25.11.25

சிறுகதை : ஒரு கதையில் பிறந்த உறவு - சியாமளா வெங்கடராமன்

 

ஸ்ரீதர் ஆஃபீஸில் இருந்து வீட்டிற்குள்   அனு“ என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தான். சமையலறையில் தன் சினேகிதியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தவள், போனை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள். 

ஸ்ரீதர் அப்பா எங்க காணோம் ?என்று கேட்க 

"நான் வரும்போது அப்பா வீட்டில் இல்லை, வாக்கிங் போய் இருக்காருன்னு நினைக்கிறேன் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார் எங்கேயாவது விழுந்து வைத்தால் என்ன பண்றது ?" என்று புலம்பினாள்

பாவம் அப்பா தனியா வீட்டில் இருக்கிறார் .நாம் இருவரும் வேலைக்கு போய் விடுகிறோம் அவருக்கு பொழுது போகவில்லை எனவே வாக்கிங் போகிறார் என்று அனு கூறிக் கொண்டிருக்கும்போது  வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.

ஸ்ரீதர் உடனே வாசலுக்கு விரைந்தான்.  அங்கு அவன் அப்பாவை பக்கத்து வீட்டுக்காரர் திண்ணையில் உட்கார வைத்திருப்பதையும், காலில் இருந்து ரத்தம் வருவதையும் பார்த்து என்ன நடந்தது?" என்று விசாரித்தான்,


வந்தவர் வாசலில் நடந்துவரும் பொழுது எதிரே சைக்கிள் வருவதைப் பார்த்து ஒதுங்கினார். அங்கு ஒரு கல் இருந்து தடுக்கி கீழே விழுந்து விட்டார். அந்த நேரம் நான் அங்கு வந்து கொண்டிருந்தேன். எனவே அவரை தூக்கி அழைத்து வந்தேன் என்று கூறி முடித்தார். 


ஸ்ரீதர் உடனே  தேங்க்ஸ் சார் என்று கூறிவிட்டு, அவன் அப்பாவை அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்து காயத்திற்கு மருந்து போட்டான்.

 

மறுநாள் காலை ஆபீசுக்கு போகும்போது தன் அப்பாவிடம் கதவை பூட்டிக்கொண்டு படுத்துக்கொண்டிருங்கள் நான் வந்து உங்களை வாக்கிங் அழைத்துபோகிறேன் என்று கூறிச் சென்றான். அவரும் கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் படுத்து கொண்டார். 


சிறிது நேரம் கழித்து வாசலில் காலிங் பெல் தொடர்ந்து அடிக்கவே, யார் என்று பார்ப்பதற்கு எழுந்து கதவை திறந்தார்.  இரண்டு பையன்கள் காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பிடித்து அடிப்பதற்காக வாசலில் இறங்கி ஓடவும், கீழே தடுக்கி விழுந்து  விழுந்து "ஐயோ" என்று கத்தினார். 


அவர் குரல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் கதவை திறந்து ஓடி வந்தார். அவரை தூக்கி தன் வீட்டு வாசலில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தார் . அவரே அவர் பிள்ளை ஸ்ரீதருக்குபோன் செய்தார்.


ஸ்ரீதரும் அனுவும் உடனே வீட்டிற்கு வந்தார்கள். தன் அப்பாவின் நிலை கண்டு ஸ்ரீதர் மிகவும் வருத்தப்பட்டான் அவரை அழைத்து போய் உள்ளே படுக்க வைத்து விட்டு அவருக்கு ஆகாரம் கொடுத்தாள்அனு!


அனு ஸ்ரீதரை அறைக்குள் அழைத்து "இதுபோல் அப்பா தினம் கீழே விழுந்தால் நாம் எப்படி ஆபீசுக்கு பயமின்றி போவது?  தினமும் ஆபீஸிலிருந்து வர முடியுமா? பர்மிஷன் தருவார்களா? ஆகையினால் அப்பாவின் நண்பர் ராமசாமி ஆசிரமம் வைத்துள்ளார். அங்கு கொண்டு அப்பாவை சேர்த்து விடலாம். அப்பாவிற்கும் நன்றாக பொழுது போகும். அவரும் நன்றாக பார்த்துக் கொள்வார்" என்றாள்.  


