27.11.25

வியாழன் விருந்து – நெல்லைத் தமிழன்

 வியாழன் விருந்து நெல்லைத் தமிழன்

சில நேரங்களில் நாம் பத்திரிகையின் ஒரு வடிவத்திற்குப் பழகியிருப்போம். அது மாறினால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவா மாறுதலுக்கு நம் எல்லோரும் பழக்கப்பட்டவர்கள் அல்லர். ஏதேனும் மாறினால், பழசு மாதிரி வராது என்றுதான் நமக்குத் தோன்றும். மனைவியே நல்லா வெந்தயக் குழம்பு வைத்து எப்படி இருக்கு என்று கேட்டால், ரொம்ப நல்லா இருக்கு, இருந்தாலும் அம்மாவின் கைப்பக்குவம் மிஸ்ஸிங்கோ என்று தோணுது, என்று உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்வோம்.  குமுதம் மற்றும் விகடன் இதழ்களின் நெடுங்கால ஆசிரியர்கள் மாறியபோது, நமக்கு அந்தப் பத்திரிகை ரசிக்கவில்லை (எனக்கு ரசிக்கவில்லை). அதனால்தான் ஸ்ரீராம், ஒரு வியாழன் பகுதியை நீங்க பண்ணுங்க என்று சொன்னபோது, எனக்கு எழுதமுடியும் என்ற நம்பிக்கை வரவில்லை. ஒரு தடவை ஸ்ரீராம் தவிர்க்கமுடியாமல் ஒரு வியாழன் பகுதி எழுதாதபோது, அன்று ஒரு சில பகுதிகளை நான் எழுதினேன். அப்போதுதான் எழுதுவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தோன்றியது (எழுதுவது அல்ல, கதம்பமாக ஒரு நாள் பதிவை எழுதுவது). இதற்கு நமக்கு தொடர்ந்த படிக்கும் பழக்கம் இருக்கவேண்டும். ஸ்ரீராமுக்கு இயல்பாக எழுத வருவதால், கடைசி நேரத்தில்கூட ஒரு கட்டுரையை எழுத முடிகிறது. ஒரு வியாழன் முயற்சிக்கலாமே என்று எண்ணியதன் விளைவுதான் இன்றைய பதிவு. 

அனுபவம் - வியாழன் விருந்து 

தூய சவேரியார் கல்லூரியில் நான் இளங்கலை பட்டப்படிப்பு படித்தேன். சவேரியார் பள்ளியும், கல்லூரியும் முழுவதுமாக, இது கிறித்துவர்களுக்கானது என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்காத காலம் அது. எங்களுக்கு மாரல் வகுப்பு என்று ஒன்று வாரம் ஒரு முறை உண்டு. ஒரு பாதிரியார்தான் அந்த வகுப்பை எடுப்பார் (கல்லூரியில் நன்னெறி வகுப்பா என்று ஆச்சர்யப்படாதீர்கள்). அவர் அன்றைய வகுப்பை நடத்திய பிறகு சில கேள்விகள் கேட்டு நன்றாக பதில் சொன்னால் ஒரு சிறிய பரிசு எப்போதாவது தருவார். அது சிறிய, உலோகத்தினாலான சிலுவையில் இருக்கும் இயேசு சிலை. வருடத்திற்கு ஒரு முறை கல்லூரி முழுவதும் மாரல் வகுப்பிற்கான பரீட்சை வைத்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கு ஒரு பரிசு கொடுப்பார்கள். அப்படி நான் கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் என்ற புத்தகத்தை பரிசாகப் பெற்றிருக்கிறேன்.   

கல்லூரியில் மதியம் 1 மணி நேரம் இடைவேளை இருக்கும் (மதிய உணவுக்கு). இதை எப்படி மாணவர்களுக்கு உபயோகமாகச் செய்யலாம் என்று யோசித்த பேராசிரியர்கள் சிலர், வியாழன் அன்று மாத்திரம், வெளியிலிருந்து யாரையாவது கூப்பிட்டு கல்லூரியின் ஒரு ஹாலில் 1 ¼ - 2 வரை பேசச் சொல்வார்கள். விருப்பப்படும் மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.  சர்கஸ் வைத்து நடத்துபவர், விளையாட்டில் சாதனை புரிந்தவர் என்று வித விதமானவர்கள் பேசுவார்கள். எல்லா வியாழனிலும் கலந்துகொண்ட நினைவு இல்லை. எல்லா வியாழனும் நடந்ததாகவும் நினைவு இல்லை.  ஆனால் அதற்குப் பெயர் வியாழன் விருந்து 

கல்லூரியில் தமிழ் பேராசிரியர்களால், திரைப்படத்தை எப்படி ரசிப்பது என்பதற்காக, பத்து நாட்கள், புகழ் பெற்ற திரைப்படங்களைத் திரையிட்டு, அவற்றின் சிறப்புகளை விளக்கி ஒரு நிகழ்வு நடந்தது. கலந்துகொள்கிறவர்கள் பணம் கட்டிக் கலந்துகொண்டனர். 

பாளையங்கோட்டையை, தமிழகத்தின் கேம்ப்ரிட்ஜ் என்று அழைப்பார்கள். அங்கு ஏகப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் உண்டு. தூய சவேரியார், தூய யோவான், சாராள் டக்கர், சதக்கத்துல்லா கல்லூரிகளும்,  ஆசிரியர்கள் பயிற்சிக்  கல்லூரியும், பள்ளிகளில், தூய சவேரியார், இக்னேஷியஸ் கான்வெண்ட், கதீட்ரல், ரோஸ் மேரி, தூய யோவான்என்று பெரிய லிஸ்ட் உண்டு. பெரும்பாலும் கிறித்துவ சமயத்தினரால் நடத்தப்பட்டது. 

நான் படித்த கல்லூரியில்தான் என் அப்பா, அவர் சகோதரர்கள் படித்தனர். அந்தக் கல்லூரியில்தான் என் மாமனார் (futureல் அப்படி ஆகப்போகிறவர்) துறைத் தலைவராக வேலைபார்த்தார். என் பெரியப்பாவும் கணிதப் பேராசிரியராக சவேரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்  வேலை பார்த்தார்.

நான் பள்ளி, +1/+2 மற்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருந்திருக்கிறேன். மூன்று வெவ்வேறு ஹாஸ்டல். மாணவர்களுக்கு எல்லா விளையாட்டையும் அறிமுகப்படுத்திவிடுவார்கள். அனேகமா எல்லோரும், ஹாக்கி, வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, வளை பந்து (டென்னிகாயிட்) என்று தினமும் அட்டவணைப்படி அந்த அந்தக் குழுக்களுடன் விளையாடணும். வருட முடிவில், ஹாஸ்டல் மாணவர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்கிடையே இந்த எல்லாப் விளையாட்டுகளிலும் போட்டி வைத்து வெற்றி பெறும் குழுவிற்கு பரிசுகள் கொடுப்பார்கள். ஹாஸ்டல் டே என்று கொண்டாடப்படும் அந்த தினம் மிகவும் கோலாகலமாக இருக்கும். +1, +2வில் ஓவியப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்து, தூய சவேரியார் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட அளவில் ஓவியத்தில் இரண்டாம் பரிசு வாங்கினேன். அதற்கான விழாவில், .பொ.சிவஞானம் அவர்கள் கையால் பரிசு பெற்றேன்.

