3.7.25

மதுரைக் கதை சொல்லவா? சென்னைக் கதை சொல்லவா?

உங்களுக்கு வெள்ளாடும் கருப்பாடும் வைத்திருந்த ஒரு விவசாயியின் கதை தெரியுமா?

சரி, அதற்கு அப்புறம் வருகிறேன். இப்போது நிகழ்ச்சிக்குப் போவோம்!

அந்தக் கல்யாண நிகழ்ச்சியில் - எந்தக் கல்யாணம் என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் - பாஸ் வழியில் ஒரு உறவினரை சந்தித்தேன்.  வயது ஐம்பதுக்கு மேலிருக்கும்.  இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில் நாந்தி முதலே ஆஜராகி விடுவார்.  என்னையும் அப்படி வரலாமே என்று சொன்னார்.  வீட்டுல "எப்புட்டி அம்மக்கி நிப்பட்டியே கதி" என்று இல்லாமல் (இந்த வாக்கியத்துக்கு பொருள் புரியாதவர்கள் பெஞ்ச் மேல் நின்று கைதூக்கினால் பொருள் சொல்கிறேன்) வகை வகையா சாப்பிடலாமே"

நாந்தி அன்று அந்த நீண்ட மதிய இடைவெளியில் நானும் அவரும் மட்டும் மாட்டிக் கொண்டோம்.   அல்லது நான் அவரிடம் மாட்டிக் கொண்டேன்.  பாஸ் பக்க உறவு என்பதால் அதிகம் வாய்ஜாலத்தைக் காட்டவில்லை.  வெறுமனே 'உம்' மட்டும் கொட்டிக் கொண்டிருந்தேன்.

இத்தனை வருடங்களில் அவர் என்ன வேலை செய்கிறார் என்று கூட தெரியாது.  சும்மா அப்படியே இருந்திருக்கலாம்.  இப்போது கேட்டேன்.  பேசிய வகையிலேயே கொடுத்தால் பதிவு நீளமாகத் தெரியும்.   எனவே மொத்த உரையாடலாகத் தருகிறேன். நடுநடுவே என் சிறு சிறு கேள்விகள் மற்றும் மைண்ட்வாய்ஸ் அடைப்புக் குறிக்குள்.

என்ன வேலை என்று அவர் சொல்லவில்லை.  பதிலாக ஒரு கேள்வியைக் கேட்டார்.  "என்ன வேலை  பார்த்திருப்பேன்னு நினைக்கறீங்க?"  

நான் என்ன கண்டேன்?  அவர் என்ன படித்திருக்கிறார் என்று கூட தெரியாது.  சும்மா குத்து மதிப்பாய் கேட்டேன் "ஆடிட்டரா?"

அதற்கு பதில் சொல்லாமல் ஏதோ பேசினார்.  கொஞ்ச நேரம் மௌனம்.  சங்கடமாய் உணர்ந்தேன்.  சும்மா இருந்திருக்கலாம்.  அப்போதுதான் அந்த கேள்வியைக் கேட்டேன்.  "உங்களுடைய பொழுது போக்கு என்ன?"

திரும்பினார்.  என்னை பார்த்தார்.  "நான் என்னுடைய நாளை வடிவமைச்சுப்பேன்" என்றார்.

"எப்படி?"

"இந்த ஊரில் சொல்லவா?  மதுரைல இருந்த நாட்களை சொல்லவா?"

"இங்கே இருக்கும் நாட்களையே சொல்லுங்களேன்"

"வேணாம்..  நான் மதுரைல இருந்த நாட்களை சொல்கிறேன்"  -  

'அப்புறம் ஏன்யா என்னை அப்படி ஒரு ஆப்ஷன் கேட்டே?'    மைண்ட்வாய்ஸ்.