"அதுவும் சரிதான்" என்று ஸ்ரீதர் அனு இருவரும் ஆசிரமத்திற்கு சென்றார்கள்.


இவர்களைப் பார்த்த ராமசாமி அவர்கள் வந்த விபரத்தை கேட்டார். உடனே ராமசாமி ”நான் முதலில் ஒரு கதை சொல்கிறேன் அப்புறம் நீ வந்ததை பற்றி பேசுவோம் "என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தார்.


”என் ஆசிரமத்திற்கு 30 வருடங்களுக்கு முன் ஒரு தம்பதியர் வந்தார்கள் வந்தார்கள்.  அவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. இனி பிறப்பது சிரமம் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். 'எனவே இங்கே ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்' என்றார்கள். 


அந்த நேரம் ஒரு குழந்தை தவழ்ந்து வந்தது. அதன் அழகைப் பார்த்து அந்த அம்மா குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள். அந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக கூற,  நான் எல்லா விபரம் கூறி அந்த குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகளை செய்து அந்தக் குழந்தையை அவருடன் அனுப்பி வைத்தேன், "என்று கூறி முடித்தார்.


அதைக்கேட்ட ஸ்ரீதர் ”நாங்கள் வந்த காரணம் என்னவென்று நீங்கள் கேட்கும் முன் இந்த கதையை ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள்?" என்று கேட்க "அந்த குழந்தை நீதான்" என்று கூற, ஸ்ரீதர் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டான் 


”ஐயோ நான் என்ன காரியம் செய்யத் துணிந்தேன்¡  என்னை எடுத்து வளர்த்து அனாதை என்று தெரியாமல் பாசத்தைக் கொட்டி வளர்த்த என் அப்பாவை அனாதை போல் இந்த ஆசிரத்தில் விட துணிந்த நான் ஒரு பாவி "என்று தலையில் அடித்துக் கொண்டு எழுந்தான்


"நல்ல நேரத்தில் நீங்கள் இதை என்னிடம் சொல்ல வில்லை என்றால் நான் ஒரு பாவியாக இருப்பேன்என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறிவிட்டு "என் அப்பாவை இனி எந்த காலத்திலும் கண் கலங்க விட மாட்டேன்” என்று கூறிவிட்டுவீட்டுக்கு புறப்பட்டான்.

 

ராமசாமி "நான் எங்கேயோ படித்ததை வைத்து சொன்ன கட்டுக் கதையால் ஒரு உறவு தொடர்கிறது" என்று கூறி மனதுக்குள் சிரித்தார்,

16 கருத்துகள்:

  1. சிறிய நீதிக்கதைபோல இருக்கிறது. அம்மா, குழந்தை போன்ற விவரங்கள் இல்லை.

    மாறிய இந்தக் காலத்தில், பிள்ளைகள் வெளியூரில் என்று இருக்கும்போது, ரிடயர்மென்ட் ஹோமில் வசிக்கும்படி நிதி நிலை இருந்தால் அது பெட்டர் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. உங்கள் கேள்விக்கு சியாமளா மேடம் பதில் சொல்வார் என்று நம்புகிறேன்!

      நீக்கு
  2. சண்டை, சமாதானம், எரிச்சல், அன்பு, ஏமாற்றம் எனப் பல உணர்வுகளோடு, கூட்டுக் குடும்பம் (பசங்களோடு) வாய்க்குமானால் அது அதிர்ஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சண்டையும் சச்சரவும் வந்து நிம்மதி இல்லாமல் இருந்து, பின் அது தீரும் நேரம் மனதில் தோன்றும் ஒரு நிம்மதி உணர்வு...

      நீக்கு
    2. நெல்லை எல்லாமே மிதமாக இருக்கும் வரை நல்லது. நான் கூட்டுக் குடும்பத்தில் என்பதால் சச்சரவுகள் எவ்வளவு வேதனைகளைத் தந்தது என்பதும் தெரியும்.

