Cricket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cricket லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.9.10

ஆட்டமா? ஓட்டமா?


(T) EN SPORTS  என் ஸ்போர்ட்ஸ்
ESPN (Ennaa Sports Pulidaa Nee)
NEO SPORTS நீயா?  ஸ்போர்ட்?
Star(ve) Cricket

Didi Sports அல்லது டீடீஸ்போர்ட்ஸ்!!

ஸ்போர்ட்ஸ் சானல்களை நான் இப்படித்தான் பார்க்கிறேன்காரணம் ..... 

ஒரு ஃப்ளாஷ் பாக்.

*****

என்ன அர்ஜுனா?  அவார்டா?  என் எதிராளி முகத்தில் அவ்வளவு அவ நம்பிக்கை.

ஏன் அப்பிடிக் கத்துறே?  அர்ஜுன் என் தம்பியின் பேரன்.  தம்பி சிபாரிசு செய்தால் அவன் நிச்சயம் எனக்கு ஏதாவது ஒரு அவார்டு தர மாட்டானா என்ன?

தூஅப்படியா சேதிஎனக்குக் கூடத்தான்  ஸ்கேல் ரத்னா அவார்டு கிடைக்கும்.  ரத்னா என் மச்சினி.

ஸ்போர்ட்ஸுக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கம்.  டிவியில் கிரிக்கெட்டென்னிஸ் (பனியன் மட்டும் அதுவும் கை வைக்காத லோ கட் பனியன் மட்டும் போட்டுக் கொண்டு ஆடுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தும் நாரீமணிகள் டென்னிஸ்என்று விளையாட்டுகளை வெங்காய பக்கோடா போன்ற ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் நொறுக்குத் தீனி யுடன் சேர்த்து ரசிக்கும் போது மட்டும் தான் எனக்கும் விளையாட்டுக்கும் ஒரு 5 அடி அல்லது அடிக்குள்ளாக நெருக்கம் இருக்கும்.

முதல் முதலாக நான் விளையாட தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நின்றது என் சித்தப்பா மற்றும் அவரது (கேல் கில்லாடிமகன்களுடன் வாலிபால் விளையாடத்தான்.  

நான் பதுங்கிப் பதுங்கி ஒதுங்குவதைக் கண்டு சித்தப்பா, “ ஏன் இப்பிடி நடுங்கிச் சாகுறேபந்துக்குள் என்ன பெருச்சாளியா இருக்கு? “  என்று சந்தேகமாகக் கேட்டார்.  பந்துக்குள் சிறுத்தைக் குட்டி இருப்பது போன்ற கிலி எனக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.  அதை நிஜம்தான் என்று நிரூபிப்பது போல என் (ஆறே மாதம் இளையகஸின், செரினா வில்லியம்ஸ் ரேஞ்சுக்கு ஒரு சர்வீஸ் போட, பந்து ஒரு புலிக்குட்டி போல என் மூக்கில் தாக்கியது.  நான் மயக்கமடைந்து விழுந்தேன் என்று சொல்லியா தெரிய வேண்டும்?  அந்தக் காலத்தில் கோக்கோ கோலா எல்லாம் கிடையாது. கோலி சோடா உண்டு ஆனால் அதை வாங்கும் வசதி (விலை இன்றைய நாணயத்தில் சொல்வதானால் 3 பைசா) இல்லை.  எனவே சாவகாசமாக கிணற்றில் தண்ணீர் சேந்திக் கொண்டு வந்து என் மயக்கத்தைத் தெளிவித்தார்கள்.  அதன் பின் என்னை யாரும் பல்லாங்குழி, ஆடுபுலி போன்ற ஆட்டம் தவிர பெரிய விளையாட்டுகளுக்குக் கூப்பிடுவதில்லை.  பல்லாங்குழிக்கு கணக்குத் தேர்ச்சியும் ஆடுபுலி ஆட்டத்துக்கு சூழ்ச்சி நிறைந்த மூளையும் தேவை.  இரண்டும் எனக்கு கடவுள் தர வில்லை. 

வேறு யாரும் கூட விளையாட இல்லாத சமயத்தில் என் சம வயது சிறுமிகள் ( 6 முதல் 8 வரை) என்னை கல்லாங்காய் தாயம் போன்ற ஹார்ம்லெஸ் ஆட்டங்களுக்கு அரை மனசாகக் கூப்பிடுவார்கள்.  நானும் பயந்து கொண்டே சேர்ந்து கொள்வேன்.  வேறு ஒரு பாவாடை அல்லது கவுன் ஆட்டத்துக்கு வந்ததும் எனக்கு அன்பாக டாடா காட்டி,  அனுப்பி விடுவார்கள்.  ஒரு கல்லை மேலே வீசிவிட்டு அது விழுவதற்குள் ஒரு பிடி புளியங்கொட்டையை அள்ளிக்கொண்டு அந்தக் கல்லையும் பிடிக்க வேண்டும் என்று ஓர் ஆட்டம்.  அதில் வேண்டாத விருந்தாளியாக நான் கலந்து கொண்டு புளியங்கொட்டைகளை பலம் கொண்ட மட்டும் வீசி யதில் என் பக்கத்து வீட்டு நண்பி சரோஜாவுக்கும் எனக்கும் நிரந்தர சண்டை வந்து விட்டது.

ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கம்பல்ஸரி விளையாட்டு பீரியடில் என் மூளையை முற்றிலும் (அப்போது என் மூளை சற்று முற்றியிருந்தது என்ற உண்மையை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!) உபயோகித்து ஆசிரியர்கள் வெளியிலிருந்து கண்காணிக்கும் போது நான் ஆடுவது போல பாச்சா காட்டிவிட்டு மற்ற நேரத்தில் கிரௌண்டில் ஆபத்து இல்லாத பிரதேசமாகத் தேர்ந்தெடுத்து ஓட ஆயத்தம் செய்வதுபோன்ற போஸில் நின்று கொள்வேன்.  அந்த ஒரே வருஷத்துடன் அந்தப் பள்ளிக்கு குட் பை சொல்லிவிட்டு வேறொரு ஜில்லாவுக்கு கட்சி மாறினோம்.

அங்கு டிரில் பீரியட் மாலை கடைசி வேளையில்தான் வரும், எனது ஃபிஃப்த் ஃபாரம் வகுப்புக்கு.  ரொம்ப சௌகரியம்.  “ சார் வெளியூர் சார்” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னால், என் சோனி ஆகிருதியைப் பார்த்துவிட்டு “ சரி போய்த் தொலை” என்று டிரில் மாஸ்டர் அனுமதி வழங்கி விடுவார்.  உண்மையிலேயே ஆறு மைல் / 9 கி.மீ தூரத்திலிருந்து வந்து படித்ததால் டிரில் கிளாஸ் இருக்கும் நாட்களில் முக்கால் மணி முன்னதாகவே ஊரை நோக்கி நடையைக் கட்டுவேன்.

இறுதி வகுப்பான எஸ் எஸ் எல் ஸி அல்லது பதினோராம் கிளாசில் பள்ளி பிஸியான நகர மத்தியிலும் பிளே கிரௌண்ட் சுமார் இரண்டு கி.மீ தூரத்திலும் இருந்ததால் கிரவுண்டுக்கு 22 நிமி எடுத்துக் கொண்டு போவேன்.  திரும்ப 22 நிமி.  ஆக ஒரு பீரியட் அம்பேல். (இந்த அம்பேல் என்ற வார்த்தைக்கு எடிமாலஜி என்ன என்று தெரியவில்லை:)). இங்கும் அமெரிக்காவில் இருந்து தூதரகம் மூலமாக ஒரு பேஸ் பால் செட் வந்தது.  அதை ஆடும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக (ஏனோ?) என்னை மாஸ்டர் தேர்வு செய்தார்.  முதல் முதலாக ஒரு தடியனான பையனை பாட் பிடித்துக் கொண்டு நிற்கச் சொல்லி, இன்னொரு தடியனை பந்து வீசச் சொன்னார். பந்து பறந்து வர, பாட்மேன் தன் பலம் கொண்ட மட்டும் அதை கண்ட மேனிக்கு அடிக்க அது பறந்து சென்று டிரில் மாஸ்டர் வயிற்றில் பலமாகத் தாக்கியது.  'அய்யோ' என்றலறி உட்கார்ந்தவர் நினைவு திரும்பியதும் சொன்ன ஆணை: “அந்த கிட்டை எடுத்து ரூமில் வைத்துப் பூட்டு.  இனிமே ஒரு பயலும் பேஸ் பால் ஆடறேன்னு வந்தால் தெரியும் சேதி. தவறிப்போய் மண்டையில் அடிச்சிருந்தா செத்துத் தொலைஞ்சிருப்பேனேடா பாவிகளா“ என்று எங்களிடம் பதறினார்.  நியாயம்தானே என்ற பாணியில் நான் மட்டும் முகத்தை வைத்து இருந்ததைப் பாராட்டி என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு, 'கிளாஸ் டிஸ் மிஸ்' என்று வரம் அருளினார்.
                
             

வேலைக்குப் போன இரண்டாவது வருடம் அவ்வளவாக ஆபத்து இல்லாத டேபிள் டென்னிஸில் சேர்ந்தேன்.  நான் பந்துகளை உடைத்துத் தள்ளிய வேகத்தைப் பார்த்து விட்டு என்னை நைஸாக ஓரம் கட்டிவிட்டார்கள்.  ஷட்டில் காக் பந்துகளுக்கு ஏற்பட்ட அற்ப ஆயுள் காரணமாக அங்கும் என்னை ஒதுக்கித் தள்ளினார்கள்.