"காலை ஐந்தரை மணிக்கு எழுவேன்....  (ம்ம்ம்) .  டாய்லெட் போய்ட்டு (ரொம்ப முக்கியம்) பல்லு விளக்கி வந்து காபியைப் போட்டு எடுத்துக்கிட்டு ஹால்ல உட்கார்ந்து டீவியை ஆன் செய்வேன்.  (ம்ம்ம்ம்)  போனை எடுத்து வாட்ஸாப்ப்புல் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பேன்.   ஏதாவது முக்கியமானதா இருந்தா அதுக்கு மட்டும் பதில் போடுவேன்...  (எது முக்கியம், முக்கியமில்லை என்று எதை வைத்து என்று எழுந்த கேள்வியை வாய்க்குள்ளேயே மென்று விட்டேன்)  அப்புறம் டீவில நியூஸ் என்னன்னு பார்ப்பேன்.  அதுவும் டீடைலா பார்க்க மாட்டேன்.  டயமிருக்காது.  மேலோட்டமா தலைப்புச் செய்திகள் மட்டும் பார்ப்பேன் (ம்ம்ம்ம்)..  அப்புறம் போய் குளிச்சுட்டு ஸ்வாமி கிட்ட வந்து பழைய பூ எல்லாம் எடுப்பேன்.  அப்புறம் கிளம்பி நேரா டவுன் ஹால் ரோடுக்கு போவேன்(ம்ம்ம்ம்)  அங்க என்ன இருக்குன்னு கேளுங்க...  ( 'அங்க என்ன இருக்கு? உங்க ஆபீஸா?' )  இல்லை, என் ஃபிரென்ட் கடை. அங்க போனா அவன் அங்க இருப்பான்.  அவன் பிஸியா இருந்தா அவன் என்ன செய்யறான்னு பார்த்துகிட்டு இருப்பேன்..  ஃப்ரீ ஆயிட்டான்னா நாங்க ரெண்டு பெரும் பேசிக் கொண்டிருப்போம்... (எனக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது) சரியா ஒரு மணி ஆனதும் அவன் கடையை மூடுவான்...  (என்ன பங்சுவாலிட்டி) வண்டியை எடுத்துட்டு என்னையும் அழைச்சுக்கிட்டு கிளம்புவான்.  (ம்ம்ம்ம்) அப்படியே மார்க்கெட் போவோம்.  அவன் அவன் வீட்டுக்கு காய்கறி வாங்கிப்பான்.  நானும் கொஞ்சம் வாங்கிப்பேன்.  அவன் பணம் கொடுத்துட்டு கிளம்புவான்.  (ம்ம்ம்ம்)  நேரா என்னைக் கொண்டுபோய் வீட்டுல இறக்கி விட்டுட்டு போயிடுவான்...  (ம்ம்ம்ம்)     நான் வீட்டுக்கு வந்து கைகாலை  அலம்பிகிட்டு, வாங்கிட்டு வந்த காய்கறிகளையும் அலம்பி வச்சுட்டு  (ரொம்ப முக்கியம்) அப்படியே ஒரு படுக்கைய போட்டேன்னா மூன்றரை நாலு மணி வரை தூக்கம்.  (என்ன ஒரு கஷ்டமான வேலை)  டிவி பார்க்க மாட்டேன் (ச்சே..  என்ன உத்தமமான காரியம்!) (ம்ம்ம்ம்)  சாயங்காலம் எழுந்து குளிச்சுட்டு  (பார்றா..  சுத்தமான ஆளு போல...(ம்ம்ம்ம்) அப்படியே வந்து ஸ்வாமிக்கு பூஜை செய்வேன்.  (ம்ம்ம்ம்)  அது ஒரு முக்கால் மணிநேரம் போகும்.  சமயங்களில் ஒரு மணிநேரம் கூட ஆகும்னு வச்சுக்குங்களேன்..  (வேற வேலை இருந்தாதானே?  இதுவரை வேலை பற்றி ஒன்றும் சொல்லவில்லை) அப்புறம் காபி குடிப்பேன்.  அலம்பிய காய்களை வைத்து சிம்பிளா ஒரு சமையல் செய்வேன்.  ரெண்டு வாய் சாப்பிடுவேன்.  அப்படி இப்படி ஆறு, ஆறரை மணி ஆகிடும்.  அப்படியே ரூமைப் பூட்டிக்கிட்டு கிளம்பி மறுபடி நேரா...   ஃபிரென்ட் கடை.  (அடச்சை...  கேப்பியா..  கேப்பியா..  இப்படி இனிமே யார் கிட்டயாவது கேப்பியா)  (ம்ம்ம்ம்)  அங்க அவன் ஃப்ரீயா இருந்தான்னா (புரியுது..  புரியுது அவர் வேலையா இருந்தார்னா நீங்க பாத்துகிட்டு...)  இருங்க..  நானே சொல்லிடறேன்..   ஃப்ரீயா இருந்தான்னா அவன் கிட்ட பேசுவேன்.  பேச்சு எங்கெங்கேயோ போகும்.  என்னென்னவோ டிஸ்கஸ் பண்ணுவோம்"

இருந்த எரிச்சலில் அவசரப்பட்டு அந்த கேள்வியைக் கேட்டு விட்டேன்...  "அப்படி என்ன டிஸ்கஸ் பண்ணுவீங்க?"

"எவ்வளவோ...   எல்லாத்தையும் அலசி ஆராய்வோம்...  இப்போ சமீபத்துல கரண்ட் பிரச்னை வந்தது இல்லையா...   அதை எப்படி சால்வ் பண்ணலாம்னு பேசுவோம்..."  (என்னது...?)

"தமிழ்நாட்டுக்கே வந்த பிரச்னை பத்தியா?"

"ஆமாம்..  நிறைய திட்டங்கள் போடுவோம்.."

"நீங்க ரெண்டு பேருமா?  என்ன திட்டங்கள் போடுவீங்க?"

"பெரிசா விதம் விதமா யோசனை பண்ணுவோம்..  அதை எல்லாம் இப்போ சொல்ல முடியுமா?"

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

"சொன்னா என்ன?  நான் யார் கிட்ட போய் சொல்லப்போறேன்?  ஏதாவது ஒரு திட்டம் சொல்லுங்களேன்.."

"அதை அப்புறமா சொல்றேன்..   அவன் வேலைல பிஸியா இருந்தான்னா...(யோவ்..  விடமாட்டியா நீ)

"அவன் வேலை செய்யறதை பார்த்துக்கிட்டிருப்பீங்க.."

"கரெக்ட்..  அப்புறம் ஒன்பது மணிக்கு மேல கடை மூடியதும் ரெண்டு பேரும் கிளம்புவோம்..  வேண்டிய எடுத்துக்கிட்டு நேரா...."

"மார்க்கெட் போவீங்க..."

மோகனமாய் புன்னகைத்ததார்.  என்னை மூக்கறுக்கப் போகிறார் என்று புரிந்தது.

