வியாழன், 10 நவம்பர், 2022

சமிக்ஞய் ​... ​சமிக்​ஞை ​... சிக்னல்

 பெருமழை பெய்து கொண்டிருந்த சென்ற வாரத்தில் அலுவலகத்தில் ஒரு நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தபோது

அவர், அவர் குடியிருப்பில் இருக்கும் குழந்தைகள் பற்றிச் சொன்னார்.  அவர் இருக்கும் அரசுக் குடியிருப்பில் நிறைய குழந்தைகள் கிட்டத்தட்ட ஒரே வயது குழுவில் இருப்பவர்கள் இருக்கிறார்களாம். அவர்களை பார்த்தால் தோழிக்கு 'அஞ்சலி' படம் நினைவுக்கு வருமாம்.  அந்த மாதிரி ஒரு குட்டிப்பிசாசுக் கூட்டமாம்.  போட்டோக்கள் காட்டினார்.  அப்படியே தான் இருந்தது! 


அப்படி அவர்கள் சேர்ந்து அடிக்கும் கூத்தில் குறும்புகளும், சுவாரஸ்யமான விளையாட்டுகளும் இருக்குமாம்.  இவர் பெண்ணும் அதில் அடக்கம்.  பிள்ளையார் சதுர்த்திக்கு இவர்களே விநாயகர் செய்து கும்பிட்டு கொண்டாடி மறுநாள் கரைப்பதுவரை 'விளையாடி' இருக்கிறார்கள். அந்நாட்களில் சொப்பு வைத்து விளைவயாடுவார்களே அது நினைவுக்கு வந்தது எனக்கு.  

இப்போது நான் இருக்கும் ஏரியாவிலும் அதுபோல சில குழந்தைக் குழுக்களை பார்க்கிறேன்.  மனதுக்கு உற்சாகமும் சந்தோஷமும் வருகிறது.
சைக்கிளுடன் நிற்கும் பதின்ம வயதுப் பையன்கள் கூட்டத்தைக் கண்டால் நின்று என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஆவலாக இருக்கிறது.  சட்டென ஒரு பையன் தோளில் கைபோட்டு நின்று நாமும் பேச்சில் கலந்து கொள்ள ஆர்வம் வருகிறது.  அவர்கள் இந்த "அங்கிளை"ப் பார்த்து கலைந்து ஓடிவிடுவார்களே...  அதனால் ரசித்தபடி தாண்டிச் செல்வதோடு சரி.

இந்நாளில் குட்டிகள் கூட எல்லோரும் ஆளுக்கொரு சைக்கிளுடன் நிற்கிறார்கள், சுற்றுகிறார்கள்.  சர்சர்ரென இங்கும் அங்குமாய் பறக்கிறார்கள்.
பெரும்பாலும் நண்பி அவர்களை குழு சேர விட்டு விட்டாலும் சில சமயங்களில் வீட்டுக்குள் இருக்கச் சொல்வாராம்.  ஆனால் எப்போது காணாமல் போனாள் என்றே தெரியாமல் விளையாடச் சென்றிருப்பாளாம் பெண்.   யார் வந்து அழைத்தார்கள், எப்போது எஸ்கேப் ஆனாள் என்றே தெரியாமல் காணாமல் போய்விடுவாளாம்.  குறைப்பாட்டுக் கொண்டார். சிரிப்பும் வந்தது.


என் இளவயது நினைவுகளும் வந்தன.  

லீவு நாட்களோ, அல்லது மாலை பள்ளியிலிருந்து வந்த பின்னோ, அப்பா வீட்டில் இருக்கும் நேரம் அடங்கி வீட்டில்தான் இருப்போம் எனினும், வெளியே கிளம்பத் தயங்கியதில்லை.  வயசு!

அதற்கு நாங்கள் வழி வைத்திருந்தோம்.  நாக்கு மேலண்ணத்தில் அழுத்தி 'டொக்' என்று சத்தப்படுத்தும் சிக்னல் ஒன்று.  தொடர்ந்து 'டொக்கடிக்கும்' சத்தம் வந்தால் 'அழைக்கிறார்கள்' என்று அர்த்தம்.  ஓரிரு 'டொக்' மட்டும் வந்தால் நம் பட்டாளத்தில் ஏதோ ஒன்று தாண்டிச் செல்கிறது என்று அர்த்தம்.  தொடர்ந்து சில டொக்குகள் வந்தபின் எஸ்கேப் ஆகும் வழியைப் பார்ப்போம்.

