செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

காற்றினிலே 4 / 6 :: துரை செல்வராஜு

 

முந்தைய பகுதிகள் சுட்டி : பகுதி 1, பகுதி 2 , பகுதி 3, 

அறைக்குள் இருந்த சூழ்நிலை அதிர வைத்தது.. ஆனாலும் மித்ரா பதற்றம் ஏதும் கொள்ளாமல் அவந்திகாவை மெல்ல நெருங்கினாள் ..

" இளவரசி!.. "

அருகில் வந்த  மித்ராவை அப்படியே இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டாள் அவந்திகா..

" இளவரசி.. அமைதி பெறுங்கள்!.. தங்களது சினத்தைத் தாங்கிக் கொள்ள யாராலும் இயலாது!..  " - என்றபடி  அவந்திகாவின் முதுகை வருடிக் கொடுத்த மித்ரா அருகில் கிடந்த சால்வையை எடுத்து போர்த்தி விட்டாள்..

" மித்ரா.. நீ அனுப்பி வைத்தாயே வேலைக்காரன் - அவனுக்கு நான் வேண்டுமாம்.. எனக்கு வங்க மொழியும் தெரியும் என்பதை அறியாமல் என்னை ரசித்தபடி அவனாகவே பேசிக் கொண்டிருந்தான்.. அவனது மொழி விஜய்க்குத் தெரியாததால் அடிதடி நடக்க வில்லை..  கோபமுற்ற நான் -

' என்னடா வேண்டும் உனக்கு!.. எதைப் பார்க்க வேண்டும் நீ?.. ' - என்று சீறியதும் அவன் சுருண்டு விழுந்து விட்டான்..  என்னைப் பார்த்த விஜய்க்கும் மயக்கம்.. நாகவல்லி என் மீது தென்பட்டிருக்கின்றாள்.. இருவரும் குற்றுயிராகி விட்டார்கள்.. நான் பெற்றிருக்கும் இச்சாதாரி சித்தியைத் தான் நீ அறிவாயே!.. "

" அறிவேன் இளவரசி.. அறிவேன்.. ஆனாலும் இந்த வங்காளியிடம் ஏதோ விஷயம் இருக்கின்றது.. நீங்கள்  உஜ்ஜைனி இளவரசர் ஸ்ரீஸ்ரீ விக்ரமாதித்ய வருண் குமார் மீது கொண்டுள்ள அதீத காதல்தான் அதனை உணர்வதற்குத் தடையாக இருக்கின்றது..." மெல்லிய குரலில் தெளிவுபடுத்தினாள் அந்தரங்கத் தோழி..

இக்கட்டான நேரத்திலும் தனது காதலனை மிக்க மரியாதையுடன் குறிப்பிடும்  தோழியின் அன்பு முகத்தை உற்று நோக்கினாள் அவந்திகா..

பணிவுடன் தொடர்ந்தாள் மித்ரா..

" என்னை மன்னிக்கவும்.. இன்று பௌர்ணமி அல்லவா.. மஹேஸ்வர வழிபாடு செய்தாயிற்றா!.. "

திடுக்கிட்ட அவந்திகா - " நாளைக்கு அல்லவா பௌர்ணமி!.. " என்றாள்..

" இன்று நள்ளிரவு இரண்டு நாழிகைக்கு முன்பாகவே பௌர்ணமி திதி தொடங்கி நாளை முன்னிரவில் முடிகின்றது.. "

" இப்போது என்ன செய்வது?.. "

" ஒரு நிமிஷம் விழிகளை மூடி பிரார்த்தியுங்கள்.. அனைத்துப் பிரச்னைகளுக்கும் விடியல் தெரியும்!.. " - என்றாள் அமைதியாக..

ஒரு நிமிடம்.. ஆழ்நிலை தியானம்.. அறைக்குள் மல்லிகையின் வாசம் பரவிற்று.. மகிழ்ச்சியுடன் விழி திறந்த அவந்திகா மித்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்..

