சனி, 18 மே, 2024

மூங்கில் சைக்கிள், பூர்வீக வீடு மற்றும் நான் படிச்ச கதை

 சென்னை : ஓ.எம்.ஆர்., செயின்ட் ஜோசப் கல்லுாரியில், நான்காம் ஆண்டு, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பயிலும், கோகுல்குமார், அபர்ணா, அருணாதேவி, டேனியல் ஆகியோர் சேர்ந்து, மூங்கில் சைக்கிள் தயாரித்துள்ளனர்.


இது குறித்து, மாணவர் கோகுல்குமார் கூறியதாவது:

பொதுவாக, பேட்டரி சைக்கிளில், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படும். நாங்கள் தயாரித்த சைக்கிளில், லித்தியம் பெரோ பாஸ்பெட் 36வி, 12எ.எச்., என்ற பேட்டரி பயன்படுத்தி உள்ளோம். இதனால், தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்படும். குறைந்த நேரம் சார்ஜ் செய்தால் போதும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 30 கி.மீ., வேகத்தில், 40 கி.மீ., பயணிக்க முடியும்.  சைக்கிளில் உள்ள சட்டங்கள், கல்மூங்கிலால் ஆனது. இரும்பின் உறுதித்தன்மை இதில் இருக்கும். சாதாரண பேட்டரி சைக்கிள், 42 கிலோ எடை கொண்டது. இந்த சைக்களின் எடை, 26 கிலோ. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றது.


==================================================================================================

=============================================================================================

===================================================================================================

=================================================================================================


============================================================================================
சோழவந்தான் : சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் டீ கடை நடத்துபவர் சரவணன். நகர தி.மு.க., நிர்வாகி. நேற்று முன்தினம் இவரது கடை அருகே ரோட்டில் கிடந்த தங்கச் செயின், மோதிரத்தை கண்டெடுத்தார்.  அப்பகுதியில் அடகு கடை மற்றும் ஐ.ஓ.பி.,வங்கியில் விசாரித்ததில் முதலியார் கோட்டையைச் சேர்ந்த வசந்தி என்பவர் திருப்பிச் சென்ற அடகு நகை எனத் தெரிந்தது. வங்கி மேலாளர் ராஜசங்கர், இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் முன்னிலையில் 4.5 பவுன் நகைகளை சரவணன், உரிமையாளர் வசந்தியிடம் வழங்கினார். வங்கி மேலாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள், போலீசார் சரவணனின் நேர்மையை பாராட்டினர்.

======================================================================================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

காடன் கண்டது - பிரமிள்

பிரமிளின் இயற்பெயர் சிவராமலிங்கம். தருமு சிவராம் என்றழைக்கப்பட்டார். பிரமிள் ஏப்ரல் 20, 1939-ல் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் பிறந்தார். 

லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம் பொற்கொடி இளங்கோ, டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமீள், பிரேமிள், பிரமிள் பானு, ஜீவராம் அருப்பிருமீள், அஜித்ராம் பிரேமிள், பிரமிள் பானுச்சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தியவ் விஷ்னுவ் அக்னி ராம்பிரமிள், அரூப் சிவராமு, ஔரூப் சிவராம், தர்மு சிவராம், தருமு சிவராமு போன்ற பல புனைப்பெயர்களில் எழுதினார். 

1971-ல் தமிழ் நாட்டுக்கு வந்தார். டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர் கோயில், மதுரை என பல இடங்களில் வசித்திருந்தாலும் அதிக நாட்கள் சென்னையில் தான் பிரமிள் வாழ்ந்தார். பிரமிள் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

பிரமிள் ஓவியக்கலையிலும், சிற்பக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். 

ஆன்மிகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் மீதும் பெரும் ஈடுபாடு இருந்தது. 

"தமிழ்ப் புதுக்கவிதையின் முழுமையான தனித்துவம் பிரமிள் கவிதைகளில் மட்டுமே உள்ளது…. நவீனத்தமிழ்ப் புதுக்கவிதையில் தமிழ் மரபின் சாரத்தைத் தன் வரிகளில் புதுப்பிக்க முடிந்த முதல் பெரும் கவிஞர் பிரமிள்." -- ஜெயமோகன்

இவர் எழுதிய கவிதை ஒன்று

நிழல்கள்-பிரமிள் 

பூமியின் நிழலே வானத் திருளா?

பகலின் நிழல்தான் இரவா?

இல்லை,

பூமிப் பந்தின் பின்னே

இருளின் பிழம்பு,

இரவில் குளித்து

உலகம் வீசும்

வெளிச்சச் சாயை பரிதி.

ஆமாம்.

இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி. 

பிரமிள், ஜனவரி 6, 1997-ல் காலமானார்.

நன்றி தமிழ் விக்கி 

காடன் கண்டது - பிரமிள்

முன்னுரை

கேரளத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அடிக்கடி நடக்கும். பத்து பேர் சாலையை அடைத்து முஷ்டியை மடக்கி ஆவேசத்துடன் கூச்சல் போட்டு செல்வார்கள். அவர்களுககு பாதுகாப்பாக 20 போலீசாரும். அத்தகைய ஆர்ப்பாட்டத்தில் கூவப்படும் பொதுவான முழக்கம் ஒன்று “இது போலொரு நாறிய பரணம் … கேரளம் இதுவரே கண்டிட்டில்ல” . (பரணம்…ஆட்சி) 

இந்த “காடன் கண்டது” என்ற கதையும் அப்படித்தான். இது போலொரு நாற்றம் அடிக்கும் கதை தமிழ் சிறுகதை இலக்கியம் கண்டில்லை  எனலாம். வாசகர்கள் கதையை வாசிக்கும்போதே அந்த நாற்றத்தை உணரலாம். 

கதையின் துவக்கத்திலேயே அழுகிய பிண நாற்றம். பின்னர் பிணத்தை எரிக்கும் நாற்றம். பின்னர் கஞ்சா புகை நாற்றம் கவுச்சி நாற்றம். என்று நாற்றங்கள். நாற்றம் அடித்தது என்று எழுதிவிடலாம். ஆனால் வாசிக்கும்போதே அந்நாற்றங்களை உணரவைப்பது தனி திறமை. அது தான் ஆசிரியரின் சிறப்பு. 

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில்.’ இப்படி துவங்குகிறது காடன் சொல்லும் கதை. காடன் கல்லுத்தரைக் காட்டில் கண்ட பிணத்தைப் பற்றி போலீசிடம் தெரிவிக்க  போலீஸ் ஸ்டேஷன் செல்கிறான். அவனுக்கும் ஊகிக்க முடிகிறது  ஒரு கொலை நடந்திருக்கிறது என்பது. 

அந்த பிணம் யாருடையது, ஏன் கொலை செய்யப்பட்டது, கொலை செய்தவர் யார் என்பது போன்ற புதிர்கள்  கதையின் கடைசியில் அவிழ்க்கப் படுகின்றன. கடைசியில் காடன் ஒன்றுமே பார்க்கவில்லை, அவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற சொல்லும் நிலைக்குத் தள்ளப்  படுகிறான். இந்த சஸ்பென்சுகளாலும் காடன் பேசும் “அழ(ழு)கிய” தமிழாலும் கதை தட்டுத் தடுமாறி முடிவை  நோக்கிச்  செல்கிறது. 

எஸ்ரா இக்கதையை 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார். கதை அழியாசுடர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. கதை முழுதும் தரப்பட்டுள்ளது. 

காடன் கண்டது - பிரமிள்

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.

பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். ஒண்ணுக்கு இன்னும் பேர் ரஸ்தா. அதே மாதிரி கல்லிலும் புல்லிலும் கால்பட்டுத் தேய்ஞ்ச இன்னொண்ணு பேரில்லாத காட்டுத்தடம்.

