திங்கள், 15 ஜூலை, 2013

அலேக் அனுபவங்கள் 22:: அறுவை சிகிச்சை நிபுணர்.

               
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து எட்டாம் ஆண்டு. ஏப்ரல் மாதம். அலுவலக மருத்துவர், என்னைப் பரிசோதித்து, ஹெர்னியா உள்ளது; ஆரம்ப கட்டம். அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்றார். 
              
நான் பல மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் தீர யோசித்துப் பார்த்து, குரோம்பேட்டையில் வீட்டுக்கு அருகிலேயே உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்தேன். 
              
என்னுடைய அலுவலக நண்பர் எம். முரளி வேறொரு பரிந்துரை கூறினார். செலவுக்கு பயந்து, பெயர் தெரியா மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக அணுக வேண்டாம். அஜாக்கிரதையாக ஒரு சிறு பஞ்சு உள்ளே வைத்து தைத்துவிட்டார்கள் என்றால், பெரும் ஆபத்து ஆகிவிடும். 
                
வயிறும் வயிற்றுக்குக் கீழும் அறுவை சிகிச்சை என்றால், நூறு சத விகிதம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை அளித்து வருபவர் இருக்கிறார், அவரைப் போய்ப் பாருங்கள் என்றார் முரளி. முரளியின் மனைவியும் ஒரு டாக்டர். அவருடைய சிபாரிசுதான் இந்த டாக்டர். 
                
காலை பத்து மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். நான் ஒன்பதே முக்காலுக்கு மருத்துவமனை சென்றேன். டாக்டர் ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கின்றார். கொஞ்சம் காத்திருங்கள் என்றனர். கொஞ்சம் இல்லை, நிறையவே காத்திருந்தேன். 
                 
பதினொன்றரை மணி சுமாருக்கு டாக்டர் வந்தார். ஆஜானுபாகுவான உருவம். பரிசோதித்தார். 
           
"டிரிங் பண்ணுவியா?"

"இல்லை சார்."

"ஸ்மோக்?"

"இல்லை சார்."

"அப்புறம் எப்பிடி உனக்கு ஹெர்னியா வந்தது? வெயிட் தூக்குவியா?" 

"ஆமாம் சார். குரோம்பேட்டையில் தண்ணீர் கஷ்டம் அடிக்கடி வரும். டிரம் டிரம்மாக தண்ணீர் ஒரு மாடி ஏற்றி கொண்டு போனது உண்டு. அடிக்கடி ஜலதோஷம் வரும், ஒரு நாளைக்கு நாற்பது ஐம்பது தும்மல் போடுவேன்." 

பிறகு, ஹெர்னியா என்றால் என்ன, அறுவை சிகிச்சை மூலம் என்ன செய்வார்கள் என்று பொறுமையாக, கம்பீரமான குரலில் கூறி, படம் போட்டு விளக்கினார், டாக்டர்.

 'நல்ல நாள் பார்த்து வந்து இங்கே அட்மிட் ஆகிவிடு. இரண்டு நாட்கள் ப்ரிபரேஷன் ட்ரீட்மெண்ட். பிறகு ஆப்பரேஷன். அதற்குப் பிறகு நான்கு நாட்களில் வீட்டிற்குப் போய் ஓய்வு எடுத்துக் கொள். பிறகு ஒரு வாரம் கழித்து வா. தையல் பிரித்து விடலாம்' என்றார். 

நல்ல நாள் பார்த்து, அட்மிட் ஆனேன். ப்ரிபரேஷன் சிகிச்சை எல்லாம் இனிதே நடந்தது. 

அறுவை சிகிட்சையன்று காலையில் ஒரு இளநீர் மட்டும்தான் சாப்பிடலாம் என்றார். வயிறு காலியாக இருக்கவேண்டும் என்றார். 

ஆப்பரேஷன் மேஜை. இதுவரை யாரும் என் உடம்பில் கத்தி வைத்தது இல்லை. மயக்க மருந்து சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்ற கவலை வேறு. சரியாக மயக்கம் வராமல், பாதி ஆப்பரேஷன் நடக்கும் பொழுது நினைவு வந்துவிட்டால் என்ன ஆகும் என்று வயிற்றில் பட்டாம்பூச்சிகள் வேறு பறந்து கொண்டிருந்தன. 