" இன்றிரவு இந்த வங்காளியை அழைத்துக் கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்து விடு.. இவனது ஆசையை நிறைவேற்றி விடலாம்.. "

" அங்கு தான்  இப்போது விஷக் கிருமி பரவலால் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு விளக்குகள் கூட ஏற்றப்படுவதில்லையே.. "

" நடக்கப் போவது விபரீதம்.. இதற்கு எதற்கு விளக்கும் விளக்கமும்?.. "

முத்துப் பற்கள் பளிச்சிடச் சிரித்தாள் அவந்திகா.. இந்தச் சிரிப்பைக் கண்டு  எத்தனை எத்தனை வருடங்களாயிற்று!.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மித்ராவுக்கு..

சட்டென உத்தரவுகள் பிறந்தன.. இடுப்பில் கை வைத்தவாறு கம்பீரமாக நின்றிருந்தாள் அவந்திகா ஸ்ரீஷாந்தினி..

இருபது வயதின் எழிலார்ந்த அழகு.. பல நூறு ஆண்டுகளுக்கு முன் பார்த்திருந்த அதே தோற்றம்... 

"  மித்ரா.. கவனமாகக் கேள்.. வருண் இங்கேயே மயக்கத்தில் இருக்கட்டும்.. நான் இப்போது காற்றில் கரைந்து என்னை  மறைத்துக் கொள்கின்றேன்..  இன்னும் சில விநாடிகளில் வங்காளி விழித்து எழுவான்..

ஆனாலும் வருணைப் பார்க்க முடியாது.. நடந்ததெல்லாம் அவனுக்கு  மறந்து போகும்.. அந்த நிலையில்  நீ சொல்வதை எல்லாம் கேட்பான்.. உனது விரல் நுனிக்குக் கட்டுப்பட்டு உன் பின்னாலேயே வருவான்.. பிரம்ம முஹூர்த்தத்தில் எனது கனவு நிறைவேறும்.. பொழுது விடிவதற்குள் இந்த எல்லையை மகிழ்ச்சியுடன் கடந்து விட வேண்டும்!.. "

சொல்லியபடியே  காற்றினுள் ஒளிந்து கொண்டாள் அவந்திகா..

மித்ரா  - இப்போது நீலு என, உருமாறி நின்றாள்..

மயக்கத்தில் இருந்து விழித்தெழுந்த வங்காளி நீலுவைப் பார்த்து  அதிர்ந்தான்..

அவள் இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்..

" எதற்காக இந்தப் புன்னகை?.. " - திகைத்தான்..

" இந்த ஒரு பொழுது மட்டும் தான் உனக்கு!.. " - என்றபடி , சுட்டு விரலை உயர்த்திக் காட்டிய நீலு,  கண்ணைச் சிமிட்டியபடி முன்னால் நடந்தாள்..

" என்ன சொல்கிறாள் இவள்!.. - குழம்பிய வங்காளி ஒரு நொடியில் புரிந்து கொண்டான்..

நீலு.. செம்மஞ்சள் நிறம்.. நல்ல அழகி.. அவள் மீது ஏற்கனவே கண் வைத்திருந்த வங்காளி இப்போது தேன் குடித்த நரி ஆனான்.. எதை எதையோ நினைத்துக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்... அவனது உடம்பில் ஆனந்த அலைகள்.. உள்நாக்கில் தித்திப்பு..

சுற்றியிருந்த வயல்களில் பாம்புகளுக்குத் தப்பியிருந்த தவளைகள் ' கரட்.. கரட்.. ' என்று கத்திக் கிடந்தன..

புளிய மரத்துப் பொந்தில் இருந்து வெளியே வந்த ஆந்தைக்கு திடீரென உற்சாகம் பீறிட -  சந்தோஷத்துடன் அலறியது.. அதைக் கேட்டு திடுக்கிட்ட நாய்கள் அவற்றின் பங்குக்கு குரைத்து வைத்தன..

பாழடைந்த மாளிகையின் வசந்த மண்டபத்தை நோக்கி நீலு செல்வதைக் கவனித்த காவல்  கூண்டின் பெரியவர் - " எங்கேயம்மா இந்நேரத்தில்?.. " - என்றார்..

அவரது கண்களுக்கு நீலு மட்டுமே தெரிந்தாள்...

நீலு திரும்பினாள்..

