30.7.26

"தும்மல் வந்தாலும் தும்மிடாதீங்க"

இந்த ட்ரீட்மெண்ட் முறையைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.  முதல் நாள் File போட்டுக்கொண்டு டாக்டரைப் பார்க்க வந்தபோது ஏற்கனவே இருந்த மூன்று பேர்கள் பார்க்கப்பட்டிருக்க, நான் மட்டுமே அப்போதைக்கு மிச்சமிருந்தேன் என்பதையும், மூன்றாவது நபரைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் வார்டுக்கு சென்று வருவார் என்று சொன்னதும், ஒரே ஆள்தான் காத்திருக்கிறேன், பார்த்து விட்டு செல்லலாமே என்று நான் சொன்னது அவர் காதுக்கு சென்று அதனால் அவர் ஒரு அபிப்ராயத்திலிருந்தார் போலும் என்பதைச் சொல்லி இருந்தேன்.

நான் என் பிரச்னையைச் சொன்னதும் 'உதவி மருத்துவ இளம்பெண்'ணிடம் என்னை எதிரிலிருந்த சோதனை ரூமுக்கு அழைத்துப் போகச்சொன்னார்.  'தயார் செய்ய'ச் சொன்னார்.  அந்தப் பெண் உதவி மருத்துவர் இரண்டு நீளமான காஸ் (Gauze)  துணியை எடுத்து சிறு கம்பிப் பிடிமானத்தின் உதவியுடன் என் இரண்டு மூக்கின் துளைகளிலும் ஒவ்வொன்றாய் மெல்ல சொருகினார்.  நான் முகம் சுருக்கியதும், "முகம் சுருக்காதீங்க..  காஸ் சரியா உள்ளே போகாது" என்றார்.

அதெப்படி சுருக்காமல் இருப்பது என்று நினைத்தாலும் சிரமப்பட்டு அப்படி இருக்கப் பழகினேன்.   இது பின்னாட்களில் அடிக்கடி நிகழும் "சோதனை" ஆகியது!  Gauze உள்ளே கிட்டத்தட்ட உள் தொண்டையைத் தொட்டுக்கொண்டு இம்சை செய்யுமாறு நிலைநிறுத்தப்பட்டது!

இரண்டு மூக்கிலும் அனஸ்தீஷியா தடவப்பட்ட காஸ் நுழைந்து, வெளியேயும் நீட்டிக் கொண்டு நிற்க, வெளியே நாற்காலியில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, உட்கார்த்தி வைக்கப்பட்டேன்.  இரண்டு மூக்கிலும் நீட்டிக்க கொண்டிருக்கும் காஸ் துணியுடன் அசௌகரியமாக உட்கார்ந்திருந்த என்னை வினோதமாக பார்த்தபடி பல நோயாளிகள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தாண்டி அவரவர் டிபார்ட்மென்ட் இடங்களுக்கு சென்றபடி இருக்க,  பாஸ் என்னைப் பார்த்துச் சிரிப்பை அடக்க சிரமப்பட்டார்.  நைசாக உட்கார்ந்த இடத்திலேயே பின்னுக்கு சாய்ந்து என்னை புகைப்படமெடுத்தார். குடும்பக் குழுமத்தில் அதை வெளியிட்டு புன்னகை சிந்தி சிரிப்பான்களை பதிலுக்கு வாங்கினார்.

அங்கு வந்த செவிலியப்பெண் சிலகணங்கள் என்னை உற்றுப் பார்த்து விட்டு,  "தும்மல் வந்தாலும் தும்மிடாதீங்க" என்றார்.  அதுவரை அபப்டி ஒரு உணர்வே இல்லாதிருந்த எனக்கு தும்மல் வரும்போல இருந்தது.

பாஸ் அவசரமாக என் தங்கையுடன் போனில் கலந்தாலோசித்து தும்மல் வரும்போல இருக்கும் நேரத்தில் இரண்டு கன்னங்களிலும் கண்களுக்கு சற்று கீழே மூக்கின் துளைகளுக்கு இணையாக இருக்கும் இடத்தல்  விரல்களால் கன்னங்களிலிருந்து மூக்குப் பகுதியை நோக்கி மெல்ல நீவிக் கொள்ளச் சொன்னார்.   அதே போலவே மெல்ல செய்து செய்து  தும்மலை வென்றேன்.  ஆனால் அந்தப் பெண் எனக்கு அதை நினைவுபடுத்தாமல் இருந்திருந்தால் நானும் சும்மா இருந்திருப்பேன் என்பதும் நிஜம்.  கொட்டாவி என்று யாராவது சொன்னாலோ, படித்தாலோ நமக்கும் கொட்டாவி வருமே அதுபோல..  (என்ன..  கொட்டாவி விட்டீர்களா?!)

டாக்டர் இரண்டுமுறை வெளியே வந்தார் தவிர என்னை கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.  

இடைப்பட்ட நேரத்தில் இன்னும் இரண்டு பேர் இப்படி மூக்கில் காஸ் நுழைக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். எனக்கொரு அல்ப சந்தோஷம் அதில் ஏற்பட்டது.  என்னவென்றால், என்னை விட கொஞ்சம் இளையவராகத் தெரிந்த ஒருவர் மூக்கினுள் காஸ் நுழைக்கப்படும்போதே அலறி ஆர்ப்பாட்டம் செய்ததுதான்.  அவர் மகள் அருகில் கூட நின்று அவரை ஆற்றுப்ப்படுத்தி வெளியே வந்து அமரவைத்தார்.  என்னெதிரே அமர்ந்திருந்த அவரை நான் மனதுக்குள் புன்னகைத்தவாறு பார்த்தேன்..

நினைவிருக்கட்டும்..  இதெல்லாம் முதல் நாள் முதல் அனுவபவம்...  அதில் -

டாக்டர் என்னை உள்ளே அழைத்தார்.

=========================================================================================

லாரி டிரைவர் ராஜாக்கண்ணு என்று, பாவம் AVM ராஜன் சிவாஜியை வைத்து, ஒரு படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டார். வாலியின் பாடல்களுக்கு M S விஸ்வநாதன் இசை.  அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல்.  சென்ற வாரம் பேசினோமே, அதே அண்ணன் தங்கை சப்ஜெக்ட்.

தங்கையைப் பார்த்து அண்ணன் பாடும் பாடலாக தலைவர் SPB குரலில் பாடல்.. 

என்னென்பதோ...
 
============================================================================================

பேஸ்புக்கில் நான் படித்த இந்தப் பகிர்வு உங்களுக்கும் கூட உதவலாம்!

வழக்குரைஞரான என்னிடமே #பஜாஜ்_பைனான்ஸ் நிறுவனம் செய்த முறைகேடு... 

#ரூபாய்_60000/- அபராதம் விதித்த தஞ்சாவூர் நுகர்வோர் ஆணையம்...

#பொதுமக்கள்_விழிப்புணர்வு அடைய வேண்டிய #வழக்கின்_வெற்றிக்கதை...! 

