நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 63
ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி
இந்த வாரம், தமிழக சரித்திரத்திற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு, குலசேகர ஆழ்வார் பற்றிப் பார்ப்போம். காரணம், இந்தக் கோயில் இராஜேந்திர விண்ணகரம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டிருந்தாலும், தற்போது குலசேகர ஆழ்வார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. யார் இவர், ஏன் இந்த ஊருக்கு வந்தார் என்று காணவேண்டாமா?
சேரல் என்றால் மலை அடுக்கு, மலைத் தொடர் என்று பொருளாகும். கடலுக்கும் மலைக்கும் இடையில் இருந்த நாட்டைச் சேர்ந்தவர்களை சேரல்+அர் என்று சேர்த்து சேரலர் என அழைத்தனர். பிற்காலத்தில் கன்னட மொழி பிரிந்தபோது, சேரலர் என்பது கேரளர் எனத் திரிந்துவிட்டதாம் ( சென்னி-கென்னி என்று திரிவது) பொறை என்றாலும் மலை அடுக்கு என்றுதான் பொருள். அதனால் பொறையர் என்றும் அவர்கள் வழங்கப்பட்டனர்.
சேரமான் பெருமாள் வரலாறு எழுத ஆரம்பிக்கும்போதே, நான் படித்தவற்றில் சிலவற்றைப் பகிராமல் இருப்பதா என்று தோன்றுவதால் எழுதுகிறேன். அதனால் எங்கோ கிளை பிரிகிறதே என்று நினைக்கவேண்டாம்.
கேரளாவில், கொல்லம் ஆண்டு என்றுதான் உபயோகப்படுத்துவர் (ஹிஜ்ரி என்பதுபோல). கிபி 822ம் ஆண்டு அரபிக்கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக கொல்லம் (கொய்லோன்) கடலில் மூழ்கிவிட்டது (நம் பூம்புகார் போல). 825ம் ஆண்டு பாரசீக வியாபாரியான மருவன் சபரீசோ என்பவனால் புதிய கொல்லம் கட்டப்பட்டது. அதுவே கொல்லம் முதல் ஆண்டு. ஹிஜ்ரி ஆண்டு என்பது முகம்மது நபி, மெக்காவிலிருந்து மெதீனாவிற்கு புலம் பெயர்ந்த கிபி 622லிருந்து கணக்கிடப்படுகிறது. அதாவது கிபி 622தான் ஹிஜ்ரி முதல் ஆண்டு. இந்தியாவில் சக வருஷம், விக்கிரம வருஷம் மற்றும் கலியுக வருஷம் என்ற ஆண்டுக் கணக்குகள் இருக்கின்றன. ஆனால் கல்வெட்டுகளில் அரசனின் இத்தனையாவது அரசாட்சி ஆண்டில் என்று குறிக்கப்பட்டது. கல்வெட்டுகளிலும் சக, சாலிவாகன, என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் 78ஐக் கூட்டினால் பொது ஆண்டுக் கணக்கு வந்துவிடும். அப்போ, தமிழர்களுக்கு என்று ஆண்டுக் கணக்கு கிடையாதா? தமிழர்கள் தனி இனம் என்ற கொள்கை உடையவர்கள் 1920லிருந்து இந்த மாதிரி தமிழர்களுக்கு ஒரு ஆண்டு இருக்கவேண்டும் என்று முனைந்து, திருவள்ளுவர் கிமு 31ம் ஆண்டில் பிறந்தவர் என்ற கணிப்பைக் கொண்டு, திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்றை உருவாக்கினார்கள். பின்பு வந்த அரசுகள், திருவள்ளுவர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் நிறுவ முயல்வதைக் கேலிக்கூத்தாக்கிவிடும் என்று நினைத்து திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டார்கள்.
சேரர்கள் வரலாற்றைப் படிக்கும்போது, ‘மருமக்கள் தாய முறை’ வருகிறது. இது கேரள அரசர்கள் அல்லது மற்ற சமூகத்தில் உண்டான முறை அல்ல. இரண்டே சமூகங்கள் இந்த மருமக்கள் தாயமுறையைக் கொண்டிருந்தன. கேரள நாயர் சமூகம் மற்றும் முஸ்லீம்களில் மாப்பிள்ளை சமூகம். இதனை கொஞ்சம் ஆராய்ந்தால், நாயர் சமூகத்திற்குச் செய்த அநீதி தெரியவரும்.
