வெள்ளி, 14 அக்டோபர், 2011

எட்டெட்டு:: ப 2 :: துன்பம் நேர்கையில் ...



>>>>> 8 times 8 முதல் பகுதி <<<< இங்கே சொடுக்குக. 
கே வி தொடர்கின்றார்: 

அந்த எட்டு மாடி ஹோட்டலின் கீழ் தளத்தில் உள்ள அலுவலகத்தில் இரண்டு பேர் இருந்தனர். ஒருவர் காக்கி பேண்ட், வெள்ளைச் சட்டையணிந்த வாலிபர்.  வயது என்னை விட ஏழெட்டு குறைவாக இருக்கும். அவர் ஒரு பக்கம் ஃபோனில் பேசிக்கொண்டு, ஃபோனை இடது காதுக்கும், இடது தோள்பட்டைக்கும் இடையே இடுக்கியவாறு, வலது கையால் ஒரு ரெஜிஸ்டரைப் புரட்டியவாறு, "சாரி சார் - நோ ரூம்ஸ் அவைலபிள் ரைட் நவ்...." என்று போனில் கூறியபடி, என்னைப் பார்த்துப் புருவத்தை உயர்த்தினார். நான், "சார் அயம் இன் நீட ஆப எ சிங்கிள் ரூம். எவ்வளவு வசதி குறைவான ரூமாக இருந்தாலும் பரவாயில்லை. இன்றிரவு மட்டும் தங்கி, காலையில் கிளம்பி விடுவேன்." என்றேன், ஆங்கிலத்தில். 
   
"சாரி சார். நோ ரூம்ஸ்." என்ற அதே பல்லவியை, இரக்கத்தோடு, இனிமையாகக் கூறினார். 

"கடவுளே" என்று வாய்விட்டு அலுத்துக் கொண்டு, என்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். அதுவரையிலும், அங்கே ஒரு ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு, ஓர் இந்தி தினசரியை அசுவாரஸ்யமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டாவது நபரான முதியவர், "சார், நீங்க தமிழா?" என்றார். 'ஆமாம்' என்று சொல்வதற்கு முன்பாக, 'யார் இவர்? ஆளைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்டவர் மாதிரி இருக்கின்றார். ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, பிறகு உருக்கமான கதை எதையாவது அவிழ்த்துவிட்டு, அஞ்சு பத்து - கடன் கேட்பாரோ?' என்று தோன்றிய பொழுதும், வாய் கூறாத வார்த்தையான 'ஆமாம்' என்பதை, என் பார்வையும் தலை அசைப்பும் அவருக்கு உணர்த்திவிட்டது போலும்! 

"உங்க பேரு என்ன?" என்று கேட்டார். 

"வரதராஜன்"

"இந்தி தெரியுமோ?"

"அரைகுறையாகத் தெரியும்" 

"சரி, சித்த நாழி அதோ அந்த சேர்ல உக்காருங்கோ. நான் இவரண்டை கொஞ்சம் பொய்யும் மெய்யும் கலந்து சொல்லிவிட்டு, உங்களை என்னோட இடத்துக்கு அழச்சுண்டு போறேன்." என்றார். வெள்ளை வேட்டி, நீல நிறச் சட்டையணிந்த அந்த முதியவருக்கு அறுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும். அவர் அந்த வெள்ளைச் சட்டை இளைஞரிடம் தாழ்ந்த குரலில், கொஞ்ச நேரம் ஏதோ சொன்னார். வெள்ளைச் சட்டை இளைஞர், ஒன்றுமே பதில் பேசாமல், இவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு, 'சரி' என்று தலையாட்டினார். 

முதியவர் என்னிடம் வந்து, "வாங்க சார், போகலாம்." என்றார். லிப்டில் நுழைந்து எட்டாவது மாடிக்குச் சென்றோம். லிப்டை விட்டு வெளியே வந்தவுடன், வலது பக்கத்தில், அறை எண் 81, 82, 83, 84, 85 எண்கள் கொண்ட அறைகள்.  காரிடாரின் கடைசியில், நேர் எதிரே 86. இடது புறத்தில், 89, 88, 87 - என்று பெரிய அமைப்பு கொண்ட பகுதிகள் இருந்தன. 88 ஆம் எண் இலக்கமிட்ட கதவுகள் தந்த வேலைப்பாடுகளுடன் மிகவும் சிறப்பாகக் காணப்பட்டது. கதவுக்கு அருகில், இருபுறங்களிலும் பூச்சட்டிகள். அவைகள்  வைக்கப் பட்டிருந்த ஸ்டீல் டேபிள்கள் மூன்றும் கொலுப்படிகள் போல அழகாக இருந்தன. முதியவர் எண்பத்திரெண்டாம் அறைக்கு வெளியே நின்று, "காலு சிங்" என்று மெதுவாக அழைத்தார். ஒல்லியான உருவம் கொண்ட - ஆனால் ஆறடி உயரம் இருந்த மொட்டைப் பையன் ஒருவன் அந்த அறையின் கதவைத் திறந்து, 'சாப்' என்றான். முதியவர் என்னைக் காண்பித்து காலு சிங்கிடம் ஏதோ சொன்னார். காலு சிங் என்னைப் பார்த்து ஒரு சலாம் வைத்துவிட்டு, கதவை மூடிக்கொண்டான். 

