செவ்வாய், 4 ஜனவரி, 2022

சிறுகதை : முத்தழகு - துரை செல்வராஜூ

 முத்தழகு

- துரை செல்வராஜூ -

************
விழித்துக் கொண்ட சுகந்தி கைக் கடிகாரத்தை நோக்கினாள்..

11:30 என ஒளிர்ந்தது.. 

அருகில் படுத்திருந்த சித்தியைக் காண வில்லை..

' வெளியே சென்றிருக்கிறார்கள் போலிருக்கிறது.. ' - என்று நினைத்துக் கொண்டாள் சுகந்தி..

தலைக்கு மேல் - ' கரக்.. கரக்.. ' -  என்ற சத்தத்துடன் மின் விசிறி சுழன்று கொண்டிருந்தது..

இதே மாதிரியான சத்தம் மேலும் சில மின் விசிறிகளில்..
அனைத்தும் ஓடிக் கொண்டிருக்க கோயில் பிரகார மண்டபம் முழுவதும் காற்றோட்டம்.. 

புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் .. அதன் பிரகாரம் நெடுகிலும் வேண்டுதலின் பேரில்  ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக -  தூங்கிக் கொண்டிருக்கின்றனர்..

அன்று ஞாயிற்றுக் கிழமை..

தீராத பிரச்னை உடையவர்கள் ஞாயிறு இரவு கோயில் வளாகத்தில்  உறங்கினால் நல்லது என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.. 

கோயில் வளாகத்தில் இரவு தங்குவதால் குறைகள் தீர்கின்றன என்பது பலருக்கும் கண்கூடாகத்  தெரிந்தது..

இது கால வட்டத்தில் சுழன்று சுற்றுப் பகுதிகளிலும் பரவியது...

இப்போதெல்லாம் வெளி மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்தோடு வருகின்றனர்.. கோயில் வளாகத்தில் தங்கி - உடன் கொண்டு வந்திருக்கும் கட்டுச் சோறு வகையறாக்களை சாப்பிடுகின்றார்கள்.. ஆங்காங்கே கூடி அம்பாளின் பெயரைப் பாடி பாராயணம் செய்கின்றனர்.. தூக்கம் வந்ததும்  நிம்மதியாக உறங்குகின்றனர்.. விடிந்ததும் எழுந்து அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்புகின்றனர்..

இப்படியான சூழலில் - நம்பிக்கையுடன் அம்பிகையை நாடி வந்தவர்களுள் ஒருத்தி தான் - சுகந்தி.. துணைக்கு சித்தி ..

நிகழ்வின் நினைவுகளில் இருந்து மீண்ட சுகந்தி ஏறிட்டு நோக்கினாள்..
நேர் எதிராக  மேலைப் பிரகாரம்..

குழந்தைகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்க  வயதான சிலர் தூக்கம் வராமல் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருந்தனர்..

சுகந்தியின் விழிகள் சுவர் ஓரமாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் மீது நிலைத்தன..

பாவாடை தாவணி.. தலை நிறைய மல்லிகை.. காதில் ஜிமிக்கி..

ஏதோ புத்தகத்தை வாசிப்பது போல் இருக்கின்றது - அவளது தோற்றம்.. 

" பாவம்.. அவளுக்கு என்ன பிரச்னையோ!.. " - சுகந்தி நினைத்துக் கொண்டாள்.. 

இரவு எட்டரை மணியளவில்  பெரிய  மணியுடன் மேள தாளங்கள் சேர்ந்து  ஒலிக்க - கொடிமரத்தின் அருகில் நின்று மூலஸ்தானத்தில் அர்த்த ஜாம பூஜை தரிசனம் செய்தது நினைவில் வந்தது சுகந்திக்கு..

தங்க நிறப் பட்டுச் சேலையில்  கோலாகலமாக விளங்கிய அம்பிகையிடம் - 
தனது குறையைச் சொல்லி கையேந்தி நின்றாள்..