நான் கடந்த 07.12.2024 அன்று அலைபேசி ஒன்று வாங்குவதற்காக  தஞ்சாவூர்  சாம்சங் ஷோரூமில் ரூ.17,000 மதிப்பிலான செல்போன் வாங்கி பணம் செலுத்த முற்பட்ட பொழுது, அங்கிருந்த பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance) ஊழியர், "சார் 0% வட்டி தான், EMI இல் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். 

"என்னிடம் பணம் இருக்கிறது, மேலும் கடன் வாங்கி EMI கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை, எனவே வேண்டாம்" என்றேன். 

"சார் எங்களுக்கு இவ்வளவு லோன் கொடுக்க வேண்டும் என்ற டார்கெட் இருக்கு, பிளீஸ் சார்... உங்களுக்கும் சிபில் ஸ்கோர் உயரும், EMI ஏதாவது சரியாக செலுத்தினால் தான் சிபில் ஸ்கோர் உயரும், இல்லையேல் அப்படியேதான் இருக்கும்" என்றார். 

உடன் வந்திருந்த நண்பர், "சார் அடுத்து வீட்டு லோன் வாங்கனும்னு சொன்னீங்களே, அதுக்கு உதவியா இருக்கும், நீங்க என்ன ஒழுங்கா EMI காட்டாமலா இருக்க போறீங்க, வாங்குங்க சார்" என்றார். 

இவ்வளவு வற்புறுத்தலின் பேரில் CIBIL Score உயரும் என்ற நல்லெண்ணத்தில் ரூ.13,222 தொகையை 0% வட்டி கடனாகப் பெற்றேன்.

மாதம் ரூ.1,888 வீதம், 02.01.2025 முதல் 02.07.2025 வரை ஏழு தவணைகள்...

அனைத்துத் தவணைகளுக்கும் எனது இந்தியன் வங்கி (Indian Bank) கணக்கில் போதிய பணத்தை முறையாகப் பராமரித்து வந்தேன்.

ஒவ்வொரு மாதமும் சரியாக 2- ஆம் நாள் ECS முறையில் EMI பணத்தை எடுத்துக் கொள்ளும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், கடைசி EMI தொகையான ஜூலை 2-ஆம் தேதி என் கணக்கில் பணம் இருந்தும், பஜாஜ் நிறுவனம் அதனை எடுக்காமல் விட்டுவிட்டு, 

11.07.2025 அன்று என்னை தொலைபேசியில் அழைத்து, காசோலை பணமின்றி திருப்பப்பட்டதாக #Cheque_Bounce  கூறி வழக்கமான மிரட்டும் தொனியில் பேசினார்கள். 

நான் யாரென்று எதுவும் சொல்லாமல் பேசினேன். 

எனது வங்கி கணக்கு அறிக்கையை (Bank Statement) அனுப்பி, என் தரப்பில் தவறு இல்லை என்பதை நிரூபித்தும், 

அதை ஏற்க மறுத்து தாமதக் கட்டணம் மற்றும் காசோலைத் திருப்பப்பட்டதற்கான  கட்டணம், தாமதக் கட்டணம்  என ரூ.530-ஐக் கூடுதலாக மொத்தம் ரூ.2,418 கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர். பலமுறை போன், Msg.... 

 "சரி, உங்களுக்கு நேரம் சரியில்லடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு அடுத்த நாள் 12.07.2025 சனிக்கிழமை  ரூபாய். 2418/- யை ஆன்லைனில் செலுத்தி விட்டேன். 

பணத்தைச் செலுத்திய மறுநாளும்/ ஞாயிறு அன்றும்  மீண்டும் பணம் கட்டச் சொல்லி என்னை தொந்தரவு செய்தனர் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர். 

அப்பொழுதுதான் கேட்டேன், "நான் யாரென்ற தகவல் உங்களிடம் உள்ளதா?" என்று... 

"இல்லை, லோன் நம்பர், போன் நம்பர்தான் வரும்" என்றார்கள். 

"சரி, நான் நேற்றே பணத்தை செலுத்திவிட்டேன். பிறகெதற்கு இன்று அழைக்கின்றீர்கள்? அதுவும் ஞாயிறு கடன் வசூல்...?" என்றேன். 

"எங்களுக்கு இன்னும் Update ஆகவில்லை" என்றார் அந்த ஊழியர். 

அப்போது சொன்னேன்,
"நான் ஒரு வழக்குரைஞர். பிறருக்கு வழக்குகளை நடத்துபவன். என்னிடமே இப்படி முறைகேடாக பணம் வசூல் செய்கின்றீர்கள் என்றால், சட்டமறியாத பொது மக்களிடம் என்னவெல்லாம் செய்வீர்கள்?" என்றேன். 

"எங்க மேனேஜரிடம் சொல்லி, செக் பவுன்ஸ் பணத்தை திரும்ப கொடுக்கிறோம் சார்" என்று பதறினார் அந்த ஊழியர்... 

"வேண்டாம், உங்களை, உங்கள் நிறுவனத்தை எங்கு நிறுத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். இந்த ரூபாய் 530-ஐ கூடுதலாக வாங்கியதற்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்க வைக்கிறேன்.. பாருங்கள்" என்று சொல்லி அந்த அழைப்பை துண்டித்தேன். 

அதுமட்டுமின்றி, இந்தக் கடனை பெறும் பொழுது எனது CIBIL Score-ஐ 744-லிருந்து 733 ஆகக் குறைந்துவிட்டது. 

மேற்படி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கை என் நற்பெயருக்கு மிகப் பெரிய களங்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. 

"ஒரு வழக்கறிஞரான எனக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களை இது போன்ற நிறுவனங்கள் எவ்வளவு பாடுபடுத்தும்?" என்று நினைத்து,

தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் CC NO:165/2025 வழக்கு தொடர்ந்தேன்.

நேற்று முன்தினம் 21.07.2026 எனது வாதங்களை ஏற்றுக் கொண்டு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சேவைக் குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடைமுறையைக் கண்டித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் பின்வருமாறு தீர்ப்பளித்தது:

1) வங்கி கணக்கில் உரிய தொகை இருந்த பொழுதே, காசோலை திரும்பப்பட்டதாக கூறி புகார்தாரரிடம்  சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.530/- தொகையை, வசூலித்த தேதியிலிருந்து திரும்பச் செலுத்தும் நாள்வரை 12% வட்டியுடன். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

2) சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையால் புகார்தாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000/- வழங்க வேண்டும்.

வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10,000/- வழங்க வேண்டும்.

இத்தொகையை 6 வார காலத்திற்குள் வழங்கத் தவறினால், கூடுதல் அபராத வட்டியாக  ஒட்டு மொத்த தொகைக்கும் சேர்த்து 12% வட்டி செலுத்த வேண்டும்.

இதன் மூலம் பொது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான்... 

பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இப்படி சட்ட விரோதமாக உங்களிடம் வசூல் செய்யும் தொகையை  என்ன ரூ.530-தானே என்று கடந்து செல்லாதீர்கள்... 

ஏதும் சண்டையிடாமல் பணத்தை செலுத்திவிட்டு அதன் அடிப்படையில் வழக்கு தொடருங்கள். வெற்றி பெறுவதுடன் அந்நிறுவனங்களுக்கு பெரும் படிப்பினையை ஏற்படுத்துங்கள்.

இவ்வாறு சட்ட விரோதமாக வசூலிக்கும் சிறு தொகை, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கணக்கிடும்போது பல நூறு கோடி ரூபாய் அந்த நிறுவனங்களுக்கு அநியாய லாபமாக மாறுகிறது.

நான் நுகர்வோர் ஆணையத்திடம் இறுதியாக வைத்த வாதம் இதுதான்,

"இந்த நிறுவனம் குறைந்தது இந்தியா முழுவதும் 5,00,00,000/- (5 கோடி) பேருக்கு கடன் கொடுத்ததாக வைத்துக் கொண்டால்கூட இதுபோன்று சட்ட விரோத வசூல் மூலம் அவர்கள் இப்படியாக  பெறும் உத்தேச வருமானம்  ரூ. 530× 5,00,00,000 = 26,50,00,00,000/- இலாபம். (265 கோடி)" 

ஏன் இந்த நிறுவனங்கள் கொழுத்து திரிகின்றன என்பது இப்போது புரியும் என்று நினைக்கிறேன். 

நன்றி....!!! 
சு. செல்வநாயகம் M.Sc., LL.B.,
வழக்குரைஞர், தஞ்சாவூர்.

பகிர்வு:
லயன் இந்திராதேவி முருகேசன் , கோவை.

======================================================================================


நல்ல பதில் சானியா...!

****************************************

எப்போது  சானியா சுயசரிதை  வெளியிடுவார்' என்று   காத்திருந்தது போல், டிவி   செய்தியாளர்  ராஜ்தீப்   ஸர்தேசாய்,  "சானியா !  எப்போது  வாழ்க்கையில்  செட்டில் ஆகப் போகிறீர்கள்? தாயாகப் போவது எப்போது?  குடும்பத்தைப் பேணுவது எப்போது? டென்னிஸிலிருந்து  ஓய்வு இப்போதைக்கு இல்லையா?"   என்று  கேள்விக்  கணைகளைத் தொடுத்தார்.  

இந்தக் கேள்வியை சானியா கையாண்ட விதம்  அவரின்  பக்குவத்தின் பரிமாணத்தைக் காட்டியது.

""வாழ்க்கையில் நான் இன்னமும் செட்டில் ஆகவில்லை  என்று நீங்கள்  நினைக்கிறீர்களா? உங்கள் கேள்வியில்  ஏமாற்றம் தெரிகிறது. எத்தனையோ  பதக்கங்கள் - இரட்டையர் பிரிவில்  உலகில் நம்பர் 1...  

இதெல்லாம்  உங்களுக்கு   நிறைவாக - சாதனைகளாகத்   தெரியவில்லையா? திருமணம்.. பிறகு   குழந்தை பெற்றுக் கொண்டால்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை  நிறைவு பெறுவதாக, சாதனை புரிந்ததாக   ஏன் தீர்மானிக்கிறீர்கள்? 

ஒவ்வொரு பெண்ணும்  எதிர்கொள்ளும்   கேள்வியும் இதுதான்.  நானும்  பலமுறை  இந்தக்  கேள்வியை   சந்தித்திருக்கிறேன்.  எனது வாழ்க்கையிலும்  தாய்மைக்கு  இடம்   உண்டு. ஆனால்  அது  உடனடியாக இல்லை. தாய்மை   அடைய   நான்  தீர்மானிக்கும்  போது   கட்டாயம்    நானே  பகிரங்கமாக   அறிவிப்பேன். 

என்னை  ஒரு சாதனைப் பெண்ணாக  மக்கள் தங்கள்  நினைவுகளில்  நிறுத்தவேண்டும். அதைத்தான் விரும்புகிறேன். சாதனை பெண்களிடம்  எப்போது குழந்தை  பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்  என்று  கேள்விகள் கேட்காத நிலைமை ஏற்பட வேண்டும்'' என்றார்.  

- தினமணி, மகளிர்மணியிலிருந்து - கொஞ்சம் பழசு...  8 வருட பழசு!

=============================================================================================

இதுவும் 2018 ல் எழுதப்பட்டதுதான்....  

எழுதத் துடிக்கும் 
விரல்களின் துடிப்பு 
எனக்கு மட்டும்தான் தெரிகிறது.

எழுத்து என்று நின்றுபோனதோ
அன்று கொஞ்சம் இறந்துபோனேன்.

படித்த புத்தகங்களும் 
படைத்த புத்தகங்களும் 
படிக்கக் காத்திருக்கும் 
புத்தகங்களுடன் 
சுற்றி நின்று 
பார்த்துக் கொண்டிருக்கின்றன.

படிப்பு என்று நின்று போனதோ 
அன்று கொஞ்சம் 
இறந்துபோனேன்.

எதிரில் இருப்பவரிடம்
எண்ணங்களை வார்த்தையாக்கிப் 
பேச முடியாமல் 
மூச்சுத் திணறுகிறது.

குரல் என்று நின்றுபோனதோ 
அன்று கொஞ்சம் 
இறந்துபோனேன்.

விரும்பியோ விரும்பாமலோ 
நேசிப்பவர்கள் கூட
என் மரணத்துக்காகக் 
காத்திருக்கிறார்கள் 
கண்ணீருடனும் 
கதை வசனங்களுடனும்.

மூச்சு நின்று உடல் இயக்கம் 
நிற்பதுதான் மரணமாம்...

இனிதானா இறப்பு?

==================================================================================

படிக்க முடிகிறதா...   இணையத்தில்... இன்ஸ்ட்டாவில் பார்த்தேன்.



============================================================================================

1980ல் வெளிவந்த 'அன்னப்பறவை'  என்கிற படத்திலிருந்து ஒரு SPB பாடல்.  இசை   ஆர். ராமானுஜன்.  பட்டாபிராமன் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், லதா, ராதிகா நடித்திருக்கின்றனர்.  காட்சியில் வருபவர் எம் ஜி சி சுகுமாரோ என்று சந்தேகம்.  பாடலைக் கேளுங்கள், காட்சியைப் பார்க்க வேண்டாம்!


===========================================================================================

OTT யில் பார்த்த படம் - மலையாளம் - தமிழில் மொழிபெயர்ப்பு இல்லை  -  அமேசான் ப்ரைம் 




2022 ல் வெளியான படத்தைப் பற்றி ஒருவர் இணையத்தில் சிலாகித்துக் கூறினார்.  எனவே படம் பார்த்தேன்.
இலவீழா பூஞ்சிரா ஏன்பது ஒரு மலை.  அதன் மீது ஏறுவதே கடினம்.  அதன் உச்சியில் ஒரு அலுவலகம்  வைத்து கண்காணிப்பு கேந்திரம் வைத்திருக்கிறது கேரளா போலீஸ்.  