இன்னொன்று இடதுகையை கைகுலுக்குவது போல வைத்துக் கொண்டு, வலது கையில் கட்டை விரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் இரண்டிரண்டாக (ஆள்காட்டி விரலும் சுண்டு விரலும், மோதிர விரலும் நடுவிரலும்) ஒன்று சேர்த்து இணைத்து, இடதுகை கட்டைவிரலுக்கும் மற்ற விரல்களுக்கும் நடுவில் நுழைத்து, இருகைகளையும்  இணைத்து மூடி, கட்டைவிரல்களை ஒன்றின் அருகே மற்றொன்றாக இணைத்தால் அந்தக் கட்டை விரல்களுக்கு நடுவே வரும் துளையில் வாய் வைத்து ஊதினால் ஒரு விசில் ஒலி வரும்.  அப்பா..  விவரிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது...   (ஆமாம்...  தாவு என்றால் என்ன?!)

விவரிப்பதற்குதான் தாமதம்.  செயலில் செய்ய சில நொடிகள்..

அந்த சத்தம் கேட்டால் நண்பர்கள் அழைக்கிறார்கள் என்று அர்த்தம்.  இரண்டு வித ஒலி மட்டும் யார் சத்தப்படுத்துவது என்றே தெரியும். அவர்களால் அப்படிதான் ஊத முடியும்!

அவ்வளவுதான்..

நைஸாக வெளியே கிளம்பி விடுவோம்.  தங்கைக்கும் அண்ணனுக்கும் சதி தெரியும்.  என்னை பார்ப்பார்கள். போட்டுக்கொடுக்க எல்லாம் மாட்டார்கள்!  நாங்கள் எவ்வளவு பேர் இணைகிறோமோ அவர்களில் ஓரிருவரோ எல்லாருமோ அடுத்தடுத்த நண்பர்கள் வீட்டுக்கருகே மறைந்து நின்று இப்படி அவர்களை அழைப்போம்!  வீட்டு பால்கனியிலிருந்தோ ஜன்னல் வழியாக பார்த்தாலோ நண்பர்கள் 'எங்கோ பார்த்தபடி' நின்றிருப்பது தெரியும்.  தப்பித்தவறி அப்பா பார்த்து விட்டால் அவர்கள் எங்களுக்காக நிற்கவில்லையாம்!!

ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணம், நேராக வந்து அழைத்தால் என்ன என்று கேள்வி வருமாயின் அதற்கெல்லாம் ஏதாவது ஒரு முன் அனுபவம் காரணமாயிருக்கும்.  ஒவ்வொரு அப்பாவும் (அப்போது, அந்த வயதில்) நண்பர்களுக்கு பொல்லாதவர்.  அனாவசியக் கேள்விகளைத் தவிர்பபதுவும் ஒரு காரணம்!

விளையாடும் பருவம் முதல் கொஞ்சம் 'வயது வந்து' லுங்கி கட்டிக்கொண்டு விளையாடாமல் ஒதுங்கி, மற்ற சிறுவர்கள் (!) விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி நடைபழகும் -அரட்டைக்கச்சேரி செய்யும் - காலம் வரை இது தொடர்ந்தது.  பார்க்கில் அமர்ந்து பார்த்த / பார்க்காத சினிமா முதல்  கோடி வீட்டு சிவகாமி வரை பேசுவோம்!  ஆனாலும் அப்பாவிடம் பயம்தான்!

திரும்ப உள் நுழைவது பற்றி கவலை இல்லை.  பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை!  அவர்களுக்கும் தெரியும் அல்லவா, இதெல்லாம் ஒரு வயது என்று..  

இதுவே காதலித்த காலத்தில் எப்படி என்பதை முன்னரே சொல்லி இருக்கிறேன்!!

நண்பர்கள் அனைவருக்கும் கூட இது மாதிரி அனுபவங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
==========================================================================================================

மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம.

பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழு வதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னி யில் நான் இடும் ஹவிஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்.

