சனி, 25 மார்ச், 2023

பெண் போலீசுக்கு பாராட்டு & நான் படிச்ச கதை (JKC)

 


===========================================================================================



==================================================================================================================


ஒன்பது உலக சாதனைகள்; குறளுக்காகக் குரல் கொடுக்கும் தமிழாசிரியை!
ர.பிரேம்குமார் & வெ.தேனரசன் தமிழாசிரியை சீதளா

``நான் இரண்டாம் வகுப்புப் படித்தபோது ஏற்பட்டது திருக்குறள் மீதான பிரியம். வயது கூடக் கூட அதன் மீதான வியப்பும் வளர்ந்துகொண்டேதான் வருகிறது. திருக்குறள் கொண்டு நான் சாதனைகள் செய்வது, அதன் புகழை என்னால் முடிந்த அளவுக்கு நானும் கொண்டு சேர்க்கவே’’ என்கிறார் செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியை யாகப் பணியாற்றும் சீதளா தேவி.

திருக்குறளை வெற்றிலை, சாக்பீஸ் உள்ளிட்ட ஒன்பது பொருள்களில் எழுதி, ஒன்பது உலக சாதனைகள் புரிந்துள்ளார். அவரை சந்தித்தோம்.

``தமிழில் எம்.ஏ, பி.எட், எம்.பில் பட்டம் பெற்றேன். கல்லூரியில் படித்தபோது 2004-ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகை யாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விகடன் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினேன்.

விகடன் எனக்குத் தந்த அறிமுகம் பெரிது. பின்னர், பி.ஏ வரலாறு மற்றும் பி.ஏ ஆங்கிலப் பட்டமும், மூன்று கௌரவ முனைவர் பட்டமும் பெற்றேன். தமிழ் இலக்கியப் பரப்பில் எத்தனையோ நூல்கள் இருந்தாலும், என்னைக் கவர்ந்தது திருக்குறள்தான்.



எனவே, திருக்குறள் பயிர் தமிழ் வயலில் செழிக்க, திருக்குறளை வைத்து உலக சாதனைகள் செய்ய முடிவு செய்தேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1,330 குறட்பாக்களையும் வெற்றிலை, சோப்பு, சாக்பீஸ், புடவை, மர க்ளிப், பானை, ஃபைபர் தட்டு, இந்திய மேப், சோழி என ஒன்பது பொருள்களில் எழுதி ஒன்பது உலக சாதனைகள் புரிந்திருக்கிறேன்.

குறட்பாக்களை எழுதிய புடவையை, காரைக்குடியில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்குச் சூடக்கொடுக்க வைத்திருக்கிறேன்’’ என்கிறார் ஆர்வத்துடன். ``1,330 குறட்பாக்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, உங்கள் வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடியுங்கள் என்று என் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறேன்.

அப்படி எனக்குப் பிடித்த, நான் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வரித்துக்கொண்ட குறள்...

அகழ்வாரை தாங்கும் நிலம்போல தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை.

தன்னைத் தோண்டுகிறவர்களையும் பொறுத்துக்கொள்ளும் நிலம் போல, நம்மை இகழ்பவர்களையும் பொறுத்துக்கொள்வது தலை சிறந்த பண்பு என்கிறார் வள்ளுவர். எனவே, பண்பாளராக இருப்போம்’’ என்ற தமிழாசிரியை சீதளா தேவி, இதுவரை தன் தமிழ்ப் பணிகளுக்காகவும், சமுதாயப் பணிகளுக்காகவும் 500-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார் .

நன்றி: விகடன்

நன்றி கந்தசாமி சார்.

==========================================================================================================================

================================================================================================================================

 

நான் படிச்ச கதை (J K C)

கனவுக் கதை

சார்வாகன்

முன்னுரை

இன்றுஅதிகம் அறிமுகமில்லாத, சார்வாகன் என்ற புனை பெயர் கொண்ட எழுத்தாளரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இயற்பெயர் ஹரி ஸ்ரீனிவாசன். தொழில் மருத்துவம். மணிக்கொடி காலத்து எழுத்தாளர். இரண்டு FRCS பட்டங்கள் பெற்று இங்கிலாந்திலும் இந்தியாவில் செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையிலும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவர் கண்டுபிடித்த கர சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு  WHO, Srinivasan tecnique என்று பெயர் சூட்டி  கவுரவித்திதது. 

கனவுக்கதைஎன்னும் இந்த சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாகஇலக்கியச் சிந்தனைபரிசு பெற்றது. எஸ்ரா இக்கதையை 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார். சுந்தர ராமசாமியும் இக்கதையை சிறப்புச் சிறுகதையாக தேர்ந்திருக்கிறார். 

