வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

வெள்ளி வீடியோ 180824 : மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு


1968 இல் வெளிவந்த படம் லட்சுமி கல்யாணம்.   அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர் கண்ணதாசன்.  இசை எம் எஸ் விஸ்வநாதன்.  லட்சுமி என்கிற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க சிவாஜி படும் கஷ்டம்தான் படம்.  எவ்வளவு மாப்பிள்ளைகள் வந்தாலும் நம்பியார் குறுக்கே நின்று தடுத்து விடுவார்.  



சிறந்த பாடலாசிரியர்,  சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த ஆண் பாடகர், சிறந்த பெண் பாடகர் என்று விருதுகளை அள்ளிய திரைப்படம்.  இந்தப் படத்தில் "ராமன் எத்தனை ராமனடி"  "பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" என்கிற இரண்டு நல்ல பி. சுசீலா பாடல்கள் உண்டு.  "தங்கத்தேரோடும் வீதியிலே" என்கிற டி எம் எஸ், சீர்காழி பாடிய பாடல் ஒன்றும் பிரபலம்.

இந்தப் பாடலுக்கான யூ டியூப் லிங்க் தேடியபோது இதே பாடலுக்கு ரஜினி, ஐஸ்வர்யாவை வைத்து ஒரு ரீமிக்ஸ் கிடைத்தது!



"பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" பாடல் கண்ணதாசனால் கிருஷ்ணன் பற்றிய பாடலாக எழுதப்பட்டது.  அவர் இதுபோல பல கண்ணன் பாடல்களை திரைப்படங்களில் எழுதி இருக்கிறார்.  "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா...",   "கங்கையிலே ஓடமில்லையோ...",  "கண்ணனை நினைக்காத நாளில்லையே...",  "யமுனா நதி இங்கே..  ராதை முகம் இங்கே...", "கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்", "அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்",  "கண்ணன் வந்தான்..  அங்கே கண்ணன் வந்தான்...", "ராதா ராதா..  நீ எங்கே.."  என்று நிறையச் சொல்லலாம்.



இதே வருடத்தில் வெளிவந்த ஒளி விளக்கு என்கிற எம் ஜி ஆர் திரைப்படத்தில் ஆலங்குடி சோமு எழுதி "தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?  இல்லை...  நீதான் ஒரு மிருகம்..." என்று குடிகாரர்களைச் சாடும் பாடல் ஒன்று இடம்பெற்றது.  அந்தப் படத்தில் மற்ற பாடல்களை எழுதியவர் வாலி.  இந்தப் பாடல் பற்றி தகவல் அங்கில்லை.



அது குடிக்கும் பழக்கம் வைத்திருந்த சிவாஜியையும், கண்ணதாசனையும்  பாதித்ததாகவும் அதன் விளைவாக இந்தப் பாடல் "நாயும் நரியும், புலியும் பாம்பும் வாழும் பூமியிலே நியாயம் பண்பு ஞானம் கொண்ட மனிதனைக் காணவில்லை" என்று எழுந்தது என்றும் ஒரு பதிவர் எழுதியிருப்பதைப் படித்தேன்.  ஆலங்குடி சோமுவும் எம் ஜி ஆரும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள்.  



இது எந்த அளவு உண்மையோ...  ஏனென்றால் ஒளிவிளக்கு இதே ஆண்டு, சற்றே முன்னதாக செப்டம்பரில் வெளியான படம்.  லட்சுமி கல்யாணம் நவம்பரில் வெளியான படம்.

இனி பாடல்.....



யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே 
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே 

மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு 
பார்வையில் புலிகள் உண்டு பழக்கத்தில் பாம்பு உண்டு 
நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே 
மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனைக் காணவில்லை 

சிரிப்பினில் மனிதனில்லை அழுகையில் மனிதனில்லை
உள்ளத்தில் மனிதனில்லை உறக்கத்தில் மனிதனுண்டு 
வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா 
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா 





29 கருத்துகள்:

  1. இந்தப் படம் குறித்த சுவாரசியமான அனுபவங்கள் உண்டு. இது மதுரை தேவி தியேட்டரில் ஓடியது. நாங்க அப்போ அப்பாவின் மூட் சரியாக இல்லாததால் பாஸ் கிடைத்தும் பார்க்க முடியலை. அப்போ ஒரு நாள் என் சிநேகிதி காலைக்காட்சிக்குக் கூட்டிச் சென்றாள். அப்பாவுக்குத் தெரியாமல் தான். எனக்கும் அம்மாவுக்கும் பயம். ஏனெனில் சேதுபதி பள்ளி அருகே போக வேண்டாம் என்றாலும் வடக்கு வெளி வீதியைக் கடந்தே தியேட்டருக்குப் போகணும். போயிட்டும் உள்ளே படத்தை நிம்மதியாய்ப் பார்க்க முடியாமல் தவிப்பு. பின்னர் தான் பல வருஷங்களுக்குப் பின்னர் தொலைக்காட்சியிலும் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  2. இப்போப் படிச்சுட்டு வரேன். இன்னும் படிக்கவே இல்லை. இந்தப் படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய "யாரடா மனிதன் இங்கே!" பாடல் ரொம்பப் பிரபலம். ஆனால் காட்சி தான் பொருந்தி இருக்காது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. சமீபத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா கொடுத்த ஒரு பேட்டியில் கூட இந்தப் படம் குறித்தும், பாடல் குறித்தும் சொல்லி இருந்தார். பழைய நினைவுகளைக் கிளறி விட்டது.

    பதிலளிநீக்கு
  5. கண்ணா கருமை நிறக்கண்ணா உன்னைக் காணாத... பாடலை விட்டுட்டீங்க.

    கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான் என்பது பாடல்.

