அவர் எதிரே நின்று கொண்டிருந்தது.

"இப்போ காமிச்சதுல ரெண்டு மூணு பிடிச்சிருந்தது..  அதை எல்லாம் கொஞ்சம் திரும்ப எடுங்களேன்..."

அவர் எப்படி Feel செய்திருப்பார் என்று என் மனதில் காட்சி தோன்றினாலும், அவர் மௌனமாகத் திரும்பி, அடுக்கிய புடவைகளை கடமையாக எடுத்து போடத் தொடங்கினார்.

அவர்கள் பாடும் கஷ்டம்தான் இல்லை?!

=======================================================================================

 எனக்கு மிகவும் பிடித்த கதை!  இதைத் தழுவிதான் மௌனராகம் எடுக்கப்பட்டது.  ஆனால் க்ரெடிட் கொடுக்கப்படவில்லை.

=======================================================================================================

1966 ஆம் வருட விகடன் இதழ் ஒன்றிலிருந்து...



பிரியமுள்ள நரேந்திரா,

உடனே வீட்டிற்கு திரும்பு. உன் தாயும் சகோதரியும் உள்னைக் காணாமல் நாள் முழுவதும் அழுதுக்கொண்டே இருக்கிறார்கள். நீ ஓடிப்போனதின் காரணத்தை அந்ததத் தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். உன் விருப்பப்படி, முதல் நாள் முதல் (Premiere Show) 'ஜோஹர் இன் காஷ்மீர்' என்ற படத்தை நீ பார்க்க தயாரிப்பாளர்களும் சம்மதித்தனர்.

உன் பிரியமுள்ள, அப்பா.

இது தமாஷல்ல! ஒரு புகைப் படத்தின் கீழ் மேற்கண்டவாறு வெளி கொடுத்தது . 24-8-66 அன்று பம்பாயிலிருந்து வெளிவரும் 'இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான விளம்பரம்.  கொடுத்தது   உண்மையில் மகனைக் காணாது வருந்தும் தந்தையா, அல்லது படத்தை எடுத்த தயாரிப்பாளர்களா என்றுதான் புரியவில்லை  

எஸ். வி.ராம்.

===========================================================================================

பாஹே பக்கம்  :



*******************************


அப்பா - 
புலவர் கீரன் 

*********************

அப்பாவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி கலாரசிகன் என்கிற பெயரில் தினமணியில் அதன் ஆசிரியர் கி வைத்யநாதன் எழுதியது.


==============================================================================================

1965 ல் சுஜாதா எழுதியுள்ள "நான் படிச்ச கதை' டைப் கட்டுரை...

நிழல்கள்

'நிழல்கள்' என்ற ஒரு நாவல் - எழுதியவர் நகுலன் (டி.கே.துரைஸ்வாமி). இந்த நாவல் எனக்கு ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் அளித்தது. இந்த ஆசிரியரை நான் புதிதாகக் கண்டு பிடித்த அனுபவம் ஏற்பட்டது. நிழல்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு 77 பக்க நாவல். ஒரு அப்பா-பையன் இதில் முக்கிய மானவர்கள். அப்பா பட்டை சாராயம் குடிக்கும் ஒரு பிராமணர். 

இவரைக் கிழக்குரங்கு என்று அழைக்கும் மகன் குடும்பத்தில் பதியாமல், பொறுப்பில்லாமல், படிப்புவராமல் இஷ்டப்படி சுற்றும் மகன். இவன் தன் அனுபவங்களை அலட்சியமாகச் சொல்லிக் கொண்டு வருகிறான். தான் சந்திக்கும் வித வித மனிதர்களை, அவர்கள் நல்லவர் கெட்டவர் என்று பாகுபடுத்தாமல் அவர்கள் குணங்களை விமர்சனம் செய்யாமல் நேராகச் சொல்லிக் கொண்டு போகி றான். அவன் உடன் பிறந்தவர்கள் இருவர். இலங்கைக்குச் சென்று விட்ட முகம் தெரியாத குபேரன் ஒருவன், வேசி மகளைச் சம்பிரதாயப்படி கல்யாணம் செய்து கொண்டு ஒதுங்கிப் போய் விட்டவன் இன்னொருவன். 

