சனி, 20 நவம்பர், 2021

எதிர் எதிரே வந்த ரயில்கள்..

 சென்னை ஐஐடியில் நிலநடுக்கங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.


நில நடுக்க சமிக்ஞைகளில் முதல் அதிர்வலைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து மிகக் குறைந்த நேரத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தத் தொழில் நுட்பம் பயன்படும் எனவும் கண்டறிந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.... 
======================================================================================================

சென்னை : நீர் நிரம்பி இருந்த தையூர் ஏரியின் மையத்தில் இருந்த மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுதை, படகில் சென்று உயிரை பணயம் வைத்து சீரமைத்து, சென்னைக்கு மின்சாரம் வழங்கிய மின்வாரிய ஊழியர்களின் பணியை,பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மத்திய அரசின் 'பவர் கிரிட்' நிறுவனத்திற்கு, செங்கல்பட்டு மாவட்டம், களிவந்தப்பட்டில் 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் உள்ளது. சென்னைக்கு மின்சாரம் வழங்குவதற்காக, பிற மாநிலங்கள், மற்ற மாவட்டங்களில் இருந்து களிவந்தப்பட்டு துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் எடுத்து வரப்படுகிறது.களிவந்தப்பட்டு மின் நிலையத்தில் இருந்து, 230 கி.வோ., மின் கோபுர வழித்தடத்தில், சென்னை தரமணியில் உள்ள 230 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் செல்கிறது.

ஸ்ரீபெரும்புதுார் 400 கி.வோ., துணைமின் நிலையத்தில் இருந்தும் தரமணிக்கு மின்சாரம் வருகிறது. தரமணி துணைமின் நிலையத்தில் இருந்து அடையாறு, வேளச்சேரி, மயிலாப்பூர், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் எடுத்து செல்லப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.கனமழை காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு, களிவந்தப்பட்டு -- தரமணி வழித்தடத்தில், கேளம்பாக்கம் அருகில் தையூர் ஏரியின் மையத்தில் இருந்த 122வது மின் கோபுரத்தில், 'இன்சுலேட்டர்' சாதனம் பழுதானது.இதனால், அந்த வழித்தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்வது தடைபட்டது.

தொடர்ந்து மழை பெய்த நிலையிலும், மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய, மதியம் 11:00 மணிக்கு ஆறு மின் ஊழியர்கள் படகில் சென்றனர். மூன்று பேர் கோபுரம் மேல் ஏறிய நிலையில், பலத்த காற்று வீசியது. இதனால், நீர்வரத்து திடீரென அதிகரித்து, படகில் இருந்த மூன்று ஊழியர்களும் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவதற்குள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.அரை கி.மீ., துாரம் தண்ணீரில் தத்தளித்து சென்ற நிலையில், தாழ்வான பகுதியில் படகு சாய்ந்து நின்றது.அதில் தத்தளித்தவர்களை, தேசிய மீட்பு படையினர் விரைந்து மீட்டனர்.

கோபுரத்தில் சிக்கிக் கொண்ட ஊழியர்களால் பழுதை சரிசெய்ய முடியவில்லை. அவர்கள் இரவு 7:00 மணி வரை கோபுரத்தில் நின்றபடி இருந்த நிலையில், மீட்பு படையினர் மீட்டனர்.நேற்று காலை மழை பெய்யவில்லை. இதனால், ஒன்பது மின் ஊழியர்கள் படகில் சென்று, தையூர் ஏரியில் இருந்த மின் கோபுர பழுதை சரிசெய்ததை அடுத்து, களிவந்தப்பட்டில் இருந்து தரமணிக்கு மீண்டும் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

