17.7.25

விருப்பங்களே தெரியாதபோது விடைகள் எப்படி கிடைக்கும்?

 

 






நண்பர் ஒருவர் அன்னலட்சுமி உணவகம் பற்றி நீண்ட நாட்களாக சொல்லிக் கொண்டிருந்தார்.  வீட்டு சாப்பாடு போல என்பார் அடிக்கடி.  அதுவே எனக்கு அங்கே போகவே தோன்றாமல் இருந்தது.  ஒருமுறை சின்ன மாமனார் வீட்டில் ஏதோ பேசும்போதும் இந்த உணவகம் பற்றி பேச்சு வந்து ரொம்ப சிலாகித்தார்கள். போதாக்குறைக்கு மருமகள் பக்க உறவினர் ஒருவரும் இந்த உணவகம் பற்றி தானாக பேசி பாராட்டினார்.  முதலில் பேசிய நண்பர் சில நாட்களுக்கு முன் அவர் வீட்டு விசேஷம் ஒன்று ஒன்றுக்கு என்னை அழைத்து, அன்னலட்சுமி போவதாலேயே என்னையும் பாஸையும் அழைப்பதாகச் சொன்னார்.  ஏதோ அவர்கள் வீட்டு கடையை அறிமுகப்படுத்தும் ஆர்வம், உற்சாகம்! 

வழியிலேயே உணவகத்திலிருந்து நண்பருக்கு 'வந்து கொண்டிருக்கிறீர்களா?  உங்கள் நேரம் தொடங்கி பத்து நிமிடம் ஆகிவிட்டதே?' என்று ஃபோன் வந்ததாம்.  நண்பர் சொன்னார்.  'செமையா ஃபாலோ செய்வாங்க'

சேத்துப்பட்டில் இருந்த அந்த உணவகத்துக்கு அவர்கள் காரை பின்தொடர்ந்து சென்றோம்.  குறுகலான சந்தில் கார் பார்க்கிங்.  அங்கு உள்ளே நுழையும்போதே ப்ரீபுக்கிங் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே உள்ளே அனுமதித்தார்கள்.  'என்னடா இது, ரொம்ப பில்டப்பாக இருக்கிறது' என்று தோன்றியது.

வழக்கம்போல எத்தனை பேர்கள் என்று கேட்டுக்கொண்டு, ஆனால்  வெளியே காத்திருக்காமல், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த காரணத்தால் நேராக மேஜைக்கு அழைத்துச் சென்றார்கள்.  

பஃபே சிஸ்டம்தான் என்றாலும், நாம் போய் எடுத்துக் கொள்ள வேணாமாம்.  அவர்களே வரிசையாக கொண்டு வந்து ஸர்வ் செய்வார்களாம்!  

செய்தார்கள்.

மடியில் போட்டுக்கொள்ளும் துண்டு கொண்டு வந்து வைத்தார்கள்.  முதலில் முருங்கைக்காய் சூப்.  அடுத்து குணுக்கு போல ஒன்று ஆளுக்கு ஒரு உருண்டை கணக்கில் வைத்தார்கள்.  எதுவுமே அன்லிமிட்டட்தான்.  ஆனால் நான் செய்வதாக இருந்ததையே அவர்களும் அன்புடன் அறிவுறுத்தினார்கள்.  அதாவது, எல்லாம் சாப்பிட்டு பார்த்தபின் எது வேண்டுமோ கேட்கச் சொன்னார்கள்.  நாங்கள் எதுவுமே கேட்கவில்லை என்பது தகவல்.  கேட்க வயிறில்லை! குணுக்குவுக்கு அடுத்து 'நான்', மற்றும் 'பட்டர் நான்' அல்லது குல்ச்சா வைத்தார்கள்.  அதில் ஒவ்வொரு கப்பில் பனீர் பட்டர் மசாலா, தால், தயிர் வடை, அன்னாசி ப்ளஸ் ஏதோ ஒன்று, பீன்ஸ் உசிலி, உருளைக்கிழங்கு கறி என்று இருந்தது.  அடுத்ததாக சிறிய அடை.  அதற்கு தொட்டுக்கொள்ள வெல்லத்தை நைஸாக (யாருக்கும் தெரியாமல்  அல்ல) அரைத்து அதில் நெய் கலந்து வைத்திருந்தார்கள்.  சுவையாக இருந்தது.  அடுத்து, புளியோதரை என்று ஒரு கரண்டி, தேங்காய் சேவை ஒரு கரண்டி, வெஜிடபிள் புலாவ் ஒரு கரண்டி, அவியல் வைத்தார்கள்.  பிறகு பருப்பு சாதம், சாம்பார் சாதம், தேவைப்பட்டால் பருப்புப்பொடி சாதம், வேப்பம்பூ, மிதுக்க வத்தல், மணத்தக்காளி வத்தல் வைத்தார்கள்.  வெள்ளை சாதம் தயாராக வைத்திருக்க கப்பில் ரசம் ஏற்கனவே வைத்திருந்தார்கள்.  பிறகு கலந்த தயிர் சாதம்.  அது முடிந்தபின் கேரட் கீர், ஐஸ்க்ரீம், பீடா!  அங்கேயே கப்பில் கைகழுவி விடலாம்.

வீட்டுக்காரர்கள் போல அருகிலேயே பார்த்துக்கொண்டிருந்து, நம் தட்டு காலியானதும் அடுத்த ஐட்டம் உடனே கொண்டு வருகிறார்கள்.

எதுவுமே இரண்டாம் முறை கேட்கத் தோன்றாத அளவு வயிறு இருந்ததது.  சும்மா கொஞ்சம் கொஞ்சம் சுவைத்தால் போதும்.  என்னைப் பொறுத்தவரை சுவை பெரிதாகக் கவரவில்லை.  இங்கோ, சிங்கப்பூர் கிளையிலோ வியாபாரத்தில் வரும் பணத்தை அன்னதானத்துக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்றார்கள்.  

நண்பர் பூரிப்புடன் என் முகத்தை அபிப்ராயத்துக்காக பார்த்தபோது அவ்வளவு செலவு செய்த அவரை ஏமாற்ற, அல்லது கடுப்பாக்க விரும்பாமல் புன்னகையுடன் 'சூப்பர்' என்று வலதுகை கட்டை விரலையும் நடுவிரலையும் இணைத்தேன்.!  நிச்சயம் வயிற்றுக்கு கேடு செய்யாது.

======================================================================================

வண்ணதாசனும் என் இலக்கிய (அஞ்)ஞானமும் 

வண்ணதாசனை இதுவரை வாசித்ததில்லை. நெல்லைக்காரர். சிறந்த எழுத்தாளர் என்று போற்றப்படும் ஒருவர். வாசிக்கமால் இருக்கலாமா? பிள்ளையார் சுழியை அவருடைய 'சமவெளி' என்ற புத்தகத்தில் இருந்து ஆரம்பித்தேன். 