"அந்நேரத்துக்கு மார்க்கெட் ஏது ஸ்வாமி...   வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு போயிடுவான்.  வீட்டுக்கு வந்து கைகால் அலம்பிகிட்டு, பாக்கி வச்சிருக்கற சோத்தை அள்ளிப் போட்டுட்டு பாத்திரங்களை ஊறப்போட்டு தேய்ச்சு வச்சிட்டு வந்து படுப்பேன்..  ('அப்பாடா...  ஜாலி...  முடியப்போகுது...'  ம்ம்ம்ம்)  உடனே தூங்க மாட்டேன்.  தூக்கம் வராது...   ('ஹையோடா....'  ம்ம்ம்ம்)  டிவி போட்டு ஜெயா மியுஸிக்ல பாட்டு கேப்பேன்.  அங்கதான் எனக்குப் பிடிச்ச மாதிரி நல்ல பாட்டுகள்லாம் வைப்பாங்க.  நான் கலைஞர் டிவி, சன் டிவி எல்லாம் பார்க்கவே மாட்டேன்  (அவங்களுக்கு  பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவார் போல) எனக்குப் பிடிச்ச பாட்டுகள் என்னன்னா....  (லிஸ்ட் போடுகிறார். பின்னால் இதை வைத்துதான் என் ப்ளேடை ஆரம்பித்தேன். நானும் என் பழிவாங்கலை அப்புறம் ஆரம்பித்தேன்)  அதை எல்லாம் கேட்டுகிட்டே படுத்திருப்பேன்.  பன்னெண்டு மணி ஒரு மணி போல தூக்கம் வரும்."

"ம்ம்ம்ம்..."  எது பேசினாலும் ஆபத்து என்பதை உணர்ந்து மௌனமாக இருந்தேன்.  மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.  இன்னும்  மூன்று மணி நேரம் கடக்க வேண்டும்.  எழுந்து போனாலும் நன்றாய் இருக்காது.  எப்படியும் சாப்பாட்டு நேரத்தில் ஒரு Gap கிடைக்கும்.  முடிந்தால் அப்படியே எஸ்கேப் ஆகி விடலாம்.  மனப்பால்!  பாஸ் அவ்வப்போது அவர் இருந்த ரூமிலிருந்து வெளிப்பட்டு ஓரிரு வார்த்தை பேசிச்சென்றார். கேஷுவலாக என்னையும் கவனித்துக் கொள்கிறாராம்.  

 "அண்ணா...  என் வீட்டுக்காரரைப் பார்த்துக்கோ..  கம்பெனி கொடு" என்று அவர் சொன்னபோது என்னிடமிருந்து புறப்பட்ட நறநற சத்தம் அந்த ஹாலில் அவருக்குக் கேட்டிருக்காது.  என் பற்கள் அரைபட்டதுதான் மிச்சம். 

தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டேன்.

"தூங்கறீங்களா...  சாப்பிடப் போகணுமே...  சென்னையில் என்ன செய்வேன் என்று சொல்லவா?"

"இல்லை..  பரவாயில்லை..."

"இல்லை சொல்றேன்..  நமக்கும் பொழுது போகணுமே... "  (நமக்கா, உனக்காய்யா?)

சாப்பிடப் போகும்போதும் அவருக்கு பக்கத்திலேயே எனக்கு சீட் போட்டது ஒரு கடுப்பு என்றால், பாஸ் "யப்பா..   ஜோடி மாறாமல் இருக்கிறீர்களே...  அப்படி என்னதான் பேசுவீர்களோ" என்றது இன்னொரு கடுப்பு.  அவருக்கு அவரை விட்டால் போதும்.  அவர் உறவுகளுடன் கதை அடித்துக் கொண்டிருந்ததற்கு என்னிடமிருந்து தொந்தரவு வரக்கூடாது.  அவ்வளவுதான்.

என்ன வில்லத்தனம்...   நான் அப்புறம் அவர் சென்னை கதையையும் இதே போல கேட்டு முடித்தபோது காஃபி நேரம் வந்திருந்தது.  வேறு இருவர் வந்து மாட்ட, என்னை விட்டார் அவர்.  அந்த கூட்டுப் பேச்சில் என் பழிவாங்கல் தொடங்கியது.

அது சரி, சென்னைக் கதை என்ன என்கிறீர்களா?  அதற்குதான் முதலிலேயே கேட்டேன் "உங்களுக்கு வெள்ளாடும் கறுப்பாடும் வைத்திருந்த ஒரு விவசாயியின் கதை தெரியுமா?" என்று.   

டி.வில live-ஆ ஒரு விவசாயியை பேட்டி எடுக்க வந்தாங்க..   நிறைய ஆடுகளை வைத்துக் கொண்டு அவரே மேய்த்து நல்ல வசதியாக வாழ்பவர் என்பதால் சிறப்பு பேட்டி!

" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "

" கருப்பு ஆட்டுக்கா..?  வெள்ளை ஆட்டுக்கா..?! "

" வெள்ளைக்கு..! "

" புல்லு..! "

" அப்ப கருப்புக்கு..?! "

" அதுக்கும்  புல்லுதான் குடுக்கறேன்..! "

" இதை எங்கே கட்டி  போடறீங்க..? "

" எதை..?  கருப்பையா..?  வெள்ளையையா..?! "

" வெள்ளையை..! "

" வெளில இருக்குற ரூம்ல..! "

" அப்ப கருப்பு  ஆட்டை..?! "

" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "

" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "

" எதை..?  கருப்பையா..?  வெள்ளையையா..?! "

" கருப்பு ஆட்டை..! "

" கோவில் பக்கத்துல இருக்கற குளத்துல...! "

" அப்ப வெள்ளையை..?! "

" அதையும் அதே குளத்துலதான்..! "

"என்ன விலைக்கு விற்பீங்க..?"

" எதை..?  கருப்பையா..?  வெள்ளையையா..?! "

" வெள்ளையை..! "

"அப்போ மார்க்கெட்ல என்ன விலை விற்குதுன்னு கேட்டுகிட்டு அதே விலைக்குத்தான்"

" கருப்பு ஆட்டை..! "

"அதையும் அதே போலதான் விற்கிறேன்!"

