சனி, 8 ஜனவரி, 2022

எக்காரணம் கொண்டும் என் ரெண்டு பிள்ளைகளும்....

 எங்கள் மக்கள் எளிதில் மாற மாட்டார்கள்!

இன்னமும் மூட நம்பிக்கையில் முடங்கிக் கிடக்கும் நரிக்குறவர் நாடோடி பழங்குடியின சமூகத்திலிருந்து தனித்து மிளிர்வது பற்றி, சென்னை ஆவடியை சேர்ந்த சுனிதா: 



"படிப்பு நம் வாழ்க்கைக்கான அடிப்படை அனுபவங்களை கற்றுக் கொடுத்தாலும், நல்ல வேலை தான் எல்லா வகையிலும் நம் வாழ்க்கையை முழுமையா மாத்தும். ஊசி, பாசி விற்குற வேலைக்கு நாகரிகமான டிரஸ் உடுத்துறது சரி வராதுனு எங்கள் மக்கள் நினைக்கிறாங்க.  இப்போ எல்லாருக்கும் படிப்பு இலவசமா கிடைக்குது. எங்க சமூகத்துல காலேஜ் படிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகரிச்சாலும், அவங்கள்ல யாருக்குமே நல்ல வேலை கிடைக்கிறதேயில்ல. அதனால, வேண்டா வெறுப்பா மறுபடியும் ஊசி, பாசி விற்கவே போறாங்க.  என் பெற்றோர் ஊசி, பாசி விற்கிற தொழில் செஞ்சதால, நாங்க நாடோடி வாழ்க்கை தான் வாழ்ந்தோம்.  நிரந்தர வீடு கிடையாது. மரத்தடியில குடில் அமைச்சு தான் வசிச்சோம்.  சமூக மக்களை ஆதிக்க ஜாதியினர்ல பலரும் ரொம்பவே மட்டம் தட்டியும், கிண்டல் பண்ணியும் பேசுவாங்க. அதனால, சின்ன வயசுல வெளியுலகத்துடன் அதிகம் கலக்காமலேயே இருப்பேன். ஸ்கூல் முடிச்சுட்டு வந்ததும் அம்மாவுக்கு உதவியா ஊசி, பாசி வியாபாரம் செய்வேன். அப்பாவுக்கு நாங்க மொத்தம் எட்டு பிள்ளைகள்; நான் கடைக்குட்டி. மத்த ஏழு பேரும் சரியா படிக்கல. நானாச்சும் படிச்சு கவர்ன்மென்ட் வேலைக்குப் போகணும்னு அவர் ஆசைப்பட்டார்.  படிப்பு தான் நம்ம சமூகத்தை மேம்படுத்தும்னு அனுபவத்துல உணர்ந்தேன்.  நார்மல் காலேஜ் படிக்க முடியாததால, பிளஸ் 2 முடிச்சதும் டிப்ளமா காலேஜ் போனேன். அங்க கேலி, கிண்டல் அதிகமாகவே, பொறுமையை இழந்து காலேஜ் போறதை நிறுத்திட்டேன். நான் நல்லா படிப்பேன். அதனால, எங்க காலேஜ் சேர்மன் ஐயா, 'நீ காலேஜ் வராட்டியும் பரவால்ல. எக்சாம் எழுத மட்டுமாச்சும் வா'ன்னு சொல்லி ஊக்கம் கொடுத்தார். டிப்ளமா முடிச்சதும் ரொம்பவே முயற்சி பண்ணி, மின்சார வாரியத்துல, 'அப்ரென்டிஸ்' வேலை வாங்கினேன்.  வேலை செஞ்சுகிட்டே, இன்ஜினியரிங் படிச்சேன். எங்க சமூகத்துல பெண்கள் இரவு நேரத்துல வெளியிடங்களுக்கு அதிகம் போக மாட்டோம். எனக்குத் தெரிஞ்சு எங்க சமூகத்துலயே ஈவினிங் காலேஜ்ல படிச்ச முதல் நபர் நான் தான்னு நினைக்கிறேன்.  இன்ஜினியரிங் படிப்பு முடிச்சதும் உதவிப் பொறியாளரா, 'புரமோஷன்' கிடைச்சது. கவர்ன்மென்ட் வேலைக்குப் போனாலும் இந்தக் கட்டுப்பாடுகள் எனக்கும் பொருந்தும். பழைமையில ஊறிப்போன சமூக மக்களை அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது. எனினும் மாறி வருகின்றனர்.  என் கணவர் வெளிவேலைக்கு போறார்.   ஆபீஸ்லேருந்து நான் வீட்டுக்கு வர தாமதமானா, சமையல், குழந்தைகளைக் கவனிச்சுக்குவார்.  இப்போ நான் நல்லா சம்பாதிக்கிறேன். எக்காரணம் கொண்டும் என் ரெண்டு பிள்ளைகளும் ஊசி, பாசி விற்கிற தொழில் பக்கம் வந்திடக் கூடாதுன்னு, அவங்க படிப்புக்கும், வளர்ச்சிக்கும் அதிக கவனம் கொடுக்கிறேன்!"

==============================================================================================




=============================================================================================================


நான் படிச்ச கதை 
ஜீவி 





ணோ பெண்ணோ யாருக்கும் தங்கள்  அம்மாவைப் பற்றிய நினைவுகள் நித்யமானவை.

ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாமல் தன் அம்மாவைப் பற்றிய நினைவுகள் அவள் மனசிலும் மண்டிக் கிடக்கின்றன.

நாலே வயது அவளுக்கு அப்போது. அவள் அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருக்கிறாள்.

விடிகாலை எழுந்து பார்த்தால் வீட்டில் தமுக்கு சப்தம் மாதிரி கேட்கிறது. கதவருகே பார்க்கிறாள்.  அக்கா கல்யாணியை பலகை போட்டு உட்கார வைத்திருக்கிறார்கள்.  எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான்...  ஆஊவென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்பு காட்டிய தம்பிப் பாப்பா அவள் இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான்.

விடிகாலை இருட்டோடு புதைக்கப் பட்டிருக்கும் தவலைக்கு அடியில் விறகு வைச்சு வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும்.

வீட்டில் ஹோமம் நடக்கிறது.  அம்மாவின் உதட்டின்  சிவப்பாலோ குங்குமத்தின் தீட்சண்யத்தாலோ கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையின் பிம்பம் அவளாகப் படுகிறது.    "அக்னியே ஸ்வா ஆ ஆஹா..." என்று ஸ்வாஹாவை நீட்டி முழக்கி நெருப்பில் நெய்யை ஊற்றுகிறார்கள்.  அந்த 'ஸ்வாஹா'வின் நீட்டலின் போது அவள் பார்வை நெருப்பின் மீதும் அம்மாவின் மீதும் போகிறது.

எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா.  புடவையைத் தூக்கி செருகியிருக்கிறாள்.  வெளுப்பாய் வழவழவென்று துடை தெரிகிறது.  குனிந்து நிமிறும் போது பச்சை நரம்பு ஓடுகிறது.

"அம்மா, நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு?  நான் ஏம்மா கறுப்பு?.."

சிரிப்பு.  "போடி உன் அழகு யாருக்கடி வரும்?"

அப்போது அவளுக்கு பதிமூன்று வயது இருக்கலாம்.  பாவாடைகள் குட்டையாகப் போக ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள்.

"அம்மா..  பருவம்னா என்னம்மா?"

மெளனம்.  நீண்ட நேர மெளனம்.

அம்மா திடீரென்று சொல்கிறாள்.  "நீ இப்படியே இரும்மா.... பாவாடையை அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு..."

தொடர்பில்லாத விட்டு விட்டான நினைவுகளில் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் எல்லா நினைவுகளுக்கும் அம்மா தான் தொடர்புச் சங்கிலி. அதனாலேயே அம்மாவை வைத்தே ஒன்றிற்கு ஒன்று சம்பந்தப் படுத்திக் கொள்ளவும் முடிகிறது.  அம்மா தான் ராணி.  அம்மாவை வைத்துத் தான் எல்லாமும் ..... அசுத்தங்களை எரித்து சுத்திகரிக்கும் நெருப்பு அவள்.. அவளே சிருஷ்டிகர்த்தா. 

சித்தி பெண் ராதுவை பெண் பார்க்க வருகிறார்கள் என்று அம்மா மட்டும் வெளியூருக்கு சித்தி வீட்டுக்குப் போய் விடுகிறாள்.

நடுவில் தீபாவளி திருநாள் கூட வந்தது.  அக்கா கல்யாணி தான் எண்ணைக் குளியல் எல்லாம் செய்து வைத்தது  " உனக்கு எண்ணைய் தேச்சுட்டு நானும் தேச்சுக்க வேண்டாமா? வயசு பதிமூணு ஆறது.  இருந்தும் எண்ணை தேச்சுக்க வராது உனக்கு.., குனிடீ...". கல்யாணிக்கு பொறுமை கிடையாது. தேங்காய் நார் உரிப்பது போல் தலையை வலிக்க வலிக்கத் தேய்க்கிறாள்.

