செவ்வாய், 21 ஜூலை, 2020

கே வா போ கதை.: கிராமத்துக் குயிலோசை :: ரமா ஸ்ரீனிவாசன்




மும்பையில் திரு. பிரகாஷ் அவர்கள் ஒரு பெரும் தனியார் நிறுவனத்தில் ஸீனியர் டெக்னிகல் அனலிஸ்டாக, கடந்த பன்னிரண்டு வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மனைவி சுஜாதா, தனியார் கல்லூரியில் எட்டு வருடங்களாக கணிதவியல் பேராசிரியையாக பணி புரிந்து வந்தார். அவர்களுக்கு ஆண்டவன் ஒரே ஒரு செல்ல மகனை கொடுத்திருந்தார். 

கோடிக் கணக்கான சொத்துக்கள் வங்கிகளில் பணமாக மாறி உட்கார்ந்து கொண்டிருந்தது. படகு கார்கள் இரண்டில் மூவரும் எந்த கவலையும் இன்றி வலம் வந்தனர். மகன் பெயர் ஸூரஜ். மும்பையிலேயே பெயர் பெற்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். எந்த ஏக்கமும் இல்லாமல், எந்த ஆதங்கமும் இல்லாமல் வளர்த்தார்கள் அவன் பெற்றோர். விலையுயர்ந்த பொருட்கள், விலையுயர்ந்த துணிகள், விலையுயர்ந்த புத்தகங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஸூரஜ்ஜிற்கு சந்தோஷம் அன்றாட சுவையாகி விட்டது. வெளியுலகத்தை பற்றியோ அங்கு நிலவும் வறுமையை பற்றியோ அவனுக்கு ஒன்றும் தெரியாமல் நாட்கள் ஓடின. 


ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த கிராமமான காஞ்சிபுரத்தின் அருகேயுள்ள சந்தைவாசலுக்கு தன் மகனை கூட்டிச் சென்று கிராம சூழலையும் கிராம வாழ்க்கையையும் காண்பிக்க வேண்டுமென்று பிரகாஷ் விரும்பினார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே இருந்து வந்தது. எனவே, இந்த வருடம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தன் மேலதிகாரியிடம் ஒரு மாத விடுப்பிற்கு அனுமதி வாங்கி, தனக்கு பதிலாக மற்றொருவரையும் தயார் செய்து விட்டார். அவரது மனைவி சுஜாதாவும் மிக குஷியாக தன் கல்லூரியிலும் விடுப்பனுமதி பெற்று விட்டார். 


சந்தைவாசலில் உள்ள தன் குடியானவர்களை தொடர்பு கொண்டு தன் வீட்டையும் தண்ணீர் வசதி, மின்சார வசதி யாவற்றையும் சரி பார்த்து வைக்க சொல்லி ஏற்பாடு செய்து விட்டார் பிரகாஷ். 


குடியானவர்களுக்கோ ஒரே குஷி. இருக்காதா? ஐந்து வருடங்கள் கழித்து எஜமானர் வருகின்றார். அதுவும் மனைவியையும் மகனையும் அழைத்து வருகின்றார். அவர் வீட்டை ஒரு அரண்மனைப் போல் ஜோடித்து, புது கட்டில்கள், நாற்காலிகள், மின்சார விளக்குகள் என தூள் கிளப்பி விட்டார்கள். 


பிரகாஷ் குடும்பம் கிளம்பும் நாளும் வந்தது. மூவரும் விமானம் மூலம் சென்னையை அடைந்து அங்கிருந்து காரில் சந்தைவாசல் கிளம்பினர். ஸூரஜ்ஜிற்கோ தலை கால் புரியவில்லை. எங்கோ சிகாகோவோ, லண்டனோ போவது போல் தன் துணிமணிகளையும், பொம்மைகளையும், தின்பண்டங்களையும் எடுத்து வைத்துக் கொண்டான். தன் தந்தையிடம் மறக்காமல் கேமராவை எடுத்துக் கொள்ள சொன்னான். 