நம்பூதிரி பிராமணர்களில், மூத்த வாரிசு, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் மூத்தவனுக்கு அடுத்தவர்கள் அப்படித் திருமணம் செய்துகொள்ள இயலாது. ஆனால் அவர்கள் நாயர் சமூகத்தினரிடம் தொடர்பு வைத்துக்கொள்ளலாம். இது இரண்டு சமூகத்தினரிடையே தவறாகத் தெரியவில்லை. இதில் இருந்த சிக்கல், நாயர்களின் சொத்துரிமை பற்றியது. பிறந்த குழந்தைக்கு கணவன் யார் என்பது சரியாகத் தெரியாது, ஆனால் தாய் யார் என்பது நிச்சயம் தெரியும் என்பதால் மருமக்கத்தாய முறை நாயர் குடும்பங்களில் இருந்தது. இதன்படி அவர்கள் எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருப்பார்கள். மூத்தவர் காரணவர் என்று அழைக்கப்பட்டார். அவர் குடும்பச் சொத்துக்களைப் பராமரிப்பார். அவர்கள் குடும்பம் தறவாடு என்று அழைக்கப்பட்டது. சொத்துக்கு வாரிசு, சகோதரியின் குழந்தைகள் என்பதே மருமக்கத்தாயம். இந்த முறை, நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த வேளாளர் சமூகத்தாலும் பின்பற்றப்பட்டது. 1925ல்தான் நிலைமை மாறியது (வாரிசு உரிமைச் சட்டம் வந்த பிறகு)
இரு வாரங்களுக்கு முன்பு சேர நாட்டுப் பிரிவுகளைக் கொடுத்திருந்தேன். அதில் பூழி, குடம், கற்கா, குட்டம் மற்றும் வேணாடு ஆகிய ஐந்தில் ஆரியர் கலப்பு நிறைய இருக்கிறது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர் (நம்பூதிரிகள் அதிகம்). ஆரிய மொழியும் தமிழ் மொழியும் (இதனை ஆதித் தமிழ் மொழி, அதாவது நாம் தற்காலத்தில் சிதைத்து உபயோகிக்காத தூய தமிழ்) கலந்த மொழிதான் சேரர் நாட்டில் பேசப்பட்டிருந்து வந்தது. அதனை கிபி 17ம் நூற்றாண்டில், துஞ்சத்து எழுத்தச்சன் என்ற அறிஞர், மலையாளம் என்ற பெயர் கொடுத்து மொழிச் சீர்திருத்தம் செய்து அதற்கு எழுத்துக்களைக் கொண்டுவந்தார். அதற்கு முன்பு தமிழ் வட்டெழுத்துக்களே கல்வெட்டுகளில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தன. (புலரி, வைகும் நேரம் போன்ற பல தமிழ் சொற்கள் மலையாள மொழியில் என்னை ஆச்சர்யப்படவைத்திருக்கின்றன)
கிபி 642ல் பெருமாக்கோதையார் என்ற இயற்பெயருடன் மகோதைப் பட்டினத்தில் (கொடுங்களூர், திருவஞ்சிக்களம் பகுதி) முதலாம் சேரமான் பெருமாள் பிறந்தார். அந்தச் சமயத்தில் பொறையன் வம்சம் சேரநாட்டை ஆண்டுவந்த து. கிபி 462 முதல் கிபி 667 வரை பொறையன் வம்சமே அரசனாக இருந்துவந்தது. கிபி 648ல் அரசுக்கு வந்த செங்கோற் பொறையன், சிவபக்தி நிறைந்தவன். அவனது சம காலத்தில் பாண்டிய நாட்டை கூன்பாண்டியன் எனப்படும் நின்றசீர் நெடுமாறன்/மாறவர்மன் அரிகேசரி/சுந்தரபாண்டியன் ஆண்டுவந்தான் (640-670). திருஞானசம்பந்தர், அப்பர் இருவரும் இவன் காலத்தவர்கள். சேர மன்னனுக்கும் பாண்டியனுக்கும் நெல்வேலி என்ற இடத்தில் நடந்த போரில் சேர மன்னன் தோற்கடிக்கப்பட்டான். 667ல் செங்கோட்டையில் நடந்த போரிலும் அறவே செங்கோற் பொறையன் தோற்கடிக்கப்பட்டதும், அரசாட்சியில் மனம் இழந்து துறவு பூண்டான். (உதியன் வம்சம் மற்றும் பொறையன் வம்சம் சேர நாட்டை ஆண்ட வம்சம்). அவனுக்கு வாரிசு இல்லாததால், அமைச்சர் பெருமக்கள் உதியன் வம்சத்தைச் சேர்ந்த பெருமாக்கோதையாரை அரசுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டினார்கள். சிவபக்தி நிறைந்த பெருமாக்கோதையார், இறைவனின் அனுமதி பெற்று அரசனாக ஆனார். இவர் தான் முதலாம் சேரமான் பெருமாள். இவர் சைவ சமயத்தை ஒழுகிவந்தார். இவரது நண்பர், சோழ நாட்டை அப்போது ஆண்டுவந்த பல்லவர் மரபினனான இராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர் என்ற காடவர் கோன் கழற்சிங்கன்.