(ஆதாரம்: சுவாமி சிவானந்தா சரசுவதியின் ஞான சூரியன்)

ம ந ராமசாமி

............​கணையாழியில் இவர் எழுதிய ​'ய​ன்மே மாதா' சிறுகதை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது​. ​ கதாநாயகன் வெங்கடேசன் தந்தைக்கு சிராத்தம் செய்ய துவங்குகிறார்​. ​ அவருக்கு மந்திரம் மட்டுமல்ல​,​ அதன் பொருளும் தெரியும்​.​ சாஸ்திரிகள் சொல்லச் சொல்ல இவர் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் சாஸ்திரிகள் ​'யன்​மே மாதா பிர​லு​லோ​ப​ சரதி​'​ என்று ஆரம்பித்துச் சொல்ல​,​ தடுக்கிற வெங்கடேசன் அதன் பொருளை சாஸ்திரங்களிடம் கேட்க ​, ​அவருக்கு தெரியவில்லை​. ​ உடனே ​"​எனது தாயின் பதிவி​ர​தை தன்மையை கேவலப்படுத்துவதாக இந்த மந்திரம் இருக்கிறது​. ​ எனது தகப்பனார் எங்கள் குடும்பத்தை நடுத்தெருவில் தவிக்க விட்டு விட்டு ஓடிப் போனவர்​. ​ என் தாய் சொன்னதால்​தான்​ நான் சிரார்த்தம் செய்கிறேன்​.​ ​ ​எங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தெய்வமான தாயை கேவலப்படுத்தும்​,​ என் தாய் உத்த​மி​ இல்லை என்று சொல்லும் இந்த மந்திரத்தை நான் சொல்ல மாட்டேன்​"​ என்கிறார்​. ​ 

தன் தாயிடம் ​"​அம்மா உன்னை கேவலப்படுத்தும் இந்த மந்திரத்தை நான் சொல்ல மாட்டேன்​. ​ மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் ஒருவேளை இது சரியான மந்திரமாய் இருந்திருக்கலாம்​. ​ இப்போது பொருந்தாது​" ​ என்று சொல்லி மன்னிப்பு கேட்கிறார்​. ​ திதியையும் நிறுத்தி விடுகிறார்​. ​ ​"​நீ ​தி​வசம் பண்ணாமல் உன்னிடம் நான் தட்சிணை வாங்க என் மனம் இடம் தரவில்லை​"​ என சாஸ்திரிகள்​,​ உடன் வந்தவர்களுடன் சென்று விடுகிறார்​. ​ 

இப்படி ஒரு வித்தியாசமான மாறுபட்ட சிந்தனை போக்கில் ம ந ராமசாமி படைத்திருந்த இந்த சிறுகதை வெளியான சமயத்தில் மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தியது​. ​ பரவலாக விவாதிக்கப்பட்ட இந்த சிறுகதை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது​. ​ 

இவர் கணையாழியில் எழுதிய ​'​கலாச்சார மயக்கம்​'​ என்ற சிறுகதைக்கும் பலத்தை எதிர்ப்பு எழுந்தது​. ​ காரணம் அதில் வர்ணாஸ்ரம தர்மம் என்பதற்கான பிரிவினை திராவிடர்களின் கலாச்சாரம்தான் என்று ஆதாரங்களுடன் எழுதி இருந்ததுதான்​. ​ 

இவ்வாறு சொல்லப்படும் ​மா ந ​ ராமசாமி 1927 மே மாதம் 15 ஆம் நாள் மானாமதுரையில் பிறந்தவர்​. ​ அங்கேயே பள்ளிப்படிப்பு உயர்கல்வி தாராபுரத்தில் ராணுவ வீரர்களுக்கான கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது​.​ சில காலம் அங்கு பணி செய்தார்​.​ தொடர்ந்து நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் எழுத்தர் ஆக சில ஆண்டுகள் பணியாற்றினார்​. ​ வாழ்க்கை அனுபவங்கள் இவரை எழுதத் ​தூண்டின. ​ ​முதல் கதை ​'​தியாகி யார்​?' ​ நவயுவன் இதழில் 1947 ல் வெளியானது​. ​ தொடர்ந்து தீபம்​,​ தினமணி கதிர்​,​ கணையாழி​,​ சிவாஜி​,​ செம்மலர்​,​ தாமரை​,​ கலைமகள்​,​ கல்கி​,​ ஆனந்த விகடன்​,​ கண்ணதாசன்​,​ தாய் போன்ற இதழ்கள் சிறுகதை வெளியாகி வாசக கவனம் பெற்றன​. ​ சில கதைகள் விவாதங்களையும் ஏற்படுத்தினர​. ​ 