" மாசத்துல நாலு நாள் வயித்து வலி வந்தா நான் என்ன செய்வேன்?.. சரியாக்கி வைக்க வேணாமா.. அம்மா!.. "

கண்களில் நீர் வந்தது..

சில விநாடிகளில் மகா தீப ஆராதனை..  அருமையான தரிசனம்..

தரிசனம் முடிந்ததும் பிரசாத விநியோகம்.. நெய் வடிய வடிய வெண்பொங்கல்.. ஒன்றுக்கு இரண்டாக தொன்னைகளில் வாங்கிக் கொண்டாள்..

" எதுக்கும் கவலைப்படாதே.. எல்லாம் சரியாகிடும்... " - என்றபடி முன் நடந்த சித்தியைப் பின் தொடர்ந்தாள் சுகந்தி..

பேச்சியம்மன் சந்நதி அடைக்கப் பட்டிருந்தாலும் அங்கு சாம்பிராணி வாசம் கமழ்ந்து கொண்டிருந்தது..

நிலைப்படியைத் தொட்டு வணங்கிய சித்தி அங்கு கிண்ணத்தில் இருந்த திருநீற்றைக் கையில் எடுத்துக் கொண்டாள்..

தெற்குப் பிரகார மண்டபத்தில் நடந்து முன்னதாக விரித்து வைத்திருந்த போர்வைவை நெருங்கியதும் சுற்றிலும் விழித்து நோக்கிய சித்தி சொன்னாள்..

" சுகந்தி.. இந்த சீலைய மேலப் போர்த்திக்கிட்டு படும்மா!.. "

" சரிங்க சித்தி!.. "

மீண்டும் ஒருமுறை சுற்று முற்றும் பார்த்துக் கொண்ட சித்தி - சுகந்தியின்  ஆடையைத் தளர்த்தி  கையில் இருந்த திருநீற்றை அவளது வயிறு முழுதும் தடவி விட்டாள்..

" அம்பாள நெனச்சுக்கிட்டு  அப்படியே கண்ண மூடித் தூங்கு!.. "

அருகிலேயே சித்தியும் தலை சாய்த்தாள்..

அப்போது உறங்கிய சுகந்தி இப்போது தான் கண் விழித்திருக்கின்றாள்..

ஆங்காங்கே குறட்டைச் சத்தங்கள்.. கூடவே சில் வண்டுகளின் ரீங்காரம்... கோயிலுக்கு வெளியே நாய்களின் சத்தம்..  அவ்வப்போது நெடுஞ் சாலையில் விரையும் வாகனங்களின் இரைச்சல்..

" சித்தி வர்ற வரைக்கும் தனியா இருந்து  என்ன செய்றது?.. அந்தப் பொண்ணு கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்போம்!..."

சுகந்தி மெல்ல எழுந்தாள்.. நடந்தாள்.. கால் கொலுசுகள் சிலுங்.. சிலுங்.. என்றன..

' தன்னை ஒத்த வயது தான் இருக்கும்.. ' - என்று நினைத்தபடி , அந்தப் பெண்ணின் அருகில் சென்றதும் தான் சுகந்திக்குத் தெரிந்தது - அவளது கையில் எந்தப் புத்தகமும் இல்லை என்பது..

" என்னக்கா!.. நல்லா இருக்கீங்களா?.. "

பல வருடங்கள் பழகின நட்பைப் போல இயல்பாக விசாரித்தபடி அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்தாள் சுகந்தி..

" நல்லா இருந்தா இங்கே எதுக்கு வர்றோம்?.. " - புன்னகையுடன் நிமிர்ந்தாள் அந்தப் பெண்..

" அதுவும் சரிதான்!.. "   - புன்னகைத்த சுகந்தி பேச்சைத் தொடர்ந்தாள்...

" நானும் சித்தியும் வந்தோம்.. மாசம் ஒழுங்கா ஆகறதில்லை.. வயத்து வலி வேற.. ஏழை பாழைங்களால  ஓயாம டவுனுக்குப் போக முடியுமா?.. அம்மா நீதான் கதி... ன்னு அவ வாசல்..ல வந்து கிடக்குறோம்... "

நெடுமூச்செறிந்தாள் சுகந்தி..

