5.7.25

ரஞ்சித்குமார், சக ஓட்டுநர்கள் ஒரு கோடி ரூபாய் மற்றும் நான் படிச்ச கதை

 

ஆதரவற்றோரை அரவணைக்கும் ரட்சகன் ரோட்டோரம் திரிந்த 446 பேரை மீட்ட மனிதநேயர்

உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன் 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் குறிப்பிட்டார். இவ் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் ரோட்டோரங்களில் திரியும் ஆதரவற்றோர், மனநலம் பாதித்தவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தல் போன்ற சமூகசேவையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளவர் ரஞ்சித்குமார்.  இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரிகிறார். இவர் இதுவரை ரோட்டோரங்களில் ஆதரவற்று திரிந்த 446 பேரை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.  இவரின் சமூக சேவையை பாராட்டி கவர்னர் ரவி, சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளார்.  ரஞ்சித்குமார் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் கோவை மாவட்டம் வால்பாறை. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆதரவற்றவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க விரும்பினேன். டி.பார்ம் படித்தேன்.  ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தில் மருந்தாளுனர் பணிக்காக இங்கு வந்தேன். ஆதரவற்றவர்களை மீட்கும் பணியை துவங்கினேன்.  எனது பணி நேரம் முடிந்த பின் மீட்பு பணிகளில் ஈடுபடுகிறேன். துவக்கத்தில் இப்பணியை செய்யும் போது பலர் விமர்சித்தனர் அதை கண்டு கொள்வதில்லை.  ஒருவரை மீட்பதற்கு முன் அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிந்த பின் மீட்பேன். இவர்களை நான் சுத்தம் செய்து அரசு மருத்துவமனைகள், காப்பகங்களில் சேர்க்கிறேன். இச்சேவையால் பலரை அவர்கள் குடும்பத்துடனும் சேர்த்துள்ளேன்.  மனநலம் பாதித்தவர்களை போலீஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கிறேன். மருத்துவமனைகளில் ஆதரவற்றறோர் இறந்தால் அடக்கம் செய்ய போலீசார் என்னை அழைப்பார்கள்.  இதுபோன்று ஆதரவற்ற 18 பேருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளேன். இறந்த சிலரின் உடல்களை தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு வழங்கி உள்ளேன். 10 ஆண்டுகளில் 46 முறை ரத்த தானம் செய்துள்ளேன். விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறேன்.  தாய் தந்தை இல்லாத பழங்குடியின குழந்தைகள் 60க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து, அரசுக்கு தகவல் தெரிவித்து காப்பகங்களில் சேர்த்துள்ளேன்.  ரோடுகளில் விலங்குகள் அடிபட்டு இறந்தால் அதையும் அடக்கம் செய்கிறேன்.  ரோட்டோரங்களில் முதியோர், மனநோயாளிகள் சுற்றி திரிந்தால் யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் பலர் உள்ளனர். இவர்கள் பற்றி 14567 என்ற இலவச தொலைபேசிக்கு தெரிவிக்கலாம்.  உலகில் மரம், செடிகள், கால்நடைகள் ஆகியன வாயில்லா ஜீவன்கள். அவற்றிற்கும் உயிர் உண்டு. அடித்தால் நமக்கு வலிப்பது போல் அவற்றிற்கும் வலி இருக்கும். கவர்னர் விருது பெற்றது சந்தோஷமாக உள்ளது. இதுவரை மூன்று முறை கவர்னர் மாளிகையில் அவர் வழங்கிய தேனீர் விருந்தில் பங்கேற்றுள்ளேன்.  வீட்டில் குழந்தைகளுடன் செலவிடும் நேரமும் குறைவு தான். ஆனாலும் மனைவி தெய்வமலர், குழந்தைகள் நேகாஸ்ரீ, ஸ்ரீரக் ஷன் எனது செயலுக்கு ஊக்கமளிக்கின்றனர் என்றார்.

இவரை வாழ்த்த 94420 73579 எண்ணிற்கு ஹலோ சொல்லுங்க.