கதை சுருக்கம் மட்டும் தந்து கதையை விமரிசிக்கலாம் என்றிருந்தேன். சிறிய கதை ஆகையால் கதையை பதிவில் உட்படுத்தி விமரிசனம் செய்யலாம் என்று உத்தேசம். சொல்லப்போனால் கதை இரண்டு கதைகளின் கோர்ப்பு. முதல் கதைக்கும் இரண்டாவது கதைக்கும் உள்ள இணைப்பு நேர ஒற்றுமை (கால சந்தி) மாத்திரமே. 

முக்கிய கதையின் ஒன் லைன். 

இலவசம் என்றால் மக்களுக்கு விருப்பம் அதிகம், தேவையோ, தேவை இல்லையோ இலவசம் என்றால் வாங்காமல் விட மாட்டார்கள். 

இது இக்காலத்திற்கும் பொருந்தும்தானே?? 

நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குப் போனபோது அங்கே வாங்குவோர் கூட்டமே இல்லை.

நடேசன் கடையில் அது ஒரு சௌகரியம். அங்கே எப்பவும் கூட்டம் தெரியாது. கறுப்பு பச்சை சிவப்புப் பெப்பர்மிட்டுகள், ரப்பர் பந்துகள், விலை சரசமான பேனாக்கள், வர்ண வர்ண இங்கி புட்டியுடன், (புட்டியில்லாமல் அளந்து) சோப்பு, சீப்பு (நேஷனல் ஸ்டோரில் கண்ணாடி கிடையாது, க்ஷவரத்துக்கு முன்னும் பின்னும் முகத்தை அழகு பண்ணிக்கொள்ள, நரை மயிரைக் கறுப்பாக்க),  நந்நாலு என்று விதம்விதமாகக் கோடு போட்ட, கோடே போடாத, குறுக்கும் நெடுக்குமாய்க் கோடு போட்டுக் குவித்த நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், இன்னும் எத்தனையோ சாமான்கள், எல்லாம் வாங்குவாரை எதிர்பார்த்துக் காத்திருக்கும், சாதாரணமாய் நாங்கள்தான் போய் நிற்போம்.


நடேசன் சிரிச்சபடிவாங்க வாங்கஎன்பான். வெத்திலைக் காவி படிந்த பல்லைக் காண்பிக்கமாட்டான். அவன் பல் வெளேரென்று இருக்கும். அவனுக்கு வெத்திலைப் பழக்கம் கிடையாது. சிகரெட்டுத்தான். அதுவும் கடைக்குள் இல்லை. குடி கூத்தி ரங்காட்டம் ரேஸ் வில்வாதி லேகியம் அரசியல் கலை மொழி மதம் என்று எந்தவிதமான பழக்கமும் கிடையாது. அவனுண்டு அவன் கடையுண்டு. யார் வேணுமானாலும்  அவன் கடையில் என்ன வேணுமானாலும் (மளிகை சாமான்கள் மருந்து சாமான்கள் பால் பவுடர் தவிர) வாங்கிக்கொள்ளலாம். ரொக்கந்தான். ரொம்பத் தெரிஞ்ச ஆளானால் கடனுக்குக்கூடக்கிடைக்கும். நாங்கள் போனால்வாங்க வாங்கஎன்று வரவேற்பானே தவிர எங்களைஎன்ன வேணும்என்று கேட்கமாட்டான். வாங்குவதற்கு எங்களிடம் சாதாரணமாய்க் காசு இருக்காது என்பது அவனுக்குத் தெரியும். ஏதாவது வேணுமானால் நாங்களே கேட்டுக்கொள்வோம் என்பதும் அவனுக்குத் தெரியும். பைபிள் படிக்காத போனாலும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வாசகம் அவனுக்குத் தெரியும்.

அன்றைக்கு நாங்கள் போனபோது நடேசன் கண்களில் குறும்பு தாண்டவமாடிக்கொண்டிருந்தது. முகத்தில் ஒரு விஷமப் புன்னகை. தண்ணீர்மேல் எண்ணெய் சிந்தினால் நிற அலைகள் பரவுகிற மாதிரி. நாங்கள் கடைக்குள்ளே  நுழைந்தோம். சிவப்பிரகாசம் மாத்திரம் எச்சிலைச் சாக்கடையில் துப்பிவிட்டு வந்தான். கடைக்குள்ளே துப்பினால் நடேசனுக்குப் பிடிக்காது. எங்களைப் பார்த்தவுடன் சிரிச்சபடிவாங்க வாங்கஎன்று வழக்கப்படி வரவேற்றுவிட்டு நடேசன் குனிந்து மந்திரவாதிபோல மேசைக்கடியிலிருந்து ஒரு பொருளை எடுத்துக்காட்டிஇது என்ன சொல்லுங்க பார்ப்பம்என்றான். பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தான்.