மிகவும் சிரமப்பட்டே அந்த இடத்தை அடையவேண்டும்.  சௌபின் (தமிழில் ரஜினி படத்தில் 'மோனிக்கா..  மோனிக்கா' பாடலுக்கு ஆடுபவர்) அங்கு பணிபுரியும் ஒரு போலீஸ்.  மிகவும் ரிமோட்டான இடம் அது.  சௌபின் ஒருவரை விடுவித்து வீட்டுக்கு அனுப்பியதும் அங்கு பணிக்கு வருகிறான் சுதிர். ஆள் நடமாட்டமில்லாத அந்த இடத்தில்தான் தங்கி வேலை பார்க்க வேண்டும்.  அந்த இடத்தைப் பார்க்க வந்த- அந்த இடத்தில் முன்பு வேலை பார்த்தாவரனின் உறவினர்களில் ஒரு வாலிபன் இடி மின்னல் தாக்கி உடல் கருகி உயிரிழக்கிறான்.  மது இந்த சம்பவத்தால் மனம் வருத்தப்பட்டு பாதிக்கப்படுகிறான்.  மழை வந்தால் ஷெல்டருக்குள் சென்றுவிட வேண்டும். 

மலையின் சில இடங்களில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்து பரப்பரப்பைக் கிளப்புகின்றன.  விசாரிக்க போலீஸ் வருகிறது.  விசாரிக்க வரும் அதிகாரி ஒரு 'சிடுசிடு' ..  காரணத்தை அவர் டிரைவர் - இன்னொரு போலீஸ்காரன் - சொல்கிறான் 

"அவர் மனைவி சமீபத்தில் ஒரு டிரைவரோடு ஓடிப்போய் விட்டாள்"


சுதிர் தாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே ஒரு பெண்ணின் கையைப் பார்க்கிறான்.  அதை போலீசுக்குச் சொல்ல வேண்டாம் என்கிறான் சௌபின்.  தொடர்  போராட்டங்களில் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறான் சௌபின்.  அதாவது அந்தக் கை அவன் மனைவி அம்ருதாவினுடைய கை.

ஆனால் மனைவியை தான் கொல்லவில்லை என்பதோடு அதிர்ச்சிகரமாக தன் மனைவியின் தற்கொலைக்கு அவன் சுதிரை குற்றம் சாட்டுகிறான்.

சௌபின் சுதிருக்கு கொடுக்கும் உணவு, அவன் செய்யும் செயலும், அந்த சிடுசிடு போலீஸ் ஆபீஸர் செயலும்தான் படத்தின் ஹைலைட், கிளைமேக்ஸ்.

கொஞ்சம் ஸ்லோவான படம். மலையாளப்படங்களில் கொஞ்சம் சுமாரான திகில் படம் என்றாலும் எத்தனையோ தமிழ்ப் படங்களுக்கு இது தேவலாம்.  நீங்கள் விரும்பினால் நான் கதையை பின்னூட்டத்தில் சொல்லி விடுகிறேன்!

===========================================================================================

பேஸ்புக்கில் படித்த சுவாரஸ்யமான வம்பு...