இதைக் கேட்டதும் ஏறிட்டு நோக்கிய அந்தப் பெண் -

" அதுக்குத்தான் வயத்துல விபூதியப் பூசி விட்டாங்களா!... " - என்றாள்..

திடுக்கென்று இருந்தது சுகந்திக்கு...

' அப்போ தான் யாரும்  பக்கத்துல இல்லையே!.. ' - என்று சுகந்தி நினைத்துக் கொண்டபோது,

" நாந்தான் பார்த்துக்கிட்டு இருந்தேனே!.. "  - என்ற பதில் சுகந்தியை வியப்புக்கு உள்ளாக்கியது..

தன்னைப் பற்றி ஏதும் சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்த சுகந்தி பளிச்சென்று கேட்டு விட்டாள்..

" உங்களுக்கு என்னா பிரச்சன?..  கூட யாரும் வரலையா?.. "

கலகல என்று சிரித்த அவள் -

" பிரச்னை  இவங்களுக்குத் தான்.. எனக்கு ஒன்னும் இல்லை.. துணைக்கு வா..  முத்தழகு!.. ன்னு  கூப்பிட்டாங்க..  வந்திருக்கேன்.. "

- என்றபடி அருகில் படுத்திருந்தவர்களைக் காட்டினாள்..

அவளது பெயர் முத்தழகு என்று தெரிந்ததும் - 'அப்பாடா.. ' என்றிருந்தது சுகந்திக்கு..

" இன்னும் எத்தனை வாரம் வந்து நேர்ச்சை பண்ணனுமோ!.. "

" ஏன்... அம்மா மடியில படுத்து உறங்கறது சந்தோஷமில்லையா?.. "

" நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.. இந்த வயித்து வலி வராம இருக்க அம்மா கண்ணத் தொறந்து பார்க்கணும்!.. "

" அதெல்லாம்  பார்ப்பாள்.. அவ பார்க்கம வேற யாரு பார்க்குறது.. அதுக்குத் தானே அவளுக்கு ஆயிரம் கண்ணு.. எல்லா வலியும் தீர்ந்துடும்.. பேச்சியம்மா திருநீறு தான் தீராத பிணி எல்லாம் தீர்க்குமே!.. நம்ம மாதிரி பெண் பிள்ளைகளுக்கு அவ தானே காவல்.. இருந்தாலும் நான் ஒன்னு சொல்லவா!.. "

" சொல்லுங்களேன்!.. "

" முல்லையோ மல்லிகையோ.. அரும்புகளா ஒரு கையெடுத்து ஈரத் துணியில முடிஞ்சு பேச்சியம்மா மடியில வச்சு வேண்டிக்கிட்டா அரும்பு மலர்ற மாதிரி வயிறு மலர்ந்திடும்.. மாசாந்திரம் ஒழுங்காயிடும்... மண் பானையில தண்ணி எடுத்து அதுல வேப்பிலைய போட்டு வச்சிருந்து அந்தத் தண்ணியக் குடிச்சா.. எந்த பிணியுமே வராது!.. " - என்று சொல்லி விட்டு தீர்க்கமாகப் பார்த்தாள்...

" மகமாயி!.. " - என்றபடி கன்னத்தில் போட்டுக் கொண்ட சுகந்திக்கு வியப்பு..

" உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்!.. "

" அப்பன் ஆத்தாள் மகன்..ன்னு  எங்க குடும்பத்துக்கே வைத்தியம் தெரியும்!.. "  - மீண்டும் புன்னகைத்தாள் முத்தழகு..

" சொன்ன மாதிரியே செய்றேன்.. இது எனக்கு மட்டுமா.. இல்லே.. எல்லாருக்குமா?... "

சுகந்திக்கு சந்தேகம் வந்தது..