அவனுடைய இந்த அசாதரணமான நடவடிக்கையினால் ஒரு கணம் சிந்தனை தடுமாறிப்போன நான் சமாளித்துக்கொண்டுஎன்ன அதுஎன்று கேட்பதற்குள் ரெங்கன் அப்பொருளைக் கை நீட்டி எடுத்தான்.

முதலில் அதில் ஒன்றும் விசேஷமாகத் தெரியவில்லை. சாதரணக் கடைத் தராசென்றுதான் நினைத்தேன். ரெங்கன் அதை எடுத்துத் தூக்கிநிறுத்துப்பார்த்ததுந்தான் அது சாதாரணத் தராசல்ல என்பது தெரிந்தது. அதில் ஒரு பக்கம் ஒரு தட்டும் மறு பக்கம் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று தட்டுகளும் இருந்தன. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

இது என்னன்னு சொல்லிட்டா ஆளுக்கு ரெண்டு ஸ்வீட் தர்ரேன்என்று சொல்லி மீண்டும் ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்தான் நடேசன். நானும் சிவப்பிரகாசமும் தெரியவில்லை என்று சொல்லித் தோல்வியை ஒத்துக்கொண்டு விட்டோம். ரெங்கன் மாத்திரம் சிறிது நேரம் அந்த மூணு தட்டுத் தராசைத் திருப்பித்திருப்பிப் பார்த்தபடி யோசனை செய்தான். வயது நாற்பதானாலும் அவனுக்கு இன்னும்ஸ்வீட்என்றால் ஆசையோ என்னமோ, கடைசியில் அவனும்என்னா இது, படா ஆச்சரியாமாயிருக்குதேஎன்று பொதுவாக உலகுக்கு அறிவித்துவிட்டுத் தோற்றதுக்கு அடையாளமாகத் தராசைத் திருப்பித் தந்துவிட்டான்.

நடேசனுக்கு ஒரே சந்தோஷம். ‘பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எடுத்துக்குங்கஎன்று சொல்லி அருகிலிருந்த பெப்பர்மிட்டு பாட்டிலுக்குள் கைவிட்டுச் சில மிட்டாய்கள் அள்ளி எங்களிடம் நீட்டினான். ரெங்கன் ரெண்டு எடுத்துக்கொள்ள, நானும் ஒண்ணு எடுத்துக்கொண்டேன், மரியாதைக்காக.

சிவப்பிரகாசம் வேண்டாமென்று மறுத்துவிட்டான். அவனுக்கு டயபிடீஸ். சர்க்கரைவியாதி. ஸ்வீட்டும் சாப்பிட மாட்டான், அரிசிச் சாதமும் சாப்பிடமாட்டான்.

சும்மா எடுத்துக்கப்பா, இந்த ஸ்வீட்லேயெல்லாம் சர்க்கரையே கிடையாதுஎன்று நடேசன் வற்புறுத்தவேஎன் பங்கை நீயே எடுத்துக்கஎன்று சிவப்பிரகாசம் பிடிவாதமாய் மறுத்துவிட்டான். நடேசன் தன் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சிவப்பிரகாசத்தின் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சர்க்கரை இல்லாத ஸ்வீட் பிடிக்காதோ அல்லது ரெண்டு பைசாவைத்தான் வீணடிப்பானேன் என்று சிக்கன புத்தியோ.

மிட்டாய்களை பாட்டிலுக்குள் போட்டபின் நாங்கள் வேண்டிக் கேட்டதன் பேரில் மூணுதட்டுத் தராசின் மர்மத்தை விளக்கினான் நடேசன். ஒரே சமயத்தில் மூணு பேர் கடைக்கு வந்து ஒரே சாமானைக் கேட்டு நெருக்கினால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முறையாக நிறுத்துக் கொடுப்பதற்குப் பதிலாக ஒரே முறையில் நிறுத்து நேரச் செலவையும் சக்திச்செலவையும் குறைக்கும் சாதனமாம் அது. ‘எப்படி நம்ம யோசனைஎன்று பெருமிதத்தோடு கேட்டான்.

நடேசன் கடைவைத்த நாள் முதலாகப் பார்த்திருக்கிறேன். ஒரே சமயத்தில் மூணுபேர் கூடிச் சாமான் உடனே வேணுமென்று ரகளை செய்ததை ஒரு நாள்கூடப் பார்த்ததில்லை. இருந்தாலும் அவனுடைய உற்சாகத்தைக் கெடுப்பானேன் என்று சும்மாவிருந்துவிட்டேன். ரெங்கனுக்குத்தான் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ‘நம்ம நடேசனுக்கா, இவ்வளவு முன்யோசனையாஎன்று தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். அந்தச் சமயத்தில்தான் அந்த ஆள் கடைக்கு வந்தது.

