14.6.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் –நெல்லைத்தமிழன்

 

நாதமுனிகள் குருகைக்காவலப்பர் – பகுதி -2

நாதமுனிகள், நம்மாழ்வாரிடமிருந்து பெற்றுக்கொண்ட இராமானுஜர் விக்ரஹத்துடனும், நாலாயிர திவ்யப்பிரபந்தங்களுடனும் வீரநாராயணபுரம் வந்து சேர்ந்தார்.  வீரநாராயணப் பெருமாளிடம் நடந்த விவரங்களைக் கூறினார். அவரும், நாமே திவ்யப் பிரபந்தங்கள் உலகில் உண்டாகுமாறு செய்தோம். அதனை இசைகூட்டி பரப்புவீராக என்று சொன்னார்.

அதன்படி நாதமுனிகள் திவ்யப்பிரபந்தங்களுக்கு பண் இட்டு, அதனை தன்னுடைய மருமகன்களான மேலையகத்து ஆழ்வான், கீழையகத்து ஆழ்வான் இருவருக்கும், மற்றும் தன் சகோதரியின் மகனான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கும் கற்பித்தார். (அவருடைய சகோதரி, திருக்கண்ணமங்கை என்ற திவ்யதேசத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தார்).

இப்படி இருக்கையில், சோழ அரசனின் அரண்மனை வாயிலில் இரண்டு பெண்கள், தங்கள் கானத் திறமையை ஒட்டி விவாதம் புரிந்துகொண்டிருந்தனர். ஒருத்தி மனுஷ்ய கானத்தில் சிறந்தவளாக இருந்தாள். இன்னொருவள் தேவகானத்தில் பண் இசைத்துப் பாடினாள். அரசன் இருவரையும் அழைத்து தம் சபையோர் முன்னே பாடச் செய்து, மனுஷ்ய கானம் பாடியவளுக்கு தக்க சன்மானங்களை அளித்தார். தேவகானம் பாடியவளை அவர் அங்கீகரிக்கவில்லை. அதனால் வருத்தமுற்ற அவள், வீரநாராயணபுரம் சென்று அந்தக் கோவிலில் தேவகானத்தில் பாடல்கள் பாடினாள். அதைக் கேட்ட நாதமுனிகள் அவளை மிகவும் பாராட்டி அவளுக்கு கோயில் மரியாதைகளைச் செய்தார். இவளும் மகிழ்ந்து, சோழ அரசனிடம், உங்களுக்கு என்னுடைய திறமையை உணரத் தெரியவில்லை, அதனை வீரநாராயணபுரம் கோயிலில் உள்ள நாதமுனிகள் உணர்ந்து பாராட்டினார் என்று சொல்ல, அரசன் வியந்து நாதமுனிகளை தன் அரசவைக்கு அழைத்தான். திவ்யப் பிரபந்தங்களை பண்ணிசைத்து அரசன் முன் பாடவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்த நாதமுனிகள் அரசவைக்கு வந்தார். அரசனிடம், தங்களுக்கு தேவகானம் தெரியாதாகையால் அவரைப் பாராட்டத் தெரியவில்லை என்றார்.   அரசவையில், பல்வேறு தாளங்களை வாசிக்கச் செய்து, தாளத்திலிருந்து வரும் ஓசையை வைத்து நாதமுனிகள் அந்தத் தாளங்களின் எடையைச் சொன்னார். (இரண்டு ஜால்ராக்களைத் தட்டினால் வரும் ஓசையை வைத்து, அந்த ஜால்ராக்களின் எடை இவ்வளவு என்று சொல்வதைப் போல). அரசரும் அதனைச் சோதிக்கச் சொல்ல, எல்லாமே மிகச் சரியாக இருந்ததைக் கண்டு வியந்து நாதமுனிகளைப் பாராட்டி, அவருக்கு பல வெகுமதிகளை அளிக்க, நாதமுனிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ளாமல், அரசனுக்கு நன்றி பாராட்டிவிட்டு திரும்பவும் வீரநாராயணபுரம் சென்றார்.

திவ்யப் பிரபந்தங்களின் அர்த்த விசேஷங்களையும் தன் சிஷ்யர்களான, உய்யக்கொண்டார், குருகை காவலப்பன், நம்பி கருணாகர தாசர், ஏறு திருவுடையார், வானமாமலை தெய்வநாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சொக்கத்தூர் ஆழ்வான், பிள்ளை கருணாகரதாசர்,  மேலையகத்தான், கீழையகத்தான் ஆகிய பதின்மருக்கும் கற்பித்தார்.

