17.1.26

ஆறாயிரப்படியிலிருந்து ஒரு திருவாய்மொழி நான் படிச்ச கதை

 

                         நாலாயிர திவ்யப் பிரபந்தம் வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

முன்னுரை பகுதி 3

இந்த திவ்யப் பிரபந்தப் பாசுரங்களுக்கு எப்படி பொருள் சொல்வது? வைணவ சமயத்தில் (சித்தாந்தம் என்பதை சமயம் என்ற பொருளில் எழுதுகிறேன்) எல்லாவற்றையும் ரகசியமாக வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அதாவது பொருத்தமானவர்களுக்கே அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அது போல, ஓராண் வழி சம்ப்ரதாயம் என்று ஒன்று இருந்தது. ஒரு ஆச்சர்யாருக்கு/குருவுக்கு பல சீடர்கள் இருந்தாலும், வைணவ சம்ப்ரதாயத்திற்கு அடுத்த குருவிடம்தான் (சீடர்களில் பொருத்தமானவரிடம்) சம்ப்ரதாயத் தலைமை செல்லும். நாலாயிர திவ்யப் பிரபந்தங்களின் பொருளும், மற்ற வைணவ சம்ப்ரதாய நூல்களின் விளக்கங்களும் குருவினால், பொருத்தமான சீடர்களுக்கு மாத்திரம்தான் விளக்கப்படும்.  நாதமுனிகள்தாம் குரு பரம்பரையின் முன்னோடி.  அவர் காலம் தொடங்கி இராமானுசர் காலம் வரை இந்த ஓராண்வழி சம்ப்ரதாயமே இருந்து வந்தது. நாதமுனிகளுக்குப் பிறகு அவருடைய சீடர் உய்யக்கொண்டார், பிறகு மணற்கால் நம்பி, பிறகு நாதமுனிகளின் பெயரர் ஆளவந்தார், பிறகு திருமாலையாண்டான், பிறகு இராமானுசர் என்று அறுவர் தலைமுறையில் திருவாய்மொழிக்கு வாய்மொழி உரை விளக்கம் ஓராண்வழியே உபதேசிக்கப்பட்டுச் சென்றது. பிறருக்கு அந்தப் பொருள் சென்றடையவில்லை. சீடர்களுக்கு அர்த்தம் தெரிந்திருந்தாலும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு/உரிமை/தகுதி ஒற்றை குருவுக்கே இருந்தது. இந்த முறையை மாற்றியவர் எம்பெருமானார்என்று பெயர் பெற்ற இராமானுசர்தாம். 

இராமானுசருக்கு முன்னமே வைணவ சமயம் இருந்தபோதிலும், அதனைப் பலருக்கும் எடுத்துச் சென்றதில் முன்னோடி, இராமானுசர். அதனால்தான் வைணவ சமயத்தை எம்பெருமானார் தரிசனம்என்றே சொல்கின்றனர். இராமானுசர் காலத்திற்கு 350 வருடத்திற்குப் பிறகு அவதரித்த ஸ்வாமி மணவாள மாமுனிகள் தாம் இயற்றிய உபதேச ரத்தின மாலையில், 

ஓராண் வழியாய்   உபதேசித்தார் முன்னோர் *

ஏரார் எதிராசர் இன்னருளால் ** பாருலகில்

ஆசையுடையோர்க்கு எல்லாம்   ஆரியர்காள்! கூறுமென்று *

பேசி வரம்பறுத்தார் பின்.    (37)                                                                                                  

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு

நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்-அம்புவியோர்

இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த

அந்தச் செயல் அறிகைக்கா  (38) 

என்று கூறுகிறார். 