முதலாம் சேரமான் பெருமாள், அரசினை ஏற்றுக்கொள்ள சிவபெருமானிடம் அனுமதி வேண்டினார் என்று பார்த்தோம். இறைவனின் அருட்கொடையால் எல்லா உயிர்களின் எண்ணவோட்டத்தை அறியும் உணர்வைப் பெற்றிருந்தமையால் இவருக்கு ‘கழறிற்றறிவார்’ என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. தினமும் இவர் சிவபூசை செய்யும்போது பூசை முடிவில் ஒவ்வொரு நாளும் நடராஜரின் சிலம்பொலி ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு நாள் சிலம்பொலி கேட்காததால், தவறு நேர்ந்துவிட்டதோ என்று தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றபோது சிலம்பொலி கேட்க ஆரம்பித்தது. அதனால் இவருக்கு சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது. அதனால், சோழ நாடு சென்று நடராஜரைத் தரிசித்து அவர் மீது பதிகம் இயற்றினார். பிற்பாடு பல சிவத் தலங்களையும் (திருக்குற்றாலம், திருக்கண்டியூர், திருவையாறு, திருநெல்வேலி, திருக்கேதீச்வரம், மாதோட்டம்… என்று பெரிய லிஸ்ட் அது) தரிசனம் செய்து தன் அரசுக்கு மீண்டார்.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள ஓவியத்தில் மேலே உள்ளது முதலாம் சேரமான் பெருமாள் (கழறிற்றரிவார் நாயனார்) என்கின்றனர்.
முதலாம் சேரமான் பெருமாள் வரலாற்றை எழுத ஆரம்பித்தால்,
நாம் எப்போது குலசேகர ஆழ்வார் பற்றிப் பார்க்க முடியும்? அரசாட்சியில் விருப்பமில்லாமல், சிவபக்தி மேலிட,
நம்பி ஆரூரார் என்கிற சுந்தரமூர்த்தி நாயனார் யானை மீது திருவஞ்சிக்களம் வர, இவர் அரசாட்சியை
தன் குமாரனிடம் விட்டுவிட்டு வெண்குதிரை மீதேறி, இருவரும் கைலாயம் சென்றனர் என்பது
வரலாறு.
சுந்தரமூர்த்தி நாயனாருடன் முதலாம் சேரமான் பெருமாள் கயிலை செல்லும் காட்சி.
இவரது குமாரர் தம்பிரான் தோழர் பெருமாள், கிபி 712லிருந்து 754வரை அரசாட்சி செய்தார். தனது 66வது வயதில் மறைந்தார். இவரது ஆட்சியில் சேர நாடு போர்களில்லாமல் அமைதியாக இருந்தது.
இவருக்கு அடுத்த அரசனானவர், இரண்டாம் சேரமான் பெருமாள் என்றழைக்கப்பட்ட குலசேகர ஆழ்வார். அவர் வரலாறு அடுத்த வாரம்தான்.
இரண்டாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசனாக ஆண்ட குலசேகர ஆழ்வார் பரமபதித்தது இந்த மன்னார்கோயில் என்பதும் அங்கு அவருடைய திருவரசு கோயிலின் உள்ளே இருக்கிறது என்பதும் ஆச்சர்யம்தான்.
