28.6.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் –நெல்லைத்தமிழன்

 

ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி 

இராஜேந்திர சோழன் வரலாற்றைப் படித்துக்கொண்டிருந்தபோது, சோழர் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட ராஜேந்திர விண்ணகரம் என்ற கோயிலைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. இந்தக் கோயிலை, ராஜேந்திரன் சார்பாக பாண்டிய நாட்டை ஆண்டுவந்த சுந்தரச் சோழன் எடுப்பித்தான் என்று சொல்லியிருந்தார்கள். நெல்லைச் சீமையில் எந்தக் கோயில் இது என்று பார்த்தபோது, மன்னார்கோயில் என்ற இடத்தில் இருக்கும் இராஜகோபால ஸ்வாமி கோயில்தான் அது என்பது தெரிந்து எனக்கு மிகுந்த ஆச்சர்யம்.

இந்தக் கோயிலுக்குப் பலமுறை நான் சென்று தரிசித்திருக்கிறேன். முதன் முதலில் என்னுடைய சித்தியைப் பார்ப்பதற்காக நான் கோடகநல்லூர் சென்றிருந்தபோது அவர்தான் இந்தக் கோயிலில்தான் குலசேகர ஆழ்வார் திருவரசு இருக்கிறது, போய் தரிசனம் செய் என்று சொன்னார். அதன்பிறகு எப்போது நெல்லைச்சீமைக்குச் சென்றாலும் இந்தக் கோயிலைத் தரிசிப்பேன்.

சோழர் வரலாறு எழுதும் இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தக் கோயிலின் படங்களையும் இதே தொடரிலேயே பகிர்ந்துவிடலாம் என்று தோன்றியது.

சோழ தேசத்தில் ராஜமன்னார்குடி மற்றும் காட்டுமன்னார்குடி (கடலூர் மாவட்டம்) என்று இரண்டு கோயில்கள் உண்டு. கோயில் என்ற சொல்லை தெலுங்கு மொழியில் குடி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு ஊர்களும் விஜயநகர மன்னர்கள் காலத்திற்கு முன்பு மன்னார்கோயில் என்றே அழைக்கப்பெற்றன.  இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோயில் என்று ஒரு கோயில் உண்டு. இந்த மூன்று மன்னார் கோயில்களும் திருவில்லிபுத்தூர் ரங்கமன்னார் மற்றும் துவாரகை அரசனான கண்ணபிரான் திருக்கோலங்களை முன்னிறுத்தி வழிபடப்பெறும் கோயில்களாகும்.  ராஜமன்னார்குடியை தட்சிண துவாரகை என்று அழைப்பர்.

இது பற்றி எழுத நான் சில பல வரலாற்று நூல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, நம் தமிழர் வரலாறு பற்றி ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது.   இந்த நூலை எழுதியவர், துடிசைக்கிழார் என்ற பெயர் கொண்ட சிதம்பரம் பிள்ளை அவர்கள். (சிதம்பரனார் என்று எழுதியிருக்கிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்).

அவருடைய எண்ணவோட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருந்தாலும் அதனை இந்தப் பகுதியில் எழுதுகிறேன்.

புறநானூற்றில் (இந்த நூலின் காலம் கிமு 1ம் நூற்றாண்டிலிருந்து கிபி 5ம் நூற்றாண்டுவரை என்கிறார்கள்), காரிகிழார் பாடியுள்ள பாடலில்,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்"

இந்தப் பாடல் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர். இந்தப் பாடலின் பொருள் என்ன?