இவர் திவ்யப்பிரபந்தங்களின் அர்த்த விசேஷங்களில் மிகவும் ஈடுபட்டும், பெருமாள் மீது அதீத பக்தி உணர்வோடும் வாழ்ந்தார்.

ஒரு நாள் அரசன் தன் மனைவிமார்களுடன் வீரநாராயணபுரம் வந்து கோயிலில் தரிசனம் செய்து, யோகத்திலிருக்கும் இவரைக் கண்டு ஆச்சர்யப்பட்டுத் திரும்பிச் செல்லும்போது, இவர் கண் விழித்து, அரசன் மற்றும் அவரது மனைவிமார்களைக் கண்டு,  ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்’ என்ற பாசுரம் நினைவுக்கு வந்து, அவர்கள் பின்னே கங்கைகொண்ட சோழபுரம் வரை சென்றுவிட்டார். இவருடைய சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பர் முதலானோர் இவரைக் கண்டு, நீங்கள் இப்படி செய்யலாமோ என்று கேட்க, அவர்களைப் பார்த்தால் எனக்கு கிருஷ்ணனும் கோபிமார்களும் நினைவுக்கு வந்தனர். அதனால் அவர்களைப் பின் தொடர்ந்தேன் என்றார்.

இதுபோல இன்னொரு முறை அரசன் வீரநாராயணபுரம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து கிளம்பும்போது, சேவகன் ஒருவனுடைய தோளில் கால் வைத்து யானையின் மீது ஏற, அதைப் பார்த்து, இப்படித்தானே நாராயணனும் பெரிய திருவடியான கருடன் மீது ஏற, தேவர்களில் ஒருவரது தோளில் கால் வைத்து ஏறுவார் என்று நினைத்து அந்த எண்ணத்திலேயே மூர்ச்சித்து விழுந்துவிட்டாராம்.

இப்படி சொல் செயல் அனைத்திலும் அவர் நாராயணனையே மனதில் வைத்திருந்தார் என்பது பிரசித்தம்.

அவருடைய பிரதான சிஷ்யர்களாக அவர் கருதியது குருகைக் காவலப்பரையும் உய்யக்கொண்டாரையும். குருகைக்காவலப்பருக்கு யோக ரகசியங்கள் முழுவதும் போதித்தார். உய்யக்கொண்டாரை அழைத்து யோக ரகசியம் கற்றுத்தரவா என்று கேட்டபோது, அவர், ‘பிணம் கிடக்கும்போது மணம் புணரலாமோ’ என்று கேட்டார். இதன் அர்த்தம், இழவு விழுந்துகிடக்கும் வீட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளைப் பேசலாமா? உலக மக்கள் சம்சாரமாகிய துக்கத்தில் வீழ்ந்துகிடக்கும்போது அவர்களுக்கு உதவி செய்யாமல், தான் மாத்திரம் யோகாப்பியாசம் பழகி பகவானை அனுபவித்துக்கொண்டிருப்பது தகாது என்பது அவர் கருத்து.

உய்யக்கொண்டாரை, நாதமுனிகள், சகல சாஸ்திரங்களையும், திருவாய்மொழி முதலான திவ்யப்பிரபந்தங்களையும் பிறருக்குப் பரப்பும் என்று சொன்னார். பிறகு தன் மகனான ஈஸ்வரமுனிகளைப் பார்த்து, உமக்கு ஒரு குமாரன் அவதரிப்பான். அவனுக்கு யமுனைத்துறைவன் என்ற பெயர் இடும் என்றார். உய்யக்கொண்டாரிடம், தம்மிடம் இருந்த பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்தைக் கொடுத்து, இதனை யமுனைத்துறைவனிடம்  நாம் மிக விரும்பிய விஷயம் என்று சொல்லி தஞ்சமாகக் காட்டிக்கொடும் என்றார். பிறகு குருகைக்காவலப்பரை அழைத்து, நாம் உமக்குச் சொல்லிக்கொடுத்த தர்சன தாத்பர்ய யோக ரகசியங்களை யமுனைத்துறைவருக்கு உபதேசியுங்கள் என்று சொன்னார்.

