செவ்வாய், 2 அக்டோபர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - தாயே யசோதா - ஷைலஜா பெங்களூர்




தாயே சோதா
  ஷைலஜா பெங்களூர்

--


 மாலதியும் பத்ரியும்  ஏகமனதோடு அந்த முடிவிற்கு வந்தார்கள். அதற்குத்  தங்களைத்  தயார்ப்படுத்திக்கொள்ள  ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன..

ஆமாம்,  மீராவை அவர்கள்  தத்தெடுத்து இன்றோடு  பதிமூன்று  வருஷங்கள் ஆகிவிட்டன.   அவளுக்கு ஆறுவயதாகும் வரை  குழந்தையாகத்தான் இருந்தாள் அப்புறம்தான்  ஒருநாள் கேட்டுவிட்டாள்” என்னம்மா  நான்  உன்னை மாதிரியும் இல்லை அப்பா மாதிரியும் இல்லை  அப்படியானால் நான் யார்ஜாடை? என்று கேட்டபோது  இருவருக்குமே தூக்கிவாரிப்போட்டது.

பத்ரி  ஊரிலிருந்து  அப்போது வந்திருந்த தன்  தாயை  சுட்டெரிப்பதுபோல பார்த்தான்

.’உங்க வேலையா இது?’  கண்கள் அதட்டின

”இல்லையப்பா சத்தியமாய் நான் இல்லை”

அவன் தாய் மிரண்டாள் கண்களாலேயே.

” அப்பா! உங்க  அக்கா  ஒருத்தங்க  இருந்தாங்கன்னு சொல்விங்களே அவங்க கூட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்கன்னும் சொல்லி இருக்கீங்க . நான் அத்தை ஜாடையா இருக்கலாமோ?”  அவளே தொடர்ந்து கேட்கவும்.”ஆமாம் ஆமாம் “ என்று  உரத்தகுரலில்  மாலதியும் பத்ரியும்  பெருமூச்சு விட்டபடி அமோதித்தனர்.

அப்போதிலிருந்தே  என்றைக்காவது மீராவிடம் உண்மையை சொல்லிவிடவேண்டும் என நினைத்துக்கொண்டார்கள் . இப்போதுதான் அதற்கு வேளை  வந்திருக்கிறது.

  கல்யாணமாகி ஏழுவருடமாகியும் குழந்தை இல்லாமற்போகவும்  குறை  மாலதியிடம் என்று முடிவானதும்  பத்ரி சற்றும்  மனம் தளரவில்லை..  ”தத்தெடுக்கலாம் மாலு.. தப்பில்லை...நமக்காய்ப்பிறந்ததுமேல் நாம் அன்பு செலுத்தினால் அது இயற்கை ,ஆனா  அனாதைகளை  தத்தெடுத்து நம்குழந்தையாய் வளர்க்கிறதுதான் மானுடம்” என்றான்.

சின்னஞ்சிசுவை தத்தெடுத்த கையோடு வேலைமாற்றிகொண்டு  சென்னையிலிருந்து பெங்களூருக்கு  வந்துவிட்டான்.  குழந்தைக்கு  மீரா என்று பெயர் வைத்தனர்.

மீராவைக் கண்போல வளர்த்தனர்.

மீராவிற்கு தினமும் தூங்கப்போகுமுன்பு கதைகள் சொல்லும் வேலை  மாலதிக்கு!  அதைப்பெருமையாய் செய்துவிடுவாள் மாலதியும்..  பாடம் சொல்லிக்கொடுப்பது பத்ரியின் கடமை.  ஆக அவர்களின்  வற்றாத அன்பில் மீரா  இன்று பதிமூன்றுவயதுப்பெண்ணாய் வளர்ந்து நிற்கிறாள்.. அறிவும் விவேகமும் கொண்ட பெண் என்று வகுப்பு ஆசிரியை அவளைப் புகழ்கிறார்.

“கொடுத்து வச்சவ மாலு நீ!   உன் பொண்ணு ரொம்ப சமத்து  ...  படிப்பில் சுட்டி. குணத்திலும் பிடிவாதம்்மில்லை..   என் பொண்ணுக்கு படிப்பும் வரலை. மகாபிடிவாதம்.   அப்படியே  என் மாமியாரைக்கொண்டிருக்கு சனியன்’ என்று  குடி இருப்பு தோழி  வசந்தா  சொல்வாள்..

வசந்தாவைப்போல பலரிடமும் மீராவிற்கு நல்ல பெயர்தான்!

