தஞ்சை மாவட்டம் - சோழ நாடு- சீர்காழியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீர்காழி-ஆக்கூர், சீர்காழி-நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ளது.
சோழ நாட்டில் அமைந்துள்ள நாற்பது திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. மொத்தத்தில் முப்பத்தெட்டாவது திவ்யதேசம்.
இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள அண்ணன் பெருமாள் திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்று அறியப் படுவதால் அண்ணன் பெருமாள் என்றே அழைக்கப் படுகிறார்.
கோவிலின் முன்புறம் திருவெள்ளக்குளம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது. இது சுவேத புஷ்கரணி என்றழைக்கப் படுகிறது. இக்குளத்தில் மலரும் குமுதமலர்களைக் கொய்து நீராட வரும் தேவமாதர்களில் ஒருவர் ஒருமுறை மானிடர் ஒருவர் கண்ணில் தென்பட்டு விட்டதால் தேவலோகம் திரும்ப முடியாமல் போக, அங்கேயே தங்கும் அந்த தேவமங்கையைத் திருமங்கை மன்னன் வந்து மணம் புரிய, அரங்கர் அருளில் அவர் திருமங்கை ஆழ்வாராக மாறியது வரலாறு.
நாகபுரி தேசத்தின் தலைவாசலாக அறியப்படும் இங்குதான் மருத்த முனிவரின்
ஆசிரமம் இருந்ததாகவும் வரலாறு. சூரியகுல அரசன் துந்துமாரன் என்ற அரசனின்
மகன் சுவேதனுக்கு ஒன்பதாவது வயதில் அகால மரணம் ஏற்படும் என்றறிந்த அரசன்,
வசிஷ்ட முனிவர் அறிவுரைப்படி திருநாங்கூர்ப் பொய்கையில் தினமும் நீராடி
வசிஷ்டரால் உபதேசிக்கப் பட்ட நரசிம்ம ம்ருத்யுஞ்சய மந்திரத்தை சங்கல்பம்
செய்ய ஸ்ரீநிவாசப் பெருமாள் அவன்முன் தோன்றி அவனை சிரஞ்சீவியாக்கியதாக
வரலாறு.
திருக்கடையூர் செல்லும் வழியில் மத்திய உணவு இங்குதான் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர். போகும் வழியிலேயே
திருபார்த்தன்பள்ளி, திருச்சித்திரக் கூடம் என்று சிதம்பரம் தாண்டும்
வழியில் இன்னுமிரண்டு திவ்யதேசங்களைத் தாண்டிச் சென்றாலும் அங்கெல்லாம்
செல்லவில்லை. மயிலாடுதுறையை அடைந்த போதே சற்றே வழி மாறி விட்டதால் கொஞ்சம்
சுற்றிதான் இந்தக் கோவிலை அடைந்தோம். போகும் வழியில் யாரைக் கேட்டாலும் வழி
சொல்கிறார்கள். ஒற்றையடிப் பாதை போன்று வசதிக் குறைவான குறுகிய வழி!
கோவில் பழமையைச் சொல்கிறது.
திருக்குளம் என்று சொல்லப்படும் திருவெள்ளக்குளமாம் சுவேத புஷ்கரணி
சுத்தம் செய்யப் படாமல், தூர்வாரப்படாமல் பாசி படர்ந்து காணப் படுகிறது.
கோவில் காரியங்களில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகளின் கைங்கர்யம்
காணப்படுகிறது.
உள்ளிருந்து வெளியே...
பெருமாள் இரண்டு உப நாச்சியார்களுடன் காட்சியளிக்கிறார். வலதுபுறம் தாயார் சன்னதி. திருமலையில் தாயார் இல்லாத குறை நீங்க இங்கு அலர்மேல்வள்ளித் தாயாருக்குத் தனிச் சன்னதி. உள்ளேயே வலதுபுறத்தில் குமுதவல்லி நாச்சியார் சன்னதி. இவர்தான் திருமங்கை மன்னனை திருமங்கை ஆழ்வாராகத் திருத்திய நாச்சியார்.
108 திவ்யதேச விவரப் படங்கள் அணிவகுப்பு....
தாயார் சன்னதிக்கு முன்புறம், உள்ளே நுழைந்ததும் இடப் பக்கம்
மடைப்பள்ளி. அங்கிருந்து கோவில் பிரகாரத்தைச் சுற்றி நூற்றியெட்டு திவ்ய
தேசம் பற்றிய விவரங்களுடன் படங்கள் பிரதட்சணமாக வைக்கப் பட்டுள்ளன.
அழுக்கான குளத்தைச் சுற்றி மேடான கரையில் சுற்றிலும் வீடுகள். எதிர்முனையில் பக்தர்கள் வசதிக்காக நான்கைந்து கழிப்பறைகள்.
எதிர்புறத்திலிருந்து கோவில்...
சாப்பாடு பரிமாறப்படும் நேரத்தில், சமைக்கப் பட்ட பிரசாதங்களை பட்டர்
வெளியில் கொண்டுவந்து வைத்து, "எங்களிடம் பரிமாற ஆள் இல்லை" என்று அறிவித்து
நகர, நாங்களே பரிமாறிக் கொண்டோம். இலை நூறு ரூபாய்க் கணக்கு. ஜவ்வரிசி
கல்கண்டு சாதம் கூடுதல் இனிப்புடன் இருக்க,கதம்ப சாம்பார் சாதம், சாத்தமுது
(ரசம்) புளியோதரை ஆகியவை 'திவ்யமாய்' இருந்தன.
தாயார் சன்னதியிலிருந்து வெளிப் புறம் நோக்கி...
கேமிரா ஒத்துழைக்காததால் செல்லில் எடுத்த (அரைகுறைப்) புகைப்படங்கள் மட்டும். என் உடன் வந்தவர் இந்த புகைப் படங்கள் எடுத்ததற்கு மிகக் கடுமையாக ஆட்ச்பித்தார். என் செல்போன் பேட்டரி தீர்ந்ததற்கும், பஸ் ரிவர்ஸ் எடுக்கும்வரை வெயிலில் நடந்ததற்கும் (செருப்புகள் பஸ்ஸில் மாட்டிக் கொள்ள, வெறும் காலில்) இந்தக் குற்றத்தைக் காரணமாக்கினார் அவர்!
பெரிய விசேஷ தினம் ஒன்றும் இல்லையென்றாலும் நாங்கள் கிளம்புமுன்னரே இன்னொரு பஸ் வந்து நின்றது. சித்திரை, வைகாசி,என்று எல்லா மாதங்களிலும்
விசேஷ தினங்கள் இருக்கின்றன. அப்போது கூட்டம் நிறைய வருமென்று பட்டர்
சொன்னார்.
(படங்கள் தெளிவின்மைக்கு மன்னிக்கவும். அவசரத்துக்கு 'சாதா செல்'லில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்!)