மித்ரா என - முகங்காட்டி கோரைப் பற்களையும் காட்டி, " உஷ்!..  "- என்றாள்..

அவளைக் கண்டு கிறுகிறுத்த கிழவர் அப்படியே மயங்கிக் கீழே விழுந்தார்..

இன்ப வெள்ளத்தில் நீந்தியபடி வந்த வங்காளி பாழ் மண்டபத்தை நெருங்கியதும் கேட்டான்..

" நீலு.. இங்கே யார் தீப்பந்தம் ஏற்றி வைத்தது?.. "

" ஏன்?.."

பதில் சொல்லவில்லை.. ஆனாலும் - இஞ்சி தின்றதைப் போல இளித்து வைத்தான்..

" உள்ளே போனதும் அணைத்துக் கொள்!.. "

நீலுவின் ஒவ்வொரு வார்த்தைகளும் கற்கண்டாக இனித்தன அவனுக்கு..

பாழ் மாளிகையின் நடுக் கூடத்தை நெருங்கியதும் அங்கிருந்த  மேடையைக் கண்டு அதிர்ந்தான் வங்காளி..

அவனது வயிறு கலங்கியது..

இசை மேடையின் நடுவில் சிம்மாசனம்.. அதில் அவந்திகா ஸ்ரீஷாந்தினி..

" இவள் சாயங்காலம் லாட்ஜூக்கு எவனோ ஒருவனுடன் வந்தவள் ஆயிற்றே!.. இவளுக்கு என்ன வேலை இங்கே!.. ஜிகினா ராணி மாதிரி எதற்கு இந்த  நாடக வேஷம்?.. "

வங்காளியின் எண்ணங்கள் பலவாறு ஓடின..

வெள்ளி இழைகளால் பின்னப்பட்ட காலணிகளில் பதிந்திருக்கும் செங்கமலப்  பாதங்கள்.. அவற்றில்  செம்பஞ்சுக் குழம்பு கொண்டு  எழுதப் பெற்ற சித்திரப் புள்ளிகளும் தண்டைகளும் முத்து மணி நூபுரங்களும்.. இடையில்  தங்க ஜரிகையுடன் பொன்னிறப் பாவாடையும் அதனைத் தழுவியவாறு ஒட்டியாணமும்.. இடப்புறத்தில் வாளும் வலப்புறத்தில் கட்டாரியும்.. நாபிக் கமலத்தை மறைத்தவாறு உதர பந்தனம்..

ஸ்வர்ண இழைகளால் முடியப் பெற்றிருந்த அழகுக் கச்சை..

கச்சையின் மேல் மெலிதாய் நெய்யப்பட்ட பூந்துகில்.. அதற்கு மேலாக வைர வைடூரிய மாலைகள், பொற் சங்கிலிகள், முத்துமணிச் சரங்கள்.. சங்குக் கழுத்தில் ஒற்றையாய்க் கமலப் பதக்கம்.. 

மருதோன்றிச் சிவப்புடன் செங்காந்தள் விரல்கள்..  அவற்றில் விதவிதமான கணையாழிகள்.. முன் கைகளில் முத்து வளைகளுடன் சங்கு வளையல்கள்.. வலது முழங்கைக்கு மேல் வீர கடம்பு தோள்களில் வாஹூ வலயம் எனப்பட்ட ஆரங்கள்..

காதுகளில் தொங்கல்கள்.. எள்ளுப் பூ நாசியில் சின்னஞ்சிறு முல்லையாய் முத்து மணி.. 

குவளைப் பூ விழிகளில் காராம் பசுவின் வெண்ணெயில் திரட்டப்பட்ட மை.. புருவங்களின் மேலாக ஆடகப் பொன்னின் துகள்கள்.. 

புருவ மத்தியில் ஸ்ரீ மஹா காளேஸ்வரரின் திருநீறு.. லலாட திலகமாக கஸ்தூரியுடன்  செந்தூரம் குங்குமம்.. 

நெற்றி முகட்டின் வலமும் இடமுமாக சூரிய சந்திர கலைகள்.. அழகுக்கு அழகாக நெற்றிச் சுட்டி..

அள்ளி முடிக்கப்பட்டிருந்த நறுங்குழலில் மல்லிகைச் சரத்துடன் மயிற்பீலி..

