செவ்வாய், 18 அக்டோபர், 2011

பிச்சா[த்து] காசு

                            
சிக்கனம் பற்றிப் பேசுபவர்கள் எல்லோரும் பெரும்பாலும் 'சிறு துளி - பெரு வெள்ளம்' என்ற தலைப்பில் நிறைய பேசக் கூடியவர்கள். 


இங்கே விவரிக்கப்பட்டுள்ள குடும்ப நிகழ்வை ஊன்றிப் படியுங்கள். இங்கே கூறப்பட்டுள்ளது பிசாத்து சமாச்சாரம் என்று தோன்றினாலும் - இது போல பலப்பல பிசாத்து சமாச்சாரங்கள் (சினிமாவுக்குப் போதல் / கடற்கரை - கண்காட்சி - என்று பல) நம் குடும்பங்களில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.  
        
*** *** *** 
          
ராகவன் வழக்கம் போல் பேப்பர் படிப்பதாய் பாவனை செய்து கொண்டு ,'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற மனப்பான்மையுடன் எல்லாமும் கேட்டுக் கொண்டிருந்தும் கேட்காதவன் மாதிரி [அது தான் உங்களுக்கு நன்றாகத் தெரியுமே, நான் வேறு விளக்க வேண்டுமா என்ன !] தடித்துக் கொண்டிருந்தான் [பின்னே வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் பேப்பர் மட்டும் படித்துக் கொண்டிருந்தால் தடிக்காமல் ?]
     
தங்கை வத்சலா காலையிலிருந்து அம்மாவை அரித்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தான். "அம்மா - போன மாதம் நாம எல்லோரும் பீட்சா பார்லர் போய் பீட்சா சாப்பிட்டோமே! அந்த மாதிரி இன்றைக்கும் போகலாம் அம்மா. ப்ளீஸ் அம்மா!" அம்மா என்ன பதில் சொல்கிறாள், 'முடியாது' என்பதற்கு எப்படிப்பட்ட சமாதானங்கள் சொல்ல முயற்சி செய்கிறாள் என்று தெரிந்து கொள்வதில் ஓர் ஆர்வம். 
            
ராகவனுக்கு ஒரு வகையில் இன்று ஏமாற்றம்தான் காத்திருந்தது.  அம்மா, "நாம எல்லோரும் அன்னைக்கி அசோக் பில்லர் கிட்ட ஒரு இடத்துல பீட்சா சாப்பிட்டோமே பில் எவ்வளவு என்று நினைவிருக்கா?" என்று கேட்க, தங்கை, "அறுநூறுக்கும் மேலே" என்றாள்.  அம்மா, "நீ போய் ராகவனிடம் கேளு. மாட்டேன் என்று சொல்ல மாட்டான்.  அப்படி அவன் இல்லை என்று சொன்னால் நான் வந்து அவனிடம் எடுத்து சொல்கிறேன்"என்றாள். அதைக் கேட்ட ராகவன், வத்சலா வந்து கேட்டவுடனேயே "சரி" என்று சொல்லி விட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் [அல்லது பேப்பரில் மூழ்கினான்]
   
நாம் ஒரு மாதம் அல்லது வருடத்தில் எத்தனை முறை இப்படி பி(ட்)சா[த்து] முடிவுகள் எடுக்கிறோம்.  இத்தகைய முடிவுகளால் வரும் செலவு நாம் நினைப்பது போல் சின்ன செலவாக இல்லாமல் மிகவும் பெரிய தொகையாக வரும் மாதிரி இருக்கிறதே! இன்று அலுவலகம் போனவுடனே, நண்பன் பாலகிருஷ்ணனிடம் இது பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.    
      
சிக்கனம் என்பது உணவுப் பொருள்களில் கூடாது. 'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று வாதாடுவோரும் உள்ளனர். ஆனால், ஜன்க் ஃபுட் (junk food) வகையறாக்களுக்குப் பணத்தை வாரி இறைப்பது வீண் செலவு என்று கூறுவோரும் உள்ளனர். 
            