=====================================================================================

உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி உதவி சக ஓட்டுநர்கள் நிதி திரட்டி வழங்கினர்


ராயபுரம், சாலை விபத்துகளில் உயிரிழந்த 26 கன்டெய்னர் லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கு, சக ஓட்டுநர்கள் ஒரு கோடி ரூபாய் வரை நிதி திரட்டி வழங்கியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை துறைமுகத்தில் சி.சி.டி.எல்., - சி.ஐ.டி.பி.எல்., என்ற தனியார் சரக்கு பெட்டக முனையங்களும், எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் தனியார் நிர்வகிக்கும் கன்டெய்னர் முனையங்களும் செயல்பட்டு வருகின்றன.  இந்த துறைமுகங்களில், 3,500க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர்.  இந்த நிலையில், சாலை விபத்துகள் மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 26 கன்டெய்னர் லாரி ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு, 'வாட்ஸாப்' மூலம் நிதி திரட்டி, சக ஓட்டுநர்கள் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வழங்கி உள்ளனர்.  கடந்த மே மாதத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் என, 20 லட்சம் ரூபாய் நேரில் வழங்கினர்.  இதுகுறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சென்னை துறைமுக டிரைலர் மற்றும் டாரஸ் ஓட்டுநர் நலச்சங்க துணைத் தலைவர் சக்திவேல் கூறியதாவது:  கடந்த மே மாதத்தில், துாத்துக்குடியைச் சேர்ந்த ரவிச்செல்வம், வத்தலகுண்டைச் சேர்ந்த சதீஷ்குமார், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த மணி, விருத்தாசலத்தைச் சேர்ந்த சாகுல் அமீது ஆகிய நான்கு கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தால் உயிரிழந்தனர்.  இவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் என, 20 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளோம். கடந்த 2018ம் ஆண்டு முதல் இப்பணியை மேற்கொண்டு வருகிறோம்.  இதுவரை 26 பேருக்கு ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளோம். உயிரிழந்தவர்களின் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணம் டெபாசிட் செய்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

=====================================================================================================

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் - காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கட்டட கான்ட்ராக்டர். மனைவி அம்சவேணியுடன் நேற்று முன்தினம், மருத்துவ சிகிச்சைக்காக கோவை செல்ல அரசு பஸ்சில் சென்றார். கருமத்தம்பட்டி அருகே சீட்டின் கீழே ஒரு பை இருப்பதை பெருமாள் பார்த்து எடுத்துள்ளார். அதில், 40 ஆயிரம் ரூபாய் பணமும், கனரா வங்கி கணக்கு புத்தகம் இருப்பதும் தெரிந்தது. சிகிச்சை முடித்துவிட்டு மாலையில், அவிநாசி திரும்பியதும் வங்கி கணக்கு புத்தகத்தில் இருந்த குன்னத்துார் - பாரதி நகரை சேர்ந்த கலாமணி என்பவரிடம் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு, பணப்பை கிடைத்த விவ ரத்தை சொல்லி, அவிநாசி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு வந்த கலாமணியிடம், டி.எஸ்.பி., சிவகுமார் முன்னிலையில், பணப்பையை பெருமாள் ஒப்படைத்தார். பணத்தை கண்ணீர் மல்க பெற்றுக்கொண்ட கலாமணி, பெருமாள் மற்றும் அம்சவேணிக்கு நன்றி தெரிவித்தார். பெருமாள் மற்றும் அம்சவேணி தம்பதியினரின் நேர்மையை பாராட்டும் வகையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, எஸ்.ஐ.,கள் வேலுசாமி, அமல் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
===========================================================================================

நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்.... 300 பேப்பர் ஆர்டர்... கல்வி, சமூக சேவைகளில் முத்திரை பதிக்கும் அரசு பள்ளி ஆசிரியை.



விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியை, கல்விச் சேவையில் மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டு, பல்வேறு விருதுகளை பெற்று சாதித்து வருகிறார்.விழுப்புரம் அடுத்த சுந்தரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன் மகள் சரசு. தற்போது, கண்டமங்கலம் ஒன்றியம், கணக்கன்பாளையம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர், படிக்கும் போதே, ஆசிரியையாக ஆக வேண்டும் என்ற கனவோடும், தான் பயின்ற பள்ளியில் ஆசிரியையாகி தனது ஊரைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை கல்வித் தரத்தில் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்ற கனவுகளோடு படித்து ஆசிரியையாகி சாதித்துள்ளார். இவர், நினைத்தது போலவே, தான் படித்த பள்ளியான கண்டமங்கலம் ஒன்றியம், வாணியம்பாளையம் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக 20 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். தனது சொந்த கிராமமான சுந்தரிப்பாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள 20 கிராமங்களில் முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்குரிய இடத்தையும் பிடித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக கல்விச் சேவையில் உள்ள சரசு, கடந்த 15 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர், பள்ளிக்கல்வித் துறையின் விருதான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கடந்த 2021-22ம் ஆண்டு பெற்றுள்ளார். இவர், கடந்த 1995-97ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பொருளியல் முதுகலை பட்டயம் படிப்பில் கோல்டு மெடலை அப்போதைய தமிழக கவர்னர் பாத்திமா பீவியிடம் பெற்றுள்ளார்.  மேலும், ஆசிரியை சரசு, கல்விச் சேவை மட்டுமின்றி பொது சேவையாக கொரோனா கால கட்டத்தில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னார்வ பணி செய்ததற்காக கடந்த 2019-20ம் ஆண்டு சிறந்த தன்னார்வ பணி பாராட்டு சான்று பெற்றுள்ளார். மேலும், இவர் மக்களுக்குத் தேவையான உணவு, உடை, கபசுர குடிநீரும் வழங்கினார். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பித்தார். எண்ணும் எழுத்தும் திட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை மாநில, மாவட்ட, ஒன்றிய கருத்தாளராக ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். சிறந்த கருத்தாளர் என்ற சான்றிதழை குடியரசு தின விழாவில், கலெக்டரிடம் பெற்றுள்ளார். மாற்றுத்திறன், பழங்குடி, ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தபட்ட மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, போட்டிகளில் பங்கேற்று வெல்லும் முறைகளை கற்பித்து அவர்கள் வெற்றி பெறவும் செய்து சாதித்துள்ளார். சிறந்த சமூக பணிக்கான முனைவர் பட்டமும், அரசின் புத்தக திருவிழாவில், பொறுப்பாசிரியையாக செயல்பட்டு மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார். இது மட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் வயதுள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் செல்கிறார்களா என கண்டறிவது. குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது போன்ற சிறந்த சேவைகளை செய்து வருகிறார். பவ்டா வானொலியில் தேர்தல் விழிப்புணர்வு, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள், போட்டிகளுக்கான விழிப்புணர்வு பாடல்களை பாடி பரிசும் பெற்றுள்ளார். புதுச்சேரி, அகில இந்திய வானொலி நிலையத்தில், இவர் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பேசியுள்ளார். தமிழ்நாடு பாடநுால் உருவாக்கும் குழுவில் உறுப்பினராக செயல்பட்டு, 5ம் வகுப்பு தமிழ் பாடம் எழுதும் குழுவில் சேர்ந்து பாடபுத்தகம் எழுதியுள்ளார்.  விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்றதற்காக, முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் நற்சான்றிதழ் பெற்றுள்ளார். தற்போதைய கல்வி அமைச்சர் மகேஷிடம், நல்லாசிரியர் விருது மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


 நான் (JKC) படிச்ச கதை.

ஓலைப்பட்டாசு

அந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாதது. அதைப்பற்றி சொல்வதற்கு தேவைப்பட்ட அளவுக்கே சுயபுராணம்.

என் பெயர் எதற்கு? நான்… அவ்வளவுதான். மற்றவர் பெயர் முக்கியம். அதுவும் சந்தானம் ஐயங்கார், பெரும்தேவி, சின்னா, இவர்களின் பெயர்கள். இந்தக்கதைக்கு என்னிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்துவது முக்கியம்.  