“ஆச்சுடிம்மா  இனிமே எப்ப வேணாலும் மீரா   வயசுக்கு வந்திடலாம்...  பளபளன்னு வளர்ந்திருக்கா ...எல்லாம்  பருவம்!   கூடிய சீக்கிரம்  வயசுக்கு  வரதுக்கு முன்னாடி  உண்மையை   நீங்களா சொல்லிடறது உத்தமம். ....நாளைக் கடத்தக் கடதத விபரீதமாய் போய்விட வாய்ப்பு இருக்கு...  ஈர மண்ணில் தடயம் பதியும் சொல்கிற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனசு இது..  அப்புறம் எதிர்த்துக்கேள்விகேட்கும் பருவம் வரும்.  சண்டைபோட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் ஆமாம்...  அதான் எச்சரிக்கிறேன்”  என்று போனமுறை  வந்துபோன பத்ரியின் அம்மா சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுக்கு தன் மகனின் உதிரம் மீராவிடம் இல்லாவிட்டாலும்  ‘பாட்டி பாட்டி’என அவளை சுற்றியபடி்   பல்லாங்குழி விளையாடுவது   தாயம் ஆடுவது   என்று  வயதான  தன்னை ஒதுக்காத பண்பு மனதை  நிறைத்தது.

ஆகவே மீராவிடம்  ‘நீ நாங்கள் பெற்ற மகள் இல்லையம்மா..   தத்தெடுத்த குழந்தை’ என சொல்லிவிடவேண்டியதுதான்’ பத்ரி  மனதுக்குள்  ஒரு  ஒத்திகைபார்த்துக்கொண்டான்.

பள்ளிவிட்டு வீடுவந்த மீரா வழக்கம்போல கைகால் கழுவிக்கொண்டாள். 
பூஜை அறை சென்று கண்மூடி தியானித்தாள்.

பிறகு  மாலதியை நோக்கி,” அம்மா இன்னிக்கு ஸ்கூல்ல என்னாச்சு   தெரியுமா?” என்றாள்.
  
மாலதி வியப்பும் குழப்பமுமாய் பார்த்தாள்.

“கதை சொல்லல்  நிகழ்ச்சி நடந்தது.  அதை  தனியார் டிவி ஒண்ணு வந்து  படம்பிடிச்சாங்கம்மா..  நான் சொன்ன  யசோதை கிருஷ்ணர்   கதையை ரொம்ப ரசிச்சாங்கம்மா..  அடுத்தவாரம்   ஒளிபரப்பாகப்போகுதாம்”

“அப்படியா மீரா?”

“ஆமாம்மா..  ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டு மை மாம்”  என்று நான் பெருமையாய் சொல்லிட்டேன்.. 

“என் செல்லக்கண்ணூ ஆச்சே நீ?”   மாலதி  கண்  சிமிட்டிப் பாராட்டினாள்.

இல்லையாபின்ன?  ஒருவயசிலிருந்து உன்கிட்ட கதை கேட்டு கேட்டு எல்லா டய்லாக்கும்  ஆழ்வார்  பாசுரங்களும்  நெட்ரு”ம்மா!!!” 

“வாலுக்குட்டி சரிசரி சாப்பிட வா. உனக்குபிடிச்ச  பூரி மசால் செய்திருக்கேன்”

“பாட்டிக்கும் பிடிக்கும்மா...  அவங்க   இங்க இருந்தப்போ செய்திருக்கலாமே?நேத்து பாட்டி ஊருக்குப் போனதும் இன்னி்க்குப்பண்ற?  மாமியார்மேல என்ன கோபம்?!” 

“ஹேய் நாட்டி கேர்ல்”

செல்லமாய் அவள் தலையில் மாலதி குட்ட  மீரா  பயப்படுவதுபோல ஓட  ஆபீஸ்விட்டு  அப்போதுதன வீடு வந்த பத்ரி இதை ரசி்த்த மாதிரித்  தெரியவில்லை.

 வழக்கமாய் அவனும் இதில்கலந்துகொண்டு மீராவைச் சிரிக்கவைப்பான்.  

இன்று அமைதியாக தன் அறைக்குப் போகவும் மீரா, ”அப்பாக்கு ஆபீஸ்ல ஏதும் பிரச்சினை போலருக்கும்மா போய் கவனிச்சு  சாப்பிடக்கொடுங்க” என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் படிக்கப் போய்விட்டாள்.