      ஒரே வீட்டில் என்றாலும் புரிதலோடு ஓர் எல்லைக் கோட்டிற்குள் இருந்தால் உறவு வலுக்கும். சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரலாம் அது தீர்ந்துவிட்டால் பிரச்சனை இல்லை. மனதிற்குள்ளேயே வைத்து ஒரு மாதிரியாகச் சண்டை போடும் போதுதான் பிரச்சனைகள்.

      கீதா

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. ​கதை நடை கதை சொல்வது போல் இல்லாமல் ஒப்பிப்பது போல் இருக்கிறது. கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். இக்கதையை வாசிக்கும்போது கீதா ரங்கன் நினைவில் வந்தார். அது என்னவோ முதியோர் என்று கதையில் வந்தாலே கூடவே முதியோர் இல்லமும் வந்து விடுகிறது.

    தடுமாற்றம் என்பது வய்துக்கோளாறு. நானும் மூன்று முறை நடை பாதையில் விழுந்துள்ளேன். மனைவி கூட இருக்கும் போது தான். ஆனால் சமாளித்து ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து விடுவோம். ரத்த காயம் ஏற்பட்டதில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, பார்த்து நடங்க. வயதாகும் போது விழும் போது காயம் இல்லைனாலும் ஊமைக்காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நம் மார்புக் கூடு கம்ப்ரெஸ் ஆகவும் கூடுமாம்! அப்பா என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் வீட்டிற்குள்ளும் விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமே.

      கீதா

      நீக்கு
    2. நானும் வீட்டிலும், வெளியிலும் இப்படி விழுந்து கொண்டேயிருக்கிறேன். கால், கை இடுப்பு என அடிப்பட்டு அந்த ர்த்தமில்லாத ஊமைகாயங்கள் சரியாகி குணமாகவே பல மாதங்கள் ஆகின்றன. இப்போதும் குழந்தைகளுடன் செல்லும் ஆசை வெல்லும் போது, எங்கேனும் கீழே விழுந்து விடுவோமோ, அவர்களுக்கு தொந்தரவாக போய் விடுமோ என்ற பயம் என்னுடன் கூடவே வருகிறது. இறைவனை வேண்டிக் கொண்டேதான் சென்று வருகிறோம்.

      நீங்களும் எப்போதும் வெளி வாசலில் செல்லும் போது, ஜாக்கிரதையாகவே சென்று வாருங்கள் சகோதரரே.

      நீக்கு
    3. வயதானாலே கால்களில் ஒரு நடுக்கம் இருக்கும் முக்கியம்

      நீக்கு
  5. கதையின் கரு பல வடிவங்களில் வெளி வந்ததே எனறாலும் சிறப்பான தொகுப்பு

    பதிலளிநீக்கு
  6. கதையின் கரு நன்று. கதை போன்று இல்லாமல், தொகுத்துச் சொல்வது போல் இருப்பதால் இன்னும் கொஞ்சம் மெருகேற்றிச் சொல்லியிருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வு நன்றாக உள்ளது.. ஸ்ரீதரும் அவன் மனைவியும் அவன் அப்பாவை நன்றாகவே அன்புடன் கவனிக்கும் போதினில், இருவரும் அலுவலகம் சென்று வருவது ஒன்றுதான் அங்கு பிரச்சனை எனும் போதும், வீட்டிலேயேஒரு ஆளை ஏற்பாடு செய்து, (தாங்கள் இருவரும் அலுவலகம் ம இக் முடிந்து திரும்பி வரும் வரை) கவனித்துக் கொள்ளலாம். அவன் அப்பாவிற்கு பேச்சுத் துணையாக இருக்கும். வெளியில் வரப்போக அழைத்துச் செல்வதிலும், சிரமம் ஏற்படாது. ஆனால், கதையின் இறுதியில், ஒரு மாற்றம் / திருப்பம் வரவேண்டுமென்பதற்காக ஒரு கதையை உருவாக்கிய விதம் நன்றாக உள்ளது. கதாசியருக்கு அன்பான பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!