முதலில் நாவல் என்றெண்ணி வாங்கிய புத்தகம் - பின்புதான் தெரிந்தது அது சிறுகதைத் தொகுப்பு என்று. நாவலைப் படிப்பதைவிட சிறுகதைகள் படிப்பதில் சில சௌகரியங்கள் இருக்கிறது. நிதானமாகப் படிக்கலாம், கன்டின்யுட்டி தொல்லை இல்லை. ஆனால் ஒரு அசௌகரியம் இருக்கிறது. அதிலும் இலக்கியவாதிகள் எழுதும் இலக்கிய நடையில் படிப்பதில் மிகப்பெரிய அசௌகரியம் இருக்கிறது. அதவாது அவர்கள் 'இந்த இடத்தில் இதைதான் கூற வருகிறார்கள் என்பது நமக்குப் புரிந்துத் தொலைக்க வேண்டுமே' என்ற ஒன்றுதான் அது. 

சமவெளி புத்தகத்தில் இடம்பெற்ற பெரும்பாலனா கதைகள் 1990களுக்கு முன் வண்ணதாசனால் எழுதப்பட்டு பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியானவை. ஓரளவு முக்கி முக்கி இந்த இடத்தில் இதைத்தான் கூறவருகிறார் என்பதாக ஏதோ ஒன்றை அவதானித்து பெரும்பாலான கதைகளை படித்து முடித்துவிட்டேன். பிரச்சனையே இங்குதான்!

சிறுகதை என்பது ஓங்கி ஒரு சாட்டையால் அடித்த உணர்வை ஏற்படுத்த வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு கட்டெறும்பு கடித்த உணர்வையாவது ஏற்படுத்த வேண்டும் என்பார்கள். வண்ணதாசனின் கதைகள் இந்த இரண்டில் ஒன்றைக் கூட ஏற்படுத்தவில்லை. நானும் ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபின்னும் 'இந்தக் கதை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?' என்று யோசித்துப் பார்த்துவிட்டேன். ம்ம்கும் 'நிலை' என்ற சிறுகதை தவிர வேறெந்த கதையும் சிற்றெறும்பு கடித்த தாக்கத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. பாதியிலேயே வாசிப்பதை நிறுத்திவிட்டேன். 

பலரும் வண்ணதாசனின் எழுத்துகள் நன்றாக இருக்கும் என்று கூறக் கேட்டிருக்கிறேன். ஒருவேளை நான்தான் தவறான புத்தகத்தை வாங்கிவிட்டேனா அல்லது அவரது இலக்கிய எழுத்துநடை எனக்கு புரியவில்லையா தெரியவில்லை! (ஒருவேளை வண்ணதாசனின் சிறந்த புத்தகங்களை அறிவீர்கள் எனில் பரிந்துரையுங்கள்.)  

நிலைமை இப்படி இருக்க ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படிக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. சமீபத்தில் Sriram Balasubramaniam சார் வீட்டிற்கு சென்றபோது விஷ்ணுபுரத்தைக் காண்பித்து 'தொட்டாலே தூக்கம் வருது' சீனு என்றார். 
ஆகச்சிறந்த அவருக்கே இப்படியா என்றெண்ணி நொந்தால், நேற்றைக்குக் காலையில் காலச்சுவடு கிருஷ்ணபிரபு விஷ்ணுபுரம் குறித்து ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார். 

அதவாது விஷ்ணுபுரம் அவருக்கே புரியவில்லையாம். அது அவருக்கான புத்தகமே இல்லை என்று கிட்டத்தட்ட புலம்பியிருந்தார். நிலமை இப்படி இருக்க நான் இதையெல்லாம் என்னக்கி படிச்சி எப்ப இலக்கியவாதி ஆவதோ...! 

ம்ம்ம் தட் என்னவோ போடா மாதவா மொமன்ட் :-)

 - சீனு என்னும் ஸ்ரீநிவாசன் பாலகிருஷ்ணன்.  அவர் பிளாக் பெயர்  'திடம் கொண்டு போராடு'  ( நன்றி KGG) - அவர் முகநூலில் பத்து வருடங்களுக்கு முன் பகிர்ந்திருந்தது.

இதற்கு கணேஷ் பாலாவின் கமெண்ட்  :  "அதென்ன ‘அவருக்கே’ புரியவில்லையாம்...?  இந்த மாதிரி இலக்கியங்கள் எவருக்குமே புரியாதுய்யா... ஹா.. ஹா.. ஹா..."


என் கமெண்ட்  :  "எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே ஒரு பெரிய தாக்கமோ... உங்களை நிம்மதியாக இருக்க விட்டிருக்கிறாரே...!!!

இந்தப் புரிந்து தொலைக்க வேண்டுமே கவலை எனக்கும் புத்தகங்கள் படிக்கும்போது இருக்கும். அதனாலேயே நேரமும் ஆகி விடும்! அப்படி ஒரு புத்தகத்தை இப்போது படித்துக் கொண்டும் இருக்கிறேன்!"

==========================================================================================


லிங்கத்தோடு கல்வே பள்ளியில படித்த இன்னொருவர் குவளைக்கண்ணன் என்று அறியப்படுகின்ற கிருஷ்ணமாச்சார்யார். ‘எனது நண்பர் குவளைக்கண்ணன்’ என்று கனலிங்கம் குறிப்பிடுகிறார். பள்ளிக் கால நட்பைக் குறிப்பிடுகிறாரா இல்லை பின்னால் பாரதியின் மூலம் நண்பரானதை குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. இதில் இருந்து நமக்குத் தெரிவது கனகலிங்கம் படித்தவர் என்பதோடு பிராமணர்கள் பயின்ற பள்ளியிலேயே பயின்றார் என்பது. அப்பள்ளியில் பயின்ற இன்னொரு பாரதி நண்பர் டி. விஜயராகவாச்சார்யார்.

குவளைக்கண்ணன் பெருமாள் கோயில் பட்டாச்சார் வேலைப் பார்த்ததோடு இன்னொரு வேலையும் அவ்வப்போது செய்தார் என்கிறார் கனகலிங்கம். புதுவை நீதிமன்றங்களில் சாட்சி சொல்வோர் ஏற்க வேண்டிய சத்திய பிரமாணம் சாதி, மத ரீதியாக வேறுப்பட்டிருந்ததாம். இஸ்லாமியருக்கு முஸ்லிம் ஒருவர் குர்-ஆன் புத்தகம் கொண்டும், பிராமணரல்லாதோருக்கு ஐயங்கார் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும், “ஹரிஜன சமூகத்தாருக்கு வள்ளூவப் பண்டாரம் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும்” சத்திய பிரமானம் செய்விப்பார்களாம்.

