28.6.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் –நெல்லைத்தமிழன்

 

ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி 

இராஜேந்திர சோழன் வரலாற்றைப் படித்துக்கொண்டிருந்தபோது, சோழர் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட ராஜேந்திர விண்ணகரம் என்ற கோயிலைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. இந்தக் கோயிலை, ராஜேந்திரன் சார்பாக பாண்டிய நாட்டை ஆண்டுவந்த சுந்தரச் சோழன் எடுப்பித்தான் என்று சொல்லியிருந்தார்கள். நெல்லைச் சீமையில் எந்தக் கோயில் இது என்று பார்த்தபோது, மன்னார்கோயில் என்ற இடத்தில் இருக்கும் இராஜகோபால ஸ்வாமி கோயில்தான் அது என்பது தெரிந்து எனக்கு மிகுந்த ஆச்சர்யம்.

இந்தக் கோயிலுக்குப் பலமுறை நான் சென்று தரிசித்திருக்கிறேன். முதன் முதலில் என்னுடைய சித்தியைப் பார்ப்பதற்காக நான் கோடகநல்லூர் சென்றிருந்தபோது அவர்தான் இந்தக் கோயிலில்தான் குலசேகர ஆழ்வார் திருவரசு இருக்கிறது, போய் தரிசனம் செய் என்று சொன்னார். அதன்பிறகு எப்போது நெல்லைச்சீமைக்குச் சென்றாலும் இந்தக் கோயிலைத் தரிசிப்பேன்.

சோழர் வரலாறு எழுதும் இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தக் கோயிலின் படங்களையும் இதே தொடரிலேயே பகிர்ந்துவிடலாம் என்று தோன்றியது.

சோழ தேசத்தில் ராஜமன்னார்குடி மற்றும் காட்டுமன்னார்குடி (கடலூர் மாவட்டம்) என்று இரண்டு கோயில்கள் உண்டு. கோயில் என்ற சொல்லை தெலுங்கு மொழியில் குடி என்று குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு ஊர்களும் விஜயநகர மன்னர்கள் காலத்திற்கு முன்பு மன்னார்கோயில் என்றே அழைக்கப்பெற்றன.  இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோயில் என்று ஒரு கோயில் உண்டு. இந்த மூன்று மன்னார் கோயில்களும் திருவில்லிபுத்தூர் ரங்கமன்னார் மற்றும் துவாரகை அரசனான கண்ணபிரான் திருக்கோலங்களை முன்னிறுத்தி வழிபடப்பெறும் கோயில்களாகும்.  ராஜமன்னார்குடியை தட்சிண துவாரகை என்று அழைப்பர்.

இது பற்றி எழுத நான் சில பல வரலாற்று நூல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, நம் தமிழர் வரலாறு பற்றி ஒரு பகுதியைப் படிக்க நேர்ந்தது.   இந்த நூலை எழுதியவர், துடிசைக்கிழார் என்ற பெயர் கொண்ட சிதம்பரம் பிள்ளை அவர்கள். (சிதம்பரனார் என்று எழுதியிருக்கிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்).

அவருடைய எண்ணவோட்டத்தில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருந்தாலும் அதனை இந்தப் பகுதியில் எழுதுகிறேன்.

புறநானூற்றில் (இந்த நூலின் காலம் கிமு 1ம் நூற்றாண்டிலிருந்து கிபி 5ம் நூற்றாண்டுவரை என்கிறார்கள்), காரிகிழார் பாடியுள்ள பாடலில்,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்"

இந்தப் பாடல் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர். இந்தப் பாடலின் பொருள் என்ன?

வடக்கில் பனிபடர்ந்த பெரிய நீண்ட மலையையும் (இமயமலை), தெற்கே அச்சம் தரும் குமரி முனை வரையும், கிழக்கே கடற்பகுதியையும் (வங்காள விரிகுடா), மேற்கே பழைமையான கடற்கரைப் பகுதியையும் (அரபிக் கடல்) கொண்டுள்ளது பண்டைத் தமிழகம் என்று குறிப்பிடுகிறது. இமயமலை கடலினின்று வெளிக்கிளம்பி, ஒரு எல்லையாக அமைந்த பிறகு, அந்தப் பகுதியில் மூவேந்தர்களில் முதலில் சேரமன்னன், சேர நாட்டினரைக் குடியேற்றினான். அதனால் சேர மன்னனுக்கே ‘இமயவரம்பன்’ என்ற பட்டப்பெயர் கிடைத்தது. அவன் அத்துடன் நிறுத்தாமல், அதன் வடபுறத்தே இருக்கும் வானவர் நாடாகிய திபெத்தையும் வென்று அடிமைப்படுத்தியதால் அவனுக்கு ‘வானவரம்பன்’ என்ற பட்டமும் கிடைத்ததாம்.  ஆனால் நாம் இதனை, தமிழர் பண்பாடு வடபுலத்தும் பரவியிருந்தது என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது துடிசைக்கிழார் கருதுவதுபோல, பாரதம் முழுவதுமே தமிழர்கள் நிறைந்திருந்தனர் என்றும் புரிந்துகொள்ளலாம்.

 பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

சிலப்பதிகாரத்தில் ‘காடுகாண் காதை’யில் இந்த வரிகள் வருகின்றன. இதில் கூறவருவது, பஃருளி ஆறும், குமரித் தொடர் மலையும் கடல் கோளில் அழிந்துபட்டன. அதனால் அவற்றைத் தவிர, வட திசையில் கங்கை, இமயம் முதல் தென் திசை வரை ஆண்டவன் பாண்டிய மன்னன் என்கிறது.

கவிச் சக்கரவர்த்தி கம்பருடைய தனிப்பாடல் திரட்டில் வரும் மூன்றாவது பாடலை மாத்திரம் கொடுத்துள்ளேன்.

வடக்கு திசைபூழி வான்கீழ் தென்காசி

குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்

ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்

சேரனாட் டெல்லையெனச் செப்பு. (3)

(பாடல் திரட்டில் பழனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறு. பூழி என்பதே சரியானது)

துடிசைக்கிழார் சொல்லவரும் வரலாற்றை மிகச் சுருக்கமாக எழுதுகிறேன். உங்களுக்குத் தலைச்சுற்றல் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது. 