"இந்தாடி. கறுப்பீ..." அப்பா அவளை அப்படித் தான் கூப்பிடுவார்.  அவள் பெயர் என்னவென்று அவளே மறந்து போகும் அளவுக்கு கறுப்பீ என்பதே அந்த வீட்டில் அவளைக் குறிப்பதான சொல்லாயிற்று.  

தீபாவளி அன்னிக்கு மரத்தில் பூ பறிக்க எத்தனித்து பூக்குடலையுடன் கீழே விழுந்து ஸாட்டின் பாவாடையெல்லாம் ஏகக்கறை.  என்ன ஆயிற்று என்றே அவளால் உணர  முடியலே.  முறுக்கு பிழிய வரும் மொட்டைப் பாட்டியை எங்கிருந்தோ கூட்டி வருகிறாள் கல்யாணி.  பாட்டி அவள் அருகில் வந்து "ஏன்னடீம்மா அழறே?  என்ன ஆயிடுத்து, இப்போ?..  லோகத்லே இல்லாதது ஆய்டுத்தா?" என்கிறாள்.

தனக்கு ஆனது லோகத்லே  இருக்கற ஒண்ணு தான் என்று  அன்றைக்கு அவளுக்குத் தெளிவாயிற்று.  லோகத்லே இருக்கற அது என்னன்னு எல்லார்கிட்டேயும் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியாது.  என்றைவாக்குமே எப்போதுமே அவள் கிட்டே வாத்ஸல்யமா இருக்கற அம்மா கிட்டே கேட்டுத் தான் லோகத்லே  இருக்கற அதையும் தெரிஞ்சிக்கணும்.  அதுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு வெளியூருக்குச் சென்றிருக்கும் அம்மா வரவுக்காகக் காத்திருக்கிறாள்.  

ஊருக்குப் போன அம்மா திருப்பி வர்றதுக்கு ரெண்டு வாரத்துக்கு  மேலாயிடுத்து.  டாக்ஸியின்  கதவு திறந்து  கரும்பச்சை பட்டுப்புடவை கசங்கியிருக்க அம்மா வீட்டிற்குள் வருகிறாள்.

"ஏன்ன ஆச்சு?" என்கிறார் அப்பா.

"பொண்ணு கறுப்பாம்.  வேண்டானுட்டான் கடன்காரன்.."

"உன் தங்கை என்ன சொல்றாள்?"

"வருத்தப்படறா, பாவம்..."

"நமக்கும் ஒரு கறுப்பு பொண்ணு உண்டு.."

---- ஆக எல்லாத்தையும் விஞ்சி கறுப்பு தான்  பெரிய விஷயமாய்ப் போயிற்று.  பூதாகரமா அந்த கறுப்பு தான் எல்லார் மனசிலேயும் பிர்மாண்டமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிற மாதிரி தெரியறது. 

லோகத்லே இருக்கற அந்த விஷயத்தை அம்மா தான் அனுசரணையா தன் செல்லத்திற்கு விளக்கி வழிகாட்டுவாள் என்று பெரிய நம்பிக்கையோட மொட்டென்று அம்மா முன் போய் அவள் நிற்கிறாள்.  அம்மா அவளைப் பார்க்கிறாள்.  'நான் ஒரு கணம் அம்மா கண்முன் ராதுவாய்  மாறுகிறேனோ?' என்று அவளாக நினைத்துக் கொள்கிறாள்.

அவளது அருகாமையை உணர்ந்த அந்த  நிமிஷமே "உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்?.. இது வேறே. இனிமே ஒரு பாரம்.." சுளீரென்று கேள்வியாய் அம்மா வெடிக்கிறாள்.

புரியலே.  அம்மா சொன்னது திடுக்கிடுதலா இருக்கிறது.  யாரைக் குற்றம் சாட்டுகிறாள்,  அம்மா?..

ஒலியில்லாத கேள்விகள் அவள் நெஞ்சை முட்டுகின்றன.  அம்மாவின் உதடுகளும்,  நாசியும், நெற்றிக் குங்குமமும், மூக்குப் பொட்டும், கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல அவளுக்குத் தோன்றுகிறது.  அந்த  நெருப்பில் அம்மா மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் தோன்றுகிறாள். அந்த ஈரமில்லா சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத்தனமாக ஹதம் செய்கிறது.  தீராத பயங்கள் கருஞ்சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.  

"அக்னியே ஸ்வா  ஆ..ஆஹா.."

'அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை.  மொட்டுகளும் மலர்களும் கூடக் கருகிப் போயின'...  என்று கதை முடிகிறது.

எழுத்தாளர் அம்பையின் இந்தக் கதை 1971-ம் ஆண்டு 'கசடதபற'வில் வெளிவந்திருக்கிறது.  வல்லின இதழுக்கு ஏற்புடைய வன்மையான கதை தான்!...



'அம்மா ஒரு கொலை செய்தாள்' -- (க்ளிக் செய்தால் கதையைப் படிக்கலாம்) என்ற இந்தக் கதைக்கான தலைப்பு தான் இந்தக் கதையை படித்து முடித்ததும் உறுத்துகிறது.  அம்மா கொலை செய்தது குழந்தைகளின் மேல் அவள் கொண்டிருந்த அன்பையா என்று அம்பையைக் கேட்கத் தோன்றுகிறது.

'நீ இப்படியே இருடீம்மா.. பாவாடையை அலைய விட்டுண்டு, ஓடி ஆடிண்டு...' என்பது அளப்பரிய ஆசை நிறைந்த அம்மா மனசின் மொள்ளக் மொள்ளக் குறையாத அன்பின் விகசிப்பு.  அப்படியே பாவாடையுடன் இருக்க முடியாது தான்.  இருந்தாலும் வேதனை தான்.  அவளுக்கான வேதனை ஒட்டு மொத்த குடும்பத்துக்கான வேதனையாக உருக்கொள்ளும்.
 
காலத்தின் வளர்ச்சிப் போக்கில் மொட்டு மலர்வது இயற்கையின் நியதி. நியதிகள் மாறும் போது தான் கோளாறாகிறது.  அதை அந்தத் தாயும் அறிவாள்.
அறிந்தும் அந்த நியதியை திடுமென சந்தித்தது அவளைப் பெருத்த ஏமாற்றதிற்குள்ளாக்குகிறது.  பெண்ணின் கறுப்பு நிறமும் அவளில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

'அவ்வளவு தானா இவள் சிறுமிப் பருவம்' என்ற ஆதங்கம் , 'என்னடீ அவசரம்?' என்று பதற வைத்து விட்டது.  'இனிமே இது ஒரு பாரம்' என்று உணர்ந்த பொறுப்பு அடுத்த கட்டத்திற்கான பருவத்தின் நகர்வு நிதர்சனத்தை உணர வைத்த உணர்வு.  'இன்னொரு பாரமாக வீட்டில் வளைய வரும் கல்யாணி'க்கும்  'அந்த நேரத்தில்' இப்படித்தான் அந்தத் தாய் பதறி இருப்பாள் என்றாலும் 'பொண்ணு கருப்பாம்;  வேண்டானுட்ட்டான் அந்தக் கடன்காரன் 'என்ற சமீபத்து வெறுப்பு வேறு பாரத்தின் சுமையை கறுப்பான இந்தப் பெண் மீதும் அழுத்துகிறது.  நல்ல இடத்தில் எல்லாம் நல்லபடி அமைய வேண்டுமே என்று 
இப்பொழுதே நெஞ்சில் கவிகிற கவலை தான் பாரமாக அந்த அம்மாவை வாட்டுகிறது

'யாரை குற்றம் சாட்டுகிறாள் இந்த அம்மா?' என்ற திகைப்பு அந்த 13 வயசுக்கு இயல்பு தான்.

ஆனால் வளர்ச்சி தான்  வன்மையையும் மென்மையையும் தீர்மானிப்பதாகத்  தெரிகிறது.  அப்படியான வளர்ச்சியில் அஞ்ஞானங்களும் ஸ்வாஹா ஆவது தான் வளர்ச்சிக்கான அடையாளமே!

காலங்கள்  மாறிப்போன வளர்ச்சியில்  பெண்ணின் திருமண நிச்சயிப்புக்கு கறுப்பு,  சிவப்பு எல்லாம் காரணமாகவே இல்லாத காலமும் இது தான்.   நிறங்கள் மட்டும் இல்லை.  இன்னும் என்ன என்னவெல்லாமோ.