வடக்கில் பனிபடர்ந்த பெரிய நீண்ட மலையையும் (இமயமலை), தெற்கே அச்சம் தரும் குமரி முனை வரையும், கிழக்கே கடற்பகுதியையும் (வங்காள விரிகுடா), மேற்கே பழைமையான கடற்கரைப் பகுதியையும் (அரபிக் கடல்) கொண்டுள்ளது பண்டைத் தமிழகம் என்று குறிப்பிடுகிறது. இமயமலை கடலினின்று வெளிக்கிளம்பி, ஒரு எல்லையாக அமைந்த பிறகு, அந்தப் பகுதியில் மூவேந்தர்களில் முதலில் சேரமன்னன், சேர நாட்டினரைக் குடியேற்றினான். அதனால் சேர மன்னனுக்கே ‘இமயவரம்பன்’ என்ற பட்டப்பெயர் கிடைத்தது. அவன் அத்துடன் நிறுத்தாமல், அதன் வடபுறத்தே இருக்கும் வானவர் நாடாகிய திபெத்தையும் வென்று அடிமைப்படுத்தியதால் அவனுக்கு ‘வானவரம்பன்’ என்ற பட்டமும் கிடைத்ததாம்.  ஆனால் நாம் இதனை, தமிழர் பண்பாடு வடபுலத்தும் பரவியிருந்தது என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது துடிசைக்கிழார் கருதுவதுபோல, பாரதம் முழுவதுமே தமிழர்கள் நிறைந்திருந்தனர் என்றும் புரிந்துகொள்ளலாம்.

 பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

சிலப்பதிகாரத்தில் ‘காடுகாண் காதை’யில் இந்த வரிகள் வருகின்றன. இதில் கூறவருவது, பஃருளி ஆறும், குமரித் தொடர் மலையும் கடல் கோளில் அழிந்துபட்டன. அதனால் அவற்றைத் தவிர, வட திசையில் கங்கை, இமயம் முதல் தென் திசை வரை ஆண்டவன் பாண்டிய மன்னன் என்கிறது.

கவிச் சக்கரவர்த்தி கம்பருடைய தனிப்பாடல் திரட்டில் வரும் மூன்றாவது பாடலை மாத்திரம் கொடுத்துள்ளேன்.

வடக்கு திசைபூழி வான்கீழ் தென்காசி

குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்

ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்

சேரனாட் டெல்லையெனச் செப்பு. (3)

(பாடல் திரட்டில் பழனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறு. பூழி என்பதே சரியானது)

துடிசைக்கிழார் சொல்லவரும் வரலாற்றை மிகச் சுருக்கமாக எழுதுகிறேன். உங்களுக்குத் தலைச்சுற்றல் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது. 

தமிழர்கள் இமயமலைக்கு அப்பாலும் பரவியிருந்தார்கள். கிமு 9000ல், ஆரியர்கள் காகேசியா மலைப்பகுதியிலிருந்து கைபர், காபூல் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். எதிர்த்த தமிழ்க்குடிகளை அழித்து முன்னேறினர். மிஞ்சிய தமிழர்கள் தெற்குப் பகுதியை நோக்கி நகர்ந்தனர். அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அரக்கர்கள்’ என்று குறிப்பிடப்படும் Red Indians of America  தமிழ்நாடு புகுந்து திரிபுரம், அஹோபிலம், அரதைப் பெரும்பாழி, இலங்கை போன்ற பல்வேறு இடங்களில் அரசை நிலைநாட்டி ஆண்டுவந்தனர். அந்த அரக்கர் மரபினர் தக்கன், இரணியன், மகாபலி, புலத்தியன், கார்த்தவீர்யார்ச்சுனன்,  புலத்தியனின் பேரர்களான இராவணன், கும்பகர்ணன், விபீடணன், கம்சன் சிசுபாலன் போன்ற பலரும் அடக்கம்.  இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள் (அதான் இந்தியாவே தமிழகம்னு சொல்லியாச்சே).  அப்போது, இந்திய நாடு, 56 தேசங்களாகப் பிரிக்கப்பட்டு, கோசல நாட்டு அயோத்தியில் மத்திய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. திருமாலின் அவதாரங்கள் இந்த அசுரர்களை அழிப்பதற்காகத்தான் நிகழ்ந்தது. அதுபோல, சேர சோழ பாண்டியர்களும் இந்த 56 இராச்சியங்களில் ஒன்றானார்கள்.

 

கிமு 7500ல் பாண்டிய நாட்டு முதுகுடுமிப் பெருவழுதி என்பவன், ஆரிய அரசர்களின் மற்றும் ஏனைய தமிழ் அரசர்களின் உதவிகளைப் பெற்று 2000 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அரக்கர் சாம்ராஜ்யங்களை ஒழித்து கொற்கையை அரச இருக்கையாகச் செய்தான். தனக்கு உதவிய ஆரியர்களை தென்னாட்டில் குடியமர்த்தினான். அப்படி வந்தவர்கள்தாம்  பிரகச்சரணர் (இதற்கு அர்த்தம் விரைவாக முன்னால் வந்தவர்கள்), அட்டசகசரர் (எண்ணாயிரவர்), தில்லை மூவாயிரவர், திருச் செந்தில் ஆறாயிரவர், நாங்கூர் நாலாயிரவர், திருவெண்காடு ஈராயிரவர், சீரங்கத்தார் முதலியோர்கள்.

