அம்மா சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.2.15

'திங்க'கிழமை : அம்மா சமையல் மாதிரி இல்லை - ஒரு ஆய்வு.


எதையாவது சாப்பிடக் கொடுத்தால் எல்லார் வீட்டிலும், எல்லோரும் அடிக்கடி அல்லது அவ்வப்போது சொல்லும் வசனம் ஒன்று, "என்ன இருந்தாலும் எங்க அம்மா செய்தது போல இல்லை.."    மனைவிகளைக் கடுப்பேற்றும் வசனம்.  அந்த மனைவிகள் பின்னால் நம் வாரிசுகள் இதே வசனத்தை அவர்கள் துணையிடம் சொல்வார்கள் என்று எண்ணிப் பார்ப்பது கூட இல்லை!
 
அது ஏன் அப்படி? 

மனைவிக்கு சமைக்கத் தெரியவில்லையா?  அல்லது அம்மா சமைத்தது மாதிரி இனி யாரும் செய்யவே முடியாதா?  அப்போதிருந்த சமையல் பொருட்களுக்கும், இப்போதைக்கும் வித்தியாசம் இருக்கிறதா?  இல்லை, இப்போது அந்தப் பண்டத்தைச் செய்த மனைவி அல்லது மற்றவர்கள் கையில் திறமை / கைமணம்  இல்லையா?
 

                                                    
 
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.  சொல்லப் போனால் இப்போது செய்யப்பட்டிருக்கும் அதே பண்டம் முன்பை விட ருசியில் மேம்பட்டுக் கூட இருக்கலாம்.
 
அப்படி என்றால் இப்போது நன்றாயிருக்கிறது என்று சொல்ல நம் ஈகோ இடம் கொடுக்கவில்லையா?  மனைவிக்கு தலைக்கனம் ஏறிவிடும் என்று நினைக்கிறோமோ?  அப்படியும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
 
பின் என்னதான் விஷயமாக இருக்கும்?

பழைய பாடல்களைக் கேட்கும்போது ஒரு சந்தோஷம் வருகிறது பார்த்தீர்களா?  ஏன்?  'அமைதியான நதியினிலே ஓடம்..'. என்று கேட்கும்போது நம்மை மறந்து விடுகிறோம்.  கண்கள் மங்கி ஒரு கனவுலகத்துக்குள் போய்விடுகிறோம்.
 

                                                                   
 
என்ன உலகம்?  நாம் அந்தப்  படம் வந்த காலத்துக்கோ அல்லது பாடலை  நாம் முதலில் கேட்ட அந்த இடத்துக்கோ நம் மனம் சென்று விடுகிறது. அந்த இளமைக் கால நினைவைத் தொலைக்க விரும்புவதில்லை நம் உள்மனம்.
 

                                                      
இதே கதைதான் சாப்பாட்டு விஷயத்திலும் நடக்கிறது என்று தோன்றுகிறது.  நாம் நமது சிறு பிராய நினைவுகளை விட்டு வர மறுப்பதுதான், அதை இழக்க / மறக்க விரும்பாததன் குறியீடுதான் "அந்த ருசி போல இது இல்லை" என்று நம்மைச் சொல்ல வைக்கிறது.
 

                                                     
 
அம்மாவின் மடியை மறக்க விரும்பாத மனம்.   இந்தச் சாக்கில் சிறு பிள்ளையாகவே இருக்க விரும்பும் மனம்.
 
இதுதான் காரணம்.  என்ன சொல்றீங்க?
 
அவ்ளோதான்!


தங்கமணிகளுக்குச் சமர்ப்பணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன்.  அப்புறம் படிப்பவர்கள் இது மனைவியைச் சமாதானம் செய்யச் சொல்லப்படும் சாக்கு போக்கு என்று நினைத்துவிடக் கூடாதே என்று தலைப்பை மாற்றி விட்டேன்!