காலம் மாறிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு (நான் அங்கு படித்தது 45 வருடங்களுக்கு முன்பு) ஹாஸ்டல் வார்டன் ஃபாதர் சிகாமணி அவர்களை அவருடைய பாதிரியார்கள் ஹாஸ்டலில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், உங்க காலம் மாதிரி வராது. இப்போதெல்லாம் பசங்களை கண்டிக்க முடிவதில்லை, படிங்க என்று அக்கறையோடு சொல்ல முடிவதில்லை. ஃபாதர், சிஸ்டர் பேரைச் சேர்த்து சுவர்களில் எழுதிடறாங்க. இல்லைனா, தூக்குப் போட்டுக்கிட்டு, அதற்குக் காரணம் நீங்கதான் என்று லெட்டர் எழுதிவச்சுடுவேன் என்று பயமுறுத்துகிறார்கள் என்றார். 2006ல் நிலைமை அப்படி என்றால், இப்போது எப்படி இருக்குமோ. 

எத்தனை எத்தனை ஆசிரியர்களின் தொடர்ந்த கவனிப்பு மற்றும் அக்கறையால் நாம் இந்த நிலைமைக்கு வந்திருப்போம். 

இந்த அனுபவங்களையே ஒரு தொடராக எழுதலாம்.  

பக்தி வாரம் ஒரு பாசுரம் 

பன்னிரு ஆழ்வார்களில் கடைசியானவர் திருமங்கையாழ்வார்.  குரு பரம்பரை என்று வைணவப் பெரியோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தின்படி, கலியுகத்தின் 398வது வருட த்தில் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர் இவர். தன்னுடைய பிரபந்தங்களில் பாடிய அரசர்கள் பெயர், அவருடைய வரலாறு இவற்றை வைத்துப் பார்க்கும்போது கிபி 8-9ம் நூற்றாண்டில் பிறந்தவர். பிறந்த ஊர், திருகுறையலூர். சோழ அரசனின் படைத் தலைவராகப் பணியாற்றியவர். வலிமை மற்றும் திறமை காரணமாக சோழ மன்னனால் ஆலி நாட்டுக்குத் தலைவரானார். பரகாலன் என்ற பட்டமும் பெற்றார்.  குமுதவல்லி என்ற பெண்ணின் மீது கொண்ட ஆசை காரணமாக, அவளை மணக்க மனம் கொண்டார். குமுதவல்லி விதித்த நிபந்தனைப்படி, வைணவராக ஆனார். ஒரு வருடம் தினமும் 1008 வைணவர்களுக்கு உணவளிக்க ஆரம்பித்தார்.  அன்ன தானத்தில் பொருள் அழிவுற்றதால், அரசனின் திறையில் கைவைக்க, சோழ அரசன் இவரைச் சிறையிலிட, பிறகு பெருமாளின் அருளால் புதையல் பெற்று அரசனுக்கு அளிக்க, சோழ அரசன் இவருடைய பெருமை அறிந்து விடுவித்தான். இன்னும் பணப்பற்றாக்குறை அதிகரிக்க, வழிப்பறி செய்து பொருளீட்டினார். முன் வினைப் பயனால், இறைவனே தேவியுடன் மணமகன் போல வந்து பரகாலனை ஆட்கொண்டார். இவர் 86 வைணவ திவ்யதேசங்களைப் பாடியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஆழ்வார்களில் முக்கியமானவராகப் போற்றப்படும் நம்மாழ்வார் சுமார் 36 திவ்யதேசங்களையே பாடியுள்ளார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவர் 1253 பாசுரங்களைப் பாடினார்.  அதில் ஒரு பாசுரம் இன்று பார்ப்போமா? 

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்* பெரும் துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு* அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்* உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம் 

இடும்பை-சரீரம். அளவில்லாத துக்கங்களுக்குக் காரணமான உடம்பில் பிறந்து, ஆத்மா வேறு உடல் வேறு என்ற வித்தியாசம் தெரியாததால், அழகிய பெண்களுடன் கூடி, அவர்கள் தரும் சிற்றின்பத்தில் ஆசைப்பட்டு, அந்தப் பெண்கள் போன வழியே ஓடித் திரிந்தேன். அதனை எண்ணி மனம் வருந்தினேன். காலமெல்லாம் வாடிக்கிடந்தேன்.  அப்படிக் கிடந்த காலத்தே, எனக்கு இறைவன் அருளால் ஞானம் பிறந்தது. அதனால் நன்மை தீமைகளை ஆராய்ந்து, நம்மைக் கடைத்தேற்றும் மந்திரம், நாராயணா என்ற நாமமே என்பதைப் புரிந்துகொண்டேன்.  அதாவது திருமந்திரத்தைப் பெற்றேன் என்கிறார் ஆழ்வார்.


சரீரம் என்பது வேறு ஆத்மா என்பது வேறு. “நான்என்று சொல்லும்போது அது ஆத்மாவைக் குறிக்கும். எனது என்று சொல்லும்போது அது உடலைக் குறிக்கும். ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்று இரு வகைப்படும். உயிருள்ளவைகளில் ஜீவாத்மா இருக்கிறது. அதன் அளவு, நெல் முனையில் நூறில் ஒரு பங்கு-அதாவது மிக மிகச் சிறியது என்று சொல்கின்றனர். இது மனிதர்கள், விலங்கு, பறவை, மரம் செடி கொடி என்று எல்லாவற்றிர்க்கும் பொருந்தும். இந்த ஜீவாத்மா, கர்ம வினையைக் கழிக்கும் இந்தப் பிறப்பில், மேலும் கர்ம வினைகளைச் சேர்த்துக்கொள்ளாமல், பரமாத்மாவை அடைய, நாராயணா என்ற திருமந்திரத்தைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்பது ஆழ்வார் நமக்குச் சொல்வது. 

இப்படி இறைவன் திருவடிகளை, அவன் நாமத்தையே அனுதினமும் சொல்லி, பற்றிக்கொள்ளாமல் இருந்தால், நம் வாழ்வு, ஊமையன் கண்ட கனவைக்காட்டிலும் வீணாகப் போய்விடும். 

