செவ்வாய், 25 ஜனவரி, 2022

காற்றினிலே 2 / 6 :: துரை செல்வராஜு

 

முந்தைய பகுதி சுட்டி : பகுதி 1 


மாநகரில் இருந்து சற்று தொலைவில் வயல்களின் மத்தியில் பெரியதொரு சிவாலயத்துடன் இருந்தது அந்த ஊர்.  அதன் நடுவாக புளிய மரங்களுடன் கூடிய ஒற்றைச் சாலை ஏகப்பட்ட வளைவுகளுடன்.. சாலையின் ஓரத்தில் எடுப்பான கட்டிடம் - விடுதி என்ற பெயரில்...

கோயில் குளம் என்று தரிசிக்க வருபவர்கள் அலுப்பு தீர தங்கிச் செல்வதற்கு வசதியாக இருந்தது..

கண்ணுக்குக் கண் கண்டு மகிழும்படிக்கு - அம்மியில் தேங்காய் அரைப்பதும்  ஆட்டுரலில் அரிசி அரைப்பதும்  மர உரலில்  அவல் இடிப்பதும் .. பசுவிடம் பால் கறப்பதும்  .. காஃபிக் கொட்டையை வறுத்து அரைத்து மணக்க மணக்க காஃபி போட்டு பளபளக்கும் பித்தளை டம்ளர், டவராக்களில் கொடுப்பதும் - - -

இதோ.. இதோ.. - என்று வெகு தூரத்தைக்  கடந்து வந்தவர்களது அலுப்பு தீரும்படிக்கு - தவலைகளில் வைத்து இறக்கப்பட்ட வெதுவெதுப்பான மூலிகை நீர்க் குளியலும் - மட்பாண்டச் சமையலும் தலை வாழை இலை விருந்தும்  -

தொன்னையில் நெய் ததும்பும் அசோகாவும் தளிர் வெற்றிலைத் தாம்பூலமும் - பாரம்பர்யத்தைத் தொலைத்து விட்டு வருபவர்களுக்குப் புதுமையாக இருந்தது.. 

புராதனமான கோயில்கள்  சில இருப்பதால்  அந்த நகரத்திற்கு அதிர்ஷ்டம்.. அதற்கப்பால்  இக்கிராமத்தில் இருக்கும் பாழடைந்த  மாளிகையால் யாருக்கு அதிர்ஷ்டம்?...

கோயில்களுக்கு வருவதைப் போலவே இந்தப் பாழடைந்த மாளிகையைப்  பார்ப்பதற்கும் கூட்டம்..  கொண்டாட்டம்..

புதிய கட்டிடத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில்தான் அந்தப் பழைமையான மாளிகை...

இங்கிருந்து அங்கு  செல்லும் வழியில் வட்ட வடிவில்  சகல வசதிகளுடன் ஆறேழு கூரைக் குடிசைகள்.. கணினி யுகத்தின் கண்கவர் குடிசைகளைக் கடந்ததும் புதிய பராமரிப்புடன் பாழடைந்த மாளிகை...

வெளி ஆட்கள் யாரும் அத்து மீறி உள்ளே நுழைந்து விடாதபடிக்கு அதையும் இதையும் வளைத்து எட்டடி உயரத்துக்கு மதிற்சுவர்..

பாழடைந்த இந்த மாளிகையுடன் பத்து ஏக்கர் வயலை எவனோ ஒருவன் வந்த விலைக்கு விற்று விட்டு ஓடிப் போய் விட்டான்..

அந்த காலத்து சர்க்கார் பதிவேடுகளில் பாழடைந்த இந்த மாளிகையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை..

முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுநிலக் கிழார்களுக்குச் சொந்தமாக இருந்திருக்க வேண்டும்.. 

வாரிசு அற்றுப் போனதால், வாழ்ந்த  மாளிகையும் வனப்பு அற்றுப் போய்விட்டது..

விஸ்தாரமான நடுக்கூடம்.. தலை வாசலில் தேவதாரு மரத்தில் கலை அம்சத்துடன்  வடிக்கப்பட்ட நிலை மாடம்.. அவ்வளவுதான் சொல்லத் தக்கவை.. மாளிகையின்  சுற்றுப்புறம் முழுதும் இடிந்து சரிந்து புற்றுகள்  சூழ்ந்திருந்தன..

பேய் பங்களா என்று அந்த இடத்தை உள்ளூர் மக்கள் யாரும் நெருங்குவதே இல்லை..

