வியாழன், 29 டிசம்பர், 2022

இறைவன் இருக்கின்றானா...அவன் இருந்தால் உலகத்திலே...

 உள்ளே நுழைந்தபோது, கண்களை மட்டுமே அசைக்க முடியும் நிலையில் இருக்கும் அவர் சத்தமாய் ஆ...  என்று குரலெடுத்து அழத்தொடங்கி விட்டார்.  சமாதானப்படுத்த பத்து நிமிடங்களாயின.

எப்படி இருந்தவர் இரண்டே வருடங்களில் எப்படி ஆகி விட்டார்.  அவர் ஒரு பெண்.  படிக்கும்போது என் வகுப்புத் தோழி.  மிகவும்...  மிகவும் சுறுசுறுப்பானவர்.  அடுத்தவர்களுக்கு உதவி என்றால் முதலிடத்தில் நின்றவர்.  ஒரு ஃபோன் செய்துவிட்டால் போதும்.  என்ன வகை உதவி என்றாலும் முடிந்த வரை செய்து விடுவார்.  நான் மட்டும் அல்ல, இன்னும் பல பேருக்கு அவரவர்களுக்கு வேண்டியவர்களுக்கு அவர் மூலம் உதவிகள் பெற்றிருக்கிறோம்.  நாங்களும் உதவி இருக்கிறோம்.  நண்பர்களுக்குள் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது உண்டு.

இரண்டு வருடங்களுக்கு முன் கணுக்காலில் ஏதோ வலி பிரச்னை என்று மருத்துவரை நாட, அவர்கள் சர்ஜரி சஜஸ்ட் செய்து நாள் குறித்து, செய்தார்கள்.  அவ்வளவுதான்.  வலியுடனேயே இருந்திருக்கலாம்.  கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீர்கெடத் தொடங்கியது.  சர்ஜரி செய்த மருத்துவரையும் இன்னும் சிலரையும் பார்த்தார்கள்.  பிஸியோதெரபி செய்யச் சொன்னார்கள்.  சரியாக அதை ஃபாலோ செய்வதில்லை என்று குற்றம் சுமத்தினார்கள்.

காலில் செய்யபப்டும் பல சர்ஜரிகள் இதுபோல பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.  இதை எல்லாம் யோசிக்கும்போது, நாளை நமக்கு ஏதாவது காலில் பிரச்னை வந்தால் கூட அறுவை சிகிச்சைக்கு மனம் துணியாது.  சமீபத்தில் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு ஏற்பட்ட கதியையும் பார்த்தோம்.  எங்கள் உறவு வட்டத்திலும் ஒரு அனுபவம் உண்டு.

வாக்கர் வைத்து நடக்கத் தொடங்கினார் என் தோழி.  கொஞ்ச நாட்களில் அதுவும் சிரமமானது. படுக்கையில் விழுந்தார்.  வாய் குழறத்தொடங்கியது.  பேச்சு போனது.

சென்ற வருடம் இதே டிசம்பரில் நான் பார்த்தபோது அவரால் கைகளை வைத்து அழகான கையெழுத்தில் எழுதியாவது காட்ட முடிந்தது.  நிறைய 'ஸ்ரீராமஜெயமு'ம், 'ஓம் சாய்ராமு'ம் நோட்டு முழுக்க எழுதி இருந்தார்.  எழுதிக் கொண்டிருந்தார்.  அதே நோட்டிலேயே எழுதி, எங்களுடனும் உரையாடினார்.  

இந்த வருடம் - ஆம், ஒரு வருடம் கழித்து மறுபடி இந்த டிசம்பரில்தான் பார்த்தேன் - விரல்கள் மடங்கி அதுவும் முடியவில்லை.  பாத்ரூம் போவதிலிருந்து எல்லாவற்றுக்கும் ஒரு ஆள் துணை வேண்டும்.  பெரும்பாலும் நீராகாரம்தான் சாப்பிட முடிகிறது.  தொடர்ந்து விடுப்பில் இருந்த அவருக்கு சென்ற வருடம் வேலையிலிருந்து கட்டாய ஒய்வு கொடுத்து விட்டார்கள்.  அவருடைய ஒரே மகன் பற்றி நான் இங்கு எதுவும் சொல்லப் போவதில்லை.  கணவர் மறைந்து ஏழெட்டு வருடங்கள் ஆகின்றன.

மருத்துவர் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.  பிசியோதெரபி நிறுத்தி விட்டார்கள். 

மடங்கிய விரலால், விட்டத்தைப் பார்த்துக்கொண்டு, படுக்கையில், பாராமல் அவர் எழுதும் எழுத்துகளை, எதிர் திசையில் நின்று வேகமாகப் படித்து, நம்மிடம் கேள்விகளை அவர் சார்பில் முன்வைக்கிறார் உதவியாளப் பெண். நாம் சொல்வது, நல்லவேளை, நண்பியின் காதில் விழுகிறது.

பழைய பாசிட்டிவ் நினைவுகளை நினைவுகூரும்போது வாய்விட்டு, விட்டு விட்டு குழந்தை போல சிரிக்க முடிகிறது.  சிரிப்புச் சத்தமும், அழுகைச் சத்தமும்தான் அவர் தொண்டையிலிருந்து வரும் சத்தம் இப்போதைக்கு.  அழுகை கூட இல்லை, ஓலம்.

மிகவும் வேதனையாக இருந்தது.  மனம் கனத்துப் போனது.  சில நெருங்கிய நண்பர்களுக்கு அலைபேசி விவரம் சொல்லி வந்து பார்க்கச் சொன்னேன்.  ஓரிருவர் வருத்தப் பட்டார்கள்.  சென்று பார்ப்பதாய் உறுதி அளித்தார்கள்.  ஒருவர் கேட்டார்..  "கேட்கவே ரொம்பக் கஷ்டமாயிருக்குடா..   பார்த்தால் தாங்க முடியாது..  நான் பார்ப்ப்பதால் அவருக்கு என்ன பயன்?  என்ன பண்ணப் போறோம்..?"

"அவருக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்கும்டா..."

"எவ்வளவு நேரம்? அப்புறம்?"