இந்தியா முழுவதும் தமிழ் பரவியிருந்தது. ஆனால் ஆரியர்கள் நுழைந்ததும், விந்தியப் பகுதிக்குத் தெற்கே மொழிக்கலப்பு ஆகி கிமு 7500ல் தமிழிலிருந்து ஆந்திர கன்னட மொழிகள் பிரிந்தன. ஆரிய நாகரீகம் விந்திய மலைக்குத் தெற்கும் பரவவே, கிமு 6805ல் ஆரம்பிக்கப்பட்ட இடைச்சங்கத்தில் மாபுராணம், பூதபுராணம் என்ற இலக்கண நூல்கள் ஏற்படலாயின. அவைகளில் ‘பார்ப்பன இயல்’ என்ற பிரிவு வகுக்கப்பட்டது. கிமு 6000ல், தொல்காப்பியர் செய்த தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நூல்கள் இந்த மாபுராணம் மற்றும் பூதபுராணம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

துடிசைக்கிழார், பல நூல்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். கிமு 30,000 ஆண்டு என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாக எனக்குத் தோன்றியது. ஆனால் தொல்லியல்துறையில் பொறுப்பில் இருந்த ஜெகதீசன் ஐயர் என்பவர் எழுதிய புராதான இந்தியா என்ற நூலும் மேற்கோள் காட்டப்படுகிறது. வெளிநாட்டவர் எழுதிய நூல்கள் அல்ல. (இந்த வரி கீதா சாம்பசிவம் மேடத்திற்காக)

இவ்வளவு போதும் இந்த வாரத்துக்கு.

 

 

மன்னார் கோயில் நுழைவாயில்

 

கோயிலுக்கு கைங்கர்யங்கள் செய்தவர்களாக இருப்பார்கள்.

 

 

 

 

 

 

கோயில் கொடிமரம் மற்றும் இருபுறத் தூண்கள் படங்களில் அழகாக வந்துள்ளது இல்லையா?

பெண்களில் சிலைகள் என்பதற்காக இவற்றை இங்கு போடவில்லை. மிக அழகிய சிலைகள், சிதைந்திருக்கின்றன (எந்தப் புண்ணியவான்களாலோ). நெல்லை கிருஷ்ணாபுரத்தில், வில்லை உடைய அர்ஜுனன் சிலையில், கல்லில் வில்லைச் செதுக்கிய திறமையைப் பாராட்டும் மனம் இல்லாமல், எவ்வளவு ஸ்டிராங்க் இந்த வில் என்று சிலர் தட்டிப் பார்த்து வில்லை உடைத்திருக்கின்றனர். நம் மக்கள் மனம் அப்படிப்பட்டது.

படிகளில் யாளி, சிம்மம் போன்றவற்றை எப்படி வடித்திருக்கிறார்கள் பாருங்கள்.

வர்ணகலாபத் தாயார்

 


 

 

 

 

 

இராம லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமான்.

 

 

 

 

 

 

ஒரு முறை நான் சென்றிருந்தபோது கும்பாபிஷேகத்திற்காக கோவிலைச் சீர் செய்துகொண்டிருந்தார்கள். பிறகு சம்ப்ரோக்க்ஷணம் ஆன பிறகு சென்றபோதும் படங்கள் எடுத்திருந்தேன். அதனால்தான் காலம், கோயில் தோற்றங்கள் படங்களில் வித்தியாசத்துடன் தெரிகின்றன.

அடுத்த வாரம் தொடர்வோம்…. நம் சரித்திரத்தையும்.