நான் பார்த்த திரைப்படம் -  - Dude டூட் 

எங்கள் பிளாகில், ஒரு பதிவில், இந்தத் திரைப்படத்தின் கரு நன்றாக இல்லை, தாலியின் மகிமையையே இயக்குநர் கெடுத்துவிட்டார் என்று நடிகர்/இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் சொல்லியிருந்ததையும் சேர்த்து கழுவி ஊற்றியிருந்தார்கள். நெட்ஃப்ளிக்ஸில் வந்திருக்கிறது என்றும் சொன்னார்கள். ஆனால், கதை என்ன என்றெல்லாம் யாரும் விவரிக்கவில்லை. சரிநாம் முதலில் புளூ சட்டை மாறன் அவர்களின் விமர்சனம் பார்ப்போமென்று பார்த்தேன். கீழே ஏகப்பட்டபேர் கருத்துகள் எழுதியிருந்தனர். பலரும் புளூ சட்டை மாறன் விலைபோய்விட்டார் என்று கருத்திட்டிருந்தனர். இதில் ஒருவர், அந்தக் கதாநாயகி மிக அழகு, ஆனால் படத்தில் அசிங்கமாகக் காண்பித்திருந்தார்கள் என்று அங்கலாய்த்திருந்தார். 

அட அப்படி என்ன பாலசந்தரோ, பாக்கியராஜோ இல்லை பாரதிராஜாவோ சீரழிக்காத கலாச்சாரத்தை இந்த இயக்குநர் சீரழித்துவிட்டாரென்று அறிந்துகொள்ள படத்தைப் பார்ப்போம் என்று முடிவு செய்துவிட்டேன். நாம் ஆஹா ஓஹோ என்று கொண்டாடிய சிந்துபைரவி படத்திலேயே கள்ளத்தனமாக தனக்குப் பிறந்த குழந்தையை பரிசாக அளிக்கும் கிளைமாக்ஸையே நாம் ஜீரணித்துக்கொண்டோமே. (1984ல்)

அளவில் பெரிதாக என் படத்தைப் போட்டுப் பிரயோசனமில்லை தம்பீ. பார்ப்பவர்கள் அனேகமா எல்லோரும் வலது பக்கம்தான் பார்க்கப்போகிறார்கள் அப்படி இல்லை பிரதீப். மமிதா ஆஹோ ஓஹோ அழகின்னு சொன்னாங்க. எனக்குப் பார்க்க அப்படித் தெரியவில்லை. கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சிமா மோஹன் (அந்தப் படத்தில் மாத்திரம்தான்) அளவுக்குக்கூட இல்லையே. உன் படத்துக்கு அடுத்தது போட்டாலாவது டாலடிப்பாரோ என்று நினைத்தேன்”. 

டூட் பட கதாநாயகி மமிதா பைஜு

அகனும் (பிரதீப்), குறளும் (மமிதா) கஸின்ஸ். குறள் அப்பா சரத்குமார் மினிஸ்டர், காதல் தோல்வி அடைந்த அகன், சிறு வயதிலிருந்தே தனக்கு நெருக்கமான நண்பியான குறளிடம் நட்பு பாராட்டுகிறான். குறளுக்கு அகனின் மீது காதல். தனக்கு அவள் மீது காதல் இல்லை என்று சொன்னதும் ஏமாற்றமுற்று மேற்படிப்புக்காகச் சென்றுவிடுகிறாள்.  ஒரு சமயத்தில் அகன், குறள் மீது தனக்கு காதல் இருப்பதை உணர்ந்ததும் தன் மாமா சரத்குமாரிடம் சொல்ல, அவர் உடனே தடபுடலாக திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார். திருமணத்திற்கு வந்த குறளோ, தனக்கு இன்னொரு சாதிப் பையனிடம் லவ் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்ல, அகன் தன்னுடைய காதலை மறைத்துக்கொண்டு, குறளின் சந்தோஷத்திற்காக அவர்களுடைய திருமணத்தை நடத்திவைத்தானா? இல்லை மாமாவுடைய சாதி உணர்வுக்காக குறளை திருமணம் செய்துகொண்டானா என்று கதை செல்கிறது.

 

விமர்சனங்கள் படம் சுமார் என்று சொன்னதாலும், காணொளிகளில் இந்தப் படம் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்று கழுவி ஊற்றியதாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தேன். பத்து நிமிடங்களில் என்னால் படத்துடன் ஒன்றமுடிந்தது. வசனம்தான் காரணமாக இருக்கணும். முதல் பாதி மிக நன்று. இந்த மாதிரிப் படங்களில் இரண்டாம் பாதிதான் சரியாக வராது. வசனங்களில் நகைச்சுவை இழையோடுகிறது. இரண்டாம் பாதி மோசமில்லை. செண்டிமெண்ட் எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. ஆணவக் கொலைக்கு எதிரான மெசேஜ் என்றும் படத்தைக் கொண்டாடிவிட முடியாது.  ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம்.  பலர் இந்தப் படத்தை விரும்பிப் பார்த்ததால்தான் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது என்று நினைக்கிறேன். 

பயணம் இந்த மாதத்தில் 

இனி அடிக்கடி பயணம் போவதில்லை என்று அக்டோபரில் மகள் வந்தபோது முடிவெடுத்திருந்தேன். பசங்களும், என்னப்பா, எப்போப் பார்த்தாலும் கோயில்கள் யாத்திரை என்று இருக்கீங்களே என்று சொன்னாங்க.  எங்களிருவருக்கும் டிசம்பரில் திருப்பதி சேவைக்கு டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். அது ஒன்றுதான் பயணம் என்று நினைத்திருந்தேன்.   இதற்கிடையில் சில பல கோயில்களைத் தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம்தோன்றியதால்,  காஞ்சீபுரத்திற்கு மூன்று நாட்கள் பயணித்தோம்-நவம்பர் 2ம் தேதி வரை. (இன்னும் திருவரங்கம் மற்றும் மன்னார்குடி செல்லவேண்டும்). அதற்குள் என் அண்ணன், தென் தமிழகத்திற்கு பத்து நாட்கள் காரில் செல்லப்போகிறோம், நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னதால் நவம்பரில் அதற்குச் சென்றோம். டிசம்பரிலும் சில பல பயணங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது. 

தென் தமிழகப் பயணத்தில் நான் 4, 5ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படித்த பூலான்குறிச்சி என்ற ஊருக்குச் சென்றிருந்தோம். இந்தப் பயணத்தில் வழியில் இதம்பாடல், பரமக்குடி போன்ற ஊர்களின் பெயர்களைப் பார்த்ததும் கில்லர்ஜி என் நினைவுக்கு வந்தார்.  இந்த ஊரில் நகரத்தார்கள் (நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்) அதிகம். அவர்கள் வீடுகள் ஒவ்வொன்றும் அரண்மனை போன்று இருக்கும். அவர்களைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். 

அந்தப் பயணத்தின் அதிகாலையில் ஒரு வெள்ளைத் தாளில், என் நினைவில் அந்த ஊர் எப்படி இருந்தது என்று படம் வரைந்து என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டேன். மனதில் மிகுந்த ஏமாற்றத்தைச் சந்திப்போமோ என்று தோன்றியது.  ஐம்பது வருடங்கள் கழித்துச் சென்றிருக்கிறேன். அதிகபட்சம் 20 சதம்தான் மாற்றம் தெரிந்தது. 

இந்தப் பயணத்தையாவது உடனுக்குடன் எங்கள் பிளாக்கில் நெடுந்தொடராக எழுத நினைத்திருக்கிறேன். அதற்கான ஸ்லாட் எப்போது வருமோ. இன்று பகிர்வது, நான் படித்த பள்ளிகளின் படங்கள்.