அப்புறம்?  ஒரு பிரச்னையும் இல்லாமல் - அல்லது இல்லை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் ஒன்றுமே இல்லாமல் திடீரென இப்படி ஏதாவது நிகழ்ந்து விடுகிறது.  விபத்துகள் தனி.  நீண்ட கால நோய்கள் தனி,  நாமும் கவனமாக இருப்போம்.  இது மாதிரி கணுக்காலில் அறுவை சிகிச்சை என்று சென்று இப்படி நேரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?  

சென்ற மாதம் சளி, ஓயாத இருமல் என்று மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு, இருமல் நிற்காமல், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, நுரையீரலில் பிரச்னை இருக்கிறது என்று அறிந்த இரண்டாம் நாளே காலமான இன்னொரு பெண்ணின் கணவர் பற்றிய செய்தி வருத்தம் தந்த ஒன்று.

இவரைப் பார்த்த கையோடு பணிபுரிந்து தற்சமயம் கீமோதெரபி சிகிச்சையில் இருக்கும் மற்றொரு பெண்மணியின் வீட்டுக்குச் சென்றோம்.

இவர் கதை வேறு.  தொடர்ந்து பல்வலி இருந்து கொண்டே இருந்திருக்கிறது.  முதலில் சில நாட்கள் மருத்துவரிடம் செல்லாமல் மாத்திரை சாப்பிட்டுப் பார்த்து, பின்னர் பல்மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார்.  எல்லோரையும் போலதான்.  ஏன், நானும் பல்வலி என்றால் மூன்று நாட்கள் பொறுத்துக் கொண்டால் அப்புறம் குறைந்துவிடும் என்று இருப்பவன்தானே..

ஃபில்லிங் செய்து, ரூட் கெனால் செய்தும் வலி நிற்காமல் இருக்க, மேலும் சோதித்ததில் புற்றுக்குள் கைவிட்டு பாம்பைக் கண்டது போல அலறி சிகிச்சைக்கு ஓடினார்கள்.  ஓரல் கேன்சர்.

கடந்த மாதம் அடையாறில் தங்கி அறுவை சிகிச்சை செய்து, கீமோக்கள் செய்து வரும் அவரைக் காணச்  சென்றோம்.  இடது தாவாங்கட்டையில் அறுவை சிகிச்சை செய்து, மார்பிலிருந்து சதை எடுத்து வைத்து மூடி இருக்கிறார்கள்.  முகம் வீங்கி. தொங்கும் தாடையுடன்  காணப்பட்டார்.  இன்னும் ஒரு கீமோ முடிந்தால் பழைய முகம் வந்து விடும் என்று சொன்னார்.  சந்தோஷமாக இருந்தது.  வந்து விடும் என்று நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.

===========================================================================================================

ரசிக்க---   இணையத்திலிருந்து...

கால் இன்னும் கம்பத்தைத் தாண்டவில்லை..  முகம் தாண்டி வந்து கொண்டிருக்கிறது..


இரண்டாவது படம்..  பந்து முகத்தில் பட்டிருக்கக் கூடிய வேகம் இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போதே தெரிந்திருக்கும்.  யாருமே பார்த்திருக்க முடியாத அரை வினாடிக்கு குறைவான தருணம்..   என்ன துல்லியமான புகைப்படம்...

==============================================================================================================


படித்ததிலிருந்து பகிர்வு...

​............அம்லேக் கஞ்சில் இருந்து பீம்பேடி சுமார் 28 மேல் மோட்டார் செல்லக்கூடிய சாலை ஒன்று அமைத்திருக்கிறார்கள் சுமார் 40 மோட்டார்கள் பிரயாணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தன.  இவைகளில் பஸ் இரண்டு மூன்று தான். மற்றவை மோட்டார் லாரிகள். இந்த லாரிகளில் பிரயாணிகளில் அடைத்துக் கொண்டு சென்றது வேடிக்கையாய் இருந்தது.  பஸ் முதலாளிகள் சிவராத்திரியை நன்றாக பயன்படுத்திக் கொண்டு பிரயாணிகளிடம் மூன்று ரூபாய் வரை டிக்கெட் காக வாங்குகிறார்கள்.  பகல் ஒரு மணிக்கு அம்லேக் கஞ்சை விட்டு புறப்பட்டோம்.  வழியில் பாதை மலைகளைக் குடைந்து சென்றது. 

குரங்காட்டிகளுக்கும் கரடி வித்தைக்காரர்களுக்கும் சிவராத்திரி என்பது நல்ல அதிர்ஷ்டம்.  போகிற வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இவர்கள் வித்தை காண்பித்து பணம் சேர்ப்பார்கள்.  வருடத்திற்கு ஒரு முறை வெளியூர் ஜனங்களை பார்க்க உள்ளூர் ஜனங்களுக்கும் உற்சாகம் உண்டாகிறது.  3 மணி நேரத்தில் 2000 அடி உயரத்தில் உள்ள பீம்பேடு என்ற ஊரை அடைந்தோம்.  பீம்பேடியில் இரண்டு தர்மசாலைகள் இருக்கின்றன.  நாங்கள் மோட்டாரை விட்டு கீழே இறங்கியதும் நாகரிகமாக உடை அணிந்த நேபாள் இளைஞர் ஒருவர் எங்களுடன் ஆங்கிலத்தில் பேசினார்.  

ஒரு தர்மசாலையில் எங்களுக்கு தங்க ஏற்பாடு செய்தார்.  அதற்கு விளக்கு எதுவும் இல்லை.  தண்டபாணி ஐயர் அந்த இளைஞரை தர்மசாலை மேனேஜர் என்று கருதி உத்தரவிட ஆரம்பித்தார்.  அந்த இளைஞர் தாம் நேபாளக் காலேஜில் படிக்கும் மாணவர் என்றும்,  தமது நண்பர்கள் சிலரை வரவேற்பதற்காக அங்கு வந்திருப்பதாகவும் கூறினார்.  அந்த இளைஞரின் பெயர் கோபால் ராஜ் பந்தாரி.  இவருடைய உதவியால் அந்த ஊரில் இருந்த ஒரே ஹோட்டலுக்கு ஜாகையை மாற்றிக் கொண்டோம்.  பீம்பேடியிலிருந்து காட்மாண்டு 20 மைல்.  இதற்கு இடையில் மூன்று மலைகளை தாண்ட வேண்டும்.  பிரயாணிகளின் மூட்டையை தூக்க ஏராளமான கூலிகள் இருக்கிறார்கள்.  