தொலைபேசி இலாகாவில் நான் பாண்டிச்சேரியில் பணியாற்றிய காலத்தில்       கண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கு) என்ற நண்பர் ஒருவர் எனக்கிருந்திருந்தார்.  சேலம் ஆத்தூர்காரர்.  எழுத்தசளர்  நா. பார்த்தசாரதி மேல் அபிமானம் கொண்ட வாசகர். கவிஞர்.  நாங்கள் இருவரும் கடற்கரை பக்கம் போகும் பல சமயங்களில் தன் முதல் காதல் அனுபவங்கள் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்.  "ஜீவி!  அந்த கறுப்பில் தான் என்ன அழகுங்கறே!.." என்று குழி விழும் கன்னமும் குறு நகையும் குழைந்த மென் குரலிலும் மனம் நெகிழ்ந்து அவர் சொன்னதெல்லாம் சுவாரஸ்யம்.    

"வெண்மணல் சிரிப்பினிலே -- ரங்கநாயகி
உன் விழியலைகள் பேசுதடி ரங்கநாயகி
.....................................................................
.....................................................................
.....................................................................
இத்தனையும் இருந்தென்ன -- ரங்கநாயகி
நீ என் அத்தை மகள் இல்லையே,  ரங்கநாயகி!

--- என்று சோகத்துடன் கண்ணன் முடிக்கும் பொழுது நமக்கும் பாவமாக இருக்கும்.   அத்தை மகள், மாமன் மகன் என்று உறவில் திருமணம் முடிப்பது உரிமையாய் இருந்த காலம் அது.  காலத்தின் மாற்றத்தில் சுனாமியாய் எல்லாம் அடித்துப் போகப்பட்ட காலமும் இது தான்.

பெண் கறுப்பாய் இருக்கிறாளே என்று தாய்  கவலைப்பட்ட காலத்து இந்தக் கதையை எழுதிய அம்பையின் இயற்பெயர்  சி.எஸ்.லஷ்மி.  கோவையில் பிறந்தவர்.  கலைமகள் குழாமின் கண்ணன் சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்வி அவர்களால் கண்டெடுக்கப்பட்டவர். கலைமகளுக்காக எழுதிய 'அந்திமாலை', நாராயணசாமி ஐயர் விருது பெற்றது.
சிறகுகள் முறியும்,  காட்டில் ஒரு மான்,  வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற இவரது சில படைப்புகள் இன்றும் நினைவில் நிற்கின்றன.
மும்பையில் வாழ்ந்து வரும் அம்பை 'ஸ்பாரோ' என்ற பெயரிலான பெண்களின் வாழ்வியல் தொடர்பான வரலாற்று காப்பகத்தின் நிறுவனராக, இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.   இசைப்பயிற்சி பெற்றவர்.   சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வரலாற்றுக்கான முதுகலை பட்டம் பெற்றவர்.
பெண்ணியல் எழுத்துக்கு சொந்தக்காரராக அறியப்படுபவர்.  அம்பையின் கதைகள் வாசிக்கக் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.


100 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தொற்றில்லா வாழ்வை இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. கற்றோருக்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு.
    திருமதி சுனிதாவின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை

    பலன் தந்திருக்கிறது. உண்மையிலேயே மிகப் பாராட்டத் தக்க பெண்.
    அடையாறு செல்லும் போதெல்லாம், இந்த இனத்தவரைக்
    கண்டு ,மனம் வருந்தும்.
    பிறகு கல்வி போதிக்கப் படுவதாகப் படித்தேன்.
    அந்த நன்மையிலும் இவர் இத்தனை சிரமப்
    பட்டிருக்கிறார்.
    நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அம்பை அவர்களது கதைகள் என்னிடமும் இருக்கின்றன.
    ஜீவி அவர்கள் ஆராய்ந்து கச்சிதமாகச் சொல்லி இருக்கிறார்.

    அம்பை பெயருக்கு ஏற்ற மாதிரி சிறு கோபம் இழையோடும்
    கதைகள் எழுதி இருக்கிறார்.
    பெண்களுக்கான ஆதங்கமும் வெளிப்படும்.
    அருமையான படைப்பாளிக்குக் கிடைத்த பெரிய விருது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த 'கச்சிதமாக' என்ற கணிப்பு எனக்குப் பிடித்திருந்தது.

      'பெயருக்கு ஏற்ற மாதிரி சிறு கோபம் இழையோடும்' -- ஆஹா. எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள்?

      தங்கள் வாசிப்பு அனுபவங்களை நான் அறிவேன். தில்லானா மோகனாம்பாள்
      கதைக்கு கோபுலு போட்ட சித்திரங்களை ரசித்து நீங்கள் பகிர்ந்து கொண்டதெல்லாம் நினைவிருக்கிறது. அக்கறையுடனான வாசிப்பு என்னன்ன அனுபவங்களையெல்லாம் தரும் எனறு உங்கள் மூலம் நான் தெரிந்து கொண்ட காலம் அது.

      மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  4. அப்துல்லா கதீஜா தம்பதியினரின் அற்புத பெருந்தன்மை,
    அன்பு கருணை எல்லாமே அதிசயிக்க வைக்கின்றன.

    அந்தப் பெண் ராஜேஸ்வரி மிகவும் கொடுத்து வைத்தவர்.

    இறைவன் இவர்கள் அனைவரையும்
    ந்புடன் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. சுனிதாவின் வாழ்க்கை, அப்துல்லா கதீஜா தம்பதியினர் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடிக்கொண்டது மனதை மிகவும் மகிழ்விக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. சுனிதாவின் வாழ்க்கை சிறக்கட்டும்.

    எல்லா மனிதர்களும் சிறப்பானவர்களே...

    பதிலளிநீக்கு
  7. சுனிதா அவர்களின் எண்ணமும் முயற்சியும் சிறப்பு...

    முகத்தை தேர்ந்தெடுக்கும், நிறத்தை தேர்ந்தெடுக்கும், உரிமை உன்னிடத்தில் இல்லை - இல்லை...

    பிறப்பை தேர்ந்தெடுக்கும், இறப்பை தேர்ந்தெடுக்கும், உரிமை உன்னிடத்தில் இல்லை + இல்லை...

    எண்ணிப் பார்க்கும் வேளையிலே - உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு - அதை வென்று எடு...

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அருமை.

    திருமதி சுனிதாவின் மனோதிடமும் தன்னம்பிக்கையும் போற்றத் தகுந்தவை.

    வேறு மதமாக இருந்தும் ராஜேஸ்வரியை தன் மகளாக வளர்த்து நல்லபடியாக திருமணம் செய்வித்து தந்திருக்கும் திரு.அப்துல்லா கதீஜா தம்பதியினரை மனமாற வாழ்த்துவோம். நல்லவர்களின் செயல்கள் என்றும் நலமாகவே விளையும். பாராட்டுகள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நான் படித்த கதைப்பகுதியில் சகோதரர் ஜீவி அவர்கள் எழுதிய விமர்சனம் நன்றாக உள்ளது. நல்ல தெளிவாகவும், கதையின் சாராம்சம் கொஞ்சமும் குறையாமலும் எழுதியுள்ளார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.

    அம்பை அவர்கள் எழுதிய இந்தக் கதையை நான் படித்திருக்கிறேன்.இறைவன் படைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். தான் கறுப்பு என்பதற்காக மனம் நொந்து போகும் அந்த சிறுமியின் மனநிலையை அவர் கதையில் அழகாக விவரித்திருப்பார். அவருக்கு கிடைத்த விருதுக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாசிப்பு அனுபவம் நிறைவாக இருந்தது சகோதரி.

      பலருக்கு தேவன், சுஜாதா என்று வேறொரு செக்‌ஷன் வாசிப்பு தான் கிட்டியிருக்கிறது.

      அம்பை அறிமுகமாகியிருப்பது குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டுமே. அதில் நீங்களும் ஒருவர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. அறுபதுகளில் சித்தப்பா வீட்டுக்கு அடிக்கடி வந்து வந்து போய்க்கொண்டிருந்ததன் விளைவாக நான் வாசகர் வட்டத்தால் அப்போது வெளியிடப்பட்ட அனைத்து நூல்களையும் படிச்சிருக்கேன். அவற்றில் "சாயாவனம், சா.கந்தசாமி, ஒரு புளிய மரத்தின் கதை, சுந்தர ராமசாமி, கிருத்திகாவின் வாசவபுரம், தி.ஜானகிராமனும், சிட்டியுமாகச் சேர்ந்து எழுதிய நடந்தாய் வாழி! காவேரி போன்ற பல நூல்களை வாசிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. இவற்றில் சில புத்தகங்கள் என்னிடமும் இருந்து பின்னர் தொலைந்து விட்டன.

      நீக்கு
    3. ஆனாலும் எனக்கு மனதில் ஆறுதலும் தெளிவும் தருபவை தேவன், கல்கி. எஸ்விவி ஆகியோரின் நூல்களே!