மின் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து, சென்னைக்கு மின் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டதற்கு, மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தரமணி -- களிவந்தப்பட்டு வழித்தடத்தில் பழுது ஏற்பட்டாலும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து தரமணிக்கு தொடர்ந்து மின்சாரம் எடுத்து வரப்பட்டதால், மின் வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என்றார்.
===================================================================================================
12TH STANDARD-ல இவங்க TOPPER-ஆ வரும்போது அந்த ஸ்கூல்ல இருந்த எல்லாரும் அவங்க முன்னாடி தலை குனிஞ்சு நிக்குறாங்களாம் .நம்ம வேணாம்னு சொன்ன ஒரு குழந்தை இன்னைக்கு இந்த ஸ்கூல்லோட TOPPER-ஆ இருக்குதே அப்டினு எல்லாரும் தலை குனிஞ்சு நிக்குறாங்க . நண்பர்களே உங்களுக்கு தோல்வி வரும்போதும் ,அவமானம் வரும்போதும் உங்களுக்கான நிராகரிப்புகள் வரும்போதும் உங்க மனசுல வரும் பாத்தீங்களா ஒரு வைராக்கியம் அத நீங்க அணையாம பாத்துக்கிட்டீங்கன்னா , அந்த வைராக்கியம் குறையாம உழைத்தீங்க அப்டினா, உங்கள் வெற்றியின் உயரம் யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கும் நண்பர்களே நல்ல மனசுல வச்சிக்கோங்க .பன்னிரெண்டாம் வகுப்பிலே TOPPER அப்டிங்குறதுனால டெல்லியில் இருக்க கூடிய பிரபலமான நேதாஜி சுபாஷ் இன்ஜினியரிங் காலேஜ்-ல B .TECH படிக்குறதுக்கான வாய்ப்பு தானா வருது அந்த பெண்ணுக்கு .அடுத்ததாக DELHI UNIVERSITY-யில் M.B.A படிப்பையும் முடிக்குறாங்க .இவங்க வெற்றியை யாராலயும் தடுத்து நிறுத்தவே முடியல .சரி இவங்களோட பெயர் "இரா சிங்கல் " .
M.B.A படிப்பை DELHI UNIVERSITY-யில முடிச்சதால இவங்களுக்கு வேலை குடுக்குறதுக்கு பெரிய பெரிய கம்பெனி எல்லாம் போட்டி போட்டு வராங்க .இவங்க திறமையை பாத்து ஆச்சார்ய படுறாங்க .அதுக்கு அப்பறோம் இவங்க coca cola-போன்ற கம்பெனியில வேலை பாக்குறாங்க .கம்பெனியில கிட்ட தட்ட 2 வருஷம் வேலை பாக்குறாங்க .தினமும் 20 மணி நேரம் வேலை செய்றாங்க .தன்னுடைய முழு உழைப்பை அந்த கம்பெனிக்கு குடுக்குறாங்க .மிக பெரிய பதவிகள் எல்லாம் அவங்கள தேடி வருது .மிக பெரிய வாழ்க்கையின் அனைத்து விஷயமும் அவங்க வாழ்க்கையில் நடக்குது .தேவைகள் எல்லாம் நிறைவேறுது ஆனாலும் கூட தனது வாழ்க்கையின் தாகம் இன்னமும் முழுமை அடையவில்லை அப்டினு ஒரு உணர்வு தோன்றுது அவங்களுக்கு .எதோ ஒன்று குறையுது அப்டினு யோசிக்குறாங்க .எதோ ஒரு ACHIEVEMENT குறையுது அப்டினு யோசிக்குறாங்க . தன்னுடைய வேலைய ராஜினாமா பன்றாங்க .நண்பர்களே முடிவெடுக்கும் திறன் எப்போ ஏன் ,எப்படி அப்டிங்குற ஒரு முடிவெடுக்கணும்குறது 100 சதவீதம் நமக்கு தெரிஞ்சுருக்கணும் .நமது வாழ்வின் வெற்றிக்கு மிக மிக அவசியமா திறமை முடிவெடுக்கும் திறமை .சரினு ரா முடிவு பன்றாங்க IAS தேர்வு எழுதலாம்னு .ரொம்ப கடுமையா படிச்சு நல்ல நல்லா  தேர்வு எழுதுறாங்க .முதல் முயற்சியில அவங்களுக்கு IAS கிடைக்கல . IRS தான் கிடைக்குது .அதாவது IRS அப்டினா இந்திய வருவாய் துறை . TOP RANK-ல IRS வாங்குறாங்க .ஆனால் அரசாங்கத்தில் இந்த வேலைய இவங்களுக்கு குடுக்க மாட்டேன் அப்டினு சொல்றாங்க .அதுக்கு இந்த அரசாங்கம் சொல்ற காரணம் என்ன அப்டினா இவங்களோட குறைபாடுனால ஒரு பெரிய பொருளை தூக்கவோ இல்லை ஒரு பொருளை தள்ளி வைக்கவோ முடியாது .அதனால இவங்களுக்கு வேலை குடுக்க முடியாது அப்டினு அரசாங்கம் சொல்றாங்க .உடைஞ்சி போய் இவங்க திரும்பவும் coca cola கம்பெனிக்கே திரும்ப போகல இந்த பெண் .மற்றவங்களா  இருந்தா இப்டி தான் பண்ணிருப்பாங்க .ஆனால் இந்த பெண் அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து 2012-ல கோர்ட்டுக்கு போறாங்க ."நான் இந்த வேலைக்கு முழுமையாக தகுதியானவள்தான்" அப்டினு சொல்லிட்டு கோர்ட்ல போராடுறாங்க .அதே சமயம் இவங்க வேகம் குறையாம மீண்டும் IAS எக்ஸாம் -கு தயாராகுறாங்க .2011-ல் தோல்வி .2013-ல் தோல்வி .ஆனால் 2014-ல் அவங்க கனவு நிறைவேறியது .அவர்களது வெற்றி வசமாகுது .TOP RANK -ல IAS ELIGIBLLE ஆகுறாங்க .IAS-கு மட்டும் ஒரு விதி இருக்கு .நீங்க பாஸ் பண்ணா மட்டும் போதும் அப்டினு .அதிலும் உடற்குறைபாடு என்பது IAS-ஸில் கணக்கில் எடுபடாது .PHYSICAL FITNESS இங்கு தடை கிடையாது .சோ எந்த அரசாங்கம் தனக்கு வேலை குடுக்க முடியாதுனு சொன்னுச்சோ அந்த வேலைய விடவும் உயர்த்த வேலை IAS பதவியில் போய் உக்காருறாங்க இரா ."2012-ல இவங்க தொடுத்த அந்த வழக்கு ,2016-ல் இவங்களுக்கு சாதகமா வந்தது .அதாவது இந்திய வருவாய்த்துறை-யில இந்த மாதிரி உடற்குறைபாடு உள்ளவங்க இருந்தா அவங்களுக்கு அரசாங்க வேலை கொடுக்கலாம் அப்டினு தீர்ப்பு வந்தது. இரா அங்கு வெற்றி பெற்றாங்க கண்ணீரோடு .

நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்..-
=====================================================================================

ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்; விபத்து தவிர்ப்பு

[கீழே உள்ள லிங்க் க்ளிக் செய்தபின் வரும் அந்தப் பக்கத்தில் 'தமிழக நிகழ்வுகள் தலைப்பின்கீழ் நான்காவது செய்தி]

திருப்பூர்-திருப்பூரில் சரக்கு ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சரக்கு ரயில் டிரைவர் சாமர்த்தியத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பூரில் இருந்து ஈரோடுக்கு நேற்று மதியம் 1:00 மணியளவில், சரக்கு ரயில் புறப்பட்டது. 'கூட்ஸ்ஷெட் டிராக்கில்' இருந்து, ஈரோடு - திருப்பூர் வழித்தட டிராக்கை கடந்து, திருப்பூர் - ஈரோடு டிராக்குக்கு சரக்கு ரயில் மாற வேண்டும்.கூட்ஸ்ஷெட் டிராக்கில் இருந்து ஈரோடு - திருப்பூர் வழித்தட டிராக்கை சரக்கு ரயில் கடந்த நேரத்தில், கண்ணுக்கு தெரியும் துாரத்தில், ஈரோடில் இருந்து திருப்பூர் நோக்கி, கோவை எக்ஸ்பிரஸ், அதே டிராக்கில் வந்தது.