வெய்யிலில் எருமைப்பள்ளம் தண்ணி வத்தி, களி காறைகட்டிப் பொளந்து கெடக்கும். ஊரெல்லாம்  களிமண்ணு. கூடவே பாறைக் கல்லுத் தரையுமுண்டு. மரமில்லாம வெளிச்ச மாதிரி இருந்தாலும் கல்லுக் காட்டில் தடம் மாறிடும். மேற்கே மலைக் காட்டுக்குப் போற கோணமிருந்தா வழிகேட்டுக்கோ. சுக்கான் பயலைக் கேளு. என்னைக் கேளு.

பஸ்ஸ்டாப்பில் இட்லி சோடாக்கடேல பஸ்ஸுக்காரன் நிப்பான். அக்குளில் தோல் பட்டைப்பையிலே ரூவா சில்லறை இருக்கும். வெத்தலைச் சாறு வாய்க்குள்ளே குதகுதன்னு உப்பிக் கிட்டுக் கிடக்கும். இட்லி சோடாக்கடேல போலீஸூக்காரரும் நிப்பாரு. துண்ணுட்டுக் கணக்கில போடும்பாரு. ஆளோட்டம் பாத்துக்கிட்டு வெத்தலையிலே சுண்ணாம்பைப் போடுவாரு.

யாரோ வர்றான் - வெள்ளை வேட்டி. அவனுக்கு போலீஸுக்காரரு அக்கரபக்கரமா சலாமுகள் வைச்சு, எசமான் புண்ணியமுங்கறாரு. வெள்ளை வேட்டி பாக்காமலே, “சாவடில போயி வந்துட்டேன்னு சொல்லு”ன்னுட்டு வேட்டியை நாசூக்கா மடிச்சுத்தூக்கி, எருமைப்பள்ளத்துலே தடம்புடிச்சு அக்கரை ஏறி, ஊர்க்கோயில் பக்கம் தலையைக் காட்டிட்டுப் போறான். பிஸினஸான ஆளு. கண்ணு குடுக்காமலே ரஸ்தாவிலே போறான்.

ரெண்டுதடம்லே சொன்னேன்? ஊருக்குள் ஓடற ரஸ்தா ஒண்ணாச்சா? அதுக்கு இடத்துக்கையில மலைக்காட்டுக்குப் போற தடம். அந்தத் தடத்தைப் புடிச்சா, வயலுக்குத் தரைகாட்டதெ கல்லுகள் முளைச்ச புத்தும் இருக்கும். ஒரு கல்லுத் தூரத்துக்குள்ளார ஊர்ச் சனங்கள் வெளிக்குப் போற இடம் முடிய முந்தி ஒரு தடம் பெரிய கல்லுத் தரையிலே ஏறி திக்கில்லாமல் போகும். அங்கிட்டு கல்லுத் தெரிஞ்சுதான் தடம் புடிக்கணும். அரையாள் மட்டுக்கு கல்லுகள் முளைச்ச கல்லுத் தரைக்காடு. ஒரு கல்லைப் பார்த்தா இன்னொண்ணாட்டமிராது. ஒரு கல்லை தாண்டி இன்னொண்ணைப் பார்த்தப்ப, அதுக்குக் கிட்டத் தாண்டா கண்டேன். பொணம்டா!

கையிலே இறுக்கிப்புடிச்ச சிலம்புக் கம்பு முறிஞ்சி, காஞ்சு கறுப்பான ரத்தக்கூடு போட்ட தலையைத் திருகி எவனுகளையோ கோரமாப் பாத்த வாக்குக்கு குப்புறக் கெடக்கு பொணம்.

கல்லுதாண்டி கல்லுப்பக்கம் ஏறினப்பவே, ரெண்டு மூணு நிழல்கள் மூங்கில் முறிஞ்சதாட்டம் சடசடன்னு அடிச்சு முகத்துப் பக்கமாகத் தாக்கி ஏறினப்ப, “சீ பேயே”ன்னு கையை அலையாட்டி வீசினேன்ல? பிராந்து? இப்ப அதுகள் ஆகாசத்தில் வட்டம் போடுது. கெண்டைக்கால் இறைச்சியை உரிச்சுத்தின்னுட்ட வேகம்.

அப்போ நல்ல படபடக்கிற வெய்யில். முதநாளும் ராவுமா பழைய பிடாரன் கூட்டத்தோட பக்கத்தூரு போய் பாம்புத்தோலை வித்துக் குடுத்துட்டு, வாங்கித் தின்னுட்டு, என்னடா பிடாரா எல்லாம் கூட்டத்தில் கெளவி யாருக்கு, புள்ளை எப்படிப் பெத்தாளுகள்னு சண்டை போட்டிட்டு, பக்கம் பாத்துட்டு, பஸ்ஸடிலே தூங்கிட்டு நான் கல்லுத் தரைக்காடு பக்கமாப் போனது ஓணாணுக்கு. வெய்யில் பாட்டப் பாக்காமப் போனாத்தான் ஏதும் கிடைக்கும். மலைக்காட்டுப் பக்கம் போனா அணில் உண்டு. ஏன் ஊருக்குள்ளே மச்சு வீட்லே பொறுக்கித் திங்கிற அணில் இல்லையா? மச்சு வீடுகள் உள்ள ஊராப் பாத்துப்போ. கண்ணை மேலே ஓடவிட்டுக்கிட்டு மத்தியானம் மாறி மூணுமணிக்கு தூக்கம் விட்டு அணில் கொரைக்கிற வேளைக்குப் போ. ஊசிக் கம்பை நல்ல உயர ரெடியிலே தொரட்டிலே கட்டி ஸ்டெடியாப் புடிச்சிக் கிட்டுப் போ. அணில் குத்துறன்னுட்டு நீ மச்சில நிக்கிற மாமியாரு புட்டத்தைக் குத்தப் போறாய்.

இந்த ஊரில் மச்சுமில்லை. மச்சில மாமியாருமில்லை. அணில் கொரைக்கிறது கேக்குதுன்னு போனா, ஊரில இருக்கிற நாலு  மரத்துலேயும் கொம்பு கொம்பா மாறுது. எப்படிக் குத்த? மலைக் காட்டிலும் இருந்து சத்தம் காத்தில் ஏறி வருது. நாளைக்கு அணிலக் குத்துவம், இப்ப எனக்காச்சி ஓணானுக்காச்சின்னு இங்க போனா கெடக்குது பொணம்.

அப்பத்தாண்டா நாத்தத்தைக் கண்டேன். மெத்தையால முகத்தில் அடிச்ச மாதிரி கப்புனு பொத்தி அடிச்சுது பாரு பொண வெக்கை. நானும் பாக்க காத்தும் மாறிச்சா, இல்லை, கண்ணால் பாத்த பிறகு நெஞ்சுக்குள்ளே இருந்து வந்திச்சாடா பொண வெக்கை? பொணத்தைப் பார்க்க முந்தி இல்லை. பார்த்த பிறகு வருது. பேப்பரில் பார்த்துச் சொல்லுடா நாகரீகத்தை. எப்படி பாத்த பிறகு மணம் வந்திச்சுதுனு.

ரத்தக்கூடு போட்ட தலையைப்பாத்து பொணத்தைப் பாத்து, கெண்டைக்காலு கிழிஞ்ச இறைச்சியையும் பார்த்ததும் ஒரே அடீல அடிச்சுது பாரு திகில், “வே ஏ ஏ”ன்னு வாயுளறிட்டேன்.