இராமானுசர் காலத்தில்தான் திருவாய்மொழிக்கு பொருள், ஏட்டில் எழுதப்பெற்றது. இராமானுசரின் சீடரும், அவருடைய மாமன் மகனுமாகிய திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்பவர், இராமானுசரை திருவாய்மொழிக்குப் பொருள் எழுத வேண்டும் என்று வேண்டிகொண்டார். தானே உரை எழுதினால், திருவாய்மொழிப் பொருளுக்கு கரை எழுப்பியதாக ஆகிவிடும் என்று பிறர் நினைத்துவிடக் கூடாது, அவரவர் அறிவுத் திறனுக்கு ஏற்ப பிற்பாடு இந்த தரிசனைத்தை வளர்க்க வருபவர்களால் விரிவான பல பொருளுரைகள் தோன்றவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம். அதனால் திருக்குறுகைப் பிரானையே வியாக்கியானம் (பொருளுரை) எழுதப் பணித்தார். முதன் முதலாக திருவாய்மொழிக்கு மணிப்பிரவாள நடையில் (சமஸ்கிருதம் தமிழ் கலந்த நடை, சட் என்று எல்லோரும் இந்தக் காலத்தில் புரிந்துகொள்ள இயலாது, ஆனால் அந்தக் காலத்தில் இந்த நடை பரவலாகப் பலருக்கும் புரிந்திருந்தது. அந்தக் காலம்-9ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை)  அவர் எழுதிய வியாக்கியானமே ஆறாயிரப் படி என்று அழைக்கப்படுகிறது (ஒரு படி என்பது 32 எழுத்துக்களைக் குறிக்கும். அப்படி ஆறாயிரம் படிகளைக் கொண்டது இந்த நூல்) 

இப்போ உங்களுக்கு மணிப்பிரவாள நடை என்றால் என்ன என்ற சந்தேகம்வரும். வடமொழியும் தமிழும் சேர்ந்த நடை. ஆறாயிரப்படியிலிருந்து ஒரு திருவாய்மொழி பாசுரத்திற்கு எப்படி அர்த்தம் எழுதியிருக்கிறார்கள் என்ற உதாரணம் தருகிறேன். 

எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில

வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே    (1.2.10) 

(எண்பெருக்கு) இப்படி சகலசமாச்ரயணீயனாகச் சொல்லப்பட்ட ஈச்வரன் தான் ஆரென்னில்; அசம்க்யேயராய் ஞானாநந்தஸ்வபாவராயிருந்த சர்வாத்மாக்களையும் நித்யசித்தகல்யாணகுணங்களையும் உடையனாய் இருந்த நாராயணன். அவனுடைய ஆச்ரிதரை ஒருகாலும் கைவிடாதே ரக்ஷிக்கும் ச்வபாவமான திருவடிகளை ஆச்ரயி என்கிறார். 

சுலபமான ஒரு பாசுரத்தை எடுத்துக்காண்பித்திருக்கிறேன். காலக்ஷேபம் (அல்லது சீடர்களுக்குப் பொருளுரைத்தல், விரிவுரை) காலத்திலும் இப்படித்தான் பொருளுரைப்பார்கள். இதற்கான காரணம் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். திருவாய்மொழி சமஸ்கிருத வேதத்தின் சாரம் தமிழில். அதுபோல திருவாய்மொழி இராமாயணம், மகாபாரதம் மற்றும் பல புராணங்களில் உள்ளவற்றில் உள்ள கதைகளையும் அடக்கியது. அதனால் மூல வாக்கியங்களையும் குறிப்பிட்டே விளக்கவுரைகள் சொல்லப்பட்டன. பாசுரத்தைப் பார்த்தாலும், எழுத்துக்கள் சேர்ந்திருப்பதைக் காணலாம். அந்தக் காலகட்டத்தில் இவற்றில் ஈடுபட்டவர்கள், அதாவது காலக்ஷேபம் கேட்பவர்களும் சமஸ்கிருத ஞானம் பெற்றிருந்தனர். மூல ஏட்டில் இருக்கும் பாசுரம்  புரியும்படி இருக்கவேண்டும் என்றால், 

எண்பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில

வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே 

என்று இருக்கவேண்டும். 

இதன் பொருள்:  எண்ணிக்கையால் மிகுந்து இருக்கின்ற ஞானம், ஆனந்தம் போறவற்றிர்க்கு இருப்பிடமாயும், ஞானமயமாய், அழிவற்ற புகழினை உடையவனான ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவாயாக. இதில் நாராயணனின் திருவடிகள் எதற்கும் ஈடாகாது, அதனால் அதனைப் பற்று என்கிறார்.  

ஸ்ரீபெரும்பூதூர் இராமானுசர், சரம திருமேனியின் வடிவம், ஸ்வாமி மணவாள மாமுனிகள்

தொடர்வோம்...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நான் படித்த கதை - பானுமதிவெங்கடேஸ்வரன்

புதுப்புனல் சிறுகதை தொகுப்பு -அனுராதா ஜெய்சங்கர்

நான் படித்த புத்தகம் 

புதுப்புனல் சிறுகதை தொகுப்பு - அனுராதா ஜெய்சங்கர் - புஸ்தகா பப்ளிகேஷன்ஸ்.