புதுவையில் பாரதி இருந்த காலத்தில் தேர்தல்கள் அமளிப்பட்டன என்று கனகலிங்கமும், செல்லம்மாளும் பதிவுச் செய்கிறார்கள். பாரதி தேர்தல் காலத்தில் ஹரிஜனங்களைக் கோயில் அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை எழுதி குவளைக்கண்ணனையும் கையொப்பமிட வைத்து விடுகிறார். அதன் பலனாகக் குவளைக்கண்ணன் சக ஐயங்கார்களால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டாராம்.

A Contrarian World  என்னும் வலைப்பக்கத்திலிருந்து.


ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசத்துடன் நம்-மக்கள் இதயப் பிரவேசமும் அளிக்கவேண்டும் என் பதை வற்புறுத்தி ஹரிஜனப் பிரசினையை முக்கியமான தேசியப் பிரசினை ஆக்கியவர் மகாத்மா காந்தி என் பதை அறியாதார் இல்லை. ஆனால், காந்தியடிகளுக்கு முன்பே இத்துறையில் பெருவழி காட்டியவர் பாரதி யார் என்பதைத் தமிழர்களும் நன்றாக அறிந்துகொள்ள வில்லை.

1917-ம் ஆண்டில் பாரதியார் வெளியிட்ட ஒரு கட்டுரையில் ஹரிஜனங்களுக்கு 'நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற் கடமை' என்பதை வற்புறுத்தியிருக்கிறார். பட்டணத்து ஹரிஜனங்களைக் குறித்துப் பாரதியார் பேசவில்லை - கிராமங்களில் உள்ள ஹரிஜனங்களையே குறிப்பிடுகிறார்:

"அவர்களை யெல்லாம் ஒன்றுதிரட்டு. உடனே விபூதி, நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு .....ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து இந்துதர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதறவிடாதேயுங் கள். மடாதிபதிகளே ! நாட்டுக்கோட்டைச் செட்டிமார் களே! இந்த விஷயத்தில் நீங்கள் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக்கூடிய கைங்கரியம். தெய்வத்தின் கருணைக்கும் கைங்கரியம். கருணைக்குப் பாத்திரமான

' நமக்கு மண் உழுது நெல் அறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை ர நாம் நேர்மையாய் நடத்த மையாய் நடத்த வேண்டாமா?"

திரு. கனகலிங்கம் தமது நூலில் குறிப்பிடும் திரு. நாகலிங்கம் என்ற வள்ளுவப் பண்டாரத்தை அக் கட்டுரையில் பாரதியார் சிறப்பாய்க் குறிப்பிடுகிறார். எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் சிநேகம். அவனுடைய கோவில் - அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். (இதுதான் தேசமுத்து மாரி பாட்டு.) அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கும் வருவ துண்டு.' பாரதியார் முகமுகமாய்ப் பேசுவது போல் அமைந்திருக்கும் இந்த மூன்று வாக்கியங்களிலும் பாரதியாருக்கு ஹரிஜனங்கள் மீதுள்ள இதய பாசம் அப்படியே நனகு புலனாகிறதல்லவா ? இவற்றின் பொரு ளாழத்தையும், அந்த உள்ளத்தின் ஆழத்திலிருந்து பொங்கி வந்த அன்பின் வேகத்தையும் உணர்ந்து கொள் வதற்கு ஸ்ரீ கனகலிங்கம் இந் நூலில் வெளியிட்டிருக்கும் குறிப்புக்கள் மிகவும் அவசியமானவை என்பது என் கருத்து.

பறையருக்கும் புலையருக்கும்

தீயருக்கும் விடுதலை,

பரவரோடு மறவருக்கும்

குறவருக்கும் விடுதலை

என்ற விடுதலை - முரசின் இடிமுழக்கம் உள்ளபடி விளங் கும்,இந் நூலைப் படித்தவர்களுக்கு.

- திரு கனகலிங்கம் எழுதிய "என் குருநாதர் பாரதியார்" என்ற புத்தகத்தின் முன்னுரையில் திரு பி ஸ்ரீ 1947 ல் -

=========================================================================================================

அதீதத்தில் அப்போது நான் எழுதி இருந்த கதைக்கு  கீதா அக்காவின் கமெண்ட்.

========================================================================================================



==============================================================================================================




=====================================================================================================

பொக்கிஷம்  :-
















71 கருத்துகள்:

  1. இன்றைய வியாழன் கதம்பம் நன்றாக இருக்கிறது.

    கவிதையையும் விடுவானேன் என்று படித்தால், கேஜிஜியின் கமென்ட்...ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.நன்றி.  நேற்று ஒரு பூணல் கல்யாணத்துக்கு சென்று விட்டு லேட்டாக வீடு வந்து வெயிலில் வதைபட்டு தூங்கி விட்டு இரவு தாமதமாக இந்தப் பகுதிகளை தயார் செய்தேன்!  சாதாரணமாக முன்னரே தயார் செய்து வைத்து விடுவேன்!  கேஜீஜியின் கமெண்ட் ரசிக்க வைத்ததால்தான் சேர்த்துப் பகிர்ந்தேன்!

      நீக்கு
  2. இன்றைய வியாழன் கதம்பம் நன்றாக இருக்கிறது.

    கவிதையையும் விடுவானேன் என்று படித்தால், கேஜிஜியின் கமென்ட்...ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியுமா?  பார்றா...   கூகுள் சேட்டை!  

      படங்களை பதிவில் இணைக்க முன்பு மெயில் வழியாக அனுப்பி விடுவேன்.  செல்லை நேரடியாக systemல் இணைப்பதில் இந்த போன் தகறாரு செய்து கடுப்பேற்றுகிறது.  c டைப் பென்டிரைவ் கூட கடுப்பேற்றுகிறது.  G மெயில் நிறையவே மக்கர் செய்கிறது.  ஆகஸ்ட் பதினைந்தாம் நாளோடு உன் சேவை நிறுத்தபப்டும் என்று பயமுறுத்தி இருக்கிறது. 

      நீக்கு
    2. ஓ.. புரிந்து விட்டது. கீழிருந்து மேலாக கமெண்ட் பார்த்ததால் முதலில் புரியவில்லை!

      நீக்கு
    3. Google சேட்டையில்லை. நேற்றுதான் 200MBPSக்கு மாறினேன். இன்றைக்கு காலையில் கமென்ட் போகவில்லை. Refresh பண்ணிப் போட்டால் ஏற்கனவே கமென்ட் போயிருக்கிறது.

      நீக்கு
    4. ஹா... ஹா... ஹா... அப்படியா? ஆமாம் சில சமயம் இப்படி நேரும்!