பார்த்தீர்களா, ஆரம்ப விஷயத்தை விட்டு அலைகிறேன். காரணம் என் வயசு. என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு, இரண்டு மனைவிகள், ஒரு தேசிய விருது, ஒரு நாள் ஜெயில், ஒரு ப்ரோஸ்டேட் ஆப்பரேஷன், காரேஜில் நெருக்கமாக மூன்று கார்கள், உறவினரின் துரோகங்கள், தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம். இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதைக் கடந்து விட்ட ஒருவன். இறந்து போனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நாலு வரிகளில் எழுபது வருசமும் அடங்கிப் போகும்.

சொல்ல வந்தது அந்த ஒரு தீபாவளி பற்றி. ஸ்ரீரங்கத்தில் என் பன்னிரெண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய் தான் தந்தாள். இப்போது என் வீட்டில் ஐந்து ரூபாய் தாள் தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூடப் பொறுக்க மாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிக சந்தோம் கிடைக்க ….  கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள். பனை ஓலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சு போட்டு மிக சின்னதாக திரியுடன் பனை ஓலை வாலுடன்… பிரமாதமாக வெடிக்கும். ஆனால் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள் வெடித்து கையை உதற வேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெய்யிலில் காயப்போட்டே ஆக வேண்டும். 

பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதிப் பணத்திற்கு வாங்கிக் கொண்டு, மிச்சத்திற்கு கொல்லன் பட்டறையில் போய் வேட்டுக்குழாயும், கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டோம். இது ஒரு மாதிரி ‘மினி’ வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்தகத்தைக் கெட்டித்து அதன் போல்ட்டை சொருகி சுவரில் மடேல் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச்சத்தம் விண்ணென்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்துக் கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்புறம் மெல்ல நழுவி ஒரு டமால் அடித்து விட்டு கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம் தான் மிகச் சுத்தமானது.  

அந்த தீபாவளி ஓலைப்பட்டாசு காயப்போட மாடிக்குச் சென்றபோது பக்கத்து வீட்டு ‘எடுத்துக்கட்டி’யின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் ஏறி குதித்து அந்தப்பக்கம் போய் பார்த்தபோது சந்தானமய்யங்கார் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு சின்னாவைப் பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர். எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கட் பால் உள்ளே போனால் திருப்பித் தரமாட்டார். ‘வல்லாரை ஓழி’ என்றெல்லாம் திட்டுவார். அவர் வீட்டு சுந்தா எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமுக்காளம் போட்டு பெட்ரோமாஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து வைத்திருந்த கொய்யாக்காய்கள் சிதறி கிடந்தன. தரையெல்லாம் வேர்வையால் ஈரமாக இருந்தது. சந்தானமய்யங்காரின் செருப்புதான் ‘’எடுத்துக்கட்டி’யின் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க” என்று கேட்டபோது “இவளுக்கு உடம்பு சரியாக இல்லை, மூச்சு வாங்குதுன்னா, ….அதனாலே தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன், போடா போடா, நீ எங்கே இங்கே வந்து தொலைச்சே….. ஓடிப்போ” என்றார்.

“பட்டாசு காயப்போட வந்தேன். மாமியைக் கூப்பிடட்டுமா? “ என்றேன்.

“மாமி பெட்டவாய்த்தலை போயிருக்கா. சுவர் ஏறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான் ..போ” என்றார்.  

சின்னா இதையெல்லாம் கேட்காத போல ஒரு மாதிரி மயக்கத்தில் கண்ணை மூடிக்கொண்டு, சற்றே நெற்றியைச் சுருக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  

நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கட் கேப்டன். “பாவம்டா அவ, மேல் மூச்சு வாங்கறது, சந்தானம் மாமா தடவிக் கொடுத்தார்.  இல்லையேல் ரொம்ப கஷடப்பட்டிருப்பா “ என்றேன்.  

அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப்படம்  எதுவும் பார்த்தே இல்லையா? மார்கழி உற்சவத்தில் விற்குமே”  

“இல்லை”

அவன் “வா” என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம், திவ்ய பிரபந்த சாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்து காட்டினான்.  