கார் நகர நகர, ஸூரஜ்ஜிற்கு எல்லாமே புதியதாக இருந்தது. நாகரீகமான நகரித்திலேயே வாழ்ந்த ஸூரஜ்ஜிற்கு வயல்வெளிகளும், ஜிலுஜிலு காற்றும், நீர் நிலைகளும் அதிசயமாக இருந்தன. 


அவ்வப்பொழுது காரை நிறுத்தி இறங்கி ஆள் நடமாட்டமில்லாத சாலையில் ஓடுவதும் நடப்பதுமாக ஆட்டம் போட்டான். பிரகாஷிற்கு பெருமை தாங்கவில்லை. சுஜாதாவும் மிக குஷியாக இருந்தாள். ஒன்றாக சேர்ந்து மூவரும் வெளியே செல்வது யாவருக்கும் சந்தோஷமாக இருந்தது. 


ஒரு மணி நேரம் கார் ஓடிய பின்னர், சாலையோரம் இருந்த இளநீர் வியாபாரியிடம் இளநீர் வாங்கி ஒவ்வொருவரும் அருந்தினர். இவை யாவும் ஸூரஜ்ஜிற்கு புதிய அனுபவங்களாக இருந்தன. 

வயலோரங்களில் வண்டியை நிறுத்தி நிலக்கடலை பயிர்கள் சிலவற்றை அப்படியே பிடுங்கி, அவற்றிலிருந்து நிலக்கடலைகளை உருவி பிரகாஷ் சுஜாதாவிற்கும் ஸூரஜிற்கும் கொடுத்து மகிழ்ந்தார். அவருக்கு தன் மனைவியையும் மகனையும் இவ்வளவு சந்தோஷமாக பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 


ஒன்றரை மணி நேரம் பிரயாணம் செய்து கடைசியில் சந்தைவாசல் வந்து சேர்ந்தனர். கும்பலாக குடியானவர்கள் வழி மேலே விழி வைத்து காத்திருந்தார்கள். காரைக் கண்டவுடன் அத்தனை பேரும் ஓட்டமாக ஓடி வந்து ஆர்ப்பரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பிறகு ஒவ்வொரு பெட்டியாக பிரகாஷின் வீட்டிற்குள் அவர்களே கொண்டு வைத்தார்கள். சுஜாதாவும் ஸூரஜ்ஜும் ஆச்சரியமாக பார்த்தார்கள். 


ஒரு வாரத்திற்குள் அவர்களின் அன்பிலும் அரவணைப்பிலும் மூவரும் திக்கு முக்காடிப் போயினர். குடியானவர் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் விதவிதமான உணவுகளும் பலகாரங்களும் வந்த வண்ணம் இருந்தன. சாப்பிடுவதுதான் மூவருக்கும் சிரமமாக இருந்தது. ஆனால், மூவருமே இவ்வளவு சுவையுள்ள நேர்த்தியான உணவுகளை மும்பை ஹோட்டல்களில் கூட உண்டதில்லை. இவை யாவும் வீட்டிலேயே அன்புடன் செய்யப்பட்ட திண்பண்டங்கள். 


நாட்கள் நகர நகர, ஸூரஜ் அங்கிருந்த குழந்தைகளுடன் மிக யதார்த்தமாக பழகி தன் விளையாட்டு சாமான்கள், புத்தகங்கள் யாவற்றையும் பகிர்ந்து சந்தோஷித்தான். சுஜாதாவுமே அவர்களின் அன்பையும் அக்கரையையும் கண்டு அசந்து போனாள். 


ஆனால், ஸூரஜ்ஜிற்கு ஒரு சந்தேகம் வந்தது. அவன் அப்பாவிடம் சென்று “அப்பா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் நல்ல துணிகள், நல்ல புதிய புத்தகங்கள் வைத்திருக்கின்றார்கள். இந்த குழந்தைகள் ஏன் அப்படி இல்லை?” என்று வினவினான். பதில் சொல்லத் தெரியாமல் பிரகாஷ் திண்டாடினார். 