    பதிலளிநீக்கு
  6. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல

    பதிலளிநீக்கு
  7. சௌந்திரராஜனின் குரலில் பாடல் இனிமை. ஆலங்குடி சோமு நன்றாக எழுதியிருக்கிறார். அருந்தும் பழக்கம் இருந்திருந்தால் இன்னும் அருமையாக எழுதியிருப்பாரோ என்னவோ !

    கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி - அவன்
    கன்னம் வைத்துத் திருடிவந்த கதைகள் பல கோடி..!
    **
    கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
    வண்ணவண்ணத் தொட்டில்கட்டித் தாலாட்டுவான்
    குழலெடுப்பான்.. பாட்டிசைப்பான்..
    வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்..

    என்கிற பாடல்களும் நினைவுக்கு வருகின்றன.

    கண்ணன், கண்ணதாசனை அவ்வப்போது படுத்தியதால், நமக்குக் கிடைத்த பாடல்கள்!

    பதிலளிநீக்கு
  8. கண்ணதாசன் சொந்த தயாரிப்பு இந்த படம்.
    கோவையில் ஜி.பி தியேட்டர் என்ற புது தியேட்டரின் முதல் படம்.
    எல்லா பாட்டும் நன்றாக இருக்கும்.
    குருந்தமலைக்கு சின்மயா மிஷன் பாலவிஹார் குழந்தைகள் நாங்கள் சுற்றுலாபோனபோது அங்கு இருக்கும் அனுமன் சன்னதி முன்
    ராமன் எத்தனை ராமனடி பாடலை ஒரு பெண் பாடினாள் எங்களை அழைத்து சென்ற சின்மயா மிஷன் அமைப்பாளர் அனந்தராமன் தன் பேர் கடைசியில் வரும் என்று சொல்லி ரசித்து கேட்டது நினைவுக்கு வருது.
    பகிர்ந்த பாடலை கேட்டு ரசித்தேன்.

    கிருஷ்ண ஜெயந்தி வரும் முன் கண்ணன் பாடல்களை நிறைய இங்கு சொல்லி இருக்கிறீர்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஆஆஆஆஆஆ இன்று லக்ஸ்மி கல்யாணமோ?.. இதுவும் நான் பார்த்ததில்லை.. ஆனா இன்று பகிர்ந்திருக்கும் பாட்டுக்கள் அத்தனையும் திரும்பத் திரும்பக் கேட்டும் அலுக்காத பாடல்கள்.. அனைத்தும் சூப்பர்.

    ல.க பார்க்கோணும்.. ஒளிவிளக்கும் பார்த்ததில்லை நான் பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அது எம் ஜி ஆர் படம் என்பதால் நேக்குப் பிடிப்பதில்லை .. அவர் பேசும் ஸ்டைல் எனக்கு பிடிக்காது ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  10. ஒரு உண்மை ஜொள்ளியே ஆகோணும்.. போன ஃபிரைஐஐஐஐடே போட்ட சி.நே..சி..மனிதர்கள்.. படம் பார்த்தனே.. என்னா ஒரு ஜூப்பர் படம் உண்மையில் நல்ல விறு விறுப்பாகப் போச்சுது.. அடுத்து என்னாகும்.. அடுத்து என்னாகும் என ஏங்க வைத்த படம்.. லக்ஸ்மி சூப்பரா இருக்கிறா அதில்...

    ஆனா முடிவு எனக்குப் பிடிக்கவில்லை கோபம் தான் வந்துது இன்னும் கோபமாவே இருக்கிறேனாக்கும்.. அதென்னது உண்மையில் தவறு செய்தவர்.. நல்ல வசதியா, குடும்பம் குழந்தைகள் என இருக்கிறார்ர்... ஆனா கங்காவின் நிலைமை. அது தப்பாச்சே.. முடிவை மாற்றியிருக்கலாம்.. கங்கா செய்த தவறு, தெரியாத ஒருவரின் காரில் நம்பி ஏறிப் போனது மட்டுமே.. ஆனா அவர் செய்தது தவறு அல்ல தப்பு!!!.

    தவறிச் செய்வது மன்னிக்கப்படலாம்ம்.. ஆனா தெரிஞ்சே செய்வதுதான் தப்பு. மன்னிக்க்ப்பட முடியாதாக்கும்..

    பதிலளிநீக்கு
  11. தான் பாடிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று பி.சுசிலா குறிப்பிட்டது லட்சுமி கல்யாணம் படத்தில் இடம்பெற்ற 'ராமன் எத்தனை ராமனடி..'என்னும் பாடல். அதைப் பகிராமல் வரலக்ஷ்மி நோன்பும் அதுவமாக யாரடா மனிதன் இங்கே பாடலா? உங்களை... முக்கொம்பில்தான் கொண்டு போய் விடனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கொம்பின் பாலத்து நடுப்பகுதியில்தானே... சொல்றதை சரியாச் சொல்லிடுங்க.. ஹா ஹா ஹா

      நீக்கு
  12. ந்தப் பாடல்களை நான் கேட்டிருக்கிறேன் ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  13. மிகவும் பிடித்த படம். பாடல்களூம் அருமை.
    இனிய மாலை வணக்கம்.

    எம் ஜி ஆர் பாடல் மிகவும் பிரபலம்.
    எல்லாக் குடி மக்களுக்கும் பொருந்தும்.

    இதை நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ளலாம்.
    லக்ஷ்மி கல்யாணம் நல்ல நடிப்புக்கான படம்.

    தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
    செவ்வாழைப் பந்தலிலே லட்சுமி கல்யாணம். சூப்பர். பாட்டு.

    கண்ணனைப் பாட வந்த கவிஞர் என்றும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  14. எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. சிவாஜியின் லட்சுமி கல்யாணம் பாட்டு எனக்கு பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  15. அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!