வந்த ஆசாமி சாமியார் போலவுமில்லை. குடும்பி போலவும் இல்லை. நாற்பது வயசிருக்கும். கரளைகரளையாகக் கட்டுமஸ்தான தேகம். தலைமயிர் கருப்பாக நீண்டு வளர்ந்து பிடரிமேல் புரண்டுகொண்டிருந்தது. அடர்த்தியான புருவம். நெற்றி மேல் கம்பளிப் பூச்சுபோல ஒட்டிக் கொண்டிருந்தது. கண்கள் கருப்பு வைரங்கள் போல ஜ்வலித்தன. முகத்தில் ரெண்டு வாரச் சேமிப்பு. வெறும் உடம்பு. இடுப்பில் ஒரு நாலுமுழத் தட்டுச் சுற்று வேட்டி முழங்கால் தெரிய அள்ளிச் சொருக்கி கட்டியிருந்தது. வேட்டி காவியாயிருந்து வர்ணம் போனதோ அல்லது வெள்ளையாயிருந்து பழுப்பாக மாறிக் கொண்டிருந்ததோ ஆண்டவனுக்கே தெரியும். புஜத்தில் தோளிலிருந்து முழங்கை வரை சுண்ணம்புக் கறை. நெற்றியில் அரை ரூபாய் அளவுக்குக் குங்குமப் பொட்டு.

மத்தாப்பு போலப் பொறி பறக்கும் கண்களுடன் வந்த அந்த ஆள்ஒரு கிலோ பெப்பர்மிட்டுக் குடுங்க, சீக்கிரம்என்று அதட்டினான். அவன் குரல் கண்டாமணி மாதிரி ஒலித்தது.

நடேசன் நிதானமாககிலோ அஞ்சு ரூபாய்என்று சொல்லி இருந்தவிடம் விட்டு அசையாமல் நின்று, வந்த ஆளை ஏற இறங்கப் பார்த்தான்.

சரி சரி குடுங்க, சீக்கிரம்என்று சொன்னபடியே அந்த ஆள் இடுப்பைத் தடவி ஒரு முடிச்சை அவிழ்த்து எட்டாக மடித்து வைத்திருந்த அழுக்கேறிய அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்து மடிப்புக் கலையாமல் நீட்டினான்.

நடேசன் சாவதானமாக நோட்டை வாங்கி மேசை மேல் வைத்துவிட்டு, தராசை எடுத்து மூணுதட்டுகளில் ரெண்டைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு கிலோ படிக்கலைப் போட்டு இன்னொரு தட்டில் பெப்பர்மிட்டுகளை அள்ளிப் போட்டுத் தங்கம் நிறுப்பது மாதிரி நிறுத்துப் பின் பெப்பர்மிட்டுகளைக் காகிதப் பையில்போடப் போகும்போது, ‘பையிலே போடவாணாம், சும்மா அப்படியே காயிதத்துலே வச்சுக் குடுங்கஎன்று சீறினான் அந்த ஆள்.. அவன் கண் பாம்பின் நாக்கு மாதிரி இருந்தது. ஒரு தமிழ்த் தினசரித் துண்டில் அளிக்கப்பட்ட மிட்டாய்களை வாங்கிக்கொண்டு அந்த ஆள் மணிக்கூண்டின் பக்கமாக விடுவிடென்று நடந்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்ற ஆவலினால் ஈர்க்கப்பட்டு நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் அவனுக்குச் சற்றுப் பின்னால் அவனைத் தொடர்ந்தோம்.

நடேசன் கடையிலிருந்து சுமார் நூற்றைம்பதடி தொலையில் நகராட்சி மணிக்கூண்டு இருக்கிறது. அது வருஷம் தேதி காட்டுவதில்லை. ஆகவே அது நின்று எவ்வளவு நாள் ஆச்சுதென்று தெரியாது. எப்போதும் பனிரெண்டு மணி காட்டிக்கொண்டிருக்கும். விளக்கு வைக்கும் அந்த நேரத்திலும் அது மணி பணிரெண்டு எனக் காட்டிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் பஜாரின் நடுநாயகமான மணிக்கூண்டச் சுற்றித்தான் சிறிது வெற்றிடம் இருக்கிறது. சாதாரணமாக நாலுநாலு பேராய்க் கூடிக்கூடிப் பேச வசதியான இடம். சற்றுத் தள்ளிப் போனால் பறவைகளின் எச்ச வீச்சுகளுக்குப் பலியாக நேரும். மணிக்கூடருகே அப்படியில்லை.