நாதமுனிகள் மூன்று நூல்களை இயற்றினார். முதல் நூல் நியாய தத்துவம் – இதில் ஞானம் (அறிவு), பிரமேயம் (அறியும் பொருட்கள்), பிரமாத்ரு (அறிபவன்), கர்மம் (செயல்) மற்றும் நியாயம் (தர்க்கசாஸ்திரம்) ஆகிய பகுதிகள் உள்ளன.  இரண்டாவது நூல் யோக ரகசியம். இது தியானத்தின் மூலம் பகவத் உபாசனை செய்யும் நுணுக்கங்களைக் கொண்டிருந்த து என்று கூறப்படுகிறது. மூன்றாவது நூல் புருஷ நிர்ணயம்.  இந்த மூன்று நூல்களும் கிடைக்கவில்லை. பிற்கால ஆச்சார்யார்கள் நியாய தத்துவம் நூலிலிருந்து ஒரு சில பகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் நாதமுனிகள் கோயிலுக்குச் சென்றிருந்த வேளை, அவருடைய வீட்டுக்கு வில்லுடன் இருவரும், ஒரு பெண்ணும், குரங்கு ஒன்றுடன் வந்து அவருடைய மகளிடம் நாதமுனிகள் எங்கே என்று கேட்டனர். பிறகு கோயிலிலிருந்து நாதமுனிகள் வீடு திரும்பியதும் அவரது மகள், அவரைத் தேடிவந்தவர்கள் பற்றிக் கூறினார். நாதமுனிகளுக்கு தம்மைத் தேடி வந்தவர்கள் இராம லக்ஷ்மண சீதை மற்றும் அனுமான் என்ற எண்ணம் தோன்றியதும், அவர்கள் எந்தப் பக்கம் சென்றார்கள் என்று கேட்டு, அவர்களைத் தேடிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.

வழியில் பூச்சரம் ஒன்றைக் கண்டதும், இது சீதாப்பிராட்டியின் கூந்தலிலிருந்து விழுந்திருக்கும் என்று நினைத்தார். அவர் பூச்சரம் கண்ட இடம் இப்போது ‘பூவிழுந்த நல்லூர்’ என்று அழைக்கப்படுகிறது. இன்னும் சிறிது தூரம் சென்ற பிறகு, குரங்கின் கால்தடம் மண்ணில் பதிந்திருப்பதைக் கண்டார்.அந்த இடம் ‘குரங்கடி’ ‘குறுங்குடி’ என்று அழைக்கப்படுகிறது. அதையும் தாண்டிச் சென்றவர், வழியில் தென்பட்டவர்களிடம் தம்மைப் பார்க்க வந்தவர்களின் அடையாளம் சொல்லி, அவர்களைக் கண்டீர்களா என்று கேட்டார். அவர்களும் ‘கண்டோம் கண்டோம்’ என்று சொன்னார்கள். அந்த இடம் இப்போது கண்டமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

தொடர்ந்து நடந்த அவர், எதிரே வந்தவர்களிடம், அடையாளம் சொல்லி அவர்களைக் கண்டீர்களா என்று கேட்க,அவர்கள் ‘கண்டிலோம் கண்டிலோம்’ என்று சொன்னார்கள்.

அதனால் மிகுந்த துயரப்பட்டு மூர்ச்சித்து வீழ்ந்த நாதமுனிகள் முன்பு, பிராட்டியோடும் இளையபெருமாளோடும் சக்கரவர்த்தித் திருமகன் சேவை சாதிக்க, நாதமுனிகள் பரமபதம் சென்றார். அவர் பரமபதமடைந்த இடம் கங்கைகொண்ட சோழபுரம்.  இவர் பரமபதித்ததைக் கேட்டு உய்யக்கொண்டார் மிகுந்த துயரமடைந்தார். நாதமுனிகளின் சரம உடலை அங்கேயே பள்ளிப்படுத்தி, பிறகு அவரது குமாரர் ஈஸ்வரமுனிகளைக் கொண்டு சரம கைங்கர்யங்களை வீரநாராயணபுரத்தில் செய்யச்செய்தார்.

நாதமுனிகளை பள்ளிப்படுத்திய இடத்தில், அதன் மீது,  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தனர்.  நாதமுனிகள் பரமபதித்த இடம் சம்போடை எனப்படும் சொர்க்கப்பள்ளம். கங்கைகொண்ட சோழீச்வரம் கோயிலுக்கு வெகு அருகில் இருக்கிறது. (அந்தச் சமயத்தில் கங்கைகொண்ட சோழபுரம் இல்லை, சோழீச்வரமும் இல்லை. ஏன் ஜெயங்கொண்ட சோழபுரமும் கிடையாது)

பிற்காலத்தில், திருவரசுவில் இருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசரை தனிக் கோயிலாக ஆக்கி, திருவரசுவில் சக்கரவர்த்தித் திருமகன் சிலாரூபத்தை அமைத்திருக்கிறார்கள்.