இது நான் 4,5ம் வகுப்பு படித்த வ.செ.சிவ மீனாட்சி ஆச்சி, ஊராட்சி தொடக்கப் பள்ளி, பூலான்குறிச்சி. 1973ல் புத்தம் புதிதாக இருந்த பள்ளி. அதே நிலையில் இப்போதும் இருக்கிறது. முன்னே இருக்கும் சோனா கலையரங்கத்தில்தான் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணி அவர்கள் அப்போது அரசியல் பயணத்தில் கஞ்சித் தொட்டி திறந்துவைத்துப் பேசினார்

இந்தப் பள்ளியைப் பற்றி எழுதவேண்டியிருக்கிறது. பயணத் தொடரில் வரும்.

1974ல் இந்தப் புது அரசினர் மேல்நிலைப் பள்ளி திறந்துவைக்கப்பட்ட து. அதுவரையில் பழைய கட்டிடத்தில் (ஆனால் அழகிய கட்டிடம்) இயங்கிவந்த மேல்நிலைப் பள்ளி இங்கு இயங்க ஆரம்பித்தது. பூலான்குறிச்சியில்தான் என் அப்பா ஹெட்மாஸ்டராக வேலை பார்க்க ஆரம்பித்தார்

இந்தப் பள்ளிக்கு நான் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சென்றேன். அது பற்றி பயணத் தொடரில் எழுதுகிறேன். பழைய பள்ளியின் படத்தை ஒரு புதனில் பார்ப்பீர்கள்.

கவிதை   - படத்துக்கு 

படத்துக்கு ஏற்ற கவிதையோ அல்லது மனதில் தோன்றும் ஒரு வரி ப்ளீஸ்.

 

இந்த வார நகைச்சுவைப் பேச்சு 

திருவல்லிக்கேணி ஹ்யூமர் க்ளப் ஆர் சேகரன் அவர்கள் மிக நகைச்சுவையாகப் பேசுவார். ஹ்யுமர் கிளப்புக்கு அவர் விருந்தினர்களாக அழைத்துவருபவர்களும் மிக மிக நகைச்சுவையாகப் பேசுவார்கள். அதனால் அந்தக் காணொளிகளை நான் பார்த்துவிடுவேன். இன்று மனைவி ஒரு காணொளியை எனக்குப் பகிர்ந்திருந்தார். (நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி) அதில் சேகரன் அவர்கள் பேசியதில் ஒரு பகுதி இன்று.

பல மாதங்களுக்கு முன்பு காத்தாடி ராமூர்த்தி அவர்கள், சேகரனையும் அவர் மனைவி விஜியையும் அவருடைய நாடகம் ஒன்றை நாரதகான சபாவில் மாலை 7மணி ஷோ காண பாஸ் கொடுத்து அழைத்தாராம். மனைவி மேக்கப் போட்டுக்க நேரமாக்கி, நாரதகான சபாவை அடையும்போது 7:10. நாடகமோ ஹவுஸ்ஃபுல். நாடகம் தொடங்கிவிட்டது. முழு இருட்டு. மேடையில் காட்சியைக் கண்டு விழுந்து விழுந்து அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தனர். 

சேகரனுக்கும் அவர் மனைவிக்கும் 5வது வரிசையில் இரண்டு இடங்கள். தட்டுத் தடுமாறி தங்கள் இடத்தை அடைந்தனர். 

அப்போது 4வது வரிசையில் இருந்த ஒரு வயசான தம்பதியினர், அனேகமாக பிராமினாக இருக்கவேண்டும். அந்த அம்மா, வீட்டுக்காரரிடம், ‘Gகேஸ் மூடிட்டேளோன்னோஎன்று கேட்டார். அவரோ டிராமா பார்க்கும் மூடில் இருந்தார். 

உடனே சத்தமா மூடியாச்சு மூடியாச்சு. டிராமாவைப் பாரு. இங்க வந்து கேஸை மூடியாச்சா அதை மூடியாச்சா என்றுஎன்றாராம். 

அந்த அம்மா விடாமல், ‘பால்கனி லைட்டை அணைச்சுட்டேளோன்னோ.. உங்களுக்கு பொறுப்பு கிடையாது. இப்போ எலெக்டிரிசிட்டி ரேட் எவ்வளவு அதிகமாயிட்டது தெரியுமா? எங்க போனாலும் எல்லா லைட்டையும் போட்டுட்டுப் போனா என்ன அர்த்தம்? நீங்க லைட்டை அணைச்சேளா இல்லையா ?’ என்றாராம். 

அவர் உடனே, ‘அணைச்சாச்சு அணைச்சாச்சு, டிராமாவைப் பாருஎன்றாராம். 

கணவரை நிம்மதியா டிராமா பார்க்கவிடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ.. அடுத்ததாக இந்த பாத்ரூம் குழாயையெல்லாம் மூடினேளா இல்லையா? E Blockல பாமினி பாத்ரூம் குழாயைத் திறந்து வச்சுட்டு பாம்பே போயிட்டா. அப்புறம் E Blockabsolutely no water.”    

மூடியாச்சும்மா மூடியாச்சும்மா.. டிராமாவைப் பாரு”… 

அப்புறம் வாசக்கதவு 

ஒண்ணு ஒண்ணாக் கேட்காதே வாசக்கதவைப் பூட்டியாச்சு. டிராமாவைப் பாரு”. 

அந்தம்மா அப்பவும் விடலை. ‘Gகிரில்லு Gகேட்டைப் பூட்டினீங்களான்னு கேட்டா. 

அதுக்கு அவர், ‘Gகிரில்லு Gகேட்டா?”   

உடனே அந்த அம்மா, “எப்போ நீங்க Gகிரில்லு Gகேட்டான்னு கேட்டீங்களோ, அப்போ பூட்டலைன்னு அர்த்தம். ஒரு Gகிரில்லு Gகேட்டைக்கூடப் பூட்டாம அப்படி என்ன நாரதகான சபாவுல இந்த நாடகம் வேண்டியிருக்கு? நாரதகான சபாவும் எங்கயும் போகாது இந்த டிராமாவும் எங்கயும் போகாது. இப்போ முடிவாச் சொல்லுங்க, Gகிரில்லு Gகேட்டைப் பூட்டினீங்களா இல்லையா?”. 

உடனே அவர் சொன்னார், ‘அப்படீன்னா அந்தப் பக்கம் உட்கார்ந்திருக்கிறாரே அவரைக் கேளு”    

மாமி உடனே கேட்டாள் அவரை நான் ஏன் கேட்கணும்?” 

அவர்தாம்மா உன் புருஷன். நீ இடம் மாறி உட்கார்ந்து என் உயிரை எடுக்கறாயே. நான் டிராமாவையே பார்க்கலைனு அவர் எழுந்து போயிட்டாராம்.   