மணிக்கூண்டினடியில் இருந்த சிறு மேடையருகில் நின்றுகொண்டு அந்தப் பெப்பர்மிட்டுக்கார ஆள் அருகில் இருந்தவர்கள் கையில் ஓரிரு பெப்பர்மிட்டுகளைத் திணித்தான். அவர்கள் திகைத்தார்கள். ‘சாப்பிடுங்க சாப்பிடுங்க  ஆண்டவன் பிரசாதம்என்று சொல்லிக்கொண்டே இன்னும் சில பேர்களுக்கும் நடேசன் கடை மிட்டாய்களை அளித்தான்.

யாரோ ஓர் ஆசாமி மணிக்கூண்டருகே சும்மா ஸ்வீட் விநியோகம் செய்கிறான் என்ற செய்தி எப்படியோ அரை நிமிஷத்துக்குள் பஜார் முழுதும் பரவிவிட்டது. ‘பள்ளத்துட் பாயும் வெள்ளம் போலஜனக்கூட்டம் மணிக்கூண்ட நோக்கிப் பாய்ந்தது. மணிக்கூண்டின் அருகே வந்துவிட்ட நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் முழங்கையாலும், பிருஷ்டத்தாலும் இடித்து உந்தித் தள்ளி நகர்த்தப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டத்தின் வெளிப்புறத்துக்கு வந்துவிட்டோம். சுற்றிலும் மேலே இருந்து கூச்சலிடும் பக்ஷிகளின் சப்தத்தை அமுக்கிக்கொண்டுஸார் ஸார் மிட்டா ஸார்என்ற சப்தந்தான் கேட்டது.

எங்கள் ஊர்வாசிகளுக்கு பெப்பெர்மிட்டு மிட்டாய் என்றால் அவ்வளவு பிரேமை என்று எனக்குத் அது நாள்வரை தெரியவே தெரியாது. கூட்டமே சேராத நடேசன் கடையில்கூடப் பெப்பர்மிட்டு வாங்க ஏதாவது குழந்தைகள்தான் எப்போதாவது வருமேயொழிய இங்கேபோல விழுந்தடித்து ஓடிவந்த பெரியவர்களைக் கண்டதில்லை. வெள்ளைச் சட்டைக்காரர்கள், கம்பிக்கைரை வேட்டிக்காரர்கள், சட்டையேயின்றிச் சாயவேட்டி கட்டினவர்கள், டெரிலின் பனியன்கள், மணிக்கட்டில் கடியாரம் கட்டினவர்கள், கயிறு கட்டினவர்கள், வெள்ளிக் காப்புப் போட்டவர்கள், நரை மீசைகள், வழுக்கைத் தலைகள், முறுக்கு விற்றுக்கொண்டிருத பல்லேயில்லாத கிழவி, அவளது ஏஜண்டான அவள் பேரன், பளபள நைலான் ஜரிகை மினுக்கும் ரவிக்கையுடன் பஜாருக்கு வந்திருந்த கைக்குழந்தைக்காரிகள், குருவிக்காரிகள், பெட்டிகடையில் பீடி சிகரெட் சோடா கலர் வெற்றிலை வாழைப்பழம் புகையிலை வாங்க வந்தவர்கள், இவர்கள் கால்களுக்கிடையே குனிந்து வளைந்து ஓடின நிர்வாணச் சிறுவர் சிறுமியர். கண்ணை மூடித் திறப்பதற்குள் பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது. தேன் கூடுபோலஞொய்யென்ற சப்தம்.

பெப்பர்மிட்டுக்காரன் மிட்டாய்கள் தேங்கி நின்ற காகிதத்தை அநுமார்போலத் தலை மட்டத்துக்கு ஏந்திப் பிடித்து மேடைமேல் ஒரே தாவாக ஏறி நின்றான். இவ்வளவு தூரத்திலும் அவன் கண்கள் தணல்போலத் தெரிந்தன. ‘சத்தம் போடக் கூடாது, நான் சொல்றபடி கேட்டால் எல்லாருக்கும் கிடைக்கும்என்று உரத்த குரலில் கூவினான். ‘மொல்லென்று ஒலியெழுப்பிக்கொண்டிருந்த கூட்டம் ஒரு கணத்தில் மௌனமானது. முனிசிபல் விளக்கின் நீல வெளிச்சத்தில் கூட்டத்தின் ஓராயிரம் முகங்களும் மூச்சுவிடுவதைக்கூட நிறுத்தி மோவாயை நிமிர்த்தி அண்ணாந்து அவனை ஆவலுடன் நோகின. அம்முகங்கள் அவ்வொளியில் பச்சையாய் இருந்தன.

எல்லாரும் மணிக்கூண்டுப் பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்கஎன்று பெப்பர்மிட்டுச் சாமியாரிடமிருந்து ஆணை பிறந்தது.