கொண்டை உச்சியில் திரிநேத்ர வில்வ கிரீடத்துடன்  முத்துச் சரங்கள் ஸ்வர்ண புஷ்பம்.. 

பொன்னாசனத்தில் இருந்த அவந்திகா ஸ்ரீஷாந்தினியைச் சுற்றி ஒளி வட்டம் விரிந்திருந்தது..

விழித்த விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வங்காளி.. நீலுவுடன் மகிழ்ந்திருக்கலாம் என்று வந்தவனுக்கு சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் விட்டன.. 

" ம்!.. " - பின்னாலிருந்து குரல்..

திரும்பிப் பார்த்தான் வங்காளி.. அங்கே உருட்டி விழித்தவாறு கோரைப் பற்களுடன் மித்ரா.. இடி விழுந்த மாதிரி இருந்தது அவனுக்கு.. பயத்தில் நடுங்கிக் குரலெடுத்தான்..

ஆனால் அது யாருக்கும் கேட்காமல் போனது தான் சோகம்..

" ம்.. சொல்.. எங்கே அது?.. "

அவந்திகாவின் கோபம் நாகத்தின் சீற்றத்துடன் வெளிப்பட்டது.. 

" எது?.." கண்ணீர் வழிந்தது வங்காளிக்கு...

ஆசனத்திலிருந்து எழுந்தாள் அவந்திகா... அவளது தலைக்குப் பின்னால் நாகம் படம் எடுத்திருந்தது..

" ஆ!.. " - என்று அலறியவாறு பின்னால் சரிந்தான்.. அவனைத் தாங்கிக் கொண்ட மித்ரா -  அவன் மயங்கி விடாதபடிக்கு நடு நெற்றியில் தட்டினாள்..

வங்காளி மெல்ல உருமாறிக் கொண்டிருந்தான்..

(தொடரும்) 


83 கருத்துகள்:

  1. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    தொடர்ந்து வரும் காற்றினிலே - இன்று நான்காம் பகுதியைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகிய வண்ணத்தினால் அழகு செய்த அன்பின் திரு. கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. இன்றைய பதிவில்
    சர்வ அலங்கார பூஷிதையாய்
    இளவரசி அவந்திகா ஸ்ரீ ஷாந்தினி ஒளியுருவம் காட்டுகின்றாள்..

    வீரமகள் அவந்திகாவை அனைவரும் ஆசீர்வதிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. சித்திரச் செல்வர் அவர்களுக்கு அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  6. அவந்திகா ஸ்ரீ ஷாந்தினி பாதாதிகேசம் அழகு கொண்டு நிற்கின்றாள்..

    அழகுப் பதுமையாக இல்லாமல் வாள் கொண்டு வன்பகை முடிக்கின்றாள்..

    பெண்கள் பெருந்திறல் கொண்டு இலங்க வேண்டிய காலம் இது..

    அவந்திகா இளையவளாய் ஒளி உருவம் கொண்டு நின்றாலும் காலத்தால் மூத்தவள்..

    அன்பின் வணக்கம்
    அவந்திகாவுக்கு!..

    பதிலளிநீக்கு
  7. சற்றே திகில் கலந்த விறுவிறுப்பான நடை.
    பத்து வரிகளுக்கு கடந்த பகுதிகளின் சுருக்கம் வெளியிட்டால் சுவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      எடுத்த எடுப்பில் முந்தைய பதிவுகளுக்கு இணைப்பு இருக்கின்றது..

      எனினும் கதைச் சுருக்கம் கொடுத்திருக்கலாம்..

      ( எல்லாமே இளமையாய்த் நிகழும்போது கதையில மட்டும் சுருக்கமா!..)

      நீக்கு
  8. மெல்ல உருமாறினானா மெள்ள உருமாறினானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவந்திகாவின் இச்சாதாரி சக்தியினால் வங்காளி உருவம் மாறுகின்றான்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. மெள்ள உருமாறினாள் -Slowly. மெல்ல உருமாறினாள் -மென்மையாக உருமாறினாள் மெல்ல-மெல்லிய

      மெள்ள எழுந்து அரியென்ற பேர்ரவம்

      நீக்கு
    3. மெள்ள எழுந்தது அரி என்ற பேரரவம்..