" பொண்ணாப் பொறந்த எல்லாருக்கும் ஆகும்!.. "

விழிகளை மலர்த்தியவாறு முத்தழகு சொல்வதைக் கேட்டு சுகந்திக்கு மகிழ்ச்சி..

" எப்படியோ எல்லாரையும் நோய் நொடியில்லாம காப்பாத்துனா.. சரி.. "

" அதோ உங்க சித்தி வந்துட்டாங்க.. போய்ப் படுங்க... நடு ராத்திரி..ல அம்பாள் அரூபமா  சுத்தி வருவாள்.. ன்னு ஐதீகம்!." 

- என்றாள் முத்து..

" சரிம்மா!.. " - என்றபடி அவளது கன்னத்தை வருடி முத்தமிட்ட சுகந்தி எழுந்து நடந்தாள்..

*****

கோபுரத்துப் பறவைகளின் இன்னிசையோடு பொழுது விடிந்து கொண்டிருந்தது..

முன்னதாக விழித்துக் கொண்டவர்கள்  பிரகாரத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்க மேலைப்  பிரகாரத்தை நோக்கினாள் சுகந்தி... 

அங்கே - நேற்று இரவில் பார்த்த பெண் உட்பட யாரும் இல்லை...

" போய்ட்டு வர்றேன்... ன்னு முத்துக்கிட்ட சொல்லிக்கலையே!.. "

சுகந்திக்கு உள்ளூர வருத்தம்...

ஆனாலும் முன் நடந்த சித்தியைத் தொடர்ந்தாள்..

கொடி மரத்தருகில் நின்று கை கூப்பினாள்..

மூலஸ்தானத்தில் -  ஆரஞ்சு வண்ண பட்டுச் சேலையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் அம்பாள்..

கோயிலுக்கு வெளியே வந்தாயிற்று..

அப்போது தான் சுகந்திக்குத் தெரிந்தது - எப்போதும் ' சுருக் சுருக் .. ' என்றிருக்கும் வயிறு இப்போது மல்லிகைப் பூக்களால்  வருடப்பட்டதைப் போல் இருப்பதை..

சித்தியிடம் இதைச் சொல்ல நினைத்தபோது நேற்று ராத்திரி  தன்னுடன் பேசிக் கொண்டிருந்த முத்தழகி வேறு சில பெண்களுடன் கோயிலுக்குள் இருந்து வருவதைக் கண்டாள்..

சாலையின் இந்தப் பக்கம் பேருந்துக்காக நின்றிருந்த சுகந்தி சட்டென குறுக்காக ஓடி - அருகில் சென்று,  " முத்தழகு!.. " - என்றாள்..

அருகில் இருந்தவர்கள் - " யாரம்மா நீ?.. "  - என்றார்கள்..

" நேத்து ராத்திரி முத்தழகும் நானும் கோயில் மண்டபத்துல பேசிக்கிட்டு இருந்தோம்!.. "

"  என்னாது!.. பேசிக்கிட்டு இருந்தீங்களா?.. "

" ஆமாம்!.. "

" இவ!.. உங்கூட வாய் தெறந்து பேசிக்கிட்டு  இருந்தாளா?.. "

" ஆமாங்க... ஆமாம்!... "

" நல்ல பொண்ணும்மா நீ!.. "

" ஏங்க?.. "

" கண்ணாலயும் கையாலயும் ஜாடை  தான் காட்டுவா.. இவ  பேசா மடந்தையம்மா.. பேசா மடந்தை!.. "

" என்னது பேசா மடந்தையா!.. அப்போ ராத்திரி எங்கூட பேசிக்கிட்டு இருந்தது யாரு!?.. "

திடுக்கிட்ட சுகந்தி அப்போது தான் கவனித்தாள்..

முத்தழகு ஆரஞ்சு வண்ண தாவணி உடுத்தியிருப்பதை!..

ஃஃஃ 

79 கருத்துகள்:

  1. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரச் செல்வர் திரு . கௌதமன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. எல்லோருக்கும் காலை வணக்கம்.