“ஆமாண்டா, இப்படித்தான் சத்தான மாமாவும் சின்னாவும் இருந்தா. “அவன் ஒரு வக்கீலைப் போல பல கேள்விகள் கேட்டு “இது தெரிந்ததா, அது புரிந்ததா“ என்றெல்லாம் கேட்டு, அவ்வப்போது குபீர் குபீரென்று சிரித்து “அடிச்சேடா லக்கி ப்ரைஸ்” என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.  

“எனக்கு எல்லாம் புரியுது ஆனா  எதுக்குடா தலையிலே முண்டாசு” என்றான் பாச்சு.  

“அதாண்டா ட்ரிக்கு, அதைக் கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேறே யாரோன்னு நினைச்சுண்டுடுவோமாம்.” என்று வீரு விளக்க, புரிந்தும் புரியாமலும் இருந்த என்னை ஒரு மாதிரி பார்த்து “நீ ஒண்ணு பண்ணு, அவர் கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடிலே ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்தபோது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேன், மாமி பெட்டவாய்த்தலையிலிருந்து வந்தாச்சா’ ன்னு ….அவாள்ளாம் சீட்டாடிண்டுருப்பா, அங்க போய் கேட்டுப்பாரு."

“ ஐயோ போடா, தோலை உரிச்சிடுவார்”

“அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓட தயாரா இரு. ஓரமா நின்னு  கேட்டுட்டு வந்துரு.  நடக்கறதை பாரேன்”

அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த, நான் மெல்ல தைரியம் பெற்று பக்கத்து திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளிசெம்பில் காபியும், பத்தமடை பாயுமா ‘ஆஸ்’ ஆடிக்கொண்டிருந்தார்கள். புகையிலையைத் துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்த சந்தானமய்யங்கார் திடுக்கிட்டு ‘என்னடா’ என்றார்.

“மாமா மாடிலே ஓலைப் பட்டாசு, பெருந்தேவி மாமி வந்தாச்சா? பெட்டவாய்த்தலையிலேருந்து” இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா” என்று என்னை அலாக்காக தூக்கி உள்ளே செலுத்தி கல்கண்டு, அரிசி பெப்ரமுட்டு, லேகா உருண்டை, என்று இனிப்பான வஸ்துக்களை திணித்து விட்டு “என்ன பார்த்தே, சொல்லு” …. 

“நீங்க சின்னாவுக்கு சிகிச்சை ஏதும் பண்ணலை.” என்றேன்.

“பின்னே என்னவாம் அது”

“வீரு சொல்றான், கொக்கோகமாம் அது”

“மாமி கிட்டே சொல்லாதே. சொல்லாம இருந்தா …. உனக்கு என்ன வேணும் சொல்லு?.....சொல்லுடா ….கண்ணு”

நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், இரட்டை வெடி ஒரு டஜன், கேப்பு, துப்பாக்கி, குதிரை வால், தரை சக்ரம், ஊசி பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்ரம், லக்ஷ்மி வெடி, அப்புறம் வந்து பத்தவைக்க மட்டிப்பால் வத்தி ஒன்று,” என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.  

அவர் எழுந்து அலமாரிக்கு சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி பி ஜி கடையில் கொடு உனக்கு வேணுங்கிறதை வாங்கிக்கோ, ஆனால் மாடிலே என்ன பார்த்தே …”

“மாமா ஓலைப்பட்டாசு காயப்போடுறப்ப உங்களையும் சின்னாவையும்..” 

“ஏய் யாரும் கேட்டா அங்கே எதுவும் பார்க்கலைன்னு சொல்லணும். அப்பத்தான் பட்டாசு.”

“சரி மாமா” என்றேன்.  

இந்த தீபாவளிக்கு நானும், வீர ராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல் அடுத்த கார்த்திகைக்கும் பாக்கி வைத்தோம். பாட்டி ‘ஏதுடா இத்தனை பட்டாசு?’ என்றதற்கு “நாங்கள்லாமே சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி’ என்று புளுகினேன்.

அடுத்த தினங்களில் நான் எப்போது சந்தானம் அய்யங்காரைப் பார்த்தாலும் “இங்கே வாடா” என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சக்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த வாதம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா? என்று தின்னக் கொடுத்துண்டே இருந்தார்.”  