தன்னுடைய எழுத்துல​க​ அனுபவங்கள் பற்றி ம​ ந​ ராமசாமி ​"​என் படைப்புகள் சிலரை பாதித்தது உண்டு​.​. மேலெழுந்த சிறு தடுமாற்றம்​,​ அவ்வளவுதான்​. ​ ஒரு அரிச்சந்திரன் கதை ஒரு மகாத்மாவை உருவாக்கி இருக்கலாம்​. ​ மற்றபடி எந்த எழுத்தும் எவரையும் அதிகமாக மாற்றி விடுவதில்லை​. ​ ​'யன்மே​ மாதா​'​ சிறுகதையை வாசித்து விட்டு எவரும் திதி திவசம் செய்வதை விட்டுவிடவில்லை​. ​ ​'​மந்திர புஷ்பம்​'​ வரலாற்று நாவலை வாசித்த இரு பெரியவர்கள் பரவசப்பட்டு கடிதங்கள் எழுதினர்​. ​ அவர்களில் ஒருவர் தன்னை சீடனாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்​​ என்கிறார்​. ​

இவரது நாவல்களும் சிறப்பானவை​.​ நகரத்​து​ இளைஞனின் கிராமத்து அனுபவங்களை பேசும் நாவல் ​'​சிரிப்பின் நிழல்​', ​ ​'​நாதலயம்​'​ இசை பற்றிய நாவல்​. ​
​ம ந ​ இராமசாமி ​"​இந்த நாவலை வாசித்த வித்துவான் ஒருவர் வீடு தேடி வந்து என்னையும் என் மனைவியையும் தரையில் விழுந்து வணங்கி எழுந்தார்​.​ புத்தகத்தை வைக்கவே மனமில்லை​.​ அழுதுவிட்டேன்​"​ என்றார் என்று குறிப்பிடுகிறார் இவர் எழுதிய​ ​நாலாவான் ஒரு சரித்திர நவீனம்​.​ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழகச் சூழலை கொண்டு படைக்கப்பட்ட இந்நாவல் அவ்வையாரின் 

நூலெனிலோ கோல்சாயும் ​நுந்தமரோல்  வெஞ்சமராம் 
​கோல்​ ​எனிலோ அங்கே குடிசையும் ​நாலாவான் 
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான் 
அந்த அர​சே​ அரசு 

என்ற வெண்பாவை அடித்தளமாக கொண்டு எழுதப்பட்டது​.

திரு ம ந ராமசாமி எழுதிய சிறுகதை ஒன்றைப் படிக்க.... இங்கு க்ளிக்கவும்!

-தென்றல் தளத்தில் அரவிந்த் எழுதிய பகுதியிலிருந்து...​
===========================================================================================================


வெட்டி முடித்ததும் 
கோடரி கைப்பிடி 
கண்ணீர் வடித்தது 
என்னை மன்னித்து விடம்மா 
உன் கிளையில் 
ஒருவன்தான் நான்.

==============================================================================================================

வேறொரு தளத்திலிருந்து எடுத்துக் பகிர்கிறேன்...  பார்க்க பரிதாபமாக இருக்கிறதா?  மகிழ்ச்சியாக இருக்கிறதா?  அது, வலுவாய் இருந்த காலத்தில் அந்த சிங்கம் நடந்து கொண்ட விதத்தைப் பொறுத்தது இல்லையா?  கம்பீரங்கள் காணாமல் போகும்.  உடம்பின் வலு போனதும் தலைகுனிந்து செல்லும் நேரம் வரும்.  சிங்கம் இளைத்தால்...?  பரிதாபப்பட்டு அந்த மானே கீழே வந்து படுத்துக் கொண்டு 'என்னை சாப்பிட்டுக்கொள்' என்றால் கூட கடிக்க பற்கள் இருக்காது! 




இன்னும் 
எவ்வளவு தூரம்...எவ்வளவு நேரம்...
எதிரில் என்ன வருகிறது 
என்று கூடத் தெரியவில்லை 
அந்திமக் காலம் 
அருகில் வந்து விட்டது
என்று தெரியும்..
உணவு வேண்டாம்..
கொஞ்சம் 
தண்ணீர் கிடைத்தால் 
போதும் 

பாவமாகத்தான் இருக்கிறது 
ஒரு குத்து குத்தினால் 
அதன் மரணம் 
நிச்சயம் 
என்று தெரியும் 
ஆனால் 
அது செய்த பாவத்துக்கு 
அலைந்து திரிந்தே முடியட்டும்..
அதற்கு சகாயம் 
என்றாலும் 
அந்தப் பாவம் 
எனக்கு வேண்டாம்...