      நீக்கு
  3. அன்னலட்சுமி பற்றித்தான் முதலில் எழுதணும் என்று நினைத்தேன். அங்கு பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். சிங்கப்பூர் அன்னலட்சுமிக்குத்தான் முதலில் சென்றிருக்கிறேன். என் அம்மாவையும் சென்னை அன்னலட்சுமிக்குக் கூட்டிச் சென்றிருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே....   நீங்களும் சாப்பிட்டிருக்கிறீர்களா?  ஆனால் பின்னே, நீங்கள் அங்கே சுவைக்காமல் இருந்திருப்பீர்களா?  கொஞ்சம் கையை அருகில் கொண்டு வாருங்கள்..  Same same கிள்ளணும்!

      நீக்கு
    2. சிங்கப்பூரில் அலுவலக விஷயம். வேறு கம்பெனிக் கார்ர்கள் கூட்டிண்சென்றனர் (சீனர்-சிங்கப்பூரியன்). (2004) ரவா தோசை போன்று டிபன் சாப்பிட்டோம். காசு வாடிக்கையாளர்கள் நினைப்பதுபோல. இந்த மெதட் இந்தியாவிற்குச் சரிப்படாது . சென்னையில் பலமுறை. மூன்று தடவை சொந்தச் செலவில். இரண்டு தடவைக்கு மேல், பஹ்ரைனிலிருந்து அலுவலக வேலையாக வந்தபோது அங்கு உணவுடன் சந்தித்திருக்கிறேன்.

      உணவு தயார் செய்பவர்கள் வாலன்டியர்கள். ஒருவர் வந்து வத்தக்குழம்பு, ஒரு கறி செய்துவிட்டுப்்போய்விடுவார். இதுபோலப் பலர். 500-700 வரை ஆகியிருக்கிறது. இப்போ 800-900 ரூ இருக்கலாம்.

      எப்போதும்போல, நான் ரெஸ்டாரன்ட் திறக்கும்போது சென்றுவிடுவேன். உணவு நல்லா இருக்கும்.

      நீக்கு
    3. ஒரு சேவை போலவே செய்கிறார்கள் போல! இந்த தகவல் எல்லாம் புதிதாக இருக்கிறது. எனினும், சுவை ரொம்ப கவரவில்லை. ஒருவேளை இந்த பிரான்ச்சில் அப்படி இருக்கிறதோ என்னவோ...

      நீக்கு
  4. அனைவரும் ஆலயப் பிரவேசம் என்பது மிக முக்கியமான நிகழ்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதை முன்னெடுத்தவர்கள் பற்றி இப்போது மாற்றிச் சொல்கிறார்கள். மறைக்கிறார்கள்.

      நீக்கு
    2. இராமானுஜர் காலத்திலேயே த்தகைய சீர்திருத்தங்களை பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் முன்னெடுத்தார். அவருக்கு உணவில் விஷம் கலந்த நிகழ்வுகள் நடந்தன. அப்புறம் பழைய குருடி கதவைத் தறடி (அப்படீன்னாக்க என்ன அர்த்தம்?) கதையாகி, பிறகு சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வீறுபெற்றது. மதுரையில் முதல் ஆலயப் பிரவேசம்.

      இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், நான் உன்னைவிடப் பெரியவன், என்று மனிதர்கள் மற்றவரை ஒப்பிட்டு தன்னை முன்னிலைப் படுத்தும் குணம்தான். இது அனேகமாகெல்லா மனிதர்களிடமும், நான் உட்பட, இருக்கிறது. உதாரணமாக, நானும் ஶ்ரீராமும் சிறுகதை எழுத்தாளர்கள் சந்திப்புக்குச் சென்றால், அவரே மனதுக்குள், நான் பத்திரிகைகளில் கதை எழுதியிருக்கிறேன், நல்ல எழுத்தாளன், மேடையில் என்னைக் கூப்பிடுவார்களா?, நிறைய எழுத்தாளர்களை அறிந்தவன் அதனால் முன் வரிசையில் உட்காரலாமா, நெல்லைக்கும் சிறுகதைக்கும் சம்பந்தமில்லையே, கழற்றிவிட்டு நாம் முன்னால் செல்லலாமா என மனதுக்குள் யோசிக்கும் வாய்ப்புண்டு (உதாரணத்துக்குத்தான். அவர் அப்படி என்ற எண்ணத்தில் எழுதலை)

      நீக்கு
    3. அப்போ நானும் நீங்களும் கோவில்களுக்கு சென்றால் ,அது சம்பந்தமில்லைஸ்ரீராமுக்கு என்று என்று என்னை வெளியே நிறுத்திவிட்டு, பட்டறரை நைஸ் செய்து நீங்கள் மட்டும் கோவில் உள்ள சென்று விடுவீர்களோ...!!!!!

      நீக்கு
    4. மேலும் மேடையில் பேசினால் எனக்கு தொடை நடுங்கும். பேச வராது. எனவே அந்த ஆசை. வராது.

      நீக்கு
    5. //ன்னை வெளியே நிறுத்திவிட்டு, பட்டறரை நைஸ் செய்து நீங்கள் மட்டும் கோவில் உள்ள// உண்மையைச் சொன்னால், அங்கு பிரபந்தம் சேவிக்கும்போது அந்தக் கூட்டத்தில் சேர்ந்துகொள்வோம் என்ற எண்ணம் வரும்தான். ஆனால் இதில் தவறில்லை. இது மனித இயல்பு.

      நீக்கு
  5. வேலைக்காரி அமைவது என்பது சுலபமல்ல. அதிலும் வீட்டிலுள்ளவர்களுக்கும் பிடித்திருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைப் பற்றிதான் அதீதத்தில் அதீதமா எழுதி இருந்த ஞாபகம்! அதீதமே இப்போது இல்லை.  

      நீக்கு
    2. அடயாறில் எங்கள் வீட்டு உதவியாளரை என் பெண்ணுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் குப்பையாகப் போட்டிருப்பதைச் சரி செய்து விடுவதாலும், நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலும், நல்ல குணம் கொண்டவர் என்பதாலும். என் மாமனார் எங்கள் வீட்டுக்கு வரும்போது, சும்மா ஐநூறு ரூபாய் கொடுப்பார். அவர் வீட்டுக்கும் அவளே.

      இங்கு ஒரு உதவியாளர். ஒரு நாள் என் அறை படுக்கையில் ஐயாயிரம் வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். அன்று இரவு ரூபாயைக் காணவில்லை. இதற்கிடையில் உதவியாளர் மாத்திரமே அறையைச் சுத்தம் செய்யச் சென்றிருந்தார். எனக்கு இது அதிர்ச்சி (நம்பிக்கையானவராக இல்லையே என்று). மறுநாள்வேறு ஒரு அறையில் நான் இருந்தபோது, தன் பையிலிருந்து ரூபாயை எடுத்து, அங்கிள் கீழ விழுந்திருக்கு என்று சொல்லிக் கொடுத்தார். ஐயாயிரம் ரூபாய். பணத்தைக் கண்டு தடுமாறி எடுத்து, மறுநாள் தவறை உணர்ந்து திருப்பிக்கொடுத்த சம்பவம் அது. அன்றிலிருந்து இதோ இப்போ இரண்டு வருடங்களாக அவர்தான் தொடர்கிறார்.