      நீக்கு
  10. பாசிட்டிவ் செய்திகள் பாசிட்டிவ் தான். கேரளத்தில் மத நல்லிணக்கம் என்பது பாரம்பரியம். இதுவே எப்போதும் தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 

    வெங்கட் அவர்களின் தளத்திலும் பாசிட்டிவ் செய்தி தான். 
    அம்பை கதையை அறிமுகப்படுத்திய ஜீவி சாருக்கு நன்றி.அவர் கதைகள் படித்ததில்லை. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வரி தான் என்றாலும் தவறாமல் குறிப்பிட்டதற்கு நன்றி, ஜெயக்குமார் ஸார். இது இந்தப் பகுதியை நிறுத்தி விடலாமா என்று எபி ஆசிரியர் குழுவை நினைக்க வைக்காமல் இருக்கும். அப்படி ஒரு நினைப்பு வந்ததாலும் குறைந்தபடசம் ஒத்திப் போடவாவது செய்யும்.

      நன்றி, ஸார்.

      நீக்கு
    2. //கேரளத்தில் மத நல்லிணக்கம் என்பது பாரம்பரியம். இதுவே எப்போதும் தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். // அதான் கல்லூரிப் பேராசிரியரின் வலக்கை துண்டாடப்பட்டது போலும்! :(

      நீக்கு
    3. தனிப்பட்ட விரோதத்திற்கும் மத நல்லிக்கணத்துக்கும் என்ன சம்பந்தம்? எல்லாக்கொலையையும் மதம் நோக்கியா செய்கிறார்கள்? என் வீட்டு பக்கத்து வீடு ஒரு கிறிஸ்துவ பேராசிரியருடையது. எதிர்த்த வீடு ஒரு முஸ்லீம். இது இல்லாமல் நிறைய "கடவுள் மறுப்பு" கம்யூனிஸ்டுகள் அடுத்து இருக்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாய் தான் இருக்கிறோம். முஸ்லீம் மசூதிகளில் ஆற்றுக்கால் பொங்கல் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு இருப்பிட, உணவு வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த மதம் நோக்கி பிரிக்கும் வேலை இந்த பிஜேபி வந்ததுக்கு அப்புறம் தான்.அது கேரளத்தில் விலை போகாது. 

      நீக்கு
    4. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே! வங்காளப்பிரிவினையின் போதும் பிஜேபி தான் காரணம். இந்திய சுதந்திரத்தின் போது பிரிவுக்கும் பிஜேபி தான் காரணம். அதன் பின்னர் தொடர்ந்து வந்த பல்வேறு போர்கள், தீவிரவாதிகள் தாக்குதல்கள் முக்கியமாய்த் தொண்ணூறுகளிலும் அதன் பின்னரும் நவம்பர் 26 இல் மும்பையில் நடந்த இரு பெரும் தாக்குதல்கள், பார்லிமென்ட் முற்றுகை, எல்லாவற்றுக்கும் பிஜேபி தான் காரணம்.

      நீக்கு
    5. கேரளத்தில் பாரம்பரியமாக இருந்தது பரசுராமரின் ஆட்சியும், மஹாபலியின் ஆட்சியுமே. உண்மையான கேரளத்து மக்கள் இவர்களைத் தான் கொண்டாடுவார்கள். விழா எடுப்பார்கள்.

      நீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தம்பி!

      நீங்கள் செவ்வாய்க் கிழமை கதைப் பகுதியில் அதிக சிறுகதைகள் எழுதியவர். சமீபத்தில் சாகித்ய அகாதமியின் உயரிய விருதைப் பெற்ற எழுத்தாளர் அம்பையின் சிறுகதை ஒன்றினையும் அதற்கான என் விவரிப்பையும் வாசித்தீருப்பீர்கள். இவற்றை வாசித்ததின் அடிப்படையில் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமே! இந்தப் பகுதியில் தொடர்ந்து எழுதப் போகிறவர்களுக்கும் அது ஊக்கப்படுத்துதலாய் இருக்கும் இல்லையா?

      நீக்கு
    2. ஜீவி அண்ணா அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  12. அப்துல்லா கஜீதா தம்பதிகளின் நல்உள்ளத்தை போற்றுகிறோம்.

    சுனீதாவின் ஆசைகள் நிறைவேறி அவர்கள் சமூகம் முன்னேற்றமடைய வாழ்த்துவோம்.

    அம்பையின் கதை மனதை கவலை கொள்ள வைத்தது பல இடங்களில் நிசமும் அதுவே. காட்டில் ஒருமான், வீட்டின் மூலையில் சமையலறை படித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி.

      மனதைத் தொட்ட கருத்தை பதிந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  13. இது என்ன நெகிழ்ச்சியின் சனிக்கிழமையா!..

    பதிலளிநீக்கு
  14. // எங்கள் மக்கள் எளிதில் மாற மாட்டார்கள்!.. //

    என்று திருமதி சுனீதா சொன்னாலும் இங்குள்ளவர்கள் மாறுவதற்கு விட மாட்டார்கள்..

    அவரது நல்லமனம் வெற்றி அடைவதற்கு இறைவன் அருள்வானாக..

    பதிலளிநீக்கு
  15. ஆதரவற்ற நிலையில் இருந்த ராஜேஸ்வரியை வளர்த்து ஆளாக்கி ஹிந்து முறைப்படி திருமணமும் செய்வித்த அப்துல்லா கதீஜா தம்பதியினர் பல்லாண்டு புகழ் கொண்டு வாழ்வார்கள்..

    பதிலளிநீக்கு
  16. பாஸிடிவ் செய்திகள் அருமை! அப்துல்லா-கதீஜா தம்பதிகளின் காருண்யமும் அன்பும் இன்னும் நிறைய மனங்களில் பொங்கிப்பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
  17. ' அம்பையின்' கதைகளை பள்ளி, கல்லூரிகளில் நிறைய படித்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் நூலகங்கள் தான். அந்தக் காலங்களில் அறிவை மேம்படுத்த் விசாலமாக்கியதில் இந்து நூலகங்களின் பங்கு மிஅக் அதிகம். அப்படித்தான் அம்பை முதற்கொண்டு நிறைய எழுத்தாளர்களை அவர்களின் எழுத்தை வாசித்திருக்கிறேன். அம்பையின் சில சிறுகதைகளை ' கலைமகளில்' வாசித்ததாக நினைவு. மறுபடியும் ஊருக்குச் செல்லும்போது அம்பையின் சில தொகுப்புகளை வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வத்தை ஜி.வி விதைத்திருக்கிறார். அவருக்கு இனிய நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, சகோ.

      ஆனால் அம்பை போன்றவர்களை கடந்து வந்தால் நல்லது என்று நினைப்பு தான் அவர் எழுத்துக்களை இப்பொழுது வாசிக்கும் பொழுது
      எனக்குத் தோன்றுகிறது.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஊரடங்குக் கட்டுப்பாடு விரைவில் முற்றிலும் நீங்கி அனைவரும் வழக்கமான இயல்பு வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  19. செய்திகள் இரண்டும் அறிந்தவையே! அதிலும் ராஜேஸ்வரி பற்றி முன்னரே வந்தது. அம்பையின் "அந்திமாலை" வெளிவந்த போதே படித்தேன். இந்தக் கதையும் படித்து அழுதிருக்கேன். ஆனால் ஒரு விஷயம் அம்மாக்களோ/அப்பாக்களோ இப்படி எல்லாம் சொல்வதற்குப் பெண்ணின் நிறம் மட்டும் காரணம் அல்ல. பெண்ணாகப் பிறப்பதே ஒரு மாபெரும் காரணம். பெண்ணெனில் இது இயல்பு, இயற்கை எனத் தெரிந்தும் பெற்ற தாயே அலுத்துக்கொள்வதும், தந்தையும் சேர்ந்து பெண்ணைத் திட்டுவதும் அந்தக் குழந்தை மனதில் இது என்னமோ நாம் செய்த பெரிய தப்புப் போல! இப்போல்லாம் இது போல் வந்திருக்கக் கூடாது போல. இன்னும் நமக்கு வயசாகலைனு சொல்றாங்களோ? எதனால் இது வந்தது என்றெல்லாம் குழம்பித் தவிக்கும். அந்த நேர ஆறுதல் தாயே! அவளே முகம் திருப்பினால்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதையும் படித்து அழுதிருக்கேன். ஆனால் ஒரு விஷயம் அம்மாக்களோ/அப்பாக்களோ இப்படி எல்லாம் சொல்வதற்குப் பெண்ணின் நிறம் மட்டும் காரணம் அல்ல. பெண்ணாகப் பிறப்பதே ஒரு மாபெரும் காரணம். பெண்ணெனில் இது இயல்பு, இயற்கை எனத் தெரிந்தும் பெற்ற தாயே அலுத்துக்கொள்வதும், தந்தையும் சேர்ந்து பெண்ணைத் திட்டுவதும் அந்தக் குழந்தை மனதில் இது என்னமோ நாம் செய்த பெரிய தப்புப் போல! இப்போல்லாம் இது போல் வந்திருக்கக் கூடாது போல. இன்னும் நமக்கு வயசாகலைனு சொல்றாங்களோ? எதனால் இது வந்தது என்றெல்லாம் குழம்பித் தவிக்கும். அந்த நேர ஆறுதல் தாயே! அவளே முகம் திருப்பினால்?//

      அக்கா சூப்பர்!!! நான் அடிக்கடி சொல்வது பெண்ணே பெண்ணிற்கு எதிரி என்று. அது சில சமயங்களில், சில இடங்களில் அம்மாவே கூட. அம்மா ஆகும் போது அக்குழந்தையின் மனநிலை?! அதுவும் அது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது அம்மாவின் வருகையை!!!