ஒரு கூலி 80 பவுண்டு நிறையுள்ள சாமான் வரை தான் தூக்குவான். ஒரு கூலிக்கு மேலே செல்ல நான்கு ரூபாய் கொடுக்க வேண்டும்.  இந்த கூலிகளுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை அரசாங்கத்தால் ஒரு காண்ட்ராக்டர் இடம் விட்டிருக்கிறார்கள்.  அவருக்கு பரியா நாயக் என்று பெயர்.  இங்குள்ள மார்வாரி நம்மிடம் நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டு கூலியின் பெயரையும் நம்பரையும் எழுதி நம்மிடம் ஒரு ரசீது கொடுக்கிறார்.  நாம் காட்மாண்டு நகரை அடைந்ததும் நம் சாமான்களை பெற்றுக் கொண்டதாக இந்த ரசீதில் கையெழுத்திட வேண்டும்.  நமது கையெழுத்துடன் கூடிய ரசீதை கூலிக்காரன் பரியா நாயக் ஆபீஸில் கொடுத்து அவனுக்குள்ள கூலித்தொகையை பெற்றுக் கொள்வான்.  நமது சாமான்களை பத்திரமாக நம்மிடம் சேர்ப்பிப்பது இந்த கான்ட்ராக்டரின் பொறுப்பு.  கூலிகள் இடம் நாமே நேரில் கூலியை பேசிக்கொண்டு பரியா நாயக்குக்கு கூலி ஒன்றுக்கு நான்கு அணா வீதம் கொடுத்துவிட்டு அமர்த்திக் கொள்ளலாம்.  இம்மாதிரியான கூலிகள் தூக்கிச் செல்லும் சாமான்களுக்கு பரியா நாயக் பொறுப்பாளி அல்ல. பொதுவாக யாத்திரிகர்கள் பரியா நாயக் மூலம் கூலிகளை ஏற்பாடு செய்வது தான் நல்லது. மலை பிரயாணம் மிகவும் கஷ்டமானது என்று கேள்விப்பட்டோம். சுவாமிநாதன் நடந்து செல்வது என்ற உறுதியுடன் இருந்தார்.  நான் டோலியில் செல்வது என்ற உறுதியுடன் இருந்தேன்.  ஆனால் தண்டபாணி ஐயர் தான் டோலியில் செல்வதா அல்லது நடந்து செல்வதா என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.   கடைசியாக நடந்து செல்வது என்ற முடிவுக்கு வந்தார்.

என்னை தூக்கிச் செல்வதற்கு டோலிக்காரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லவா?  அந்த ஊர் டோலிக்கு வில்லங்காடு என்று பெயர்.  சாதாரணமாக டோலியை நான்கு பேர் தூக்குவது வழக்கம்.  கனமுள்ளவர்களை ஐந்து அல்லது ஆறு பேர்கள் தூக்குவார்கள். டோலியை வாடகைக்கு பேசினால், அவர்கள் டோலியில் செல்ல வைக்கும் ஆளை பார்க்க வேண்டும் என்கிறார்கள்.  என்னைப் பார்த்ததும் அவர்கள் முகம் சட்டென்று மாறுகிறது.  என்னை தூக்க 6 கூலிகள் வேண்டும் என்றார்கள்.  அன்று மாலை முழுவதும் கூலிக்காரர்கள் என்னை பார்ப்பதும், பார்த்தவுடன் மாட்டேன் என்று கூறுவதுமாகவே இருந்தது.  ஒரு டோலிக்காரன் என்னை தூக்க 5 கூலிகள் வேண்டுமென்றான்.  நான்கு கூலிகள் தூக்குவதற்கு மேல் கனமாய் இருப்பது அவமானம் என்று கருதினேன்.  நான்கு கூலிகள் என்னை தூக்குவதாக இருந்தால், அவர்களுக்கு ஐந்து கூலிகளுக்கு உள்ள தொகையை கொடுக்கவும் தயாராக இருந்தேன்.  கடைசியாக ஒரு டோலிக்காரன் 4 கூலிகளைக் கொண்டு என்னை தூக்குவதாக ஏற்பாடு செய்தான்.  நான்கு கூலிகளுக்கும் மொத்த கூலி 16 ரூபாய் தான்

-பயண அனுபவங்கள் 0 ஏ கே செட்டியார்.  நேபாள் பயண அனுபவம்.

=================================================================================================================

கண்கள் பனித்தன;  இதயம் ஈரமானது...




=========================================================================================================


எந்த துக்கத்தைக்
கொண்டாட
குமுறி அழுகிறது
வானம்?

செப் 23 2013

=================================================================================

பொக்கிஷம் ..

இதுவும் ஜெயராஜ் ஓவியம் என்றால் நம்பணும்...

கண்டு பிடிச்சேன்..  கண்டு பிடிச்சேன்....

ஜெயராஜ் ஓவியங்களை விட மாயா ஓவியங்களுக்கு அப்போ கிராக்கி ஜாஸ்தி.  மணியன் கதைகளுக்கெல்லாம் மாயாதான்!

அட..  என்னப்பா இப்படிச் சொல்லிட்டே....

மர்யாத குடு சாமீ....


இப்போதெல்லாம் இது வருகிறதா என்று தெரியவில்லை.

117 கருத்துகள்:

  1. இறைவன் இருக்கின்றானா? -- என்ற கேள்வியே அபத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் ஏன் கண்ணதாசன் அப்படி கேட்டார்?!