அதிர்ச்சியடைந்த சரக்கு ரயில் இன்ஜின் டிரைவர், சுதாரித்து தொடர்ந்து, 'ஹாரன்' அடித்தார். இதையடுத்து, கோவை எக்ஸ்பிரஸ் வேகம் குறைத்து நிறுத்தப்பட்டது. ஸ்டேஷன் அருகில் வந்ததால், ரயிலின் வேகம் ஏற்கனவே குறைவாக இருந்தது. சரக்கு ரயில் மெதுவாக, திருப்பூர் - ஈரோடு டிராக் வழியாக வெளியேறியது. அதன்பின், கோவை எக்ஸ்பிரசுக்கு, 'கிரீன் சிக்னல்' வழங்கப்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட சரக்கு ரயில் டிரைவரால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
==============================================================================================

நடந்ததை எண்ணி கவலைப்பட கூடாது!


முடக்குவாதத்தால், 12 வயதில் பாதிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லுாரி மற்றும் முனைவர் ஆய்வு பட்டப் படிப்பு களை முடித்து, இந்திய பொருளாதார பணியான, ஐ.இ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தமிழ் வீணா: 


"பள்ளிப்பருவத்தில் நடனத்தில் மிகுதியான ஆர்வம் கொண்டிருந்தேன். 2004 ஜனவரி 16அன்று, ஐந்தரை மணி நேரம் பரதம் ஆடினேன். அதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, கொடியேற்றும் விழாவிலும் நடனம் ஆடினேன்.அதன்பின் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பள்ளிக்கு போக முடியாத அளவுக்கு கை, கால், இடுப்பு மூட்டுகளில் கடுமையான வலி ஏற்பட்டது. 


பல்வேறு பரிசோதனைகளுக்கு பின், இளம்பிள்ளை முடக்குவாதம் இருந்ததை உறுதி செய்தனர், மருத்துவர்கள். உற்சாகமாய் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் பெரும் சோகம் தொற்றிக் கொண்டது. அப்போதெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு வலி இருக்கும். வலி நிவாரணியை எடுத்துக் கொண்டாலும், சிறிது நேரம் மட்டுமே கேட்கும்.எதிர்பாராத ஒன்று நடந்து விட்டது என்றால், அதையே யோசித்தபடியே கவலைப்பட்டு கொண்டு இருக்க கூடாது. இதைத் தான் என் வாழ்விலும் எடுத்துக் கொண்டேன். 


இது வரை, ஐந்து முறை அறுவை சிகிச்சைகள் எனக்கு நடந்துள்ளன. அதன் பின், இப்போது மெல்ல நடக்க துவங்கி இருக்கிறேன்.உடல் வலியை மருந்துகளோடு சண்டை செய்ய விட்டு விட்டு, படிப்பில் கவனம் செலுத்த துவங்கினேன். 10ம் வகுப்பு தேர்வை உதவியாளர் மூலம் எழுதி, 438 மதிப்பெண், பிளஸ் 2தேர்வில் 1,139 மதிப்பெண் எடுத்தேன்.பி.ஏ., - எம்.ஏ., என இரண்டு பட்டப்படிப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்றேன். மேலும், எங்கள் பல்கலையில் சுகாதாரப் பொருளியல் என்ற தலைப்பில் முனைவர் ஆய்வு பட்டத்தையும் சமீபத்தில் தான் முடித்து உள்ளேன்.


இந்திய பொருளாதார பணியான, ஐ.இ.எஸ்., தேர்வை இரண்டு முறை எழுதினேன். மூன்றாவது முறை நிச்சயம் வெற்றி பெறுவேன்.'அசோஷியேஷன் ஆப் எக்கானமிஸ்ட் தமிழ்நாடு' என்ற அமைப்பில், சிறந்த கட்டுரையாக என் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரங்கராஜன் கையால் விருதையும் பெற்றிருக்கிறேன்.எளிமையாக பொருளாதார பாடத்தை விளக்குவதற்காக, 'ஸ்கூல் எக்கனாமிக்ஸ்' என்ற பெயரில் கடந்த ஓராண்டுக்கு முன், 'யுடியூப்' சமூகவலைதள சேனலை துவங்கிஇருக்கிறேன். 


பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி மற்றும் சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பி.எஸ்சி., யு.பி.எஸ்.சி., படிக்கும் மாணவர்களுக்கும் பயன்படுகிறது!


================================================================================================


மழைச் செய்திகளில் சில நல்ல செய்திகளுக்கான முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது.