சில நாட்களில் தைரியம் பெற்று “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோஸ் எடுத்தா அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா” என்றால் “உடனே போய் இரண்டு பம்பரம் வாங்கிக்கோ …தலையில் குத்துப்பட்டா மாத்துப் பம்பரம் வேணுமோ இல்லையோ” என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கட் பந்து, ஸ்டம்ப், எல்லாம் கேட்டுக்கூட கொடுத்து விட்டார்.  

பெருந்தேவி மாமி “என்ன இந்த பிள்ளைக்கு செல்லம் கொடுக்கிறீர்கள்“ என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கிறான்.  அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு …” என்றார் என்னை பார்த்து கண் சிமிட்டி.  

இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப்பார்” என்று சொல்ல சந்தானமய்யங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய, மர வேலைப்பாடுகள் நிறைந்த கருப்பு மேசை கண்ணாடியில் தெரிய, விறுவிறுப்பாக தன்னை விசிறிக் கொண்டு சந்தானமய்யங்கார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுது கொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்திக்கொண்டு அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா…. இந்த பிராமணன் செய்த அநியாத்தைப் பார்த்தாயோ…மொட்டை மாடியில் சின்னாவை கூட்டி வெச்சுண்டு …”

“ஏய் நீ போடா…”

“ஏண்டி அந்த பிராமணன் தான் துப்பு கெட்டுப் போய் கையைப் புடிச்சான்னா உன் புத்தி எங்கேடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்பு குட்டி, சக்கை திங்க வந்தவளே, “ என்றாள். அதன் பின் “உனக்கு குளிர் காச்சல் வர ….உனக்கு பாடை கட்ட .. என்று பலமாகத் திட்டியதில் சின்னா “கிணற்றில் விழப்போறேன்” என்று புறப்பட, எனக்கு அழுகை வந்துவிட, “பாருங்கோ, இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்ல….. ஓசி சிறுக்கி.”  

நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமய்யங்காரிடம் என் பிளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய்விட்டதே என்று தான்.  

அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக்குழாய் தான்.  

அந்த தீபாவளியை மறக்க முடியாதுதான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டு கிடைத்த சில ஞானங்கள்.  

அறியாச்சிறுவன் - அறிந்த சிறுவன் ஆகிவிட்டேன். என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றி விட்டது. என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல், அவதூறு சேகரித்து, விலை பேசுவதாகி, அதை பயன் படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகிவிட்டது. எத்தனையோ பேரை எத்தனையோ நளின மார்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்துவிட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து 60 நிமிஷம் வெடிக்கும் ஆயிர ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.  

நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு என் நாய்களுடன் பேசுகிறேன். “சீசர், ரீட்டா” … அந்த தீபாவளியன்று சந்தானமய்யங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி காம் படித்து விட்டு ரயில்வே கிளார்க் ஆக நிம்மதியாக இருந்திருப்பேனே. 

ஆம்,  என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில் தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப் படுத்தப் பட்டேன்.  

காரணம். ஓலைப்பட்டாசு.

பின்னுரை

ஒன்றை கவனித்தீர்களா? இதுவரை ஆசிரியர் யார் என்று குறிப்பிட வில்லை. வாசகர்கள் ஊகிக்கட்டும் என்று விட்டு விட்டேன். விடை தெரியாதவர்களுக்கு:  ஆசிரியர் …..  நம்ம வாத்தியார் தான் … சுஜாதா (ஸ்ரீரங்கம் எஸ் ஆர்). கதை “ஸ்ரீரங்கத்துக் கதைகள்” என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.  

வாத்தியார் கதையில் குறைகள் காண்பது சரியில்லை. அவரே கதைக்கு தலைப்பு சரியில்லை என்று தெரிந்து அதை சரிப்படுத்த கடைசி பாராவில் ஒரு “வில்லன்” ஆகிக் கொள்கிறார். வில்லன் ஆனதற்கு ஜடப்பொருள் ஓலைப்பட்டாஸை சாக்காக வைத்துக் கொள்கிறார். மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை.  

இக்கதையின் நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தவை.