எல்லோர் வீடுகளிளும் நாய்களும், மாடுகளும், ஆடுகளும் வீட்டு மனிதர்கள் போல் அன்புடன் வளர்க்கப் பட்டன. அதே போல் வயல்களும் செடிகளும் உயிரினும் மேலாக பாதுகாக்கப் பட்டன. 


அனைத்து குழந்தைகளும் காலை எழுந்தவுடன் ஆற்றங்கரைக்குச் சென்று நன்றாக வேப்பங்குச்சியை வைத்து பல் துலக்கி விட்டு அந்த ஆற்றிலேயே தங்கள் துணிகளை துவைத்து சுத்தமாக குளித்து விட்டு வந்தனர். ஸூரஜ் அவர்களுடனேயே பொழுதைக் கழித்ததால், அவனும் தன் துணிகளை துவைக்கவும் ஆற்றில் குளிக்கவும் நீச்சல் அடிக்கவும் கற்று கொண்டான். அவனுக்கு நான்கு சுவர்களுக்கு அப்பால் உள்ள ஒரு வாழ்க்கை இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. 


முதல் முறையாக உண்மையான சுதந்திரத்தை அனுபவித்தான். குழாய் தண்ணீரையே பார்த்தவனுக்கு ஆற்று நீர் நெகிழ்ச்சியை தந்தது. தாங்கள் மும்பையில் விலை கொடுத்து வாங்கும் உணவுகள் அவனுக்கு இப்போது ரசிக்கவில்லை. இங்கு ஒவ்வொருவர் வீட்டிலும் விளையும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் வைத்து சமைக்கும் உணவு அறுசுவையைத் தந்தது. 


இரவில் எல்லா குழந்தைகளும் ஒன்றாக நாலு அல்லது ஐந்து கயித்துக் கட்டில்களை போட்டுக் கொள்வார்கள். ஒரு பெரியவர் படுத்துக் கொண்டே இதிகாஸக் கதைகளையும் புராணக் கதைகளையும் சுவைபடச் சொல்ல அவைகளை கேட்ட படியே நிலா வெளிச்சத்தில் நட்சத்திரங்களின் போர்வையில் அரட்டை அடித்த வண்ணம் பிள்ளைகள் தூங்கி விடுவார்கள். 


ஒரு நாள் மாமரங்களின் மீது ஏறி மாங்காய்களையும் மாம்பழங்களையும் பறித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் தவறி கீழே விழுந்து வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. அவ்வளவுதான். ஊரே திரண்டு பிரகாஷிடம் வந்து அவரது காரை எடுக்குமாறு வேண்டினர். அடுத்த கிராமத்திலிருந்த ஹாஸ்பிடலிற்கு கூட்டிச் சென்று வைத்தியம் செய்து காலுக்குக் கட்டுப் போட்டு திரும்பும் வரையில் அவனது அம்மாவுடன் நான்கு பெண்களும் அவனது அப்பாவுடன் சில ஆண்களும் துணையிருந்து தெம்பு கொடுத்து வீட்டில் வந்து சேர்ந்ததும் மூவருக்கும் உணவு கொடுத்து ஆசுவாசப் படுத்தியதைப் பார்த்த சுஜாதாவிற்கும் ஸூரஜ்ஜிற்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. நாலு சுவர் என்னும் அடுக்கு மாடி கட்டிடத்தில் வாழ்ந்த அவர்களுக்கு இந்த நேசமும் பாசமும் புதிதாக இருந்தது. அந்த பிள்ளை எழுந்து நடமாடும் வரையில் அவனுக்கு வேண்டிய ஒத்தாசையை மற்ற குழந்தைகளும் அவனது பெற்றோரின் செலவிற்கான பணத்தை மற்ற ஜனங்களும் பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. 