உங்கள் அனுபவம் எப்படி ? 
                        

9 கருத்துகள்:

  1. ஆடம்பர செலவுகள் அநாவசியமே, இருந்தாலும் மனிதனின் ஆசை என்ற மன குரங்கை அடக்க ஒரு முறை செலவிடுவது தவறில்லை...

    பதிலளிநீக்கு
  2. //வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று வாதாடுவோரும் உள்ளனர். //

    ஆம் ஆனால் ஜங்க் ஃபுட்டுக்கு அல்ல:)! எப்போதேனும் சரி. அடிக்கடியை ஆதரிக்க மாட்டேன். உடம்புக்கும் கேடு என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  3. சில சாப்பாடுகள் ஆடம்பரம் மட்டுமே.சுவை என்னமோ எங்கள் சாப்பாடுகள்தான்.சரி..அப்படியே விரும்பினாலும் நாங்களே செய்து சாப்பிட்டால் உடம்புக்கும் நல்லது.மலிவும்கூட !

    பதிலளிநீக்கு
  4. //சிக்கனம் என்பது உணவுப் பொருள்களில் கூடாது. 'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று வாதாடுவோரும் உள்ளனர். ஆனால், ஜன்க் ஃபுட் (junk food) வகையறாக்களுக்குப் பணத்தை வாரி இறைப்பது வீண் செலவு என்று கூறுவோரும் உள்ளனர். //

    நான் இதைத்தான் கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. கல்லை தின்னாலும் செரிக்கற வயசுல ஆசை படறத எல்லாம் சாப்பிட்டு பாத்துட வேண்டியதுதான். நாப்பது வயசுக்கு மேல கண்டதையும் சாப்பிட முடியாதே. என்னை பொறுத்த வரைக்கும் சாப்பாட்டு விஷயத்துல மாத்திரம் சிக்கனம் பாக்க கூடாது. ஆசை படறத சாப்பிடணும். சிலது நம்ப வசதிக்கு மீறி இருந்தா எப்பவாவது ஒருதடவ சாப்பிடலாம், தப்பில்லை.

    பதிலளிநீக்கு
  6. பத்மநாபன் விரும்பும் தயிர்சாதம் வற்றல் குழம்பு சமீபத்தில் சாப்பிட நேர்ந்தது. பிறவியின் ரகசியம் புரிந்தது. :)

    பதிலளிநீக்கு
  7. சரவணபவனில் கூட 80% சத ஐட்டங்கள் exotic தானே?

    பதிலளிநீக்கு
  8. அவ்வப் பொழுது பிசாவுக்கு செலவு செய்பவர்களை விட தாம் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் ஒரு பிசாவைவிட குறைந்த செலவுதானே என்று நியாயப் படுத்துபவர்கள் ஒரு மாதத்தில் இப்படி எத்தனை பிசா செலவழிக்கிறார்கள் என்று பார்த்தால், பிசாவுக்கு செலவு செய்பவர்களே மேல் !

    பதிலளிநீக்கு
  9. வருக சூர்யஜீவா... ஆடம்பரம் என்பதை விட அவசியமா என்ற கேள்வியே முக்கியம் என்று சொல்லலாமா....நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

    வருக ராமலக்ஷ்மி..."வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு" இது எண்ணெய்ப் பண்டம் சாப்பிடுவதைக் குறிப்பது அல்ல, எண்ணெய் தேய்த்து குளிப்பதைப் பற்றி சொல்லும் ஆன்றோர் வாக்கு....பிசாவை ஜங்க் ஃபுட்டில் சேர்க்க முடியுமா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வருக ஹேமா...கருத்து சரிதான்...பிசா வீட்டிலேயே செய்வீர்களோ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வருக சண்முகவேல்...எதிரொலித்திருக்கும் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    வருக மீனாக்ஷி....நல்ல கொள்கை...நல்ல கருத்து...'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்' கொள்கையா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வருக அப்பாதுரை...ரெசிப்பி கேட்டீங்களே பார்த்தீர்களோ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    நன்றி பாஸ்கரன், வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!