Rajini Sridevi Marriage - ரஜினிதான் ஸ்ரீதேவிய கல்யாணம் பண்ணிருக்கணும் சூழ்நிலைய சாதகமா பயன்படுத்தி தனக்கு ராக்கி கட்டிய ஸ்ரீதேவி வயித்துலயே புள்ளைய குடுத்த boney kapoor
.
ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் இருந்த ஆழமான அன்பிற்கு கீழே கொடுத்திருக்கும் சம்பவங்களே சாட்சி
.
ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் 'மூன்று முடிச்சு' (1976). இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் நடித்திருந்தனர். அதேபோல், தமிழில் ஸ்ரீதேவி கடைசியாக கதாநாயகியாக நடித்த 'நான் அடிமை இல்லை' (1986) திரைப்படமும் ரஜினியுடன் தான்! 
.
பலரும் ஸ்ரீதேவியை தெலுங்கு அல்லது ஹிந்திப் பெண் என்று நினைப்பதுண்டு. ஆனால், அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்த தமிழ்ப் பெண். அவரது தந்தை அய்யப்பன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்; தாய் ராஜேஸ்வரி தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
.
ரஜினியும் ஸ்ரீதேவியும் இணைந்து 18 தமிழ் படங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய பிற மொழிகளையும் சேர்த்தால் மொத்தம் 22 படங்களில் இவர்கள் ஒன்றாக இணைந்து நடித்து சாதனை படைத்துள்ளனர் (16 வயதினிலே, காயத்ரி, பிரியா, ஜானி, போன்றவை குறிப்பிடத்தக்கவை). 
.
ரஜினிக்கு ஸ்ரீதேவி மீது தீவிரமான விருப்பம் இருந்தது ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி அம்மாள் மீது ரஜினிக்கு மிகுந்த மரியாதையும் உண்டு. 
.
ஸ்ரீதேவியின் புதிய வீட்டு கிரகப்பிரவேச விழாவிற்கு ரஜினி சென்றிருந்தபோது, ஸ்ரீதேவியின் தாயாரிடம் ஸ்ரீதேவி மீது தனக்கு இருக்கும்  காதலைச் சொல்லி பெண் கேட்கலாம் என்ற முடிவோடுதான் சென்றார். 
.
ஆனால், ரஜினி வீட்டிற்குள் நுழையும் அந்தச் சரியான தருணத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது (Current Cut). ஆன்மீக நம்பிக்கை அதிகம் கொண்ட ரஜினி, இதை ஒரு பெரிய அபசகுனமாக எண்ணி, தன் காதலைப் பற்றிப் பேசாமலேயே அங்கிருந்து திரும்பி வந்துவிட்டார்! …இந்த விஷயத்தை ஒரு stage show வில் Director பாலச்சந்தர் சொன்னது.
.
ஒருவேளை அன்று திருமணம் நடந்திருந்தால், திரை உலகிலும் சரி, அவர்களின் குடும்ப உறவுகளிலும் சரி பல விஷயங்கள் மாறியிருக்கலாம்.
.
திருமணம் நடைபெறவில்லை என்றாலும், இருவருக்கும் இடையே வாழ்நாள் முழுமைக்குமான ஒரு உன்னதமான நட்பு தொடர்ந்தது: 
.
2011-ல் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஸ்ரீதேவி அவருக்காக ஒரு வாரம் சீரடி சாய்பாபாவிற்கு விரதம் இருந்து தீவிரமாகப் பிரார்த்தனை செய்தார். 
.
2018 பிப்ரவரியில் ஸ்ரீதேவி மறைந்த செய்தி வந்தபோது, அடுத்த இரண்டு நாட்களில் வரவிருந்த தனது கல்யாண நாள் (Wedding Anniversary) கொண்டாட்டங்களை ரஜினி உடனடியாக ரத்து செய்துவிட்டு, மும்பைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
.
ரஜினிகாந்தின் தனிப்பட்ட போன் நம்பர் திரைத்துறையில் மிகச் சிலரிடம் மட்டுமே இருக்கும். அதில் ஸ்ரீதேவியும் ஒருவர். 
.
1981 ரஜினி லதாவை திருமணம் செய்கிறார்…அதுவரை ரஜினியை தவிர வேறு யாரையும் ஸ்ரீதேவி மனதில் ஆசைப்பட்டு இருக்கமாட்டார் போல தெரிகிறது ஏனென்றால் ரஜினிக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் கழித்து ஸ்ரீதேவிக்கு 1984-ல் வெளியான 'ஜாக் உடா  படப்பிடிப்பின் போது பாலிவுட்டின் 'டிஸ்கோ டான்சர்' மிதுன் சக்ரவர்த்தி மீது காதல் ஏற்படுகிறது…பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே மிதுன் சக்ரவர்த்திக்கு கல்யாணம் ஆகிவிட்டது ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஆனவர்கள் மீது ஏன் காதல் வருகிறது என்பதையும் யோசிக்கவேண்டும் ஏனென்றால் ஸ்ரீதேவியை திருமணம் செய்யும்போது போனி கபூரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்தான்
.
பாலிவுட் பத்திரிகைகளில் பரவலாகப் பேசப்பட்ட தகவல்களின்படி, 1985-ல் ஸ்ரீதேவியும் மிதுனும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர் என்று எழுதினர்.. 
.
மிதுன் தனது முதல் மனைவியான யோகிதா பாலியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை அதிகாரப்பூர்வமாக மணந்துகொள்வார் என்று ஸ்ரீதேவி நம்பினாராம்.
.
ஆனால், யோகிதா பாலி விவாகரத்து தர மறுத்ததுடன், தற்***லை முயற்சியிலும் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இதனால் மிதுன் தன் முதல் மனைவியைப் பிரிய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார் …மிதுன் முதல் மனைவியை விவாகரத்து செய்யமாட்டார் என்று தெரிந்ததும் ஸ்ரீதேவி மிதுனை பிரிந்தார் என்று சொல்லபடுகிறது.
.
ஏற்கனவே ரஜினி மற்றும் மிதுன் என்று மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதேவிக்கு அவரின் தாய் மற்றும் தந்தை அடுத்தடுத்து மறைந்தபோது, இன்னும் பேரிடியாக இருந்தது…அப்போதுதான் ஆறுதல் தருகிற பாய் பெஸ்டி வேடத்தில் போனி கபூர் உள்ளே நுழைகிறார்
.
அப்போது போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் வேற இருந்தனர் 
.
'மிஸ்டர் இந்தியா' படத்தின்போதே ஸ்ரீதேவி மீது காதல் வயப்பட்ட போனி கபூர், அவருக்கு ₹10 லட்சத்திற்குப் பதிலாக ₹11 லட்சம் சம்பளம் கொடுத்து, தனியாக ஆடம்பர மேக்கப் ரூம் அமைத்துக் கொடுத்து, முதலில் ஸ்ரீதேவியின் தாயாரின் நம்பிக்கையைப் பெற்றார். ஆரம்பத்தில் ஸ்ரீதேவிக்கு இதில் விருப்பமில்லை. 
.
இந்த விஷயம் மிதுனுக்கு தெரியவர ஸ்ரீதேவி மீது அதிக சந்தேகமும் பொறாமையும் கொண்டார். குறிப்பாக, தயாரிப்பாளர் போனி கபூர் ஸ்ரீதேவி மீது காட்டிய அக்கறையைக் கண்டு மிதுன் சந்தேகப்பட்டார்.
.
மிதுனின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகவும், தன் மீதான நம்பிக்கையை நிரூபிப்பதற்காகவும், ஸ்ரீதேவி போனி கபூரின் கையில் 'ராகி' (Rakhi) கட்டியதாக பாலிவுட் வட்டாரங்களில் ஒரு பெரிய கதையே உண்டு.
.
ஆனால் போனி நம்பிக்கையை இழக்கவில்லை 1993 மும்பை தொடர் கு***டுவெ***ப்புச் சம்பவத்தின் போது, நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்ரீதேவிக்கு பாதுகாப்பு அளித்து, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆதரவு கொடுத்தவர் போனி கபூர். 
.
இப்படி கொஞ்சம் ‘கொஞ்சமாக ஸ்ரீதேவியை நெருங்கிய போனி கபூர் ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவியை திருமணம் செய்யாமலேயே வயிற்றில் பிள்ளையையும் கொடுத்துவிட்டார்.
.
ஸ்ரீதேவிக்குதான் அது முதல் குழந்தை ஆனால் போனிக்கு அது மூணாவது குழந்தை என்பதால் கோபமான போனியின் முதல் மனைவி பிரச்சனை செய்ய போனி முதல் மனைவியை விவாகரத்து செய்து ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார்.
.
ஆக மொத்தம் ராக்கி கட்டுன பொண்ணுக்கே ஜாக்கி போட்ட பெருமை போனியையே சேரும்.

===============================================================================================

விசாகா ஹரி.  , நெய்வேலி சந்தானகோபாலன், ராஜ்குமார் பாரதி உடன் இருக்கிறார்கள்.  தமிழ்  பற்றி பேசுகிறார்கள்.  இதைப் பார்த்த சுவாரஸ்யத்தில் முன்/பின் பகுதிகளும் பார்க்க ஆசை ஏற்படுகிறது.


வீடியோ ஷேர் செய்ய முடியாதது ஒரு வருத்தம்.  மேலே உள்ள லிங்க் க்ளிக் செய்து பார்க்கலாம்.

உள்ளே சென்று பார்த்தால் சப்ஸ்க்ரைப் செய்ய மாதம் 89 ரூபாயாம்.  அதுதான் ஷேர் செய்ய முடியவில்லையோ என்னவோ..  ஆனால் அங்கு சென்று பார்க்கக் கிடைக்கிறது.







================================================================================

ஜோக்ஸ்....




61 கருத்துகள்:

  1. ACCEPT THE SITUATION AND MOVE ON WITH A SMILE NO MATTER WHETHER THE SMILE IS REAL OR FAKE. BECAUSE NO ONE REALLY CARES

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிகிறது...   ஜோக்ஸ் எல்லாம் கண்றாவியா இருக்குன்னு சொல்ல வர்றீங்க..  அதானே?!  வாங்க நெல்லை.

      நீக்கு
    2. படிக்க முடிந்தவர்கள் அதிகம் சிந்திப்பவர்கள் என எழுதியிருக்கீங்களே. அதைப் படித்து எழுதியிருக்கிறேன்.