ஒரு கணம் உயிரிழந்து பிணமாய் நின்றிருந்த கூட்டம் உலுக்கலுடன் உயிர்பெற்றது. சடசடவெனச் சாய்ந்தது. முன்னாலிருப்பவர்கள் கால் மேல் தலையும் பின்னாலிருப்பவன் முகத்தின் மேலே காலையும் வைத்துக் கூட்டம் சீட்டுக்கட்டு சாய்வது மாதிரி சாய்ந்தது. நான் பன்றி மாடு குதிரைச் சாணத்தின்மீது, எச்சில் மூத்திரக் கறைகளின்மீது, வாழைப்பழத்தோல் காலி சிகரெட் பெட்டி பீடித் துண்டுகள்மீது, தெருப்புழுதிமீது, மல்லாக் கொட்டைத் தோல்மீது, எண்ணற்ற காலடித் தடங்கள்மீது, கண்ணை மூடியபடி, கையைக் கூப்பியபடி, ஆண் பெண் சின்னவன் பெரியவன் காளை கிழவன் பேதமின்றிச் சமதருமமாக, சாஷ்டாங்கமாகத் தன் மீதே ஒருவர் மேல் ஒருவராக விழுந்தது.

ஹரிஓம்என்று ஒரு கோஷமெழுப்பியபடி அந்தச் சாமியாரல்லாத சாமியார் பெப்பர்மிட்டுக் காகிதத்தைக் கூட்டத்தின் முதுகின்மேல் உதறினான். ஜனக் கூட்டத்தின் மேல் மிட்டாய் மழை.

தரையில் விழுந்து கிடந்த கூட்டம் கலைக்கப்பட்ட தேனடை போலக் கலகலத்துத் தனக்குள்ளேயே பாய்ந்தது. பெருமூச்சும் ஏப்பமும் கலந்த சப்தத்துடன் தன்னை உலுக்கி உதறிக்கொண்டது. சிறுவர்களும் பெரியவர்களும் குமரிகளும் கிழவிகளும் தமிழர்களும் தெலுங்கர்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் நாஸ்திகர்களும் எல்லாரும் சில்வண்டு போலத் தரையைத் துளைத்தனர். மற்றவர்களை இடித்துத் தள்ளிச் சுரண்டினர். அம்மண்மேல் சிதறிக்கிடந்த மிட்டாய்களை ஆத்திரத்துடன் பொறுக்கினர். பிடுங்கினர் சுவைத்தனர் பிரிந்தனர். மிட்டாய் வீசியவனை நோக்கினர். ஆனால் அவனைக் காணோம். மிட்டாய்க் காகிதத்தை உதறியவுடன் மேடைமீதிருந்து குதித்து மணிக்கூண்டின் பின்னாலாக ஓடிவிட்டிருக்கவேண்டும்.

ஐந்து நிமிஷ நேரத்துக்குள் கூட்டம் சேர்ந்ததுபோலவே கரைந்துவிட்டது. நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குத் திரும்பினோம். வேடிக்கை பார்க்கக் கடைக்கு வெளியே வந்திருந்த நடேசன் கடைக்குள் நுழைந்து எங்களைப் பார்த்துச் சிரித்தான். ‘பார்த்தீங்களா பைத்தியம் போல இருக்குதில்லே, ஆனாலும் அதாலே ஒருத்தருக்கும் நஷ்டமில்லைஎன்று சொல்லிப் பெப்பர்மிட்டு வாங்கியவன் விட்டுப் போயிருந்த ஐந்து ரூபாய்நோட்டின் மடிப்புகளைப் பத்திரமாகப் பிரித்து அதை ஆள்காட்டி விரலாக் ஒருதரம் சுண்டித் தட்டிவிட்டு மேசைக்குள் போட்டான். நாங்கள்ஆமாம் ஆமாம்என்றோம். சிவப்பிரகாசம் எச்சில் துப்ப எழுந்து கடைக்கு வெளியே போனான்.

பின்னுரை.

முன்னுரையில் கூறியபடி கதை இரண்டு கதைகளைக் கோர்த்தது போல் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இரண்டு கதையும் ஆரம்பிக்கும்  இடம் நேஷனல் ஸ்டோர்ஸ்  என்ற கடையில் தான்முதல் கதையின் மையக் கருத்துவினோதம்.’ இரண்டாவது கதையின் மையக் கருத்துஇலவசம்.’

இது போன்று ஒரு இடத்தை அல்லது அரசமரம், புளியமரம் போன்ற ஜடப்பொருட்களை அடிப்படையாக வைத்து தொடர் சிறு கதைகளை எழுத முடியும். இது ஒரு உத்தி. சுஜாதா தன்னுடையஸ்ரீரங்கத்து தேவதைகள்கதைத் தொகுப்பில் பல கதைகளை ரங்கு கடையில் இருந்து தொடங்குவார்.