    புதுவருட ஆரம்பக் கதையும் துரை அண்ணாவா!! கலக்குங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இந்த வருடமும் அதிக கதைகள் எழுதி முதல் ரேங்க் வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. எல்லாம் தாங்கள் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும் தான்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கமலா ஹரிஹரன்..

      // அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்... //

      தங்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வாசித்துக் கொண்டிருக்கும் போதே முத்தழகு யார் என்பது தெரிந்துவிட்டது!

    துரை அண்ணாவின் பாசிட்டிவ் கதை. ஒரு சிலரின் உள்ளில் இறை அம்சம் இருக்கும் என்ற நம்பிக்கை சார்ந்த அழகான கதை.

    ஆனால் ஏனோ எல்லோருக்கும் இப்படி ஒரு முத்தழகுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மனம் போல் மார்கம்...முழு நம்பிக்கை வேண்டும் இல்லையா துரை அண்ணா!

    புத்தாண்டின் தொடக்கக் கதை நம்பிக்கையை விதைக்கும் நல்ல கதை. வாழ்த்துகள், பாராட்டுகள் துரை அண்ணா!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதா..

      // புத்தாண்டின் தொடக்கக் கதை நம்பிக்கையை விதைக்கும் நல்ல கதை. வாழ்த்துகள்,..//

      நெஞ்சார்ந்த நன்றி. மகிழ்ச்சி..

      நீக்கு
  8. கௌ அண்ணா முத்தழகு படம் நன்றாக இருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா! முதல் தரிசனத்தில் அம்பிகையின் புடைவையைப் பற்றி வர்ணிக்கையிலேயே அதற்கு முன்னால் குறிப்பிட்ட முத்தழகு யாரெனப் புரிந்து விட்டது. எங்கும் இருப்பாள் பராசக்தி! அருமையான மனதுக்கு நிறைவானதொரு நிகழ்வு. கதையெனத் தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதாக்கா..

      // எங்கும் இருப்பாள் பராசக்தி! அருமையான மனதுக்கு நிறைவானதொரு நிகழ்வு. கதையெனத் தோன்ற வில்லை...//

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. மனதுக்கு நிறைவான நல்ல கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள். தெய்வம் எப்போதும் மனித ரூபத்தில் வந்துதான் ஒரு நல்ல தீர்வைத் தருமென்பது கதையில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. சுகந்திக்கு வயிற்று வலி குணமானது போல், முத்தழகிற்கும் தீடிரென பேசும் ஆற்றல் வந்து விட்டால் நல்லது. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற சொல்லடை பொய்யாகி விடுமா? புத்தாண்டின் ஆரம்ப கதையாக ஒரு சிறந்த கதையைத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // புத்தாண்டின் ஆரம்ப கதையாக ஒரு சிறந்த கதையைத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி..//

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  13. வணக்கம் கௌதமன் சகோதரரே

    இன்றைய கதைக்குப் பொருத்தமாக தாங்கள் வரைந்த ஓவியம் நன்றாக உள்ளது. துரை சகோதரரின் கதையையும்,அதற்குப் பொருத்தமாக உங்கள் ஓவியத்தையும் கண்டதும், "சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி" என்ற சீர்காழியின் அருமையான அம்மன் பாடல் மனதுக்குள் வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! சிறப்பான பாடல். சிந்தை கவர்ந்த பாடல். நன்றி.

      நீக்கு
    2. சீர்காழியாரின் இனிய பாடலை நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி.

      கௌதம் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  14. முத்தழகு அன்னபூரணியின் பாதிப்பா?

     கதையின் கருத்து பழையதானாலும் சொல்லும் முறையில் சிறப்பாகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி மாநகரின் அன்னபூரணி அம்பிகையைச் சொல்கின்றீர்கள் அல்லவா!..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    தொற்றில்லா வாழ்வு தொடரட்டும்.இறைவன் அருளுவான்.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    இக்கதையில் பிரார்த்தனை குறிப்பு ஒன்று வந்துள்ளது..