தமிழர்கள் இமயமலைக்கு அப்பாலும் பரவியிருந்தார்கள். கிமு 9000ல், ஆரியர்கள் காகேசியா மலைப்பகுதியிலிருந்து கைபர், காபூல் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். எதிர்த்த தமிழ்க்குடிகளை அழித்து முன்னேறினர். மிஞ்சிய தமிழர்கள் தெற்குப் பகுதியை நோக்கி நகர்ந்தனர். அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அரக்கர்கள்’ என்று குறிப்பிடப்படும் Red Indians of America  தமிழ்நாடு புகுந்து திரிபுரம், அஹோபிலம், அரதைப் பெரும்பாழி, இலங்கை போன்ற பல்வேறு இடங்களில் அரசை நிலைநாட்டி ஆண்டுவந்தனர். அந்த அரக்கர் மரபினர் தக்கன், இரணியன், மகாபலி, புலத்தியன், கார்த்தவீர்யார்ச்சுனன்,  புலத்தியனின் பேரர்களான இராவணன், கும்பகர்ணன், விபீடணன், கம்சன் சிசுபாலன் போன்ற பலரும் அடக்கம்.  இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள் (அதான் இந்தியாவே தமிழகம்னு சொல்லியாச்சே).  அப்போது, இந்திய நாடு, 56 தேசங்களாகப் பிரிக்கப்பட்டு, கோசல நாட்டு அயோத்தியில் மத்திய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. திருமாலின் அவதாரங்கள் இந்த அசுரர்களை அழிப்பதற்காகத்தான் நிகழ்ந்தது. அதுபோல, சேர சோழ பாண்டியர்களும் இந்த 56 இராச்சியங்களில் ஒன்றானார்கள்.

 

கிமு 7500ல் பாண்டிய நாட்டு முதுகுடுமிப் பெருவழுதி என்பவன், ஆரிய அரசர்களின் மற்றும் ஏனைய தமிழ் அரசர்களின் உதவிகளைப் பெற்று 2000 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அரக்கர் சாம்ராஜ்யங்களை ஒழித்து கொற்கையை அரச இருக்கையாகச் செய்தான். தனக்கு உதவிய ஆரியர்களை தென்னாட்டில் குடியமர்த்தினான். அப்படி வந்தவர்கள்தாம்  பிரகச்சரணர் (இதற்கு அர்த்தம் விரைவாக முன்னால் வந்தவர்கள்), அட்டசகசரர் (எண்ணாயிரவர்), தில்லை மூவாயிரவர், திருச் செந்தில் ஆறாயிரவர், நாங்கூர் நாலாயிரவர், திருவெண்காடு ஈராயிரவர், சீரங்கத்தார் முதலியோர்கள்.

இந்தியா முழுவதும் தமிழ் பரவியிருந்தது. ஆனால் ஆரியர்கள் நுழைந்ததும், விந்தியப் பகுதிக்குத் தெற்கே மொழிக்கலப்பு ஆகி கிமு 7500ல் தமிழிலிருந்து ஆந்திர கன்னட மொழிகள் பிரிந்தன. ஆரிய நாகரீகம் விந்திய மலைக்குத் தெற்கும் பரவவே, கிமு 6805ல் ஆரம்பிக்கப்பட்ட இடைச்சங்கத்தில் மாபுராணம், பூதபுராணம் என்ற இலக்கண நூல்கள் ஏற்படலாயின. அவைகளில் ‘பார்ப்பன இயல்’ என்ற பிரிவு வகுக்கப்பட்டது. கிமு 6000ல், தொல்காப்பியர் செய்த தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நூல்கள் இந்த மாபுராணம் மற்றும் பூதபுராணம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

துடிசைக்கிழார், பல நூல்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். கிமு 30,000 ஆண்டு என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாக எனக்குத் தோன்றியது. ஆனால் தொல்லியல்துறையில் பொறுப்பில் இருந்த ஜெகதீசன் ஐயர் என்பவர் எழுதிய புராதான இந்தியா என்ற நூலும் மேற்கோள் காட்டப்படுகிறது. வெளிநாட்டவர் எழுதிய நூல்கள் அல்ல. (இந்த வரி கீதா சாம்பசிவம் மேடத்திற்காக)

இவ்வளவு போதும் இந்த வாரத்துக்கு.

 

 

மன்னார் கோயில் நுழைவாயில்

 

கோயிலுக்கு கைங்கர்யங்கள் செய்தவர்களாக இருப்பார்கள்.

 

 

 

 

 

 

கோயில் கொடிமரம் மற்றும் இருபுறத் தூண்கள் படங்களில் அழகாக வந்துள்ளது இல்லையா?

பெண்களில் சிலைகள் என்பதற்காக இவற்றை இங்கு போடவில்லை. மிக அழகிய சிலைகள், சிதைந்திருக்கின்றன (எந்தப் புண்ணியவான்களாலோ). நெல்லை கிருஷ்ணாபுரத்தில், வில்லை உடைய அர்ஜுனன் சிலையில், கல்லில் வில்லைச் செதுக்கிய திறமையைப் பாராட்டும் மனம் இல்லாமல், எவ்வளவு ஸ்டிராங்க் இந்த வில் என்று சிலர் தட்டிப் பார்த்து வில்லை உடைத்திருக்கின்றனர். நம் மக்கள் மனம் அப்படிப்பட்டது.

படிகளில் யாளி, சிம்மம் போன்றவற்றை எப்படி வடித்திருக்கிறார்கள் பாருங்கள்.

வர்ணகலாபத் தாயார்

 


 

 

 

 

 

இராம லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமான்.

 

 

 

 

 

 

ஒரு முறை நான் சென்றிருந்தபோது கும்பாபிஷேகத்திற்காக கோவிலைச் சீர் செய்துகொண்டிருந்தார்கள். பிறகு சம்ப்ரோக்க்ஷணம் ஆன பிறகு சென்றபோதும் படங்கள் எடுத்திருந்தேன். அதனால்தான் காலம், கோயில் தோற்றங்கள் படங்களில் வித்தியாசத்துடன் தெரிகின்றன.

அடுத்த வாரம் தொடர்வோம்…. நம் சரித்திரத்தையும்.

(தொடரும்) 

91 கருத்துகள்:

  1. திருநெல்வேலி வரை வந்திருக்கீங்க அப்ப டக்குனு கன்னியாமரியையும் எட்டிப் பாப்பீங்கதானே? எங்கூர்ல ஒரு சோழ விநாயகர் இருக்கார்லா....அப்ப எங்கூர்லயும் சோழர் என்னா செஞ்சாங்கன்னு சொல்லலாம்லா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். பொதுவா திருநெல்வேலிக்கு போனால், நவ திருப்பதி, திருக்குறுங்குடி வானமாமலை.... திருச்செந்தூருடன் முடிந்துவிடும். திருவண்பரிசாரம் தொடங்கி திருவட்டார், தாணுமாலயன், கன்யாகுமரி செல்வதில்லை.