இதனைக் கருத்தில் கொண்டே திருவரங்கத்தில் இராமானுஜரின் திருவரசு கோயிலுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருந்திருக்குமா?
அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார். காலை வணக்கம்.
நீக்குஆக, கி.மு.31ம் ஆண்டு தமிழ், திருக்குறள் வரிகள் போலத் தான் இருந்திருக்க வேண்டும், இல்லையா?
பதிலளிநீக்குவரிகள் மட்டுமல்ல கி.மு.31-ம் ஆண்டில் வழக்கிலிருந்த தமிழ் சொற்களும்
நீக்குதிருக்குறளில் காணப்படும் சொற்களாகவே இருந்திருக்க வேண்டும், இல்லையா?...
மிக அருமையான சந்தேகம். இது எனக்கு வந்ததனால் வரலாற்று அறிஞர்களின் இந்தக் கூற்று சரியாகத் தோன்றவில்லை. கிபி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது சுலப்பதிகாரம், 6-9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை திவ்யப் பிரபந்தங்கள், திருமுறைகள். கல்வெட்டு மொழியையும் நாம் கணக்கில் கொண்டால் என்னுடையனுமானம் திருக்குறள் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது. திருக்குறளுக்கான கிடைத்த பழைய உரை 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவரான பரிமேலழகர் உரை.
நீக்குவடமொழி வார்த்தையான பூஜை என்பதைத் தான் பூசை என்று சொல்கிறீர்கள் என்றால் அதற்கான தமிழ் வார்த்தை என்ன?
பதிலளிநீக்குவழிபாடு என்று இருந்திருக்கலாமோ? பூசனை என்ற சொல் பூசையின் திரிபு என அனுமானிப்பதால். போற்றி என்ற வார்த்தையும் மனதில் வருகிறது
நீக்குஇடைச்செருகலாக வரும், 'முதலாம் சேரமான் பெருமான் வரலாற்றை எழுத ஆரம்பித்தால்....... பற்றிப் பார்க்க முடியும்' என்ற வரியை எடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குமன்னார்கோயிலைப் பற்றிப் பார்க்கும்போதே குலசேகர ஆழ்வார் வரலாற்றைப் பார்த்துமுடிக்கணும் என்பது என் எண்ணம். சேர்ர் வரலாற்றைச் சுருக்கமாக எழுதினாலும் நீள்கிறது என்ற எண்ணம்தான் காரணம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
பதிலளிநீக்குஆலய வளாகத்தில் முளைத்துக் கிடக்கும் செடிகள்..... வேதனை.
வரலாற்றுச் செய்திகள் தேடித் தேடி தரும் உங்களுக்கு பாராட்டுகள்.
வாங்க வெங்கட் நாகராஜ்.... சென்ற வாரம் மைசூர் அரண்மனையில் குடும்ப உறுப்பினர்கள் குடியிருக்கும் பகுதியில் தரையில் சதுர வடிவ சிவப்புக் கற்கள் பாவியிருப்பதையும், அதன் மூது மூவர் அமர்ந்துகொண்டு இடையில் முளைக்கும் புற்கள் சிறு செடிகளை அதற்கான சட்டுவம் கொண்டு எடுத்துக்கொண்டிருந்ததையும் பார்த்தேன்.
நீக்குகோயில்களில் பக்தர்கள் உழவாரப் பணி செய்தாலொழிய சுத்தம் செய்ய இயலாது. இதற்கு அந்த அந்தப் பகுதி மக்கள் முன்வரவேண்டும்.
படங்கள் அருமை நெல்லை. தொடர் களைகட்டுவதற்கு உயிர் மூச்சாக விளங்குகிறது. பார்ப்பவரையும் மயக்குகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜீவி சார். அனுபவஸ்தரான உங்கள் கருத்து எனக்கு உரமூட்டுகிறது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா... வாங்க துரை செல்வராஜு சார்.
நீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குவாழிய நலம்
நீக்குதெய்வீக தகவல்களுடன் சிறப்பான பதிவு...
பதிலளிநீக்குகண்கவரும் படங்கள்...
மிக்க நன்றி துரை செல்வராஜ் சார்.