      அமுதத் தமிழ்!..

      நீக்கு
  9. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஆரோக்கியமும் அமைதியும் சூழ நல் வாழ்வு தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல் வாழ்வு தொடர வேண்டும். ஆம்.

      நீக்கு
    2. ஆரோக்கியமும் அமைதியும் எங்கெங்கும் சூழட்டும் அம்மா..

      நீக்கு
  10. மிக அருமையான தமிழில்,
    அழகும் திகிலும் சேர்ந்த நடையில்
    அன்பின் துரை செல்வராஜு அளிக்கும் கதை விறு விறுப்பாகச் செல்கிறது.

    ஒரு மர்ம நாவலை இத்தனை கச்சிதமாக வர்ணனிகளுடன்
    எழுத முடியுமா என்று வியந்து கொண்டே இருக்கின்றேன்.
    அன்பு வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய வருகைக்கு மகிழ்ச்சியம்மா..

      // ஒரு மர்ம நாவலை இத்தனை கச்சிதமாக வர்ணனைகளுடன்
      எழுத முடியுமா.. //

      எல்லாவற்றுக்கும் தாங்கள் அளிக்கும் ஊக்கம் தான் காரணம்.. வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  11. கதைக்கு, கௌதமன் ஜி வரைந்திருக்கும் படங்கள்

    அச்சு அசல் கதை நாயகியைக் கண்முன் நிறுத்துகின்றன.

    வர்ணக்கலவையும், கண்களின் உணர்ச்சியும், ஆபரணங்களும்
    பலே ஜோர்.
    வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஜி.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. கதை முழுவதும் திக், திக், திக்! அடுத்து என்ன என்று யோசனை! திகில். எதனால் இத்தனையும் என்பது இனித் தான் தெரிய வரும் இல்லையா? காரணமில்லாமல் காரியம் இல்லையே!

    பதிலளிநீக்கு
  14. படங்கள் அருமை. அதிலும் சர்வாலங்கார பூஷிதையாகக் கதாநாயகி ஓர் அரசியைப் போலவே இருக்கிறாள். சூர்ய, சந்திரப் பிரபைகளைத் தான் காணோம். :) நெத்திச் சுட்டி இருக்கு. பின்னலில் ராக்கொடியும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதாக்கா..

      //.சூர்ய,சந்திரப் பிரபைகளைத் தான் காணோம்..//

      விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையட்டும்.. //

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய நான்காம் பகுதியாகிய கதையின் வேகம் அருமையாய் நகர்ந்து கொண்டுள்ளது. சென்ற வாரக் கதையின் இறுதியில் வீரம் மிகுந்த முடிவு என்னவாயிற்று? தெரியவில்லையே...! ஒரு வேளை அது அடுத்ததில் தொடர்ச்சி பெறுமோ? இளவரசியிடமிருந்து பறித்தஅந்த ரத்தின கல் பற்றிய விபரம் உருமாறிக் கொண்டிருக்கும் வங்காளி சொன்னவுடன் முந்ததையின் விபரங்களும் தெரிய வருமென நினைக்கிறேன்.

    அவந்திகாவின் அழகை விவரித்த வார்த்தைகளே மிக அழகு. பரிபூரண அழகை அழகாக வெளிப்படுத்திய வார்த்தைகளை ரசித்தேன். விலை மதிப்பில்லாத அந்த ரத்தின கல்லை விட ரத்தின சுருக்கமாக எழுத்துக்களை மடக்கிப் போட்டு தந்த அழகின் விவரிப்புக்கு மனமார்ந்த பாராட்டுகள் சகோ.

    அழகிற்கேற்ற ஓவியங்களும் கண்களையும், மனதையும் மயக்குகிறது. கதைக்கேற்றபடி பொருத்தமான படங்கள் வரைந்த கௌதமன் சகோதரருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      // பரிபூரண அழகை அழகாக வெளிப்படுத்திய வார்த்தைகளை ரசித்தேன்..//

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!