      கீதா

      நீக்கு
    2. //பெண்ணே பெண்ணிற்கு எதிரி என்று. // -இப்பயாச்சும் ஒத்துக்கிட்டீங்களே.. ஆணே ஒரு பெண்ணுக்கு ஆறுதல் என்று.

      நீக்கு
    3. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஆறுதல் என்ற நிலை அற்புதம். இல்லையா, நெல்லை?

      நீக்கு
  20. கதையைப் படிச்சுட்டு அழுதிருக்கேன் அந்த நாட்களில். சித்தப்பா கேட்டதற்குச் சொன்னேன் பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கு இது இயற்கை என்னும்போது பெற்றோர் இப்படி நடத்தும் காரணத்தை நினைத்துத் தான் என்றேன். அநேகமாய் அம்பையின் எல்லாக் கதைகளுமே படித்திருப்பேன். சௌம்யா ஸ்வாமிநாதன் இவர் உறவினர் என்பது தற்போது தான் தெரிய வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே கதையை இப்பொழுது அம்பை Rewrite மாதிரி எழுதினால் இன்னும் சிறப்பாக எழுதுவார் என்பதே என் எண்ணம்.

      நீக்கு
    2. நேற்று அவசரத்தில் சௌம்யா ஸ்வாமிநாதன் அம்பைக்கு உறவுனு தவறாச் சொல்லி இருக்கேன். கவனம் இல்லாமையும் ஒப்பிடலில் குழப்பமும் தான் காரணம். கிருத்திகா அவர்களுக்குத் தான் சௌம்யா ஸ்வாமிநாதன் உறவு. அவரோட கதை வாசவபுரமே நேற்றெல்லாம் காரணமே இல்லாமல் மனதில் வந்து போனது.

      நீக்கு
  21. இந்தக் கறுப்புப் பெண்ணின் அழகை வர்ணித்து வந்திருந்த விகடன்(?) கதை ஒன்றைப் பற்றி நான் சிலாகித்து எழுதி இருந்த பதிவு "என் கையில் விழுந்த சாக்லேட்!" சுப்புத்தாத்தாவுக்குப் பிடிக்காத பதிவாகவும் அது அமைந்தது. ஆனால் நான் விடலையே! ஒரே பிடிதான்! :)))) அதே சுப்புத்தாத்தா இப்போ முழுக்க முழுக்க மாறி விட்டார். :))))) நான் அன்னிக்கும்/இன்னிக்கும்/என்னிக்கும் மாறவே இல்லை. :(

    பதிலளிநீக்கு
  22. https://sivamgss.blogspot.com/2008/03/blog-post_24.html நான் எழுதிய பதிவையும் அதில் சுப்புத்தாத்தாவின் கமென்டையும் பின்ன்ன்ன்ன்ன்ன்ன்னர், 2016 ஆம் ஆண்டில் சுமார் எட்டாண்டுகள் கழித்து ஶ்ரீராம் போட்ட கருத்தையும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  23. https://sivamgss.blogspot.com/2008/03/blog-post_27.html சுப்புத்தாத்தாவுக்கு நான் சொன்ன பதிலும் அவர் கொடுத்த தன்னிலை விளக்கமும்(?) அப்படி ஒண்ணும் பெரிசாவெல்லாம் வாக்குவாதம் செய்யலை என்பதும் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இரு சுட்டிகளுக்கும் போய் பார்க்கிறேன் கீதாக்கா...

      கீதா

      நீக்கு
    2. கீதாக்கா வண்ணதாசனின் அகம் புறம் - குறிப்பிட்ட பகுதி வெகு அருமை. என்ன எழுத்து! பெண்ணைப் பற்றிய வர்ணனையும் அதன் பின் தொடரும் உரையாடல்களும் எந்தவித கல்மிஷம், விகல்பமான எண்ணங்கள் இல்லாமல். அருமை...

      ஹூம் ஹாட் விவாதம் எதுவுமே இல்ல...புஸ்!! ஹாஹாஹாஹா...பரவால்ல...

      இரண்டாவது சுட்டியில் நீங்கள் உங்கள் விளக்கத்தைச் சொல்லி எழுதியிருந்த் மேற்கோள்கள் எல்லாமே வெகு சிறப்பு கீதாக்கா. அதானே..

      ஆனா ஒண்ணு. இப்ப மட்டும் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" ன்னு கல்மிஷம் இல்லாம இந்த "மீ டூ" பத்தி விவரம் உள்ள பொண்ணுக யார்கிட்டவாவது சொல்லிட்டா எங்கியாச்சும் "மீ டூ" ல போட்டு விட்டுருவாங்களோ?!!!!!

      கீதா

      நீக்கு
  24. ராஜேஸ்வரியைப் பற்றிய செய்தி மனதை நெகிழ்த்தியதோடு கூடவே சந்தோஷமும். அவரை வளர்த்து ஆளாக்கி அதோடு அவரது பிறப்பாலான மதத்தையும் மதித்துஅவ்வழியிலேயே திருமணமும் செய்வித்த அப்துல்லா கதீஜா தம்பதியினரை எவ்வளவு பாராட்டினாலும் அளவில்லை. வார்த்தைகள் இல்லை. அல்லா அவர்களுக்குத் துணையாக இருப்பார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. சுனீதா பற்றிய செய்தியும் அருமை. முன்பே இச்சமூகத்தில் ஒரு பெண் கல்லூரி சென்று படித்து வந்தது குறித்து வாசித்த நினைவு அப்பெண் இவர்தானோ...இதேதான் ஊர் ஊராகச் சென்று வாழும்நாடோடிகள் படிக்கக் கஷ்டபப்ட்டு என்றெல்லாம் எங்கோ வாசித்த நினைவு..

    சுனிதா தன் சமூகத்தை மாற்ற நினைத்தலில், அவரது நல்ல மனம் வாழ்க! வெற்றி பெற வாழ்த்துகள் அவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஜீவி அண்ணாவின் பிடித்த கதை பற்றிச் சொல்லிய விதம் அருமை.

    இது வரை அம்பை அவர்களை படத்தில் கூடப் பார்த்ததில்லை. வாசித்து வந்ததுமே இது அம்பையின் கதையோ என்று யூகிக்க வைத்தது. காரணம் பானுக்கா எனக்கு அம்பை எழுதிய கதைகள் புத்தகம் ஒன்று கொடுத்தார். அதை வாசித்திருந்ததால்.

    அவரது கதைகளில் கோபம் குறிப்பாகப் பெண்கள் பற்றி எழுதும் போது ஃபெமினிஸ்ட்டாக வரும் கோபம் இழையோடும். யதார்த்த கோபம் தான். அப்போது மஹாபாரதத்து அம்பை நினைவுக்கு வந்தாள். அட! இவரும் தன் பெயரை அம்பை என்று வைத்துக் கொண்டிருப்பது பொருத்தமாகிருக்கே என்று நினைத்தேன்.

    ஜீவி அண்ணா இக்கதையைப் பற்றி மிக அழகாகத் தன் பாணியில் சொல்லியிருக்கிறார். ஷார்ப்பாகவும் சொல்லியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணைச் சார்ந்து பெண்
      பெண்ணைச் சார்ந்து ஆண்
      என்பது அற்புத நிலை.
      ஆனால் இதையெல்லாம் ஒப்புக் கொக்கிறவர் இல்லை அம்பை.
      ஆண் பெண் உறவு என்று எழுதாமல்
      பெண் ஆண் உறவு என்று எழுதுவதிக் கவனமாக இருப்பேன் என்று சொல்பவர் அவர்.

      நீக்கு
  27. அம்மா ஒரு கொலை செய்தாள் - தலைப்பே சுரீர். அதன் அர்த்தம் கதையில் என்ன வரும் என்பதை ஓரளவு யூகிக்க முடிந்துவிடும். அதாவது தன் பெண்ணைப் பற்றிய ஒரு அம்மாவின் ஆதங்கம், கவலை கடைசியில் எப்படி முடிகிறது என்பது.