நீக்குபடங்கள் இரண்டாம்பட்சமாகிப் போகின்றன. சுவாரஸ்யமான வரலாறு முதலிடம் பிடிக்கிறது. நல்ல உழைப்பு, முயற்சி. பாராட்டுகள் நெல்லை.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். வரலாறு சுவாரசியமாக இருப்பது பற்றி மகிழ்ச்சி. நான் ரொம்பவே சுருக்கித் தருகிறேன்.
நீக்குஸ்ரீராம்! வரலாதுகளில் மாறுபட்ட பார்வைகள் உண்டு. ஆனால் படங்கள் அப்படியல்ல. படத்தில் பார்க்கிறது நேரில் பார்க்கிறமாதிரி. நிறைய வாசிப்பு அனுபவம் கொண்ட வரலாறுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நீங்கள் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் பற்றி உங்கள் பார்வையை பதிவு செய்திருந்தால் எங்களுக்கும் ஏதாவது உபயோகமாக இருந்திருக்கும்.
நீக்குஉண்மைதான் ஜீவி சார்... அந்த அந்த வரலாற்றுப் பகுதிகளுக்கு ஏற்ற மாதிரி படங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும். அப்படி நினைத்துத்தான் படங்கள் கோர்க்கிறேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குசுந்தரமூர்த்தி நாயனாருடன் முதலாம் சேரமான் பெருமாள் கயிலை சென்று முக்தியடைந்தார் என்று நாமிருக்க -
பதிலளிநீக்குஇவர் மீண்டு வந்தார்.. நிலவு இரண்டாக உடைக்கப்பட்டதைக் கண்டு என்ன என்று வினவி, அரபு தேசம் சென்று மதம் மாறி வந்து மசூதி கட்டினார் என்றொரு உருட்டுக் கட்டை கதையும் உண்டு....
துரை செல்வராஜு சார்... அந்த வரலாறும் (கதை அல்ல. நடந்த நிகழ்வு) இந்தத் தொடரில் வரும், தரவுகளோடு
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மன்னார்கோவில் பெருமாள் தரிசனம் சிறப்பாக கிடைத்தது. கோவிலைப் பற்றிய தகவல்களை படங்கள் மூலமாக நன்றாக உணர்த்தியுள்ளீர்கள்.
சேர வரலாறு படித்தறிந்து கொண்டேன். நன்றாக விபரமாக சொல்லியுள்ளீர்கள். அக்கால மன்னர்கள் நல்ல அரசாட்சி யுடன் இறைபக்தியிலும் சிறந்து விளங்கியவர்களாக வாழ்ந்து வந்ததினால், நமக்கு எத்தனை அரிய கோவில்கள், அக் கோவில்களைப் பற்றிய வரலாறுகள் என கிடைக்கின்றன.
பழங்கால சரித்திரத்தை விவரித்துச் சொன்ன உங்களது ஆர்வமும், உழைப்பும் என்னை பிரமிக்க வைக்கின்றன. இதனை எழுதுவதற்கு நீங்கள் எத்தனை செய்திகளை படித்து திரட்டியிருக்க வேண்டுமென்று நினைக்கும் போது, என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை. உங்கள் அசாத்தியமான உழைப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். அடுத்து குலசேகர ஆழ்வாரின் வரலாற்றை தெரிந்து கொள்ள தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி உங்கள் விளக்கமான கருத்துக்கு கமலா ஹரிஹரன் மேடம். பதிவில் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.
நீக்குநாகர்கோயில் பகுதியிலிருந்து கேரளம் ஆரம்பமாகிறது. அதாவது சேர அரசர்கள் கீழிருந்த பகுதி.
சுந்தரமூர்த்தி நாயனாருடன் சேரமான் பெருமாள் கயிலை சென்று முக்தியடைந்தார் என்பது பொய்யா?
பதிலளிநீக்குஇல்லை. குலசேகர ஆழ்வாரின் அடுத்த தலைமுறையில்தான் இந்த அனர்த்தம் நடந்தது. மூன்றாம் சேரமான் பெருமாள் அரசைக் கைப்பற்றி, கேளிக்கை விளையாட்டில் ஈடுபட்டு, முகமதிய பெண்ணின் நட்பால் அவளைத் திருமணம் செய்ய முஸ்லீமானான். எல்லோராலும் வெறுக்கப்பட்டு மெக்காபோய் கடைசியில் ஓமானில் இறந்தான்.