    அவந்திகாவிற்கு மிக பொருத்தமாக , மஹாபாரத திரௌபதியின் சித்திரத்தை சேர்த்திருப்பது அருமை. வீரமங்கையின் எழிலும், சீற்றமும், எதிரிக்கு பயத்தினை உண்டுபண்ணாமல் என்ன செய்யும்? கதை நிகழ்காலமும், பல நூற்றாண்டுகள் முன்பு நடந்த சரித்திர நிகழ்வும் கலந்திருப்பது, ஆவலைக் கூட்டுகிறது! நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      // வீர மங்கையின் எழிலும், சீற்றமும், எதிரிக்கு பயத்தினை உண்டு பண்ணாமல் வேறு என்ன செய்யும்?.. //

      // மஹா பாரத திரௌபதியின் சித்திரத்தை.. //

      ஓ.. இப்போது தான் தெரிந்து கொண்டேன்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. துரை அண்ணாவின் தமிழ் நடை பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?!!!

    அழகுத் தமிழில் மிரட்சி காட்டுகிறார்!

    ஓ அந்த நாகரத்தினக் கல்லை நெற்றிச் சுட்டியாக அணிந்திருந்தாளே அவந்திகா கடல்வழி வந்த கயவர்கள் தலைவன் அதை நசுக்கினானே ...அவனைக் கூட மித்ரா எதிர்த்து வாள் சுழற்ற அத்தோடு முடிந்திருந்தது அந்தப் பகுதி என்ற நினைவு...அப்புறம் மித்ரா அவனை என்ன செய்தாள் என்பது அடுத்த பகுதியில் வருமோ? அவன் தான் இந்த வங்காளியா!!! இப்போது? அத்னால் தான் அவந்திகாவும் மித்ராவும் இப்போது பழியோ..

    தொடர்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      மிகச் சரியாக யூகித்துக் கொண்டு வருகின்றீர்கள்..

      // அப்புறம் மித்ரா அவனை என்ன செய்தாள் என்பது அடுத்த பகுதியில் வருமோ?.. //

      அதற்காகத் தானே அடுத்த பகுதி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. வர்ணனை மிகவும் அருமை ஜி
    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  20. மண்ப்பிரவாள நடை என்று சொல்வார்கள். வடமொழிச் சொற்கள் கலந்த உரையாடல் சரித்திர கதைகளுக்கு இன்றியமையாது என்று வாசித்துப் பழகி விட்ட நிலையில் சில வார்த்தைகள் ஏதோ பழைய ராஜா-- ராணி சினிமாப்பட வசனங்களைப் போன்று----

    வங்காளியிடம்
    வருண் குமார்
    விடியல் தெரியும்
    விளக்குகள்
    ஒரு நொடியில்

    என்று ஒரு சமூகக் கதையைப் படிக்கும் உண்ர்வே விஞ்சியிருந்த பொழுது ---

    லாட்ஜூக்கு --- என்று வாசித்த கணத்தில்

    புரியவில்லை. சென்ற பகுதிகளை வாசித்து பின் இந்தப் பகுதியை வாசிக்க வேண்டுமோ என்ற குழப்பத்தில் பாதியில் படித்தது நின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      // மணி ப்ரவாள நடை என்று சொல்வார்கள். வடமொழிச் சொற்கள் கலந்த உரையாடல் சரித்திர கதைகளுக்கு இன்றியமையாது என்று வாசித்துப் பழகி விட்ட.. //

      சென்ற பகுதியில் நிறைய வார்த்தைகள் வந்திருக்கின்றனவே...

      மூன்றாம் பகுதியில்- ஒரு வார்த்தையைக் குறித்து - என்ன இது?.. என்று,
      யாரவது கேட்பார்கள் என்றிருந்தேன்.. எவரும் கேட்கவில்லை..

      மூன்றாம் பகுதி முழுவதும் 600 ஆண்டுகளுக்கு முந்தையது..

      இந்த நான்காம் பகுதி தற்போதைய சூழ்நிலை.. அவந்திகாவும் மித்ராவும் 600 வருஷங்களுக்கு முந்தையவர்களாக இருக்க வங்காளப் பணியாளன் மட்டும் 2021 ல் இருக்கின்றான்.. அதனால் தான் தீ நுண் கிருமித் தொற்றையும் சொல்லி இருக்கின்றேன்..