(தொடரும்) 

45 கருத்துகள்:

  1. திருநெல்வேலி வரை வந்திருக்கீங்க அப்ப டக்குனு கன்னியாமரியையும் எட்டிப் பாப்பீங்கதானே? எங்கூர்ல ஒரு சோழ விநாயகர் இருக்கார்லா....அப்ப எங்கூர்லயும் சோழர் என்னா செஞ்சாங்கன்னு சொல்லலாம்லா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். பொதுவா திருநெல்வேலிக்கு போனால், நவ திருப்பதி, திருக்குறுங்குடி வானமாமலை.... திருச்செந்தூருடன் முடிந்துவிடும். திருவண்பரிசாரம் தொடங்கி திருவட்டார், தாணுமாலயன், கன்யாகுமரி செல்வதில்லை.

      நீக்கு
  2. எங்க சித்தியும் கோடநல்லூர் கோயில் பக்கத்துல கோயிலுக்கு சித்தாப்பா தன்னால முடிஞ்ச கைங்கர்யம் செய்து கொண்டிருக்காங்க அங்க செட்டில் ஆனதுலருந்து. கோயில் திருவிழா கோயில் நிகழ்வுகள்னா அங்கருந்து எங்கும் வரமாட்டாங்க கூடியவரை.

    என் சித்தி குடும்பத்திற்கும் உங்க சித்தப்பா சித்தி அறிமுகம் உண்டு. உங்களையுமே குறிப்பிட்டிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஒரு தடவை சொல்லியிருக்கீங்க. நான் அவர்களைப் பார்த்த நினைவு இல்லை. அடுத்த முறை சந்திக்கணும்.

      நீக்கு
  3. நானும் கோடகநல்லூர் இரு முறை போயிருக்கிறேன்.

    குடி என்று குறிப்பிடுகிறார்கள்// தெய்வம் குடியிருக்கும் கோயில் என்று சொல்வதுண்டே அட அப்ப தமிழ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடியிருப்பு பகுதி என்ற சொல்லும் உண்டே. குடி என்பதை இருப்பிடம், மக்கள் என தமிழில் புரிந்துகொள்ளலாம். தெலுங்கில் இறைவன் இல்லம் எனப் பொருள் பெறும்.

      நீக்கு
  4. புறநானூறு, சிலப்பதிகாரம் பாடல்கள் வாசிக்கும் போது கண் முன் காட்சிகள்.

    கம்பர் பாடலும் கொடுத்து நல்ல ஆராய்ச்சி செய்திருக்கீங்க நெல்லை. தேடித் தேடி வாசித்து பொருத்தமாகத் தொகுத்துக் கொடுக்கறீங்க சூப்பர். பாராட்டுகள் நெல்லை.

    எல்லை பற்றிய இன்றைய பாடல்கள் நல்ல தகவல்கள். இப்படித்தானே நாம தமிழ் மக்கள் எங்கெல்லாம் இருந்திருக்கோம்னும் தெரியவருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. தமிழர்கள் பரந்துபட்டு வாழ்ந்தருக்கிறார்கள்.

      நீக்கு
  5. கோவில் - குடி ஒப்பீடு நன்று.   

    காரிகிழார் பாடலின் சந்த நயம் கவர்கிறது!  குன்றுகள் இருக்கும் பாதையில் குதிரையில் செல்வது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அதன் கீழ் தகவல்களும் நான் வாசித்திருக்கிறேன் தமிழர் பண்பாடு, வரலாறு எனும் புத்தகத்தில் சென்னையில் இருந்தப்ப அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பே படித்திருக்கிறீர்களா? நான் ஜீவி சார்தான் இதெல்லாம் நன்கு அறிந்திருப்பார் என எண்ணினேன். அவரது இலக்கிய பாடல், நிகழ்வு அதற்கேற்ற கதை பதிவுகளின் ரசிகன் நான்.

      நீக்கு
  7. பழனி தவறு, பூழி என்பதே சரி என்று இதனை வைத்துச் சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  8. இந்தியா பூராவையும் தமிழர்கள் ஆண்டனர் என்கிற கூற்று புன்னகைக்க வைக்கிறது.  பேரரசு என்று சில கிராமங்கள் சேர்ந்த அரசைச் சொல்வது போல என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  9. திரு. சாமி சிதம்பரனார் அவர் எழுதிய புத்தகம்தான் நான் வாசித்தது. அதுதானா நெல்லை? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிதம்பரனாரும்?