பிறகு, அந்த முதியவர், எண்பத்து மூன்றாம் அறையை, தன்னிடம் இருந்த சாவி கொண்டு திறந்தார்.  பிறகு சொன்னார். "சார், நான் இந்த ஹோட்டலிலே, இந்த அறையிலே தங்கிக் கொண்டு, எடுபிடி வேலை முதல், பேங்க் வேலைகள் வரை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். அறைக்கு  வாடகை கிடையாது. சம்பளம் என்று எதுவும் கிடையாது. எந்த வேளைக்கு என்ன சாப்பிடவேண்டும் என்றாலும் எல்லாம் ஃப்ரீ. எனக்கு எப்பொழுதுமே நைட் டூட்டிதான். இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை கீழே ஆபீஸில் இருப்பேன். காலை எட்டு மணி முதல் இரவு எட்டு வரை வேலை எதுவும் இல்லை என்றால், இந்த ரூமில் படுத்துத் தூங்கி விடுவேன். இன்றைக்குத் தூக்கம் வராமல் போனதால், கீழே வந்து ஆபீசில் உட்கார்ந்திருந்தேன். உங்களைப் பார்த்ததும், எப்படியாவது உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. நான் தமிழ் பேசியே இரண்டு வருடங்களாகிவிட்டன." 
என்னை ஒன்றுமே பேசவிடவில்லை அவர்.  

"சார், நீங்க எவ்வளவு நாட்கள் இந்தூரில் தங்கவேண்டும்?"

"சரியாகத் தெரியவில்லை. நாளை ஆபீஸ் சென்றால் நிலவரம் புரியும்." 

"வரதராஜன், நீங்க இந்த ரூமில் இன்று இரவு முழுவதும் தங்கிக் கொள்ளுங்கள். நான் இன்று இரவு எட்டு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை, கீழே ஆபீசில் இருப்பேன். நாளை ஆகஸ்ட் எட்டாம் தேதி. நான் ஒரு இடத்திற்கு காலையில் போகவேண்டியுள்ளது. எனக்கு ஒரு நூறு ரூபாய் கொடுங்கள். நாளைக் காலை அல்லது மாலை உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீங்க காலையில் கிளம்பும் பொழுது நான் வரவில்லை என்றால், ரூமைப் பூட்டி சாவியை, காலு சிங்கிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுங்கள்." என்றார். 

நான் ஒரு நூறு ரூபாயை எடுத்து, அவரிடம் கொடுத்து, "பரவாயில்லை பெரியவரே, நீங்க இதைத் திருப்பித் தரவேண்டாம்" என்றேன். 

அவர் சந்தோஷமாக அதைப் பெற்றுக் கொண்டு கீழே சென்றார். 
*** *** ***
அறையை ஒரு நோட்டம் விட்டேன். ஒரே ஒரு திறந்த அலமாரி. அதில் அந்தப் பெரியவரின் நான்கு செட் உடைகள், மடித்து வைக்கப் பட்டிருந்தது. கீழ்த் தட்டில் ஒரு சிறிய சூட் கேஸ். அட்டாச்சுடு பாத் ரூம். அறையில் கட்டில் உள்ள மூலைக்கு எதிர் மூலையில், ஒரு சிறிய, பழைய மர மேசை. அதில் இரண்டு இழுப்பு அறைகள். மேலே உள்ளதைத் திறக்க முடியவில்லை.  கீழே உள்ளதைத் திறந்து பார்த்தேன். அதில் ஒரு நான்காக மடிக்கப்பட்ட காகிதமும், ஒரு பால் பாயிண்ட் பேனாவும் தவிர வேறு எதுவும் இல்லை. மேசையின் மேலே, காலு சிங் ஒரு தண்ணீர் ஜக் கொண்டுவந்து வைத்தான். பக்கத்திலேயே ஒரு கண்ணாடிக் குவளை. குளித்துவிட்டு வந்து, காலு சிங் கொண்டு வந்து கொடுத்த இரவுச் சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டு முடித்தேன். காலு சிங்கிடம் நான் நீட்டிய இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளில் ஒன்றை மட்டும் வாங்கிக் கொண்டு, சலாம் அடித்துச் சென்றுவிட்டான்.