இரண்டு பெண்கள் பொருத்தமில்லாத விவாகங்களிலிருந்து விடுபட்டுத் திரும்ப வந்தவர்கள். இவன் சந்திக்கும் மனிதர்கள் யார் யார்? ஒரு ஐ. ஸி. எஸ். பெரியப்பா, ஒரு சமூக சேவகி- பைல்ஸ் ஆபரேஷனுக்கு உதவியாக இவனைத் தனியே அழைக்கிறாள்-ஒருகம்யூனிஸ்ட்-ஸ்டாலின் செத்ததற்கு ஒப்பாரி வைத்து அழுது விட்டுக் கட்சி மாறுகிறார். இவனுக்குச் கடைசியில் மனைவியாக வாய்த்த பெண் - உன் வக்கிரங்களைச் சமாளிக்க எனக்குத் திடம் உண்டு என்று சொல்லும் துணிவுள்ள பெண். 

எல்லோரும் தமிழ் நாவலுக்குப் புதிய மனிதர்கள். ஆனால் எல்லோரும் நம்பக் கூடிய பாத்திரங்கள்.  கதையின் இறுதியில் அப்பா இறந்தவுடன் அவர் மரணத்தின் எதிரில் மகன் மாறுகிறான்.  சாராயம் குடித்த கிழக் குரங்கு நிஜம் அப்பாவாக பரிணமிக்கிறார்.  அவருக்காக உண்மையாக வருத்தப்படுகிறான். 

இந்த நாவலின் நடை தமிழில் நிச்சயம் புதிது வார்த்தை சாதுரியமும் குழப்பமும் இல்லாமல் சாதாரண வார்த்தைகளை வைத்துக்கொண்டு விளையாடியிருக்கிறார் நகுலன்.

=====================


நிழல்கள்
பக்கங்கள்: 64
໙໙: 50
நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்து விட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும்.

- சுந்தர ராமசாமி

========================================================================================

கண்ணதாசன் பற்றி நெல்லை கண்ணன் 


=============================================================================================

சிறிய கவிதையில் கவிஞன் வாசகனை ஒரு மலையுச்சிக்கு ஒரு கழுகு தன் குஞ்சை எடுத்துச் செல்வது போல அழைத்துச்சென்று, அங்கே தொபுக் என்று போட்டு விடுகிறான்! கற்பனை உள்ள வாசகன் பறக்கிறான். இல்லாதவன் விழுந்து சாகிறான்" - ராபர்ட் ப்ளை


சுஜாதாவின் ஹைகூ கவிதைகள்.

வாடவில்லை.                                                                
மேசையில் 
கடதாசிப்பூக்கள்

விதைக்காமல் 
பழுத்தது 
நிலவு


தினம் புலம்பெயர்வால் 
முகவரி தேடுகிறது 
மேகம்


நாய்கள் 
குரைக்கவில்லை. 
பாதையில் இராணுவம்

சாயம் போகாமல் 
நனைந்தது 
வானவில்


ஏன் உடல் இளைத்தாய்? 
வயதான 
கருவாடே!


எதிரிக்கு வாழ்த்து அட்டை 
ஒட்டவில்லை 
முத்திரை

முத்தமிட்டாள் காதலி. 
எழும்பவேயில்லை 
பிணம்


பச்சைக் குழந்தை போல் 
உள்ளாடை அணிவதில்லை 
வெங்காயம்


என் மனத்திரையில் 
உன் நினைவலைகளாக 
காதல்

ஒரு காலை வேளை 
பல் துலக்கப்பட்டது 
சீப்பு

சுதந்திரதின விழாவில் 
வழங்கப்பட்டது 
கூண்டிலடைத்த வெண்புறா


சீக்கிரம் எழுந்து கொள். 
இன்றுனக்கு 
தூக்கு.


உலக வர்த்தக மையம் முன்னால் 
என்னைக் கைது செய்தது 
உன் புன்னகை


இடுப்பைப் பிடிக்கையில்
  சிலிர்க்காதே 
வெண்டிக்காயே!


சட்டெனக் குதித்தது 
நதிக்குள் 
நீர் வீழ்ச்சி


விபச்சாரி விரும்பவில்லை 
பல நிறங்களில் 
ரோஜாச் செடியை.

கிணற்றைப்போல் 
தொட்டிக்குள்ளும் 
நிலவு.