      நீக்கு
    2. அபத்தம் என்று சொல்ல முடியாது அண்ணா. ஒவ்வொருவரின் அனுபவம் ஒவ்வொரு மாதிரி. கஷ்டங்களே வாழ்க்கையாகிப் போனவர்கள் மனதில் விரக்திதான் மிஞ்சும். மனித மனங்கள். அப்போது தத்துவம் பேச முடியாது அவர்களிடம். Don't talk philosophy to a beggar என்பது போன்றுதான்.

      கீதா

      நீக்கு
  2. அப்புறம் இறை நம்பிக்கை கொண்ட கண்ணதாசன் ஏன் அப்படிக் கேட்டார் என்று உங்கள் கேள்வி இருந்திருக்க வேண்டும்.
    அதான் கவிஞனின் சாமர்த்தியம். பின்னால் தான் சொல்லப் போவதற்கு முன்னாலேயே அச்சாரம் போட்டு ஆரம்பித்து வைப்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையே இங்கும் அப்ளை செய்து கொள்ளலாமே...   உரிக்கும் நிலைகளில் சில சமயங்களில் அந்தக் கேள்வி வந்து விடுகிறது!

      நீக்கு
  3. எந்த சந்தோஷத்தைக்
    கொண்டாட
    ஆர்ப்பரிக்கிறது
    இந்த வானம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்தாலும் கண்ணீர் வரும்தான்.  ஆர்ப்பரித்தால் பொத்துக்கொண்டு ஊத்துமா என்ன!  ஆனாலும் மாற்றுச்சிந்தனை, பாசிட்டிவ்!

      நீக்கு
  4. ஆக.பேண்ட் - சட்டை போடாத பெண்கள் படங்களில் எல்லாம் வித்தியாசம் காட்ட ஜெயராஜ் முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் தீட்டும் சில வளைவுகளுக்கு ( curve) பேண்ட் -- சட்டை பாணி அப்பட்டமாக ஒத்துழைத்து அதை ஜெயராஜ் பாணியாக்கி விடுகிறது. அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ மெல்ல மெல்ல சந்திரமுகியாய் பின்னர் மாறினார் என்று நினைக்கிறேன். குமுதம், சாவி கைங்கர்யம்!

      நீக்கு
    2. கர்ர்ர்ர்.... சந்திரமுகியாமுல்ல.... எங்களுக்கு கர்வ் ஜெ.... தான் மிகப் பிடித்தமானவர். அவர் ஓவியங்களை நிறைய வரைந்துபார்த்திருக்கிறேன். என்ன ஒண்ணு.... பெருமையா எல்லோரிடமும் காட்டமுடியாது...ஹாஹாஹா

      நீக்கு
  5. நீங்க சுருட்டு
    நான் சிகரெட்
    அண்ணன் பீடி
    அதான் நம்
    குடும்ப கதம்பம்

    --- பையனின் பதிலாக கற்பனையில் ஓடியது.

    பதிலளிநீக்கு

  6. ஆவியில் சாவி கதை என்றால் கோபுலு படம் வரைந்திருப்பார்.
    சில பத்திரிகை ஓவியர்கள் சினிமா நடிகர்
    நடிகைகளின் முக பாவங்களை கற்பனை பண்ணிக் கொள்வார்களாம்.
    அந்த விதத்தில் பார்த்தால் மணியனின் இந்த ஓவிய ஆண் பெண்
    எந்த நடிகர் -- நடிகையாக இருக்கும்? யூகியுங்கள், பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. ** சில பத்திரிகை ஓவியர்கள் படம் வரையும் போது

    பதிலளிநீக்கு
  8. டைமண்ட் கவிஞர் என்றாலே இப்பொழுதெல்லாம் எனக்கு இன்னொருவர் நினைவு டக்கென்று வந்து விடுகிறது. யார் அவர் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. திருடர்களும்
    விருந்தாளிகளே
    -----------------------------
    ----------------------------
    அவ்வளவு தான்
    வித்தியாசம்.

    (யாரேனும் பூர்த்தி செய்ய முயற்சிக்கலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. திருடர்களும்
      விருந்தாளிகளே..
      நம்மால் அவர்களும்
      பசி தீர்கின்றார்கள்!..

      நீக்கு
    3. சொல்லிவிட்டு பறித்துச் செல்கிறார்கள்..

      நீக்கு
    4. ..அதிதி தேவை பவ - என்பது நமது கலாச்சாரம்..//

      தேவை ? டைப்போவாக இருக்கும்...

      நீக்கு
  10. முதல் பகுதி மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துகிறது. மென்மையாக எழுதியிருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம்.

    மருத்துவர்களை நினைத்தாலே அச்சம் ஏற்படுத்துகிறது. அதிலும் ஆபரேஷனா? ஆளை விடுங்க சாமீ என்று சொல்லத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லவேண்டும் என்று தோன்றியது. இப்படியெல்லாம் இருக்கிறது என்று தெரிய வேண்டாமா?

      நீக்கு
    2. நாலு வருஷமா பாதவலி இருக்கு. 7 1/2க்கு அப்புறம் சரியாகுமா இல்லை பழகிடுமான்னு தெரியலை. ஒண்ணு மட்டும் தெரியுது. மருத்துவர் பக்கம் தலை வைக்கக்கூடாதுன்னு

      நீக்கு
    3. காலில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் அவ்வப்போது தவறாவதை அடிக்கடி பார்க்க முடிகிறது.

      நீக்கு
    4. சொல்லவேண்டும் என்று தோன்றியது. இப்படியெல்லாம் இருக்கிறது என்று தெரிய வேண்டாமா?//

      அதே! தெரிந்து கொண்டால்தான் நல்ல்லது ....விழிப்புணர்வு.

      கீதா

      நீக்கு
  11. குத்துச் சண்டையில் காண்பிக்கப்படும் க்ளோசப் காணொளிகள் குத்துவாங்கியவரின் முகத்தை இப்படித்தான் காண்பிக்கும்.

    பதிலளிநீக்கு
  12. காய்ந்து கிடந்த நிலங்களை, நீர்நிலைகளைப் பார்த்து, தாயின் பொங்கும் பரிவுபோல வர்ஷிப்பதாகத் தோன்றவில்லையா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோன்றலாம். அப்போது என்ன மூடோ அதுதான்!