டிபனை சாப்பிடக்கூடப் பிடிக்காத பத்ரி, ” மாலதி..  அம்மா சொன்னமாதிரி  நாம் இனியும்  தாமதிக்கக்கூடாது.  இன்னிக்கு சொல்லிடணும்.. சொல்லியே ஆகணும்  அதன் விளைவு என்னவாக இருந்தாலும் எதிர் நோக்கித்தான் ஆகணும்” என்றான்.

மாலதி மௌனமாய் தலையசைத்தாள்.

இருவரும் தயங்கிதயங்கி   அந்த அறைக்குள் நுழைந்தனர்

செல்பொனில்   யாரிடமோ உரக்க   பேசிக்கொண்டிருந்தாள் மீரா. 
“இதபாரு வர்ஷா..  பரிட்சைக்குப் பத்து நாள்தான் இருக்கு.   இப்போப் போயி சினிமா போகலாமாங்கறே?  அதுவும் வீட்டுக்கு சொல்லாம?  பெத்து வளர்த்த அப்பாவுக்கு துரோகம் செய்யலாமா? அது மகா தப்பில்லையா? பரிட்சைமுடியட்டும்..  அவங்க  கிட்ட சொல்லிட்டு நிம்மதியா போகலாம்.   என்ன வச்சிடவா?’  என்று செல்போனை கீழே வைத்தவள் அறையில் நிழலாடவும் நிமிர்ந்தாள். 

கண்களை விரித்து,”அட அப்பா அம்மா ரெண்டு பேரும்  சேர்ந்து இன்னிக்கு  வந்துட்டிங்களே, என்ன விஷயம்?”  என்று  குறும்பாய் கேட்டாள்.
.
அவளது அறைச் சுவரிலிருந்த வள்ளுவர் படமும் பாரதி படமும்  உலோகத்திலான அனுமன் வார்ப்பும்  யசோதைக்கு பயப்படுவது போல பாசாங்கு காட்டும் கிருஷ்ணரின் காலண்டரும் அறைக்கு அழகு சேர்த்தன என்றால் ஒழுங்காய்  கச்சிதமாய்  அலமாரியில் அடுக்கி  வைத்திருந்த பாடப் புத்தகங்களின் வரிசைகளும், வெளியே எங்கும்  தொங்காத  ஆடை வகைகளும் அறையின்  தூய்மையைப் பறை சாற்றின. 
  .
ஆனாலும் பத்ரிக்கு மாலதியைவிட சற்று திடமனதோ என்னவோ..  சட்டென ஆரம்பித்துவிட்டான்.

”மீரா! உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”

” இப்பவா  ? நான் பரிட்சைக்குப் படிக்கணும்ப்பா”

“இதுவும் வாழ்க்கைப் பரிட்சைதான்  மீரா!”
..
”என்னப்பா  சினிமா அப்பா மாதிரி பேசறீங்க?” என்று கேட்டு சிரித்துவிட்டாள் மீரா.

மாலதி சின்னதாய் விசும்பவும் திடுக்கிட்டு  ”அ  ..அம்மா?”  என்று அவள் தோளைத் தொட்டாள்.

பத்ரி தொடர்ந்தான். 

“ஆமாம்  மீரா  ...  இனியும் நீ குழந்தை இல்லை.. யு ஆர்   எ மெச்சூர்டு சைல்ட் நௌ..”

“ஆஃப்கோர்ஸ்  நான் குழந்தை இல்லைதான் அப்பா..  பதிமூணு வயசுப் பெண்தான்  அதற்கு என்ன அப்பா?” 

”மீரா..நாங்க சொல்றதை நீ  மன திடமாய்  கேட்கணும்மா...  ஆமாம் மீரா  திடமாய்  கேட்டுக்கோ....  அது வந்து.. ...   நீ  நீ..  நாங்க பெத்த குழந்தை இல்ல.  தத்தெடுத்தப் பெண் குழந்தை.   ஆனா.. ஆனா பெத்த பெணணைவிட நாங்க உன்னை கவனிச்சோம்.  இனியும் கவனிப்போம் கண்ணம்மா”

சொல்லி முடிப்பதற்குள் பத்ரி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.  மாலதி 'ஹோ'வெனக் கதறிவிட்டாள். 

அழுகைதான் அங்கே சில கணங்களுக்குப் பேசிக்கொண்டிருக்க  சட்டென  கலகலவென சிரித்தாள்மீரா. 