[இவரைப்பற்றி நெடுநாட்களுக்கு முன்னரேயும் பாஸிட்டிவ் பகுதியில் பகிர்ந்திருக்கிறோம்]


அதில் ஓன்றுதான் தெருக்களில் ஆரஞ்சு பழம் விற்கும் ஹரேகலா ஹாஜப்பா என்பவர் பத்மஸ்ரீ விருது பெற்றது.

கடந்த வாரம் டில்லியில் நடந்த பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் ஏத்திக்கட்டிய வேட்டி சாதாரண சட்டையுடன் செருப்பணியாத கால்களுடன் ஒருவர் மேடைக்கு வந்து ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.


அவர் கையில் இருந்த மருத்துவ கட்டைப் பார்த்துவிட்டு, பார்வையாளர் வரிசையில் இருந்த பிரதமர் மோடி அவரை அருகில் அழைத்து விசாரித்தார்.

இது எல்லாம் அவருக்கு கனவு போல இருந்தாலும் நனவாகவே நடந்தது.
யார் இந்த ஹரேகலா ஹாஜப்பா கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள சிறிய கிராமம்தான் ஹரேகலா.இங்குள்ள ஏழை முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆரம்பகல்வியைக்கூட தொடரமுடியாமல் தெருக்களிலும், மங்களூரு பஸ் நிலையத்திலும் ஆரஞ்சு பழங்களை ஒடி ஒடி விற்பனை செய்யும் சிறு வியாபாரியாக மாறினார்.


ஒரு நாள் இவரிடம் பழம் வாங்க விரும்பிய வெளிநாட்டுப் பயணி, ஆங்கிலத்தில் பழத்தின் விலை கேட்க, ஹாஜப்பா மொழி தெரியாமல் விழிபிதுங்கினார்  அன்று ஒரு முடிவு எடுத்தார் தன்னைப் போல தன் கிராமத்து குழந்தைகள் யாரும் படிக்காமல் இப்படி சிரமப்படக்கூடாது அதற்கு ஒரே வழி பள்ளிக்கூடம் கட்டி அதில் ஏழைக்குழந்தைகளை எந்தவிதமான கட்டணமும் இன்றி படிக்கவைக்க வேண்டும் என்பதுதான்.
தனது கிராமத்தில் பள்ளி வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டார் அதற்கு முதலில் நிலம் வேண்டும் என்று சொன்னார்கள்.

இதற்காக அன்று முதல் கூடுதலாக ஒடி ஒடி வியாபாரம் செய்து நுாறில் இருந்து நுாற்றைம்பது ரூபாய் வரை ஒவ்வொரு நாளும் சேமிக்க ஆரம்பித்தார்.சேமித்த பணத்தில் கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்


ஹாஜப்பா உனக்கு கல்யாணமாகி மணைவி மூன்று பிள்ளைகள் உள்ளனர், நீயோ சின்ன வாடகை வீட்டில் இருக்கிறாய், வாங்கிய நிலத்தில் சொந்த வீடு கட்டலாமே அதை ஏன் அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறாய், உனக்கு என்ன பைத்தியமா? என்று கூட கேட்டனர் 


ஆமாம் ஏழைக்குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்ற பைத்தியம்தான் என்று அவர்களுக்கு பதில் தந்தார்இவரது இந்த முயற்சியைப் பார்த்துவிட்டு தொண்டு நிறுவனங்கள் நிலத்தில் கட்டிடம் கட்டி தருவது உள்ளீட்ட உதவிகளை செய்தது