      நீக்கு
    2. தாயின் பொங்கும் பரிவுபோல வர்ஷிப்பதாகத் தோன்றவில்லையா உங்களுக்கு?//

      ஹாஹாஹா நெல்லை இதையுமே இப்படி நினைத்துப் பாருங்கள்....

      தாயின் பொங்கும் பரிவு போல வர் ஷிக்கிறேன். ஆனால் என் மக்கள் அதை சேமித்து நிலத்தை வளமாக்காமல் தண்ணீர்க் கஷ்டத்தைப் பூர்த்தி செய்யாமல் வீணாக்குகிறார்களே....ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீரை எப்படி வீணாக்குகிறார்களே நான் கொடுத்தும் நிலங்கள் காய்கிறதே நீர் நிலைகள் வரள்கிறதே என்று தன் மக்களை நினைத்துப் பொங்கி அழுகிறதாகக் கூடக் கொள்ளலாமே...

      குழந்தைகளுக்கு எவ்வளவு கொடுத்து உதவினாலும் ஊதாரிகளாய் இருந்தால் பெற்றோர் பொங்கி அழுவதில்லையா? அது போலத்தான்

      கீதா

      நீக்கு
    3. தண்ணீர் விஷயத்தில் மனிதர்கள் நாம் ஊதாரிகள்தான்.

      கீதா

      நீக்கு
    4. ஊதாரிகளாய் இருந்தால் பெற்றோர் பொங்கி அழுவாங்களா? உன் காசுல எப்படி வேணும்னாலும் கருத்துக்களோ யாரு தண்ணி தெளிச்சி விட்டுடுவாங்க

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை எங்கூர்ல திண்ணைல ஊர்க்கதை பேசறப்ப அப்படித்தான் அழுவாங்க....இப்படி இருக்கானேன் என்னத்த செய்யன்னு....என் மாமா, பாட்டியிடம் வந்து அழுது நீங்க அவன் கிட்ட சொல்லி கொஞ்சம் திருத்துங்கன்னு (பாட்டியும், மாமாவும் (மாமா ஆசிரியர்) ஊரையே ஆட்சி செய்தவங்க!!!)

      கீதா

      நீக்கு
  13. வயிரமுத்து பகுதியைப் படித்தபிறகு, ஜெயக்குமார் சார் பகிர்ந்த, புஷ்பா தங்கதுரை கதை எனக்கு நினைவில் வர, என்ன காரணமாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா.... தெரியலையே நெல்லை....

      நீக்கு
    2. குணக்கேடுள்ளவருக்கு குண ரத்தினம் என்று பெயரை வைத்தது காரணம் ஆக இருக்கலாம். 

      நீக்கு
  14. ஏ கே செட்டியாரின் பயண அனுபவங்களைப் படித்தபிறகு, நேற்று, இவ்வளவு கோயில்களின் தரிசனங்கள், நெல்லையில் துவங்கி முக்திநாத் வரையிலான, எனக்கு வாய்த்திருந்திருக்கிறதே என்ற பெருமிதம் புஸ் என ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசதிகள் அதிகம் இல்லாத காலத்தில் பயணம் செய்த அவரது அனுபவங்கள் நிச்சயம் வாசிக்கபபடவேண்டியவை நெல்லை.  அதோடு பல இடங்களில் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான நடை.

      நீக்கு
  15. சென்றுகாண்டற்கு அரிய கோவில் சிங்கவேள் குன்றமே என திருமங்கையாழ்வார் பாடின அஹோபிலம் கோயில்களை ஓரளவு சுலபமாகவே தரிசித்துவிடுகிறோம். சாளக்கிராமத்துக்கு அவரால் போய்ச்சேர முடியாமல் சிறிது தூரத்திலிருந்தே அவர் பாடிவிட்டார். நவீன காலம் இந்தத் தரிசனங்களைச் சுலபமாக்கியிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அந்தக் காலத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு சென்று சேர்வதற்கு எவ்வளவு நாட்கள் பிடித்திருக்கும்!

      நீக்கு
    2. போய்ப் பார்ப்பதற்கு அரிய கோயில்களில் ஒன்றான அஹோபிலம் நவ நரசிம்மர்களையும் தரிசித்திருக்கேன். எங்கள் பயண ஏற்பாட்டாளர் அப்போவே சுமார் பத்து வருஷங்கள் முன்னரே என்னை மலை ஏறுவதிலிருந்து தடுத்தார். கீழ் அஹோபிலத்திலேயே தங்கச் சொன்னார். நான் பிடிவாதமாக மலை ஏறி நவ நரசிம்மர்களையும் தரிசித்தேன். ஆனால் இன்று? கருவிலிக் கோயில்களுக்கோ, பரவாக்கரை பெருமாள் கோயிலுக்கோ சென்று பார்க்க முடியலை. வண்டியிலிருந்து இறங்கிப் படிகள் ஏறித் தரிசிக்க முடியலை.ரொம்ப வருத்தம். கும்பாபிஷேஹத்திற்குப் பின்னர் மாரியம்மனைத் தரிசிக்கவில்லை என்பதால் அங்கே மட்டும் பிடிவாதமாகப் போயிட்டு வந்தேன்.

      நீக்கு
    3. வருத்தமாய் தான் இருக்கிறது கீதா அக்கா. சீக்கிரம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  16. இந்நாள் எல்லார்க்கும் இனியதாக அமையட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  17. @ நெல்லை..

    // முதல் பகுதி மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

    மென்மையாக எழுதியிருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம்.

    மருத்துவர்களை நினைத்தாலே அச்சம் ஏற்படுத்துகிறது.

    அதிலும் ஆபரேஷனா?..

    ஆளை விடுங்க சாமீ என்று சொல்லத் தோன்றுகிறது.. //

    அப்படியே வழி மொழிகின்றேன்..

    நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  18. டைமண்ட் அவர்களது கட்டுரைக்குள் சில கேள்விகள் எழுகின்றன..

    அவரவரும் அவரவர் கர்மாக்களுக்கு வந்திருக்கையில்
    நாம் எதற்குக் கேள்வி கேட்பது?..