    முத்தழகு சுகந்திக்கு
    சொல்வதாக வரும்..

    அந்தக் குறிப்பு 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவையின் பொருட்டு அம்மனிடம் குறையிரந்து நின்ற போது அருளப்பட்டதாகும் என்பதனை மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

    அல்லலில் அலைவோர்க்கு
    கதியும் நிதியும் அவளே.. அவளே!..

    ஓம் சக்தி ஓம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தழகு சுகந்திக்கு
      சொல்வதாக வரும்..

      அந்தக் குறிப்பு 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவையின் பொருட்டு அம்மனிடம் குறையிரந்து நின்ற போது அருளப்பட்டதாகும் என்பதனை மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...//

      ஓ!!! அருமையான விஷயம். துரை அண்ணா.

      இறையின் செய்திகளைப் புரிந்துகொள்ளவும் ஆழ்ந்த நம்பிக்கையும் நுண்ணறிவும் வேண்டும்!

      கீதா

      நீக்கு
    2. கீதா.. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. மெய் சிலிர்க்கும் கதை. அம்பாள் எல்லோருக்கும் இப்படி வந்து காட்சி தந்து பிரச்சினை
    தீர்க்க மாட்டாளா என்று ஆதங்கமாக இருக்கிறது.
    எத்தனையோ ஆபத்துகளிலிருந்து
    காத்து இருக்கிறாள் என்பதும் நிஜம்.
    அதி அற்புதமான கதை, உண்மை சம்பவத்தை
    சிறப்பு நடையில் சொல்லி வந்திருக்கும் அழகும்

    அம்பாள் தரிசனம். சுகந்திக்கு வயிற்று நோவு
    தீர்ந்தது போல முத்தழகுக்கும் அருளி இருப்பாள் தாய்.
    மிக மிக அருமை. நன்றி அன்பு துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ வல்லியம்மா..

      // மிக மிக அருமை. நன்றி அன்பு துரை .. //

      எல்லாம் தங்களது ஆசிகள் அம்மா..

      நீக்கு
  18. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  19. " பிரச்னை இவங்களுக்குத் தான்.. எனக்கு ஒன்னும் இல்லை.. துணைக்கு வா.. முத்தழகு!.. ன்னு கூப்பிட்டாங்க.. வந்திருக்கேன்.. "//

    கடைசியில் முத்தழகு பேசா மடந்தை என்பது தெரிய வரும் போது....கோட் செய்திருக்கும் இந்த வரிகளின் ஆழம் புரியும். துரை அண்ணா சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வருட ஆரம்பத்தில் நம்பிக்கையூட்டும் நல்ல கதை தந்ததற்கு நன்றி. கதையின் போக்கை யூகிக்க முடிந்தாலும் சிறப்பான நடையால் ரசிக்க முடிந்தது. அந்த அம்பிகைதான் தீநுண்கிருமியை ஓட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அம்பிகைதான் தீநுண் கிருமியை ஓட்ட வேண்டும்..//

      அவளன்றி வேறு ஏது கதி..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. முதலில் ஒன்றைச் சொல்லி விட வேண்டும். உரையாடுகிற நடையில் முழுக் கதையையும் நடத்திச் சென்றதற்கு பாராட்டுகள் தம்பி. யதார்த்த சூழலை சிரமப்படாமல் இயல்பாகவே கொண்டிருக்கும் உங்கள் கதை சொல்லும் பாணிக்கு இது மேலும் அழகூட்டும். தற்கால கதை எழுதுவோருக்கு இது கைகூடாத சிறப்பு என்பதால்
    உங்களால் முடிந்திருக்கிற இந்த சிறப்புக்கு கூடுதல் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்களது கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