1999 ம் வருடம் ஜூன் மாதம் 6 ந்தேதி 28 குழந்தைகளுடன் அங்கு அரசு ஆரம்பபள்ளி ஆரம்பிக்கப்பட்டது,பின் படிப்படியாக வளர்ந்து இன்று 175 மாணவர்களுடன் 1புள்ளி 33 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.
பிள்ளைகள் எல்லாம் மெட்ரிகுலேசன் பள்ளிப் பிள்ளைகள் போல யூனிபார்ம், கால்களில் ஷூ அணிந்து வருகின்றனர் காலை மதியம் நல்ல உணவு அருமையான வகுப்பு என்று எல்லாமே பிரமாதமாக அமைந்துள்ளது.பத்தாம் வகுப்பு போர்டு தேர்வில் நன்கு மதிப்பெண் பெற்று தேறியுள்ளனர் அப்படி தேறியவர்களில் ஹாஜப்பாவின் பேத்தியும் ஒருவர்.
பள்ளியைப் பொறுத்தவரை அரசாங்க பள்ளியாக இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரை அது ஹாஜப்பா பள்ளிதான்.ஹாஜப்பா பள்ளிக்கு செல்லவில்லையே தவிர அவரைப்பற்றி பள்ளி கல்லுாரி பாடபுத்தகங்களில் பாடமே இருக்கிறது என்பது தனித்தகவல்.
ஆரஞ்சு வியாபாரத்திற்கு போய்விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளியின் உள்ளே உள்ள கல் தி்ண்ணையில் உட்கார்ந்து மாணவர்களிடம் எப்படி படிக்கிறீங்க நோட்டு புத்தகம் எல்லாம் இருக்கா என்று விசாரிப்பதோடு சரி மற்றபடி பள்ளியில் ஹாஜப்பா எந்த உரிமையும் எடுத்துக் கொள்வதில்லை.


பள்ளிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பெயர் நன்கொடை விவரத்தை கல்வெட்டாக பதித்து வைத்துள்ளார் அந்த நீண்ட பட்டியலில் ஹாஜப்பா பெயர் இல்லை ஏன் என்று கேட்ட போது நான் முயற்சி மட்டுமே செய்தேன் பணமெல்லாம் மக்கள் கொடுத்தது ஆகவே எதற்கு என் பெயர் என்கிறார்.
ஆனால் அவரது பெயர் பத்மஸ்ரீ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு அது ஏற்கவும்பட்டு விமானத்தில் மங்களூரில் இருந்து டில்லிக்கு பறந்து சென்று பத்மஸ்ரீ விருது வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.


விருது பெறும் முன்பாக அவரை கொரோனா பரிசோதனை செய்ய வீட்டிற்கு வந்த அதிகாரிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தார் அப்போது அருவாள் பட்டு கையில் காயம் ஏற்பட்டுவிட்டது அந்தக் காயத்திற்கு போட்ட கட்டைத்தான் பிரதமர் அன்புடன் விசாரித்துள்ளார்.


ஹாஜப்பாவை பொறுத்தவரை பிரதமர் மற்றும் ஜனாதிபதியை மிக அருகில் நேரில் பார்த்ததையே விருதைவிட பெரிதாக மதிக்கிறார் அவ்வளவு பெரிய மனிதர்கள் மத்தியில் தெருவில் ஆரஞ்சு பழம் விற்கும் தான் செருப்பு போட்டு போவது மரியாதையாக இருக்காது என்று கருதியே செருப்பு அணியாமல் சென்று விருது பெற்றதாக குறிப்பிட்டார்.அவரது எண்ணம் எல்லாம் தனக்கு கிடைக்கும் பணம் பரிசு பாராட்டு என்று எல்லாவற்றையும் எப்படி பள்ளியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என்பதில்தான் இருக்கிறது.


மங்களூர் திரும்பிய ஹாஜப்பாவை கலெக்டர் முதல் அமைச்சர் வரை பாராட்டியுள்ளனர்,தங்கள் மண்ணிற்கு பெருமை தேடித்தந்ததாக மக்கள் மாலை அணிவித்து மகிழ்கின்றனர் வீட்டின் மூலையில் அம்பாரமாக மாலைகள் குவிந்துள்ளது ஆனால் ஹாஜப்பாவின் கவனம் எல்லாம் வீட்டின் மேல் வைத்துள்ள ஆரஞ்சு பழக்கூடையின் மீதுதான் இருக்கிறது சீக்கிரம் அதை எடுத்துக் கொண்டு வியாபாரத்திற்கு போக வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறார் காரணம் பள்ளிக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்கிறார்.


-எல்.முருகராஜ்.

==================================================================================================

விமானத்தில் மருத்துவர் பரிணாமம்... மத்திய அமைச்சருக்கு பாராட்டு!!!


நவம்பர் 16 அன்று மும்பையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் மத்திய அமைச்சர் பகவத் கராத் பயணம் செய்திருக்கிறார்..