    //'அவ்வளவு தானா இவள் சிறுமிப் பருவம்' என்ற ஆதங்கம் , 'என்னடீ அவசரம்?' என்று பதற வைத்து விட்டது. 'இனிமே இது ஒரு பாரம்' என்று உணர்ந்த பொறுப்பு அடுத்த கட்டத்திற்கான பருவத்தின் நகர்வு நிதர்சனத்தை உணர வைத்த உணர்வு. //

    இந்த உணர்வு ஏறக்குறைய கொஞ்சம் முன்னமே இதோ கீழே உள்ள வரியில் வெளிப்பட்டுவிடுகிறது. இன்னதுதான் என்று இல்லாவிட்டாலும்...

    'நீ இப்படியே இருடீம்மா.. பாவாடையை அலைய விட்டுண்டு, ஓடி ஆடிண்டு...' என்பது அளப்பரிய ஆசை நிறைந்த அம்மா மனசின் மொள்ளக் மொள்ளக் குறையாத அன்பின் விகசிப்பு.//

    இதிலேயே அம்மாவின் மனதில் மறைந்திருக்கும் அந்த வருத்தம் தெரிந்துவிடும். அந்த மறைமுகமாக உள்ளில் இழையோடிக் கொண்டிருக்கும் அந்த வருத்தம்,. சகோதரியின் பெண் கறுப்பு என்பதால் நிராகரிக்கப்படுவதில் ஊர்ஜிதமாகிறது. அது இப்போது பட்டவர்த்தனமாக வார்த்தைகளில்...இப்படியே இருந்துடு என்று சொன்னதன் விரிவாக்கம் தான் அடுத்து வருவது அவள் பருவமடைந்ததும்...

    நீங்கள் அழகாக உங்கள் கருத்தில் சொல்லியிருக்கிறீர்கள் ஜீவி அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி, சகோதரி..

      நீக்கு
  28. கறுப்பு ஒரு குறையாக இருந்த காலத்தில் எழுதப்பட்ட கதை ...ஆம் நீங்களும் சொல்லியிருக்ககிறீர்கள்.

    //அத்தை மகள், மாமன் மகன் என்று உறவில் திருமணம் முடிப்பது உரிமையாய் இருந்த காலம் அது. காலத்தின் மாற்றத்தில் சுனாமியாய் எல்லாம் அடித்துப் போகப்பட்ட காலமும் இது தான்.//

    ஆமாம். என்றாலும் இப்போதும் ஒரு சில குடும்பங்களில் நடக்கிறது. முதலில் அத்தை மகன் மாமன் மகள் இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறியாகிவிடும் காலம் நெருங்கியாச்சே.

    நல்ல அழகான விமர்சனம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. பானுக்கா கொடுத்த அம்பையின் கதைப் புத்தகத்தை வாசித்து 3 வருடங்கள் ஆகிறது...மீண்டும் வாசித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைத்த விமர்சனம்

    கீதா

    பதிலளிநீக்கு
  30. அம்பையின் கதை, சமீபத்தில் வெளி வந்த த க்ரேட் இண்டியன் கிச்சன் - மலையாளப் படம் நினைவுக்கு வந்தது. அதில் கரு வேறு என்றாலும் பெண்ணின் மனநிலை பற்றிய ஒரு படம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. கூடவே ஒன்று. இப்போதெல்லாம் கல்யாணச் சந்தையில் - சந்தை என்று சொல்வதற்கு மன்னிக்கவும் ஆனால் அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது அதுவும் பெண்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுபவை - ஆண் பிள்ளைகள் மாநிறமாக இருப்பதே கூட கறுப்பு என்றும் நிராகரிக்கப் படுகிறார்கள். கொஞ்சம் பூசினாற்போல இருந்தாலும்...ஆண் பிள்ளைகளுக்கு இப்போது போறாத காலம் போலும்!!!!!
    '
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை எழுதி உங்கள் எல்லோரின் கோபத்தையும் வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. ஆண், பருவ வயதில் சுமாராத்தான் இருப்பான். ஆனால் போகப் போக அவனின் கம்பீரம் அழகு கூடிக்கொண்டே செல்லும். பெண் மிக அழகாக இருப்பவள்... 30 தாண்டத் தாண்ட அழகு குறைந்துகொண்டே வரும். இது பணிச்சுமை மற்றும் இயற்கையின் காரணம் என்பது உண்மைதான். இருந்தாலும் பெண்ணின் அழகு நிரந்தரமல்ல. அதனால் 'நிறம்..அளகு' இதைப் பார்த்து பெண் யாரையேனும் நிராகரித்தால்... அப்புறம் பிற்காலத்தில் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இன்னும் வருத்தப்படுவாள் ஹா ஹா

      நீக்கு
    2. இதற்கு விதிவிலக்குள் உண்டு. அதனால் 'விதிவிலக்குகளைத்' தூக்கிக்கொண்டு சண்டைக்கு வராதீர்கள். இது இயற்கையின் நியதி.

      நீக்கு
    3. உண்மையை எழுதி உங்கள் எல்லோரின் கோபத்தையும் வாங்கிக்கொள்ள விரும்பவில்லை.//

      ஹாஹாஹாஹாஹா அதான் சொல்லிட்டு அப்புறம் எதுக்கு இந்த சாச்சுட்டரி வார்னிங்க்!!!

      // ஆண், பருவ வயதில் சுமாராத்தான் இருப்பான். ஆனால் போகப் போக அவனின் கம்பீரம் அழகு கூடிக்கொண்டே செல்லும்.//

      கண்டிப்பாக...இதை அப்படியே டிட்டோ செய்கிறேன்.

      ஆனால் ஒன்றே ஒன்று மனமும் நல்லதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கம்பீரமும் கண்களுக்கு அழகாகத்தெரியும். இல்லை என்றால் நோ யூஸ்!

      இதேதான் பெண்களுக்கும். அழகை விட அக அழகு இருந்தால், நல்ல சிந்திக்கும் திறன் இருந்தால் வயதான பிறகும் கூட அந்த முகம் களையோடு இருக்கும். மதிக்கும் படிதான் இருக்கும்.

      அங்க லட்சணங்கள் இல்லை என்றாலும் அறிவுக் களை, குணம் ஈர்க்கும்! இதுவும் இயற்கையின் நியதி! எண்ணங்கள் அழகானால்....இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்துத்தான்.!!!! எந்த வயதானாலும்!!!!!

      சண்டைக்கு எல்லாம் இல்லை. இதுதான் யதார்த்தம்

      கீதா

      நீக்கு
    4. அழகு கம்பீரம் பற்றி நெல்லை சொல்லி இருப்பது யதார்த்தமான உண்மை.

      நீக்கு
    5. //மனமும் நல்லதாக இருக்க வேண்டும்.// - நான் சொல்லியிருப்பது முதல் impressionதான். அதாவது சுமாராக இருக்கும் பெண் (எந்த வயதாக இருந்தாலும்) ஈர்க்கமாட்டாள், நமக்கும் நல்ல அபிப்ராயம் இருக்காது. அழகான ஆண்/பெண் சூப்பர் என்றுதான் நம் மனதில் தோன்றும். ஆனால் பழகிய பிறகு குணமே மற்ற எல்லாவற்றையும் தீர்மானிக்கும். நல்ல குணம் இருப்பவங்க, எப்படி இருந்தாலும் (அழகே இல்லாமல் இருந்தாலும்) மனது அதனைக் கவனியாது. அவங்க நல்ல குணம் மட்டும்தான் நம்ம மனதில் இருக்கும். நல்ல அழகானவங்க (ஆணோ பெண்ணோ) குணம் சரியில்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், பிறகு அவங்க அழகு நம்ம மனசுல இருக்காது. மோசமான குணம்தான் மனதில் தோன்றி அவங்கமேல நமக்கு ஈர்ப்போ அன்போ இருக்காது.

      நான் சிலரை (வெளிநாட்டினர்) பார்த்த மாத்திரத்தில் பிடிக்காமலும், பிறகு அவங்க குணத்தைக் கண்டபிறகு அவங்கமேல ரொம்ப மரியாதை வந்ததையும் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  32. அன்பின் சகோதரி கீதா அவர்கள் சொல்லியிருப்பதைப் போல் - கறுப்பு ஒரு குறையாக இருந்த காலத்தில் எழுதப்பட்ட கதை ..

    என்றாலும் இப்போது மட்டும் மாறியிருக்கின்றதா?.. என்றால்
    காசு பணம், வசதி வாய்ப்பு இவற்றால் அதெல்லாம் ஓரளவுக்குப் பூசி மெழுகப் படுகின்றது என்கின்றார்கள விஷயம் அறிந்தவர்கள்..