நீக்குஇதுபற்றி ரொம்ப கவலைப்பட வருத்தப்பட ஒன்றும் இல்லை. கண் முன்னே, சைவம் தழைக்க உழைத்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் மரபில் உதித்த கண்ணதாசன் வாரிசில் ஒன்று கிறித்துவ மத்த்தையும் ஒன்று முஸ்லீம் மத்த்தையும் தழுவியிருக்காங்களே
நீக்குஅப்படியா? எனக்கு இது செய்தி? யார் அவங்க? விசாலி கண்ணதாசனா? கமால் (கமல்) கண்ணதாசனா?
நீக்குவிசாலி கண்ணதாசன் கிறித்துவராக மாறி, ஜெனிஃபர் என்று பெயர் வைத்துக்கொண்டார். இன்னொரு மகன், டாக்டர் முஸ்தபா கமால் பாஷா. முஸ்லீம் மதத்தைத் தழுவியவர்.
நீக்குசேரமான் பெருமாள் கயிலையில் பாடிய் ஞான உலா நூல் ஸ்ரீ ஹரிஹரபுத்திரன் மூலமாக பூமிக்கு வந்ததே தவிர சேரமான் பெருமாள் திரும்பவில்லை...
பதிலளிநீக்குஅறுபத்து மூவருள் அவரும் ஒருவர்..
ஆமாம். முதலாம் சேரமான் பெருமாள் வரலாறு சுவாரசியமானது. சேரர் குலம் முழுதுமே சைவ சமயப் பற்று கொண்டவர்கள், ஒருவரைத் தவிர (இல்லை... இருவரைத் தவிர. இரண்டாமவர் தன்னுடைய தவறுகளால் மதம் மாறவேண்டியதாகிவிட்டது)
நீக்குஸ்ரீ ஹரிஹரபுத்திரன் ஞானஉலா ஓலைச்சுவடியுடன்
பதிலளிநீக்குபூமிக்கு வந்து அமர்ந்த தலம் திருப்பட்டூர்..
அப்படியா? எனக்குத் தெரியாத தகவல். மிக்க நன்றி.
நீக்குசேர சரித்திரம் பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றல்ல. சரித்திரத்தை அரசர்களின் வரிசையில் மிகுந்த சிரமப்பட்டு தொகுத்து வழங்குவது பாராட்டுக்குரியது. படங்கள் மன்னார் கோயில் படங்கள் என்பதை தெளிவாக சுட்டியிருக்கலாம். காரணம் தஞ்சைக் கோயில் படம் இங்கு ஏன் என்று முதலில் திகைத்தேன்.
பதிலளிநீக்குபணி தொடரட்டும்.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். தலைப்பில் இராஜேந்திர விண்ணகரம்-மன்னார் கோயில் என்று இருப்பதால் தனியாகக் குறிப்பிடவில்லை.
நீக்குதஞ்சைக் கோயில் படம்? அப்படி ஏதேனும் தோன்றுகிறதா? சமீபத்தில் நான் ஹளபேடு சென்றிருந்தேன். அங்கிருந்த நந்தியைப் பார்த்து, என்னடா தஞ்சைக் கோயில் போல இருக்கிறதே என்று திகைத்தேன். அவ்வளவு பெரிய நந்தி. (ஒன்றல்ல இரண்டு)
கோவில் படங்களைப் பார்த்தேன்.
பதிலளிநீக்குசித்திரம் பேசுதடி -என்
சிந்தை மயங்குதடி...
சித்திரம் பேசுதடி
என்று ஆரம்பித்தது மனது.
வாங்க ஏகாந்தன் சார். சேரர் வரலாறு தலைசுற்ற வைக்கிறதா? நன்றி
நீக்குசேரமான் பெருமாள் வாரிசுகளைப்
பதிலளிநீக்குபற்றி விவரம் அளித்த நெல்லை
அவர்களுக்கு நன்றி..
இவர்களைப் பற்றி இந்தத் தொடரிலேயே விளக்கமாக வரும் துரை செல்வராஜு சார்.
நீக்குசேரமான் பெருமாள் மற்றும் கவியரசர் வாரிசுகளைப்
பதிலளிநீக்குபற்றி விவரம் அளித்த நெல்லை அவர்களுக்கு நன்றி..
இரண்டையும் ஒப்பீடு செய்யவேண்டாம். ஆனால் கண் முன்னே ஒரு குடும்பம் மாறியதை நாம் பார்க்கும்போது 9ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது ஆச்சர்யம் அளிக்கக்கூடாது.