பேட்டி எடுக்கறவர்  இப்ப கடுப்பாகி...

" லூசாய்யா நீ...  ரெண்டுக்கும் ஒரே மாதிரிதானே செய்யுறே...  அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வெள்ளையா..? கருப்பானு..? கேட்டுட்டே இருக்கே..?!"

" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "

" அப்ப கருப்பு ஆடு..?!"

" அதுவும் என்னுதுதான்..!"

இதைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்தபோது சிரித்தேன்.  அதை இப்படி என்னிடம் ஒருவர் செய்முறையில் காட்டுவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை.  அப்புறம் அவரை நான் எப்படி பழி வாங்கினேன் என்பது தனிக்கதை.  அவரும் ஈக்குவலாக கடுப்பானார் என்பதை தெரிந்து கொண்டபோது சந்தோஷமாக இருந்தது!  அன்று இரவு நான் சத்திரத்திலேயே தங்கி விட்டேன்.  அவர் வீட்டுக்கு சென்று காலை வந்தார்.  அவரைக் கண்டதும் அவர் என்னைப் பார்க்கும் முன் நான் நாற்காலிகளுக்கு நடுவில் குனிந்து பதுங்கினேன்.  

அருகில் அமர்ந்திருந்த -  முதல் நாள் விஷயம் கேள்விப்பட்டிருந்த - என் இளையவன் சொன்னான், "அப்பா..  அவரைப் பார்த்து நீ பயப்படறே..  அவர் வந்து அரைமணி நேரம் ஆகுது.  நீதான் பார்க்கலை.  உள்ளே நுழைந்ததுமே உன்னைப் பார்த்ததும் சட்டென மாமா பின்னால மறைஞ்சுகிட்டு பின்னால போயிட்டார்.  அங்க பின்னாலதான் அப்பவே பிடிச்சு உட்கார்ந்திருக்கார்"

அவர் சொன்ன சென்னைக் கதையை அடுத்த வாரம் சொல்லட்டுமா? 

==========================================================================================


 சீப்பை ஒளித்து வைத்த ......


புதுடில்லி: டில்லியில் நேரு நினைவு நுாலகம், பார்லிமென்ட் அருகே, 'தீன் மூர்த்தி' பவனில் இருந்தது. இது, மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ், ஒரு சுயாட்சி நிறுவனமாக செயல்பட்டு வந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், அந்த நுாலகம் பிரதமர்களின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, கலாசார அமைச்சக பொறுப்பில் உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில், அனைத்து பிரதமர்களின் வரலாறு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், எழுதிய கடிதங்கள் என பல ஆவணங்கள் உள்ளன. சமீபத்தில், இந்த அருங்காட்சியகம் நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது. அருங்காட்சியகத்தில், முன்னாள் பிரதமர்களான இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ், தேவ கவுடா, மற்றும் ஐ.கே.குஜ்ரால் உட்பட, பல பிரதமர்கள் எழுதிய கடிதங்கள் உள்ளன; ஆனால், நேருவின் கடிதங்கள் இல்லை. எனவே, அவற்றைக் கொண்டுவர வேண்டும் என, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாம். 'இந்த கடிதங்கள் அனைத்தையும், புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்' எனவும் முடிவெடுக்கப்பட்டதாம்.

கடிதம் எழுதுவதை தன் முக்கிய பழக்கமாக கொண்ட நேரு, கிட்டத்தட்ட 4,000 கடிதங்களை எழுதி உள்ளாராம். மவுன்ட் பேட்டன், அவரது மனைவி உட்பட பல தலைவர்களுக்கு, நேரு எழுதிய கடிதங்கள் அனைத்தையும், சோனியா, பல பெட்டிகளில் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இது, காங்., ஆட்சியில் தான் நடந்தது.

https://www.dinamalar.com/news/india-tamil-news/nehrus-letters-in-trouble---sonia/3968423

பா.ஜ., ஆட்சிக்கு வந்த 2014லிருந்து, இதுவரை எட்டு கடிதங்கள் சோனியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாம். 'நேருவின் கடிதங்கள் அனைத்தையும், பிரதமர் அருங்காட்சியகத்திற்கு ஒப்படையுங்கள்' என, கடிதங்கள் எழுதியும், இதுவரை எந்த பதிலும் இல்லையாம். எனவே, 'இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்' என, சொல்லப்படுகிறது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


"அவன் உடம்பெல்லாம் விஷம்..."  என்பார்களே....


சென்று படிக்க வேண்டிய செய்தி. நான் கூட ராத்திரி தூங்கி காலை எழும்போது பிளவாகி விலகி இருப்போம் என்று தோன்றியது. அல்லது ஒரு மாதம் லீவு போட்டு வெளியூர் சென்று வந்தால் நம் இருப்பிடமே மாறி இருக்கும் என்றும் தோன்றியது. அப்படி இல்லையாம். இங்கே படியுங்கள்.




===========================================================================================

சும்மா ஒரு  ரோஜா கவிதை!  ரோஜாவிற்கு ஒரு கவிதை!


தன் அழகில் தானே மயங்கி, 
தன் அழகை தானே ரசித்தவாறு 
ஒய்யாரமாய் 
ஒளிந்து ஆடிக் 
கொண்டிருக்கிறது ரோஜா ஒன்று 
பார்ப்பவர் பார்வையில் 
மாட்டாமல் 
பவ்யமாய் கிளைகளின் இடையே 
இலைகளின் பின்னே 
மறைந்து தன் திறமையை 
தானே வியந்து மகிழ்கிறது.
காற்றில் கிளை 
ஆடும்போதெல்லாம் 
தன் அழகை 
தானே ரசிக்கிறது 
யாரும் அனுபவிக்காத 
அழகு 
ஒரு நாளில் வாடி உதிர்ந்து 
விழுந்தது சேற்றில் 
பிறவியின் பயன் அறியாமல் 

==========================================================================================

இந்தப் படத்துக்கு ஒரு கவிதையோ, ஜோக்கோ, வாசகமோ எழுதுங்களேன்...