    சிதம்பரனார் என்ற பெயர் அதன் கீழ் தகவல்கள் என்பதை வாசித்ததும் அதனால் கேட்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கி மு 7500  கி மு 6000 போன்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன.  பெரிய ஆராய்ச்சிதான் செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்... துடிசைக்கிழார் பல்வேறு அதற்கு முந்தைய வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு எழுதியிருக்கிறார். கொஞ்சம் அதீதம் என்று தோன்றியது. கண்ணதாசனே இவரது நூலை அடிப்படையாக வைத்து நாவல் எழுதியிருக்கிறார்.

      நீக்கு
  11. மன்னார் கோவில் இரண்டாவது மூன்றாவது படங்கள் -உள்ப்ரகாரங்கள் - கவர்கின்றன. 

    அரசர்கள் காலம் - நேராக நின்று எடுத்திருக்கலாம்!  அந்த மூன்று படங்களுமே சரியாக படிக்க முடியாமல் ஸைட் வியூவில் எடுத்திருக்கிறீர்கள்.  வெளிச்சம் காரணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிச்சம்தான் காரணம். முதலில் அந்தப் படங்களை எடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் சேரர் வரலாறு சில பகுதிகள் போகும். அதனால் வைத்துக்கொண்டேன்.

      நீக்கு
  12. கைகளில் என்ன
    ஏந்தியிருந்தாளோ
    அந்தக் கல் மங்கை!
    களவாடிச் சென்று விட்டார்கள்
    கயவாணிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைகளில் என்ன
      ஏந்தியிருந்தாளோ
      அந்தக் கல் மங்கை!
      முன்கை இரண்டையும் 
      முற்றாக வெட்டி
      களவாடிச் சென்று விட்டார்கள்
      கல்நெஞ்சக் 
      கயவாணிகள்.

      நீக்கு
    2. ஆஹா சூப்பர் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    3. காதலித்த காலத்தில் உன் இரு
      கைகளால் என்னை அணைத்து
      என் மனம் உன்னிடமே கரைந்த பிறகு
      விட்டுவிட்டுச் சென்றுவிட்டாயே
      குற்றம் செய்தது உன் கரங்களல்லவா?
      கொடுத்த தண்டனையைப்
      புரிந்துகொள்வாயா?

      நீக்கு
    4. வந்திட்டீங்களா காணலையேன்னு பார்த்தேன் நெல்லை

      ஹா...இதென்ன யாரைக் குத்தம் சொல்றீங்க!!!!!!!!பெண்ணையா ஆணையா?

      பெண் விட்டுப் போனாளா? ஹாங்க் நாங்க இங்க ஒரு காலவரையற்ற புரட்சியே செய்திடுவோம்!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    5. உங்கள் வரிகளையும் ரசித்தேன் நெல்லை

      கீதா

      நீக்கு
    6. இந்தக் கோயிலில் இத்தகைய சிலைகள் பாழ்படுத்தப்பட்டிருப்பது கண்டு மனம் வருந்தியது. இன்னொன்று எழுத நினைத்தேன்... சரியான இடம் இது இல்லையோ என்று தோன்றுவதால் எழுதலை. சிலை சாலிட் ஆக இல்லாமல் உள்ளீடு அற்று சில இடங்களில் இருந்தது.

      நீக்கு
    7. அஞ்சலி தேவி,ஜெமினி கணேஷன் நடித்த படம் ஒன்றில் அஞ்சலி தேவியின் கைகள் வெட்டப்படும் .அவர் ஆடல் மகளிர் மன்னரை மணந்த குற்றத்தால் அவர் மீது வீண்பழி சுமத்தி அரண்மனை குரு எம்.ஆர். ராதா தண்டனை அளித்து நாட்டை விட்டு துரத்துவார்.
      அது நினைவுக்கு வந்து வெட்டினார்களோ!

      நீக்கு
    8. சில கோயில்களில் முக்கியமான சிலைகளை கம்பி தடுப்புக்குள் வைத்து விடுகிறார்கள் . உடைபடாமல் இருக்குமே!

      நீக்கு
  13. ​உங்களை புகைப்படம் எடுத்தது யார்? "தெய்வமா"?

    பிரகாரங்களில் கோலங்கள் புதிதாக தெரிவதால் கவனிப்பு இருக்கிறது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். உங்களுக்கும் தெரியுமா!!! அட!!!!!

      "தெய்வமா"கத்தான் இருக்கும்!!

      நெல்லை உங்களை நல்லா இழுத்திருக்கோம்!!!

