4.7.16

திங்கக்கிழமை 160704 :: வாழைப்பூ வடகறி!



          இதை வடகறி என்றும் சொல்லலாம், உசிலி என்றும் சொல்லலாம்.
 
 





          எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வதில்லை.  காரணம் இதை இதழ் இதழாக உரித்து, கள்ளனை நீக்கி,  நறுக்கப் படும் பாடு.  அது நச்சு வேலையாம்!  என்ன செய்ய, நமக்கு இதுதானே பிடிக்கிறது!  உசிலின்னா அது வாழைப்பூ உசிலிதான்.  எனக்கு பீன்ஸ், கொத்தவரை, குடைமிளகாய் உசிலியெல்லாம் பிடிப்பதில்லை.
 
 



          வாழைப்பூவில் தேங்காய் சேர்த்தும் இன்னும் பலவிதங்களிலும் கறி செய்யலாம்.  உடம்புக்கு வாழைப்பூ எவ்வளவு நல்லது என்று சொல்லவே வேண்டாம்.  உங்கள் எல்லோருக்கும் என்னை விட அதிகமாகவே தெரியும்.
 
 







          உரித்துக்கொண்டே செல்லச்செல்ல, உள்ளே இருக்கும் இதழ்களை எடுப்பதுவும், பிரிப்பதுவும், நறுக்குவதும் ...
 
 


          ... நெம்பக் கஷ்டமுங்க...  அதனால் ஒரு ஸ்டேஜில் பாக்கி இருக்கும் வாழைப்பூவை...
 
 


          ..... அப்படியே சாப்பிட்டு விடுவேன்!

          வாழைப்பூவை இதழ் உரித்து, உள்ளே மறைந்திருக்கும் பூக்களை கொத்தாக தலையைப் பிடித்து வெளியில் இழுத்து, அதன் தலையில் உள்ளங்கையால் பரபரவென தேய்த்தால் இதழ் விரியும்.  
 
                                        
 
 
 
          நடுவில் வயிற்று வலியை உண்டாக்கும் கள்ளன் விழிப்பான்.  அதை அடியோடு கிள்ளி எடுத்து ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு, மற்றவற்றை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியிலிட்டு புரட்டிக் கொள்ளவும்.
 
 
                                        


          சம அளவு துவரம்பருப்பு,  கடலைப்பருப்பை (நிறைய பேர்கள் து. ப மட்டும்தான் போடுவார்கள்) ஊறவைத்து எடுத்து கொண்டு, காரம் தேவைப்படும் அளவு காய்ந்தமிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்து வாணலியிலில் எண்ணெய் விட்டு இதை போட்டுப் புரட்டி வறுத்துக் கொண்டு, 
 
 


          தனித்தனியாக உள்ள வாழைப்பூ, வடகறி இரண்டையும் ஒன்று  சேர்த்து எடுத்துக் புரட்டவும்.   இறக்கி வைக்கவும்.  தட்டில் போடவும்....
 
 
          சாப்பிடவும்.


பின்குறிப்பு  :   முடிந்தவரை படங்களை 


ரி
சை
யா

க் 

கொடுத்திருக்கிறேன்.

2.7.16

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்





          இன்றைய இளைஞர்களின் சமூகப் பார்வை அபாரமாய் மாறிக் கொண்டு வருகிறது.  உதவும் எண்ணம் என்பது அவர்களிடம் அதிகம் என்பதை சமீபத்து சென்னை வெள்ளத்தில் பார்த்தோம்.  தமிழ் நாடு மட்டும் அல்ல, நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இது மாதிரி இளைஞர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.  எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் வேண்டி இருக்கிறது.  ஒருவர் தொடங்கி வழி காட்டினால், அந்தப் பாதையைச் செம்மைப்படுத்தி இன்னும் சிறப்பாகச் செய்ய பலர் வருவார்கள்.




          நாம் சம்பாதிக்கும் பணத்தைப் பலவகையிலும் செலவு செய்து மகிழலாம்.  எது அதிக மகிழ்ச்சியைத் தரும்?  அடுத்தவர் கஷ்டத்தைத் தீர்த்து வர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிப் புன்னகையைப் பார்க்கும்போது உண்டாகும் சந்தோஷம்..  