ஆரண்யநிவாஸ் மின்னிதழ் நின்ற பிறகு அவர் ஒரு வாட்ஸாப் குழு தொடங்கி உள்ளார்.  செவன் ஓ க்ளாக் என்று பெயர்.  அதில் இந்தப் படத்தைப் போட்டு இதே மாதிரி கேட்டதும் அங்கிருக்கும் மெம்பர்கள் (எல்லோருமே 60+) பகிர்ந்திருந்த சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.  நீங்கள் எழுதி அனுப்பப் போவதை  அடுத்த வாரம் பகிர்கிறேன்.

வெங்கடசுப்ரமணியன் 

பள்ளிக் கணக்கு பனித்தேனி போல,
அள்ளிக் கொளும் அவன் வேலைதான் மேலே,
வெள்ளிப் பிறை மனைவி இடை கொண்டு வந்தாள்,
கள்ளப் பொருள் காபி கனிந்து கொண்டு!


வீட்டில் மனைவியின் கைங்கர்யம் ஓங்க,
வேலைப்பளுவோ மேசை நிறைக்க,
கோட்டுத் தொங்கியே கதகதக்க,
காஃபியின் வாசம் கமழ,
கண்களும் சோர்வால் கனக்க,
கோப்பு முன்னால் கையேந்த,
எண்ணங்கள் எங்கோ எத்தனிக்கும்;
எண்ணியதோ இன்றோ எக்கச்சக்கம்.
ஓடமும் ஓய்வும் ஒத்திப் போட
உழைக்கும் மனம் ஒரு போதும் தயங்காது!


கணவன்: (தலையை கோப்புகளுக்குள்ளேயே புதைத்தபடி) "ஐயோ! இந்த வேலையை முடிக்கிறதுக்குள்ளே என் உசுரு போயிடும் போலிருக்கே!"

மனைவி: (டீயுடன் வந்து) "கவலைப்படாதீங்க! நான் போட்ட இந்த டீய குடிச்சா, சீக்கிரமாவே எல்லாம் முடிஞ்சிடும்!"

மனைவி: "நீங்க வீட்டிலதானே வேலை பார்க்கறீங்க? இந்த ஸ்டவ் எடுப்ப ரிப்பேர் பண்ணுங்களேன்.

கணவன்: "Work from home தான், Work for home இல்லடி


நாஹராணி 

ஆபீஸ் பைலயே எப்போதும் பார்த்திட்டு இருந்தா எப்படி??

இந்த திரிஸ்டவ் எரியல.. அதையும் பார்த்தாத்தான சோறாக்க முடியும்.


அனந்தசயனம் T 

"உங்க கிட்ட சொன்னா விஷயம் பத்தி எரியும் னு சொல்லிண்டே இருக்காளே, அப்டியே கொஞ்சம் இந்த ஸ்டவ்வையும் பத்த வைக்கக் கூடாதா நீங்க...?"


ஜெயக்குமார் G 

இந்த ஸ்டவ்வை பத்து வச்சு கொடுங்க ... இல்லைன்னா உங்க எல்லா ஃபைலையும் பத்து வச்சுருவேன் (மனைவி கையில் இருப்பது ஸ்டவ் தானே)


உயர் அதிகாரி மெரட்ட
வீடே ஆபீஸாய்
தலைவலிக்கு டீ கேட்டால்
எரியாத ஸ்டவ்வுடன் மனைவி
மனையாள் சொல்லே மந்திரம்
அவள் டீயே அமிர்தம்
ஸ்டவ் எரிய வேண்டும்
இருக்கவே இருக்கு
ஆபீஸ் தினமும்


ஆரண்யநிவாஸ் 

யோவ் File ஐ பார்த்தது போதும்; Life ஐ பாரு!

M சங்கரநாராயணன் 

"ஏங்க..  புது அடுப்புன்னு பழைய அடுப்பை கொடுத்துட்டான் போல.  எரிய மாட்டேங்குது...எடுத்துட்டுப் போய் என்னன்னு பார்த்துட்டு வாங்க..ஃபைல் அப்புறமா பார்க்கலாம்."


T N ராதாகிருஷ்ணன் 

"ஆஃபீஸ்ல நீங்க நல்லா பத்த வைப்பீங்களாமே - இதையுங் கொஞ்சம் பத்த வையுங்களேன்" 
"
============================================================================================

இதயம் பேசுகிறது முதலாண்டு நிறைவு விழாவில் திரு சுப்புடு பேசியது 

"என் துறையில் ஏகப்பட்ட சங்கடங்கள் இருக்கின்றன. அதைப்பற்றியும் நான் எழுதுவது பற்றியும் அனேகம் பேர்களுக்கு இந்த விமர்சனம் அவசியம்தானா என்ற ஆதங்கம் மனதில் இருக்கிறது.  எல்லாத் துறைகளிலும் விமர்சனம் இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் அந்த வேலை சரியாக நடக்கிறதா இல்லையா என்று பார்க்கிறதுக்கு ஒரு திறன் ஆய்வு நடக்கிறது. இசையில் மாத்திரம் ஏன் இருக்கக்கூடாது என்பது என்னுடைய கேள்வி. 