பிறகு பாத்தா எல்லாமா திடுதிடுன்னு ஓடி வருது. கல்லு, மண்ணு, புத்து, புதரு, ஊர்க்கோயிலு எல்லாமா என்னடா எங்கிட்ட ஓடி வருதுன்னு பார்த்தா நாந்தான் ஓடறேன். கண்ட ஓணானுகளையும் விட்டுப் போட்டு ஓடறேன். எங்கே ஓடறேடா காடா, டேய், சாவடிக்கு ஓடுடான்னு சொல்லிக்கிட்டே ஓடறேன். போலீஸு சாவடில போயி சாமி சாமின்னு சொல்றேன். வாய் பேச்சு வரல்லே. டம்ளரிலே தண்ணி குடுத்தாங்க. என்னடா விவகாரம்னாங்க. “பொணம் சாமி”ன்னு சொன்னா, நாற்காலியிலே உக்காந்த ஏட்டு சாஞ்சிக்கிட்டாரு, கேள்வி கேட்கிறாரு. நேத்து எங்கேடா நின்னே, ராத்திரி எங்கே போனே, ஏன் இங்கே வந்தே, ஏண்டா அங்கே போனேன்னு கேள்வி. எனக்கு பொணத்தைப் பாத்ததும் போதும் சாமியைப்பாத்ததும் போதுமின்னு பக்கம் பாத்தா, ஒரு ஆளும் அவன் கூட சாறிக்காரப் பொண்ணும் வந்து நிக்கிறா.

பொணத்தைப் பாத்தியா மாமியாரு மணத்தைப் பாத்தியான்னு கேள்வி. பொணத்தைத்தான் பார்த்தேன் சாமி, அப்புறமாத்தான் மணத்தைப் பார்த்தேன்னேன். அதப் புடிச்சிக்கிட்டாங்கடா!

“என்னடா உடான்ஸ் உடறே? முதல்லே மணந்தாண்டா புடிக்கும். உனக்கு ஆர்றா பொணமிருக்குன்னு சொன்னவன்? ஆர்றா இங்கே வந்து சொல்லுன்னு ஊசி குத்திவிட்டவன்”னு புடிச்சிக்கிட்டாங்கடா. நின்னுகிட்டிருந்த கான்ஸ்டேபிள் சுவத்திலே தொங்கின தடியை எடுத்துக்கிட்டாரு. தோல்வாரிலே நாலு விரலை மாட்டிப் புடிச்சிக் கிட்டாரு.

நான் கும்புட்டேன். “என்னை உடுங்க சாமி”ன்னேன்.

“சொன்னவங்ககிட்டே போய் சொல்லுடா, கபர்தார்னு சொல்லு.”

“சரி சாமி”ன்னேன். அப்புறமா ஆரு சொன்னவன்ங்கறாங்க. ஆருமில்லீங்க, நானு பார்த்தேனுங்கன்னேன். பேச்சை மாத்திட்டாங்க.

“நீங்க ஏண்டா ஓணான், நாயி, பூனையைத் திங்கிறீங்க? ஆடு மாடு இல்லியா?”

“அதுக்கேதுங்க பைசா?”ன்னேன்.

கொஞ்ச நேரம் பேச்சில்லே, அப்புறம் மெதுவா கேள்வி. “நீ எப்படா கடேசி வாட்டி மலைக்காடு பக்கமாய் போனே? யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன்? சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன்?”

சுக்கான், பத்திரம், அது இதுன்னதும் - நல்ல பாம்பைப் புடிக்கறதுக்கு சாரைப் பாம்பு விடறாங்கடா காடான்னு உஷாராயிட்டேன்.

“சுக்கான் நல்லபாம்புத் தோலை வித்து வயத்தைக் களுவுற பாவி சாமி. எங்களுக்கு இப்பல்லாம் பாடேதுங்க? எங்காவது வயலிலே வரப்பிலே பாம்பைப் புடிச்சாதாஞ் சாமி”ன்னு கும்புட்டேன்.

“எலக்சனுக்கு நில்லுடா. ஓட் போடுவான், அப்புறம் நாட்டை எல்லாம் காடா மாத்துடா. போடா! போயி கரப்பான் பூச்சியைத் துண்ணுடா”ங்கறாரு ஏட்டு.

நான் வந்து நின்ன சாறிக்காரியைப் பார்த்தேன். வாசப்பக்கம் எரு வராட்டிக் கூடையை எறக்கிவச்சிட்டு வந்திருக்கா. அவளும் அவளோட வந்த ஆளும் ஏட்டு கிட்ட ஒரே குரலா, “சாமி வராட்டி வந்திருக்கு”ன்னு சொல்லிட்டு பரபரன்னு முழிக்கிறாங்க. சாறிவாரிக்கு மேலாக்கு சாஞ்சு முலை நாய் மூக்கு மாதிரி ‘உர்’னு நிக்குது. அதப்பார்த்தேன். துணியை சரி பண்ணிட்டு, என்னடா நீ என்னைப் பாக்கற காலமாப் போச்சாடான்னு திரும்பி ஒரு முறைப்பு வைச்சா.

“நான் அப்ப போறஞ்சாமி”ன்னேன். “சாயாக்கு ஏதும் பைசா”ன்னு மெல்லிசா இளுத்தேன்.

“திமிராடா?”ன்னு தடிக்கம்புக்காரரு எதுக்க வந்தாரு. பின்னாடி கால் வச்சு, சரேலேனு கதவு வெளியே பாய்ஞ்சு ஒரே வீச்சிலே ரோட்டுக்கு வந்துட்டேன்.

2

என்னடா போலீஸ்காரங்கிட்ட பொணங்கெடக்கு, அரெஸ்ட் பண்ணு, சாட்சிக்கு நான் நிக்கேன், வா ஒரு கை பாத்துப்புடலாம்னு மஸ்த்தா போயிச் சொன்னா, ஊசி குத்திவிட்டவன் யார்றா, இங்கே ஏண்டா வந்தே? நேத்தெங்கேடா போனே? களவாணி, உடான்ஸ்ங்கறாங்க? என்ன இது புதுமாதிரி எலக்‌ஷன் பாடுன்னு மடீல பீடியைப் பார்த்தா, காலி. நேரே சுக்கான்கிட்டே பீடி பாக்கலாமின்னுட்டுப் போனேன்.

ஊர்க் கோயிலுதாண்டி மரத்தடியிலே தனியாக் கிடக்கான். அவன் ஆட்களைக் காணம். வாசத்திலே பார்த்தா பத்திரவாசம். பீடியிலே சுத்தி அடிச்சுக்கிட்டுக் கிடக்கான். கேட்டா வெத்து பீடிதான் கிடைக்கும். பத்திரத்தையா குடுக்கப் போறான்? பொழைப்பாச்சே. இப்போ பொழைப்போட பொழைப்பா இவனும் புகை புகையா விடறான்.

“ரான்சிட்டர் வாங்கிட்டாண்டா சுக்கான் பத்திரத்துலே”ன்னு நேத்து பிடரான் சொல்லிக்கிட்டருந்தானுல்ல? அப்படி பேச்சுதான் ஏறிட்டுது. ஆனால் சுக்கான் ரான்சிட்டரும் வாங்கலை ஒண்ணுமில்லை. இவனே புகையா விட்டா எப்படி வாங்கறது? போலீஸிலே வேறே மாட்டி ஒரு கத்தை பத்திரத்தைப் பறிகுடுத்திருக்கான். எப்படித்தான் உள்ளுக்குப் போகாம தபாய்க்கிறானோ தெரியலை. எல்லாத்துக்கும் விவரம் தெரிஞ்சிருக்கணுமில்ல?

“டேய்”னு போயி குந்தினேன்.