          பசியை விடக் கொடியது தாகம்.  அந்த தாகத்தைத் தீர்க்க ஸ்ரீகாந்த் ஜாதவ் தனது குறைந்த வருமானத்திலிருந்து செய்யும் முயற்சிகள் உண்மையிலேயே மனதை நெகிழ வைப்பதாய் இருக்கின்றன.  அவர் தந்திருக்கும் விளம்பரத்தைப் பாருங்கள்..



His number is displayed on the card that he distributes in slum areas; the card says, “If you are struggling for drinking water then just make one call to get free drinking water.”



          இந்தச் செய்தி கடைசியில் கிடைத்தாலும், இன்றைய பாஸிட்டிவ் செய்திகளின் முதலிடத்தைப் பெறும் செய்தியாய் என் மனதில் தங்கி விட்டது.  


        

           அந்த இளைஞனின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை?  உங்களுக்குள்ளும் ஒரு சந்தோஷப் புன்னகையை மலர வைக்கவில்லை?




1)  நன்றி சைதை அஜீஸ், princes' of hell, குங்குமம்!




2)  ஆங்கோர் ஏழைக்கு...



3)  ஆளில்லா நூலகம்.  கே ஆர் மகேந்திர குமார்.





4)  "மரங்களை நட்டு பூமியைப் பாதுகாப்போம், ஏனெனில் பூமிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது' என்ற வாசகத்தை முன்னிறுத்தி குப்பை கொட்டும் இடத்தை பசுஞ்சோலையாக மாற்றியுள்ளனர் கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் மக்கள்.






 

5)  அறியாத ஜீவன்களுக்கு இல்லம் வேண்டும்!

மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி திருத்தி, குளிப்பாட்டி, உடையும், உணவும் கொடுத்து, மறுவாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வராஜ்.





6)  "......இதையடுத்து இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டினரிடமும் இருந்து நன்கொடையாக வசூலித்த மொத்தம் ரூ.5.50 லட்சத்தில் 2 வகுப் பறைகளிலும் ஏ.சி., மின்விசிறி களைப் பொருத்தினோம். சுத்திகரிக் கப்பட்ட குடிநீர், கணினி வசதிகளை ஏற்படுத்தியதுடன், கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினோம்...."





புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசுப் பள்ளியை புதுப்பித்து, மாணவர் சேர்க்கையில் ஒரு முன்மாதிரி பள்ளியாக மாற்றிக் காட்டியுள்ளனர்.


30.6.16

160630 :: எப்படி ..... எப்புடி ..... எப்பூடி!

 

நேற்றைய பதிவின் மூன்று கேள்விகளுக்கு பதில்களை இங்கே பார்ப்போம்.

வினா ஒன்று :

இதைக்  கொஞ்சம் கஷ்டமாகவே தேர்ந்தெடுத்தேன்.
முதல் கேள்வியிலேயே சிந்தனை செலுத்தி, அடுத்ததற்குப் போகாமல் இருக்கின்றார்களா அல்லது தெரியாததை விட்டு, தெரிந்த கேள்விகள் பக்கம் நகர்கிறார்களா என்று  தெரிந்துகொள்ள ஆவல்.

பெரும்பான்மை வாசகர்கள் மூன்றையும் முயன்றிருக்கிறார்கள்.

முதல் கருத்து உரைத்த ... ஸ்ரீமலையப்பன் போற்றுதலுக்கு உரியவர். மூன்றையும் முயன்று, முதல் ஆளாக தன கருத்தை கூறியிருக்கிறார்.

அவர் கூறிய இரண்டாம் புதிரின் விடை சரியான விடைக்கு மிக அருகாமையில் .

மாதவன் கூறிய 'அனதர் ' பதில் மிகவும் சரி.

அதற்குப் பின்  ஆனந்தராஜா விஜயராகவன் (அதாங்க நம்ம ஆவி!) மாதவன் இருவரும் கலக்குக் கலக்கென்று கலக்கியிருக்கிறார்கள். இருவரின் விடாமுயற்சியையும் மனமாரப் பாராட்டுகின்றோம்.

கீதாசா  லேட் ஆக வந்ததால் இரண்டாம் புதிரின் சரியான விடையை முதலில் கூறுகின்ற வாய்ப்பை தவறவிட்டார்.
கமெண்ட் மாடரேஷன் இந்தப் புதிர்களுக்கு தேவையில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இது பரிசுப்போட்டி அல்ல.