      நீக்கு
  2. எங்க சித்தியும் கோடநல்லூர் கோயில் பக்கத்துல கோயிலுக்கு சித்தாப்பா தன்னால முடிஞ்ச கைங்கர்யம் செய்து கொண்டிருக்காங்க அங்க செட்டில் ஆனதுலருந்து. கோயில் திருவிழா கோயில் நிகழ்வுகள்னா அங்கருந்து எங்கும் வரமாட்டாங்க கூடியவரை.

    என் சித்தி குடும்பத்திற்கும் உங்க சித்தப்பா சித்தி அறிமுகம் உண்டு. உங்களையுமே குறிப்பிட்டிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஒரு தடவை சொல்லியிருக்கீங்க. நான் அவர்களைப் பார்த்த நினைவு இல்லை. அடுத்த முறை சந்திக்கணும்.

      நீக்கு
  3. நானும் கோடகநல்லூர் இரு முறை போயிருக்கிறேன்.

    குடி என்று குறிப்பிடுகிறார்கள்// தெய்வம் குடியிருக்கும் கோயில் என்று சொல்வதுண்டே அட அப்ப தமிழ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடியிருப்பு பகுதி என்ற சொல்லும் உண்டே. குடி என்பதை இருப்பிடம், மக்கள் என தமிழில் புரிந்துகொள்ளலாம். தெலுங்கில் இறைவன் இல்லம் எனப் பொருள் பெறும்.

      நீக்கு
  4. புறநானூறு, சிலப்பதிகாரம் பாடல்கள் வாசிக்கும் போது கண் முன் காட்சிகள்.

    கம்பர் பாடலும் கொடுத்து நல்ல ஆராய்ச்சி செய்திருக்கீங்க நெல்லை. தேடித் தேடி வாசித்து பொருத்தமாகத் தொகுத்துக் கொடுக்கறீங்க சூப்பர். பாராட்டுகள் நெல்லை.

    எல்லை பற்றிய இன்றைய பாடல்கள் நல்ல தகவல்கள். இப்படித்தானே நாம தமிழ் மக்கள் எங்கெல்லாம் இருந்திருக்கோம்னும் தெரியவருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. தமிழர்கள் பரந்துபட்டு வாழ்ந்தருக்கிறார்கள்.

      நீக்கு
  5. கோவில் - குடி ஒப்பீடு நன்று.   

    காரிகிழார் பாடலின் சந்த நயம் கவர்கிறது!  குன்றுகள் இருக்கும் பாதையில் குதிரையில் செல்வது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அதன் கீழ் தகவல்களும் நான் வாசித்திருக்கிறேன் தமிழர் பண்பாடு, வரலாறு எனும் புத்தகத்தில் சென்னையில் இருந்தப்ப அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பே படித்திருக்கிறீர்களா? நான் ஜீவி சார்தான் இதெல்லாம் நன்கு அறிந்திருப்பார் என எண்ணினேன். அவரது இலக்கிய பாடல், நிகழ்வு அதற்கேற்ற கதை பதிவுகளின் ரசிகன் நான்.

      நீக்கு
  7. பழனி தவறு, பூழி என்பதே சரி என்று இதனை வைத்துச் சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதனை வைத்து //

      எதனை வைத்து

      நீக்கு
    2. ஆசிரியர் என்ன சொல்றார்னா, தமிழர்கள் பூழி எல்லை வரையில் பரவி இருந்தார்கள். அதனால் பூழிதான் எல்லை. பழனி என்பது தமிழகத்தின் உள்ளேயே வந்துவிடுகிறது. அதனால் அது தவறு என்று சொல்கிறார். அதுவே சரி என்பது கேரள (சேர தேசத்தின்) மேப்பை, பதிவில் கொடுத்திருப்பதைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

      நீக்கு
  8. இந்தியா பூராவையும் தமிழர்கள் ஆண்டனர் என்கிற கூற்று புன்னகைக்க வைக்கிறது.  பேரரசு என்று சில கிராமங்கள் சேர்ந்த அரசைச் சொல்வது போல என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்னவோ அந்தக் கூற்றில் சிறிது அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம் என்பர்.

      நீக்கு
  9. திரு. சாமி சிதம்பரனார் அவர் எழுதிய புத்தகம்தான் நான் வாசித்தது. அதுதானா நெல்லை? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிதம்பரனாரும்?

    சிதம்பரனார் என்ற பெயர் அதன் கீழ் தகவல்கள் என்பதை வாசித்ததும் அதனால் கேட்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிதம்பரனார் என்பது அவர் பெயர். ஆனால் அந்தப் புத்தகம்தான் நீங்க வாசித்தீர்களா என்பது எனக்குத் தெரியாது (ஹா ஹா ஹா)

      நீக்கு
  10. கி மு 7500  கி மு 6000 போன்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன.  பெரிய ஆராய்ச்சிதான் செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்... துடிசைக்கிழார் பல்வேறு அதற்கு முந்தைய வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு எழுதியிருக்கிறார். கொஞ்சம் அதீதம் என்று தோன்றியது. கண்ணதாசனே இவரது நூலை அடிப்படையாக வைத்து நாவல் எழுதியிருக்கிறார்.

      நீக்கு
  11. மன்னார் கோவில் இரண்டாவது மூன்றாவது படங்கள் -உள்ப்ரகாரங்கள் - கவர்கின்றன. 

    அரசர்கள் காலம் - நேராக நின்று எடுத்திருக்கலாம்!  அந்த மூன்று படங்களுமே சரியாக படிக்க முடியாமல் ஸைட் வியூவில் எடுத்திருக்கிறீர்கள்.  வெளிச்சம் காரணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிச்சம்தான் காரணம். முதலில் அந்தப் படங்களை எடுத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் சேரர் வரலாறு சில பகுதிகள் போகும். அதனால் வைத்துக்கொண்டேன்.

      நீக்கு
  12. கைகளில் என்ன
    ஏந்தியிருந்தாளோ
    அந்தக் கல் மங்கை!
    களவாடிச் சென்று விட்டார்கள்
    கயவாணிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைகளில் என்ன
      ஏந்தியிருந்தாளோ
      அந்தக் கல் மங்கை!
      முன்கை இரண்டையும் 
      முற்றாக வெட்டி
      களவாடிச் சென்று விட்டார்கள்
      கல்நெஞ்சக் 
      கயவாணிகள்.

      நீக்கு
    2. ஆஹா சூப்பர் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    3. காதலித்த காலத்தில் உன் இரு
      கைகளால் என்னை அணைத்து
      என் மனம் உன்னிடமே கரைந்த பிறகு
      விட்டுவிட்டுச் சென்றுவிட்டாயே
      குற்றம் செய்தது உன் கரங்களல்லவா?
      கொடுத்த தண்டனையைப்
      புரிந்துகொள்வாயா?