      தவிரவும் திரிவேணி சங்கமம் மாதிரி இங்கே மூன்று இழைகள் பின்னிக் கிடக்கின்றன..

      இளவரசியின் அலங்காரத்தைப் பற்றி சொல்லியிருக்கின்றேன்..

      அந்த வர்ணனையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. மூன்றாம் பகுதியில்- ஒரு வார்த்தையைக் குறித்து - என்ன இது?.. என்று,
      யாரவது கேட்பார்கள் என்றிருந்தேன்.. எவரும் கேட்கவில்லை..//

      இந்த வார்த்தையா அது? "கூர்ச்சரம்" ?

      இது தெரிந்திருந்ததால் கேட்கவில்லை துரை அண்ணா. பண்டைய பாரத தேசங்களில் ஒன்று இப்போதைய குஜராத்/ராஜஸ்தான் ஒரு பகுதி?

      கோசலம், மகதம், காந்தாரம், பாஞ்சாலம், குந்தி, விராட, சால்வ ன்னு வருமே யவன, சிந்து, விதர்ப்ப, நிஷாத தேசம் என்று பாட்டி சொன்ன புராணக் கதைகள் (இப்ப சிலதுதான் நினைவில்!!) தெரிந்தவை. இன்னும்

      கிதா

      நீக்கு
  21. பதில்கள்
    1. // லாட்ஜூக்கு - என்று வாசித்த கணத்தில் புரிய வில்லை.. //

      தற்காலத் தமிழனுக்கே தர்ம சத்திரம், தங்கும் விடுதி என்றால் என்னென்று புரியாது..

      வங்காளப் பணியாளனின் வாயில் லாட்ஜ் என்று வந்ததே பெரிய விஷயம்..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. தம்பி துரை..

      முன் பகுதிகளை வாசித்து விட்டு வருகிறேன். கதையின் உள்ளார்ந்த போக்கின் கட்டமைப்பில் எந்த அளவிற்கு நீங்கள் வெற்றியடைந்திருக்கிறீர்கள் என்பதை வாசித்து விட்டு எழுதுகிறேன். நன்றி.

      நீக்கு
    3. அன்பின் அண்ணா..

      தங்களது கருத்துரையை அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. கதை நன்றாக இருக்கிறது.
    //ஒரு நிமிஷம் விழிகளை மூடி பிரார்த்தியுங்கள்.. அனைத்துப் பிரச்னைகளுக்கும் விடியல் தெரியும்!.. " - என்றாள் அமைதியாக..//

    அருமை.

    //இச்சாதாரி சித்தியைத் தான் நீ அறிவாயே!//

    இச்சாதாரி நாகத்தின் கதையா?
    கதையில் நிறைய மர்ம முடிச்சுக்கள் இருக்கிறது.
    அது என்ன என்ன காரணத்திற்கு இவை யெல்லாம் நடக்கிறது என்பதை அறிய ஆவல்.

    தியானம் செய்யும் படம், நீலு அழகாய் காட்சி தருகிறார் கெளதமன் சார் பொருத்தமாக படத்தை வரைந்து சேர்ப்பும் செய்து இருக்கிறார்.

    //மித்ரா - இப்போது நீலு என, உருமாறி நின்றாள்..//

    உருமாறி என்ன செய்ய போகிறார் அறிய ஆவல்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கோமதிஅரசு..

      // இச்சாதாரி நாகத்தின் கதையா?.. //

      அவந்திகா இச்சாதாரி நாகம் அல்லள்.. அவள் நாக தேவதை உபாசனை செய்து இச்சாதாரி போல வரம் பெற்றவள்..

      64 கலைகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றைக் கற்றவள் என்று சென்ற பகுதியில் சொல்லி இருக்கின்றேன்.. அதில் மந்திர வாதத்தில் உரு மாற்றமும் ஒன்று..