நெல்லைத்தமிழன், ஹுஸைனம்மா, மாடிப்படி மாது எல்லோரும் முயற்சி செய்துள்ளனர். அவர்களின் ஊக்கத்திற்கு எங்கள் பாராட்டுகள்.

 பல கோணங்களிலும் முயன்று பலவகை பதில்களையும் பொருத்திப் பார்த்த எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு.

வாழ்க வளமுடன்!

சரி சரி  இப்போ எங்கள் பதில்கள்.

எப்படி !
1) A I J Q Y 
விளக்கம் : நியூமராலஜி. மேற்கண்ட எல்லா எழுத்துகளுக்கும் , உரிய எண் ஒன்றேதான். (ஒன்று)

எப்புடி !
2) TODAY IS TODAY; TOMORROW IS ANOTHER DAY. 
விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன். எல்லோரும் ஏற்கெனவே கூறிவிட்டீர்கள்.

எப்பூடி !
3)    K  Z  R  E D. 
அட என்னங்க நீங்க எல்லாம்! இவ்வளவு டீ வி விளம்பரங்கள் பார்க்கறீங்க,
Dக்கு முன்னாடி  Eவரும் என்று கூடவா தெரியலை?

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
       

28.6.16

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மாற்றம்





          அவரின் தளம் அநன்யாவின் எண்ண அலைகள்.

          சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.  நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட்.  சென்ற வருடத்துக்குப் பிறகு பிளாக்கில் அவர் எழுதவில்லை.    ஆனால் ஃபேஸ்புக்கில் மிகவும் பிஸி!


          இந்தக் கதை பற்றிய அவர் கருத்தும், தொடர்ந்து அவர் படைப்பும்...



========================================================================



- அநன்யா வீடு மாற்றும் மும்முரத்தில் இருப்பதால் முன்னுரை தராததற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்! -


========================================================================

மாற்றம்  


அநன்யா மகாதேவன்

     ”வீடு பெருக்கி துடைக்கிறதுக்காம்மா 600 கேக்கறீங்க?” என்றேன். ”அங்கே ஒரு வீட்டுல செய்யறேன் அவங்க 800 குடுக்கறாங்கம்மா” என்றாள்.சென்னையில் ஆள் கிடைப்பதே அரிது, ”பாத்திரமெல்லாம்?”
 என்றாள்.

”வேண்டாம்மா, அது நானே பாத்துப்பேன்” என்றேன். ”வெறுமனே பெருக்கி துடைக்கணும்மா, 500 ரூபாய் தரேன்”


”இப்பச்சரி, ஆனா நான் செய்யறதை பாத்துட்டு 3 மாசம் கழிச்சு 600 தாங்க” என்றாள்.


அரை மணி வேலைதானே? அதுவும் சிறிய வீடு தான். எதுக்கு 600 எல்லாம்? என்று நினைத்துக்கொண்டேன்.

     8 மணிக்கு சமயல் முடித்துவிட்டு வேலைக்கு ஓடவேண்டும். பழைய வீட்டில் ரொம்ப அவஸ்தை. ”ஆகட்டும்மா” என்று சொல்லி வைத்தேன்.

     சுமார் 65 வயதிருக்கும். முழுவதும் நரைத்த முடி, மூக்கின் இரண்டு புறமும் பேசரி அணிந்து, காலை 5.30க்கு சிரிக்கும் கண்களுடன் ஆஜர் ஆகி விடுவாள்.அரை மணி நேரம் வேலை செய்கிறாள்.

     முதலில் கூடம், பின்னர் சமயலறை, பிறகு இரண்டு அறைகளையும் சுத்தமாக நன்றாகக் குனிந்து இரண்டு கைகளாலும் விளக்குமாற்றை பிடித்துக் கொண்டு பெருக்கி,அழகாக அழுத்தி மாப்பைக் கொண்டு துடைக்கிறாள் அந்த மூதாட்டி.  சில சமயம் 5.45, சில சமயம் 6.00 மணிக்கு வந்தாலும் நேரத்துக்கு வேலையை முடித்துக்கொண்டு அனாவஸ்ய பேச்சில்லாமல், குப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள்.