மாலதியும்பத்ரியும் திகைப்புடன் அவளைப்பார்த்தனர்.

“இதுக்கா இவ்வளவு  வார்த்தைகள்? அப்பா !அம்மா !  இந்த விஷயம் எனக்கு எப்போதோ தெரியுமே!”  என்றதும்  தூக்கிவாரிப்போட  இருவரும் நிமிர்ந்தனர்  .
எப்படி.. எப்படி?  தத்தெடுத்த மையம் மற்றும் மாலதியின்  இறந்துபோன  அன்னைக்கும் தனது அன்னைக்கும் மட்டுமே தெரிந்த  ரகசியம்.  எப்போது  அம்பலமாகிப்போனது?

பத்ரி குழப்பமும் வேதனையுமாய் நிற்கையில் மீரா,

“யார் சொன்னாங்கன்னு யோசிக்க வேண்டாமே   அம்மாமூலமாகத்தான் எனக்கு தெரிஞ்சுது”என்றதும் மாலதி அதிர்ந்தாள்..  பத்ரி நிலைகுலைந்தான்.

“நா..நானா?”  மாலதி வீறிட்டாள்.

“ஆமாம்மா..  நீ நேரிடையாய் சொல்லலை.ஆனா  எப்போதும் கிருஷ்ணர் கதையை எனக்கு சொல்வாய்  அந்தக் கதையில் ஒரு  தடவைகூட   கிருஷ்ணரை சுமந்துபெற்ற தேவகியைக்கொண்டுவரமாட்டாய் அம்மா   யசோதையைத்தான் அவளுக்கு மகன்  மேலிருக்கும் அன்பை,  பாசத்தை  சொல்வாய்!  அப்படியே எப்போதாவது   சொன்னாலும் தேவகியின் வேதனையை  ஆழ்வார் பாடியதை  சந்தோஷமாய் சொல்லிக்கொள்வாய்! 

மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
      அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்
      வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து
      வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
      தெய்வ நங்கை யசோதை பெற்றாளே

பாடி முடிக்கும் போது கண்பனிப்பாய் !  அம்மா...  எழெட்டுவயதிலேயே இதை கவனித்திருக்கிறேன் ஓரளவு புரிந்துபோனது.  ஒரு நாள் அத்தையின்  சின்ன வயது புகைப்படம் தற்செயலாய் அன்று கொலுபொம்மைப் பெட்டிக்குள்  கிடைத்ததையும் பார்த்தேன்.  ஊஹூம்,,,   எனக்கு அத்தையின் சாயலே இல்லை.  என் மாநிற உடம்பும் கொஞ்சம் கூட  உங்க சாயலே இல்லாத முகமும் எனக்குள்ளிருந்த சந்தேகத்தை  நிரூபித்தது.  ஆனால் என்னஅம்மா  தேவகியை அதிகம்  யாரும் நினைப்பதில்லை.  கிருஷ்ண வைபவம் என்றால் அது ஆயர்பாடிலிருந்துதானே  ஆரம்பிக்கிறது?  அவன் மகிழ்ச்சியும்  கொண்டாட்டமும் அங்கேதானே அம்மா?   நான்  என்னை க்ருஷ்ணனா நினைச்சிக்கிறேன்  சந்தோஷமா  இருக்கேன்.    உங்களைவிட உசந்த பெற்றோர் எனக்கு எங்கே  கிடைப்பார்கள்? “  சிரித்தபடி  மீரா சொல்லி முடித்ததும்

பத்ரியும் மாலதியும் அவளை இறுக அணைத்துக்கொண்டார்கள்.

 கண்ணீரைத்துடைத்துக்கொண்டு மெல்ல சிரிக்க ஆரம்பித்தார்கள்.

அணைத்த தோள்களின்   மறுபுறமிருந்த  மீராவின் கண்களில்தான்  இப்போது நீர் பெருக ஆரம்பித்தது.

58 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. கதையின் களம் மிகக் கனமானது...
    கதை முடிக்கக் கண்கள் குளமானது...

    எண்ணிறந்த மீராக்களின் மனம்
    அமைதியுறட்டும்...

    அதோ -
    கண்ணனின் குழல் நாதம் கேட்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை ஸார்... படித்தபோது நானும் கண்கள் கலங்கித்தான் போனேன்.

      நீக்கு
    2. நன்றி திரு துரை. முடிவில் கண்ணனின் குழல்நாதமுடன் விமர்சனம் செய்ததை ரசித்தேன்.