============================================================================================================

பொக்கிஷம் :-

அட்டைப்பட ஜோக்...  எழுத்துகளையும் படத்தையும் தனித்தனியாக ஒட்ட வைக்க வேண்டி இருந்தது!


ஏற்கெனவே போட்டிருக்கேனோ என்றும் சந்தேகம்..  படிக்க முடிகிறதா என்றும் சந்தேகம்...  கோபுலு ஜோக் 


அடுத்து வரும் இரண்டும் தாணு ஜோக்கார்ட்டூன்...   தாணு நினைவிருக்கிறதா?  சித்திர வகுப்பு எடுப்பவர்..



காந்தியின் மறைவும் விகடனின் துக்கமும்...


இப்போது வருடம் யூகித்திருப்பீர்கள்..  அப்போது லட்சுமி மருத்துவக்கல்லூரி மாணவி!


45 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. குட்டிப் பட்டாளம் எங்கேயும் உண்டு.  பதின்ம வயதில் சிறுவர் தனியாக , சிறுமிகள் தனியாக மட்டுமே குழுமம் சேரும். 

    அந்தக் காலத்தில் வெற்றிடங்களில் விளையாடும் கோலி, கிட்டிப்புள், பம்பரம் இவை தாம் முக்கிய விளையாட்டுகள். தற்போது அது சைக்கிள்  ஆக மாறிவிட்டது. 

    கொஞ்சம் வளர்ந்து மீசை  தொடங்கும்போது நண்பர்களுடன் கோவில் குளம் என்று சைட் அடிக்கச் சென்றது ஒரு திகட்டாத இன்பம்.

    ஆனால் சில சமயங்களில் குழுமம் குரூப் ஸ்டடி என்ற பெயரில் புத்தகங்களை வைத்துக்கொண்டு பகல் கனவு கண்டதும் உண்டு.  
    கோடரி படம் கம்யூனிஸ்ட் சின்னம் (CPI ) போன்று உள்ளது. ஒருக்கால் கார்ட்டூன் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறதோ? காரணம் இங்கு கேரளத்தில் பழைய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தாம் தற்போது பா ஜா க உறுப்பினர்கள். அதுவே கொலை செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. 

    எலும்பும் தோலுமாக இருக்கும் சிங்கம் தற்போதைய காங்கிரசை நினைவு படுத்துகிறது.

    இணையத்தில் லட்சுமியின் படைப்புகள் இலவசமாகக் கிடைப்பதில்லை.
    கவிதைக்கும் ஜோக்குக்கும் கருத்து சொல்ல ஒன்றும்  தோன்றவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் தேசியம் வலைத்தளத்தில் முயன்று பார்க்கவும்.

      நீக்கு
    2. குட்டிப்பட்டாளங்கள் சினிமாக்களை பார்த்தும் பழகுகின்றன.   கவிதையிலும், சிங்கத்திலும் அரசியலை நுழைத்து விட்டீர்கள்!  லக்ஷ்மியின் நூல்கள் இணையத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன.  பொக்கிஷம் அவ்வளவாகக் கவரவில்லை போல..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
    முதல் பகுதி சுவாரஸ்யமாக இருக்கிறது. தங்கள் அலுவலக நண்பி சொல்வது உண்மைதான். இப்போது எங்கள் அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் மாலையானல் இப்படித்தான் குழுவாக பிரிந்து அரட்டை அடித்தபடி, சேர்ந்து விளையாடியடி இருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களின் உலகமே ஒரு தனிப்பட்ட உலகந்தான். இடையில் நம் குறுக்கீடுகள் புகுந்தாலும் , அது அந்தக்காலம் போலில்லாமல் வேறு விதங்களில் வந்து முடியும்.

    உங்களின் இளவயது நினைவலைகள் சுவாரஸ்யமாக படிக்க இருந்தது. தங்கள் நண்பர்கள் சிக்னல் தெரிவித்து அழைக்கும் முறைகள் சிரிப்பை வரவழைத்தது . விசில் அடித்து அழைக்கும் முறையை நீங்கள் விவரித்தது கண்டு சிரித்தே விட்டேன். ஆம்... அந்த காலத்தில் பெற்றோர்களிடம் (அதுவும் அப்பாவிடம்) அணுக, சுவாதீனமாக பேசி பழக, (நண்பர்கள என்று மட்டுமல்ல...) . நம் ஒவ்வொருவரிடமுமே ஒரு தனிப்பட்ட பயம் மரியாதை இருந்தது. இப்போது சிறு குழந்தைகளே எதிர்த்து பேசி. இரண்டு செல்ல அடிகளும் வைக்கிறார்கள்.

