Tennis லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tennis லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.4.10

ஐ. பி எல் அனுபவங்கள்..

சாய்ராம் கோபாலன் ஒரு முட்டிக் கால் வலி மருந்து சிபாரிசு பண்ணியிருந்தார்.  


அதை சாப்பிட வேண்டுமென்றால் முட்டி வலி இருக்க வேண்டும். அது எனக்கு இல்லையே என்ற போது டென்னிஸ் ஆடுங்கள் வரும் என்று சொல்லியிருந்தார். எனவே டென்னிஸ் ஆட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.




பையன் ஆர்வமாக ஓடிவந்தான்.

"என்னடா...என்ன ஆச்சு.." 

"கிடைச்சிடுசிப்பா...கிடைச்சிடுச்சி.."
நெட்டிலும் நேரிலும் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் ஐ.பி.எல் டிக்கெட்டுக்கு அலைந்த பையன் கடைசியில் எப்படியோ வெற்றி பெற்றான். டிக்கெட் கிடைக்காது என்று நம்பி...நிம்மதியாய் இருந்தவன் நம்பிக்கையில் மண் விழுந்தது. அட, இப்படி எல்லாம் செய்கிறார்களே என்று அங்கலாய்த்த ஐ. பி. எல்லை பையன் வற்புறுத்தல் காரணமாக நேரில் போய்ப் பார்க்க வேண்டி வந்தது. (நல்ல வேளை...ஐ.பி.எல் தேவையா என்று கேள்வி கேட்ட புலவன் புலிகேசி லீவில் இருக்கிறார்...)

சென்னை மற்றும் கோல்கட்டா இடையே நடந்த லீக் மேட்ச்...இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என்றாலும் முன்னரே போய் விடுதல் நலம் என்று தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் ஃபோன் செய்து வற்புறுத்தியதால் மாலை நான்கு மணிக்கே கிளம்பி மைதானத்தை அடைந்தால் மனிதக் கடல்...! நீந்தி வரிசையில் நின்று ஒரு வழியாய் உள்ளே சென்று மே...லே...மேல் வரிசைக்கு சென்று அமர்ந்தோம்.

உள்ளே ஃபோன் எடுத்துச் செல்லக் கூடாது,தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லக் கூடாது என்று சொன்னார்களே என்று பார்த்தால், அதெல்லாம் ஒன்றுமில்லை, இரண்டுமே எடுத்துச் செல்லலாம் என்று விட்டு விட்டார்கள். உணவு, பெரிய வாத்தியங்களுக்குதான் அனுமதி இல்லை.

ஆனால் செல் உள்ளே எடுக்கவில்லை. யாருக்கும் பேசவும் முடியவில்லை. அழைப்பும் வரவில்லை. ("ஸ்க்ராம்ப்ளர் போட்டிருப்பாங்க அங்கிள்... நான் கூட இப்படிதான் ஏமாந்தேன்...கீழ படிக் கட்டுக்குக் கீழ போய்ப் பேசுங்க..எடுக்கும்" என்றான் பின்னாலிருந்து ஒரு எட்டு வயதுப் பொடியன்!)

எனக்கு தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!

மேலேயிருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டரில் விளையாடும் பொம்மைகள் போல விளையாட்டு வீரர்கள்...டிவியில் பார்ப்பது போல பெரிதாய்த் தெரியாததில் வருத்தம்தான்..! ஆனால் பையன் என்னமோ இது ஹசி, அது கங்குலி என்றெல்லாம் கை காட்டிக் கொண்டிருந்தான். ரசிகர்களுக்குப் பரிசு கொடுக்கும் கேட்ச்கள், மற்றும் மைக் வைத்துப் பேசுபவர்கள் எல்லாம் கண்ணில் படவில்லை.

மைதானத் துளிகள்...

மைதானத்துக்கு வெளியே எல்லா டீம் சட்டைகளும் நூற்று எண்பது ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். மேலும் தலைத் தொப்பி, ஊதுகுழல் ஆகியவையும்...

முன்னாலேயே போய் விட்டதால் சாப்பிட ஏதாவது வாங்கிதான் ஆக வேண்டும்...ஆவின் பால் கோவா கப் போல இருக்கும் கப்பில் வெஜ். பிரியாணி எண்பது ரூபாய். சுவைதான். ஆனால் காணாது.மற்ற ஐட்டங்கள் பர்கர், சிப்ஸ் என்று எதை எடுத்தாலும் ஐம்பது ரூபாய்!

ஜூஸ் கப் போலக் கப்புகளில் ஐந்து ரூபாய் கொடுத்தால் தண்ணீர் நிரப்பித் தருகிறார்கள்.

ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்சை தூக்கிக் கொண்டு (ஆள் வைத்துதான்..!) ஒவ்வொரு இடமாக நகர்ந்து நகர்ந்து சென்று சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஓவர் இடைவெளியிலும் குத்துப் பாடல்கள்...ஆட்டங்கள்...

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பும் நடந்து கொண்டிருக்கும்போதும் ஏராள பறவைகள் மேலே பறந்த வண்ணமிருந்தன.

ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் எல்லா இடங்களையும் இணைத்து பஸ்கள் விட்டிருந்தது சிறப்பு.

வயதான தம்பதிகள் முதல் குழந்தைகள் வரை ஆட்டத்தை மிக ரசித்தார்கள். அட, நம்ம தாத்தா கலைஞர் கூட பேரனுடன் அமர்ந்து பார்த்தாராம்..எங்களுக்குத் தெரியாது மறு நாள் டிவி பார்த்துதான் இதையும், அம்பையர் இரண்டு மூன்று அவுட்கள் தவறாகத் தந்தார் எண்பது போன்ற விவரங்களும் தெரிந்தன.

அது சரி, ஆட்டம் என்கிறீர்களா? அது யாருக்குத் தெரியும்? யார் பார்த்தார்கள்..பையனைத்தான் கேட்க வேண்டும்.

முத்தையா முரளிதரன் விஜய் டிவியில் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பிடித்த நடிகர் ரஜினிதானாம் சிவாஜியை பத்து முறை பார்த்தாராம். கமல் நடித்த நாயகன் பிடிக்குமாம்.

லெக் ஸ்பின் போடும்போது அதில் ஆஃப் ஸ்பின் கலந்தால் அதுதான் 'தூஸ்ரா' என்றார்.

பிடித்த கேப்டன் அர்ஜுனா ரணதுங்காதானாம். நாற்பது வயதாகியும் சிறப்பாக விளையாடும் ஜெயசூர்யாவுக்கு பாராட்டு மாலை சூட்டினார்.

ஹெய்டனுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் என்று பெயர் வைத்துள்ளார்களாம். ஹெய்டனுக்கு இவர்கள் தமிழ் சொல்லிக் கொடுப்பார்களாம். ஐ.பி.எல், எதிரிகளாகப் பார்க்கும் வெளிநாட்டு வீரர்களையும் நண்பர்களாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றார்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது செல் ஒலித்தது. எடுத்தல் புதிய குரல்.."சார்! நான் வசந்தபாலனோட அசிஸ்டென்ட் பேசறேன்...நேத்து ஐ.பி.எல் மேட்ச் நடுவுல திரையில உங்களை டைரக்டர் பார்த்தாராம்..அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."

பையனை முறைத்தேன். அவனால்தானே இந்த புதிய வம்பெல்லாம்...!