இப்படியான மாளிகையை - தற்காலத்தில் கட்டும்போதே - சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக பழைய வடிவமைப்பில் கட்டியதாக -  ஊழல் பெருச்சாளிகளான உத்யோகஸ்தர்கள் ஒன்று கூடி ஒரு பொய்க் கதையை உருவாக்கினார்கள்..  உலவ விட்டார்கள்..

இந்தக் கதை உலவுவதற்கு முன்பிருந்தே இங்கு வேறு சில  உலவிக் கொண்டிருப்பது அந்த வீணர்களுக்குத் தெரியாது..

இப்படியான மாளிகையின் நடு மண்டபத்தில் ராஜ தர்பாரை நினைவுபடுத்தும்படிக்கு ஆங்காங்கே ஜரிகை இழையோட ரத்தச் சிவப்பில் பதாகைகள்.. பொன் வண்ணச் சித்திரங்கள்.. அலங்காரத் தூண்களில் துருப்பிடித்த வாள்கள், தீப்பந்தங்கள், ஐந்தடி உயர குத்து விளக்குகள்..

எல்லாவற்றுக்கும் மேலாக முன் இரவுக்குப் பின் தர்பார் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதும்  வந்திருப்பவர்களை உபசரிப்பதற்காக  ஒப்பனையுடன் கூடிய வட புலத்து வனிதா மணிகள்..

இந்த ராஜ தர்பாரைக் காண வருபவர்களுக்கு மாலை ஐந்து மணி வரை தான் அனுமதி..

அதன் பிறகு சிறார்களுக்கும்  பெண்களுக்கும் கிழங் கட்டைகளுக்கும்  அனுமதி கிடையாது.. இரவு ஒன்பது மணியில் இருந்து நடுச்சாமம் வரையில் நறுமணம் கமழ - மெல்லிய இசை.. இளசுகளின் கூத்து கும்மாளம்.. எல்லை கடந்த கோலாகலங்கள்..

அந்தப் பக்கத்து ஆட்களும்  - இந்தப் பக்கத்து ஆட்களும்  - பட்டினப் பிரவேசம் மாதிரி அவ்வப்போது இங்கே வந்து போவதால் நிர்வாகப் பிரச்னை என்று எதுவும் இல்லை..

உள்ளூர் ஆசாமிகளுக்கு மாதாந்திரப் படையல், பள்ளயம்..

இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?.. - என்றிருந்த நிலையில் தலைக்கு மேல் கத்தி வந்திருப்பது மித்ரா சுபாஷினிக்கு மட்டுமே தெரியும்..

ஒற்றை ஒற்றையாய் மின் விளக்குகள் ஒளிவிடும் அந்த நீண்ட நடையில் மித்ரா நடந்த போது - 

ஊற வைத்து அரைத்த உளுந்த  மாவின் புளித்த வாடை வீசியது..

இப்படி வாடை என்றால் அருகிலேயே நாகத்தின் முட்டைகள் பொரிந்திருக்கின்றன என்று அர்த்தம்..

அவந்திகாவின் அறைக் கதவை நெருங்கியதுமே - " வா.. மித்ரா!.." - என்று அனுமதி..

காலணிகளை வெளியே கழற்றி விட்டு மெதுவாக உள்ளே நுழைந்த மித்ரா அதுவரையிலும் தாழிடப்படாதிருந்த கதவிற்கு தாழிட்டு விட்டுத் திரும்பினாள்...


புத்தம் புதிய விரிப்புடன் கூடிய கட்டில்.. அதில் குற்றுயிராகக் கிடந்தான் விஜய்.. அந்தப் பக்கமாக இவர்களை மேலே அழைத்து வந்த பணியாளன்.. அவனும் குறை உயிராகக் கிடந்தான்..

அறையின் உள்ளே  உளுந்த மாவின் புளித்த வாடை வீசிக் கொண்டிருந்தது..

மயங்கிக் கிடந்த விஜய்யின் அருகில் அவந்திகா - சீற்றத்துடன்..

(தொடரும்) 

60 கருத்துகள்:

  1. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்..

    வாழ்க குறள் நெறி!..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    காற்றினிலே தொடரின் இரண்டாம் பகுதி இன்று..

    பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகிய சித்திரங்களால் சீர் செய்த அன்பின் திரு. கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பாதக் கொலுசுகள்
    சல சலக்க பச்சை
    சேலையில் சிறகை
    விரித்து வந்தாள்..