    நமக்கு என்ன தகுதி!?..

    பதிலளிநீக்கு
  19. இது எந்த அர்த்தத்தில்?..

    அதிதி தேவோ பவ - என்பது நமது கலாச்சாரம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  கலாச்சாரங்கள் எப்போதுமே  மதிக்கபப்டுவதில்லை!

      நீக்கு
  20. தேவோ - என்பதை தேவை என்று குழப்பி விட்டது பிளாக்கர்!..

    பதிலளிநீக்கு
  21. யார் யாரை, எப்படியெல்லாம் புகழ்ந்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள், அதன்மூலம் என்னென்ன சாதித்துக்கொள்ளலாம் என்று ’பிழைக்க’த் தெரிந்தவர்களை, நாமும் அவ்வப்போது படம்போட்டுப் பார்த்துக்கொள்கிறோம்.. இல்லையா? நடக்கட்டும் வியாழன்..!

    பதிலளிநீக்கு
  22. //அவருடைய ஒரே மகன் பற்றி நான் இங்கு எதுவும் சொல்லப் போவதில்லை//

    புரிந்து கொள்ள முடிகிறது ஜி

    அவர் நலம் பெற வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் நண்பர்களின் நிலை படிக்கும்போதே கவலை கொள்ளவைக்கிறது. பிரார்த்திக்கிறேன்.

    ஜோக்ஸ் சிகரெட் ரின்கள் பதிலடி ஹா...ஹா.

    பதிலளிநீக்கு
  24. இந்த வாரம் வியாழன் கதம்பம் சுமார் தான். வியாழன் நெகடிவ் செய்திகளுக்கு இடம் ஆகி விட்டதோ என்று ஒரு தோணல்!

    ஒவ்வொரு ஸ்பெஷல் டாக்டரும் அவருக்கு நன்கு தெரிந்த நோயை வரும் பேஷண்டிடம் கண்டு அதற்கு சிகிச்சை அளிப்பதில் முன் நிற்கிறார். பக்க விளைவுகளை பற்றி சிந்திக்காதது தான் குழப்பங்களுக்கு காரணம். இதுவே அமெரிக்கா போன்ற நாடாயிருந்தால் பெரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருக்கும் (மறைந்த ஸ்ரீ தேவி அம்மா கேஸ் நினைவில் வருகிறதா?)

      ஏ கே செட்டியார் பயண கட்டுரைகளை பார்த்துதான் மணியன் பயனாக கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் என்பது சரி. 

    மழை அமுதம் 
    இல்லையேல் 
    உயிர்கள் இல்லை 
    ஆயினும் திகட்டுகிறதே
    சர்க்கரையாக 
    இப்படிக் கொட்டும்போது.

    வாஸ்மால் விளம்பரம் கண்டபோது நான் ஒவ்வொரு மாதமும் அப்பாவுக்கு நரை தைலம் (இது தான்) வாங்கிக் கொடுப்பது நினைவில் வந்தது. லோமா ஹேர் ஆயில் என்று வேறு ஒன்றும் இருந்தது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாழன் கதம்பம் நன்றாய் இருக்க என்ன செய்ய வேண்டும்?  நெகட்டிவ் செய்தி அல்ல அது.  நிகழ்வு.  அதைத் தெரிந்து கொள்ளாமல் நல்ல செய்திகளிலேயே ஆழ்ந்திருப்பது எப்படி!

      சில பக்க விளைவுகளை பற்றி மருத்துவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.  நீங்கள் சொல்லி இருக்கும் கவிதையும், வாஸ்மால் விஷயமும் சுவாரஸ்யம்.

      நீக்கு
    2. ஜெயராஜின் ஆரம்பகாலப் படங்களைத் தேடி எடுத்துப் போடறீங்க போல. குமுதத்தில் வெளிவந்த அந்தக் கதை படிச்ச நினைவும் கொஞ்சம் இருக்கு. நோய்களுக்குச் சிகிச்சை மட்டுமல்ல, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைக் கூட நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். ஆகவே இவற்றை நெகடிவ் செய்திகள் என ஒதுக்க முடியாது. கால்ப் பந்தாட்ட வீராங்கனையின் நிலைமையைப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் எடுத்துச் சொல்லி இருந்தனவே! மருத்துவரின் அலட்சியம் என! உயிரே அல்லவா போய்விட்டது?

      நீக்கு
    3. ஆமாம். ஆரம்ப காலத்தில் ஜெயராஜ் குமுதத்தில் தானே வரைந்து கொண்டிருந்தார்!நீங்கள் சொல்லி இருப்பது போல இது மாதிரி விவரங்களையும் தெரிந்து கொள்வது தான் நல்லது...

      நீக்கு
  25. les miserable என்ற நாவலை நினைவு படுத்தியது திருடர்களும் விருந்தாளிகள் என்ற வாக்கியம். இது ஏழை படும் பாடு என்று நாகையா நடித்து திரைப்படம் ஆகவும் வந்தது. 

    பதிலளிநீக்கு
  26. இறைவனுக்கும் மேலானவர்கள் என்று(ம்), சிலர் சொல்லி வாழும் கீழ்கள்# உள்ளார்களே...

    #கீழ்கள் - தாத்தாவின் கயமை அதிகாரத்தில் வருவது...

    பதிலளிநீக்கு
  27. உங்கள் நண்பர்களின் நிலைமையைப்பற்றி படித்தபோது மனதிற்கு வேதனையாக இருந்தது. இந்த காலத்தில் நல்ல உடல்நலத்துடனிருக்க மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை தான் திரும்ப வந்தது.
    நான் முன்பு கோவையிலுள்ள ' வெஜிடபிள் கிளினிக் ' பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அங்குள்ள மருத்துவர் திரு அருண் பிரகாஷ் எப்பேர்ப்பட்ட வியாதிகளையும் குணப்படுத்தி விடுகிறார் என்பதையும் சிலரது பேட்டிகள் மூலம் எனக்கு தெரியும். சமீபத்தில் என் சினேகிதியின் கணவரின் பிரச்சினையை [ தன் வசத்திலில்லாது சிறுநீர் கழிந்து கொண்டேயிருப்பது, சில சமயம் இரத்தமும் கூடவே போவது] சரி செய்து விட்டார். அவரை தொடர்பு கொண்டு கூட பார்க்கலாம். மிகவும் முடியாதவர்க்ளை, வயதானவர்களை அவர் ஆன்லைனில் பார்த்து மருத்துவமும் சொல்கிறார்.