நான் சொல்கிற கருத்துக்காக பதில் சொன்னால் நானும் சந்தோஷப்பட்டு திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். அந்த விஷயத்தில் எனக்கு பரிபூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறார் திரு மணியன் அவர்கள். "என்ன வேண்டுமானாலும் எழுது... அதற்குக் கிடைக்கிற உதையையும் வாங்கிக்கோ" என்று என்று எனக்கு பர்மிஷன் கொடுத்திருக்கிறார்.  அதற்கு நான் தயாராக இருக்கிறேன். 

நான் இங்கு இருக்கிற பத்திரிகைகளுக்கு ஒரு விண்ணப்பம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். 

கேள்வி பதில் அவர் என்ன பண்றார் இவர் என்ன பண்றார் என்று பத்திரிகைக்காரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொள்வது வேண்டாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

==========================================================================================

KGS  சில வருடங்களுக்கு முன்பு எனக்கு அனுப்பி இருந்த மெயிலிலிருந்து ஒன்று இங்கே பகிர்கிறேன்.  இந்த பாட்டி வைத்தியம் நான்கைந்து அனுப்பி இருக்கிறார்.  ஒன்றொன்று ஒவ்வொரு வாரம் பகிர முயற்சிக்கிறேன் - மறக்காமல் இருந்தால் 



================================================================================================


பொக்கிஷம் பொக்கிஷம் பொக்கிஷம் பொக்கிஷம் பொக்கிஷம் 

அப்போதைய என் கையெழுத்தில் புத்தகம் பற்றிய விவரங்கள்.  நான் தொகுத்து பைண்ட் செய்தது.  பைண்ட் செய்தவருக்கு ஒரு கையில் விரல்கள் கிடையாது.  பெயர் ஷம்சுதீன்.



பைண்டிங்கில் சில எழுத்துகள் மறைந்திருந்தாலும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.


புத்தகத்தின் மேல் மூலையை பூச்சி அரித்து விட்டதால் படம் அரைகுறை..  பைண்டிங்கில் சில எழுத்துகள் உள்ளே போய்விட்டதால் அதுவும்....  ஆனாலும் புரியும் என்றே நினைக்கிறேன்.


41 கருத்துகள்:

  1. ​அறுவை விற்பன்னர் யார் என்பதில் சரியான போட்டி. வாசகர்கள் நாங்க தான் பொறுமைசாலிகள். ஒன்றும் செய்ய முடியாது.

    நேருவுடைய வீட்டில் நேருவுடைய பொருட்களை காட்சிப்படுத்தியிருந்ததை ஏன் அனைத்து பிரதமர் காட்சியகமாக மாற வேண்டும். அது தான் கேள்வி. ஏற்கனவே அவரை குறை கூறி வருபவர்கள் இன்னும் இந்தக் கடிதங்களை படித்து மேலும் பல குறைகளை கூறலாம். தற்போதைய கேள்வி: தலைவர்களின் சொந்த கடிதங்கள் யாருக்கு சேரும்? அவரின் வாரிசுகளுக்கா? அல்லது அரசாங்கத்திற்கா?

    ஆப்பிரிக்கா பிளவுபட்டால் என்ன, சூயஸ் கால்வாய் கட்டணம் மிச்சம்.
    இந்தியா பிளவு படாமல் இருந்தால் சரி. வடக்கு தெற்கு என்ற பாகுபாடு அதிகரித்து வருகிறது.

    பாட்டி வைத்தியம் வாராவாரம் தொடரும் என்று தோன்றுகிறது.

    செய்து பார்க்காமல் சமையல் குறிப்புகள் எழுதுபவர்கள் தற்காலத்திலும் உண்டு.

    ஜோக்ஸ் நல்ல கடி. இந்த வாரம் லேடீஸ் ஸ்பெஷல் போல.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்...   அடுத்த வாரம் சென்னை கதையை சொல்லலாமா என்ற கேள்வியை சாய்ஸில் விட்டு விட்டீர்கள்!

      நேருவின் கடிதங்கள் ஏற்கனவே புத்தகமாகவே வெளி வந்திருக்கிறதே..  இல்லையா?  அவரை குறை சொல்ல வேண்டும் என்று சொல்வதில்லை.  அவர் அபப்டி  நிறைய செய்திருக்கிறார் என்று இப்போது தெரிகிறது, அவ்வளவுதான்.  அவை வெளிப்பட்டால் நல்லதுதானே?  பொய்ப்பிம்பங்கள் கலையலாம்!

      இந்தியா பிளவுபடாது என்றே நம்புவோம்.  ஒரே அச்சுறுத்தல் நம் குன்றிய அரசு.

      பாட்டி வைத்தியம் இன்னும் மூன்று வாரம் வரலாம்.  அவ்வளவுதான் ஸ்டாக்.

      // செய்து பார்க்காமல் சமையல் குறிப்புகள் எழுதுபவர்கள் தற்காலத்திலும் உண்டு. //

      உண்மை!

      எப்படி லேடீஸ் ஸ்பெஷல் என்கிறீர்கள்? ரெட்டைவால் ரெங்குடு, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு என்பது போல மதன் இந்தத் தொகுப்புக்கு கொடுத்திருந்த பெயர் நம்ம ஊர் லேடி!

      நீக்கு
  2. முதல் பகுதி....சென்னைக்கதையம் அதே கதை தான் என்று சொல்வாரோ... ஆடு கதை போல. ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  அதேதான்..  சிறு மாற்றங்கள்..  அடுத்த வாரம் சொல்லவா?

      நீக்கு
    2. சொல்லுங்க ஸ்ரீராம், சிரிச்சுக்குவேன்!!!!