      நீக்கு
    4. வந்திட்டீங்களா காணலையேன்னு பார்த்தேன் நெல்லை

      ஹா...இதென்ன யாரைக் குத்தம் சொல்றீங்க!!!!!!!!பெண்ணையா ஆணையா?

      பெண் விட்டுப் போனாளா? ஹாங்க் நாங்க இங்க ஒரு காலவரையற்ற புரட்சியே செய்திடுவோம்!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    5. உங்கள் வரிகளையும் ரசித்தேன் நெல்லை

      கீதா

      நீக்கு
    6. இந்தக் கோயிலில் இத்தகைய சிலைகள் பாழ்படுத்தப்பட்டிருப்பது கண்டு மனம் வருந்தியது. இன்னொன்று எழுத நினைத்தேன்... சரியான இடம் இது இல்லையோ என்று தோன்றுவதால் எழுதலை. சிலை சாலிட் ஆக இல்லாமல் உள்ளீடு அற்று சில இடங்களில் இருந்தது.

      நீக்கு
    7. அஞ்சலி தேவி,ஜெமினி கணேஷன் நடித்த படம் ஒன்றில் அஞ்சலி தேவியின் கைகள் வெட்டப்படும் .அவர் ஆடல் மகளிர் மன்னரை மணந்த குற்றத்தால் அவர் மீது வீண்பழி சுமத்தி அரண்மனை குரு எம்.ஆர். ராதா தண்டனை அளித்து நாட்டை விட்டு துரத்துவார்.
      அது நினைவுக்கு வந்து வெட்டினார்களோ!

      நீக்கு
    8. சில கோயில்களில் முக்கியமான சிலைகளை கம்பி தடுப்புக்குள் வைத்து விடுகிறார்கள் . உடைபடாமல் இருக்குமே!

      நீக்கு
    9. கண்கள் செய்த பாவம் உன்னைக் 
      கண்டது 
      கண்டதில் என் மனம்
      உன்பால்  சென்றது 
      கலைந்த மனம் காதலில் 
      அலைந்தது 
      கடவுளுக்கு நேர்ந்த அடியாளை 
      உடைமையாக்கிக் கொள்ள 
      அடியார் நீங்கள் நினைத்த 
      பாவத்திலிருந்து நீங்க 
      நான் உங்களிடமிருந்து
      நீங்கினேன்.
      மனம் செய்த குற்றத்துக்கு 
      கைகளுக்கு தண்டனையா?

      தலை வலிச்சா வாலுக்கு 
      மருந்தா 
      மனம் செய்த தப்புக்கு 
      கைகள் இழப்பா..

      நீக்கு
    10. //கண்கள் செய்த பாவம்//- ஶ்ரீராம்... மிகப் பிரமாதமாகவும் ரொம்ப பொருத்தமாகவும் எழுதியிருக்கீங்க. மிகவும் ரசித்தேன். கவிதை, ஒரு கதையையே சொல்கிறது. மனப்பூர்வமான பாராட்டுகள்.

      நீக்கு
    11. நல்லதொரு அருமையான பொருத்தமான கற்பனை ஸ்ரீராம்.

      நீக்கு
  13. ​உங்களை புகைப்படம் எடுத்தது யார்? "தெய்வமா"?

    பிரகாரங்களில் கோலங்கள் புதிதாக தெரிவதால் கவனிப்பு இருக்கிறது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். உங்களுக்கும் தெரியுமா!!! அட!!!!!

      "தெய்வமா"கத்தான் இருக்கும்!!

      நெல்லை உங்களை நல்லா இழுத்திருக்கோம்!!!

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம், அதில் எவ்வளவு விஷயங்கள் நிறைந்திருக்குன்னு பாருங்க. அன்பு மரியாதை....இது கலாய்த்தல் அல்ல நிஜமாகவே சொல்கிறேன்...

      நான் அதற்கு நெல்லையை உளமார பாராட்டுகிறேன். நான் ரசித்த ஒன்றும் கூட

      கீதா.

      நீக்கு
    3. மனைவிதான் எடுத்தார். பல நேரங்களில் கோயிலில் நான் இருந்ததற்கான புகைப்படம் அவளே எடுப்பாள். பதிவில் பகிர்வதால் அவளிருக்கும் படங்கள் இடம் பெறாது.

      நீக்கு
    4. மனைவி மிக நல்லவர். எந்த ஜோசியரைப் பார்த்தாலும் அவர் ஜாதகம் பார்த்துவிட்டு, அவரால்தான் என் வாழ்வு ஏற்றம் பெற்றது என்பார். அதனால் எனக்கு அவள் 'தெய்வம்'தான்.

      நீக்கு
  14. இராஜகோபால சுவாமி கோயில் பார்த்து பல பல வருஷங்கள் ஆகிவிட்டன. இன்று உங்க படங்கள் மூலம் நினைவு படுத்திக் கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாளையங்கோட்டை கோயிலா? சில பல இராஜகோபால ஸ்வாமி கோயில்கள் உண்டு.

      நீக்கு
  15. கோயிலில் அப்போது இப்படி எல்லாம் எழுதி வைத்திருக்கவில்லை. இப்ப வாசித்து அறிய முடிகிறது.

    கோயில் கொடிமரம் மற்றும் இருபுறத் தூண்கள் படங்களில் அழகாக வந்துள்ளது இல்லையா?//

    நான் சொல்ல வந்தேன் நீங்களே கேட்டுட்டீங்க. ரொம்ப அழகா வந்திருக்கு செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். உங்கள் வீட்டிற்கு வருவது தள்ளிப்போகிறது. விரைவில் வரணும். அதுக்குள்ள நீங்க, இனிப்புகள் செய்வது எப்படீன்னு கத்துக்கணும்.

      நீக்கு
  16. அதற்கு அடுத்த படங்களும் ரொம்ப அழகான வடிவங்கள். கைகள் உடைந்திருக்கின்றன...எவ்வளவு அழகான வடிவங்கள் இப்படிச் சிதைந்திருக்கின்றன...

    படிகளில் யாளி சிம்மம் அவ்வளவு அழகா வடிவமைச்சிருக்காங்க. இடையில் துளைகளுடன் எப்படி இப்படி என்று எண்ண வைக்கின்றன

    ஒரு ரிங்க் போல அதற்குள் வாலோ தும்பிக்கை போலவோ ஒன்று நுழைந்து....எப்படி? இதே போலதான் கட் இல்லாமல் வளையத்துக்குள் வளையம் என்று இங்கு தலகாடு கோயிலில் இருந்ததே வைத்தியநாதேஸ்வரர் கோயிலில்

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வர்ணகலாபத் தாயார்//

    பெயரை ரொம்ப ரொம்ப ரசித்தேன், நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வர்ணகலாபம் - வர்ணத்துடன் கூடிய தாயார் மூலவர். கலாபம் என்பது பொதுவாக முஸ்லீம் படையெடுப்பைக் குறிக்கும். அதனை கலாபக் காலம் என்று சொல்வர்.