      நீக்கு
    3. நெல்லை முந்திட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  2. காலண்டர் வாங்க அவ்வளவு அவசரமா? ஜோக்கை இரண்டு தடவைகள் வெளியிட்டிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாரி..  ஒண்ணை நீக்கிட்டேன்!  காலண்டர் மேல எல்லாம் எப்பவுமே ஆர்வம் இருந்ததில்லை.  சுவர்ல ஆங்காங்கே காலண்டரா தொங்கினா எனக்கு 'கோ' வில் ஆரம்பித்து, 'ம்' - ல் முடியும் மூன்றெழுத்து வார்த்தை வரும்!

      நீக்கு
  3. எல வீழா பொஞ்சிரா.... கதைலாம் எழுத வேண்டாம். பார்த்துக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. இரண்டு மூக்கிலும் பஞ்சு..... படத்தை இங்க வெளிட தைரியம் இல்லையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இப்படி கேட்டவுடன் ரோஷம் பொத்துக்கொண்டு வந்து அந்தப் படத்தைத் தேடினேன்.

      ஒரு வருஷம் ஆச்சோல்லியோ?

      காணோம்.

      நீக்கு
  5. நுகர்வோரை ஏமாற்றியதை மக்கள் தெரிந்துகொள்ள வைத்தாரே... பாராட்டுகள். அதிகபட்சம் ஐயாயிரத்துக்குப் பதிலாக ஐம்பதாயிரம் அதிகம் ஒஆங்கினாரே... செரிக்குமா? இது வெற்றியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐ..  அதுக்காக அநியாயமா வாங்கியது, கோர்ட் செலவு சேர்த்து ஆயிரத்து ஐநூத்து நாப்பத்திரெண்டு ரூவா எழுபத்தைந்து பைசா கொடுங்கன்னு வாங்கணுமா?!!  அவங்களுக்கு  புத்தி வரவேணாம்?

      நீக்கு
    2. நஷ்ட ஈடு வாங்கியது சரியே.

      நீக்கு
  6. ஶ்ரீதேவி கதையில் யார் பாவம்? ரஜினி எதையும் இழக்கலை... அவருக்கும் அதே போல எக்கச்சக்க செலவாளிகளான மகள்கள். என்ன ஒண்ணு... ஶ்ரீதேவி, லதாவைவிட ஆயிரம் மடங்கு நல்லவராக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம்தான் பாவம்!  இதை எல்லாம் படிக்க.வேண்டி இருக்கே....!

      நீக்கு
    2. இழக்கலைனு எப்படிச் சொல்ல முடியும்? எனக்குத் தெரிந்து ரஜினி நடிகை லதாவைத் தான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சார் எனவும் பெரிய நடிகருடன் நடித்துக் கொண்டிருந்த அவரை ரஜினி காதலிக்கிறார் எனத் தெரிந்ததும் தொல்லைகள் வந்ததாலும் அப்போதைய முதல்வர் ரஜினியைக் காப்பாற்றினார் எனவும் கேள்விப் பட்டிருக்கேன். எது நிஜம்னு எல்லாம் தெரியாது.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
    சென்ற வாரம் சளிக்கு ஒரு ஆபரேஷன் என முடித்திருந்தீர்கள். இந்த வாரம் இரண்டு மூக்கில் (ஆமாம் எல்லோருக்கும் இருப்பது ஒரு மூக்குதானே..! ) துணி அடைப்பது போன்ற வேதனையை பற்றி கூறியுள்ளீர்கள். எத்தனையோ சிரமங்களை அந்த சளி வந்த போதில் அனுபவித்திருக்கிறீர்கள். மிகவும் கஸ்டந்தான். பதிவில் நீங்கள் நகைச்சுவையாக எழுதினாலும்,... படிக்க வருத்தமாக உள்ளது. நானென்றால், சுக்கு, மிளகு திப்பிலியோடு பல வருடங்களை சளியோடு உறவாடி கழித்து விடுவேன். இனி மறுபடி இந்த அவஸ்தைகளை உங்களுக்கு தராமல் இருக்க அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ஆமாம்... காலண்டர் இரண்டு உள்ளதே என நினைத்து மீண்டும் மேலிருந்து படித்து வரும் போது ஒன்றை காணவில்லை. இப்போதெல்லாம் காலண்டர் மாட்ட யாருக்குமே (மனதில்) இடமேயில்லை. அதனால் எந்த முக்கியமான நாட்களும் மனதில் தங்க மறுக்கிறது/ மறந்தும் போகிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலண்டர் மாட்டலாம்.  எவ்வளவு மாட்டுவது! 

      ஸ்வாமி படமாய்ச் சேர்ந்து அதை தூக்கிப் போடவும் தோன்றாது!

      ன் மூக்கின் அவஸ்தைகள் ஒரு தொடர்கதை.

      // ஒரு மூக்குதானே உள்ளது //

      ஆனால் அதில் இரு துளைகள் உள்ளனவே!

      நீக்கு
  9. தங்கையைப் பார்த்து அண்ணன் பாடும் பாடலா?..
    'இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கிறேனு'க்கு ஈடு இணை வேறு ஏது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க ஜீவி ஸார்..  ஆமாம்.  கண்டிப்பாக அது மிகவும் இனிமையான பாடல்தான்.

      நீக்கு
  10. நல்லிரவு! நாளை வருகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று நான் ராமனாகிறேன்.  ஆனால் நீங்கள் ராவணனல்ல!

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    ரஜினி, ஸ்ரீதேவி காதல் பற்றி எங்கோ படித்ததாக நினைவு. ஆனால் பாவம் ஸ்ரீதேவியின் முடிவு இவ்வாறாக இருந்திருக்க வேண்டாம். விதியின் விளையாடல்களை யாரறிவார்..!

    இந்த மாதிரி மலையாள படங்களை நான் பார்த்ததில்லை.. வீட்டில் அனைவரும் எப்போதும் சனி, ஞாயிறுகளில் ஓடிடியில் படங்கள் பார்ப்பார்கள். அது முக்கால்வாசி இரவு நேரம் என்பதால் நான் தூங்கப் போய் விடுவேன்.

    பாடல்கள் இரண்டும் இனிமைதான் போலும்..! . கேட்கிறேன் ஜோக்ஸ் நன்றாக உள்ளது. மற்றதை பிறகு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. நீங்கள் மதிய நேரங்களில் ஓய்வாக OTT ல் படம் பார்க்கலாமே...

      நீக்கு
    2. இரண்டு பாடல்? ஓஹோ. அந்த இரண்டாம் பாடல் தான் இங்கே வரலையா? !!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  12. எனக்கு கொட்டவி வந்தது, உங்கள் கட்டுரையில் நீங்கள் கொட்டாவிபற்ரி எழுதியதை படித்ததால் அல்ல, இங்கு இப்போது இரவு 10:30 ஹிஹி! உங்களுக்கு அது தூங்கும் நேரம் கிடையாதே? என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்டு விட்டது. ஹிஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. 