 

 

 

சுவற்றில் உள்ள கல்வெட்டுகள்

 

தெளிவில்லாத, காலத்தால் பழுதுபட்ட கல்வெட்டுகள்

 

 

 

 

வீரநாராயணப் பெருமாள் என்ற மன்னனார்.

வீரநாராயணப் பெருமாள் என்ற மன்னனார் – இன்னொரு படம்.

 

நாதமுனிகள் சன்னிதி. அதற்கு எதிரே சிறிது தள்ளி, ஆளவந்தார் சன்னிதி

நாதமுனிகள், ஆளவந்தார்


நாங்கள் காட்டுமன்னார் கோயிலில் தரிசனம் முடித்துக்கொண்டு, நேராக கங்கைகொண்ட சோழபுரம் வந்தோம். கங்கைகொண்ட சோழீச்வரம் மதியம் வரை திறந்திருக்கும் என்பதால், முதலில் நாதமுனிகளின் திருவரசுவைச் சேவித்துவிடுவோம் என்று நினைத்து அதைத் தேடிச் சென்றோம்.

கிபி 850களில் வாழ்ந்து மறைந்த, வைணவ சமயத்தின் மூத்த முக்கிய ஆச்சார்யாரான நாதமுனிகளின் திருவரசுவைச் சேவிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

முதலில் அங்கு ஒரு கோயிலைப் பார்த்தேன். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள்.  பிறகு அதன் அருகிலேயே திருவரசுவைப் பார்த்தோம். அப்போது அந்த வளாகத்திலேயே சிறிய குடிலில் இருந்த வைணவர் ஒருவர் வந்தார். அவர்தான் அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டு நித்தியப்படி கைங்கர்யங்களைச் செய்துவருகிறார்.

எங்களிடம், நாதமுனிகள், ஆளவந்தார் அவதாரஸ்தலம் பார்த்தீர்களா என்று கேட்டார். நாங்கள், காட்டுமன்னார் கோயிலின் அர்ச்சகர், கோயிலில் உள்ள சன்னிதியைக் காண்பித்து அதுவே அவர்களது அவதாரஸ்தலம் என்றார் என்று சொன்னோம். அதற்கு அவர், ஒரு போன் நம்பரைக் கொடுத்து, கோயிலிலிருந்து ஒரு கிமீ தூரத்தில் அந்த அவதாரஸ்தலம் உள்ளது, முடிந்தால் அதனைச் சேவியுங்கள் என்றார். திரும்பவும் 15 கிமீ தூரம் சென்று திரும்பும் அளவு அவகாசம் இல்லாததால் (அதற்குச் சென்றால் மற்ற கோயில்களை தரிசனம் செய்வது கடினம்), அதை இன்னொருமுறை பார்த்துக்கொள்வோம் என்று நினைத்துவிட்டோம்.

நாங்கள் தரிசிக்க முடியாமல் போன, நாதமுனிகள், ஆளவந்தார் அவதாரஸ்தலம், காட்டுமன்னார் கோயில் அருகில்.

நாதமுனிகள் திருவரசு இடத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்.

 

 

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள்.

 

 

 

சீதா ராம லக்ஷ்மண ஹனுமான் சன்னிதி (மாடத்தில்)

 

 

 

 

நாதமுனிகள் திருவரசு. 

நாதமுனிகள் திருவரசுவைப் பார்த்துக்கொள்பவர்.  இவரைப் போன்ற பலரை நான் அவ்வப்போது சந்திக்க நேர்ந்திருக்கிறது. இவர்கள் கோயில் கைங்கர்யங்களை மிக விருப்பத்தோடு செய்கின்றவர்கள். வருமானம், சௌகரியம் என்பது இவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை. இத்தகைய கைங்கர்ய மனத்துடன் இருப்பவர்களைப் பார்க்கும்போது நாமும் இருக்கிறோமே என்றே என் மனதில் தோன்றும்.