    என் மகன்கள் இந்த இடத்திற்கு விளையாடப்போகிறோம் என்று தங்கள் நண்பர்கள் வந்ததும் சொல்லி விட்டு போவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவார்கள்.

    நாங்கள் சிறு வயதில் (அதுவும் நான்) வீட்டை விட்டு வெளியில் விளையாட சென்றதே கிடையாது. வீட்டை விட்டால் பள்ளி. பள்ளி முடிந்ததும் வீடு.அப்படியே இளமைகாலம் கண்டிப்புடன் கழிந்து விட்டது. அதனால் இப்போது இந்த அஞ்சலி க்ரூப்பை பார்க்கும் போது ஆச்சரியமாகவும் (கொஞ்சம் பொறாமையாகவும்) இருக்கிறது. மாறிவிட்ட காலங்களை நினைத்து வியப்படைகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் புத்தகங்கள் தான் தோழி. ஆனால் அதைக் கூட அப்பாவுக்குத் தெரியாமல் தான் படிக்கணும். தெரிந்தால் கிழித்துப் போட்டுவிடுவார். புத்தகங்களோ நம்முடையதாகவும் இருக்காது. ஆகவே அப்பா வெளியே செல்லும் நேரம் பயந்து பயந்து படிக்கணும். திரும்பி வீட்டில் நுழையும்போது எப்படியானும் தெரிஞ்சுடும். உஷாராகிடுவோம் இல்ல! அப்படியும் மாட்டிக்கொண்டு புத்தகங்கள் கிழிந்த நேரங்களும் உண்டு.

      நீக்கு
    2. எங்கள் வளாகத்தில் இப்போக் குழந்தைகளே இல்லை. ஆகவே சப்தமே இருப்பது இல்லை.

      நீக்கு
    3. சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் கமலா அக்கா. அந்தக் காலத்தில் ஒரு பயமும் மரியாதையும் இருந்தது. இந்தக் காலத்தில் அவை இல்லை என்று சொல்ல முடியாது, எனினும் ஒரு சுதந்திரம் இருக்கிறது.

      நீக்கு
    4. ​எங்கள் தெருவில் இது மாதிரி ஒரு மினி பட்டாளம் இருக்கிறது கீதா அக்கா.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை. படித்ததும் அதன் நிலை நம் கண்களையும் கசிய வைக்கிறது. நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம்.. அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல கதம்பம் அருமை என்று சொல்லத் தோன்றவில்லை..

    பதிலளிநீக்கு
  7. மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்க

    அந்தக் கவிதை மனதைக் கலங்க அடிக்கின்றது..

    பதிலளிநீக்கு
  8. சீர் இழந்த பின்
    சிங்கத்தின் கதையும்
    அ சிங்கம் தான்..

    பதிலளிநீக்கு
  9. கைப்பேசியால் குட்டிகள் பட்டாளம் குறைந்தே விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை DD.. நிறைய இடங்களில் உயிர்ப்புடன் இருக்கிறது.

      நீக்கு
  10. நாக்கில் டொக் பெரிய சிஐடி க்ரூப்பாக இருக்குமோ...

    கவிதை அருமை ஜி

    பதிலளிநீக்கு
  11. மனதை வேதனைப்படுத்திய நல்ல கவிதை. ம.ந.ராமசாமியைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இன்றே முதல் முறை. சுட்டிக்குப் போய்ப் படிக்கணும். பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிச்சேன். கதை அருமை. சிறுவனின் மேதைத்தன்மை நன்கு வெளிப்பட்டுக் கதாநாயகனின் மானத்தையும் வாங்கி விட்டது. :))))) உண்மையில் ஆச்சரியமான மேதமை கொண்ட சிறுவன்.

      நீக்கு
    2. அட... நானே லிங்க் எடுத்து வைத்திருக்கிறேன் தவிர, இன்னும் வாசிக்கவில்லை!