பயணம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பயணி சற்று உடல் உபாதைக்கு உள்ளானதால், விமானப் பணிப்பெண்கள் பதட்டமடைய.. அமைச்சர் ஒருவர் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் உடனே மருத்துவ முதலுதவி அளித்து இருக்கிறார்.



அமைச்சர் ராஜ்ய சபா உறுப்பினர்.. அரசியலுக்கு வருவதற்கு முன் மருத்துவப் பணி செய்தவர்.. அவுரங்காபாத்தில் ஒரு மருத்துவமனை வைத்திருக்கிறார்.

அந்தப் பயணியும் நோயிலிருந்து மீண்டு.. மீதி பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.


அமைச்சரின் இந்த செயலை பிரதமரும் அந்த விமானம் நிர்வாகமும் பாராட்டி இருக்கிறது.


தங்கள் வருவதற்காக விமானத்தை பல மணி நேரம் தாமதம் செய்த பல அரசியல் வாதிகளுக்கு மத்தியில் இந்த மாதிரி செயலும் பலரால் அறிந்துகொள்ளப்பட்டு பாராட்டப்பட வேண்டும்.


= = = =



43 கருத்துகள்:

  1. தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. அனைத்துச் செய்திகளும் மனதைக் கவர்ந்தது.

    தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தியைகளைப் பற்றிப் படிக்க மகிழ்ச்சி

    பாஜக அரசு, காங்கிரசைப் பொல அல்லாமல் எளிய மக்களையும் பரிசுக்குத் தேர்ந்தெடுப்பது மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் நல்வரவு/வாழ்த்துகள், காலை/மாலை வணக்கம், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. மத்திய அமைச்சர் பற்றிய செய்தியை ஏற்கெனவே படிச்சேன். ஹாஜப்பா பற்றியோ, செந்தமிழ் வீணா பற்றியோ தெரியாது. விடாமுயற்சி செந்தமிழ் வீணாவிற்கு வெற்றியைக் கொண்டு வரும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. எதிர் எதிரே வந்த ரயில்கள் பற்றியும் ஐரா சிங்கிள் பற்றியும் அவர் தொடுத்த வழக்குப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கேன். மின் ஊழியர்களின் பணி போற்றத்தக்கது. அவர்களும் நம்மைப் போன்ற சாமானியர் தானே! ஐஐடி மாணவர்களின் முயற்சியால் நன்மை விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். இந்த வார செய்திகள் அனைத்தும் மிகவும் சிறப்பு. குறிப்பாக ராஜப்பா மெய்சிலிர்க்க வைத்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு 'பால்', கர்நாடகாவுக்கு 'ஹாலு'. பாம்பு-ஹாவு. அதுபோல ஹாஜப்பா வை, பாஜப்பா என்று எழுதியிருந்தாலும் அதில் லாஜிக் இருக்கு

      நீக்கு
  8. மின் ஊழியர்களுக்கு வாழ்த்துகள் சொல்வோம்.

    பதிலளிநீக்கு
  9. அனைத்து செய்திகளும் அருமை

    இதில் ஹஜ்ஜப்பா பற்றி 2015 ஆகஸ்டில் நம் துளசி பகிர்ந்திருந்தார். https://thillaiakathuchronicles.blogspot.com/2015/08/Harekala-Hajjappa.html

    இங்கு அவர் விருது வாங்குவதைப் பார்த்ததும் மனம் மகிழ்ந்தது அப்போதைய பதிவும் நினைவு வந்தது. வாழ்த்துவோம்! மாமனிதர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி. வாழ்த்துவோம்.

      நீக்கு
    2. இந்த கீதா ரங்கன் இப்போ இன்னொரு M.Sc படிக்கச்சொன்னாலும் அதிலும் 90 சதம் மார்க் எடுத்துவிடுவார். டப்பா போடுவதுபோல பதிவுகளையும் படித்து மனனம் செய்கிறாரே.. M.Sc subjects மட்டும் உருப்போட்டுவிட மாட்டாரா? (நம்ம ஊர்லதான் மனப்பாடம் பண்ணி வாந்தி எடுத்தே டாக்டர் பட்டமே வாங்கிவிடலாமே)

      நீக்கு
  10. மின் ஊழியர்களுக்குப் பாராட்டு. எப்படி உழைக்கிறாங்க லைன்ல ஏறுவது என்பது எளிதான காரியம் அல்ல. ரொம்பவே ரிஸ்க்.