நாதமுனிகள் திருவரசுவைச் சேவித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு குருகைக்காவலப்பர் திருவரசுவைச் சேவிக்கலாம் என்று நினைத்து குருகைக்காவலப்பர் கோயிலை நோக்கிச் சென்றோம். அதுபற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்) 

27 கருத்துகள்:

  1. நெல்லை, மீண்டும் இன்று சனிக்கிழமை ஃபீல் வந்துவிட்டது!!!! தொடக்கம் பார்த்ததும்!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. ஸ்ரீராம் மாத்திரம் கிழமைல படிக்கறவங்களைக் குழப்பணுமா? நாமும் செய்வோம் என நினைத்துவிட்டேன்

      நீக்கு
  2. அதன்படி நாதமுனிகள் திவ்யப்பிரபந்தங்களுக்கு பண் இட்டு,//

    என்ன பண் இட்டிருப்பார் என்று நெட்டில் பார்த்தால் தெரியவருமா? பாராதியார் பாடல்களில் ராகங்கள் குறிப்பு இருக்கும். அவர் அப்படிப் பாடினாரா இல்லை அதைத் தொகுத்தவர்கள் இட்ட ராகமா என்பது தெரியவில்லை.

    அப்படி இதற்கும் பண் தெரிந்தால் நல்லாருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மனுஷ்யகானம், தேவகானம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? நெல்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தால் நானும் நாதமுனிகள் தாம். தேவகானம் ரகசிய பண்கள் பல உடையது என்பது என் புரிதல்

      நீக்கு
  4. தாளத்திலிருந்து வரும் ஓசையை வைத்து நாதமுனிகள் அந்தத் தாளங்களின் எடையைச் //

    இது புரிகிறது. pitch and frequency வைத்து....இயற்பியல் சார்ந்த விஷயம். காற்றின் ஒலி, குறிப்பாக மூங்கில் காடுகளின் இடையே காற்று வீசும் போது ஏற்படும் ஒலியின் அளவை வைத்துக் கூடக் கண்டுபிடிக்க முடியும் என்ற ஒரு ஆராய்ச்சி வாசித்திருக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சொல்லும் செயலும் ஒரே போன்று உள்ளும் புறமும் ஒரே போன்று இருப்பது என்பது ஆன்மீகத்திலும் சரி நடைமுறை வாழ்க்கையிலும் சரி அதை அடைவது என்பது herculean task.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ‘பிணம் கிடக்கும்போது மணம் புணரலாமோ’//

    இதற்கான அந்தச் சிவப்பு எழுத்துகள் சொல்வதை ரொம்ப ரசித்தேன். இப்போதைய அசிங்கமான நிகழ்வுகளும் நினைவுக்கு வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. யமுனைத்துறைவன் விவரங்கள் எல்லாம் சனிக்கிழமையிலும் வந்தது வாசித்த நினைவு.

    குறுங்குடி// திருக்குறுங்குடியும் இப்படிச் சொல்லப்படுமே

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கல்வெட்டுகள், படங்கள், சன்னதிகள் படங்கள் எல்லாமே நல்லாருக்கு

    ஒரு கிமீ தூரத்தில் அந்த அவதாரஸ்தலம் உள்ளது, முடிந்தால் அதனைச் சேவியுங்கள் என்றார். திரும்பவும் 15 கிமீ தூரம் சென்று திரும்பும் அளவு அவகாசம் இல்லாததால் //

    சொல்லியிருந்தீங்கல்ல முன்னர்?

    நாங்கள் தரிசிக்க முடியாமல் போன, நாதமுனிகள், ஆளவந்தார் அவதாரஸ்தலம், காட்டுமன்னார் கோயில் அருகில்.//

    அப்புறம் போனீங்களா?

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. சரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜ் சார்

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  11. ஸ்ரீதேவி பூதேவி சமேத
    ஸ்ரீநிவாசப் பெருமாள் தரிசனமும்
    நாதமுனிகள் திருவரசு தரிசனமும்
    பாக்யம்...

    ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரி ஓம். மிக்க நன்றி துரை செல்வராஜ் சார்

      நீக்கு
  12. ஹி..ஹி.. காலண்டத் மாட்ட கிடைத்த இடத்தைப் பாருங்கள்!....
    .

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய ஞாயிறு பதிவு சிறப்பாக உள்ளது. வீரநாராயணப் பெருமாளை தரிசித்துக் கொண்டேன். நாதமுனிகள் வாழ்க்கை வரலாற்றையும், அவர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை போற்றி வழிபட்ட விபரங்களையும் தெரிந்து கொண்டேன்.