    பனிமலர் முகத்தை
    அவள் மறைத்து
    அவளே அவளாய்
    அழகில் வந்தாள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு... அழகு... கன்னியும் அழகு; கவிதையும் அழகு.

      நீக்கு
    2. அவளே அவளாய்
      அழகில் வந்தாள்..
      ஆஹா !!

      நீக்கு
    3. துரை அண்ணா கவிதை கலக்கல்.....ரசித்தேன்.

      விஜய் முற்பிறவியில் யாரோ?!! அவந்திகாவிற்கு..

      விஜய் இப்போது குற்றுயிராய்..மயங்கித்தான் கிடக்கிறான் இல்லையா...அந்தப் பணியாளனும்.. நாகப்பாம்பு வேற வருகிறது...அவந்திகா நாககன்னிகை? விஜய் முற்பிறவியில் அவள் காதலன்....நாகதோஷம் என்று போகுமோ?!!

      கீதா

      நீக்கு
  5. சித்திரச் செல்வர்
    திரு. கௌதம் அவர்களது தூரிகை வண்ணத்தினால் - கலைக் கோயிலாக மாறி விட்டது பதிவு...

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

    எல்லோரும் இனிய வாழ்வு பெற்று , ஆரோக்கியத்துடன்
    வாழ இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இறைவன் அருள வேண்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகான வர்ணனைகளுடன்,
    ஒரு திகில் கதை.
    துரை செல்வராஜு அவர்களின் எழுத்துத் திறன் செம்மை.

    கௌதமன் அவர்களின் வர்ண ஓவியமும்
    கதைக்குக் காவியம் சேர்க்கிறது.
    மர்மம் நிறைந்த இடத்தில் நாகமும் சேர்ந்ததா.!!
    சுவாரஸ்யம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  8. இன்றைய பாகம் முழுவதும் வர்ணனையிலேயே போயிற்று...

    இறுதியில் கிளப்பிய பீதிதான் வயிற்றை கலக்கி விட்டது.

    //அந்த காலத்து சர்க்கார் பதிவேடுகளில் பாழடைந்த இந்த மாளிகையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை//

    உடனே பரணில் ஏறி ஐயாவின் பழைய பெட்டிகளை திறந்து பார்க்கணும்....

    ஒருவேளை இந்தப் பங்களா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படியான சந்தேகம் உண்டு..

      உடனடியா பரணியை சுத்தம் செய்தி விட்டுப் பாருங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், நீண்ட நாட்கள் கழித்து. அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கி அமைதியும் நிம்மதியும் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பிரார்த்திக்கின்றேன்.

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அழகான மாளிகைக்கூடம். அலங்காரமாய் இல்லாமல் அமைதி ஒளி வீசும் தீபங்கள். சித்திர வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள். அந்தக் காலத்துக்கே கூட்டிப் போய்விட்டார் ஓவியர். வாழ்த்துகள். முகம் காட்டாத பச்சை உடை நங்கையும் மனதைக் கவர்கிறாள்.

    பதிலளிநீக்கு
  11. இத்தனைக்கும் நடுவில் தம்பி அருமையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார். ஊர் பற்றிய வர்ணனையும் மாளிகை பற்றிய குறிப்புக்களும் அருமை. மித்ராவின் கதி என்ன ஆகப் போகிறதோ! காத்திருக்கேன். முடிந்த பின்னர் தம்பி துரை இதை மின்னூலாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். கூடவே அவருடைய மற்றக் கதைகளையும் தொகுத்துப் புத்தகமாக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..

      இதை மின் நூலாகச் செய்திடலாம்..

      நன்றியக்கா..

      நீக்கு
  12. கௌ அண்ணா இந்தாங்க பிடிங்க இந்தப் பாராட்டை! அரண்மனைப் படம் அட்டகாசம்!!! ரா ரா - லகலகலகலக....ஹாஹாஹா....பாட்டும் கூடவே நினைவுக்கு வந்தது துரை அண்ணாவின் அமானுஷ்ய கதையாச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஓ ஆர்த்தி இப்போது அவந்திகாவாக இருக்கிறாளோ?!! அப்போ விஜய் யாரோ? அது போல அந்தப் பணியாளன் யாரோ அடுத்த பகுதியில் அவர்களின் முன் கதை வருமோ?

    நன்றாகச் செல்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..

      அவளே இவள்..
      இவளே அவள்!..