      இன்னிக்கே முதல் பகுதியை வாசிச்சப்ப சிரிப்பு வந்துச்சு! மேட்டருக்கல்ல...

      கீதா

      நீக்கு
  3. 7ஓ கிளாக் பிளேடு....ஹாஹாஹா அறுவைன்னு சொல்கிறாரோ?!!!.

    ஶ்ரீராம், இப்பகுதிக்கு....நீங்கள் பகிர்வதை சிறந்ததைத் தேர்ந்தெடுத்துப் பகிரலாமோ.

    மீண்டும் அப்பால வாரன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஒரு சந்தேகம் கமலா ஹரிஹரன் மேடம். நாம் நலமாக வாழ்வது இறைவன் கையிலா அல்லது நம் கையிலா? இறைவன் கையில் என்றால், நலமாக வாழாதவர்களை அப்படிப்பட்ட நிலைக்கு அவனே கொண்டுவந்திருக்கிறான் என்று ஆகிவிடுமே

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    3. கீதையை நினைவு படுகிறீர்கள் நெல்லை!

      நீக்கு
    4. "த்து" விட்டுப்போச்சு... ஸாரி...

      நீக்கு
  5. எனக்கென்னவோ முதல் பகுதி ரசிக்கவில்லை. கொஞ்சம் வயதானவர்களுடன் அமர்ந்தால், அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பதால் முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். அப்டேட் ஆகவில்லையென்றால் பேசும் சப்ஜெக்ட் குறைந்துவிடும் அல்லவா?

    அடுத்த வாரமும் இதைத் தொடர்வேன் என்று சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மனிதருக்கு 50 வயசுதானாமே!!! வயதானவரா?

      கீதா

      நீக்கு
    2. வாங்க நெல்லை... வயதானவர்கள் என்பதற்கு எது அடையாளம்? மனமா, உடலா?

      நீக்கு
    3. // அந்த மனிதருக்கு 50 வயசுதானாமே!!! வயதானவரா? //

      ஐம்பது வயது முதியவர் என்று செய்திகளில் படிக்கும்போது கடுப்பு வரும்!

      நீக்கு
    4. அது சரி... சிலரைப் பார்த்தாலே, வயதானவர்களுடனே ஒட்டிக்கொண்டிருப்பார்கள், அந்தக் காலத்துலே என்று ஆரம்பிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை 65+ மற்றும் அவங்க பேசற சப்ஜெக்ட்தான், அவங்களை வயசானவங்களாக் காட்டும்

      நீக்கு
    5. நான் ஒன்று சொல்லட்டுமா? 

      என் இளவயதில் என் நண்பர்களெல்லாம் வயதானவர்கள். 

      அப்பாவுடன் வேலை பார்த்த மூன்றுபேர் அப்பாவைப் பார்க்க வந்து என்னுடன் பேசிப்பேசி, என்னைப் பார்த்து பேசவே வருவார்கள்.  அப்பாவுக்கு கடுப்பாகும். 

      ஜீகே என்று ஒரு நண்பர்.  தன்னைவிட பத்து வயது மூத்த பெண்ணை அவர் திருமணம் செய்திருந்தார் என்பது இங்கே சொல்ல வேண்டாம். 

      அவர் என்னுடன் பேசிக்கொண்டிருப்பதை ஆபிசிலிருந்து அப்போதுதான் வந்திருந்த அப்பா பார்த்து விட்டு ."ஜீகே..  இதோ வந்துட்டேன்...கொஞ்சம் இருங்க" என்க, அவரோ, "நான் உங்களை பார்க்க வரலை.  ஸ்ரீராமைப் பார்த்து பேச வந்தேன்.  பேசிட்டேன்.  கிளம்பறேன்" என்று கிளம்பி விட்டார். 

      கடுப்பு வருமா வராதா?

      நீக்கு
    6. ஐம்பது வயது முதியவர் என்று செய்திகளில் படிக்கும்போது கடுப்பு வரும்!//

      எனக்கும். அது போல வயசானவங்கன்றது - மனதில்தான். சிலர் வயதானாலும் ட்ரெண்டியா இருப்பாங்கமனசிலும், பேச்சிலும்

      கீதா

      நீக்கு
    7. உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இது சம்பந்தமாய் நான் ஒரு கதை எழுதி பாதியில் வைத்திருக்கிறேன்!

      நீக்கு
  6. நேருவின் கடிதம்... சாவர்கரின் கடிதம் ஒன்றை வைத்து அவரை எள்ளிநகையாடிக்கொண்டிருந்தவர்கள் பற்றிய வழக்கில், காந்தி, பிரிட்டிஷாருக்கு, தங்கள் உண்மையுள்ள வேலைக்காரன் என்றெல்லாம் குறிப்பிட்டு பல கடிதங்கள் எழுதியிருந்தது, பணம் பெற்றுக்கொண்டது ஆகியவை குறித்து நீதிபதி விமர்சித்ததை நினைவுபடுத்தியது. நேருவுன் கடிதங்களில் என்னென்ன பூதங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றனவோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கடிதங்கள் வரலாற்றின் ஆவணங்கள் இல்லையா?  அது சமயங்களில் ஆணவங்களையும் வெளிப்படுத்துகிறது..  ஹிஹிஹி..

      நீக்கு
  7. சோனியா, பல பெட்டிகளில் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இது, காங்., ஆட்சியில் தான் நடந்தது.//

    ஏதாவது, இவங்க குடும்பத்துக்கு, அரசியலுக்குப் பாதகமாக இருக்குமோ விஷயம்?