      நீக்கு
  3. கதையைப் படிக்கும்
    நன்னெஞ்சங்கள்
    அசைவுறாமல் இருப்பது
    கடினம்...

    பதிலளிநீக்கு
  4. இந்த வீணைக்குத் தெரியாது அதைச் செய்தவன் யாரென்று
    எந்தப் பிள்ளையும் அறியாது அதைத் தந்தவன் யாரென்று

    நல்ல கதைக் களம். நிறைவாக முடித்திருக்கிறார் ஆசிரியர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகானபாடலுடன் விமர்சிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி திரு நெல்லைத்தமிழன்

      நீக்கு
  5. இந்தப் பாசுரம் என் மனதில் அலையை ஏற்படுத்தும்.

    இறைவனிடம் வரம் வாங்குவது எளிதாக இருக்கலாம். ஆனால் நமக்கு எது நல்லது என்று இனம் காணத்தான் மனித மனத்தால் சுலபமாக முடியாது. இறைவனே, நீயே எனக்குக் குழவியாக இருக்கணும் என்ற வேண்டுதல் தேவகிக்குப் பயன் தரவில்லை. பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் கேட்ட வரத்தினால் பயன் கிடைத்ததில்லை.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. கதை படித்து முடித்தவுடன் மீராவின் கண்ணில் மட்டும் இல்லை என் கண்ணிலும் கண்ணீர் பெருகியது.
    அருமையான பாசம் மிகுந்த நெகிழ்வான கதை.
    வெகு நாட்களுக்கு பின் ஷைலஜா அவர்களின் கதை.
    நன்றி ஸ்ரீராம், நன்றி ஷைலஜா.

    பதிலளிநீக்கு
  8. கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றார் என் சித்தி பையர். நான் எடுத்து வளர்த்தவர் அந்தத் தம்பி! இத்தனைக்கும் ஒரு குறையும் இல்லை இருவருக்கும். முதலில் பிள்ளைக்குழந்தை பிறந்த பின்னர் அவனுக்கு 4 வயசாகும்போது இரண்டாவது குழந்தைக்கு முயலாமல் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம் எனக் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முடிவு செய்து எடுத்து வளர்த்தார்கள். அந்தக் குழந்தைக்குத் தெரியுமா, தெரியாதா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு இப்போப் பதினைந்து வயசு ஆகி விட்டது. குழந்தை அன்பும் அரவணைப்பும் கொண்ட அம்மாவிடமும், அப்பாவிடமும் வளர்கிறாள். இதே போல் என் நெருங்கிய சிநேகிதியான வேதாவும் ஒரு குழந்தையைப் போன வருடம் தான் தத்து எடுத்துக் கொண்டாள்.

    பதிலளிநீக்கு
  9. கதையும் கதைக்கருவும் மனதை நிறைத்தது. ஷைலஜா எழுத்துக்குக் கேட்பானேன்! அவர் தந்தையின் பாரம்பரிய ரத்தம் இயல்பாய் வருமே! தந்தை ஓரடி எனில் இவர் பல அடி பாய்வார் எப்போதுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா! அப்பாவின் ஆசி ஏதோ எழுத வருகிறது மற்றபடி பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.அன்புக்கு நன்றி. நலமா?

      நீக்கு
  10. கதையைப்பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.நீண்ட நாட்களுக்குப்பிறகு இந்தக்கதை மூலமாக மறுபடி வருகை தந்திருக்கிறேன். நல்ல ரசிகத்தனமை கொண்ட இந்தக்குழுவிற்கு நான் வரக்காரணமாக இருக்கும் திருஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குப் பின்னர் ஷைலஜாவைப் பார்க்கவே முடியலை. இப்போத் தான் தமிழ் வாசல் குழுமம் மூலமும் இளைய சிநேகிதி திரைப்பட மன்னி பார்வதி மூலமும் குழுமத்தில் பார்க்கக் கிடைத்தது. அப்புறம் மறுபடி காணோம். :(

      நீக்கு
    2. அவரின் இந்தக் கதை மேலே முதல் இடத்தை திடீரென பிடித்ததுமே அவருக்கு மெயில் அனுப்பினேன்.  சுட்டி கேட்டு வாங்கி கொண்டார்.  அப்புறம் பதில் இல்லை!

      நீக்கு
  11. இனிய கதை ...

    அழகிய நடையில் ,உணர்வுகளை எளிமையாய் கையாண்டு மன நிறைவை தருகிறது.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா... ஷைலஜா அவர்களின் கதை. கதை மிகவும் சிறப்பு.

    பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  13. தத்து எடுக்கும் பெற்றோரின் மனநிலை எனக்கு ஓரளவுக்குப் புரியும் என் வீட்டிலும் நட்பிலும் பார்த்திருக்கிறேன் நானே ஒரு கதை எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன நல்ல கரு சொன்ன விதமும் அருமை ஷைலஜா மேம்

    பதிலளிநீக்கு
  14. அருமை மேடம் குழந்தையை தொடக்கம் முதலே நல்ல அறிவாற்றலுடன் சித்தரித்த விதம் அழகு.

    //அணைத்த தோள்களின் மறுபுறமிருந்த மீராவின் கண்களில்தான் இப்போது நீர் பெருக ஆரம்பித்தது//

    இந்த வரிகள் கதையின் கனத்தை அழுத்தம் கொடுத்த கணங்கள்.

    வாழ்த்துகள் மேடம்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  15. பதிமூன்று வயதுப்பெண். அன்பில் திளைத்திருந்தாலும், உண்மை அறிந்தபோது, ஏற்றுக்கொண்டு பேசினாலும், நல்ல சுட்டியானபெண். எல்லாம் நன்மையாகவே நடக்கட்டும். இன்னும் பெற்றோர் மனம் கோணாது வாழ்க்கையும் அமையவேண்டும். நிறைய நிஜக்கதைகள் பார்த்திருக்கிறேன். இதே அன்புடன் தாய்தந்தையருடன் நீடூழி வாழவேண்டும். அன்புக்கதை. இதுதானே வேண்டும்? அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புக்கதை என்றமைக்கு நன்றி காமாட்சி அவர்களுக்கு.

      நீக்கு
  16. அழகிய கவிதை, என்ன ஆகுமோ என திக்கென இருந்தது, அதுவும் பரீட்சை நேரத்தில போய்ப் போட்டுடைக்கப் போகினமே என.. ஆனா சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி. சில இடங்களில் சொந்தப் பிள்ளைகளை விட தத்தெடுத்த குழந்தைகள் அதிகமாகப் பெற்றோரைக் கவனித்ததைப் பார்த்திருக்கிறேன். இது பற்றி என்பக்கத்திலும் ஒரு போஸ்ட் உண்டு.

    அருமையான எழுத்து.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. நான் கதையை ஒன்றி வாசிக்கும் ரகம். அதுவும் அந்தக் கதாபாத்திரங்களுடனேயே காட்சிகளை மனதில் விரித்து வாசித்துப் பயணிக்கும் ரகம். எனவே கதையை வாசித்து அழுதுவிட்டேன். ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.

    அருமையான கதை. மீராவைப் பற்றி நீங்கள் சொல்லிய விதம் ...அவள் சிறு வயதிலேயே யாருடைய சாடையும் இல்லையே என்ற கேள்வியும், அவள் மிக மிக மெச்சூர் சைல்ட் அதுவும் 13 வயதிற்கு நல்ல மெச்சூரிட்டி உள்ள குழந்தை என்றும் அதுவும் மொபைலில் ஃப்ரெண்டுடன் பேசிய விதம் எல்லாம் அவளைப் புரிந்து கொள்ள முடிந்ததாலோ என்னவோ அவர்கள் சொல்ல மிகவும் தயங்கி மனதைத் திடப்படுத்திக் கொண்டு மிகுந்த டென்ஷனுடன் சொல்ல நினைத்த போது அவள் அதை மிக ஈசியாக எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்லுவாள் என்று நினைக்கத் தோன்றியது.

    என்றாலும் அவர்கள் சொல்லத் தீர்மானித்த இடமும், அவர்கள் சொல்லிவிட்டு அழுத இடம் ரொம்பவே நெகிழ்த்திவிட்டது. நான் அழுதுவிட்டேன்.

    பெற்றோரும் மிகவும் நல்லவர்கள். பாட்டியும் கூட. அதுவும் ஒவ்வொரு இரவும் தாயின் கதைகளைக் கேட்டு வளரும் குழந்தை, பாசுரங்கள் கூடச் சொல்லும் குழந்தை.. எனவே மீரா ஒரு நல்ல சூழலில் வளர்வதால் நிச்சயமாக நல்ல பெண்ணாக வருவது சாத்தியமே. அதுவும் நல்ல மனப்பக்குவம் உள்ள இனிமையான சூழல்.

    வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா உங்களை நெகிழ்வித்ததை எழுதியவிதம் என்னை நெகிழ்விக்கிறது.ஒர் எழுத்தாளருக்கு தன் படைப்பிற்கான இப்படிப்பட்ட விமர்சனத்துக்கு முன்பு எந்த விருதும் சன்மானமும் அருகில்வராது நன்றி நன்றி மிக.

      நீக்கு
  18. தத்தெடுத்தக் குழந்தை, மற்றும் பாசுரம் பார்த்ததும் கூரத்தாழ்வார், எம்பெருமார் எம்பார் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. கூரத்தாழ்வாரின் குழந்தைகளை ஆசீர்வதிக்க வந்த எம்பெருமார், குழந்தை மிகவும் தேஜஸுடன் இருக்கிறதே என்று சொல்ல என்ன செய்தீர் என்று எம்பாரிடம் வினவ எம்பார், த்வய மந்திரத்தை ரஷையாக ஓதினேன் எனவும் என்னை முந்திக் கொண்டுவிட்டீரே நீரே ஆச்சாரியனாக இரும் என்று சொல்லி ஆழ்வாரிடம் குழந்தையை நம்பெருமாள் பிராட்டிக்குத் தத்துக் கொடுக்கச் சொல்ல ஆழ்வாரும் உடனே தத்துக் கொடுத்துவிடுகிறார். பிராட்டிதான் குழந்தைக்குத் தாலாட்டுப்பாடி வளர்த்ததாக வரும்...குழந்தை பெருமாளுக்கு வைக்கப்படும் போகத்தை உண்ட பின்னரே எம்பெருமானுக்கு...என்று வரும்.

    அது போல மீராவுக்கு மாலா ஒவ்வொரு இரவும் கண்ணனின் கதை யைச் சொல்லி...மீரா பாசுரத்தைச் சொல்லி தன் தாய் எப்படி தேவகியைச் சொல்லாமல் யசோதையை மட்டும் சொல்லிவந்தாள் என்பதையும் கூர்ந்து கவனித்து தன் பிறப்பை அறியமுயன்றது எல்லாம் அருமையாகச் சொல்லியிருக்கீங்க. நான் மீரா தனக்குத் தெரியும் என்று சொல்வதை எதிர்பார்த்தாலும் அவள் எப்படி அறிந்தாள் என்று சொல்லும் இக்காரணத்தை எதிர்பார்கக்வில்லை. செம செம!! செமையா சொல்லியிருக்கீங்க. வாவ் போட வைத்தது.

    நுணுக்கமான சிந்தனை!!!! அந்த இடத்தில் சொன்ன கற்பனை!!! அபாரம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கூரத்தாழ்வார் நிகழ்வோடு ஒப்பிட்டு மிக அருமையாக விமர்சனம் செய்த தங்களுக்கு தெரியும்.

      நீக்கு
  19. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது பயம் கலந்த சுகம். அதை நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் கதையே தனிக்கதை. சந்தோஷத்தின் நிழலாகப் பின்வரும் சோகம்..

    உங்கள் தலைப்பு என்னை இங்கே திருப்பிவிட்டது:

    என்ன தவம் செய்தனை.. யசோதா..
    என்ன தவம் செய்தனை
    எங்கும் நிறை பரப்ரம்மம் -
    அம்மா.. என்றழைக்க
    என்ன தவம் செய்தனை..!

    ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் சும்மா விளையாடியிருக்கிறார் இந்தப் பாட்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்னதவம் என்று யசோதையைக்கேட்கக்காரணம் அந்த பரப்ரும்மம் குழந்தையாய் வந்ததால். தேவகிக்குக்கிடைக்காத பெருமை யசோதைக்கு உண்டு. அழகான விமர்சனம் ஏகாந்தன் அவர்கலுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஏகாந்தன் அண்ணா எனக்கும் இப்பாடல் நினைவுக்கு வந்தது! மீரா கண்டிப்பாகப் பாடியிருப்பாள்!!

      கீதா

      நீக்கு
  21. அன்பு ஷைல்ஸ்,
    மிக அற்புதமான கதை வடிவம்.
    தத்து கொடுத்த ஒரு அம்மாவின் கதையை இன்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் எனக்கு எழுது என்று சொல்வது போல இந்தக் கருவைக் கொடுத்துவிட்டீர்கள்.

    இத்தனை அழகான ,கண்ணான குழந்தையைப் பெற இந்த அம்மாவும் என்ன தவம் செய்தாளோ.

    வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தைப் படிக்க வாய்ப்பு. ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிமா! பேச்சிலும் எழுத்திலும் அன்பைக்கொட்ட உங்களால் மட்டுமே முடியும்! கதையை வாசித்து பாராட்டியமைக்கு நன்றி மிக.

      நீக்கு
    2. வல்லிம்மா எங்கள் குடும்பத்திலும் உண்டு. அதில் சிக்கல்கள் இப்போதும் தொடர்கிறது....எங்கள் ஊரில் தொட்டடுத்த வீட்டிலும் இது போன்ற நிகழ்வு...ஆனால் அதில் அப்போதே பல சிக்கல்கள்...இருந்தது நடந்தது ஏறக்குறைய 40 வருடங்கள் முன் நடந்தது இரண்டு நிகழ்வுமே....எனக்கும் கதை எழுதத் தூண்டிவிட்டது வல்லிமா....முயற்சி செய்யனும்...

      கீதா

      நீக்கு
    3. என் அண்ணா பையர் இப்போத் தான் இரு வருடங்கள் முன்னர் ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்திருக்கார். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தையும் கிட்டத்தட்ட அவர்கள் ஜாடையிலேயே கன்னக்குழியோடு அமைந்து விட்டது.

      நீக்கு
  22. அன்பு கீதா ஆர். ரங்க நாயகித் தாயார் தத்தெடுத்த குழந்தையைத் தாலாட்டிய விதத்தை
    முன்பு படித்திருக்கிறேன்.
    ஸ்ரீரங்கம் கண்முன் வந்தது. எத்தனைஆழ்ந்த அறிவு உங்களுக்கு.
    அதைச் சரியான இடத்தில் எழுதியது உங்கள் நுண்மையான

    கவனத்தைக் காட்டுகிறது. மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிமா ஸ்ரீரங்கத்துக்காரியான எனக்கு தோன்றவே இல்லை இப்படி ஒருகோணத்தில் சிந்திக்க! மிகவும் ரசித்தேன் நானும் நன்றி மறுபடி கீதா!

      நீக்கு
    2. வல்லிம்மா நீங்க என்னையா சொல்லிருக்கீங்க!! ஆஹா! மிக்க நன்றி மிக்க நன்றி!! ஷைலஜா உங்களுக்கும் என் நன்றிகள் பல. ஓ ஸ்ரீரங்கமா!!! நீங்க!!

      கீதா

      நீக்கு
  23. கதை மிக மிக அருமை. அழகான கரு. சொன்ன விதம் எல்லாமே நன்றாக இருக்கிறது. மனதும் கரைந்தது. இறுதியில் நிறைந்தது. சகோதரிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

    துளசிதரன்.

    (துளசியின் கமெண்டை இங்கு பதிய தாமதமாகிவிட்டது. ஸாரி எபி அண்ட் கதாசிரியர் - கீதா)

    பதிலளிநீக்கு
  24. கதை அருமை பாராட்டுக்குரியது சகோதரிக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஸ்ரீராம்! நீண்ட நாட்களாகி விட்டது, நான் உங்கள் பதிவுகள் பக்கம் வந்து! இன்னும் கேட்டு வாங்கிப் போடும் கதைப் பக்கம் தொடர்கிறது என்றறிய வியப்பு!
    கதையைப் படித்தேன். நல்ல கரு. எனக்கு முன்னமே தெரியும் என்று மகள் சொல்வாள் என எதிர்பார்த்தேன். ஆனால் யசோதா + தேவகியை வைத்து முடிவு சொல்லப்பட்டது சிறப்பாயிருந்தது. நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆசிரியருக்குப் பாராட்டும் வாழ்த்தும்! எனக்கு இன்னுமொரு சந்தேகம் ஸ்ரீராம்! ஏன் என்னிடம் இதுவரை கதையே கேட்கவில்லை? என்னுடையதை வெளியிட்டால், உங்கள் வலைப்பக்கத்தின் டி ஆர் பி ரேட்டிங்க் குறைந்துவிடும் என்ற பயம் தானே காரணம்? ஹா ஹா! சும்மா ஜோக் தான்!

    பதிலளிநீக்கு
  26. அருமையான கதை, ஷைலஜா. பெற்றோரின் தவிப்பும் மனக் கலக்கமும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குழந்தையின் தெளிவு மனதுக்கு மகிழ்வைத் தருகிறது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!