நீக்குசேரர்கள் வரலாறு அறிந்து கொண்டோம். நன்றி.
பதிலளிநீக்குசேரமான்பெருமாள் சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் செல்லும் காட்சி சிறுவயதில் பாடத்தில் படித்ததுண்டு. .
கோவில் படங்கள் சிறப்பாக உள்ளன.
வாங்க மாதேவி அவர்கள். சுந்தரமூர்த்தி நாயனார் பாடப்புத்தகங்களில் இருந்திருக்கிறாரா? இப்போதும் அது இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஆவல். மிக்க நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம்...வாழ்க வளமுடன்.
நீக்குசனிக்கிழமைக்கான பாசுரப் பகுதியை எழுதிக்கொண்டிருப்பதால் இன்னமும் (9:15) முழித்துக்கொண்டிருக்கிறேன். பொதுவா 8 1/2 க்கு மொபைல் சுவிட்ச் ஆஃப், 9 மணிக்குப் படுத்துவிடுவேன், காலை 4 1/2க்கு எழுந்துகொள்ளணும் என்பதால்
குலசேகர ஆழ்வார் பற்றி படிக்கும் போது
பதிலளிநீக்குசென்னி-கென்னி என்று திரிவது)
என்று படித்ததும்
மாணிக்கவாசகர் அருளி செய்த திருவாசகத்தில் 42 வது பதிகமான "சென்னி பத்து" நினைவுக்கு வந்து விட்டது.
தேவதேவன் மெய் சேவகன்
தென்பெருந்துறை நாயகன்
என்று ஆரம்பிக்கும் பாடலில் (10 பாடல் இருக்கும்)
நிறைவு வரி
"அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே."
ஒவ்வொரு பாடலின் இறு வரி பொலியுமே, திகழுமே, சுடருமே , மலருமே என்று வரும்.
இறைவன் திருவடியில் நம் தலைவைத்து வணங்குவதாலும் , மானிக்கவாசகர் தலைமேல் இறைவன் தன் திருவடியை வைத்த இன்பத்தையும் சொல்லும் பாடல்.
அருமை கோமதி அரசு மேடம்... இப்போது நான் 'ஓடி ஓடி' யில் திளைத்துக்கொண்டிருக்கிறேன்.
நீக்குபதிவு அருமை.
பதிலளிநீக்கு//சேரமான் பெருமாள் வரலாறு எழுத ஆரம்பிக்கும்போதே, நான் படித்தவற்றில் சிலவற்றைப் பகிராமல் இருப்பதா என்று தோன்றுவதால் எழுதுகிறேன். அதனால் எங்கோ கிளை பிரிகிறதே என்று நினைக்கவேண்டாம்.//
நினைக்கவில்லை, அருமையாக விரிவாக சொல்லி வருகிறீர்கள்.
வரலாறு தெரிந்து கொள்வது நல்லது.
நன்றி தங்கள் கருத்துக்கு
நீக்கு//இரண்டையும் ஒப்பீடு
பதிலளிநீக்குசெய்யவேண்டாம்//
இல்லை.. தெரிந்து கொண்டேன்..
முடிந்தவரை தவறாக எழுதிவிட மாட்டேன் துரை செல்வராஜு சார்.
நீக்கு,
பதிலளிநீக்கு//சுந்தரமூர்த்தி நாயனார் யானை மீது திருவஞ்சிக்களம் வர, இவர் அரசாட்சியை தன் குமாரனிடம் விட்டுவிட்டு வெண்குதிரை மீதேறி, இருவரும் கைலாயம் சென்றனர் என்பது வரலாறு.//
திருவஞ்சிக்களத்தில் ஆடி சுவாதி நாளில் நடத்தி காட்டப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிலும் நடத்தி காட்டப்படும்.
இத்தலத்தினை,தேவாரத்தலம் எனக் கண்டு பிடித்து, சுந்தரர்,கயிலை செல்லும் விழாவை ஆரம்பித்தவர் பெரிய புராணத்திற்கு உரை கண்ட கோவை சி. கே. சுப்ரமணிய முதலியார் ஆவார். இவர் நடத்திய தேவார பாடசாலையில் தான் மாமனார் தேவாரம் சொல்லி கொடுத்தார்கள். 80 ஆண்டு காலம், பள்ளியில் ஆசிரிய பணி முடித்து வந்து மாலையில் சொல்லி கொடுத்தார்கள்.