      நீக்கு
  18. வடக்கு திசைபூழி வான்கீழ் தென்காசி

    குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்

    ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்

    சேரனாட் டெல்லையெனச் செப்பு

    இதற்குக் கீழ் பழனி தவறு பூழின்னு கொடுத்திருக்கீங்க பாடலில் பூழியைச் சிவப்பு பண்ணிருக்கீங்க ...அப்ப அது பழனி வடக்கில் என்பதா...

    இப்ப பழனி இருக்கும் இடம்? கோழிக்கோடு தெக்க கடல் எல்லைன்னு அர்த்தமா?

    அப்ப பழனி என்று எப்ப மாறியது? பழம் நீயப்பா என்றுதானே நாம அறிந்தது கதையும் பாடலும் என்று!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூழிதான் சரியான இடம். பழனி என்று போட்டிருப்பது ஏடு எழுதியவர் தவறாக இருந்திருக்கும்.

      அது சரி.. பழனி பஞ்சாமிருதம் சாப்பிட்டிருக்கீங்களா? அந்தக் காலத்தில் இருந்ததற்கும் தற்போது கிடைப்பதற்கும் பெரும் வேறுபாடு. இப்போ அவ்வளவு நல்லா இல்லை. எல்லாம் காண்டிராக்டர் வேலை போலிருக்கு

      நீக்கு
    2. பழனி மலைக்குக் கீழே கலையம்புத்தூர் என்னும் பெயரில் இரு கிராமங்கள் உண்டு. அதில் ஒன்றில் நாங்க குடி இருந்த மேலாவணி வீட்டு மாமியின் பிறந்த ஊர். அப்பா, அண்ணா, தம்பி 62 அல்லது 63 ஆம் ஆண்டு பழனி போகும்போது (அண்ணாவின் உபநயனத்துக்கு முன்னால் பிரார்த்தனைகள் நிறைவேற்ற) அங்கே தான் தங்கினார்கள். கலையம்புத்தூரில் ஒரு வீட்டில் தான் பஞ்சாமிர்தம் தயார் பண்ணுவாங்களாம். அங்கிருந்து கீழே உள்ள ஆறுபடை வீட்டுக்கும், மேலே உள்ள கோயிலுக்கும் போயிட்டுப் பஞ்சாமிர்தம் ஒரு பாத்திரத்தில் போட்டுக்க் கொடுத்தாங்க. அப்பா எடுத்து வந்தார். அந்தச் சுவை இப்போ இல்லை. முழுக்க முழுக்கச் சிறுமலையில் உள்ள வாழையின் பழங்களில் இருந்து சுத்தமான மலைத் தேன் விட்டு, சுத்தமான நெய் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம். இது பாரம்பரிய முறைப்படி பழம், தேன்,பால் நாட்டுச் சர்க்கரை, நெய் ஆகிய ஐந்து மட்டுமே சேர்த்துச் செய்யப்பட்டது. இப்போதைய பழக்கலவை அல்ல. இப்போல்லாம் கல்கண்டு போட்டுடறாங்க. முன்னெல்லாம் அது இருக்காது.

      நீக்கு
  19. வர்ணக்கலாபத் தாயார் கீழ் படம் செம....ரொம்ப ரசித்தேன் நல்லா எடுத்திருக்க்கீங்க நெல்லை

    சுத்தமாவும் இருக்கு

    மஞ்சள் நூல் கண்டு மாலையோ? இல்லை சந்தன குண்டு மாலையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடத்திற்கு ஒரு முறை ஜேஷ்டாபிஷேகத்தின்போது (அதாவது அந்த வருடம் ஆராதனங்களில் கோயில் முறைகளில் ஏற்பட்ட தவறுகளுக்காக செய்யப்படும் பிராயச்சித்த அபிஷேகங்கள்) இந்த மாதிரி மஞ்சள் நூல் கண்டு மாலைகளை ஒவ்வொரு தெய்வ உருவுக்கும் அணிவிப்பர். ஜேஷ்டாபிஷேகம் முடிந்ததும் பிரசாதமாக முக்கியமானவர்களுக்குத் தருவர். அவர்கள், தங்கள் வீட்டில், தினப்படி ஆராதனை செய்யும்போது கழுத்தில் அணிந்துகொண்டு ஆராதனம் செய்வர்.

      அத்தகைய நூல்கண்டு மாலை அது.

      நீக்கு
  20. படங்கள் தகவல்கள் ரொம்பச் சிறப்பாக இருக்கின்றன நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. வாழிய நலம். துரை செல்வராஜு சார்... கந்த சஷ்டி கவசத்துல, ர்ரர்ரர்ரர ரிரிரிரி...என்றெல்லாம் வருமிடங்களில் சரவணபவ என்பதை எழுத்துக்களை இடம் மாற்றி எழுதி, க.ச.க படிப்பவர்களை முப்பத்தாறு முறை படித்த பயனைக் கொடுக்கிறார் என ஒரு காணொளி பார்த்தேன். உங்களுக்குத் தெரியுமா?

      நீக்கு
    2. கந்தஷ்டி கவசம் பொருளுடன் முகநூலிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த ரரரரர வெல்லாம் ஒலி எழுப்பும் மந்திரங்கள் என்பதோடு சரவணபவ என்னும் ஷஷ்டாக்ஷரமே இங்கே ரஹணபவச என்றும் ரிஹணபவச என்றும் விணபவ சரஹ, நிபவசரஹண என்றெல்லாம் மாறி மாறி ஒலிப்பதில் மிகுந்த பலன்கள் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதே போல் தான் ஓம் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷரமும்.

      நீக்கு
    3. கந்தசஷ்டி கவசம் என்பது கந்தஷ்டி கவசம்னு வந்திருக்கு.. :(

      நீக்கு
    4. கீசா மேடம்.. சமீபத்தில்தான் இதனைப்பற்றி ஒரு காணொளியில் கண்டேன். அதுவரை நான் அவ்வப்போது சேவித்தாலும், இது எனக்குத் தோன்றியதில்லை.