    இன்றைக்குப் படித்தது கதை தான் என்றாலும் கறுப்பு நிறமான பெண்கள் எத்தனை எத்தனை வேதனை அனுபவித்திருப்பார்களோ ...

    இந்த மாதிரி உரு கண்டு எள்ளி நகையாடும் விஷயங்களை நான் ரசிப்பதில்லை.. உள் ஆறாத வடு அல்லவா அப்படியான வார்த்தைகள்..

    அதிலும் இப்படியான வசைச் சொற்கள் மற்றவர்களிடத்தில் இல்லாத மாதிரி குறிப்பிட்ட சமுதாயத்தில் புழங்குவதாக இழுத்து விட்டிருப்பது வேதனை...

    சமீப கால திரை வசனங்களில் பிறரை அவமரியாதை செய்கின்றபடிக்கு எத்தனையோ.. அவற்றைப் பற்றி இங்கு பேசுவதற்கில்லை..

    ஒவ்வொரு புள்ளிக்கும் 360 பாகை.. அதைப் போல இந்தக் கதையைப் பற்றிய எனது கருத்தை மேலே சொல்லி இருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு பணம், வசதி வாய்ப்பு இவற்றால் அதெல்லாம் ஓரளவுக்குப் பூசி மெழுகப் படுகின்றது என்கின்றார்கள விஷயம் அறிந்தவர்கள்..//

      துரை அண்ணா இது உண்மைதான்.

      //இந்த மாதிரி உரு கண்டு எள்ளி நகையாடும் விஷயங்களை நான் ரசிப்பதில்லை.. உள் ஆறாத வடு அல்லவா அப்படியான வார்த்தைகள்..//

      ஆமாம் அண்ணா. அதான் கீதாக்காவும் கருத்தில் சொல்லிருக்காங்க. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் ரொம்பவே இருந்த காலம் உண்டு. இப்போது குறைந்திருக்கிறது என்றாலும் உண்டு. எங்கள் குடும்பத்திலேயே என் வட்டத்திலேயே கூட இருக்கிறது. அப்படிச் சொல்லப்படுபவர்கள் பட்டியலில் நானும் உண்டு. சில வசனங்கள் பேசப்படுவதும் உண்டு. அவை எதுவும் என்னை பாதித்ததில்லை.

      நீங்கள் சொல்லியிருப்பது போல் திரை வசனங்களில் உருவத்தையும் நிறத்தையும் வைத்து நகைச்சுவை என்ற பெயரில் பேசுவது மிகவும் அநாகரீகம். டக்கென்று நினைவுக்கு வந்தது ரஜனி நடித்த சிவாஜி படத்தில் வந்த ஒரு சீன். இடியாட்டிக்!

      கீதா

      நீக்கு
    2. தம்பி, இந்தக் கதை வெளிவந்த கால கட்டம் 1971.
      நான் புதுவையில் அரசுப் பணியாற்றியது 1963 காலத்தில்.

      அப்பொழுதே பெண்ணின் கறுப்பு நிறத்தை என் நண்பர் எவ்வளவு ஆசை ஆசையாக என்னிடம் வர்ணித்திருக்கிறார் பாருங்கள்...

      'இத்தனையும் இருந்தென்ன -- ரங்க நாயகி
      நீ என் அத்தை மகள் இல்லையே ரங்க நாயகி. '

      எவ்வளவு மன ஏக்கம்! இன்றும் என்னால் மறக்க முடியாத கவிதை வரிகள் இவை தம்பி!..

      நீக்கு
    3. உருக்கண்டு எள்ளி நகையாடுவதா? __
      அப்படி ஏதும் அம்பையின் கதையில் இல்லையே தம்பீ!

      ஒரு தாயின் மனக்கலக்கமே கதையாகியிருக்கிறது.

      நீக்கு
  33. கதீஜா/அப்துல்லா தம்பதி வணக்கத்துக்குரியவர்கள். இத்தகையோர் வாழ்ந்த, இன்னமும் ஆங்காங்கே வாழ்கின்ற நல்ல நாடுதான் பாரதம். அரசியல்பேதிகளும் அவர்களின் அடிமை மீடியாக்களும் இத்தகைய மனிதத்திற்கு நேர் எதிரான காட்சிகளைக் கட்டமைத்துப் போட்டுப்போட்டுக் காட்டி, அபத்தமாக எழுதி சமூக சீரழிப்பில் கவனம் செலுத்துகின்றன. கால வேதனை. தமிழகத்திற்காக நீளும் சோதனை..

    அம்பை. ஜீவிசார் இவரை இன்று இங்கு கொண்டுவந்தது சரி. அம்பையின் சில கதைகளை வாசித்திருக்கிறேன். அவரைப்பற்றி ஒரு கட்டுரையும் எழுதி வைத்திருக்கிறேன் -வேறுசில கட்டுரைகளோடு பதிப்பிற்குக் காத்திருக்கிறது. சொல்வனம் இணைய இலக்கிய இதழ் ’அம்பை சிறப்பிதழ்’ ஒன்றை இரண்டாண்டுகளுக்கு முன் கொண்டுவந்தது. அவரின் அனுமதி கேட்டதில் அவர் முதலில் தயங்கினாராம். எனக்கா சிறப்பிதழ்? வேண்டாமே .. என்பதாக. ஆசிரியர்கள் பேசி ஒருவழியாக சம்மதிக்கவைத்து அதில் அவரையும் கட்டுரை எழுதவைத்து வெளியிட்டார்கள். படிக்க நிறைய விஷயங்கள் அதில். போய்ப் பார்க்கலாம்: solvanam.com

    எனக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்களாக ஆர்.சூடாமணி, ராஜம் க்ருஷ்ணன், அம்பை எனச் சொல்லலாம். வாஸந்தியின் (தமிழ்) இந்தியா டுடே கட்டுரைகள் கவனத்தைக் கவர்ந்தன அப்போது. அவரின் சிறுகதைகளை வாசித்துப் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவரை இன்று கொண்டு வந்தது சரி..//

      அம்பைக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததைத் தொடர்ந்து என்ற அர்த்ததிலா, சார்? இந்த விருது அவருக்கு கிடைப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்பே இந்தக் கட்டுரையை ஸ்ரீராமிற்கு அனுப்பி விட்டேன். Just FYI Sir.

      நீக்கு
    2. ஏகாந்தன் அண்ணா நீங்கள் உங்கள் தளத்தில் அம்பையைக் குறித்துக் கொஞ்சம் எழுதியிருந்தீங்க. நினைவு இருக்கிறது. அவரைப்பற்றியும் கட்டுரை எழுதியிருக்கீங்களா?

      ராஜம் கிருஷ்ணன் அவர்களின் கதைகளும் பெண்ணை மையமாக வைத்துதான் இருக்கும். கதையின் பெயர் டக்கென்று நினைவில் இல்லை. பொதுவாகவே அவங்க தான் எழுதும் கதைக்காக அங்கு சென்று தங்கி அவர்கள் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கி,அவர்களோடு பழகி அனுபவங்களை அறிந்து உணர்வு பூர்வமாகக் கொண்டு வருவார். ஒரு கதையில் முன்னுரையில் இது சொல்லப்பட்டிருக்கும். அவரைப் பற்றி வாசித்த போது பிரமிப்பாக இருந்தது!

      கீதா

      நீக்கு
    3. ..அம்பைக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததைத் தொடர்ந்து என்ற அர்த்ததிலா, சார்?//

      இல்லை.

      நீக்கு
    4. @ கீதா: ..அவரைப்பற்றியும் கட்டுரை எழுதியிருக்கீங்களா?//

      ஒரு மின்னூலுக்காக சில கட்டுரைகள் கிட்டத்தட்ட தயார்நிலையில். அதில் அம்பை, ராஜம் க்ருஷ்ணன் போன்றோர் இருக்கிறார்கள். எப்போது வெளிச்சம் காணுமோ!

      நீக்கு
    5. எனக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்கள் பற்றி 2,3 பதிவுகள் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் எழுதி இருந்தேன். அதில் குமுதினியில் ஆரம்பித்து அவர் மருமகள் பிரேமா நந்தகுமார், அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, வை.மு.கோ. லக்ஷ்மி, என ஒரு பெரிய பட்டியலே உண்டு. வசுமதி ராமசாமியை இன்றைய வாசகர்கள் பலரும் கேள்விப் பட்டிருக்க மாட்டாங்க. இவங்களோடு சரோஜா ராமமூர்த்தி என்னும் ஒருவரும் எழுதுவார். இவர்களைத் தவிர்த்துத் தற்கால/நடுவண்கால எழுத்தாளர்கள்(பெண்கள்) எனப் பலரும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.