முதல் கதையில் வரும் மூன்று தட்டு தராசு கற்பனையே தவிர நிஜத்தில் இருக்க முடியாதது. ஏன் என்றால் ஒரு தட்டு உள்ளபோது சரியான எடை காட்டும் தராசு மேலும் ஒரு தட்டு கூடினால் காட்டும் எடை பிழையாக இருக்கும். (m x l = M x L என்பது விதி.) இது ஆசிரியருக்குத் தெரியாதது அல்ல. ஆனாலும் ஒரு வினோதம் என்ற முறையில் கையாண்டிருக்கிறார்.

இரண்டாவது கதையில் கருத்துஇலவசம்என்றாலும்  கதை மக்களின் நமஸ்காரம் போன்று சிலவற்றை மிகைப்படுத்திக் காட்டுகிறது. ஒரு மிட்டாய்க்கு வேண்டி விழுந்து கும்பிடுவார்களா?

இரண்டு கதையையும் இணைக்கும் இணைப்பு அவற்றின் கடைசி வரிகளில் இழைந்து உள்ளது.

முதல் பகுதியில்

//சிவப்பிரகாசம் (மிட்டாய்களை) வேண்டாமென்று மறுத்துவிட்டான். அவனுக்கு டயபிடீஸ். சர்க்கரைவியாதி. ஸ்வீட்டும் சாப்பிட மாட்டான், அரிசிச் சாதமும் சாப்பிடமாட்டான்.

சும்மா எடுத்துக்கப்பா, இந்த ஸ்வீட்லேயெல்லாம் சர்க்கரையே கிடையாதுஎன்று நடேசன் வற்புறுத்தவேஎன் பங்கை நீயே எடுத்துக்கஎன்று சிவப்பிரகாசம் பிடிவாதமாய் மறுத்துவிட்டான். //

இரண்டாம் பகுதியில்

//சிவப்பிரகாசம் எச்சில் துப்ப எழுந்து கடைக்கு வெளியே போனான்.//

இலவச மிட்டாய் சிவப்ரகாசத்தின் வாயில் எச்சில் ஊற வைத்து விட்டது. இலவசத்தை விட்டு விட்ட ஏக்கம்??  மனித மனத்தின் போக்கு.

சார்வாகனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் இந்த தளங்களில் காணலாம்.

கூடுதல் விவரங்கள் சுட்டி 1

கூடுதல் விவரங்கள் சுட்டி 2


 

 

 


22 கருத்துகள்:

  1. கனவுக் கதை நன்றாக இருக்கிறது,

    ஒரு கதையைப் பகுப்பாயும்கோது, அதன் மீதான ஈர்ப்பு குறைந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. செய்திகள் அருமை.தமிழாசிரியை சீதளா
    திருக்குறளில் உலக சாதனை செய்து இருப்பது மகிழ்ச்சி.
    அவர் வேண்டுகோளும் அருமை.
    அவருக்கு பிடித்த குறளை சொன்னதும் அதன்படி நடப்பதும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. பெண் காவலரை பாராட்டுவோம்.

    தமிழாசிரியர் சீதளாதேவி. வியக்க வைக்கிறார்.

    ஐநூறுக்கும் மேல் விருதுகள்.

    பதிலளிநீக்கு
  5. பெண் காவலர் திருமதி சத்தியம்மாள் சேவை நல்ல சேவை. பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  6. தமிழாசிரியை வாழ்க...

    முதலில்...

    உலகப்பொதுமுறை என்பதே சரி...

    பதிலளிநீக்கு
  7. சார்வாஹனைப் போய் அதிகம் அறிமுகமில்லாத எழுத்தாளர் என்கிறீர்களே, அநியாயம்.
    அவரை அறிமுகப்படித்திக் கொள்ளத் தவறியவர்களுக்கு அவர் அறிமுகம் ஆகாதவர் என்று கொள்ளலே தகும்.

    பதிலளிநீக்கு
  8. * அறிமுகப்படுத்திக் கொள்ள

    பதிலளிநீக்கு
  9. நம் ஸ்ரீராமின் அப்பாவிற்கு இவர்
    நண்பராய் இருக்கலாம். இல்லை நன்றாகவே தெரிந்திருக்கும். செங்கல்பட்டு வாசம் என்றவுடன் என் நினைவுக்கு வந்தது இது. எனக்கோ இவர் படைப்புகளைப் படித்திருப்பதின் மூலம் ஏற்கனவே மனத்திற்கு மிக நெருக்கமானவர் தான்..

    பதிலளிநீக்கு
  10. //சிறிய கதை ஆகையால்..//

    சீரிய கதை என்று சொல்ல வந்தது தட்டச்சு செய்யும் பொழுது 'சிறிய' ஆகி விட்டதோ?