      நீக்கு
    5. ஐயும் கிலியும், அடைவுடன் சௌவும் என்பதும் மந்திர உச்சாடனமே. இதன் பொருளைப் பொதுவெளியில் பகிரக் கூடாது என்பார்கள். ஆனால் ஐம், க்லீம் என்னும் மந்திரங்கள் என்றவரை தெரியும். ஒரு சிலர் ரொம்ப ஆழமாகப் போகாதீங்கனு எங்கிருந்தோ வந்து எச்சரிக்கை மணி அடிப்பாங்க. ஸ்ரீவித்யா பற்றிப் படிச்சுட்டு எழுதினப்போவும் அந்த மாதிரிச் சொன்னாங்க. முக்கியமாய் என்னோட இரு இளைய நண்பர்கள் சந்திரமௌலி கணபதியும், மதுரைக்காரர் தான், அம்பியின் தம்பி தக்குடுவும். இருவருமே தேவி உபாசகர்கள். மௌலியின் வீட்டில் தினமும் ஸ்ரீசக்ர பூஜை உண்டு எனக் கேள்வி. நான் போனதில்லை. "பெண்"களூரில் தான் இருக்கார்.

      நீக்கு
    6. கந்த சஷ்டி கவசத்தைக் கொஞ்சம் ஆழமாகப் படிச்சேன். படிச்சிருக்கேன் என்றாலும் பொதுவெளியில் எனக்குத் தெரியும் என்பதாகக் காட்டிக் கொண்டதில்லை. அது சரி, மற்ற ஐந்து கவசங்களும் படிச்சிருக்கீங்களா? ஆறுபடை வீடுகளுக்கும் ஒவ்வொரு கவசம் உண்டே!

      நீக்கு
    7. ஒரு தடவை திருச்சியில் இருந்த ஜோசியர் (என் அப்பாவுக்கு மிகவும் தெரிந்தவர்) அவர்களுக்கு நான் மேட்டூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு உதவி செய்தேன் என்று நினைவு. அவர் என் ஜாதகத்திற்கு, நான் சஷ்டி அன்று பிறந்தவன் என்பதால் கந்த சஷ்டி கவசம் செவ்வாயில் பாராயணம் செய்துவரும்படிக் கூறினார். அதனை மாத்திரம் படித்துக்கொண்டேன். உங்களுக்குத் தெரியும் வைணவர்கள் பொதுவாக கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணுவதில்லை என்று.

      நீக்கு
    8. கந்தசஷ்டி கவசம் பற்றி நிறைய எழுதியிருக்கீங்க. ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து சொல்லணும் என்று மனதில் எண்ணம் வருகிறது. (சஷ்டிகவசம் பாராயணம்). பூம்பாறை (கொடைக்கானல்) அறுமுகனைச் சேவித்திருக்கிறேன்.

      நீக்கு
    9. சொன்னால் நம்புவீங்களோ இல்லையோ! :(
      மதுரையில் திருப்புகழ் சங்கம் உண்டு. அதில் திருப்புகழ் மணி என்பவர் திருப்புகழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பார். நம்ம சேஷூ(சேஷகோபாலன்)வுக்கெல்லாமும் அவர் தான் குரு ஆரம்ப காலத்தில். அவர் சொல்லிப் பத்து வயசில் சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சேன். அதிலிருந்து தொடர்கிறது. மாமியாரெல்லாம் பயங்கர எதிர்ப்பு. அதில் பில்லி, சூனியம் வலாஷ்டிகப் பேய்கள்னு எல்லாம் வருது. இதெல்லாம் நாம சொல்லக் கூடாது. நீ என்னடான்னா ஒரு பக்கம் பாரதி பாட்டுனு சொல்றே, இன்னொரு பக்கம் ஆண்டாள்னு யாரையோ பத்திக் கொண்டாடறே. இப்போ என்னன்னா சொல்லவே கூடாததை எல்லாம் சொல்லிண்டு இருக்கே? துளசி பூஜை எல்லாம் ஆத்திலே பண்ணக் கூடாது. பெருமாள் கோயிலிலே தான் பண்ணலாம் என்றெல்லாம் தடை போட்டிருக்காங்க. ரகசியமாகத் துளசி பூஜை (இதை உங்களுக்கு முன்னாடியே சொல்லி இருப்பேன்), விளக்கு ஏத்துவேன். மனதுக்குள்ளாக சஷ்டி கவசம் சொல்லிப்பேன். ராத்திரி படுக்கும் முன்னர் சஷ்டி கவசம் சொல்லாமல் படுத்தது இல்லை.

      நீக்கு
  22. அழகான படங்கள்
    சிறப்பான குறிப்புகள் ...

    பதிவு சிறப்பு..

    பதிலளிநீக்கு
  23. சமூக விரோதிகளால் சிதைக்கப்பட்ட பொக்கிஷங்கள்
    எத்தனையோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டவர் தவிர, நம்மவர்களும். அதனால்தான் கிருஷ்ணாபுரம் போன்ற இடங்களில் சிலைகளுக்கு இரும்புக் கம்பிவலை போட்டிருக்கிறார்கள்.

      நீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.. வாழ்க வளமுடன்.

      நீக்கு
    2. //வெளிநாட்டவர் எழுதிய நூல்கள் அல்ல. (இந்த வரி கீதா சாம்பசிவம் மேடத்திற்காக)//
      நான் வெளிநாட்டவர் ஆராய்ச்சியை எல்லாம் ஒத்துக்கொள்வதாக உங்களுக்கு யார் சொன்னது? கால்டுவெல் செய்த பித்தலாட்டமும், வீரமாமுனி செய்தவையும் பற்றிப் பள்ளி நாட்களிலேயே தெரிந்து கொண்டிருக்கேன். ஆகவே அந்த வரி தேவை இல்லாதது. மு.ராகவையங்கார், சதாசிவப் பண்டாரத்தார், இன்னொரு ராகவையங்கார், உ.வே.சா. போன்றவர்கள் சொல்வதைத் தான் நான் எடுத்துக் கொண்டிருக்கேன். இது உங்களுக்குப் புரியாமல் போனதும் அதிசயம். :( இன்னும் சொல்லப் போனால் எல்லோரும் போற்றிப் புகழும் பரமார்த்தகுருவும் சீடர்களும் நூல் எதனால் எழுதப்பட்டது என்பதையும் அறிந்திருந்தேன்.

      நீக்கு
    3. பொதுவாகத் திருநெல்வேலியும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் நகரங்களும் சுத்தமாகவே காணப்படும். இப்போதும் அப்படித்தான். திருச்செந்தூர் விதி விலக்காக இருக்கலாமோ என்னமோ! கோயில்களும் நல்ல பராமரிப்புடனே இருக்கும். கோடகநல்லூருக்கு நாங்க காலங்கார்த்தாலே போயிருந்தோம். நியமிக்கப்பட்டப் பரம்பரை ஓதுவார் திருமுறைகள் ஓதக் காலை முதல் காலம் நடந்தது. ஓதுவாருக்கு நேர்ந்தவற்றை எங்களிடம் விளக்கமாகச் சொன்னார். இங்கே எல்லாம் எழுத முடியாது என்பதோடு நாங்க போனது 2007 ஆம் ஆண்டில் எங்க அப்பு பிறக்கும் முன்னர்.