      நீக்கு
  34. இப்போது எழுதும் {புதிய(!)} பெண் எழுத்தாளர்களில் - கமலதேவி, கலைச்செல்வி, பானுமதி.ந. ஆகியோரின் சிறுகதைகள் இலக்கியத் தரமானவை. பார்க்கலாம் இவர்களது எழுத்துகளை - சொல்வனம், பதாகை போன்ற இலக்கிய ஏடுகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோன்ற அறிமுகங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.  ஏனெனில் இப்போதைய கதைகளை ஊன்றி, தொடர்ந்து  யாரும் படிக்கிறார்களா என்பதே கேள்விக்குறி.

      நீக்கு
    2. நன்றி ஏகாந்தன் அண்ணா. பானுமதி.ந அவரின் எழுத்தைச் சமீபத்தில்தான் பார்த்தேன்.

      கீதா

      நீக்கு
    3. தற்கால பெண் எழுத்தாளர்களில் பெண்ணியல் சார்ந்த எழுத்துகு அ. வெண்ணிலாவின் பங்கு பிரமாதம்.
      அவரது 'பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்' -- யாராவது வாசித்திருக்கிறீர்களா?

      நீக்கு
    4. அ.வெண்ணிலாவின் ‘நீரதிகாரம்’ எனும் தொடர் ஆனந்தவிகடனில் வருகிறது. யாராவது படிக்கிறீர்களா? எப்படி எழுதுகிறார் எனச் சொல்லமுடியுமா?

      நீக்கு
    5. இல்லை, சார். இருந்தாலும் வாசிக்க முயற்சிக்கிறேன்.
      அறிமுகத்திற்கு நன்றி.

      நீக்கு
    6. கமலதேவியை நேரில் பார்க்கவில்லையே தவிர்த்து சில ஆண்டுகள் முன் வரை நல்லதொரு தோழி! இப்போது தொடர்பில் இல்லை. பதாகையிலிருந்து தொடர்ந்து மின் மடல்கள் மூலம் வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

      நீக்கு
  35. லஷ்மி கதைகள் தவிர வேறு பெண் எழுத்தாளர்கள் கதைகளை நான் தொடர்ந்து படித்ததில்லை. அவ்வப்போது சிவசங்கரி ஒன்றிரண்டு, அனுராதா ரமணன், வாஸந்தி, ஒரு இந்துமதி என்று படித்ததுண்டு.

    பதிலளிநீக்கு
  36. தன் பெண் பருவமடைந்த நேரத்து அந்தப் பெண்ணின் தாயின் உணர்களை வைத்து நானும் ஒரு கதையை எழுதி அது 1965 காலத்தில் பிரசுரமாகி அதுவும் எபியில் ஒரு செவ்வாய்க்கிழமை கதையாக வெளிவந்து....

    ஒரே சப்ஜெக்ட் தான். இருந்தும்
    இந்த அம்பை கதைக்கும் அந்த என் கதைக்கும் அப்பொழுதும் இப்பொழுதும் போடப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது.

    மறதி எனக்கு அதிகம் என்று சொல்கிறாரே தவிர ஸ்ரீராமிற்கு என்ன கதை எப்பொழுது அது எபியில் வெளிவந்தது என்ற விஷயங்களெல்லாம் ஸ்ரீராமிற்கு அத்துப்படி... :))

    பதிலளிநீக்கு
  37. நரிக்குறவர் இனத்திலிருந்து படித்து மேல் நிலைக்கு வந்திருக்கும் சுனிதாவின் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

    ராஜேஸ்வரியை வளர்த்து ஆளாக்கி ஹிந்து முறைப்படி திருமணமும் செய்து கொடுத்திருக்கும் அப்துல்லா, கதீஜா தம்பதியர் போற்றத் தக்கவர்கள். இதைப்பற்றி முன்னர் படித்த பொழுது இதற்கும் அரசியல் சாயம் பூசக்கூடாதே என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் வந்த பெண் பெயர் பானுமதி என நினைக்கிறேன். அம்பத்தூரைச் சேர்ந்தவர் என்றும் நினைவு.

      நீக்கு
  38. அம்பையின் கதையை ஒரிஜினாலிடி கெடாமல் தந்திருப்பதற்கு ஜீ.வி.சாரை பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, பா.வெ.

      அம்பையின் எழுத்தில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அவரின் எழுத்தை எடுத்தாண்டு அவத் கதையை வாசிப்புக்கு உள்ளாக்கும் பொழுது என் சொந்த கருத்துக்கள் தலை காட்டாதவாறு தவிர்த்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும்.

      நீக்கு
  39. இன்று இங்கு இலக்கியம் ஓடிக்கொண்டிருப்பது இதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, அவ்வப்போது இப்படி ஏதானும் அதிசயம் நடந்துடும். நமக்கே நம்பிக்கை வராது.

      நீக்கு
  40. அ.வெண்ணிலாவின் கவிதை ஒன்று:

    மூஞ்சூறு,பசு
    மயில்,எருமை என
    விதவிதமான
    வாகனமேறி உலகம்
    காக்கிறார்கள்
    ஆண் கடவுள்கள்.
    பெண்கடவுள்கள் மட்டும்
    பின் தொடர்ந்தே நடந்திருக்கிறார்கள்.
    சினந்து வெகுண்டெழுந்த காளிக்கு
    சிங்கத்தை வாகனமாக்க,
    துரதிர்ஷ்டவசமாக
    சிங்கத்தை அடக்குவதே
    காளியின் வேலையாயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆந்தை மஹாலக்ஷ்மிக்கும். அன்னம் சரஸ்வதிக்கும் வாகனம் என்பதை மறந்துட்டார் போல! எனினும் சிங்கத்தை அடக்குவதும் ஓர் கடினமான வேலை தானே!

      நீக்கு
  41. @ ஜீவி அண்ணா..

    // உருக்கண்டு எள்ளி நகையாடுவதா? _
    அப்படி ஏதும் அம்பையின் கதையில் இல்லையே தம்பீ!..//

    கதையில் அப்படியேதும் இல்லை.. அந்தத் தாயின் மனக்கலக்கம் தான் சொல்லப் பட்டிருக்கின்றது...

    நமது வட்டார நடப்பு.. அதற்காகச் சொன்னேன்...

    நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு
  42. @ ஏகாந்தன்..

    // சினந்து
    வெகுண்டெழுந்த காளிக்கு
    சிங்கத்தை வாகனமாக்க,
    துரதிர்ஷ்டவசமாக
    சிங்கத்தை அடக்குவதே
    காளியின் வேலையாயிற்று..//

    கணினி யுகத்தின் காளிகளைச் சொல்கின்றார் போல் இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  43. பெண்ணியல் எழுத்துக்களில் பெண் எழுத்தாளர்களை விட தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சிறப்பாக அழகியல் உணர்வுகளோடு கையாண்டிருக்கிறார்கள் என்பது என் அபிப்ராயம்.

    உதாரணம் நம்ம தி. ஜானகிராமன், ஆர்வி போன்றோர்.

    பதிலளிநீக்கு
  44. பெண்ணியம், ஆணியம் என்றெல்லாம் தேடிக்கொண்டிராமல், மனித வாழ்வுபற்றி உள்ளார்ந்து எதார்த்தமாகப் பேசும் இலக்கிய எழுத்துகளைத் தேடி வாசிப்பதே சிறந்தது. அதை யார் எழுதியிருந்தாலும் சரி. எந்த மொழியிலிருந்து வந்தாலும் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கருத்து.

      ஆண்-பெண் என்று உடல் மொழியில் முரண்படாது----

      மனிதன்- மனுஷி என்ற உயிர் மொழியில் ஒன்ற வேண்டும்.

      நீக்கு
  45. ஆண்களை ஏதோ பெண்ணினத்தித்கான எதிரிகள் போலவே சித்தரிப்பதில் முனைப்புக் காட்டுவதே பெண்ணியலுக்கான எழுத்து என்று நினைக்கும் போக்கே இன்று அதிகம் காணப்படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு சற்றுமுன் பதில் கொடுத்தேன். Blogger சாப்பிட்டுவிட்டது!

      நீக்கு
  46. எனக்கும் இப்படி அடிக்கடி நடக்கிறது ஸார்.

    பதிலளிநீக்கு
  47. இந்த வாரத்தில் குறிப்பிட்ட செய்திகள் சிறப்பு. அம்பை அவர்களின் கதை குறித்த ஜீவி ஐயாவின் பார்வையை மிகவும் ரசித்தேன். அம்பை அவர்களின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை புத்தகம் வாசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  48. நன்றி வெங்கட்ஜி.

    என் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இணையம், வாட்ஸாப் பக்கம் வருவதையெல்லாம் குறைந்த பட்சம் இந்த ஜனவரிக்குப் பிறகாவது
    குறைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

    தங்கள் அன்புக்கு நன்றி. முடிந்த பொழுது பார்க்கலாம்.

    அன்புடன்,
    ஜீவி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!