கட்டிலில் எப்பொழுது படுத்தேன், எப்பொழுது தூங்கினேன் என்பதே நினைவில்லை. 
*** *** *** 
திடீரென்று விழிப்பு வந்தது. மின் விசிறி நின்று போயிருந்தது. அறையில் வெளிச்சமே இல்லை. கும்மிருட்டு. வாட்சில் டார்ச் அடித்துப் பார்த்தேன். நேரம் 00:08 எங்கிருந்தோ மல்லிகை மணம். அறையில் குளிரும், மல்லிகை மணமும் மெலிதாகப் பரவியது. அப்பொழுது ஒரு பாட்டும் கேட்டது. 


                           
(தொடரும்) 

19 கருத்துகள்:

  1. வலையில் விழுந்தேன்.
    அடுத்து என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு.

    பதிலளிநீக்கு
  2. மல்லிகை மணம்?'மின்னல்,மழை,மோகினி' மாதிரி ஒரே சஸ்பென்ஸ்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல தான் வைக்கிறீங்க ட்விஸ்ட்

    பதிலளிநீக்கு
  4. துன்பம் நேர்கையில் ..."எங்கிருந்தோ மல்லிகை மணம். அறையில் குளிரும், மல்லிகை மணமும் மெலிதாகப் பரவியது. அப்பொழுது ஒரு பாட்டும் கேட்டது. /

    எதிபார்ப்பு கூடிவிட்டது.

    பதிலளிநீக்கு
  5. மல்லிகை மணமா? அய்யய்யோ செம எதிர்பார்ப்புல விட்டுட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  6. சாதாரணமாக ஆரம்பித்தது திகில் கதை ஆகிவிட்டதே?
    அடுத்த பகுதியை ஆவலோட எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. //திடீரென்று விழிப்பு வந்தது. மின் விசிறி நின்று போயிருந்தது.//

    மின்விசிறி நின்றதினால் விழிப்பு வந்ததா? இல்லை, விழிப்பு வராததினால், மின்விசிறி ஓடிற்றா?..

    -- இதையெல்லாம் யோசிக்க முடியாதபடிக்கு நல்ல விறுவிறு.

    பதிலளிநீக்கு
  8. காலு சிங் வித்யாசமான பெயரா இருக்கு…. எட்டிலிருந்து எட்டு வரைன்னு பெரியவர் அடிக்கடி சொல்றார்..கதை தலைப்பு எட்டெட்டு ன்னு இருக்கு.. எப்படியும் இன்னமும் 62 பாகம் திகில் திகிலா இந்த கதை ஓடும்……

    பதிலளிநீக்கு
  9. அடுத்து என்னன்னு எதிர்பார்க்க வச்சுட்டீங்க. சீக்கிரம் தொடருங்க.வெயிட்டிங்க்.

    பதிலளிநீக்கு
  10. மல்லிகப்பூ வாசம் கெளம்புமா? கெளம்பிடுச்சிய்யா கெளம்பிடுச்சி...

    ஸ்ரீராம்... நல்லாத்தான் கிளப்பியிருக்கீங்க பீதிய...

    பதிலளிநீக்கு
  11. அடுத்து கொலுசு சப்தம் தூரத்தில் நாய் அழும் திகில் ஒலி கேட்குமோ எனும் சந்தேகத்தை உண்டாக்கி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  12. நல்லா தான் இருக்கு உங்க கதை

    பதிலளிநீக்கு
  13. குரோம்பேட்டைக் குறும்பன்15 அக்டோபர், 2011 அன்று PM 1:58

    ஓ! அதுவா இது?

    http://engalblog.blogspot.com/2011/08/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  14. வருக அப்பாதுரை, Lalitha mittal, suryajeeva, இராஜராஜேஸ்வரி, shanmugavel, middleclassmadhavi, RAMVI, ஜீவி, பத்மநாபன், Lakshmi, மோகன்ஜி, அனானி, வைரை சதிஷ், குரோம்பேட்டைக் குறும்பன்...

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  15. என்னங்க இது, நடுராத்திரில மின் விசிறி நின்னு, மல்லிகை மணம் வந்தாலே 'நானே வருவேன்' இல்லை 'வெண்மேகமே வெண்மேகமே' இந்த மாதிரி பயங்கரமான பாட்டுதான் போடுவாங்க. நீங்க என்னடான்னா 'துன்பம் நேர்கையில்' என்று இனிமையான, இதமான பாட்டை போட்டிருக்கீங்க. இந்த பாட்டு கூட ஒரு வேளை நடு ராத்திரி திடீர்னு கேட்டா பயம் வருமோ! நெனச்சு பாத்தா பயமாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. நெஞ்சம் மறப்பதில்லையும், நானே வருவேன், அங்கும், இங்கும் பாட்டும் மறந்து போச்சாமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!