உடனே சேகரன், அவர் மனைவியிடம், நாம ஒரு பத்து வரிசை தள்ளி உட்காருவோமா. இப்போ மாமிக்கு யார் புருஷன் என்று தெரிந்துபோய்விட்து.  இனி, மறுபடியும் ‘Gas’ லேர்ந்து கேள்வி கேட்க ஆரம்பிப்பார். நாம நாடகமே பார்க்க முடியாது என்றாராம்.     

……. 

இன்றைய வியாழன் விருந்து ரசிக்கும்படி இருந்ததா? கருத்தில் சொல்லுங்களேன்.

76 கருத்துகள்:

  1. படத்துக்குகவிதை

    காலநிலை காரணம் 
    காயாத மரமில்லை 
    சாயாதவரை கவலையில்லை 

    வீடு ஒன்று தேவை எமக்கு 
    கூடு கட்டி குஞ்சு பொரிக்க 
    வெறும் கிளைகளில் கட்டுவதைவிட 
    இலைகளின் மறைவில் 
    கட்டுவற்கே விருப்பம் 
    காத்திருக்கிறோம்
    தகுந்த காலம் வரும்வரை 

    மீண்டும் துளிர்ப்பாய் 
    என்று தெரியும் 
    அப்போது 
    களிப்பாய் கட்டுவோம் 
    கூடு 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பரா இருக்கு ஸ்ரீராம். ரசித்தேன்...கூடவே....பொ...கொ...

      கீதா

      நீக்கு
    2. வாங்க ஶ்ரீராம். படத்திற்கு மிகப் பொருத்தமான கவிதை.

      பறவைகளுக்குக் கூடு கட்டுவது எவ்வளவு முக்கியம். வளாகத்தில் பருந்துகள், காக்கைகள் அவ்வப்போது சிறு சிறு குச்சிகளை அலகில் தூக்கிக்கொண்டு பறக்கும்போது, எங்கோ மரத்தினில் கூடு கட்ட யத்தனிக்குறது. சந்ததியைப் பெருக்கும் எண்ணம் இயல்பாக அமைந்திருக்கிறதே என ஆச்சர்யமாக இருக்கும்.

      பெரிய மரம் ஒன்றில் பருந்துகள் மாத்திரமே கூடுகள் கட்டியிருக்குன்றன. அதுபோல காக்கைகளுக்குத் தனித் தனி மரங்கள். பறவைகளிலும் ஜாதி, இன வேறுபாடுகள் உண்டோ?

      கவிதை ரசிக்கும்படி இருந்தது.

      நீக்கு
    3. நெல்லை சந்ததியைப் பெருக்கும் எண்ணமோ இல்லை அந்த உணர்வோ அது எல்லா உயிரினங்களுக்கும் பொது, இயற்கையில் தன்னிச்சையாக வருவது. சிவியர் ஆட்டிசம், மனநிலை சரியில்லாத ஆண்கள் உட்பட. பெற்றோர் அவர்களின் பருவ வயதிலிருந்து மிகவும் கஷ்டப்படுவாங்க. அதை மேனேஜ் செய்ய.

      ஜாதி எங்க வந்துச்சு நெல்லை? இனம்தான். காக்கைகளுக்குப் பருந்து கண்டால் பயம் பொதுவாகவே பருந்தின் அருகில் மற்ற பறவைகள் போகாதே!

      கீதா

      நீக்கு
    4. காக்கைகள் கூட்டில் குயில் சோம்பேறிகள் முட்டையிட்டு எஸ்கேப் ஆவதில்லையா?  அதுவும் ஒருவகை.

      நீக்கு
    5. கவிதை சிறப்பு ஸ்ரீராம்!

      நீக்கு
  2. எங்கள் பள்ளியிலும் இப்படி நான்கு குழு உண்டு வகுப்பிலும் 4 பிரிவுகளாக column போன்று பெஞ்ச் டெஸ்ட் போட்டு நடுவில் ஆசிரியை நடக்க வழி இருக்கும். ஒரு பெஞ்சில் மூன்று அல்லது 4 இருவர் என்று அமைப்பில். அந்தக் குழுக்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும் எனவே குழு டீம் அப்புறம் குழுக்களுக்கு நடுவில் போட்டி...நீங்க சொல்லியிருப்பது போலவே தான் நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். இது ஹாஸ்டல் மாணவர்கள் மத்தியில் அமைந்த குழு. பள்ளியில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒவ்வொரு குழுதான். நான், ஹாஸ்டலுல், டென்னிகாயிட், ஹாக்கி, ஃபுட்பால்(ஹாஹா. இதுபற்றி எழுதறேன்) போன்றவற்றில் இருந்தேன்.

      நீக்கு
  3. இருப்பிடம் மாறினாலும்
    பழைய நினைவுகளை
    அசைபோட
    கூடியிருக்கும்
    எங்கள்
    கூட்டுக் குடும்பம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்ந்த நண்பன் வீழ்ந்த காலத்தில் 
      மறுபடி 
      வாழும் காலம் எதிர்நோக்கி 
      பாழும் மனம் துடிதுடிக்குது!

      நீக்கு
    2. ஆஹா!!!!! கவிதை மழை!! அப்ப சீக்கிரமே அந்த மரம் துளிர்த்துவிடும்!

      கீதா

      நீக்கு
    3. ஹாங், சொல்லுங்க கவிஞரே, நம்மளுது ஓகேவான்னு

      கீதா

      நீக்கு
    4. ஓகே தான்.  அதனாலதானே மறுபடி உற்சாகமாகி நானும் பதிலுக்கு எசப்பாட்டு படிச்சேன்!

      நீக்கு
    5. ஓ! நன்றி நன்றி!! ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    6. ​//வாழ்ந்த நண்பன் //
      உள்குத்து எதுவும் இல்லையே?

      நீக்கு
    7. நல்லா இருக்கு கீதா ரங்கன். வசித்த இருப்பிடம் இலைகள் உதிர்ந்து மாறிவிட்டது. அல்லது சென்ற வருடம் கூடு கட்டிய இடத்தை விட்டு வேறு ஒரு மரத்தில் எல்லோரும் கூடியிருக்கின்றனர் என இருவிதமாகப் பொருள் கூறலாம். ரசித்தேன். வீடு மாற்றும் வைபவம் கவிதையைப் பிறக்க வைத்ததோ

      நீக்கு
    8. // உள்குத்து எதுவும் இல்லையே? //

      சேச்சே...

      நீக்கு
    9. வாழ்ந்த நண்பன் மரம் வீழ்ந்த காலம் இலையுதிர் காலம். திரும்ப துளிர்க்கும் காலம் நோக்கி.. நல்லா இருக்கு

      நீக்கு
    10. நன்றி நெல்லை....வீடு மாறும் வைபவம் அட போங்க நெல்லை,. அதெல்லாம் ஒன்னுமில்லை

      கீதா

      நீக்கு
    11. கூட்டுக் குடும்ப வாழ்க்கை இல்லையா அந்த நினைவுகள்

      கீதா

      நீக்கு
  4. அட! இன்று வியாழனில் நெல்லையா!

