செவ்வாய், 28 மே, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - கோபம்- பரிவைசே .குமார்

கோபம் 
பரிவைசே .குமார் 


ராஜகோபாலுக்கு இப்பல்லாம் எதெற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. யார் எதைச் செய்தாலும் படக்கென்று திட்டி விடுகிறார். எதற்காக கோபப் படுகிறோம் என்பதை எல்லாம் அவர் யோசிப்பதேயில்லை. அவர் மனைவி கமலம் கூட, ‘எதுக்கு இப்ப எல்லாத்துக்கும் கத்துறீங்க’ன்னு முகத்துக்கு நேரே பல தடவை கேட்டு விட்டாள். அதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாவே மதிக்கவில்லை.


படக் படக்கென்று கோபப்படுவதால் மருமகளும் பேரன் பேத்திகளும் அவர் பக்கம் வருவதையே குறைத்துக் கொண்டு விட்டாரகள். அவருக்கு எல்லாமே கமலம்தான் செய்ய வேண்டியிருந்தது.


ஒவ்வொரு முறையும் கமலம் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருந்தாள் என்றாலும் மற்றவர்களைப் போல் ஒதுங்கிச் செல்ல அவளால் முடிவதில்லை என்பதைவிட வேறு யார் செய்வார் என்பதே காரணம்.


மதியம் அப்படித்தான்...  குளிக்க ஹீட்டரைப் போட்டு வை என்று சொல்லி விட்டு டிவியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  குளிக்க எழுந்து செல்லும் நினைப்பே அவரிடம் இல்லை...  


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கமலம் , "எப்பத்தான் குளிக்கிறது... ஹீட்டரப் போட்டு வச்சிஎம்புட்டு நேரமாச்சு..  குளிச்சிட்டு வந்தா சாப்பாட்டைப் போட்டுட்டு நானும் கொஞ்ச நேரம் படுப்பேன்ல்ல" என்று மெல்லத்தான் சொன்னாள்.

உடனே "ஏன் நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள அம்மணி சீரியல் பாக்கணுமோ சீரியல்...  தினமும்தான் மத்தியானம் குறட்டை விட்டுத் தூங்குறே... ஒரு நாள் தூங்காட்டி செத்தா போயிருவே" ன்னு கத்திட்டு பாத்ரூம்க்குள்ள போனார்.


கொஞ்ச நேரத்துல படக்குன்னு கதவத் திறந்து ‘சுடு தண்ணி வச்சி கொல்லப் பாக்குறியா...  தண்ணி சூடா இருக்கும்ன்னு சொல்லத் தெரியாதோ' ன்னு கத்திட்டு கதவைப் படாரெனச் சாத்திக் கொண்டார்.


‘இதென்னடி கெரகத்த... குளிக்கப் போனவரு அவரு... ஹீட்டர் போட்டிருக்கு... தண்ணி சூடாத்தான் இருக்கும்... இது கூட தெரியாதா என்ன... இந்த மனுசனுக்கு இப்ப என்ன பிரச்சினை... எதுக்கெடுத்தாலும் கத்துறாரு...  சும்மா சும்மா கோபப்பட்டா ஒரு நாளில்லை ஒருநாள் நான் திருப்பிக் கத்தப் போறேன். அப்பத்தான் அடங்குவார்’ என மூத்த மருமகள்
செல்விக்கிட்ட பஞ்சாயத்து வைக்க,  ‘அட ஏந்த்தை ஜோக்கடிச்சிக்கிட்டு... நீங்களாவது கத்துறதாவது...  மாமாவுக்கு ரிட்டையர்மெண்டுக்கு அப்புறம் ஏதோ மனதளவுல தாழ்வு மனப்பான்மை வந்திருச்சு போல... அதைச் சரி பண்ணினா சரியாயிருவாரு...' என்று சொன்னாள்.


'ஆமா அவரு மனசுல என்ன தாழ்வு மனப்பான்மை இருக்கப் போவுது... ரிட்டையராகி மூணு மாசம் இன்னும் ஆகலை... எல்லாரும் அவருக்கிட்ட எப்பவும் போலத்தான் நடந்துக்கிறோம்...  ரிட்டையராகிட்டாருன்னு நம்மள நாம மாத்திக்கிட்டோமா என்ன... எப்பப்பாரு சும்மா வள்.... வள்ளுன்னு நாயி விழுந்த மாதிரி விழுந்துக்கிட்டு...  இத்தன நாளா இல்லாம இப்ப என்ன இவருக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது...' என்றாள் கமலம்.