ஓ நயாகரா! 
என்னை நனைத்தது 
கண்ணீர்

கடிக்கும் கொசு 
அடிக்க மனசில்லை 
வெள்ளை ஆடை 

=================================================================================

கங்கை அமரனின் சுவாரஸ்யமான பேட்டி.  பேட்டி காணும் இளைஞர் மிகவும் விஷயம் தெரிந்தவராக இருப்பதோடு ரசனையுடன் அளவாக பேசுகிறார்.

================================================================================================

இப்படி எழுதிய ஜ ரா சுவும் கிளம்பி விட்டார்.   சுஜாதாவை மேலே இந்நேரம் பார்த்து பேசி இருப்பாரோ என்னவோ...  

அப்புறம்.... இந்த வாரம் சுஜாதாவாக இருக்கிறதே என்று கமெண்ட்  டைப் செய்பவர்களுக்கு...  இது தற்செயல்தான்!

கீழே இருப்பது 'பசுபதி பக்கங்களி'ருந்து எடுத்தது.

டியர் சுஜாதா,
தாங்கள் புறப்பட்டுப் போய் ஒன்பது வருடமாகிறது. இலக்கியத்தில் நீங்கள் வசித்த பகுதிக்கு இன்னும் யாரும் குடித்தனம் வரவில்லை.
எனது ஏக்கத்தின் பிரதிபலிப்பாக இந்த அஞ்சலி.
அய்யா சுஜாதா, உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை. சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.
ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.
திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.
அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.
ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.
அவர் குமுதத்தில் எழுதிய ‘ சிவப்பு கறுப்பு வெளுப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.
‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.
ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.
‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.
எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பையும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.
மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.
உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.
தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.
நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.
அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.
நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.
குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.
குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.
சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.
ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.
இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..
- பாக்கியம் ராமசாமி
( நன்றி: குமுதம் 12)

=================================================================

1962 ல் வெளியான நெஞ்சில் ஒரு ஆலயம் ஒரு ட்ரெண்ட் செட்டர்.  இதன் பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டு, விஸ்வநாதன் ராமமூர்த்தியால் ஒரே நாளில் ஏழு பாடல்களும் படமாக்கப்பட்டனவாம்.

சிவாஜி தி மு கவை விட்டு விலகி இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த சமயம் அது.  அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் "சிவாஜி..  எங்கிருந்தாலும் நீ வாழ்க" என்று வாழ்த்தியதைக் கேட்ட கண்ணதாசன் அதையே பல்லவியாக வைத்து எழுதிய பாடல்.  ஏ எல் ராகவன் குரல்.

9 கருத்துகள்:

  1. தந்தையர் தின ஸ்பெஷலா என்ன?
    தடுக்கி விழுந்தால் ஒரு அப்பாவின் மீது தான் விழ வேண்டும் போல நிறைய அப்பாக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... அப்படியா.. கவனமில்லை! பார்க்கிறேன்.

      இல்லையே.. இரண்டு விஷயங்கள் தந்தை சம்பந்தப்பட்டவை. அவ்வளவுதானே!

      நீக்கு
  2. கோகிலா என்ன செய்து விட்டாள்? -- பழைய நினைவுகளை மீட்டியது.
    நிறைய சொல்லலாம். சொல்பவர்களே எல்லாருமாகி கேட்பவர்கள் இல்லாத காலம் இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  நானும் ஏதோ சொல்ல நினைத்து, அப்படியே விட்டு அடுத்த விஷயத்துக்கு சென்று விட்டேன்.  அவசரம்!  இதை வைத்து ஒரு பதிவே எழுதலாம். சொல்லப்போனால் அங்கு உங்களை நான் குறிப்பிட நினைத்து மறந்து போனேன்.

      நீக்கு
  3. சிவாஜி அல்ல அது ஈ.வி.கே. சம்பத்.
    எங்கிருந்தாலும் வாழ்க -- படத்தலைப்புக்கான வரி கொண்ட பாடல் அவ்வளவே.
    முக சொன்ன காலமும் இந்தப் படம் ரிலிஸான காலமும் வெவ்வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  அங்கு போட்டிருந்ததைப் பகிர்ந்தேன்.  அண்ணாவுக்கு சிவாஜி எல்லாம் ஒரு பொருட்டே இல்லையோ? 

      அந்நாளில் கருணாநிதியைக் காட்டிலும் பிரபலமானவர்களாக சம்பத், நெடுஞ்செழியன் போன்றோர் இருந்தனர் என்று படித்திருக்கிறேன். 

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!