சமீப காலங்களில் பத்திிரிகைகள், மற்றும் இணையங்களில் நடத்தப்படும் சிறுகதை, குறுநாவல் போட்டிகளில் அதிகம் பரிசு பெறுபவர்களில் ஒருவர் அனுராதா ஜெய்சங்கர். புதுப்புனல் என்னும் இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பதினாங்கு கதைகளில் நான்கு பரிசு பெற்றவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு பெண் எழுத்தாளர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பெண்களின் துயரங்களை, தியாகங்களை மாய்ந்து மாய்ந்து எழுதி பெண்களின் ஆதரவை சம்பாதித்து விடலாம். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் அவற்றை ரசிக்கவும் மாட்டார்கள், ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இன்றைய பெண் சந்திக்கும் சவால் வேறு, அவள் சூழலே வேறு. அவற்றை மிக அழகாக கையாண்டிருக்கிறார் அனுராதா ஜெய்சங்கர்.

புதுப்புனல் என்னும் முதல் கதையில் ஒரு பள்ளியில் வாட்ச்மேனாகபணியாற்றும், குழந்தைகள் இல்லாத ஒரு முதியவர் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனை தன் பேரனாகவும், அவன் தாயை தன் மகளாகவும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கார்டியனாக மாறுகிறார்.

கடல் கன்னி அடடா! கடலைப் பற்றிய வர்ணனைகள் இவரே ஒரு கடல் கன்னியோ என்று எண்ண வைக்கிறது. அற்புதமான சொல்லாடல்!

டீன் ஏஜ் குழந்தைகளைை வைத்துக் கொண்டிருக்கும் மத்திம வயது பெண் தன் மனக் கிலேசங்களை வயதான பெற்றோர்களிடம் கொட்ட வருகிறாள், அதைச் செய்தாளா? ‘மூச்சு விடும் நேரம’ கதை நாயகி நவீன பெண்ணாயிற்றே? செருப்பை மட்டிக் கொள்ளும் பொழுது ஷூ ஸ்டாண்ட் அருகே இருக்கும் ஒட்டடையை பார்த்து நாளைக்கு அம்மா, அப்பாவிற்காக வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்ரு நினைக்கும் பெண் பெற்றோர்களுக்கு கவலையைத் தருவாளா?

‘பருப்பு அளவு பொருப்பு’ புன்னகைக்க வைக்கும் ஃபேமிலி டிராமா.

‘இனியொரு விதி செய்வோம்’ கதையில் சிறுமிகளை வண்புணர்வு செய்யும் பாதகர்களுக்கு என்ன விதமான தண்டனை தர வேண்டும் என்று கொஞ்சம் சினிமாட்டிக்காக யோசித்திருக்கிறார்.

‘நானும் ஸ்ருதியும் என் கேர்ல் ஃப்ரண்ட்சும்’ கதையில் பல வருடங்களுக்குப் பிறகு தன் பள்ளி ரீ யூனியனுக்குச் செல்ல விரும்பும் கணவன் தன் மனைவியையும் அழைக்க, வளர்ந்த குழந்தைகள் அவருடைய முன்னாள் கேர்ல் ஃப்ரண்டுகளைப் பற்றி கேட்க, தர்மசங்கடமாக உணரும் தந்தைக்கு கோபம் வருகிறது. ஆனால் அதில் கோபம் கொள்ள எதுவுமில்லை என்று முதிர்ச்சியோடு மகள் உணர்த்துகிறாள்.

தொலைகாட்சிகளில் புதிய திரைப்படங்களை ‘உலக தொலை காட்சிகளில் முதல் முறையாக’ என்று விளம்பரம் செய்வார்கள். அதைப்போல இதுவரை யாரும் எழுதாத கிஃப்டெட் சில்ட்ரென்(gifted children) பிரச்சனைகளைப் பற்றி எழுதியிருக்கிறார் அனுராதா ஜெய்சங்கர். மிகவும் சிறப்பான படைப்பு.

பேட்மிண்டன் வீரனான ஆணினால் அதே விளையாட்டு வீரங்கணையான மனைவியின் திறமையை ரசிக்க முடியவில்லை. அதை மாற்றுவதும் ஒரு ஆண்தான். ‘லவ் ஆல்’ கதை பேசும் விஷயம் இது.