    புதிய மாற்றம் நல்லாருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் முதலில் போட்டேன்! கருத்து போட்டுவிட்டு பார்த்தால் வரவே இல்லை! வெளியிடு என்பதை அமுக்காமல் அடுத்த கருத்து அடிக்கப் போய்விட்டேன்!!!!

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா... ஒரே மாதிரி இல்லாமல் சிறு மாற்றத்துக்கு சோதனை முயற்சி.

      நீக்கு
    3. நெல்லை, கஷ்டப்பட்டு, ஆர்வத்தில் ரொம்.................ப வருஷம் கழிச்சு ஒரு நாலு வரி படத்துக்கு எழுதியிருக்கேன்.....ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா!! ம்ஹூக்கும்.

      கீதா

      நீக்கு
    4. உணர்வோடு வரும் எந்தக் கவிதையும் நல்லாயிருக்கும் கீதா.   உங்கள் கவிதை சூப்பர்.

      நீக்கு
    5. மீண்டும் ஒரு நன்றி எங்கள் கவிஞரே!!!

      கீதா

      நீக்கு
  5. பாளையங்கோட்டையில் நிறைய கல்லூரிகள் பள்ளிகள் உண்டு. கேம்ப்ரிட்ஜ் போல அங்கிருந்து ஆனால் நாகர்கோவிலில் என்னுடன் கல்லூரியில் படித்த தோழி அதன் பின் பாளையங்கோட்டை சாராள் டக்கரிலேயே பேராசிரியையாகப் பணியாற்றியதாக அறிந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய அத்தை பெண், சாராள் டக்கர் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றினார். அத்தையின் பசங்க, பெண்களுக்கு ஆண்டவன் அதிக புத்திசாலித்தனத்தையும் கல்வியறிவையும் கொடுத்திருக்கிறான்.

      நீக்கு
  6. எங்கள் கல்லூரியிலும் திரைப்படங்கள் போட்டாலும், அதைப் பற்றிய கலந்துரையாடல் என்று எதுவும் இல்லை...ஆனால் பெண்கள் கல்லூரி என்பதால் நான் மூன்றாம் வருடம் படித்த போது, அப்போது ஹாஸ்டலில் இருந்த பெண்களில் சில தேவையில்லாத விஷயங்கள் நடந்ததால் ஒரு ஃப்ரென்ச் டாக்குமென்டரி போன்ற ஒரு படம் போட்டு அதில் அபார்ஷன் எல்லாம் எப்படி நடக்கும் என்பதைக் காட்டி...ஒரு வாரம் செமினார் கலந்துரையாடல், கவுன்சலிங் எல்லாம் நடந்தது படித்து முடித்ததும் குடும்பம்னு போய்ட்டா எப்படிக் கையாள வேண்டும் என்று எல்லா விஷயங்களும் பொதுவாகவும் தனித்தனியாகவும் பேசினாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பாசுரமும் விளக்கமும் சூப்பர் நெல்லை....

    கீதா

    பதிலளிநீக்கு
  8. படத்துக்கு ஏற்ற(?) வரிகள்:
    வெட்ட வெளியில் பட்டு மேகம்
    பட்ட மரத்தில் எட்டுக்காய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...
      ஆச்சர்யக்குறி.

      நீக்கு
    2. இரண்டு வரி நல்லாருக்கு, திருவாழி!

      உங்க பெயரைப் பார்க்கும் போதெல்லாம் எங்க ஊர் சாமி நினைவுக்கு வந்துவிடுவார்!

      நீங்களும் எங்க ஊரோன்னு மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால் எங்க ஊர்ல எனக்குத் தெரிந்து நான் இருந்தப்ப இப்படி வாசிப்பு எழுத்துன்னு இருந்த ஓரிருவரில் அவரில் ஒருவர்தான் நீங்களா? என்று நிச்சயமாக இல்லை என்றே தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
    3. நன்றி, கீதாஜி!
      என் பூர்விகம் காவிரிக்கரை. ஆனால், பிறந்த நாள் முதல் திரை கடல் ஓடும் வரை தருமமிகு சென்னை வாசம்தான். என் சமஸ்க்ரிதப் பெயரை தமிழ் படுத்தியுள்ளேன். அஷ்டே. sorry if I misled you :-)

      நீக்கு
    4. //என் சமஸ்க்ரிதப் பெயரை தமிழ் படுத்தியுள்ளேன்.// அப்படியா ஸ்ரீனிவாசன்?

      நீக்கு
    5. இல்லை misled எல்லாம் செய்யவில்லை அது ஒரே ஒரு முறைதான் முதலில் பார்த்ததும். அதன் பின் இல்லை....ஆனாலும் மனசுக்குள் பெயரைப் பார்த்ததுமே அப்படிப் போகும்.
      இப்பெயரைப் பார்த்ததுமே நானும் ஸ்ரீராமும் போட்டு அலசினோமே!!!!! இது யாரப்ப புச்சுன்னு.....எனக்கு எங்க ஊரா இருக்குமோ ஸ்ரீராம்னு சொல்ல அவர் இல்லை ரொம்ப பரிச்சயமாக இருக்கு என்று அவர் சொல்ல நானும் ஆ......மோதிக்க... அலசினோம்.

      அப்புறம் உங்கள் பெயரை தமிழ்ப்படுத்தி ஸ்ரீராம் முதல் முறையே சொல்லிவிட்டாரே!! இதுதான் உங்க பெயர்னு நினைக்கிறேன் என்று.
      அதன் பின் கூட அப்பெயரைச் சொல்லி கமென்ட் போட்டிருக்கிறார்.

      காவிரிக்கரையா இருந்தா என்ன எப்படியோ எங்க ஊர் சாமி பெயர்!!!!

      கீதா



      நீக்கு
  9. ட்யூட் என்ன கதை என்று தெரியவில்லை, நெல்லை. ஆனால் அன்று வியாழனில் வந்திருந்த பகுதியைப் பார்த்தப்ப அது கொஞ்சம் ஏதோ போன்று இருந்தாப்ல இருந்தது.

    //திருமணத்திற்கு வந்த குறளோ, தனக்கு இன்னொரு சாதிப் பையனிடம் லவ் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்ல, அகன் தன்னுடைய காதலை மறைத்துக்கொண்டு, குறளின் சந்தோஷத்திற்காக அவர்களுடைய திருமணத்தை நடத்திவைத்தானா? இல்லை மாமாவுடைய சாதி உணர்வுக்காக குறளை திருமணம் செய்துகொண்டானா என்று கதை செல்கிறது.//

    பண்ணிக் கொண்டானா இல்லையா? அன்று பாக்கியராஜின் கருத்தைப் பார்த்தப்ப, கல்யாணம் செய்து கொண்டு பின்னர் சேர்த்து வைப்பதாக....அதுக்குத்தான் நான் கருத்து கொடுத்திருந்தேன். அதுக்கு முன்னரே ஏன் அவங்க ரெண்டு பேராலயும் முடிவு செய்ய முடியலை என்று,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டியூட் பற்றிச் சொல்லும்போது "இது எங்கள் கருத்தல்ல எழுதியவர் கருத்து" என்று டிஸ்கி போடலாமா என்று தோன்றியது!!  ஹிஹிஹி...