      நீக்கு
    3. நான் இந்த மாதிரி புதிதாக வந்தவர்களை ஒன்றும் தெரியாதது போல ஆங்காங்கே அவ்வப்போது போட்டு வைத்து சோதித்ததுண்டு. அதில் பாஸ் ஆனவர்கள் தொடர்கிறார்கள். இதுவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. போகப் போக அவர்களும் குடும்பத்தில் ஒருவர் போல ஆகி விடுகிறார்கள்.

      நீக்கு
  6. மிகுதி பின்பு.

    நகைச்சுவை மிகவும் ரசித்தேன். கனிமொழிக்கும் மதனுக்கும் ஒரு ஒற்றுமை. வாரிசுப் போட்டியால் ஒதுக்கப்பட்டவர். மதனால் நெளிவு சுளிவைக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது வித்தியாசமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம்தான் மதன்.  அதீத திறமையாளர். 

      அட, இங்கயும் அதீதம்! 

      நீக்கு
  7. சீனுவின் ப்ளாக் ' திடம் கொண்டு போராடு'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் .. ஆமாம்.. நேற்று நினைவில் இல்லை. இதோ சேர்த்து விடுகிறேன்!

      நீக்கு
  8. ​அன்னலக்ஷ்மி காரர்கள் செய்யும் டேஸ்ட் & டேக் யுத்தி நல்லது. பதார்த்தங்கள் வீணாவது குறையும். இவ்வளவும் எழுதிவிட்டு விலை எழுதவில்லையே ஏன்?

    வண்ணதாசன் எழுதிய ஒரு சிறு இசை என்ற கதையை சீனு வாசிக்கவில்லை என்று தோன்றுகிறது. மூக்கம்மை ஆச்சியை எப்படி மறக்க முடியும்.
    //சிறுகதை என்பது ஓங்கி ஒரு சாட்டையால் அடித்த உணர்வை ஏற்படுத்த வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு கட்டெறும்பு கடித்த உணர்வையாவது ஏற்படுத்த வேண்டும் //
    சிறு இசை இன்றும் மனதில் ஒலிக்கிறது.

    1936 இல் திருவாங்கூர் மஹாராஜா கட்டளையில் துவங்கிய ஆலயப் பிரவேசம் தான் முன்னோடி என்று கருதுகிறேன்.

    கீதா மாமிக்கு தூண்டில் போடுகிறீர்களா? அவருடைய கமெண்ட் வேறு ஏன், எப்படி, எதற்கு?

    கவிதை அருமை.

    இலக்கின்றி அம்பு எய்வதும்
    ஒரு ஆராய்ச்சியே.
    குழந்தைக் காலத்தில் துவங்கியது
    வளர்ந்த பின்னும் தொடர்வது
    இயல்பே
    தேடுவதற்கு கேள்வி அல்ல முக்கியம்.
    ஆராயும் ஆர்வமே தேவை.

    மதன் ஜோக்குகள் அருமை. அதுவும் ரோட்டில் சைட் அடிப்பது எல்லோரும் செய்வதே.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதார்த்தங்கள் வீணாகாது என்பது சரி.  பஃபே சிஸ்டத்தில் நிறைய வீணடிப்பார்கள்.  பேராசை!  விலை எனக்குத் தெரியவில்லை.  பில்லை அவர் கொடுத்து விட்டார்.  நாகரீகம் கருதி நானும் கேட்டுக் கொள்ளவில்லை.


      சிறுகதைகள் அவர்  வாசித்திருக்க மாட்டாராம் இருக்கும்.  ஆனால் அவர் பெரிய படிப்பாளி.  நிறைய படிப்பார்.  இது 10 வருடங்களுக்கு முன் எழுதியது, முகநூலில் என்னை Tag செய்து எழுதி இருந்தார்.  தற்சமயம் யு எஸ்ஸில் இருக்கிறார்.

      1936 ஆலயப்பிரவேசத்தில் ஓசியில் ஒருவருக்கு பெயர் கிடைத்தது.  ராஜாஜி கூட கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தமிழகத்தில் முயன்றிருக்கிறார்.

      கீதா அக்கா கொஞ்சம் எதிலும் சுவாரஸ்யமின்றி இருக்கிறார்.  அவருக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டால் சரிதான்.  ஆனால் இது அதற்காக பகிரப்பட்டதல்ல.

      அக்கவிதை ரசிப்புக்கும், பதிலை கவிதை போலவே சொன்னதும் சிறப்பு.

      மதன் ஜோக்ஸ் என்றும் சோடை போனதில்லை.

      நன்றி JKC Sir 

      நீக்கு
  9. Mozart-ஐ லேப்டாப்பில் கேட்டுக்கொண்டவாறே காலையில் எங்கள் ப்ளாகில் நுழைந்துவிட்டேன்! பார்த்தால்.. வண்ணதாசன், Beethoven என்றெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது இங்கே.

    வாசிப்பதை நிறுத்திவிட்டிருக்கிறேன். அல்லது வாசிப்பு என்னை விட்டு விலகிவிட்டிருக்கிறது சில வருடங்களாக! இருந்தும், சமீபத்தில் வண்ணதாசனை ‘கவனிக்க’ நேர்ந்தது, ’வாசகசாலை’க்குள் தற்செயலாக நுழைந்தபோது! அவரின் ” ...என்று சொல்கிறவர்கள்” - என்றொரு சிறுகதை. வாசித்ததும், அட! -என்றது மனம். உணர்வை, எழுதியவரிடம் சொல்லலாமே எனத் தோன்ற, ஒரு மின்னஞ்சல்-மிகச் சிறியதாக- அனுப்பினேன். ‘மகிழ்ச்சியும், நன்றியும் ஏகாந்தன்’ என்றார் பதிலில், படைப்பாளி.

    ஸ்ரீராம், மற்றும் எபி நண்பர்கள் - நேரமிருக்கையில், வாசகசாலை இதழ்ப் பக்கத்திற்கு சென்று (vasagasalai.com) ஏப்.21-ல் வெளியான அவரது மேற்சொன்ன சிறுகதையை வாசித்துப்பாருங்கள். சிறுகதை என்பது சாட்டையால் அடிவாங்கியதைப் போன்றா, கட்டெரும்பு கடித்தது போன்றா.. எப்படிப்பட்ட தாக்கத்தைத் தரவேண்டும்.. என்பதுபோன்ற வரையறைச் சிந்தனைகள் அங்கே விலகிவிடும் என்று நினைக்கிறேன்..