    அதனால்தான் கரன்ட் கட் ஆகும் போது குறிப்பாக அதீத மழைக்காலங்களில் ஆகும் போது கரன்ட் கட் ஆகும் ஆனால் நாம் உடனே சலித்துத் திட்டுவோம். அது கூடாது என்று நான் அடிக்கடி வீட்டில் சொல்வதுண்டு.

    ஜரா சிங்கிள் கும் செந்தமிழ் வீணாவுக்கும் வாழ்த்துகள். முயற்சி திருவினையாக்கும். ஆனால் கூடவே அதிர்ஷ்டம்/இறையருளும் வேண்டும். அதுவும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது அது எப்போதும் நிலைத்திருக்கவும் வாழ்த்துகள்.

    மத்திய அமைச்சரைப் பாராட்டுவோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..ஜரா சிங்கிள்-கும் செந்தமிழ் வீணாவுக்கும் வாழ்த்துகள்//

      சிங்கிள் !?

      அவர் ஜரா சிங்கிளோ, ஐரா சிங்கிளோ அல்ல! சரியான பெயர்: இரா சிங்கல் (Ira Singhal). Ira - இரா : first name. Singhal : (North Indian) surname

      நீக்கு
    2. கடவுளே! அது சிங்கலா? தோணவே இல்லையே! ஆனால் யோசிச்சேன் என்ன இப்படி ஒரு பெயர்னு! :)))))) நம் தமிழ்நாட்டில் கம்பீரம்னா ஜிவாஜியோட நடைக்கு ஒப்பிடுவாங்க. ஹிந்தி கம்பீர் என்பதன் அர்த்தம் புரிஞ்சுக்க மாட்டாங்க. அதே போல் பல சொற்கள். :)))))) குழம்பினேன் பெயரைப் படிச்சுட்டு. இப்போத் தான் புரிந்தது. நன்றி ஏகாந்தன்.

      நீக்கு
    3. நன்றி ஏகாந்தன் சார். பதிவைத் திருத்திவிட்டேன்.

      நீக்கு
  11. இக்கட்டான சூழ்நிலையில் உதவும் மின்ஊழியர்கள் மனதை தொட்டு நிற்கிறார்கள்.

    உடல் பாதிப்பான நிலையிலும் ஊக்கமுடன் முன்னேறும் உள்ளங்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  12. பத்திரிக்கை, பொதுமக்கள் கவரேஜுடன் நின்றுவிடாமல், இத்தகைய அரசு ஊழியர்கள் (இங்கே மின் ஊழியர்கள்) அரசின் சிறப்பு கவனத்துக்கு வரவேண்டும் (for executing designated work well beyond the limits of duty). விருதுக்கும், அட்வான்ஸ் பதவி உயர்வுக்கும் தகுதிபெற்றவர்கள். பெறுவார்களா ? -என்பது பெருத்த கேள்வி !

    பதிலளிநீக்கு
  13. //சென்னை ஐஐடியில் நிலநடுக்கங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.//

    வாழ்த்துக்கள்.


    //உயிரை பணயம் வைத்து சீரமைத்து, சென்னைக்கு மின்சாரம் வழங்கிய மின்வாரிய ஊழியர்களின் பணியை,பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.//

    அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.




    பதிலளிநீக்கு
  14. ஐரா சிங்கிள், செந்தமிழ் வீணாவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    இவர்களின் விடாமுயற்சி, மனதிடத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ஹாஜப்பா அவர்களின் சேவைக்கு வணங்கி வாழ்த்துகிறேன்.

    தகுந்த நேரத்தில் மருத்துவ உதவி அளித்த அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
    அனைத்தும் நல்ல செய்திகள்.

    பதிலளிநீக்கு
  15. உயிரை பணயம் வைத்து உழைத்த மின் வாரிய ஊழியர்களின் கடமை உணர்வு போற்றத்தகுந்தது.

    பதிலளிநீக்கு
  16. நம்பிக்கையைத் தரும் நற்செய்திகள். பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!