அதே போல் மும்பையில் வாட்ச்மேனும் பாதுகாப்பு அலாரமும் பார்த்து பழகியவர்களுக்கு நட்பு என்கின்ற பாதுகாப்பை பற்றி அறவே தெரியவில்லை. ஆனால், அந்த கிராமத்திலே எதாவது ஒரு குடும்பத்தில் ஒரு துன்பமோ நெருக்கடியோ வந்து விட்டால், அனைத்துக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து நின்று அதற்கு மாற்று ஏற்பாடும் செய்து அத் துன்பத்தை முதலில் ஒழித்து விடுவார்கள். ஒருவருக்கு ஒருவர் பாலமாக இருந்தனர். 


அக்கிராமத்தில் டெலிவிஷன் பெட்டிகள் என்ற “இடியட் பாக்ஸ்”களே கிடையாது. மாலை நேரங்களில் பொதுவாக எல்லாக் குடும்பங்களும் ஒன்றெனக் கலந்து கூட்டாக உண்டு பழகி, உறவாடி பொழுதை நல்ல முறையில் செலவழித்தார்கள். 


நாம் யாவரும் “உலகம் என் கையில்” என்று இறுமாந்து இருக்கும்போது, அவர்கள் “நாங்கள் யாவரும் தெய்வத்தின் கையில்” என்று நம்பிக்கையுடன் நின்றார்கள். 


இவ்வாறாக பிரகாஷ், சுஜாதா, ஸூரஜ் குடும்பம் தங்கள் ஒரு மாத விடுமுறை நாட்களை மனமகிழ்ச்சியுடன் கழித்து விட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் விடுமுறையே முடிந்து விட்டது. 


மும்பைக்கு திரும்பும் நாளும் வந்தது. விடிகாலையிலிருந்தே குடியானவர்களும் குழந்தைகளும் வந்த வண்ணம் இருந்தனர். நான்கு பலாப்பழங்கள், ஒரு கூடை மாம்பழம், அனைத்து காய்கறிகள், வாழைத் தார்கள், பருப்பு வகைகள், புளி, அரிசி மூட்டை என ஏகப்பட்ட பொருட்கள் வந்து குவிந்தன. 


ஆயின், யார் முகத்திலும் ஈயாடவில்லை. ஸூரஜ், சுஜாதா உள்பட அனைவரும் சோகமே உருவாகக் காணப் பட்டனர். ஸூரஜ் தன் நண்பர்கள் அனைவரையும் கட்டித் தழுவி விடை பெற்றான். அத்தனைக் குழந்தைகளும் கண்ணீர் விட்டு அழுததை பார்த்த ஸூரஜ் தானும் கண் கலங்கி விட்டான். 


குடியானவர்கள் அனைவரும் பிரகாஷையும் சுஜாதாவையும் தங்கள் வீட்டு மகனும் மருமகளும் போவது போலே மனமுடைந்து அழுதனர். தங்களால் முடிந்த புடவையும், வேட்டியும் ஸூரஜ்ஜிற்கு சட்டையும் வாங்கி வந்தனர். உடனே சுஜாதாவும் ஸூரஜ்ஜும் புதுத் துணிகளை அணிந்து வந்ததைப் பார்த்த பிரகாஷ் நெகிழ்ந்து போனான். தானும் புது வேட்டியை உடுத்திக் கொண்டு, அவர்களிடம் விடை பெற்று, மூவரும் கிளம்பினர். 


சென்னையை நோக்கி கார் பயணித்துக் கொண்டிருந்த போது, பிரகாஷ் ஸூரஜ்ஜிடம் மிக கர்வத்துடன் “மகனே, இந்த விடுமுறை உனக்கு பிடித்திருந்ததா?” என்று கேட்டார். ஸூரஜ்ஜோ குஷியுடன் பதிலளித்தான். “அப்பா, ரொம்பப் பிடித்திருந்தது அப்பா. ஏனெனில், நாம் எவ்வளவு ஏழ்மையான நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை எனக்கு காண்பித்திருக்கிறீர்கள். அதற்கு மிக்க நன்றி” என்றான். 