      அட, நிஜமாகவே கொட்டாவி என்று படித்ததால் கொட்டாவி வந்ததா?

      நீக்கு
    2. இரவு பத்தரை மணிக்கு கொட்டாவி பற்றி படிக்காவிட்டாலும் கொட்டாவி வந்திருக்கும்.

      நீக்கு
    3. அதற்காகத்தான் சந்தேகமாய் கேட்டேன்.

      நீக்கு
  13. வியாழன் பதிவு வழக்கம் போல் அருமை....

    பதிலளிநீக்கு
  14. நெல்லை எக்ஸ்ப்ரஸாக இல்லாமல் மற்றவர்களுக்காக கொஞ்சம் வெய்ட் பண்ணியிருக்கலாம். இப்போது நான் சரியான விடையை எழுதினால் அவரை காபி அடித்தது போல ஆகாதா? இருந்தாலும் எழுதுகிறேன்:
    Accept the situation and move on with a smile. No matter whether the smile is real or fake, because no one really cares.
    இதைப் போன்ற ஜூஜூபி புதிர் எல்லாம் போடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் நான் படித்திருக்கிறேன்.  ஆனால் இப்போது சற்றே கடினமாகத்தான் இருந்தது.  எனவேதான் உங்களிடம் விட்டு விட்டேன்.  

      நீக்கு
    2. பா.வெ. சொல்லும் அதே கருத்துத் தான் எனக்கும். முதலிலேயே எழுத நினைச்சுப் பின்னர் ஆச்சரியம் கொடுக்க எண்ணி எழுத வந்தால் நெல்லை போட்டுவிட்டார். இங்கே பா.வெ.வேறே.!!!!!!!

      நீக்கு
    3. நாம தான் நினைக்கறதையும் உல(ண)த்துவதையும் தவிர்த்து வேறே என்ன செய்யறோம்? அதான் அதிகம் சிந்திப்பவர் லிஸ்டில் இருக்கோமேனு நினைச்சேன்.

      இதை எல்லாம் வெளியிடாமல் வைச்சுட்டுப் பின்னர் சொல்லிப் பரிசு கொடுத்தால் என்ன? ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டன. வைகோசாருக்குப் பின்னர் யாருமே பரிசெல்லாம் கொடுக்கிறதில்லை.

      நீக்கு
  15. பொன்னென்பதோ பூவென்பதோ பாடலை அப்போது விவித பாரதியில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அது சரி எம்.ஜி.சி. சுகுமார் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? சித்ரா லட்சுமணனிடம் கேட்டால் சொல்வாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை. ஆனால் அது அவர்தானே? சரியாகத்தான் சொல்லி இருக்கிறேனா?

      சித்ரா லட்சுமணனிடம் இரண்டு கேள்விகள் அவ்வப்போது கேட்டிருக்கிறேன்.  மாதங்களாகியும் பதிலில்லை.

      நீக்கு
    2. எம்ஜி சக்ரபாணி மகனா?

      நீக்கு
  16. மூக்கின் இரண்டு துவாரங்களிலும் துணியை வைத்து அடைத்து விட்டால் வாயால் மூச்சு விட்டீர்களா? எதுவும் ஸாப்பிடவோ குடித்திருக்கவோ முடியாது என்று தோன்றுகிறதே? எத்தனை மணி நேரம் இந்த அவஸ்தை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான்.  ஆனால் அடைபடும் அளவு துணி அல்ல.  மூக்கின் துளைகளின் ஓரத்தில் துணி இருக்கும்.  மூச்சு விடும்போது துணி லாலி ஆடும்!

      நீக்கு
  17. கவிதை எங்கோ படித்தது போல இருக்கிறது. நல்ல கவிதை.
    பாதாம் ஹல்வா ஜோக் புன்னகையை வரவழைத்தது. முன்பெல்லாம் வெ.சீதாராமன், ரேவதி பிரியன் போன்றவர்கள் நிரைய பத்திரிகைகளில் நகைச்சுவை துணுக்குகள் அடிக்கடி எழுதுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வெ சீதாராமன் சகோதரரும் எழுதுவார்.  அவர் லைப்ரரியன் என்று ஞாபகம்.  அப்புறம் ஒருவர்..  கொஞ்ச நாள் கேன்சரில் போராடி மீண்டார்.  ஒரு பக்கச் சிறுகதைகளும் எழுதி இருக்கிறார்.  அவரும் அடிக்கடி எழுதுவார்.  பெயர் ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.  அல்லது நீங்களே சொல்லி விடுவீர்கள்!

      நீக்கு
  18. விசாகா ஹரி இரண்டாவது முறையாக வியாழனன்று வந்து விட்டார். அடிக்கடி கேட்கிறீர்கள் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவாக வரிசையில் வருகிறது!  அவர் பக்கத்தில் ஷேர் செய்யும் ஆப்ஷன் கொடுங்கள் என்று கேட்டிருக்கிக்கிறேன்.  உங்களுக்குத்தானே விளம்பரம் என்றும் கேட்டிருந்தேன்.  என்னுடைய ரீல்ஸே வரிசையில் வரும்போது ஜிவ்வென்று இருக்கும்!

      நீக்கு
    2. ரீல்ஸா? இதுக்கு என்ன விதிகள்? என்ன கட்டுப்பாடுகள்? எனக்கு என்னமோ இதெல்லாம் பிடிக்கவும் இல்லை, புரியவும் இல்லை. :( மனம் அதில் ஈடுபடவில்லை. நேத்திக்கோ/முந்தாநாளோ ஒரு சின்னப் பெண் நீட் போராளி என்னும் பெயரில் பிரதமரின் 13 ஆம் நாள் காரியத்தில் பண்ணிய உணவுனு எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கே, தலைவிதினு நினைச்சேன். குழந்தைகளிடம் கூட மனிதாபிமானமே இருப்பதில்லையேனு வருத்தமாகவும் இருந்தது.

      நீக்கு
  19. ​மூக்கு ஆபரேஷன் இனி எத்தனை வாரங்களுக்கு வரும்.
    encrypt செய்த செய்தியை நெல்லை சரியாக decrypt செய்து விட்டார். நானும் செய்தேன் என்றாலும் எனக்கு இரண்டு பிழைகள் வந்தன. accept க்க பதில் access என்றும், smile க்கு பதில் email என்றும் செய்தேன். நெல்லை ஜெயித்து விட்டார். பாராட்டுகள் பல.

    இறப்பு கவிதை spontanious என்றாலும் இறப்பைப் பற்றி ஏன் negative சிந்தனை வந்தது என்று புரியவில்லை. அவ்வளவு depression ஆ?