    இரண்டு இதழ்கள் முன்பு, விகடனில், பவா செல்லத்துரையின் சிறுகதை ஒன்று வந்திருந்தது. தலைப்பு நினைவிலில்லை. ஒரு கதைக்காக இதைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குபோகவேண்டுமா என மனம் கேட்டுத்தொலைக்க, வாங்கவில்லை! அதனால் வாசிக்க இயலவில்லை. யாரேனும் வாசித்தீர்களா? எப்படி இருந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதாவது வராமல், எப்போதும் வாங்க ஏகாந்தன் ஸார்...   இங்கே ரசிகர்கள் கூட்டம் குறைந்திருக்கிறது.

      வண்ணதாசனை வாசித்ததும், சிலாகித்து அவருக்கே அஞ்சலியதும், பதில் பெற்றதும் மகிழ்ச்சி.

      வாசகசாலை முன்பு எப்போதோ சென்றிருக்கிறேன்.  மறுபடி முயற்சிக்கிறேன்.சிறுகதைகள் படிக்கும் அனுபவம் அவரவர் ரசனையைப் பொறுத்தது.  அவருக்கு இப்படி அனுபவம்!

      விங்க்டன் புத்தகமாக இன்னும் வெளிவந்து கொண்டிருக்கிறதா?  பக்கம்போய் பத்து வருடமாச்சு!

      நன்றி ஏகாந்தன் ஸார்...   அடிக்கடி......... இல்லையில்லை, தினமும் வாங்க...

      நீக்கு
    2. Beethoven -இன் காப்பி ரசனையைப் படித்த முகூர்த்தம்போலும். பத்தரை மணிவாக்கில் ஒரு சிறு வாக் போயிருந்தபோது ரோடோர ஆஷா டிஃபன்ஸில் காப்பி வாங்கி அருந்தினேன். எப்போதும் செய்வதுதான் என்றாலும், இன்று ஒரு அதீத ருசி இருந்ததாய்த் தோன்றியதே ஏன்?

      நீக்கு
    3. அவர் காஃபி பிரியர் என்பதாலா? எங்கள் பிளாக் படித்ததாலா?!!!

      நீக்கு
  10. ஜே கே சி சாருக்கும் ,ஏகாந்தன் சாருக்கும் வீட்டிற்கு வந்து தான் பதில் அளிக்க வேண்டும். ஒரு உறவின் வீட்டு விசேஷத்துக்கு வெளியில் சென்று கொண்டிருக்கிறேன். நீளமான பின்னூட்டங்கள். நிறுத்தி படித்து பின்னர் பதிலளிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு உறவின் வீட்டு விசேஷத்துக்கு வெளியில்// அப்போ இனி வியாழன் பதிவுகளில் உணவுக்கும் இலையில் உள்ள படங்களுக்கும் நிறைய வாய்ப்புகள் வரும் போலிருக்கு. எழுதுங்க. உணவு பற்றிப் படிப்பதற்கே சந்தோஷமாக இருக்கும்.

      நீக்கு
  11. இன்றைய கதம்பம் பகிர்வு நன்று. அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. கதம்பம் நன்று.

    கவிதை பிடித்திருந்தது.

    ஜெயமோகனின் நாவல்கள் படித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் எனக்கும் புரிந்ததில்லை.

    ஜோக்ஸ் ரசனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // விஷ்ணுபுரம் எனக்கும் புரிந்ததில்லை. //

      ஆ..  படித்து விட்டீர்களா?  பொறாமையாய் இருக்கிறது..  வாங்கி பத்து வருடம் ஆகியும் நான் இன்னும் பத்துப்பக்கம் தாண்டவில்லை! கவிதையை பாராட்டியதற்கு நன்றி.

      நன்றி மாதேவி.

      நீக்கு
  13. ஸ்ரீரான், அன்னலக்ஷ்மியா!! நாங்க முதன் முதலில் சென்னை மௌன்ட் ரோடு கிளைக்குத்தான். அதன் பின்னும் கூட வேறு எந்தக் கிளைக்கும் போனதில்லை. ஆனால் அங்கு லன்ச் என்றால் உணவு ரொம்பக் கூடுதல். என்னைப் பொருத்தவரை...என்னால் சாப்பிட இயலாது என்பது தெரிந்தது முதல் முறை போனப்பவே. நான் சொல்வது 30 வருடங்களுக்கு முன். அப்பவே 500 ரூ.

    எனக்கு என்னவோ சுவை அவ்வளவாகக் கவரவில்லை. வீட்டிலியே இப்படித்தானே செய்யறோம் என்று. இரண்டாவது நம் வீட்டில் சுண்டைக்காய் வற்றல் குழம்பு என்றால் வேறு புளிக் குழம்பு என்றால் வேறு. மணத்தக்காளியை வறுத்து புளிக் குழம்பில் வேறு எந்த காயும் போடாமல் செய்வது...இப்படி

    அங்கு வற்றல் குழம்பு என்று சொல்லி வைத்தது புளிக் குழம்பில் வற்றலை வறுத்துப் போட்டு...சுண்டைக்காய் வற்றலை....புதுசா இருந்தது. ஏதோ ஓரிரண்டு ஐட்டங்கள் ஓகே.

    ஆனால் அவங்க சேவை செய்யறாங்க. பார்த்தீங்கனா, நல்ல வேலையில் இருப்பவங்க தான் அங்கு வந்து சமைச்சுட்டும் போவாங்க பரிமாறவும் செய்வாங்க. ஒரே ஆள் எல்லாம் செய்வது கிடையாது மாறிக் கொண்டே இருப்பார்கள், ஓரிரு ஐட்டங்கள் ஒருவர்...மற்றவற்றை வேறொருவர் இப்படித்தான் செய்வாங்க என்று சொல்லப்பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   ஆம், சுவை என்று ஸ்பெஷலாக ஒன்றும் இல்லை.  நாம் வீட்டில் செய்வதே நன்றாய் இருக்கும் என்பது போல இருக்கும்.  சப்பள சளபுள என்று இருந்தது.  வற்றல் குழம்பு பற்றி நீங்கள் சொல்லி இருப்பது தகவல், ஆச்சர்யம்.  நல்ல வேளையில் இருப்பவரெல்லாம் வந்து நம்மை சோதனை எலியாக்கிச் செல்கிறார்கள் போலும்!