அதிர்ச்சியடைந்த அப்பா “என்னப்பா சொல்லுகின்றாய்” என்று கேட்டார்; 


ஸூரஜ் நிறுத்தி நிதானமாக பதில் கூறினான். “அந்த கிராமத்தில் வாழும் அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பமாக பாசத்துடனும் ஆசையுடனும் ஒருவருக்கு ஒருவர் உதவி வாழ்கிறார்கள். நாமோ, பணம், பதவி, அந்தஸ்து, கௌரவம் என்று புரியாத சிலதின் பின்னால் நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றோம். டீ.வி. இல்லாத வீட்டையும், ஏ.சி. இல்லாத படுக்கையறையையும் இப்போதுதான் பார்த்தேன். பர்கர் இல்லாத உணவும் கொக்கோ கோலா இல்லாத கரும்புச்சாறும் அவைகளை விட இன்னும் அதிகம் சுவைக்கும் என்பதை இவர்களிடமிருந்து கற்று கொண்டேன். ஒன்றாய் மகிழ்ந்து வாழும் குடும்பத்தையே இங்குதான் கண்டேன். அதிசயப்பட்டேன். இவை எல்லாம் விடுங்கள். அந்த குழந்தைகளிடம் இருந்த உயிரைக் கொடுக்கும் நட்பை பார்த்து இன்னும் ஆச்சரியத்திலிருந்து மீளாமல் திகைத்திருக்கின்றேன்” என்றான். 


“நாம் வாழும் வாழ்க்கை படாடோபமும் பகட்டு செயல்களும் நிறைந்தது. அவர்களோ உண்மையான கள்ளமற்ற மேன்மையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். எனவே, என்றும் அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள், பணக்காரர்கள், பண்பானவர்கள். நான் அவர்களிடமிருந்து பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொண்டேன். அவை என் வாழ்நாள் முழுதும் என்னுடன் வந்து என் எதிர்கால சந்ததியினருக்கும் போய்ச் சேரும்” என்று முடித்தான். 


பேச்சிழந்த பிரகாஷிற்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. பணத்தால் நாம் பெரியவர்களாவதில்லை. எளிமை, அன்பு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது, நல்ல நட்பு, நல்லெண்ணங்கள், அமைதியான குடும்பம் ஆகியவையே இவ்வாழ்க்கையின் வரப் பிரசாதங்கள். இவை யாவையும் விட நமக்கும் நம் இறைவனுக்கும் இருக்கும் ஒரு ஆத்மார்த்தமான தொடர்பு. இவையே நாம் வல்லவர், நல்லவர் என்பதற்கு அசைக்க முடியாத அளவு கோலாகும். 


ஒரு மனிதன் எவ்வளவுதான் பணமும் புகழும் ஈட்டினாலும், அவன் மனம் சுத்தமில்லை எனில், அவன் மிகவும் பரம ஏழைக்கே சமானம் என்பதுதான் உடைக்க முடியாத உண்மை. 


ஆகவே, இவ்விடுமுறை ஸூரஜ்ஜிற்கு மட்டுமல்லாது, பிரகாஷ், சுஜாதா ஆகிய இருவருக்கும் கூட ஒரு  படிப்பினையாக அமைந்தது. 

====

41 கருத்துகள்:

  1. அன்பு ஸ்ரீராம், வரப்போகும் துரை மற்றும் அனைவருக்கும் இனிய செவ்வாய்
    காலை வணக்கம்.
    ரமா ஸ்ரீயின் கதை ஒரு விழிப்புணர்வை
    ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன்.

    அறுபது வருடங்களுக்கு முன் சென்ற நினைவு வந்துவிட்டது.
    தெளிவான கதைப்போக்கு.
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா...   வாங்க...