    பாதாம் அல்வா ஜோக் அருமை. ஏனோ Dennis ஐ ஞாபகப் படுத்தியது.
    ​இந்த வாரம் மேட்டர் திகையவில்லை.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
  20. கவிதையில் உள்ள கருத்துகள் பல எண்ணங்களை எழுப்புகிறது. தினமும் கோவிலில் பிரபந்தங்களைச் சேவிப்பவருக்கு குரல் போனால், நிறைய பேசுபவர்களுக்கு கேட்கும் சக்தி போனால், ........... நடிப்பதையே, இயக்குவதையே, இசையமைப்பதையே...... வாழ்க்கைப் பயணமாக்க் கொண்டவர்களுக்கு வாய்ப்பு போனால்..... கணவனிடம் மரியாதை போனாலோ இல்லை மனைவியிடம் மரியாதை போனால்..... மனிதன் வாழ்க்கையில் பலமுறை சாகும் சந்தர்ப்பம் இருக்கிறது.

    கர்ணன் படத்தில்... கர்ணனை யார் யார் சாகடித்தார்கள் என்ற வசனம் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  21. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இப்படி எல்லாம் சோதனை செய்வாங்கனே தெரியாதே! நல்லவேளையா நான் இதிலெல்லாம் மாட்டிக்கலை. நேரே லங்ஸ் சிறப்பு மருத்துவரிடம் போயிருக்கணும். ஆனால் எங்க குடும்ப மருத்துவர் கார்டியோ சர்ஜனைப் பார்க்கச் சொன்னார். அவர் அந்தக் காலத்து மனுஷர். நான் அவரிடம் போகும்போதே 60 வயதுக்கும் மேல் இருக்கும். அதோட சென்னை ஜிஎச்சின் டீனாகப் பல ஆண்டுகள் இருந்திருக்கார். இந்த நோயாளிகள் எல்லாம் அவருக்கு ஒண்ணுமே இல்லை. ஆகவே எக்கோ கார்டியோ, ட்ரெட்மில், ஈசிஜி, ஈஈஜி என எடுத்துட்டு மத்தது வேண்டாம்னுட்டார். இதயம் நல்லா இருக்கு. லங்க்ஸில் தான் பிரச்னைனு சொல்லி சில.பல கைவைத்தியங்களும் சொல்லி எளிமையாக மருந்துகள் கொடுத்தார். சுமார் 2004/2005இல் ஆரம்பித்த அவருடனான என் சிகிச்சை இங்கே ஸ்ரீரங்கம் வந்தும் தொடர்ந்தது. இதுக்காகவே சென்னை போவோம். பின்னர் நாலைந்து வருஷங்கள் முன்னர் அவர் இல்லைனு தெரிந்ததும் இங்கேயே ஒருத்தரிடம் போக ஆரம்பிச்சோம்.

    பதிலளிநீக்கு
  22. ஜிவாஜி படப்பாட்டு ஓகே. நுகர்வோர் வழக்கும் அதன் முடிவும் அசத்தல். இப்படிப் பலரும் தைரியமாக முன்வரவேண்டும். சானியா முன்னரே இந்த பதிலைச் சொல்லிட்டார்.. எனக்கு என்னமோ இவரிடம் அத்தனை ஈர்ப்பு இருந்ததில்லை.

    இறப்பு பற்றிய கவிதை! ஸ்ரீராம் எழுதினதா என்ன? என்ன ஆச்சு? "காஸ்" உள்ளே செலுத்தினதில் தும்மிட்டீங்களோ? நலம் தானே?

    நல்லா இருக்கு. படிச்சேன். இது மாதிரி நிறையவே வருதே!

    ராமானுஜன்னு ஒருத்தர் இசை????? பட்டாபிராமன் இயக்கம்? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இவங்கல்லாம் யாரு?

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீதேவியின் இந்த சோகக்கதை ஏற்கெனவே படிச்சது தானே! பாவப்பட்ட ஜன்மம். பிறருக்காகவே தன் வாழ்க்கையை முழுதும் வாழ முடியாமல் சாகடிக்கப்பட்டார். இனி என்ன சொல்லி என்ன செய்வதுஆஆஆஆஆஅ/ மலையாளப்படம் இங்கே பிரைமிலோ அல்லது நெட்ஃப்ளிக்ஸிலோ வருதானு பார்க்கணும். முடிஞ்சால் பார்க்கிறேன்.

    விசாகா ஹரியின் சிரிப்புக்குப் பின்னர் வரும் வீடியோ வேலை செய்யாது என்கிறது. என்ன விஷயம் என்பதைப் பின்னர் தான் பார்க்கணும். வெ.சீதாராமன் அந்தக் காலத்து ஜோக்காளர் தான். ஆனாலும் இந்த ஜோக்கில் சிரிப்பு வரலை. வருத்தமாத் தான் இருக்கு. முதலானது பரவாயில்லை ரகம். ராஜ்குமார் பாரதியின் உடல்நிலை இன்னும் சரியாகலை போலிருக்கு. பார்க்கவே வருத்தமா இருக்கு. எப்படி இருந்த மனிதர்! இப்படி ஆகிட்டார். :(

    பதிலளிநீக்கு
  24. பாதாம் அல்வா ஜோக் பார்த்ததும் தொலைக்காட்சி விளம்பரம் ஒண்ணு நினைவில் வருது. சின்னப் பையர் ஒருத்தர் தாத்தா கோவிச்சதால் வீட்டை விட்டுப் போறேன்னு கிளம்பிப் போயிட்டிருப்பார். அதை அறிந்த அவங்க வீட்டுப் பரம்பரை வேலைக்காரர் ("வடக்கே காகா") என அழைப்பார்கள். குழந்தையைத் தொடர்ந்து வந்து ஏதும் அறியாதவர் போலப் பேச்சுக் கொடுக்கக் குழந்தையும் ஏமாந்து தான் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பதாய்ச் சொல்லும். அதைக் கேட்ட காகா, அட, முன்னா! அப்படியா? இன்னிக்குச் சாயங்காலம் உன் தாத்தா உனக்காக ஜிலேபி பண்ணச் சொல்லி இருக்காரே! என்ன செய்யலாம் இப்போ? எனக் கவலையுடன் கேட்பதைப் போல் பாவனை செய்ய அந்த வலையில் விழுந்த குழந்தை "ஜலேபி?" மை ஆவூங்கா!" எனச் சொல்லிக் கொண்டு வீட்டுக்குத்திரும்பிப் போகும். எண்ணெய்க்கான விளம்பரமோ நெய்க்கான விளம்பரமோ நினைவில் இல்லை. தூர்தர்ஷனில் வந்ததுனும் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. வருஷா வருஷம் இங்கே ஸ்ரீரங்கம் வந்ததில் இருந்து வீடு பூரா காலன்டர்கள் வாரி இறையும். இந்தத் தரம் நாங்க இல்லாததால் காலன்டர் ஒண்ணே ஒண்ணு தினசரிக்கானது பில்டர் கொடுத்தது தான் வேலை செய்யும் பெண் வாங்கி வைச்சிருந்தார்.

    பதிலளிநீக்கு
  26. Unavailable
    This video can't be embedded because it may contain content owned by someone else.
    Video on Facebook · Learn// last video.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!