      நீக்கு
  12. பதிவு அருமை. உங்கள்
    இளமை கால நினைவுகள் அருமை. உங்கள் தோழி சொன்னது உண்மைதான். குழந்தைகள் சேர்ந்தால் விளையாடி மகிழ்கிறார்கள்.
    சத்தம், கூச்சல் என்று கல கலப்பாக இருக்கும் விடுமுறை நாளில்.

    என் மகனும் சிறு வயதில் பிள்ளையாருக்கு பூஜைகள் செய்து விளையாடி இருக்கிறான் விளையாட்டு தோழர் , தோழிகளுடன்.

    என் இளமை பருவம் மகிழ்ச்சியான பருவம். எங்கள் வயதுக்கு ஏற்ற தோழிகள், தோழர்கள் நாங்கள் இருந்த ஊர்களில் எல்லாம் கிடைத்தார்கள். நான் என் "பதின்ம வயது" பதிவில் வல்லி அக்கா அழைத்த தொடர் பதிவில் சொல்லி இருப்பேன்.

    மாலை முழுவதும் விளையாட்டு என்று இருந்தோம்.
    திருமணம் ஆனதும் பக்கத்து வீட்டு பிள்ளைகள் என்னுடன் விளையாடும். அப்புறம் மகன், மகள் தோழிகள், தோழர்கள் எங்கள் வீட்டில் என்னுடன் விளையாடுவார்கள். இப்போதும் பேரனுடன் விளையாடுகிறேன். வீட்டுக்கு வரும் உறவினர் குழந்தைகளுடன் விளையாடுகிறேன். பெரியவர்களுடன் உரையாடி மகிழ்வதைவிட குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்புவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், எல்லோருக்கும் அந்தக் கால நினைவுகள் வரும் என்று தெரியும். உங்கள் நினைவுகளும் அருமை. நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  13. கவிதைகள் சோகம். பொக்கிஷ பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. Sorry இன்றைய இடுகை இரு நாட்கள் கழித்துத்தான் படிக்கணும்

    பதிலளிநீக்கு
  15. கவிதைகள் படிக்கும் போது கவலை கொள்ள வைத்தாலும் நல்ல கவிதை கள்.
    ஜோக்ஸ் ரசனை விசிறி மடிப்பு ஹா...ஹா.
    குழந்தைகளும் விளையாட்டும் நமது சிறுவயது காலத்துக்கு இட்டுச் செல்கிறது. இங்கும் லீவுநாட்களில் ரோட்டோரம் குழந்தைகள் கலகலப்பாக பந்து அடித்தும் ஓடிப்பிடித்தும் விளையாடுகிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. ம.ந.ராமசாமி அவர்களும் பொதுவடமை சிந்தனை கொண்டவராய் தான் வாழ்ந்தார். அவரின் இந்தக் கதையை வாசித்த பொழுது ஜெயகாந்தனின் சுயதரிசனம் கதையும் அந்தக் கதையில் ஜேகே நினைவு கூர்ந்திருந்த
    'அர்த்தம் தெரியாமல் மந்திரம் ஓதுவதை விட ....... போகலாம்' என்ற பாரதியின் வரிகளும் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கதையை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா ஜீவி ஸார்?  இங்கு சுட்டியில் கொடுக்கப் பட்டிருக்கும் கதையை வாசித்தீர்களா?

      நீக்கு

  17. கோடரி காம்பின் மனக் குரலாய் கவிதை புதுச் சிந்தனையைக் கிளர்த்தியது. இத்தனை நாட்கள் வழக்கத்திலிருந்த சொற்பிரயோகங்களை புரட்டிப் போட்டது. மரத்துண்டிலிருந்து கோடரியைத் தயாரிப்பவன் மனிதன். தயாரித்த கோடரியை மரம் வெட்ட பிரயோகிப்பவனும் மனிதனே. ஆனால் பழி பாவம் என்னவோ கோடரிக் காம்பிற்கு. 'குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பே' போன்ற வசைச் சொற்கள். ஏழே வரிக் கவிதை எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாய் இருக்கிறது? வாழ்த்துக்கள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்..... கோடரிக்காம்பே என்கிற வசைச்சொல்லுக்கு அந்த காம்பு காரணமில்லை என்று சொல்ல வருகிறது.  யே மஜ்பூர் ஹை...!  உங்களிடமிருந்து வணக்கம் தவிர மற்ற கமெண்ட்ஸ் எதுவும் காணோமே என்று நினைத்தேன்.  உங்கள் பாணியும் தெரியும் என்பதால் காத்திருந்தேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!