அவனா பேசுவான்? கண்ணுக்குக் கண்ணு குடுக்காம பத்திரத்தைப் புடிச்சிக்கிட்டிருக்கான். ஆளு மாறிட்டான். தாடியா நம்மளுக்கு முளைக்குது? அவன் தாடியைப் பாரு. கறு கறுன்னு வருது. பசிதாகம் இல்லாம பத்திரத்தைக் குடிக்கிறான். ரத்தம் தாடியாவது. கண்ணு மாறி மாறி நிக்குது.

“என்னடா, பீடி இல்லிடா”ன்னேன். அவனிட்ட சட்டு புட்டுனு பேசினா பதில் வராது. பக்கம் போயி பக்கம் வந்து பேசிப் பாரு, பதில் குடுப்பான். “ஏண்டா, ஏண்டா, ஏண்டா”ம்பான். அதுக்குள்ளே பொளுது சாஞ்சி வெள்ளி கிளம்பிடும்.

“உடான்ஸுங்கறாங்கடா, பொணத்தைப் பாத்தியா மணத்தைப் பாத்தியாங்கறாங்கடா. அப்படியும் சொல்றாங்க, இப்படியும் சொல்றாங்கடா”ன்னேன். “பொணம்டா, கல்லுத்தரைக் காட்ல செத்துக் கெடக்குதுடா பொணம்”னேன்.

சரக்குனு கண்ணு குடுத்தான். முழி விடைச்சுக் குத்துது.

“பாத்தியாடா?”ன்னான்.

“கல்லுத்தரைக் காட்லேடா.”

“நோட்டம் சொல்லு”ன்னான்.

“காலத்தாண்டா பார்த்தேன். தலையை அடிச்சுப் பொளந்து போட்டுட்டாங்கடா. பிராந்து கொத்தி கெண்டைக்கால் எலும்பு நிக்குதுடா.”

“சீ, நாயே! மாட்டுப் பொணம்டா”ன்னு ஒரு கண்ணை மூடிக்கிட்டு என்னைப் பார்த்தான்.

“மாடுன்னா அதை இறச்சி போடாம உங்கிட்டயா பீடிக்கு வருவேன்? ஏண்டா, மாடு பச்சை நிறத்திலே லுங்கியைக் கட்டிக்கிட்டாடா செத்துப் போகும்? மாடுன்னா கையும், கையிலே முறிஞ்சிபோன சிலம்புக் கம்புமாடா இருக்கும், ஏண்டா?”ன்னேன்.

“சீ, நாயே.. டேய்... வாடா, காட்டு”ன்னு ஓடினான் பாரு. நான், நீ ஓடமுடியாத ஓட்டம். ரோட்டுச் சந்திலே போய் கோயில் புறத்தாலே மாறி, குறுக்கே புதர்க்காட்டிலே பாஞ்சு, சடால்னு நின்னு என் தலை மயிரைப் புடிச்சுக்கிட்டான். “போலீஸ்கிட்டே போனயாடா? ஏண்டா போனே?”ன்னான்.

“ஏண்டா, டேய், உடுடான்”னேன்.

“பச்சை லுங்கியா சொன்னே?”ன்னான்.

“பச்சை லுங்கிடா, ஏண்டா உடுடா”ன்னேன்.

விட்டுட்டு மடியிலேருந்து பத்திரத்தை எடுத்தான். “மோப்பம் தெரியுதா? மனுச வெக்கை அடிக்குது. ஆரோ வராங்கடா வெள்ளை வேட்டி மனுச வெக்கை”ன்னான்.

“பொண நாத்தம்தானே?”ன்னேன். பொணநாத்தத்துக்கு இன்னும் அரைக்கல்லாவது போகணும். நான் சொன்னது சும்மா ஏட்டிக்குப் போட்டியா.

“ஆரோ ஆளு போறவாற வெக்கைடா”ன்னுட்டு பத்திரம் சுத்தின பீடியை எடுத்து எனக்கே குடுத்தாண்டா, “குடிடா, நாயே! வேட்டி நாத்தம் களியட்டும்”னு

தீப்பெட்டி எடுத்து நெருப்புக்கீறி “இளு”ன்னு பத்திரத்தை கொளுத்தியும் விட்டாண்டா, “இளுத்துட்டுக் கைமாத்து”ன்னு. புகையை கமுக்கம் பண்ணிட்டு சுருளைக் குடுத்தேன். வாங்கி கையாலே பொத்து வைச்சு இளுத்தான். கழுத்து நரம்பு விடைக்குது, கண்ணு மூடிக்கிட்டு கபாலத்துக்குள்ளே ஓடுது. அவ்வளோதான், பீடி முடிஞ்சி போச்சி. கமுக்கம் பண்ணிட்டு புகையை விட்டான் பாரு, ஒரு கூடாரம் புகை.

அப்போ பார்த்து, “தடம்பாத்துப்போ. வராட்டியை நல்லா அடுக்கிட்டு எரிக்கணும் போ”ன்னு யாரோ சொன்ன பேச்சு. அதுக்குப் பதிலா, “எசமான், ஆகட்டுஞ்சாமி”ன்னு ஒரு ஆணும் பொண்ணும் ஏகமாப் பேசின குரல்.

சுத்திப் பார்த்தேன். நாங்க நிக்கிற இடத்துக்குப் பின்னாடி புதர்க்காட்டுக்கு அந்தாண்டை கோயில். “காலடிச்சத்தம் வருது”ன்னான் சுக்கான். “ஆளு, ஆளு”ன்னான். ‘கிர்’ருன்னு பூச்சி, குரல் வெட்டிப் பாடற சத்தம். வெய்யில் சாயுது. மனிசனில்லாத வெளிச்சம்.

சரக்குன்னு பின்னாடி சத்தம். சடார்ன்னு திரும்பினேன். கோயில் பக்கமா இருந்து வந்திருக்கோ என்னமோ அந்த ஆளு, வெள்ளை வேட்டி. அதை மடிச்சுக்கட்டி இருந்தான். முண்டா பனியன். அந்த ஆளு என்னைப் பார்க்கான், சுக்கானைப் பார்க்கான். அந்த ஆளு! எங்கேயோ நல்லாப் பார்த்தமே அந்த ஆளை? எங்கேன்னு நினைப்பு வரல்லே. ஆளைப் பார்த்ததும் சுக்கான், ஒரு தலை உயரம் குனிஞ்சி தோளை ஒடுக்கி தலையை பக்கத்திலே சரிச்சு ஒரு இளிப்பு இளிச்சான் பாரு. நான் நீ இளிக்க முடியாத இளிப்பு. நானும் “எசமான்”ன்னு இளிச்சு வச்சேன்.

ஆளு அங்கே இங்கே சுத்தி பிஸினஸா பார்க்கான். “வேறே ஆளு நிக்காடா?”ன்னான்.

அந்தக் குரலு! அதுகூடப் பளக்கமாத்தான் கேட்டுது. நெனப்பு வரலை.

“இல்லீங்க சாமி”ன்னான் சுக்கான், “நாங்க பாக்கலை சாமி”ன்னான்.

ஈயைப் புறங்கையாலே விரட்டற மாதிரி கையை ரெண்டு அசப்பு ஆட்டி, “சரிடா, போங்கடா ஊருப்பக்கம்”ன்னான் அந்த ஆளு. நானும் சுக்கான் வாலைப் புடிச்சிக்கிட்டுப் போறேன்.

3

கோயிலண்டை போனதும், புதரடியிலே மாறி, திரும்பிப் பார்த்தோம். கல்லுத் தரைத் திக்கிலே புகை காட்டுது. “பொணத்தை எரிக்கிறானுவடா”ன்னான் சுக்கான்.

“ஏண்டா நாறவிட்டாங்க?”