      நீக்கு
    2. படம் பார்த்தீங்களா இல்லையா ஸ்ரீராம்? சில சமயம் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என நினைத்து புதிய ஸ்டேடியத்தில் பிரதமர் அமர்ந்து காணும்போது எதிர்பார்ப்புக்கு மாறாக இந்திய அணி தோல்வியடைவதும், ஆஹா ஓஹோ என எதிர்பார்க்கும் கமல் ரஜினி படங்கள் பப்படம் ஆவதும், இயற்கை தானே.

      நீக்கு
    3. படம் பார்க்கவில்லை.  பார்க்கும் எண்ணம் இல்லை.  சூரி கதாநாயகனாக நடிக்கும் படங்களும், பிரதீப் படங்களும் எவ்வளவு நன்றாயிருந்தாலும் பார்க்கும் விருப்பம் இல்லை!

      நீக்கு
    4. மமிதா ஆஹோ ஓஹோ அழகின்னு சொன்னாங்க. எனக்குப் பார்க்க அப்படித் தெரியவில்லை. //

      சிரித்ததை காலையிலேயே இதோடு போட நினைத்து விட்டுப் போச்சு நெல்லை.

      ஏன் பொண்ணுக்கு என்ன குறைச்சல்! நல்லாத்தானே இருக்கு பொண்ணு. அதுவும் பொட்டு வைச்சா நல்லா இருக்கு பொண்ணு. முகம் என்னவோ ஒரு அழகு அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை. நடிகை போன்ற முகம் இல்லை பக்கத்துவீட்டுப் பொண்ணு போன்ற முகம்...

      ஹான் இப்படித்தான் தமனாவையும் அப்ப சொன்னாங்க மக்கள் அதுவும் அந்தப் படம் அது என்ன படம் மறந்து போச்சே....

      தமனாவை நினைச்சு மத்த நடிகைகளைப் பார்க்கக் கூடாது நெல்லை!!!! ஹாஹாஹாஹா...

      கீதா

      நீக்கு
  10. பயணங்கள், கலக்குங்க, நெல்லை,

    பள்ளியின் படங்கள், விவரங்கள் எல்லாமே நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நானும் திருவல்லிக்கேணி ஹ்யூமர் களப் chapter சானல் அவ்வப்போது பார்ப்பதுண்டு. சமீபத்தில் ப்ரஃபசர் ராமச்சந்திரன் நடுவராக ஒரு பட்டிமன்றம்...கொஞ்சம் தான் பார்க்க முடிந்தது. ஸ்பாண்டேனியஸாக வருது நகைச்சுவை.

    நீங்க பகிர்ந்திருக்கும் பகுதியையும் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் குறிப்பிட்ட பகுதியை சென்ற வாரம் நானும் பார்த்தேன்.

      நீக்கு
  12. பட்ட மரமும் துளிர்க்கும்
    பட்டுப்போல் கூடு கட்டி
    முத்து முத்தாக முட்டையிட்டு
    பஞ்சு போல் குஞ்சுகளை
    ஊட்டி வளர்த்தி பறக்க விடுவோம்.
    மரமும் இலைகளை
    இழந்து வாடி நிற்கும்.
    காகங்கள் ஆகாயத்தில் பறந்து
    சென்றது அமெரிக்காவிற்கு. .
    மரம் பறக்க முடியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையின் கடைசி வரிகள் எதையோ சொல்ல வருகின்றன போலவே....

      நீக்கு
    2. அருமை JKC Sir! இன்றைய வாழ்வியலை புட்டு வைத்து விட்டீர்கள்.

      நீக்கு
    3. ஜெ கே அண்ணே! கலக்கறீங்க போங்க. கவிஞர் 2!

      இப்போதைய வாழ்க்கை பற்றி சொல்லிருக்கீங்க. நல்லாருக்கு ரசித்தேன்

      கீதா

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய மாற்றம் கண்ட வியாழன் கதம்பமும் எப்போதும் போல் அருமை. சகோதரர் நெல்லைத்தமிழரின் பள்ளி, கல்லூரி அனுபவங்கள், அவருடைய எழுத்தாற்றலில் சிறப்பாக வந்துள்ளது. இந்த வியாழன் மாற்றமும் நன்றாக உள்ளது. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    /மனைவியே நல்லா வெந்தயக் குழம்பு வைத்து எப்படி இருக்கு என்று கேட்டால், ரொம்ப நல்லா இருக்கு, இருந்தாலும் அம்மாவின் கைப்பக்குவம் மிஸ்ஸிங்கோ என்று தோணுது, என்று உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்வோம். /

    இது இயல்பாக அனைவருக்கும் வருவதுதானே..! "இன்று நம் அம்மாவை, அவள் அன்பை, அவளது நேசிப்பை கூறுகிறோம். நாளை தன் மகன் இதைப் போலவே தன் அம்மாவை விட்டுத்தராமல், இருப்பான் என்ற நம்பிக்கை தரும் எதிர்பார்ப்புக்களும் கூடவே வரும்/ இருக்கும்." இதுதான் பக்குவமடைந்த ஆண்களின் மனநிலை.

    இன்று சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவில் வந்த பீட்ரூட் துருவலிலும் இதே சாயல்தான்.(அங்கும் சென்று பதிவை படித்து வந்தேன். ஆனால் இன்னும் அவர் பதிவுக்கு கருத்துரை தரவில்லை) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் தளத்தில் நான் பீட்ரூட்டுக்கு ரூட் போட்டு விட்டேன்!

      நீக்கு
    2. அப்ப அவர் தளத்தில் இன்னும் நிறைய முளைச்சுரும்னு சொல்லுங்க ஸ்ரீராம்!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  15. பதில்கள்
    1. மால் மருகா சரணம்.   வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      நீக்கு
  16. இன்று ஒரு ஃபங்ஷனுக்கு வெளியில் வந்திருக்கிறேன் நெட் சரியில்லை. பிறகுதான் மறுமொழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று நானும் மறுபடி அந்தப் பெண்ணிடம் பல்லைக் காட்ட கிளம்பிக் கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. இன்னும் உங்கள் பாஸுக்குச் சந்தேகம் வரலையா? பில் போடும்போது அழகி வருவாரா இல்லை கடுகடு ஆபீசரா?

      நீக்கு
    3. இன்று நானும் மறுபடி அந்தப் பெண்ணிடம் பல்லைக் காட்ட கிளம்பிக் கொண்டிருக்கிறேன்!//

      ஹாஹாஹாஹாஹா....இங்க வாங்க ஸ்ரீராம், க்ளினிக்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணிடம் காட்டலாம்!!!!!

      கீதா

      நீக்கு
  17. நெல்லை வியாழக்கிழமைக்குள்ளும் புகுந்து கலக்குகின்றார்...
    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  18. என்னால் தள்ளியிருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே இயலும்

    பதிலளிநீக்கு
  19. நாடகம் பார்க்க விடாத மாமி...
    அருமை..