    ஓவியர் ஜெயராஜின் ஓவியங்கள் ஆரம்ப காலத்தில் இப்படித்தான் அழகாயிருக்கும். அப்புறம் தான் தூரிகையின் பாதை திசை மாறிப்போய் விட்டது! மாயாவின் ஓவியம்! ரொம்ப நாட்களுக்குப்பிறகு பார்க்க முடிந்தது மகிழ்வாக இருந்தது.

    " இறைவன் இருக்கின்றானா" ? அருமையான பாடலை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்! நன்றி! அந்தப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும்!
    " இறைவன் இருக்கின்றானா-மனிதன் கேட்கிறான்.
    அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
    நான்ஆஸ்திகனானேன், அவன் அகப்படவில்லை.
    நான் நாத்திகனானேன், அவன் பயப்படவில்லை!"
    அதற்கு கதாநாயகியிடமிருந்து எதிர்க்கேள்வி வரும்.
    " மனிதன் இருக்கின்றானா, இறைவன் கேட்கிறான்.
    அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?
    நான் அன்பு காட்டினேன், அவன் ஆட்கொள்ளவில்லை.
    என் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை"
    கண்ணதாசன் என்றுமே ஒரு அருமையான கவிஞர் தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா...  நாகர்கோவிலுக்கு அருகே இதேபோல ஒரு ஆயூரத்வத்த க்ளினிக் உண்டு.  அங்கு தோழியைக் காட்டச் சொன்னேன்.  பயனில்லை.  என்ன செய்ய?  விதி.  காலம் கடந்து விட்டது.  எ ஆமாம் ஜெயராஜின் ஆரம்ப கால ஓவியங்கள் இப்படிதான் இருக்கும்.  சந்தைப்பேட்டை நினைவிருக்கிறதா?பாடல் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.  எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

      நீக்கு
    2. ஶ்ரீராம்.... மனோ சாமிநாதன் மேடம் சொன்னது காய்கறி கிளினிக். நிச்சயம் இதனை ரெஃபர் செய்யுங்க. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

      நீக்கு
  28. ஸ்ரீராம் தலைப்பு என்னை ஈர்த்தது. இதை அடிக்கடி நான் சொல்வது வழக்கம். சமீபத்தில் கூட உங்களிடம் சொன்ன நினைவு!!!!!

    கீதா வழக்கமா சொல்வதற்கும் இதற்கும் முரண் உள்ளதேன்னு தோணுதா?!! ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா..  என் இன்றிய நிலைக்கு நானும் இப்படி பாடிக்கொண்டிருக்கிறேன்.  ஆனால் இறைவன் அவ்வப்போது எனக்கு நல்ல பதில்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

      நீக்கு
  29. ஸ்ரீராம் முதல் பகுதி ரொம்ப சோகமாக ஆகிவிட்டது. என்ன சொல்ல என்று தெரியவில்லை ஸ்ரீராம். சோகம் பயம் எல்லாம் அப்புகிறது வாசிக்கும் போது. தலைப்பு தான் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

    கணுக்கால் - அந்த சர்ஜரி சரியாகச் செய்யப்படவில்லையோ?! அப்படித்தான் தோன்றுகிறது. என்னவோ போங்க...பாவம்....அவர்...

    நட்புகள் யாரேனும் அவ்வப்போது மாற்றி மாற்றி போய்ப் பார்த்து வரலாம்தான்...ஆனால் எல்லோருக்கும் அவரவர் யதார்த்த நடைமுறைப் பிரச்சனைகள்...இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகம் என்று சொல்வதைவிட விழிப்புணர்வு என்று சொல்லலாமா?

      நீக்கு
  30. இரு படங்களுமே துல்லியமான படங்கள். டக்கென்று கேப்சர்! செம ஷாட்!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஏ கே செட்டியார் அவர்களின் பயணக் கட்டுரைத் துளியை ரசித்து வாசித்தேன். முதல் வரிகளே சொல்லியது அக்காலப் பயணம். இவர் பயணக் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார் . பயண இலக்கியம் முதன் முதலில் எழுதியவர் இவர்தான் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுரை முழுவதுமே ரசிக்கலாம் கீதா.

      நீக்கு
    2. தமிழ்த்துணைப்பாடத்தில் ஏ.கே.செட்டியாரின் பயணக்கட்டுரைத் தொகுப்பு ஒரு வருஷம் படிச்சேன். ஒன்பதாம் வகுப்பிற்குப் பின்னர் தமிழ் இரண்டாம் தாளே இல்லை. ஆகவே இலக்கணம் என்றால் எனக்குச் சுத்தம்! ஒண்ணுமே புரியாது.

      நீக்கு
  32. கலைஞர் பற்றிய விஷயம் சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கவிதை மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம். இரண்டே வரிகள் (நீங்க மடக்கிப் போட்டா நாங்க 4 வரின்னு சொல்லிடுவோமா என்ன!!!!!) ஆனால் அதில் சொல்லியிருக்கும் கருத்து ஆழமானது! அர்த்தமுள்ள கவிதை...செம

    கீதா

    பதிலளிநீக்கு
  34. ஓவியங்கள் ரசித்தேன். ஜெயராஜ் ஓவியங்கள் என்றால் பின்னால் வரைந்தவைதான் நினைவுக்கு வரும். மாயா வரையும் ஓவியங்களில் பெண்களின் கண்கள் இப்படிப் பெரிதாக இருக்கும் இல்லையா?

    திருடன் ஜோக், குறவர் ஜோக் ரசித்தேன்....சிரித்துவிட்டேன்.