“பாக்கிறவன் பாத்துக்கோ. கபர்தார்னு காட்டத்தாண்டா”ன்னான் சுக்கான்.

“யார்றா செத்துப்போன பச்சை லுங்கி? யார்றா? மோப்பம் தெரிஞ்சிருக்கு உனக்கு, ஏண்டா, டேய்?”ன்னேன்.

நான் குடைச்சல் குடுக்க அவன் பேச்சுக்காட்டாமே கோயிலத்தாண்டிப் போறான். “நேத்திக்கி நீ பிடரான்கிட்டயா போயிருந்தே?”ன்னான். பேச்சு விட்டுப் பேச்சு மாத்தறான். விட்டுப்புடிக்கலாம்னுட்டு விவரம் சொன்னேன். மரத்தடிலே குந்திக் கேட்டான்.

“ஊருக்குள்ளே இன்னிக்குப் போனயா?”ன்னான்.

“ஊருக்குள்ளயா?”

”டீக்கடையைப் போய்ப் பாரு”

“டீக்கடையா?”

ஊருக்குள்ள இருக்கற டீக்கடைப் பயல்கிட்டத்தான் சுக்கான் மொத்தமா பத்திரத்தை வாங்கி அங்கே இங்கே சில்லறையாத் தள்றான்.

“டீக்கடை யானை மிதிச்ச மாதிரி இருக்கும். போய்ப்பாரு. கட்டுக்காவல் போட்டிருக்கான். ஏதும் ஆணி போணி பொறுக்கலாமின்னு போயிடாதே, விவரம் தெரிஞ்சு போ. இப்ப பாத்தமே, அந்த ஆளு? அவனும் இன்னும் நாலஞ்சு பேருமா டீக்கடையை தூள் பண்ணிட்டாங்க. டீக்கடைக்காரப் பயகிட்ட சும்மா, ஏண்டா பச்சை லுங்கி கட்டின ஆளு இங்கே ராவிலே வந்து போறானே எங்கேடா பகல் வேளைக்குப் போறான்னு, சும்மா கேட்டான் இந்த ஆளு. அதுலேர்ந்து அரைமணி நேரமா டீக்கடைக்காரன்கிட்டே கேள்வி. டீக்கடைக்காரன் ஒம்பது பச்சை லுங்கிகாரனுக அட்ரஸு குடுக்கான். இந்தா வா, இந்தா வான்னு பதிலு குடுத்து எருமைக் குட்டைக்கு இட்டுக்குனு போகுது பேச்சு. இந்த ஆளு திடீர்னு டீக்கடைக்காரனை இழுத்து தெருவிலே தள்ளி அறைஞ்சான் பாரு. அதுக்கு அப்புறம் பதிலே வல்லே. பேசுடா பேசுடான்னு டீக்கடையை முடிச்சு, ‘இதுதாடா உனக்கு கடைசி ஓணம்’னு அவனை மிதிபோட்டு மிதிச்சாங்க. சின்னப் பயல், டீக்கடைக்காரன். என்னா அமுத்தல்ங்கறே. ஆளுங்க போனப்புறம் ஆரோ டீக்கடைக்காரனை சைக்கிள்ளே ஏத்திக்கினு போனாங்க. ராத்திரி நான் வேளை கழிச்சுத்தான் மரத்தடிக்கு வந்தேன். ரெண்டு ராவா பக்கத்தூரு போன நம்ப கூட்டமும் இல்லே. கண்ணு சொக்கறப்போ, காலடிலே இருட்டு பிச்சுக்கிட்டு வந்து நின்னு, ஆளுயர தடிக் கம்பாலே என் காலைத் தொட்டு, ‘பத்திரம் எவ்வளோ இருக்கு?’ங்குது.

‘பத்திரத்தைப் போயி ஆபிஸிலே பாரு’ன்னுட்டு புரண்டு படுத்தேன். ‘சட்டுன்னு எல்லாத்தையும் எடு. கரன்ஸியாத் தரேன்’னு குந்திக்கிட்டான். நான் எந்திரிச்சேன். ‘பட்டணம் போறேன்டா. எங்கிட்ட இருந்ததை அல்லாம் போட்டிட்டு ஓடறேன். இருக்கறதைக் குடு. பட்டணத்திலே ஆளிருக்கு விக்க’ன்னான். ’திங்க ஏதுமுண்டா, எடு துட்டு தரேன்’ன்னான். ‘நாயைத் திங்கறவங்கிட்ட திங்கக் கேக்கிறியே தாயே’ன்னேன். பத்திரத்தைப் பங்கு போட்டேன். ‘எனக்கு வாடிக்கைக்காரங்க உண்டு தாயே, பாதியை எடுத்துட்டு கரன்ஸியைத் தள்ளு’ன்னு விலையை ஏத்திச் சொன்னேன். ‘ஏண்டா நாட்டை நாய்க திங்குது நீயேண்டா நாயைத் திங்கப்படாது’ன்னான். சொல்லிக்கிட்டே நான் குடுத்த பீடியைக் கொளுத்த வத்திப் பொட்டிலே நெருப்புக் கிழிச்சான். முணுக்கு வெளிச்சத்திலே பச்சை லுங்கி பளீரடிச்சது. செகண்டு தாண்டி செகண்டு பாய்ஞ்சு திகில் புடிச்சுது எனக்கு. அதுக்குள்ளார அவன் ஏதோ எலக்‌ஷன்பாடா  பேசறான். மலைக் காடுங்கறான். நாட்டைப் பிடிச்சு சேமம் பண்ணலாம்ங்கறான். எனக்கு ஒண்ணுமே மனசுலாகலை.

டீக்கடைக்காரனை மிதிச்சவங்க காலுதான் எனக்கு வவுத்திலே பொதக்குப் பொதக்குங்குது. ‘போ தாயே, போ, மனுச வெக்கை அடிக்குது காணலையா’ன்னு பிஸினஸை முடிச்சு, வாட்டி வச்சிருந்த எறச்சியை துணியிலேயிருந்து அவுத்து ‘ஒரு துண்டு எடுத்துக்க போ’ன்னு குடுத்து அனுப்பவும், ‘ஏண்டா கோழை மாடு’ன்னுட்டு போறான். அவன் போயி திடுக்கினு எட்டி நடக்கவும் வேறே ஆளுங்க காலோட்டம் ஏறுது. கோயில் வெளியைத் தாண்டி மேற்கே அவன் போற நோட்டம் தெரிஞ்சாப்பிலே இருட்டோட இருட்டா மூணு நாலு பேரு. கையிலே ஒவ்வொருத்தனுக்கும் தடிக்கம்பு. அடிச்சு மிதிச்சு நடையேறி, ‘டேய் அந்தா நிக்கிறாண்டா, வளைச்சு அடிங்கடா’ன்னு ஓடவும் நான் இத்தாண்டே ஓடவா - மரம் மாறி நடக்கிறதைப் பார்க்கவான்னு மூட்டையைச் சுத்தித் தூக்கறேன். பச்சை லுங்கிக்காரன் குரல் கெக்கலி போட்ட மாதிரி கேட்டு முதுகு சில்லிடுது. கோயில் வெளியிலேருந்து குபுகுபுன்னு ஊத்துப் பொங்கற மாதிரி கழி சுழல்ற சத்தம். இவனுகளோட ‘டாய் டோய்’ சத்தம். உடைஞ்சு மோதி, கல் வெடிச்ச மாதிரி நாலஞ்சு தடவை கழிகள் அடிச்சு, அப்புறம் ஒரு மினிட்டு ஒண்ணுமில்லே. ஒண்ணூமில்லேயா? நான் மூட்டையை மரம் மாத்தி மரத்துக்குக் கொண்டு போறேன். கண்ணும் காதும் மூட்டைக்குள்ளே பூந்துக்கினு கணக்குப் போடுது. மனசுக்கு அடியிலே வெட்டவெளிச்சம். ‘அடிடா டாய்’னு ஒரே முட்டா குரலுகள் ஏறி விரிஞ்சு தூர ஒடுங்கி குவியுது. கோயில் தாண்டி கல்லுத்தரை காடு பக்கமா திடு திடு சத்தம். ஊரெல்லாம் திடீர்னு நாய்கள் ஊளையிட்டு ஊரு பொளக்கக் குரைக்குது. நாயா மனுசனுகளா? நாய்கள் திடுதிடுனு அடிச்சு நடக்குமா? டாய்ங்குமா? நான் நடமாட்டம் மிதிபடாம மரம் தாண்டி மரம் மாறி சரியறேன். தூர, தூர, கல்லு சிதறுது. வெட்ட வெளிச்சத்திலே குப்புற ஓடற இருட்டு, சரசரன்னு நிழல்கூட்டம் போடுது. காலடிலே பச்சை லுங்கிக்காரன் நிக்கிறான்.