      // கதை நன்றாகச் செல்கின்றது.. //

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  14. //அந்த காலத்து சர்க்கார் பதிவேடுகளில் பாழடைந்த இந்த மாளிகையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை//

    ஹாஹாஹா அண்ணா சில ஊர்கள் இருந்ததற்கான குறிப்புகள் கூட இல்லையே. அப்புறம் எங்க அரண்மனை பற்றி....

    வர்ணனைகள் முடிந்து கடைசியில் சஸ்பென்ஸ்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன..

      எப்படியோ நமக்கு கதைக் களம் கிடைத்திருக்கின்றதே..

      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. கதை அருமையாக செல்கிறது.

    //தொன்னையில் நெய் ததும்பும் அசோகாவும் தளிர் வெற்றிலைத் தாம்பூலமும் - பாரம்பர்யத்தைத் தொலைத்து விட்டு வருபவர்களுக்குப் புதுமையாக இருந்தது.. //

    அருமையாக சொன்னீர்கள். இப்போது பழமையை தேடி மக்கள் போய் இந்த மாதிரி பழமையை போற்றும் தங்கும் விடுதிகளில் தங்கி மகிழும் காலம்.

    அரண்மனை ஓவியம், மித்ராவின் கால் கொலுசு என்று அழகாய் வரைந்து அசத்தி இருக்கிறார் கெளதமன் சார், அதற்கு சகோவின் கவிதையும் அருமை.
    விறு விறுப்பாய் செல்கிறது கதை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // விறு விறுப்பாய் செல்கிறது கதை.. /.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்யும் மகிழ்ச்சி.. நன்றி.

      வாழ்க நலம்..

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதைக்கு முன் அந்த இடங்களின் வர்ணனைகள் நன்றாக உள்ளது. அழகான சிவன் கோவிலையும், பாழடைந்த பங்களாவையும், விடுதியின் பாரம்பரிய உணவு செய்முறைகளையும் சேர்ந்தாற்ப்போல விளக்கியது அருமை.

    கதை மர்மமாக செல்கிறது. விஜய்யுடன் கூடி கும்மாளமாக ஆரம்பத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆர்த்தி, அவனை குற்றுயிராக ஆக்கிய நாகப்பாம்பாக மாறி விட்டாளா?

    "நீயா" படம் நினைவுக்கு வருகிறது. அந்த பாழடைந்த பங்களாவுக்கும், ஆர்த்தி என்ற அவந்திகாவுக்கும் ஏற்கனவே இருக்கும் சம்பந்தம் அடுத்த வாரங்களில் தெரியவருமென யூகிக்கிறேன்.

    கதைக்குப் பொருத்தமாக ஆலய கோபுர தரிசனம், மாளிகையின் ராஜ தர்பார் மண்டபம், இதுவரை தாழிடாத அறைக்கதவை தாழிடும் மித்ரா என அனைத்தையும் கண்ணுக்கு முன் கொண்டு வந்த கௌதமன் சகோதரருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // விறு விறுப்பாய் செல்கிறது கதை.. /.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நலம் வாழ்க..

      நீக்கு
  19. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! தொடர் கதை சுவாரஸ்யத்துடன் தொடர்கிறது. நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. // தொடர்கதை சுவாரஸ்யத்துடன் தொடர்கிறது.. //

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி.

      நலம் வாழ்க..

      நீக்கு
  20. நாக கன்னிகை கதை நன்றாக செல்கிறது. படமும் இணைந்து செல்கிறது. அம்மி அரையல் மட்பாண்டச்சமையல் தலைவாழைவிருந்து என அந்தக் காலத்துக்கு சென்று விட்டது அமர்க்களம்.
    திகில் அரண்மனை தொடரட்டும் ஆவலுடன்.......

    பதிலளிநீக்கு
  21. // நாக கன்னிகை கதை நன்றாகச் செல்கின்றது.. //

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி.

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  22. கதை விறுவிறுப்பாக ச் செல்கிறது. இந்த வாரம் ஸ்கோர் செய்திருப்பது ஓவியர். நாம் கற்பனையில் நினைப்பதை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். பாராட்டுகள் 👍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கதையில் இந்த வாரம் ஸ்கோர் செய்திருப்பவர் திரு. கௌதம்..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி.

      நலம் வாழ்க..

      நீக்கு
  23. கதையின் விருவிருப்பு அடுத்த பகுதிகளை உடனே படிக்கத் தூண்டுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி.

      நலம் வாழ்க..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!