      // கதையில் நிறைய மர்ம முடிச்சுக்கள் இருக்கிறன.
      என்ன என்ன காரணத்திற்காக இவையெல்லாம் நடக்கின்றன என்பதை அறிய ஆவல்..//

      அடுத்த வாரத்தில் ஓரளவுக்கு விளங்கி விடும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. நேற்று இரவு படிக்க ஆரம்பித்தேன், பயமாக இருந்ததால் தொடரவில்லை. இப்போதுதான் முடித்தேன். மிக அருமை! அவந்திகா வின் சீற்றத்தை உணர முடிகிறது. படங்களும் பிரமாதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அவந்திகாவின் சீற்றத்தை உணர முடிகிறது. படங்களும் பிரமாதம்!.. //

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இந்தக் கதையின் ஆறு பகுதிகளையும் இரவு நேரத்தில் தான் தட்டச்சு செய்தேன்..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஹிஹிஹி, பானுமதி! நிஜம்மாவே பயமா? இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  24. வாரத்திற்கு ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் வருகிறது. மொத்தமாக ஒரு முறை படித்து ரசிக்க காத்திருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது தொடர். கே ஜி ஜி அவர்களின் ஓவியமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      //வாரத்திற்கு ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் வருகிறது..//

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. வெளிவந்த எல்லா பகுதிகளையும் வாசித்து முடித்தேன்.

    எபி வாசகர்கள் விரும்பும் வகையில் கதையை அமைத்திருக்கிறீர்கள்,தம்பி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      மூன்று பகுதிகளையும் ஒருசேர வாசித்த தங்களது கருத்தும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி..

      தங்கள் அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
  26. துரை செல்வராஜு சார், கதையை மிக அழகாகக் கொண்டு செல்கின்றீர்கள். இப்பகுதிக்கு வரும் முன் மீண்டும் முந்தையதை வாசித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது ஏனென்றால் அப்போதுதானே அந்த தொடர்ச்சி கிடைக்கும்.

    அடுத்து என்ன என்ற ஆவலுடன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அடுத்து என்ன என்ற ஆவலுடன்.. //

      துளசிதரன்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  27. @ கீதா..

    // இந்த வார்த்தையா அது? "கூர்ச்சரம்" ?..//

    இல்லை.. இல்லை..

    மதியத்தில் வருகின்றேன்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி...

      கொல்லர் பட்டறையில் ஊசி விற்பதைப் போல வித்தகர் பலர் இருக்கும் இத்தளத்தில் நானும் எழுதிக் கொண்டு இருக்கின்றேன் என்பதுவே பெருமை..

      தாங்கள் மீண்டும் வந்து கருத்தினைச் சொன்னதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. @ கீதா அக்கா...

    // பிரதர்ஷண வீணை?..//

    அக்கா என்றால் அக்கா தான்..

    இது இதைத் தான் எதிர்பார்த்திருந்தேன்..

    இந்த கதைக்காகத் தேடியது
    பிரதர்ஷண வீணை..

    அந்தப்புரத்தில் ஏதாவது இசைக் கருவி ஒன்று இருக்க வேண்டுமே என்று வட புலத்து இசைக் கருவிகளைப் பற்றி இணையத்தில் தேடினேன்..

    அப்போது கிடைத்தது தான் பிரதர்ஷண வீணை..

    இதன் தற்காலப் பெயர் -
    தில்ரூபா...

    மற்றபடி ஆபரணங்கள் நாம் அறிந்தவையே..

    நாடி பிடித்து பார்த்தாற்போல
    பிரதர்ஷண வீணை என்று சொல்லி விட்டார்கள்..

    மகிழ்ச்சி.. நன்றியக்கா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை முன்னரே கவனிச்சேன். இதன் இப்போதைய பெயரையும் குறித்துக் கேட்க நினைத்து மறந்து விட்டது. :)))))) ஆனால் கூர்ஜரம் என்னும் பெயரும் நம்மவர்களுக்குப் புதியதே. குஜராத்/கூர்ஜரம் என்பது பலரும் அறியாத ஒன்றே. :(

      நீக்கு
    2. @ கீதாக்கா..

      // கூர்ஜரம்/ குஜராத் என்பது பலரும் அறியாத ஒன்றே. :(//

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  29. விறுவிறுப்பாக செல்கிறது படமும் கதைக்கு அழகூட்டுகிறது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!