     ”வெறும்பாலு குடிக்க மாட்டேய்ன். கொஞ்சமா சர்க்கரை போட்டு ஒரு சொட்டு காப்பித்தண்ணி ஊத்துங்க ” என்று தனக்கு வேண்டியதை சொன்னாள். அப்படியே தரேம்மா என்றேன். காபி தருவாத ஒன்றும் பேசவில்லை. ஒரு வேளை கொடுக்கவில்லையென்றால் கேட்கவும் மாட்டாள். அவள் வந்தால் அவளுக்கு காப்பி கொடுக்க வேண்டுமே என்ற உந்துதலில் 5/.15க்கே எழ ஆரம்பித்தேன்.

     எனக்கு ஜுரமாக இருந்ததை உணர்ந்து நான்கு நாள் வழக்கமான வேலைகளுடன், பாத்திரங்களை சத்தமில்லாமல் தேய்த்துவிட்டு மேடை துடைத்துவிட்டுப் போனாள்.

     அவள் கால்கள் மூப்பினால் கோணி இருந்தன. ஒரு நாள் நான் கால்களை கவனிப்பதைக் கண்டு,”கட்டட வேலை செஞ்சு செஞ்சு காலெல்லாம் திராணியில்லாம போச்சும்மா, ரொம்ப வலிக்கிது” என்றாள்.

     வேலைக்கு வர ஆரம்பித்த ஒரு வாரத்தில், ”5 நாள் கரூர் போறேய்ன். வரமாட்டேய்ன்” என்றாள் . சிவுக்கென்றது. 5 நாளா? என்று ஆச்சர்யமும் அதிருப்தியும் காட்டிவிட்டு, சரிம்மா என்று சிரித்து வைத்தேன்.

     டாண் என்று 5வது நாள் ஆஜர் ஆகிவிட்டாள். அவ்வப்போது ”ஃப்ரிஜ்ஜுக்கு பின்னாடி தூசி இருக்கும்மா” என்றேன். பெருக்கும்போது கூடவே நடந்தேன். கீழேயுள்ளவற்றை எடுத்து நீக்கி உதவி செய்தேன். இல்லாவிட்டால் அப்படியே பெருக்கிவிடுகிறாள். அடியில் தூசி குப்பை எல்லாம் அப்படியே இருக்கும்.

     தினமும் 5.45க்கு வந்துவிட்டு 6.15க்கு கிளம்பி விடுவதால் எதுவும் பேசமுடியவில்லை. ஒரு நாள் கொஞ்சம் லேட்டாக வரச்சொன்னேன். 11.00 மணிக்கு வந்தாள். ”எனக்கு பசங்க இல்லே, ஒரே பொண்ணு தேன்.. என் பொண்ணுவயித்து பேத்தியை நாந்தேன் படிக்கவைக்கிறேய்ன். மாப்பிள்ளை சரியில்லைம்மா, குடிக்கிறாய்ன், அதேன் நானே அவளை எடுத்துட்டு வந்துட்டேய்ன். இங்கே தேன் படிச்சா, பெரியமனுசி ஆயிடும்ன்னு தோணிச்சு, அதான் கொண்டு என் பொண்ணு கிட்டே கரூர்ல விட்டேய்ய்ன். நானே சம்பாரிச்சு காசு சேத்து அவளை படிக்க வெக்கிறேய்ன்” என்றாள்.வீட்டுக்கு வீடு கஷ்டமும் வேதனையும் இருக்குமே. இவர்களுக்கு இது போல என்றெண்ணிக்கொண்டேன்.

     ”பேத்தியை ஆஸ்டல்ல சேர்த்திருக்கேன். கொஞ்சங்கொஞ்சமா காசு சேத்துருக்கேய்ன். 30000 கேக்குறாய்ங்கே. காசை மாப்பிள்ளைகிட்டே குடுத்தா குடிச்சிப்புடுவாய்ன். அதேன் நானே கரூருக்குப் போய் கட்டிட்டு வந்தேய்ன்” என்றாள்.

     அன்று முதல் தேதி. கண்களில் எதிர்ப்பார்ப்புடன் வந்தாள். 500 ரூபாய் நோட்டுடன் 100 ரூபாய் நோட்டும் கொடுத்தேன். அவள் கண்கள் பனித்து, நன்றி என்றன.  

     என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் மதிப்பு அவசியமாகிறது.