டாக்டர் என் காதுக்கு அருகே வந்து "கௌதமன், உங்க வாயில சொத்த பல்லு இருக்கா?" என்று கேட்டார். 

யோசனை பண்ணிப் பார்த்தேன். ஏதோ ஒன்று இரண்டு தேறும் என்று தோன்றியது. "உம் ..... இருக்கு" என்றேன்.

"எவ்வளவு சொத்தைப் பல்லு? எண்ணிச் சொல்லு" என்றார். 

"ஒன்று ...........     இரண்டு .......... அப்புறம் ........."   

மேலே இருந்த விளக்குகள் எல்லாம் ஒரு சுழல் சுழன்றது. 

மீண்டும் ஏதோ சொல்ல கண்ணைத் திறந்தால் ஒரே இருட்டு. 

கைகளை ஆட்ட முடியவில்லை. யாரோ என் கையில் கட்டெறும்பை விட்டிருந்தார்கள் போலிருக்கு. கட்டெறும்பு கனமாக இருந்தது. அவ் என்று கையில் கடித்தது. அந்த கட்டெறும்பை ஒரேயடியாக நசுக்கி விடலாம் என்று இன்னொரு கையை அதன் அருகே கொண்டு சென்ற போது, என் கையை தடுத்து நிறுத்தியது என் மனைவியின் கை. 

"ட்ரிப்ஸ் ஏற்றுகின்ற நீடிலை பிய்க்கக் கூடாது" 

"ஆப்பரேஷன் முடிந்து விட்டதா?"

"ஆயிற்று. மாலையே ஆப்பரேஷன் ஓவர். ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து உங்களை இங்கே கொண்டு வந்து படுக்க வைத்து, நான்கு மணி நேரம் ஆயிற்று" 

கொஞ்சம் கூட வலியே தெரியவில்லை. அப்படியே வலித்தாலும், பொறுத்துக் கொள்ளக் கூடிய சில்லறை வலிதான் 

டாக்டர் கூறிய படி எல்லாம் இனிது முடிந்தது. டிஸ்சார்ஜ் ஆகும் பொழுது, டாக்டர் கூறினார். "இப்போ இடது பக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இன்னும் சில வருடங்களில் வலது பக்கமும் செய்யவேண்டி வரும். இந்த கம்ப்ளைண்ட் ஒரு பக்கத்தோடு நிற்காது என்றார். தயங்காமல் சிகிச்சைக்கு வாருங்கள்" 

1999. மறுபடி, அதே மருத்துவமனை. அதே டாக்டர். அதே அனுபவங்கள். வலது பக்கமும் ஆப்பரேஷன் செய்து கொண்டு, வெற்றிகரமாக வீடு திரும்பினேன். இந்த தடவை தனியாளாக தைரியமாக போய் நானே அட்மிட் ஆகி, திரும்ப வரும் பொழுது டாக்சி பிடிக்க மட்டும் மனைவி உதவி செய்ய, டாக்சியில் வீடு திரும்பினேன். ஆப்பரேஷன் முடிந்த இரண்டாவது நாளே யார் உதவியும் இன்றி நடந்தேன். 

இந்த முறை தையல் எதுவும் கிடையாது. தானே கரைந்து போகின்ற ஒரு வகை தையல். 

'இனிமேல் நிச்சயம் உனக்கு ஹெர்னியா தொந்தரவு வராது. நீங்க தைரியமாக வீட்டுக்கு செல்லலாம்' என்றார் அந்த டாக்டர்.

மருத்துவமனை: ஸ்ரீ ரமணா சர்ஜிகல் கிளினிக். 

டாக்டர்: நேற்று (14 - 07 -2013) காலமான,  
                                                       திரு என். ரங்கபாஷ்யம். 

தாங்க் யூ டாக்டர், ஃபார் தி நைஸ் ட்ரீட்மெண்ட்.  
                 