    எனக்கு இன்னொரு விஷயம் தோன்றுது, அந்தக் கடிதங்கள் வந்து என்ன ஆகப் போகிறது? இப்ப?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்தக் கடிதங்கள் வந்து என்ன ஆகப் போகிறது? இப்ப? //

      ஆமாம்..  நீங்கள் சொல்வதும் சரிதான்.  யார் என்ன செய்வார்கள்>  யார் உண்மையை ஒத்துக்கொள்வார்கள்?  நேற்று ஒப்பிட்டு திமுக பேச்சாளர் அர்னாபிடம் அஜித் கொலை பற்றி சப்பை கட்டு கட்டுவதைப் பார்த்தபோது ரத்தம் கொதித்தது.

      ரிபப்ளிக் டிவி தமிழ்நாட்டில் தொடங்கப்படப் போகிறது என்று சொன்னார் அர்னாப்.  தமிழக ஊடகங்களுக்கு எல்லாம் முதுகெலும்பு இல்லை என்றும் சொன்னார்.

      நீக்கு
  8. நீரில் மிதக்கும் கண்டங்கள் அப்படி பிளவாகி பிளவாகித்தானே இப்போதைய உலக கண்டங்கள் அதுக்கு முன்ன ஒன்றாகவோ இல்லை இரண்டாகவோ தானே. அவ்வப்போது சிறிது சிறிதாக மாறிக் கொண்டேதானே இருக்கின்றன. எதிர்காலத்தில் உலகவரைபடம் மாறத்தான் செய்யும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறட்டும்..  மாறட்டும்...   அப்போ நமக்கு எத்தனையாவது ஜென்மமோ...  இப்பவே அருணாச்சல பிரதேஷ் எங்களுதுங்கறான் சீனாக்காரன்.  காஷ்மீர்ல பேர்பாதி என்னுதுங்கறான் பாகிஸ்தான் காரன்..

      நீக்கு
    2. இது மனுஷங்க பிரிக்கறது. அது இயற்கை பிரிப்பது!

      கீதா

      நீக்கு
  9. ரோஜாவிற்கு ஒரு கவிதை!//

    எந்த ரோஜாவிற்கோ?!!!!! ஹிஹிஹிஹி

    யாரும் அனுபவிக்காத
    அழகு //

    கவிதை நல்லாருக்கு, ஸ்ரீராம்.

    யாரும் அனுபவிக்காத அழகு// ? பெரும்பாலான பெண்கள் ரோஜாவைப் பார்த்துவிட்டால் பறித்துத் தலைல வைச்சுக்குவாங்க இல்லைனா காதலனுக்குக் கொடுப்பாங்க இல்லையோ!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டு ரோஜாச்செடியில் ஒரு ரோஜா பின்னால் மறைந்து இருந்து நாங்கள் பார்க்காமல் விட்டதைப் பார்த்தபோது தோன்றியது!

      நீக்கு
  10. அடுப்பூதும் பெண்களுக்கு எழுத்தேது வாசிப்பேது காலமெல்லாம் மலையேறிப் போச்சு....எந்திரிங்க, எனக்கும்தான் வாசிக்கணும் எழுதணும்.
    இந்தாங்க இந்த அடுப்பை வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ...இத்தனை நாளும் உங்களுக்கு டாண்ணு வக்கணையா சாப்பாடு கரெக்ட்டா டைமுக்கு வந்திச்சுல்ல....இப்ப எனக்கு டாண்ணு வரணும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சுப்புடுவின் விமர்சனம் சில சமயங்களில் ஒன் சைடட் ஆக இருக்கும். சிலரைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வார் சிலரைத் தள்ளிவிட்டுவிடுவார். அவரது எழுத்தை ரசித்ததுண்டு ஆனால் கருத்தை எப்போதும் அல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பத்திரிகைகளுக்கான சுப்புடு அவர்களின் விண்ணப்பம் நல்ல விண்ணப்பம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விண்ணப்பம் இன்றளவிலும் பின்பற்றப்படுகிறதா என்பது சந்தேகம்தான்!

      நீக்கு
    2. சுத்தமா கிடையாது.

      கீதா

      நீக்கு
  13. பாட்டி வைத்தியம் கொள்ளாம்.

    //ஒன்றொன்று ஒவ்வொரு வாரம் பகிர முயற்சிக்கிறேன் - மறக்காமல் இருந்தால்//

    ஹாஹாஹா.....ஸ்ரீராம், அப்ப நீங்க முதல்ல இந்தக் கஷாயத்தை பரிசோதனை செஞ்சு பார்த்துடுங்க! அடுத்த வாரம் மறக்குதா இல்லையான்னு தெரிந்துவிடும். சக்ஸஸ் னா நானும் அந்தக் கஷாயத்தைக் குடிக்கலாம்னுதான்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. OMG... பூமராங் மாதிரி என்னையே திருப்பித் தாக்கும்னு நான் எதிர்பார்க்கலை!

      நீக்கு
  14. பொக்கிஷம் எழுத்தின் எதிரொலி....

    உங்கக் கையெழுத்து கணினியின் கையெழுத்து போல இருக்கு, ஸ்ரீராம். கோடுகளால்...

    வாரா வாரம் - நீ எங்க செய்யற? அப்பத்தானே தெரியும் உன் குறிப்பு நல்லாருக்குமா இல்லையான்னு!!!! நீ எழுதறதைத்தானே நான் அப்படியே செய்யறேன்!!!!!!!!!!!!!!! உனக்கே தெரியலை பாரு உன் குறிப்பு!

    டானிக் புன்சிரிக்க வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கணவன் குரலில் உங்கள் பதில் சிரிக்க வைக்கிறது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!