      நீக்கு
    4. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. என்னுடைய புரிதல்படி, நீங்க இந்தியாவைப் பற்றி வெளிநாட்டவர் எழுதிய புத்தகங்களை அப்படியே எடுத்துக்க மாட்டீங்க. அவங்களில் பலரும் புரிதல் இல்லாமல், உள்நோக்கத்துடன் எழுதுவதால். அதனால் இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் எழுதியதை ஆதாரமாக்க் கொண்டு என்பதால் அப்படி எழுதினேன். தவறில்லையே

      நீக்கு
    5. //கோடகநல்லூருக்கு நாங்க காலங்கார்த்தாலே போயிருந்தோம். நியமிக்கப்பட்டப் பரம்பரை ஓதுவார் திருமுறைகள் ஓதக்// நாங்கள் கோடகநல்லூர்க்கு பலமுறை சென்றிருக்கிறோம். என் சித்தப்பா சித்தி அங்குதான் இருந்தார்கள் (சித்தப்பா இருக்கிறார்).

      புஷ்கரம் சமயத்தில் மாத்திரம்தான் நாங்கள் சிவன் கோயில் சென்றோம். அந்தச் சமயத்தில் எந்த எந்த சிவன் கோயில்களெல்லாம் திறந்திருந்ததோ அங்கெல்லாம் சென்றோம். மிக அருமையான கோயில் கோடகநல்லூர் சிவன் கோயில்.

      நீக்கு
    6. நவதிருப்பதிகளும் மிக அருமையான கோயில்கள். எல்லாம் டிவிஎஸ் காரங்க புண்ணியத்திலே கோயில் பராமரிப்பும் சரி, பட்டாசாரியாரின் தினப்படி சௌகரிய அசௌகரியங்களும் சரி நல்ல நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அதே போலச் சோழ நாட்டின் திருப்புறம்பியம் அருகே உள்ள இன்னம்பூரும் சரி,(பெருமாள் கோயில்) இந்துப் பத்திரிகைக்காரங்களின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அவங்க தான் பெருமாள் கோயிலைப் பார்த்துக்கறாங்க. சென்றமுறை மாமா இருக்கையில் பையர் வந்தப்போ இன்னம்பூர் சிவன் கோயிலுக்குப் போயிட்டு வரச் சொல்லிப் போனாங்க. எழுத்த/றிநாதரைப் போய் தரிசனம் செய்தால் குழந்தைக்குப் பேச்சு/படிப்பு வரும் என்பதால் அதிகம் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போவாங்க. இங்கேயே விஜயதசமிக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பதும் உண்டு.

      நீக்கு
    7. நவதிருப்பதிகளும் மிக அருமையான கோயில்கள். எல்லாம் டிவிஎஸ் காரங்க புண்ணியத்திலே கோயில் பராமரிப்பும் சரி, பட்டாசாரியாரின் தினப்படி சௌகரிய அசௌகரியங்களும் சரி நல்ல நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அதே போலச் சோழ நாட்டின் திருப்புறம்பியம் அருகே உள்ள இன்னம்பூரும் சரி,(பெருமாள் கோயில்) இந்துப் பத்திரிகைக்காரங்களின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அவங்க தான் பெருமாள் கோயிலைப் பார்த்துக்கறாங்க. சென்றமுறை மாமா இருக்கையில் பையர் வந்தப்போ இன்னம்பூர் சிவன் கோயிலுக்குப் போயிட்டு வரச் சொல்லிப் போனாங்க. எழுத்த/றிநாதரைப் போய் தரிசனம் செய்தால் குழந்தைக்குப் பேச்சு/படிப்பு வரும் என்பதால் அதிகம் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போவாங்க. இங்கேயே விஜயதசமிக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பதும் உண்டு.

      நீக்கு
    8. கீசா மேடம்... இன்னம்பூர் போர்ட் பாத்திருக்கிறேன். அப்போ நீங்க என் நினைவில் வருவீங்க (நீங்கதான் இன்னம்பூரார் னு எழுதியிருந்தீங்க). ஆனால் இன்னும் அந்தக் கோயில் (சிவன் மற்றும் பெருமாள் கோயில்) போகலை. திருப்புறம்பியமும் போகணும்.

      நீக்கு
  25. ராஜமன்னார்குடி மற்றும் காட்டுமன்னார்குடி, அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோயில் மூன்றும் பார்த்து இருக்கிறேன்.

    மன்னார்கோயில் அண்ணன் அம்பாசமுத்திரத்தில் இருந்த போது பார்த்து இருக்கிறேன்.

    அனைத்து கோயில்களும் அருமையாக இருக்கும்.

    மன்னார்கோயில் பார்த்து பல வருடம் ஆச்சு.
    மீண்டும் உங்கள்பதிவின் மூலம் பார்த்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.

    //கோயில் கொடிமரம் மற்றும் இருபுறத் தூண்கள் படங்களில் அழகாக வந்துள்ளது இல்லையா?//

    மிக மிக அழகாய் இருக்கிறது.

    படிகளில் யாளி, சிம்மம் போன்றவற்றை அருமையாக வடித்திருக்கிறார்கள்.

    இராம லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமான்.வர்ணகலாபத் தாயார் எல்லாம் அருமை. திருநெல்வேலி பக்கம் உள்ள சில கோயில்களில் இப்படி வர்ணத்தில் பார்த்து இருக்கிறேன். கூடல் பெருமாள் கோயிலிலும் இப்படி வர்ணங்கள் இருக்கும்.அந்த கால மூலிகைகலவை கொண்டு வர்ணம் தயாரித்து இருப்பார்கள் போல காலத்தை வென்று இன்றும் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ முயற்சி எடுத்தும் வீரநாராயண ஏரியையும், வீரநாராயணப் பெருமாளையும் பார்க்கவே முடியலை. கோமதி அரசு ஒரு முறை மாயவரத்தில் இருந்து ஆடிப்பெருக்குக்கு அங்கே போய்விட்டு வந்ததைப் பதிவிட்டிருந்தார். ராஜமன்னார்குடியைப் பல தரம் பார்த்துட்டேன். மன்னார்குடிக்காரனுக்கு அங்கே தான் எல்லாப் பெருமையும். மற்ற ஊர்களான வடுவூரிலும், ஆறுபாதி விளநகரிலும் இந்த மன்னார்குடிக்காரனின் கூடவே பிறந்தவர்கள் இருந்தாலும் வடுவூரில் ராமர் வந்ததும் அவர் தான் பிரபலம் ஆகிவிட்டார். இவர்களைப் பற்றி உ.வே.சா. ஒரு பயணக்கட்டுரை எழுதி இருக்கார். நினைவு மஞ்சரி ஒண்ணில் பார்க்கலாம். ஆனால் இந்த மன்னார் கோயில் ராஜகோபாலசுவாமியைப் பத்தித் தெரியாது. இன்னிக்குத் தான் பார்த்தேன்.