அப்புறம்தான் சீட்டு, கேரம் போர்டு என்று கவனம் திரும்பியது.  கேரம் போர்டு போட்டிகளில் என் பார்ட்னர் கில்லாடி.  அவர் சாமர்த்தியத்தில் செமி ஃபைனல் வரை வந்தோம்.  எதிரிகள் எனக்குக் கன்னடம் தெரியாது என்று எண்ணி கமெண்ட் அடிக்க, எனக்குக் கன்னடம் தெரியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அந்த அதிர்ச்சியில் ஜெயித்து ஒரு சின்ன இரும்புக் கப் வாங்கியது தான் என் முதல் சாதனை.

கடைசியாக மிஞ்சினது சீட்டுதான்.  அதில் ஒரு வெறியுடன் தேர்ச்சியைத் தேடி ஓரளவு வெற்றியும் பெற்றேன்.  அங்கும் பொன்னுசாமி மேசன் என்று ஒரு பிசாசு வந்து குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆடி என் வெற்றி வாய்ப்புகளுக்கு சிரார்த்தம் செய்து விட்டது!!

எனவேதான் நண்பர்களே நான் விளையாட்டுகளில் மெஜாரிட்டியுடன் சேர்ந்து கொண்டு ஆடியன்ஸ் அல்லது ஸ்பெக்டேட்டர் (இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?) அந்தஸ்தில் பார்க்கிறேன்.  
                            

15.10.09

வினையாகும் விளையாட்டு

நேற்று செய்திகளிலும் இன்று செய்தித் தாளிலும் BCCI ஸ்ரீசாந்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை வந்திருந்தது. கொடுக்கப் பட வேண்டிய எச்சரிக்கைதான்...எனக்கும் தோன்றும் இவர்கள் எல்லாம் மைதானத்தில் ஆடுகிறார்களா அல்லது போர்க்களத்தில் சண்டை இடுகிறார்களா என்று!
நம்மூர் ஸ்ரீசாந்த் ஹர்பஜன் ஆகியோர் விக்கெட் எடுத்த உடன் செய்யும் சேஷ்டைகள் அருவெருப்பையும் வெறுப்பையும் உண்டுபண்ணும். வரகுணபாண்டியன் சொல்வதுபோல (!) 'ஆட்டக் காரர்'களிடையே ஆக்ரோஷம் தேவைதான்...ஆனால் அமைதி மிக அவசியம் அல்லவா? ஏதோ செயற்கரிய செயல் செய்து விட்டது போல கையை மண்ணில் குத்தி, குதித்து, ஆட்டமிழந்த ஆட்டக்காரரை நோக்கி வெறுப்பான பார்வையால் மண்டையை ஆட்டி ஆட்டி இவர்கள் செய்யும் செயல்கள் ஆட்டம் பார்க்கும் சுவாரஸ்யத்தையே கெடுத்து விடுகின்றன.
மற்ற நாட்டு பௌலர்களும் பந்து வீசி விட்டு பக்கத்தில் வந்து முறைத்து விட்டுப் போவதுண்டு... முன்னால் ஆஸ்திரேலிய பௌலர் 'ப்ருஸ் ரீட்' என்று ஒருவர் மூச்சுக்குள் திட்டிக் கொண்டே பந்து வீசுவார். ஆட்டத்தை விளையாட்டாகப் பார்க்காமல் ஆத்திரக் களமாக மாற்றும் இவர்களை எல்லாம் என்னென்பது? நாகரீகமாக, விளையாட்டு உணர்வுடன், நட்புடன் விளையாட என்றுதான் பழகுவார்களோ? இதற்கு நம் பத்திரிகைகளையும் சொல்ல வேண்டும். ஆக்ரோஷமாகப் பந்து வீசினார் என்று இதை எல்லாம் கொண்டாடுவதால் வரும் வினை இது.

அந்தக் காலத்தில் ரவி சாஸ்திரி, கபில் தேவ், மதன்லால் போன்றோர் பந்து வீசிவிட்டு விக்கெட் விழுந்தவுடன் சிறிய சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் காட்டுவார்கள். பார்க்க கௌரவமாக இருக்கும். இப்போது? வெறுப்பை சம்பாதிக்காமல் அடுத்தவர்களுடைய நட்பை சம்பாதிப்பது எப்படி என்று இவர்களுக்கெல்லாம் வகுப்புதான் எடுக்க வேண்டும்...
சமீபத்தில் டென்னிசில் வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவர் நடுவரைப் பார்த்து கொலை மிரட்டலே விடுத்தார். பிற்பாடு மன்னிப்பு கேட்டார் என்றாலும் அவர்கள் நாகரீகம் அங்கு தொலைந்தது தொலைந்ததுதானே..ஆனால் அந்த மன்னிப்பெல்லாம் கூட இவர்கள் கேட்க மாட்டார்கள். கோடி கோடியாகப் பணம் கொட்டும்போது பணிவு எப்படி வரும்? தவறு செய்யலாம். தப்புதான் செய்யக் கூடாது.. ஏனென்றால்,
தவறு என்பது தவறி செய்வது...தப்பு என்பது தெரிந்து செய்வது...தவறு செய்தவன் வருந்தி ஆகணும். தப்பு செய்பவன் திருந்தி ஆகணும்