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். நான் இது வரை என் வாழ்க்கையில் ஒரு நாள் கூட கிராமத்து வாழ்க்கையை அனுபவைத்ததில்லை. எல்லாம் என் கணவர் பேச்சு மூலம் தெரிந்து கொண்டதுதான். எனவே பாராட்டுக்களுக்கு நன்றி வல்லி மாமி

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ரஶ்ரீ அவர்களின் இரண்டாவது மாரல் சயன்ஸ் கதை.

    அவர் சொல்லும் கிராம்ம் 80களில் இருந்தது. தொலைக்காட்சி பெருகிப்போய்விட்ட இந்தக் காலத்தில் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் கீழ நத்தத்திலேயே இல்லை முரளிமா.
      எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி
      அலறிக் கொண்டிருந்தது,

      நீக்கு
    2. நான் பதிலளிக்கும்போதும் நம் ஊரை மனதில் கொண்டுதான் எழுதினேன். Practically நகரத்துக்கும் கிராமத்துக்கும் வித்தியாசம் அவ்வளவாக கிடையாது.

      கீசா மேடம் போல, இதுக்கு இந்த நேரம், இவ்வளவு நேரம்தான் என்று பகுத்து நேரம் செலவழிப்பவர்கள் மிகவும் குறைவு.

      மாலை 7 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை திருடன் வந்தாலும் கவனிக்க ஆள் கிடையாது.

      நீக்கு
    3. //மாலை 7 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை திருடன் வந்தாலும் கவனிக்க ஆள் கிடையாது.// எங்கே?

      நீக்கு
    4. //கீசா மேடம் போல, இதுக்கு இந்த நேரம், இவ்வளவு நேரம்தான் என்று பகுத்து நேரம் செலவழிப்பவர்கள் மிகவும் குறைவு.// கண்ணு வைக்காதீங்க நெ.த. நான் பதிவு பப்ளிஷ் செய்தால் மட்டும் கொஞ்சம் இருந்து செய்து முடித்துவிட்டுப் பின்னர் கணினியை மூடுவேன். இல்லை எனில் மூடும் நேரம் வந்துவிட்டால் அப்படியே மூடி விடுவேன். பின்னர் மறு நாள் தான்! இரவு நேரத்தில் கணினியில் உட்காருவதெனில் குட்டிக் குஞ்சுலுவைப் பார்க்கும் அன்று தான். பையர் சனி, ஞாயிறு தாமதமாக எழுந்து கொள்வதால் அவர் எழுந்து குஞ்சுலுவைக் காட்டும் வரை உட்கார்ந்திருப்பேன். அன்னிக்குக் கணினியில் எட்டு மணிக்கப்புறம் கூட இருப்பேன்.

      நீக்கு
    5. //கவனிக்க ஆள் கிடையாது.// எங்கே?// - தொலைக்காட்சி சீரியல்களை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கும் வீடுகளில்தான்.

      நீக்கு
    6. //அவர் சொல்லும் கிராம்ம் 80களில் இருந்தது. தொலைக்காட்சி பெருகிப்போய்விட்ட இந்தக் காலத்தில் இருக்கிறதா?//வாஸ்தவமான கேள்வி. இப்போது கிராமங்கள் மாறி விட்டன. எங்கள் ஊரில் என் சிறு வயதில் வாசல் கதவை எந்த வீட்டிலும் சாத்தி பார்த்ததில்லை. ஆனால் இப்போதெல்லாம் எல்லோரும் தொலைகாட்சி முன் உட்கார்ந்து விடுவதால் பகல் நேரத்திலேயே நகரங்களை போல வாசல் கதவை மூடி விடுவது அதிர்ச்சியாக இருந்தது.

      நீக்கு
    7. நெல்லைத் தமிழர் சொல்ல வந்ததைச் சொல்லாமல் ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டுப் போய்விட்டார் பானுமதி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் எழுத்தில் பல நல்ல பண்புகளை கற்றுத் தருகிறது.