“அவன் லுங்கியிலே வெளிச்சம் விழுகுது. அந்தியோ வெடி காலையோ. சூரியனைப் பார்த்தா தீவட்டி கணக்கா புகை விட்டு எரியுது. தரையிலே கிடக்கிற இலைக் கூட்டத்துக்குள்ளே நிழலாட்டம். பல்லை வலிச்சு ‘ர்ர்’ சத்தம். பச்சை லுங்கி தரையிலே கிடக்கிற இலையைக் கழியாலே குத்தி எடுத்து ‘இந்தாடா கரன்ஸி’ன்னு ஊரெல்லாம் வீசறான். ஊரு கறுகறுன்னு பத்திரம் பத்திரமா விளையுது. தரையோட தரையா நிழல்கள் சரசரக்குது. நாலுகால் கடையிலே தலையைத் தூக்கி ‘ர்ர்ர்’ங்குது. அதப் பார்த்து ‘பல்லைப் பாத்தியா காலிலே இருக்கிற முள்ளைப் பாத்தியா’ன்னு நான் பாடறேன். பாடிக்கிட்டே பத்திரத்தைக் கிள்ளிக் கிள்ளி மடியிலே கட்டறேன். பச்சை லுங்கிக்காரன் கரன்ஸி நோட்டு கரன்ஸி நோட்டா வீசிக்கிட்டே போறான். பத்திரம் காடுகாடா ஆள் கணக்கா வளருது. தரையோட கிடந்த நிழலுகளும் ஏறி வளர்ந்து ‘ர்ர்ர்’ன்னு காடெல்லாம் குரைக்குது. சத்தம் ஏறி உறும நானும் உறுமறேன். உறுமிக்கிட்டே கண்ணை முழிக்கிறேன். சூரியன் ஊசிக் கம்பை நீட்டி மண்டைக்குள்ளே உறுமின நிழலையெல்லாம் குத்தி நிறுத்தறான்... இந்த இளுத்துட்டுக் கை மாத்து.”

நான் சுக்கான் பேச்சைக் கேட்டுக்கிட்டே அவன் கொடுத்த பத்திரச்சுருளை வாங்கி புகையை லேசா இழுத்தேன். கொஞ்ச மினிட்டு பேச்சில்லை. “போலீஸாடா”ன்னேன். ஏன் சொன்னேன்னு கணக்குச் சேர்க்கலே. அப்புறம் புகை ஓடி ஒரு சுத்து கபாலத்தைச் சுத்தி வளைச்சு இறங்கினப்ப கேட்டேன். “அந்த ஆளுதாண்டா, போயிட்டே இருங்கடான்னு வெரட்னானே வெள்ளை வேட்டி? அவன் சொன்னா போலீஸூ கேப்பாங்கடா. நான் கண்டேண்டா அதை, பஸ் ஸ்டாப்பாண்டே. யார்றா அந்த வெள்ளை வேட்டி?”

சுக்கான் ஒரு கண்ணை மூடிக்கிட்டே என்னைப் பார்த்தான். “போலீசு, லுங்கி எல்லாத்துக்கும் கரன்ஸியைத் தள்ளற ஆளுடா. மலைக்காட்டிலே மனுசன் போகாத எடத்துலே ஏக்கர் ஏக்கரா இருக்குடா அவனுக்கு. நீ அதைக் கண்டதுண்டாடா காடா?”ன்னான் சுக்கான். “ஏக்கர் ஏக்கரா என்னடா? பத்திரமாடா?”ன்னேன்.

“பச்சை  லுங்கி, டீக்கடைக்காரப் பயலை எலக்ஷன் பாடாப் பேசி, நாட்டைப் புடிக்கலாம் நாடு கடந்து போயி நாகரீகம் பண்ணலாமின்னு சொல்லி வசக்கி வச்சிருக்கான்டா. பச்சை லுங்கிதாண்டா டீக்கடைப் பயலுக்கு வெள்ளைவேட்டி எஸ்டேட்டிலிருந்து திருடி பத்திரம் சப்ளை பண்றான். நான் அதிலேருந்து அடுத்த சப்ளை. வெள்ளை வேட்டி திருடு போவுது போவுதுன்னு பார்த்து மோப்பம் புடிச்சுட்டான் பச்சை லுங்கியை. அதாண்டா எல்லா நடமாட்டமும். ஏண்டா, சீ, நாயே! இளுத்துட்டுக் கை மாத்துன்னா எரிய விட்டுக்கிட்டேருக்கே”ன்னு சுக்கான் என் கையிலிருந்த சுருளைக் கபக்குனு புடுங்கிக்கிட்டான்.

(1981)  கணையாழி, அக்டோபர் 1982 , அரும்பு, ஏப்ரல் - மே 1985

=====> கதையின் சுட்டி <===== 

32 கருத்துகள்:

  1. மூங்கில் சைக்கிள் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது கேள்விகள் எழுகின்றன. சப்ஜெக்ட் ரொம்பத் தெரியாது. என்றாலும் புது முயற்சி வித்தியாசமான சிந்தனை .என்று தெரிகிறது.

    எமாணவர்களுக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பஸ்ஸில் ப்ரேக் பிடிக்க பழுது - நினைக்கையில் பதற்றம். எப்படியோ விபத்தில்லாமல் பயணிகள் பாதுகாக்கப்பட்டனர். ஓட்டுநருக்கும் பதட்டமாக இருந்திருக்கும். தைரியமாகச் சமாளித்திருக்கிறார். வாழ்த்துவோம்.

    மூதாட்டியின் சொந்த வீடுகனவு ஏற்கனவே வந்திருந்ததோ?

    இரவு நேரத்தில் விரைந்து ஆம்புலன்ஸில் இருசக்கர் வாகனத்தில் சென்று மலை கிராமத்துப் பெண்ணிற்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் குழுவினரை வாழ்த்தி பாராட்டுவோம். Dedicated!
    தேன்கனிகோட்டை ஊர் மிக அழகாக இருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆ சிரியர் பிரமிள் பற்றி இப்போதுதான் அறிகிறேன். பிரமிள் அவர்களின் திறமைகள் வியக்க வைக்கிறது.

    ஜெ கே அண்ணா, உங்க என்னுரையில் சொன்னது போல உணர்வுகளைக் கதையில் என்னால் உணர முடியவில்லை.

    கதை முதலில் வாசித்த போது புரிபடவில்லை. காரணம் பல சொற்கள், வாக்கியங்கள். அதனால் பொருள் தெரியாமல் அது என்னவாக இருக்கும், ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று யோசிக்க வைத்ததால் ஒன்றி வாசிக்க இயலவில்லை.