அவை கொக்கோக புத்தகம் அறிமுகம், பெண் உடலின் அனாடமி அறிந்தது,  ஐம்பது வயதிலும் மனைவியிருக்க வேலைக்கு வந்த பெண்ணையும் வைத்துக்கொண்ட பெரிய மனிதர் (நெருங்கிய உறவினர்). 

பத்து வயது. மொட்டை மாடியில் மிளகாய் காயப்போடச் சென்றபோது பக்கத்துக்கு வீட்டில் கதவில்லா, கூரையில்லா பாத் ரூமில் பெண் குளிப்பதை கண்டேன். உடனே கீழே வந்து விட்டேன். ஆனாலும் காட்சி மனதை விட்டு மறையவில்லை. பரீட்சையில் சில கேள்விகளுக்கு விடையை ஆலோசிக்க வேண்டி வரும்போது இக்காட்சி முன் வந்து நின்று பயமுறுத்தும். 

கல்லூரியில் ராகிங் என்று இல்லாவிட்டாலும் புதிய மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் சரோஜாதேவி புத்தகம் கொடுத்து வாசிக்க சொல்வார்கள். சினிமா பாட்டு புத்தகம் போல்  இருக்கும். பச்சையான வருணனைகளுடன் உள்ள அதை வாசிப்பது என்னவோ போல் இருக்கும். கூச்சம், அச்சம் போன்ற அவஸ்தைகள் உண்டாகி கஷ்டப்பட்ட பாடு… அப்பப்பா..  

ஒரு நெருங்கிய உறவினர். 50 வயதில் வீட்டு வேலைக்கு ஒரு சிறுமி (18 வயது) யை வைத்தவர் மற்றதற்கும் ஸ்டெப்னி ஆக வைத்துக்கொண்டார். பாவம் அந்தப் பெண் கடைசி வரை கல்யாணம் ஆகாமல் இருந்தாள், இறந்தாள்.

ஆக அறியாத பையன் - அறிந்த பையன் ஆகிவிட்டாலும் நான் இந்த 76 வயது வரையிலும் “வில்லன்” ஆகவில்லை. அதுக்குன்னு ரொம்ப நல்ல பையன் என்று கருதி விடாதீர்கள். பள்ளிக்கூட தோட்டத்தில் திருட்டு மாங்காய் அடித்திருக்கிறேன். ஆஃபிஸில் சக பெண் பணியாளரின் டிபன் பாக்ஸை ஒளித்து வைத்திருக்கிறேன். ஆபீஸ் ஸ்டேஷனேரி கொஞ்சம் சொந்த உபயோகத்திற்கும் எடுத்திருக்கிறேன்…. முக்கியமாக செல்லோ டேப். 

9 கருத்துகள்:

  1. வாத்யார் வாத்யார் தான். என் கண்ணில் பட்ட இரண்டு உதாரணங்கள்.
    // ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து வைத்திருந்த கொய்யாக்காய்கள் சிதறி கிடந்தன. தரையெல்லாம் வேர்வையால் ஈரமாக இருந்தது.//
    சந்தானம் ஐயங்கார் சல்லாபம் செய்வதை விவரிக்க எழுதியது இது. ரவிக்கைக்கு முந்தானை உண்டா? இல்லை என்பது அவருக்கும் தெரியும். ரவிக்கையின் முடிச்சு அவிழ்ந்து கொங்கைகள் (கொய்யாக்காய்கள்) சிதறி இருந்தன.( கொய்யாக்காய் உவமை.). அதைத்தான் அவ்வளவு நாசூக்காக எழுதியிருக்கிறார். அக்காலத்தில் ரவிக்கைக்கு ஹூக் கிடையாது. முடிச்சு தான் போடுவாங்க.

    //பரண் மேல் கத்யத்ரயம், திவ்ய பிரபந்த சாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்து காட்டினான். //
    பைபிள் போன்று பிரபந்தம், கத்யத்ரயம் நூல்கள் வைணவர் வீடுகளில் இருக்கும். ஆனால் அவை பரண்மேல் குடி கொண்டுவிடும். அதே போன்று யாரும் காண மாட்டாத இடத்தில் ஒளித்து வைக்க வேண்டி அவற்றின் நடுவே கொக்கோகம் புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அசாத்திய விளக்கம், கற்பனை.வெறுமே பரணில் இருந்தது என்று சொல்லாமல் மற்ற புண்ணிய புத்தகங்களை ஏன் கூற வேண்டும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. இன்றைய பாசிடிவ்செய்திகள் நன்று.