தன் 80 வயது வரை தேவாரம் சொல்லி கொடுத்தார், குழந்தைகள், பெரியவர் அவைவருக்கும். அன்னபூரணி அம்மாள் தேவார பாடசாலை .
நீக்குஅப்படியா. தகவலுக்கு நன்றி. உங்கள் மாமனார் படம் நினைவில் இருக்கிறது. தந்தை வயது வரை தனயன் இல்லையே என்ற எண்ணமும் தோன்றுகிறது.
நீக்கு//ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி//
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அருமை.
மிக துல்லியமாக இருக்கிறது. சிறு வயதில் பார்த்த மன்னார்கோயிலை இப்போது நன் கு தரிசனம் செய்து கொண்டேன்.
//இரண்டாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசனாக ஆண்ட குலசேகர ஆழ்வார் பரமபதித்தது இந்த மன்னார்கோயில் என்பதும் அங்கு அவருடைய திருவரசு கோயிலின் உள்ளே இருக்கிறது என்பதும் ஆச்சர்யம்தான்.//
தெரிந்து கொண்டேன். சாருடன் போய் இருந்தால் சொல்லி இருப்பார்கள்.
4 வது படிக்கும் போது எனது அம்மா, அக்கம் பக்த்து வீட்டு அத்தைகளுடன் போனது விவரம் தெரியவில்லை.
மிக்க நன்றி. நீங்களும் தரிசித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. குலசேகர ஆழ்வார் கருவறையைச் சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுகள், எழுத்துகள் முழுச் சுவர்களிலும் உள்ளன.
நீக்குபடிச்சுப் படங்களும் பார்த்தாலும் மறுபடி படிக்கணும். நாளைக்கு வரணும். அப்போ விரிவாகப் படிக்கணும்.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். படித்து உங்கள் கருத்தை எழுதுங்க.
நீக்குகோயில் பராமரிப்பு அருமையாக இருக்கு. ஆனால் தென் தமிழ்நாட்டுக் கோயில்களே சுத்தமான பராமரிப்புடன் காணப்படுகின்றன. சேரமான் பெருமாள் நாயனார் பற்றித் தெரிந்தவை இதில் இடம் பெற்றிருக்கு. இரண்டாம் சேரமானான குலசேகர ஆழ்வார் பற்றியும் தெரிஞ்சுக்கணும். அதோடு மூணாவது சேரமானா மதம் மாறியது? இது எனக்குக் கேள்விப் படாத ஒன்று. ஆனால் தென்னாட்டு அரசர்களில் ஒருத்தர் மெக்க/மெதினா வரை சென்றார்கள் என்பது வரை தெரியும். ஒருவேளை அதுதான் அத்திமலை வரதனில் வருமோ/அல்லது வந்திருக்கோனு நினைச்சிருந்தேன். நல்லதொரு பயனுள்ள ஆய்வு. இதுக்கு எத்தனை புத்தகங்கள் படிச்சிருக்கணும். உங்கள் ஆவலும் உண்மையைச் சொல்லும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது. இனி அடுத்த வாரத்துக்குக் காத்திருக்கேன். நன்றி.
பதிலளிநீக்குசேர அரசர்கள் வரலாறு கொஞ்சம் இண்டெரெஸ்டிங் ஆக இருக்கிறது. மூன்றாம் சேரமான் பெருமாள் ஆட்சியைப் பிடிப்பதற்காகச் செய்த வேலைகளும், அதன் மூலமாக மதம் மாறவேண்டி வந்ததும் மக்களால் வெறுக்கப்பட்டதும் இனி வரும். அவருடைய சமாதி படம் உட்பட.
நீக்குஎனக்குமே இந்த வரலாற்றை, பதிவைச் சாக்கிட்டுப் படித்ததில் மகிழ்ச்சியே. இல்லையென்றால், குத்துமதிப்பாகச் சொல்வதை நம்பிக்கொள்ள வேண்டியிருக்கும் (உதாரணமா குலசேகர ஆழ்வார் மன்னார் கோயிலில் 30 வருடங்கள் வாழ்ந்தார் என்பது போன்ற கதைகளை)