    பொருள் இதுவாக இருக்கும் என்ற யூகத்தில் மீண்டும் வாசித்தேன்.
    வழக்கமான கதை என்றே தோன்றியது. வெள்ளை வேட்டி – கட்சி ஆள் அல்லது தாதா/பணக்காரன் எல்லோரையும் கைக்குள் வைத்திருப்பவன் என்று தெரிகிறது. எனவே கதையில் முதலிலேயே தெரிந்துவிடுகிறது.

    என்றாலும் கதையை ஒன்றி வாசிக்க முடியவில்லை. அதனால் அந்த நாற்றங்களின் உணர்வு வரவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர் - இணையத்தில் அடிக்கும் போது தமிழ் ஃபான்ட் வேலை செய்ய மறுக்குது. சரியாக அடிக்க முடியவில்லை. அதனால் ஆ சிரியர் என்று அப்படி ஆகி விட்டது.

      கீதா

      நீக்கு
  4. ஒருவேளை இப்படி எழுதினால்தான் தமிழ் இலக்கியம் என்று சொல்லப்படுமோ? சிறந்த கதை என்று சொல்லப்படுமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என்னாலும் கதையை ஒன்றி மட்டும் அல்ல, தொடர்ந்து முழுவதும் வாசிக்க முடியவில்லை.  வட்டார மொழி ரொம்ப புதுசு.  புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.  எஸ்ரா கருத்து ஆச்சர்யம் அளித்தது.  சரியாக புரியவில்லை என்றாலே ஏதோ பெரிய விஷயம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. ஆனால் இப்படிப்பட்ட கதைகளை படித்து, தேர்ந்தெடுத்து, இப்படி எல்லாமும் படைப்புகள் வந்து வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை நமக்கு எடுத்துக் காட்டும் JKC ஸாரின் உழைப்பும், முயற்சியும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. கதை ஒன்றும் இல்லை. சுருக்கமாக

    வெள்ளை வேட்டிக்காரர் மலை மேல் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா விற்கிறார். இது போலீசுக்கு தெரியும். அவர் சப்ளை செய்யாமலே ஊர் டீக்கடையில் கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. இந்த கஞ்சா எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து, பச்சை லுங்கிகாரன் அவருடைய கஞ்சா தோட்டத்தில் இருந்து திருடி அதை டீக்கடைக்கு சப்ளை செய்கிறான் என்று தெரிய வருகிறது. அவன் கொலை செய்யப்படுகிறான். அவன் பிணத்தை காடன் பார்த்து போலீஸீடம் சென்று சொல்கிறான்.

    அவன் சொல்வதை போலீஸ் சட்டை செய்யவில்லை. அவன் சாட்சியம் பொய் என்றாகிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, இரண்டாவது முறை வாசித்த போது புரிந்துவிட்டது கதை. அந்த வெள்ளை வேட்டி பெரிய ஆள், கஞ்சா வளர்ப்பவன், போலீஸ் கண்டுக்காது, பச்சை லுங்கிக்காரன் திருட்டுத்தனமா விற்கிறான், அவனுக்குக் கீழே சுக்கான் சப்ளை…..பத்திரம் – கஞ்சா? பச்சை லுங்கி கொலை செய்யப்படுகிறான்….வெள்ளை வேட்டினு வரப்பவே கதை புரிந்து விடுகிறது பச்சை லுங்கி கொலைக்குக் காரணம். காடனின் வார்த்தைகளைப் போலீஸ் கண்டுக்கலை….

      புரிந்தாலும் ஒன்ற முடியலை அவ்வளவுதான்...

      கீதா


      நீக்கு
  9. மூங்கில் சைக்கிள் புதிய முயற்சியை பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. செய்திகள் அனைத்தும் அருமை.
    மூங்கில் சைக்கிள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. பிரமிள்-க்கு பெயர்களில் ஏன் இத்தனை ஆசை என்று தெரியவில்லை. எத்தனை பெயர்களானாலும் அவை குறிப்பது ஒருவரைத் தானே என்ற யோசனை இதை வைத்து ஒரு கதை எழுதத் தோன்றுகிறது. :))

    பதிலளிநீக்கு
  13. அழியாசுடரில் இந்த கதை படித்த நினைவு இல்லை.
    ஆசிரியர் பிரமிள் அவர்களை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
    சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாசிப்பவருக்கு லேசில் புரிந்து விடக்கூடாது என்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு (!) எழுதுவது போல பல நேரங்களில் ஜெயமோகன் எழுதுவது இருக்கும்.

    உதாரணத்திற்கு :

    தமிழ்ப் புதுக்கவிதையின்
    முழுமையான தனித்துவம்

    நவீன புதுக்கவிதையில் தமிழ் மரபின் சாரத்தை தன் வழியில் புதுப்பிக்க முடிந்த

    -- போன்ற ஜெமோ வரிகள்.

    கீழே கண்ட 'நிழல்கள்' கவிதையில் மேற்கண்ட ஜெமோ வரிகளை உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்த்தேன்.

    ஊஹூம்.. முடிலேப்பா, சாமி

    பதிலளிநீக்கு
  15. நாற்றம் என்றால் சங்க காலத் தமிழில் வாசனை என்று பொருள்!..

    சங்க காலத்தில் இன்றைய கேரளமும் தமிழ் நாட்டில் உள்ளடங்கிய பிரதேசம் தான்.

    அன்றைய வாசனை, இன்றைய நாற்றமானது எப்படி என்பது ஆய்வுக்குரியது.

    இது தான் ஜெமோ சொல்கிற தமிழ் மரபின் சாரத்தைப் புதுப்பித்தலோ?..

    தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  16. ஒரு பக்கம் ஜெமோன்னா
    இன்னொரு பக்கம் இந்த எஸ்.ரா.

    இவங்க தேர்ந்தெடுக்கறதெல்லாம் எதுக்காக எதைச் செய்றாங்கன்னு புரிபடாமலே இருக்கு.
    இதுக்காகத் தான் இந்தக் கதையை நூற்றில் ஒன்றா தேர்ந்தெடுத்தேன்னு குறிப்பு கொடுத்திருந்திருந்தாங்கன்னா குறைந்த பட்சம் இவங்க வாசிப்பு ரசனையாவது நாம்ப புரிஞ்சிண்டு நாமும் அந்த ரசனையால் ஆட்கொள்ளப் படலாம்.
    இதெல்லாம் செய்ய மாட்டாங்களே!

    இதுக்காக பிரமிளை நொந்து கொள்ளக் கூடாது தான். அவர் எழுதினதுலே வேறே எத்தனை இருக்கு?..

    அது சரி, ஜெஸி ஸார்..
    இந்த ரெண்டு பேர் மாதிரியே இன்னொருத்தரும் இருக்காரே.. சாருன்னு.
    அவர் இவங்க மாதிரி நூறு கதைகள் எதையும் தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கலியோ?
    இல்லே, தன்னைத் தானே பரிந்துரைக்கவே இவருக்கு நேரம் பத்தாமப் போச்சோ?

    கு.ப.ரா, புதுமைப்பித்தன், தேவன், பி.எஸ்.ராமையா, என்று ஆரம்பித்து பாலகுமாரன் வரை வளர்ந்து இன்றும்
    பழைய ஒட்டுறவு மறைந்து விடாமல் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்துலகம்?

    இவங்களையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை தான்.

    பதிலளிநீக்கு
  17. மூங்கில் சைக்கிள் புது முயற்சி வாழ்த்துகள்.

    ஆபத்துக்கு உதவிய கரங்களையும் பாராட்டுவோம்.