    பதிலளிநீக்கு
  11. என்ன அழகான வழுக்கிக் கொண்டு செல்லும் எழுத்து நடை.. எழுத்துத் திறமை மட்டும் இருந்தால் எந்த விஷயத்தையும் கதையாக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு போலத் திக,ழும் கதை! சார்வாகன் எழுத்தெல்லாம் இன்றைக்கும் எழுதுவதற்கு. பால பாடமாக இருப்பது தான் அதன் சிறப்பு.
    அந்த சிறப்பை இங்கு பகிர்ந்து கொண்ட ஜெஸி ஸாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சார்வாகன் பற்றிய மேலதிகத் தகவல்களை கூகுள் தேடலில் தேடி வாசிக்குமாறு எபி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. பாசிட்டிவ் செய்திகள் சூப்பர். தமிழாசிரியை சீதளா தேவி வியப்படைய வைக்கிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஒரு மிட்டாய்க்கு வேண்டி விழுந்து கும்பிடுவார்களா?//

    இல்லை ஜெ கே அண்ணா. அதில் உள் அர்த்தம் அதாவது பொதுவாக நம் மக்களின் மனநிலை பற்றி சொல்லியிருக்கிறார். சாமியார், சாமி பிரசாதம் என்று சொன்னால் மக்களின் மன நிலை எப்படி என்பதுதான் அது. இப்ப பார்க்கலையா, சாமியார்கள் மீது எத்தனை பழிகள் புகார்கள் வந்தாலும் மக்கள் விடுவதில்லையே! பகடி வரி அது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியிருப்பது போல் இலவசம் என்பதும் கூட மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதும்...

      கீதா

      நீக்கு
  15. சார்வாகன் பற்றி வியாழன் பதிவில் ஸ்ரீராம் பகிர்ந்திருக்கிறார்.

    இன்றைய கதை ஒரு சாதாரண நிகழ்வைக் கூடக் கதையாக்க முடியும் என்ற நடை.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. கதையைப் பற்றி கருத்து கூறியவர்களுக்கு நன்றி. சிலருக்கு பகுப்பாய்வு பிடிக்கவில்லை என்றாலும் கதையை மட்டும் சும்மா அப்படியே வெளியிட்டால் சிறக்காது என்பது என் எண்ணம். 

    @கீதா பொதுவே சாமியார்கள் மிட்டாய்களைப் பிரசாதமாக கொடுப்பது இல்லை. இது அரவிந்தன் இயக்கி வெளிவந்த ஒரு அவார்டு மலையாள திரைப்படம்  "எஸ்தப்பான் " என்பதின் நாயகன் கேரக்டர் போன்று உள்ளது. தேடிப்பிடித்து பாருங்கள். 
    https://www.youtube.com/watch?v=VlA_Cx1uhjU

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, நீங்க்ள் கொடுத்திருக்கும் சுட்டி போய் படம் பார்க்கிறேன்.

      ஆனால் நான் சொல்ல வந்தது சாமியார்கள் மிட்டாய்களைப் பிரசாதமாகக் கொடுப்பார்களா இல்லையா என்பதை அல்ல.

      அவர்கள் எதைக் கொடுத்தாலும், என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு செய்யும் கூட்டம் ஒன்று இருக்கிறது என்பதைத்தான்... மிட்டாய் எனும் பொருளல்ல....அதில் வரும் உட்பொருள்....'எதைக் கொடுத்தாலும், எதைச் சொன்னாலும்' எனும் மறை பொருள்.

      கீதா

      நீக்கு
    2. //கதையை மட்டும் சும்மா அப்படியே வெளியிட்டால் சிறக்காது என்பது என் எண்ணம். // கரெக்ட்! நீங்கள் பாடம் நடத்தவில்லை. அந்த கதையின் சிறப்பைத்தானே சொல்லியிருகிறீர்கள். எங்களுக்கு புலப்படாத விஷயங்கள் உங்கள் பகுப்பாய்வில் புரியும். பாடம் நடத்தினாலும் தவறில்லை. திருச்சி நேஷனல் காலேஜில் தமிழாசிரியராக இருந்த ராதாகிருஷ்ணன், விவேகானந்தாவில் பேராசிரியராக இருந்த ஜகன்நாதாசாரியார் போன்றவர்களின் உரைகளை கேட்டு கம்பனை காதலிக்க ஆரம்பித்தவர்கள் நிறைய பேர் உண்டு. சிறுகதை திறனாய்வு ஒன்றும் சின்ன விஷயம் கிடையாது. தொடருங்கள்.

      நீக்கு
  17. செய்திகள் அனைத்தும் நன்று.
    சார்வாங்கன் நல்ல எழுத்தாளர். நல்ல நடையில் கதை.
    இலவசம் ஏங்கும் மக்கள் . கதையிலும் நாசூக்காக எடுத்துச் சொல்லியுள்ளார்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அருமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி ஜே.ஸி. சார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!