      நீக்கு
  22. முல்லையோ, மல்லியோ அரும்பா எடுக்து ஈரத்துணிலே முடிஞ்சு -- ஏன் சுகந்தி இந்த வேண்டுதலைச் செய்யவில்லை என்ற கேள்வி கதையை வாசித்து முடித்ததும் மனசில் எழுந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா முந்தைய நடு இரவுதானே சுகந்திக்கு இது தெரியவருகிறது. இனி செய்வாளாக இருக்கும். அதுவே அடுத்த கதைக்கு விதை போடுகிறது இல்லையா..பல விதங்களில். எப்படி வேண்டுமானாலும் தொடரலாம்.....துரை அண்ணாவே கூட அதைத் தொடர்ந்து எழுதினால் பாசிட்டிவாகவே இடையில் ஒரு முடிச்சுடன்...வந்தாலும் பாசிட்டிவாக முடியும்!!! ஆனால் எளிதாகத் தொடர்வதற்கு நிறைய விஷயங்கள் இதில் இருக்கிறது.

      கீதா

      நீக்கு
    2. நான் சொல்ல வேண்டியதை சகோதரி சொல்லி விட்டார்கள்.. அவர்கள் சொல்லிய மாதிரி இதற்குள் நிறைய விஷயங்கள் இருக்கின்றன..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. தாவணி என்ற வார்த்தையைப் பார்த்தாலே இது எந்தக் காலத்துக் கதை என்று கேட்கும் எபி வாசகர்களின் வழக்கமான வாசிப்புப் பழக்கம் மறைந்து போனதில் இந்தப் பகுதிக்கு கதை எழுதுவோருக்கு ஒரு அலாதியான நிம்மதி. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா.. தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. பராசக்தியின் அருளே அருள். உள்ளத்தை தொட்டது கதை.படமும் அழகு சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! இறை அருள் தேடி வந்து, எங்கும் சூழ்ந்திருக்கும் நிறைவான கதை! மனதை வருடும் கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிறைவான கதை! மனதை வருடும் கதைக்கு நன்றி!.. //

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. புது வருடத்தில் ஒரு சிறந்த கதை. மனதை தொட்டது, அந்த அருள் எனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிறந்த கதை. மனதை தொட்டது,. //

      அன்னையின் அருள் அனைவருக்கும் ஆகுக..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  27. ஆழ்ந்த பக்தியும் இறை அன்பும் நம்பிக்கையும் இருந்தால் யாவும் நல்ல முறையில் தீர்க்கப்படும் நல்ல கதை முத்தழகு நல்ல சித்திரம் நம்பிக்கையின் உருவம் அழகோ அழகு அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. பக்தியை வெளிப்படுத்திய (பழைய) நிகழ்வு அருமை ஜி.

    பதிலளிநீக்கு
  29. முத்தழகு கதை முத்தான அழகான கதை!

    இறையருள் மனித ரூபத்தில் கிடைக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. கிடைக்கப் பெறுவதற்கும் பேறு பெறவேண்டும். சுகந்தியின் வாழ்வு மலரட்டும்!

    இறையருள் சார்ந்த அழகான கதைக்கு வாழ்த்துகள்!

    கௌதமன் சார் அவர்களின் ஓவியம் நன்றாகப் பொருத்தமாக உள்ளது. வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ அன்பின் துளசிதரன்..

      // இறையருள் சார்ந்த அழகான கதைக்கு வாழ்த்துகள்!..//

      அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. முத்தழகு அழகான பெயர். அழகான பெயர் போலவே கதையும் வெகு அழகு. கதை மனதைத் தொட்டது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  31. அன்பின் வெங்கட்..

    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  32. அனைவருக்கும் மீண்டும் வணக்கம்..

    தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் தான் கதையின் களம்..

    என்னை ஈர்த்த உண்மை நிகழ்வு இது.. அன்னை அவளது ஆலயத்தில் எவருக்கும் எப்படி வேண்டுமானாலும் அதிசயங்கள் நிகழலாம்..

    அனைவருக்குமாக அன்னையிடம் பிரார்த்திக் கொண்டு - இன்று எனக்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  33. பதில்கள்
    1. // நம்பினோர்க்கு எங்கும் இறை.. //

      உண்மை தான்... தங்கள் வர்கைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!