‘அரும்பு மலரும் நேரம்’ வாழ்வின் கடை நிலையில் இருக்கும் இருவரிடையே காதல் அரும்புவதை அழகுற சொல்லும் கதை. “நம்பி ஏறலாமா?”, “நம்பிக்கை இருந்தா ஏறு” ஏறினா இறங்க மாட்டேன்” நானா இறங்கச் சொல்ல மாட்டேன்” ரசிக்கக் கூடிய உரையாடல்கள்.

சிறு வயதில் தனக்கு தைரியம் கொடுத்து, ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய தன் தந்தை வயதான காலத்தில் நோயும், தனிமையும் படுத்தி எடுக்க பயத்தில் நடுங்கும் பொழுது தாயாக மாறி அவரைத் தேற்றும் கருணையை ‘உறவுச் சக்கரத்தில’' விவரிக்கிறார்.

இந்த தொகுப்பின் கடைசி குறுநாவல் ‘உயிரில் மலர்ந்த சுடர்கள்’ என்னும் கதை. தன்னுடைய ஆராய்ச்சிதான் பிரதானம் என்று இருக்கும் ஒரு விஞ்ஞானிை வெங்கடேஷை மணந்து கொள்ளும் மாலினி. இருவரும் சந்தோஷமாகவே வாழ்கிறார்கள், இருவரிடமும் எந்த குறையும் இல்லை, ஆனாலும் குழந்தை பிறப்பது தள்ளிப் போகிறது. செயற்கை கருத்தரிப்பிற்கோ, வேறு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளவோ மாலினி விரும்பவில்லை. “நம்மிருவரிடமும் எந்தக் குறையும் இல்லை ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை என்றால் நான் பிறந்ததற்கு வேறு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்” என்று கூறுகிறாள். ஒரு முறை வெங்கடேஷ் வெளிநாட்டிற்கு கிளம்பும் முன் அவனிடம் ஒரு சந்தோஷ செய்தியை சொல்ல வேண்டும் என்கிறாள். அவன் பிரயாண தயாரிப்பு மும்முரத்தில் அது என்னவென்று கேட்க மறந்து விடுகிறான். ஃபோனில் சொல்ல மறுத்து விடுகிறாள். ஆனால் அவன் நாடு திரும்பும் முன்னரே மாரடைப்பால் மரணித்து விடுகிறாள். என்ன சொல்ல விரும்பினாள்? ஒரு வேளை காத்திருந்த தாய்மை கனிந்து விட்டதோ? வெங்கடேஷின் தேடலுக்கு கிடைக்கும் விடை.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அனுராதாவின் எழுத்தில் யாருடைய பாதிப்பும் இல்லாதது ஒரு சிறப்பு. எதையும் வலிந்து புகட்டாமல் போகிற போக்கில் எளிமையாக சொல்கிறார்.

“பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் கொஞ்ச நேரம் வெளியே நிற்க வைப்பது போல்.”

“கல்யாணம் முடிந்து காலியான சத்திரம் போல காலியாகக் கிடந்தது பள்ளிக்கூடம்”

“அவள் பார்வை என்னைத் தொட்டுவிட்டு திரும்பிய வேகம், காலைத் தொட்டுவிட்டு ஓடுகிற அலை போல இருந்தது”

வீட்டிற்குள் புது ஆள் வந்தவுடன் எப்போது நம்மைப் பார்ப்பார்கள் என்று எட்டி எட்டி பார்த்துக்கோண்டிருக்கும் குழந்தை போல புது இலைகளுடன் முருங்கை கிளைகள் பால்கனி வழியே உள்ளே நுழைந்து அசைந்து கொண்டிருந்தன’ என்று வித்தியாசமான உவமைகள் ரசிக்க வைக்கின்றன. இவருடைய எழுத்தில் இருக்கும் பாசிடிவ் அப்ரோச் பாராட்டப்படக்கூடியது. எதிர்பார்ப்பை தூண்டும் எழுத்து உங்களுக்கு இன்னும் நிறைய எழுதுங்கள் அனுராதா.

2 கருத்துகள்:

  1. 'கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
    கன இருள் அகன்றது காலையம்பொழுதாய்'
    காலை வணக்கம்!

    பதிலளிநீக்கு
  2. இன்று நெல்லைஜியின் முன்னுரை #3, பானுமதி வெங்கடேஸ்வரன் எழுதியுள்ள புத்தக விமர்சனம், ஆகிய இரண்டுமே அருமை!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!