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம், அதில் எவ்வளவு விஷயங்கள் நிறைந்திருக்குன்னு பாருங்க. அன்பு மரியாதை....இது கலாய்த்தல் அல்ல நிஜமாகவே சொல்கிறேன்...

      நான் அதற்கு நெல்லையை உளமார பாராட்டுகிறேன். நான் ரசித்த ஒன்றும் கூட

      கீதா.

      நீக்கு
    3. மனைவிதான் எடுத்தார். பல நேரங்களில் கோயிலில் நான் இருந்ததற்கான புகைப்படம் அவளே எடுப்பாள். பதிவில் பகிர்வதால் அவளிருக்கும் படங்கள் இடம் பெறாது.

      நீக்கு
    4. மனைவி மிக நல்லவர். எந்த ஜோசியரைப் பார்த்தாலும் அவர் ஜாதகம் பார்த்துவிட்டு, அவரால்தான் என் வாழ்வு ஏற்றம் பெற்றது என்பார். அதனால் எனக்கு அவள் 'தெய்வம்'தான்.

      நீக்கு
  14. இராஜகோபால சுவாமி கோயில் பார்த்து பல பல வருஷங்கள் ஆகிவிட்டன. இன்று உங்க படங்கள் மூலம் நினைவு படுத்திக் கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கோயிலில் அப்போது இப்படி எல்லாம் எழுதி வைத்திருக்கவில்லை. இப்ப வாசித்து அறிய முடிகிறது.

    கோயில் கொடிமரம் மற்றும் இருபுறத் தூண்கள் படங்களில் அழகாக வந்துள்ளது இல்லையா?//

    நான் சொல்ல வந்தேன் நீங்களே கேட்டுட்டீங்க. ரொம்ப அழகா வந்திருக்கு செம.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அதற்கு அடுத்த படங்களும் ரொம்ப அழகான வடிவங்கள். கைகள் உடைந்திருக்கின்றன...எவ்வளவு அழகான வடிவங்கள் இப்படிச் சிதைந்திருக்கின்றன...

    படிகளில் யாளி சிம்மம் அவ்வளவு அழகா வடிவமைச்சிருக்காங்க. இடையில் துளைகளுடன் எப்படி இப்படி என்று எண்ண வைக்கின்றன

    ஒரு ரிங்க் போல அதற்குள் வாலோ தும்பிக்கை போலவோ ஒன்று நுழைந்து....எப்படி? இதே போலதான் கட் இல்லாமல் வளையத்துக்குள் வளையம் என்று இங்கு தலகாடு கோயிலில் இருந்ததே வைத்தியநாதேஸ்வரர் கோயிலில்

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வர்ணகலாபத் தாயார்//

    பெயரை ரொம்ப ரொம்ப ரசித்தேன், நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வடக்கு திசைபூழி வான்கீழ் தென்காசி

    குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்

    ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்

    சேரனாட் டெல்லையெனச் செப்பு

    இதற்குக் கீழ் பழனி தவறு பூழின்னு கொடுத்திருக்கீங்க பாடலில் பூழியைச் சிவப்பு பண்ணிருக்கீங்க ...அப்ப அது பழனி வடக்கில் என்பதா...

    இப்ப பழனி இருக்கும் இடம்? கோழிக்கோடு தெக்க கடல் எல்லைன்னு அர்த்தமா?

    அப்ப பழனி என்று எப்ப மாறியது? பழம் நீயப்பா என்றுதானே நாம அறிந்தது கதையும் பாடலும் என்று!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. வர்ணக்கலாபத் தாயார் கீழ் படம் செம....ரொம்ப ரசித்தேன் நல்லா எடுத்திருக்க்கீங்க நெல்லை

    சுத்தமாவும் இருக்கு

    மஞ்சள் நூல் கண்டு மாலையோ? இல்லை சந்தன குண்டு மாலையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  20. படங்கள் தகவல்கள் ரொம்பச் சிறப்பாக இருக்கின்றன நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அழகான படங்கள்
    சிறப்பான குறிப்புகள் ...

    பதிவு சிறப்பு..

    பதிலளிநீக்கு
  22. சமூக விரோதிகளால் சிதைக்கப்பட்ட பொக்கிஷங்கள்
    எத்தனையோ.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!