      நீக்கு
  14. அதன் பின்னும் ஒரு முறை போயிக்கிறோம் அது வேறு ஒருவரின் அழைப்பின் பேரில் அப்ப ரூ 700....ஆனால் நான் ஜஸ்ட் ஒரு டிஃபன் மட்டுமே சாப்பிட்டேன். சப்பாத்தியும் பாலக் பனீரும், வேறு ஏதோ ஒன்றும் ....பாலக் பனீர் ஓகே. ஆனால் மற்றது ம்ம்ம் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. 'செமையா ஃபாலோ செய்வாங்க'//

    இதெல்லாம் இப்ப மொபைல் வந்த பிறகு. அப்போ எல்லாம் ஏது மொபைல் கையில்?!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அப்போது பஃபே இல்லை, அவங்கதான் செர்வ் பண்ணுவாங்க...நாம என்ன ஆர்டர் செய்கிறோமோ அது. லஞ்ச் என்றால் ஸ்டாண்டர்ட்....அதுக்குத்தான் நான் மேலே சொன்ன ரேட்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பரவாயில்லை.  மேலும் நான் இங்கு சிற்றுண்டி முயற்சி செய்ததில்லை!

      நீக்கு
  17. இப்ப சில மாதங்களுக்கு முன் என் தங்கை பெண் அவள் அம்மா அப்பா மாமனார் மாமியர் குழந்தைகள் போயிருக்காங்க. ஒரு நபருக்கு 1500 ரூபாய் ஆச்சு என்று என் தங்கை சொன்னாள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ.. ஆனால் இங்கும் அப்படித்தான் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். நண்பர் ஏதாவது விசேஷம் என்று பத்திரிகை வைத்தால் கடன் தீர்க்க வேண்டும்!

      நீக்கு
  18. வண்ணதாசனைப் பற்றி வாசித்து வருகையிலேயே அட! நம்ம சீனு போல இருக்கே என்று தோன்றியது. கடைசில பார்த்தா அவரேதான்!!!! பரவாயில்லையே சீனுவின் எழுத்து இன்னும் நினைவில் இருக்கிறதே என்று.

    அவர் நன்றாக எழுதுவார். எனக்கு அவர் எழுதுவது பிடிக்கும்.

    //அதவாது அவர்கள் 'இந்த இடத்தில் இதைதான் கூற வருகிறார்கள் என்பது நமக்குப் புரிந்துத் தொலைக்க வேண்டுமே' என்ற ஒன்றுதான் அது. //

    புன்னகைக்க வைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே ஃபீலிங்க் எனக்கும் வருவதுண்டு சில கதைகளை வாசிக்கறப்ப. நமக்குத்தான் புரியலையா இல்லை புரிந்து தொலைக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு ரொம்பவே வரும் அப்பத்தானே அதைப் பத்தி எழுதவும் முடியும்!!!

      கீதா

      நீக்கு
    2. சீனு எழுதியது பல வருடங்களுக்கு முன் அப்போதைய அவர் வாசிப்புக்கு கிடைத்த புத்தகம் அதுவாக இருக்கலாம். சீனுவின் பதிவு அப்போதஎது. இப்போது அவர் வண்ணதாசனை பற்றி மேலும் தெரிந்து கொண்டிருக்கலாம் நிறையவே வாசித்து இருப்பார்.

      கீதா

      நீக்கு
    3. ஆம்.  எல்லோருக்கும் தோன்றும்தான்.  சீனு இப்போதெல்லாம் எழுதுவதில்லை.  குடும்பஸ்தன் ஆகி விட்டார்!  அதே போலதான் தக்குடு, அம்பி எல்லாம்...  அட, நம்ம சேட்டை..   அவர் கூட நிறுத்தி விட்டார்.

      நீக்கு
  19. சீனுவின் பதிவுக்கான கமென்ட்ஸ்!!!! ஹாஹாஹா ரகங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பீத்தோவன் பற்றிய தகவல் வெகு சுவாரசியம்.

    இசைக்கலைஞர்கள் எல்லாருக்கும் காஃபி ரொம்பப் பிடிக்குமோ!!!!! ஆரைச் சொல்றேனாக்கும் தெரியறதா!? அதாவது காஃபி அருந்துவதை விட அதை ரசித்துத் தயாரித்து!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு காஃபி ரொம்பப் பிடிக்கும்.  ஆனால் நான் இசைக்கலைஞன் இல்லை.  இசை ரசிகன் மட்டுமே.

      நீக்கு
  21. கவிதை நல்லாதான் இருக்கு!!

    இதுவு ம் ஒரு கேரக்டர்தானே!! அந்தக் கேரக்டர் நினைப்பதைக் கவிதையாகச் சொல்லியிருக்கீங்க...

    கௌ அண்ணா கமென்ட் பார்த்து சிரித்துவிட்டேன். ஆனா கௌ அண்ணா, ஸ்ரீராம் இப்படியான ஒரு கேரக்டரை எழுதியிருக்கிறார். சரிதானே, விருப்பமே தெரியலைனா, கேள்வி கேட்டா என்ன சொல்ல முடியும்!!

    எனக்கு ரொம்பப் பிடித்தது ஸ்ரீராம். இப்படியும் அழகான சிந்தனை என்று. குழம்பிய மனதினுள் என்னென்ன ஓடும்னு...

    உண்மைய சொல்லணும்னா இதில் நீங்க சொல்லியிருக்கும் கடைசி வரி நான் பயன்படுத்தியிருக்கிறேன். ஒரு படைப்பில். ஹையோ அது வெளி வரப்ப யாராச்சும் ஏதாச்சும் சொல்லிடுவாங்களா!?

    பரவால்ல அதுக்கு ஒரு தெக்கினிக்கி இருக்கே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் என்ன யோசிக்கிறோம், எதை யோசிக்கிறோம் என்று தெரியாமல் ஒரு மனக்குழப்பம் வரும்! ​ஏனென்றும் தெரியாது.

      நீக்கு
  22. பொக்கிஷம் ஜோக்ஸ் அசத்தல் சிரித்துவிட்டேன், ஸ்ரீராம். அந்தப் பொடிப்பையன் வரும் ஜோக்ஸ் எல்லாமுமே சூப்பரா இருக்கும். மதன் அக்மார்க்!!!

    தொகுதி வேட்பாளர்----செம.

    கடைசி ஜோக் ஏற்கனவே பகிரப்பட்டது என்றாலும், மீண்டும் புன்னகைத்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொடிப்பையனை ரெட்டைவால் ரேஞ்சுடுவோடு குழப்பிக் கொள்ள்வில்லையே...   அவன் வெறும் இவன் வேறு,,, 

      இன்னொரு ஜோக்கில் இப்படியான ஒரு பொடியன் "நான் சின்னப்பிள்ளையாய் இருக்கும்போதெல்லாம் தியேட்டர் என்றால் சினிமா காட்டுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன்" என்பான்.  அவன், அவன் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஆபரேஷன் தியேட்டரிலிருந்து நடப்பான்.

      நீக்கு
  23. பாரதியைப் பற்றிய பகுதி - திருகனக லிங்கம் எழுதியது ரசித்து வாசித்தேன், ஆலயத்துக்குள் எல்லோரும் பிரவேசம் செய்ய வேண்டும் என்ற அந்த நிகழ்வு மிக மிக முக்கியமான ஒன்று.