    பதிலளிநீக்கு
  20. மாற்றங்களை வரவேற்போம்! ஸ்ரீராம் வழங்கும் வியாழன் தஞ்சை, திருச்சி கதம்பம் போல் நிறம், மணம், என்று பல்சுவை அழகோடு மிளிரும். இன்றும் கவிதையை கோரும் படமும், ஹியூமர் கிளப் நகைசுவையும் சிறப்பாக இருந்தன.

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. டூட் படத்தில் என்ன குறை என்றால் ஒரு கதாபாத்திரம் கூட உன்னதமாக இல்லை. தன் முறைப்பையன் தன் காதலை மறுதலித்ததும் அவள் அத்தனை சீக்கிரம் வேறு ஒருவனை ஏற்றுக் கொண்டு கர்பமாகி விடுவாளா? அந்த உதவாக்கரை(அவன் உருப்படியாக எதுவும் செய்வதாக படத்தில் காண்பிக்கவில்லை) அந்தப் பெண்ணின் திருமண வரவேற்பிற்கு வந்து அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனிடம், "நீ இவளை இப்போது திருமணம் செய்து கொள், எனக்கு பாஸ்போர்ட் கிடைத்ததும், நாங்கள் இருவரும் ஓடிப்போய் விடுகிறோம், நீ பெண்டாட்டி ஓடிப்போன துக்கத்தில் இருப்பது போல நடித்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்" என்பானாம், என்ன கன்றாவி! இளைய தலைமுறையின் மதிபீடுகள் இவ்வளவுதானா? என்று தோன்றுகிறது.
    தனுஷிடம் கால்ஷீட் கேட்டு கிடைக்காததால், "நான் அவரைப்போல நடித்து விடுகிறேன்" என்று பிரதீப் ரங்கநாதன் சொல்லிவிட்டாரோ என்று தோன்றுகிறது. தனுஷை அப்பட்டமாக காபி அடித்திருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் சரத்குமார்! வில்லன் நடிப்பை நகைச்சுவை கலந்து வித்தியாசமாக வழங்கியிருக்கிறார்.
    படம் முடியும் பொழுது பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரம் கும்மென்று உயர்ந்திருக்க வேண்டாமா? கோமாளித்தனமாக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  23. இன்றைய வியாழன் விருந்து பல்சுவையுடன் இருந்தது.

    ஒரு வியாழன் பகுதியை நீங்க பண்ணுங்க என்று ஸ்ரீராம் சொன்னது
    நல்ல வாய்ப்பு. முயற்சிக்கலாம் என்று சொல்லி நன்றாக செய்து விட்டீர்கள்.

    உங்கள் பள்ளி, கல்லூரி பற்றிய விவரங்கள் படங்கள் . செய்திகள் என்று அருமையாக பகிர்ந்து விட்டீர்கள். அன்றைய மாணவர், ஆசிரியர் உறவு போல இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    //பாளையங்கோட்டையை, தமிழகத்தின் கேம்ப்ரிட்ஜ் என்று அழைப்பார்கள். அங்கு ஏகப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் உண்டு. //

    ஆமாம், அந்தக்காலத்திலேயே படித்த பெண்கள் அதிகம் உண்டு. பி.ஏ படித்தாலே கல்லூரியில் டியூட்டராக வேலைப்பார்த்தவர்கள் எங்கள் சொந்தங்களில் உண்டு.
    என் அப்பாவின் சொந்த ஊர் பாளையங்கோட்டை . நான் சிறு வயதில் சாராள் டக்கரில் படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. பள்ளி, கல்லூரி படிப்பில் நிறைய பரிசுகள் பெற்றது மகிழ்ச்சி.

    பூலான்குறிச்சியில் அப்பா ஹெட்மாஸ்டராக வேலை பார்த்த பள்ளியை பார்த்து அங்கு படம் எடுத்து கொண்டது மற்றும் படித்த பள்ளிகள், கல்லூரி படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  25. இங்கே(கனடாவில்) இலையுதிர் காலம் முடிந்து பனிக்காலம் துவங்கப் போகிறது.மரங்கள் மொட்டையாகிக் கொண்டிருக்கின்றன. உச்சியில் சில பறவைக் கூடுகளை பார்த்தேன். இதில் வசித்த பறவைகள் எங்கே பறந்து சென்றதோ? என்னும் நினைப்பு கஷ்டமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  26. பக்தி – வாரம் ஒரு பாசுரம் பகிர்வும், விளக்கமும், திருமங்கை ஆழ்வார் படமும் அருமை. இறைவனின் நாமத்தை சொல்லி நாளும் சொல்லி வாழ்வது நம் கடமை. எல்லாம் இறைவன் பார்த்து கொள்வான் என்ற நிம்மதியை தருவான்.

    பதிலளிநீக்கு
  27. பறவைகள் படமும் ஸ்ரீராம், ஜெயக்குமார் சார், கீதா ரெங்கன் எல்லாம் கவிதை அழகாய் எழுதி விட்டார்கள்.

    எனக்கு கவிதை எழுத வராது. கருத்து சொல்கிறேன்.
    எள்ளு பூ மூக்கு என்று ஆரம்பிக்கும் "தையல் நாயகி பாமாலையில்"

    //பறவையாய் பிறந்தாலும் மரங்களின் உச்சியில் பதியங்கள் போட வேண்டும். //
    என்ற வரி வரும் நமக்கு பறவைகள் உல்லாசமாக பறந்து திரிவது மட்டும் தான் தெரியும். ஆனால் அவை முட்டையிட, அதை காப்பற்ற அவை படு பாடு பார்க்கவே கஷ்டமாய் இருக்கும்.
    சில பறவைகள் கழுகு, கொக்கு போன்றவை உச்சி கிளையில் கூடு கட்டும் அது அந்த பாட்டில் வரும்.


    கிளைவழி சொந்தங்கள் என்ன என்று சொல்கிறதோ !
    பெரியவர்கள் சொந்தங்களை கண்டு பிடிக்க "ஏதாவது கிளையை சொல்லுங்கள் அப்படியே பிடித்து கொண்டு போய் உறவுகளை கண்டு பிடித்து விடுவோம்" என்பார்கள்.
    கிளைக்கு கிளை அமர்ந்து இருக்கும் பறவைகள் அதை நினைவூட்டியது.

    முன்பு பச்சையாக இருந்த போதும் விரும்பி அமர்ந்த பறவைகள் இலைகளை உதிர்த்து மொட்டையாக இருக்கும் போது அந்த மரத்தை நேசிக்கிறது பறவைகள்.


    பதிலளிநீக்கு
  28. Dude டூட் திரைப்பட விமர்சனம் அருமை.

    இந்த வார நகைச்சுவைப் பேச்சு எனக்கு தேவகோட்டையை சேர்ந்த என் தோழி அனுப்பினாள் நானும் கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசுரப் பகிர்வும், விளக்கமும்
      தங்களது முத்திரை...

      நீக்கு
  29. சினிமா (கேவலம்) மதிப்பீடு
    தேவையற்ற ஒன்று..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!