    உண்மையான நட்பால் நிறைந்து மணம் வீசும் கிராமிய பண்பாடு, அன்பான குடும்பங்களின் குதூகலங்கள், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியான சூழ்நிலை என பலவற்றை இதை கதையில் விவரிக்கும் போது, கதை நாயகன் ஸூரஜ்ஜிற்கு ஏற்படும் மனமகிழ்ச்சி அலைகள் நமக்குள்ளும் எழுகிறது.

    இறுதியில் அவன் வாழ்க்கைப் பாடத்தையே இங்கு கற்றுக் கொண்டேன் எனக் கூறும் போது நம் மனமும் நெகிழ்ச்சியுறுகிறது. நல்லதொரு கருத்துகள் அமைந்த கதையை அழகாக தொகுத்து தந்த ரமா சகோதரிக்கு பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. ஓர் அருமையான பாடம். இயல்பான வாழ்க்கையை மனம் நிரம்பிய நிலையில் ரசிக்கும் நிலை. வாழ்வைத் தொலைத்துவிட்டு, தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டு வெளிநாடு, அந்நிய மோகம், ஆடம்பரம், பணம் என கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அதிலேயே உழல்வது வேதனையே.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவும் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை யார் கண்டுபிடித்தாலும் அது முழு வெற்றி அடையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு எல்லோருக்கும் ஃப்ளூ மாதிரி ஒரு சுற்று வந்துவிட்டுச் சென்றுவிடும் போலிருக்கிறது.

      இப்போதைக்கு நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன, நம்மைக் கடிக்காமல் போனால் சரிதான் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  7. இந்தக் கதைக்கருவில் ஓர் கதை ஆங்கிலத்தில் படித்த நினைவு. என்றாலும் ரமா ஸ்ரீநிவாசன் தன் மனதில் தோன்றும் கற்பனைகளை எல்லாம் இங்கே சொல்லி இருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத கிராமங்களே இல்லை. அதோடு மும்பையிலும் அருகே பல கிராமங்கள் இருக்கின்றனவே! அங்கேயும் மக்கள் இப்படியே உபசரிப்பார்கள். இவங்க சொந்த ஊர் என்பதால் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் வந்திருக்காங்க. இந்தியாவெங்கும் கிராமமக்கள் தங்கள் உபசரணைகளில் சிறிதும் குறைக்க மாட்டார்கள். பொதுவாக இப்போதைய ஆடம்பர வாழ்க்கையைச் சாடும் நீதிக்கதை இது.எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட்டால் சொர்க்கம் தான்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  9. நல்லொரு பாடம் தந்த கதை மேடம்.

    ஸூரஜுக்கு வயது எத்தனை ? அவனது இறுதி கட்ட பேச்சுகள், ஒரே வாரத்தில் நீச்சல் கற்றுக் கொண்டவைகளை பார்க்கும்போது இருபது வயதைக் கடந்தவன் போலிருக்கிறது மகிழ்ச்சி.

    இதில் இரண்டு இடங்களில் அவன் பொம்மைகளை எடுத்துக் கொண்டான், மற்ற குழந்தைகளுக்கு கொடுத்தான் என்றது அவனையும் குழந்தையாக காட்டுகிறது.

    அந்த வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி, ஒரு சில முரண்கள் உள்ளன. ரமா ஸ்ரீநிவாசன் ஆரம்பகட்ட எழுத்தாளர் என்பதால் சுட்டிக் காட்டவில்லை. (இப்போதுள்ள நியதிப்படி) ஆனால் என் தனிப்பட்ட கருத்து ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ளச் சொல்ல வேண்டும் என்பதே! சில முறைகள் அப்படிச் சொல்லி யாரும் ஆதரிக்காததால் இப்போதெல்லாம் சொல்லுவதில்லை. கொஞ்சம் இல்லை நிறைய மனமுதிர்ச்சி சூரஜுக்குக் காணப்படுகிறது. ஆனால் நான் இந்தக் கதையைப் படிச்சிருக்கேன். நினைவில் வரலை.