(இந்தக் கட்டுரையை அலேக் அனுபவங்கள் என்ற தலைப்பில் ஏன் சேர்த்தீர்கள் என்று ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து வினவினார். முதல் அறுவை சிகிச்சைக்கான செலவு ரூபாய் பதினைந்தாயிரத்தையும், இரண்டாவது சிகிச்சைக்கான ரூபாய் ஐம்பதாயிரத்தையும், அசோக் லேலண்ட்  (மேஜர் மெடிக்கல் பிளான் மூலமாக) முழுவதும் அளித்தார்கள். அசோக் லேலண்டில் மெடிக்கல் லீவு எடுத்து, அப்பொழுது பெற்ற அனுபவங்கள்தாம் இவை!) 

9 கருத்துகள்:

  1. இது போன்ற அறுவை ச்கிச்சைகளை காசு பார்க்காமல் நல்ல மருத்துவமனையில் செய்து கொள்வது நல்லதுதான்

    பதிலளிநீக்கு
  2. திரு என். ரங்கபாஷ்யம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  3. இது போன்ற அறுவை சிகிச்சைகளை நல்ல மருத்துவ மனைகளில் டாக்டர் ரங்கபாஷ்யம் போன்றவர்களிடம் செய்தால் நல்லது.

    படித்து கடைசி வரிக்கு வரும் போது அவரின் மரணம் வருத்தமளித்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்....

    பதிலளிநீக்கு
  4. சென்னையில் புகழ் பெற்ற gastroenterologist டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும்.

    பதிலளிநீக்கு
  5. sorry to hear the demise of Dr.Rangabhashyam.

    He was not a surgeon. He was an instituion.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. ஒரு முறை வயிற்றுக் கோளாறுக்காகச் சந்தித்தேன். என்றாலும் தொடரமுடியாமல் வீட்டுப் பிரச்னைகள். வயிற்றுக்கோளாறு அப்படியே! :))) ஆபரேஷன் அனுபவம் என்றால் எனக்கு பைல்ஸ் ஆபரேஷன் அனுபவம் தான். கொடுமை!!!! டாக்டர் சம்பத் (கே.எஸ். சரிஜிகல் க்ளினிக்) தான் ஆபரேஷன் செய்தார். அன்னிக்குச் சாயந்திரம் நான் கத்தின கத்தலில் அம்பத்தூர் ஸ்டெட்போர்ட் ஆஸ்பத்தியின் நான்கு மாடி(அப்போ நாலு மாடி தான்)யும் அதிர்ந்தது. என்ன காரணம்னு என்னைப் பார்க்க அறை வாசலில் கூடிய கூட்டம் நெரிய, பின் கூட்டத்தைக் கலைக்கப் போலீஸை அழைக்கும்படி ஆயிடுச்சுனு கேள்விப் பட்டேன். :)))))

    பதிலளிநீக்கு
  7. டாகடர் திரு. என். ரங்கபாஷ்யம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்.
    அவர் மறைவு வருத்தமான நிகழ்வு தான்.
    அவரின் மருத்துவ சேவைக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  8. கண் ஆபரேஷன் நடந்த போது நான் இந்த மாதிரி பயந்தது நினைவுக்கு வந்தது!
    ஒரு நல்ல மருத்துவரின் கண்காணிப்பில் அறுவை சிகிச்சை செய்து கொள்வது மனதில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

    டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களின் மறைவு நிஜமாகவே மருத்துவ உலகிற்கு இழப்புதான்.

    பதிலளிநீக்கு
  9. /அவ் என்று கையில் கடித்தது. //

    அந்த எறும்பு(ம்) வலைப்பதிவரா இருக்குமோ?

    /இந்தக் கட்டுரையை அலேக் அனுபவங்கள் என்ற தலைப்பில் ஏன் சேர்த்தீர்கள்/

    நல்லவேளை நான் கேட்குமுன்னே பதில் கிடைச்சுடுச்சு.

    1988 ல் பதினஞ்சாயிரம்;
    1999 ல் அம்பதாயிரம்!!
    2013 ல் ????!!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!