    பிரமிட் பேசப்பட்ட எழுத்தாளர் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் இப்பொழுதுதான் அவரின் கதை படித்தேன். கதை சற்று நீளம் .

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. மூங்கில் சைக்கிள் தயாரித்த கல்லூரி கல்வியாளர்களை பாராட்டுவோம்.

    பயணிகளுடன் சென்ற பேருந்து பிரேக் பிடிக்காத தக்க சமயத்தில் உதவியாக இருந்தோரையும் , மலை கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்ணிற்கு சுபமாக குழந்தைப்பிறப்பதற்கு உதவியாக இருந்த மருத்துவ குழுவிற்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

    தங்கள் வீடு, நிலம் மீட்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும் வாழ்த்துகள். எல்லாமே நல்ல செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. வட்டார வழக்கு மொழியால் புதிதான வார்த்தைகள் கதையில் வந்ததால், முதலில் சற்று புரியவில்லை. ஆனால், கருத்துரையில், கதைச் சுருக்கத்தை சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்து விட்டதை படித்துப் பின் நன்றாக புரிந்தது.

    பிரமிள் என்ற கதாசிரியரின் கதைகளை இதுவரை படித்ததாக நினைவில்லை. ஒரு வேளை பிற பெயர்களில் வெளிவந்த இவரின் கதைகளை சில பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம். ஆசிரியர் குறிப்பு படித்து தெரிந்து கொண்டேன். இவரை இன்று இங்கு அறிமுகப்படுத்திய சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் பணிவான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. ஜீவி சார்

    புகழ் பெற்ற மறைந்த, மற்றும் வாழும் பல எழுத்தாளர்களின் கதையை நான் விமர்சினத்தில் உட்படுத்தாதை நீங்கள் கண்டிருக்கலாம். புதுமைப்பித்தன், மவுனி, செல்லப்பா, தேவன், சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி, சாவி, மணியன், சாரு, பாலகுமாரன், லட்சுமி, சிவசங்கரி, வாஸந்தி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன் போன்றோரின் கதைகளை வாசித்திருந்தாலும் இங்கு எ பி யில் எழுதவில்லை. குறிப்பாக தேவனின் துப்பறியும் சாம்பு கதை ஒன்றாவது, சுந்தரேசனின் அப்புசாமி சீதாபாட்டி கதை, ஜெயகாந்தனின் குருபீடம் போன்றவற்றை இங்கு வெளியிட விருப்பம் இருக்கிறது. ஆனால் இவ்வாசிரியர்களின் கதைகள் வாசகர்கள் படித்திருக்கிறார்கள். சாரு நிவேதிதாவை எனக்கு தெரியாது.

    மற்றவர்கள் ஏன் இப்பகுதியில் எழுதத் தயங்குகிறார்கள் என்பதும் புரியவில்லை.
    இன்னும் எத்தனை காலம் இப்பகுதியை தொடர்வேன் என்பது தெரியாது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி பாராவின் சாராம்சம் மனதில்
      பதிந்தது. உங்கள் உழைப்பின் மேன்மை
      உன்னதமானது. போற்றத்தக்கது. மனசார உணர்கிறேன். அதுவும் உடல் ஒத்துழைப்பு குன்றியிருக்கும் தருணத்திலும் என்பதை அதே ரீதியில் உள்ள நான் அனுபவ பூர்வமாக உணர்கிறேன். மன பலன் ஒன்று தான் துணை. இந்த மாதிரி சமயங்களில் உங்கள் சுமையைக் கொஞ்சமானும் பகிர்ந்து கொண்டு அப்பப்போ ஒன்றிரண்டு எழுதக் கூடாதா என்று எனக்கும் தோன்றும். முடியுமா தெரியவில்லை. Strain ஏற்புட்டு விடுமோ என்ற பயம் ஒரு பக்கம். காலதேவனின் கட்டளை என்னவோ பார்க்கலாம்.

      எடுத்துக் கொண்ட பணியை திறன்படச் செய்யும்
      உங்கள் உழைப்பிற்கு
      என் மனம் நெகிழ்ந்த
      பாராட்டுகள் ஜெஸி ஸார். நன்றி.

      நீக்கு
    2. திருத்தம்:
      மனபலம் ஒன்று தான் துணை.

      நீக்கு
    3. பாராட்டுகளுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அய்யா.

      நீக்கு
    4. ஜெ கே அண்ணா எனக்கு இப்பகுதியில் எழுதுவதற்குத் தயக்கம் எதுவும் இல்லை. எழுதுவதற்கான நேரமும் மனதும் ஒத்துழைக்க மறுப்பதால். பதிவுகளே எழுத மிகவும் தாமதமாகிறது. பணிகள்.

      கீதா

      நீக்கு
  21. பூமியின் நிழலே வானத் திருளா? Is the darkness of the space the shadow of Earth?

    பகலின் நிழல்தான் இரவா? Is the night is the shadow of day?

    இல்லை, NO

    பூமிப் பந்தின் பின்னே Behind the Earth ball

    இருளின் பிழம்பு, (is) the extreme of Darkness

    இரவில் குளித்து After a bath at night

    உலகம் வீசும் spreading the world with

    வெளிச்சச் சாயை பரிதி. with light rays does the SUN

    ஆமாம். YES

    இரவின் நிழலே பகல்; The shadow of night is day;

    இருளின் சாயை ஒளி. The light is the reverse image of darkness.

    Jayakumar

    ​The universe is dark. The Sun bathes in the darkness of Space, and spreads its energy in light rays during the day in the Earth . Thus the light is the reverse image of the darkness of the universe. And the shadow of Night is the Day.

    ​An optimistic view of the Darkness and Shadow. If there is a night , surely day will come. If there is a shadow surely there will be a real object.

    This is my humble interpretation.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா காலையில் சொல்ல விட்டுப் போன கருத்து. கவிதையும் புரியவில்லை எனக்கு.

      நீங்க கொடுத்திருக்கற interpretation பார்க்கறப்ப அவர் கவிதையில் வானம் என்றுதான் குறிப்பிடுகிறார். வானம் என்பது வேறு அண்டவெளி space என்பது வேறு இல்லையா? அண்டவெளி எப்போதுமே இருட்டுதானே!

      உங்கள் interpretation super! கவிதயை விட இது நல்லாருக்கு. அதுவும்

      //An optimistic view of the Darkness and Shadow. If there is a night , surely day will come. If there is a shadow surely there will be a real object.// சூப்பர்!

      கீதா

      நீக்கு
  22. எல்லா செய்திகளும் நன்மை, நேர்மை இப்போதும் உயிர் வாழ்கின்றது என்று நமக்கு தைரியமூட்டுபவை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. இன்றைய கதை பலருக்கும் புரியாமல் இருந்திருக்கிறது. காரணம் தமிழ் நாம் அறிந்த தமிழ் அல்ல. இலங்கை, இந்தியா, பழங்குடி என்று ஒரு கலவை.
    கதையை படித்து கருத்துக்கள் கூறிய யாவருக்கும் நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  24. கதை யதார்த்தம். இப்படித்தானே இப்போதும் நடக்கிறது அதைத்தான் ஆசிரியர் அவரது வட்டார மொழியில் சொல்லியிருக்கிறார். இப்படியான மக்கள் அவர்களின் வழக்கு மொழியில்தானே பேசிக் கொள்வர் என்பதால் அதை அப்படியே சொல்லியிருக்கிறார். வாசித்து வரும் போது கதை புரிந்துவிடுகிறது. எழுத்தாளர் பிரமிள் இலங்கைத் தமிழர் என்று தெரிகிறது. இலங்கைத் தமிழிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது கதை மொழி. எந்த வட்டாரம் என்று சட்டென்று பிடிபடவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!