      நீக்கு
    2. கீதா, நீங்கள் சுட்டிக் காட்ட சுட்டிக் காட்டதான் நான் என் எழுத்துத் திறனை மேம்படுத்த முடியும். எனவே, அவசியம் சுட்டிக் காட்டுங்கள்.

      நீக்கு
  10. வல்லி மாமியிடம் கூறியது போல் நான் இது வரை என் வாழ்க்கையில் ஒரு நாள் கூட கிராமத்து வாழ்க்கையை அனுபவைத்ததில்லை. எல்லாம் என் கணவர் பேச்சு மூலம் தெரிந்து கொண்டதுதான். எனவே கீதா கூறியது போல் எல்லா காது வழி செய்தியையும் ஒன்று சேர்த்து ஓர் கதையாக வரைந்தேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அற்புத வாழ்க்கை வாழ பிரகாஷ், சுஜாதா மாறி இருப்பார்கள்.... (?)

    பதிலளிநீக்கு
  12. கதைக்கான தலைப்பு அற்புதம். வரிக்கு வரி வார்த்தைச் சொல்லாடல்கள் இயல்பாக வந்து அமைந்திருக்கின்றன.

    நல்ல முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எழுதியதை மீண்டும் வாசித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரிகிற குறைகளை அடுத்த கதையில் வராது பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

    எழுத எழுதப் பழகி விடும். விரைவில் அடுத்த கதையை இதே பகுதியில் எதிர்ப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீ.வி. சார், உற்சாகமூட்டியதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  13. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  14. இணையம் நேற்று மாலை முடிந்து விட்டது...
    உடன் இணைப்பு பெற இயலவில்லை...

    இது ஓசி...

    பதிலளிநீக்கு
  15. இன்று ரமாஸ்ரீ அவர்களது கை வண்ணமா!..

    இணைய இணைப்பு கிடைத்ததும் வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  16. கதை என்பத விட கட்டுரை எனலாம் எழுத எழுத சிறு கதைக்கான மெருகு வரும்

    பதிலளிநீக்கு
  17. கிராமத்து ரம்மியம், வயலில் இருந்து செடியோடு பிடுங்கி பறித்தெடுக்கும் நில கடலை , சின்ன வயசு ஞாபகங்களை முகிழ்ந்தெடுத்தது; சிறப்பான , நெகிழ்வான கதை ஓட்டம்.

    பதிலளிநீக்கு
  18. கிராமத்துக் குயிலோசை மிக இனிமை.

    கிராமத்தில் இப்போது தொலைக்காட்சி பெட்டிகள் வந்து விட்டது இருந்தாலும் , வாசல் திண்ணையில் உட்கார்ந்து நலம் விசாரிக்கும் பெரியவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    உபசரிப்பும், உதவும் குணமும் இருக்கிறது.

    மிக அழகாய் கதையை அது நடக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார் ரமா .
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. இனிமையான கதை. இப்படி நடந்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி நடக்குமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
  20. கதையையும் பின்வந்த கருத்துக்களையும் படித்து ரசித்தேன். ரமா சீனிவாசன் அவர்கள் உண்மையிலேயே கேட்டு (உள்) வாங்கி, (எழுதி)ப் போட்ட கதை! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  21. ரமாவின் எழுத்து மெருகேறி வருகிறது. நீங்கள் பார்த்த, அனுபவித்த விஷயங்களை எழுதினால் இன்னும் சிறப்பாக வரும்.

    பதிலளிநீக்கு
  22. கிராமத்துக் குயிலோசை..
    நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்
    பாராட்டுகளுடன்,

    பதிலளிநீக்கு
  23. கதையை இன்றுதான் வாசித்தேன்...
    நல்ல கதை...
    வாழ்த்துகள்.
    தொடர்ந்து எழுதுங்கள்...
    உங்கள் எழுத்தில் நல்ல மாற்றம் வரும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!