    ஆனால் இப்பலாம் யார் யாரையோ சொல்கிறார்கள். வரலாறே மாறிவிடுகிறது அதுவும் ஊடகங்கள் ரீச் ரொம்ப வலுவாக இருப்பதால்....எதிர்காலத்துக்குச் சரியாகப் போகுமான்னு டவுட்டாவே இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..காமராஜர், தூங்குவதற்கு ஏசி உபயோகித்தாராம். அதைக்கூட கருணாநிதியிடம் வாங்கித்தரச்சொன்னாராமே. இப்படித்தான் ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன. ஒரு சிலர் என்ன எழுதறாங்க என்றால், நல்லவேளை கருணாநிதி காமராஜர் இறந்த உடன் வரலை. வந்திருந்தால் தலையணைக்குக் கீழே மிகுதி இருந்த 125 ரூபாயும் காணாமல் போயிருக்கும் என்று. வரலாறே உருட்டு புரட்டு வேலையாகிவிட்டது.

      நீக்கு
    2. ஒரு சிலர் இல்லை, திருச்சி சிவா. அவனுக்கு அங்கே நல்ல பதில் கிடைத்து வருகிறது!

      நீக்கு
  24. அதீதம் - நீங்க எழுதிய இந்தக் கதை வாசித்திருக்கிறேன்!

    கதைல வராப்ல அவங்களுக்கும் ஏரியா உண்டு வேறு ஏரியாக்காரங்க வேறொரு ஏரியாக்குள்ள போக முடியாது என்பதாக. ஆனால் இப்பவும் அப்படி இருக்கா என்று தெரியலை.

    நமக்கு அனுபவம் ரொம்பக் குறைவு. இப்பவும் தன் கையே தனக்குதவின்னுதான் போகிறது. எக்ஸ்ட்ரா வேலைகள் பெரிய க்ளீனிங்க் வேலைகள் என்றால் மட்டும் மாடியில் வேலை செய்பவரைக் கூப்பிட்டுக் கொள்வதுண்டு.

    எங்க ஏரியாவுல இப்ப ஒவ்வொரு நாளும் ஏதாச்சும் ஒரு பெண்மணி வந்து வீட்டு வேலைக்கு ஆள் வேணுமா உங்க வீட்டுல வேலை இருக்கான்னு கேட்டு வராங்க.

    முதலில் வட இந்தியர்கள், நேபாலிகள் வந்தாங்க. இப்ப நம்ம வீட்டாண்டை இருக்கும் 20 நேபாலி குடும்பங்களுக்கும் வேலை கிடைத்து வீட்டில் வேலை செய்யறாங்க. இப்ப வேலை தேடி வரவங்க உள்ளூர்வாசிகள்!

    இப்பலாம் படிச்சவங்களுக்குக் கூட பல மொழிகள் தெரியாது, ஆனா இங்க வீட்டு வேலை செய்யறவங்க, தமிழ் (தமிழ்காரங்களே கூட) ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று அத்தனையும் பேசறாங்க!!! அட பரவால்லையே. தமிழ்நாட்டுல இருந்தாக் கூட இத்தனை மொழிகள் அவங்க கத்துக்கிட்டிருக்கமாட்டாங்க. பெங்களூர் பல மொழிகளைக் கற்க வைச்சிடுச்சேன்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த அசிஸ்டெண்ட் கமிஷனர் (பெங்களூரு) சொன்னார்... இந்த நேபாளிகளால்தான் பல திருட்டு, கொலை சம்பவங்கள் நடக்கின்றன என்று. அவங்க துப்பு கொடுத்த பிறகு, நேபாளிலிருந்து கொள்ளையர்கள் வந்து அன்று இரவே வேலையை முடித்துவிட்டு உடனே திரும்பிவிடுவார்களாம். போலீஸுக்கு இது ஒரு சவாலாக இருக்கிறதாம். அதனால் முடிந்தவரை வட இந்தியர்களையோ இல்லை நேபாளிகளையோ வீட்டு வேலைக்கு அல்லது உதவிக்கு வைத்துக்கொள்ளக்கூடாது அல்லது முற்றிலும் போலீஸ் வெரிஃபிகேஷன் செய்தபிறகுதான் அவங்களை வேலைக்கு வைக்கணும் என்று சொன்னார். பல சம்பவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

      நீக்கு
    2. அதீதம் கதை எனக்கும் நினைவிருக்கிறது.  அப்போதெல்லாம் கொஞ்சம் நிறையவே எழுதி இருக்கேன் போல...

      நெல்லை..  இன்றைய செய்தி, மாயவரம் டி எஸ் பி சுண்டஹரேசன் செய்தி படித்தீர்களா?

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. அன்னலக்ஷ்மி பெயரே அருமையாக உள்ளது. சென்னையில் எங்குள்ளதோ? சாப்பாடும் ஐட்டங்கள் நன்றாக உள்ளது. இனிப்புகள் ஏதும் பரிமாறபடவில்லையா? இங்கு இந்த மாதிரி மதிய உணவு என்றால் ஒரு போளி கண்டிப்பாக உண்டு. அவியல், தயிர் வடையெல்லாம் கிடையாது. நீங்கள் பக்குவமாய் சொல்லிய விதமே சாப்பிட்ட ஒர் உணர்வை தந்தது.

    வண்ணதாசனின் கதைகளை படித்திருக்கிறோமே. .! சிறுகதைகளின் விளக்கம் அருமை. சில கதைகளை படிக்கும் போதே புரிந்து கொள்ள முடியும். சிலவற்றை படித்து முடித்த பின் நிதானமாக புரியும். சில இரண்டொரு முறைக்கும் மேலாக படித்தால்தான் புரியும். இதில் எது இலக்கியம்..? உங்களின் கமெண்ட் நன்றாக உள்ளது. இலக்கியம் கற்றுத் தேற என் வாழ்த்துகள்

    கவிதை நன்று. விருப்பங்களே கேள்வியாகும் போது விடைகள் எவ்வாறு கிடைக்கும். நல்ல கருத்து.

    பொக்கிஷம் பகிர்வில் மதன் ஜோக்ஸ் அனைத்தும் அருமையாக உள்ளது. ரசித்தேன். அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னலட்சுமி சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது என்று கீதா கமெண்ட்டிலிருந்து தெரிந்தது.  நாங்க சென்றது சேத்துப்பட்டு பிரான்ச்.  நண்பரின் பெண்ணும் மாப்பிள்ளையும் அங்கு அருகில்தான் இருக்கிறார்கள்.  போளியோ, பாயசமோ கொடுத்த நினைவில்லை.  கொடுத்த ஒரே ஸ்வீட் அக்கடைசியில் கொடுத்த கேரட் கீர்.  அதைக் கூட முறையான சுவீட்டில் சேர்க்க முடியாது!  அனைத்தையும் ரசித்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி கமலா அக்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!