    அருமையான நிகழ்வுகள் அவர் காலத்தில் நடந்த செய்திகளை படிக்கும் போது மனது பக்தியில் பரவசமடைகிறது. அவரின் திருவரசு அமைத்த இடங்களும், அவரைப்பற்றிய விபரங்களும் பார்க்கப் படிக்க பரவசம். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இறைவனுக்கும், அடியாருக்கும், தொண்டு செய்து வாழ்பவரை நானும் வணங்கிக் கொண்டேன். நீங்கள் தொகுத்து தந்த உங்கள் அருமையான எழுத்துக்கும் தலை வணங்குகிறேன். அனைவருக்கும் நலமே வேண்டி இறைவனை பணிவுடன் தெண்டனிட்டு கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வைணவம் என்றால் இறைவனை விட இறையடியார்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தூக்கலாகத் தெரிகிறது. தொடர்ந்து இந்தப் பதிவுகளை வாசித்து வந்ததில் நான் தெரிந்து கொண்டது இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன் அடிப்படையிலேயே தேவகானத்தையும் மனுஷ்ய கானத்தையும்
      ஒப்பிட்டுப் பார்த்தேன்.

      நீக்கு
  15. வழக்கம் போல நேரில் சென்று தரிசிக்க (சேவிக்க என்ற வார்த்தையை விட மனதுக்கு இது உன்னதமாக இருக்கிறது) இயலாதவர்களுக்கு இறைவனின் திரு உருவச் சிலைகளை இங்கு படமாகத் தந்திருப்பதை பாக்யமாக உணர்ந்தேன். நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
  16. தாளங்களை வாசிக்கச் செய்து, தாளத்திலிருந்து வரும் ஓசையை வைத்து நாதமுனிகள் அந்தத் தாளங்களின் எடையைச் சொன்னார். //

    இங்கு எடை என்பது டெசிபெல்ஸ் என்று தோன்றுகிறது. சுருதி frequency என்றும் தோன்றுகிறது

    ​வீர நாராயணபுரமும் வீராணமும் (ஏரி) ஒன்றா? பொன்னியின் செல்வன்?
    குறுங்குடி திருக்குறுங்குடி என்ற ஊரா?
    நான் கண்டமங்கலம் என்ற ஊரில் (பாண்டி பக்கம்) வாத்தியாராக இருந்திருக்கிறேன்.
    .
    ​Jayakumar

    பதிலளிநீக்கு
  17. ​மனுஷ கானம் "ஒரு நாள் போதுமா? " பாடல்
    தேவகானம் "பாட்டும் நானே பாவமம் நானே" பாடல். சரியா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்! இரண்டு நாட்களாக வேலைப் பளு+லேசான உடல் பாதிப்பு. நேற்றும், இன்றும் நெல்லையின் பதிவுகள் மிகவும் சிறப்பு! எத்தனை பெயர்களையும், தகவல்களையு நினைவில் கொண்டு அழகாக எழுதியிருக்கிறார். நேற்று பெருமாள் தரிசனமும் மனதிற்கு சந்தோஷம் அளித்தது. வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  19. நேற்றய பதிவில் கீதா நிறைய கேள்விகளை மிகவும் சின்சியராக கேட்டிருக்கிறார். அவற்றிர்கு ஏனோதானோ என்று பதில் அளிக்க முடியுமா? கொஞ்சம் பொருங்கள் கீதா பதில்களை நாளைக் காலை(கனடாவில்) எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. நாதமுனிகள் நம்மாழ்வார் ராமானுஜர் என்று சனிக்கிழமையில் தொடர்ச்சியாகவே படிப்பது போல ஒரு ஃபீலிங்!  ஒரே பதிவை இரண்டு நாள் தொடர்வது போல...  விட்டால் பாசுரம் கூட கீழே வருமோ என்று பார்த்தேன.   ஒருவேளை நெல்லையே கன்ஃபியூஸ் ஆகி விட்டாரோ என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  21. வீரநாராயணப் பெருமாள், நாத முடிகள் சந்நிதி,ஆளவந்தார் சந்நிதி படங்கள் கண்டு வணங்கினோம்.

    அவதாரத்தலம், ஸ்ரீநீவாசப் பெருமாள் கோவில் என எமக்கு காணக்கிடைக்காத பல படங்களையும் அதன் தகவல்களையும் தந்துள்ளீர்கள் .

    தொடர்கிறோம் ஆவலுடன் ....உங்கள் காத்திரமான பகிர்வுக்காக.... நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!