      நீக்கு
    2. அம்பாசமுத்திரம் போகலை. இத்தனைக்கும் கல்லிடையிலிருந்து கிட்டேத் தான். ஆனால் அந்த ஊர் ஓட்டலுக்குப் போனோம். பாபநாசம் குருக்கள் அங்கே சாப்பிடச் சொன்னார். அதனால் போனோம். ஊருக்குள் போகலை. இந்தப் பெருமாள் கோயில் உற்சவம் பற்றி என் நண்பர் அம்பி விரிவாக எழுதி இருக்கார். அதெல்லாம் எப்போவோ. அம்பியின் பெரியப்பா இந்த ஊரில் இருப்பதாகவும்(இருந்திருக்கார்) சொல்லி இருக்கார்.

      நீக்கு
    3. வாங்க கோமதி அரசு மேடம்... வர்ணகலாபக் கோயில்கள் (அதாவது மூலவர் சுதையில் செய்து வர்ணம் அடித்திருப்பார்கள்) மதுரை அருகே (ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில்) திருத்தண்கால் திவ்யதேசத்திலும் இன்னும் பல திவ்யதேசங்களிலும் உண்டு.

      இங்கெல்லாம் நீங்கள் சென்றிருக்கிறீர்களா? அருமை. அரசு சார், அந்தக் கோயில் பற்றி படங்களுடன் எழுதியிருக்கிறாரா (கோயில் அமைப்பு போன்று)

      நீக்கு
    4. கீசா மேடம்... உவெசா, இராஜமன்னார்குடியில் இராஜகோபாலஸ்வாமி கையில் இருப்பதைப் பார்த்து இலக்கிய வரியைப் புரிந்துகொண்டேன் என்று எழுதியிருப்பார்.

      திருநெல்வேலி பக்கம் வந்திருந்தால் இந்த மாதிரி நிறைய கோயில்கள் உண்டு. நீங்க மதுரைக்குத் தெற்கே வந்த மாதிரித் தெரியவில்லையே (சும்மா கலாய்த்தேன்.. இராஜவல்லிபுரம் செப்பறை... தென்காசி, சித்திரசபை போன்ற பலவற்றிர்க்கு நீங்கள் சென்றிருக்கிறீர்கள் என்று தெரியும்)

      நீக்கு
    5. /கல்லிடையிலிருந்து கிட்டேத் தான். // கல்லிடைக்குறிச்சி வரை போயிருக்கீங்க. நீங்க பிரம்மதேசம் கோயில் போனீங்களா? அதைப் பற்றியும் எழுதப்போகிறேன்.

      நீக்கு
  26. காரிகிழார் பாடியுள்ள பாடல், துடிசைக்கிழார் , மற்றும் சிலப்பதிகாரம் எல்லாம் படித்து வரலாறுகளை சொன்னதற்கு நன்றி. தொன்மை வாய்ந்ததமிழ்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

    கோயில் மிக சுத்தமாக பராமரிக்கப்படுவது தெரிகிறது.
    பிரகாரம் எல்லாம் டியூப் லைட் போட்டு வெளிச்சமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம். ரொம்ப நல்லா பராமரிக்கறாங்க. ஆனால் பாருங்க..அவ்வளவு பெரிய கோயில். பக்தர்கள் வருகை அவ்வளவு இல்லை. ஊரில் உள்ளவர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். என்ன அநியாயம் பாருங்க.

      நீக்கு
  27. பின்னரும் சில முறை திருநெல்வேலிக்குச் சென்றாலும் தென்காசி, திருநெல்வேலி நெல்லையப்பர், செப்பறை, கிருஷ்ணாபுரம், குற்றாலம் போன்றவற்றோடு திரும்பிட்டோம். ஒவ்வொரு தரமும் வெவ்வேறு காரணங்களுக்காகப் போயிருந்தோம். பாபநாசம் கோயிலும் அதன் சுற்றுப்புறமும் என்னை மிகவும் கவர்ந்தது. முதல் தரம் போனப்போக் கல்லிடைக்குறிச்சியில் அம்பியின் வீட்டுக்குப் போயிருந்தோம். தொந்தி விளாகம் தெருவில் உள்ளது. பிறகு கனடியன் வாய்க்கால் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டு ஊருக்குள்ளே ஓடும் வாய்க்காலையும் பார்த்தோம். எனக்கும் இப்படியானதொரு சூழ்நிலையில் வசிக்க ஆசைதான். குறுக்குத்துறை சுப்ரமண்யர் அந்த மார்ச்/ஏப்ரல் மாத வெயிலிலேயே நதிக்குள் இருப்பதும், பின்னர் வெள்ளம் வரும் ஆனி, ஆடி மாதம் வெளியே வந்து அவர் தங்கும் கோயிலையும் காட்டினார்கள். பார்த்தோம். பின்னர் வரணும்னு பேசிக் கொண்டோம். அகத்திய மலைக்கு ஏறணும்னு நினைச்சுப் போனால்(பொதிகை மலைப்பக்கம்) இப்போக் கூடாது, துணை இல்லை. வனப்பாதுகாப்பு அதிகாரிக்குச் சொல்லி உத்தரவெல்லாம் வாங்கணும்னு சொல்லிட்டாங்க. :(

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். உங்கள் பதிவு வழி ஆலய தரிசனம் கிடைத்தது.

    உடைக்கப்பட்ட சிலைகள் - வேதனை. எத்தனை எத்தனை இழந்திருக்கிறோம் கால ஓட்டத்திலும், சில மூடர்களாலும்... நேற்று சென்றிருந்த ஒரு கோயிலில் கூட இப்படியான சிலைகள் கேட்பாரற்றுக் கிடந்தன - பார்க்கும்போதே வேதனை.

    படங்களைக் கண்டு எழுதிய கவிதைகள் மனதைத் தொட்டன. எழுதிய ஸ்ரீராம், நெல்லை ஆகியோருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ்.

      வடபுலத்தில் (ருக்மணி துவாரகை போன்று) கடல் காற்றினால் அரிப்பினால் கொஞ்சம் பழுதுபட்ட நிலையில் இருக்கும் அழகிய சிற்பங்களைக்குட மனது ஏற்றுக்கொண்டுவிடும். ஆனால் மனிதர்கள் வேண்டுமென்றே அழிப்பதை எப்படி ஏற்க இயலும்?

      நன்றி உங்கள் பாராட்டிற்கு.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!