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணு பெருசா இருந்தால்தானே எதுக்கு உள்ளவர்கள்ட பேசிக்கிட்டே ஓரக்கண்ணால் மாமியார் என்ன செய்யறார், இன்னொரு ஓரக்கண்ணால் கணவன் சகோதரி என்ன செய்யறார்னு பார்க்கமுடியும்

      நீக்கு
    2. கண்களைக் கடல் என்று சொல்வார்கள்.

      நீக்கு
  35. தோழியின் துக்கம் நம்மை அழுத்துகிறது. பொதுவாக உடம்பில் டாக்டரின் கத்தி படாமல் பார்த்துக்கொள்வது நல்லது எனத்தான் தோன்றுகிறது. மருந்து சாப்பிட்டு குணமானால் ஆகட்டும். இல்லையெனில் மண்டையைப்போட்டுவிடுவதே உசிதம் என்கிற சிந்தனைதான் மனதில் வருகிறது.

    இருந்தும், ப்ராரப்த கர்மா என்றெல்லாம் இருக்குமே.. எது நம்மை எங்கே கொண்டுபோய் விடுமோ.. யாருக்குத் தெரியும்?

    பதிலளிநீக்கு
  36. அந்தப் படம் ஜெ.. வரைந்ததா! வேறொரு ஜெ.. இருந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  37. உங்கள் நண்பர்கள் படும் வேதனை மனதை கனக்க வைக்கிறது படிக்கும் போது. கடவுள் ஏன் இத்தனை துன்பத்தை கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
    இறைவன் நல்ல நட்புகளை கொடுத்து இருக்கிறார்.
    ஆறுதல் வார்த்தைகளும் , நம்பிக்கையும் கொடுங்கள்.
    மீண்டு வருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ போன ஜென்ம கடன் என்றுதான் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  38. துல்லியமான படம் பயத்தை தருகிறது.
    மழை கவிதை முதல் பத்தியை படித்து இவ்வளவு கஷ்டங்களா! என்று மனம் உருகி அழுவது போல இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  39. ஆனந்தி பாடல் இறைவன் இருக்கின்றானா? நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  40. மற்ற பகுதிகளும் நன்றாக இருக்கிறது. உங்கள் நட்புகள் உடல்துன்பத்தை , மனதுன்பத்தை தாங்கும் மனம் வலிமையை , இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
    இறைவன் நினைத்தால் அனைத்தையும் சரி செய்யலாம். அவரை சரண் அடைவதை தவிர வேறு வழி இல்லை.

    பதிலளிநீக்கு
  41. முதல் பகுதி மிகவும் வருத்தமாக இருந்தது. டாக்டர்கள் மீது கேஸ் போட முடியாதா?
    குடும்ப குத்து விளக்காக படம் போட்டுக் கொண்டிருந்தவரை கவர்ச்சி கன்னிகளாக படம் போட வைத்தது(அது நன்றாக இருக்கும் என்பது வேறு விஷயம்) யார்? சுஜாதா?

    பதிலளிநீக்கு
  42. மேலே கண்ட கருத்தை அனுப்பியது அடியேன் பா.வெ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்தது. ஏனென்றால் மிச்ச அனானி கீதா பெயருடன் வந்து விட்டார்.

      நீக்கு
  43. மணியன், லட்சுமி சுப்பிரமணியம், தாமரை மணாளன் கதைகளுக்கு மாயா, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுக்கு ஜெ.., இந்துமதி கதைகளுக்கு ம.செ.(மணியன் செல்வன்) இந்துமதியின் மணல் வீடுகள் கதைக்கு ம.செ. வரைந்த ஓவியங்களையும், தினமணி கதிரில் புஷ்பா தங்கதுரை எழுதிய என் பெயர் கமலா, சிவப்பு விளக்கு கதைகள்(அந்த வயதில் அது சுத்தமாக புரியவே இல்லை) அனுராதா ரமணன் கதைகளுக்கு மாருதி, சாண்டில்யன் என்றால் லதா, நகைச்சுவை கதைகளுக்கு ராமு என்று அப்போதெல்லாம் உண்டு.

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சரியாக கணக்கு கொடுத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. பாலகுமாரன்- ம.செ, நகைச்சுவைக் கதைகள் - ஓவியர் செல்லம். அப்புசாமிக்கு ஜெ..

      நீக்கு
    3. அப்பறம் அரஸ், மனோ போன்ற ஓவியர்கள் வந்தார்கள்.

      நீக்கு
  44. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொன்றையும்பற்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப் பின் வருகை. நல்வரவு திரு ரூபன்.

      நீக்கு
  45. ரூபன்,
    எப்படி இருங்கீங்க?
    நெடு நாட்கள் கழித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  46. வாஸ்மால் இப்போவும் இருக்கு. ஆரம்பக்கட்டுரை உங்கள் சிநேகிதிகள் குறித்தது படித்து மனம் வருத்தப்படுகிறது. வேதனை அடைகிறது. என்ன செய்ய முடியும்? இறைவன் இப்படித்தான் பலரையும் சோதனை செய்கிறான். அதிலும் நம்பிக்கையுடன் இருக்கும் அந்த ஓரல் கான்சர் பெண்! முகத்தைக் கூட அசைக்க முடியாமல் மடங்கின விரல்களாலேயே எழுதிப் பழகும் பெண்!

    பதிலளிநீக்கு
  47. என்னோட வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கும், முழங்கால் மூட்டுப் பிரச்னைக்கும் சிறப்பு மருத்துவர் யாரிடமும் போக வேண்டாம் என எங்கள் குடும்ப மருத்துவர்கள் முன்னரே எங்களை அறிவுறுத்தி இருக்காங்க. இப்போவும் 2021 ஆம் ஆண்டில் வந்த கால் வீக்கத்துக்கு வாஸ்குலர் சர்ஜனிடம் போக வேண்டாம் என அப்போப் பார்த்த ஆங்கில மருத்துவர் கூறினார். இது நிச்சயமாய் நரம்புப் பிரச்னை தான். ஆகவே மெதுவாகவே குணம் தெரியும். அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் பிரச்னை ஏற்படும் என்றும் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்ப மருத்துவராய் இருப்பதால் வரும் ஆதாயம்.  நல்ல செயல்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!