    சுஜாதாவின் ஶ்ரீரங்கத்துக் கதைகளில் ஒன்று... அவருக்கே உரித்தான நடை. ஓலைப்பட்டாசு சிறுவயது தீபாவளி நினைவுகளைக் கொண்டுவந்தது

    பதிலளிநீக்கு
  3. ரட்சகன் ரஞ்சித்குமாரின் சேவை மிகப் பெரிய சேவை. வாழ்த்துகள் பாராட்டுகள்.
    ஆசிரியையும்....அப்படியே.
    மற்ற செய்திகளும் நல்ல செய்திகள். எல்லோருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சுஜாதா எழுதிய கதை என்பது நன்றாகத் தெரிந்துவிடும். பல இடங்கள் அதைச் சுட்டிக் காட்டிவிடும் அவருடைய டச். அவரது எழுத்தை ரசிக்காமல் இருக்க முடியுமா?!!!!

    ஓலைப்பட்டாசு தலைப்பு பொருத்தம்தான், அண்ணா

    இங்கு நான் என்று எழுதியிருப்பது தன்னையே கதாபாத்திரமாகக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே, ஒரு சில தன் அனுபவங்களை அவர் கதையில் சேர்த்திருப்பதால் அந்த நான் என்பது சுஜாதா ஆகிவிடாது.

    நான் என்று வேறு ஒரு கதாபாத்திரம் சொல்வது போலும் எழுதலாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கதை சொல்லும் "நான்" சுஜாதா தான் என்று நான் எங்கும் சொல்லவில்லை. கதை சொல்பவர் முக்கிய கதா பாத்திரம். அவர் ஓலைப்பட்டாஸை தலைப்பாக வைத்து விட்டு வாழ்க்கையையே திருப்பிப் போட்டது ஓலைப்பட்டாசினால் தான் என்று சொல்வது சரியில்லை என்பது எனது கருத்து.

      Jayakumar

      நீக்கு
    2. ஓகே புரிந்து கொண்டேன், ஜெ கே அண்ணா.

      அண்ணா, நீங்க சொல்வது போல் அந்தக் கதாபாத்திரம் ஓலைப்பட்டாஸைத் தலைப்பாக வைத்திருந்தாலும், இப்படி யோசிச்சுப் பாருங்க....அந்த ஓலைப்பட்டாசு சம்பவம், அனுபவம் தான் திருப்பிப் போட்டது என்பதை விட.....பின்னாலான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போலன்னு எடுத்துக்கலாமே.

      அதனால் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஓலைப்பட்டாசு அனுபவம் சம்பவம் மனதில் ஆழமான ஊன்றி நினைவிருப்பதால்தான் தலைப்பும் அப்படி என்றும் கொள்ளலாம் இல்லையா? நம் மனதில் ஆழமாக ஊன்றிவிடுபவை நம்மை அறியாமலேயே கூட ட்ரைவ் செய்யும் என்பது மூளை சம்பந்தமான புத்தகம் ஒன்றை வாசித்த போது அறிய முடிந்தது.

      கீதா

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. நல்ல மனங்கள் கொண்டோரை மனதாற வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

    இன்றைய கதைப் பகிர்வும் அருமை. சுஜாதா அவர்களின் எழுத்துகள் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். இதையும் படித்து ரசித்தேன். இதுவரை இந்த கதை படித்ததில்லை. கதையின் தலைப்பும் அருமை. பின்னுரையும் சுவாரஸ்யம். இங்கு, இன்று இக்கதையை பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அண்ணா உங்க அனுபவம் சுவாரசியம். அவற்றையும் நீங்க அவ்வப்போது எழுதலாம். பார்க்கப் போனால் நீங்க சொல்லியிருக்கும் ஒரு சம்பவம் வைத்துக் கதையே கூட நீங்க எழுதலாம், முயற்சி செய்து பாருங்களேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!