ராஜகோபால் மூணு மாசத்துக்கு முன்னாடி தாசில்தார் ராஜகோபால்.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் அரசுப் பணி...   இருபது முறைக்கு மேல் பணி இடமாற்றம் பெற்றவர்...  அதற்குக் காரணம் லஞ்சம் வாங்காத அதிகாரி என்பதே.  நம்மூர்ல லஞ்சம் வாங்காத அதிகாரிகள் படும் பாடுதான் நமக்குத் தெரியுமே...  எத்தனை போராட்டத்தைச் சந்திக்க
வேண்டியிருக்கும் என்பதை நாம் அறிவோமல்லவா...?  சொந்த ஊர் சிவகங்கை என்றாலும் பணியிட மாற்றத்தின் காரணமாக ஊர் ஊராக சுற்றியதால் வாடகை வீட்டில்தான் அதிக வாசம்.


கடைசி இரண்டு வருடமாக சொந்த ஊரில் எனக்கு பணி வேண்டும் என்று கேட்டுக் கேட்டு ஒரு வழியாக சிவகங்கைக்கே மாற்றல் வாங்கி வந்தார். மூத்தவன் சிவகங்கை ராஜா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர்...  சின்னவன் தற்போது திருச்சியில் இருக்கிறான். கனரா வங்கியில்
மேலாளர் பணி என்பதால் அப்பாவைப் போல் ஊர் சுற்றிதான். மகள்கள் இருவரையும் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்துவிட்டார். மூத்தவள் துபாயிலும் இளையவள் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள்


சிவகங்கை வந்தபோது சொந்த வீட்டில் இருந்த மகனுடன் தங்கிவிட்டார். அப்பாவை மதிக்கும் மகன்...  அவனைப் போல் பாசக்கார மருமகள்... பேரக் குழந்தைகள் என இந்த ரெண்டு வருசம்தான் வாழ்வில் நீண்ட காலமாக இழந்திருந்த சந்தோஷத்தை அணுஅணுவாக அனுபவித்தார்.  விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் எங்காவது கிளம்பி ஊர் சுற்றி வருவதை
தவறாமல் செய்து வந்தார்.  வாராவாரம் விடுமுறை தினம் என்பது அந்த வீட்டின் சந்தோஷ தினமாய் அமைந்தது.


இப்பக் கோபத்தில் குதிக்கும் ராஜகோபால், பணியில் இருந்த வரைக்கும் யார் மீதும் கோபப்பட்டதில்லை... எதற்கும் கத்தியதும் இல்லை.


அதிகாரிகளுடன் எல்லாம் அன்பான போக்கை கடை பிடித்தவர்தான். லஞ்சம் கொடுக்க யாரேனும் முயற்சித்தால் கூட முகத்தில்
புன்னகையுடன் விவரத்தை எடுத்துச் சொல்லி, உங்களிடம் பணம் வாங்குவதற்கென சிலர் இருப்பார்கள். அவர்களைப் பார்த்துக் கொடுங்கள். சந்தோஷப்படுவார்கள் என்று அதே புன்னகையுடன் சொல்லி மறுத்துவிடுவார்.


அப்படிப்பட்டவர்தான் இப்போது எதற்கெடுத்தாலும் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்.


அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதைப் பார்க்கப் போய் விட்டு திரும்பி வரும் போது 'அழகு மலையான் என்ன அழகு... அதுவும் தங்கக் குதிரை தகதகன்னு ஜொலிக்க, அது மேல அவர் வரும் அழகே தனிதான்... பாத்துக்கிட்டே இருக்கலாம்... நாங்கள்லாம் சின்னப் புள்ளையா இருக்கும்
போது எங்க ஊர்ல இருந்து எல்லாரும் வண்டி கட்டித்தான் போவாங்க.... எங்க தாத்தாவும் மயிலக்காளை பூட்டுன வண்டியல எங்களக் கூட்டிக்கிட்டுப் போவாரு... அழகர் கிளம்புறதுக்கு முன்னாடியே கோயிலுக்குப் போயிருவோம். அவரு கிளம்பி வரும் போது பின்னாடி ஆயிரக் கணக்குல மாட்டு வண்டி வரும்... அவரு தங்குற இடத்துல எல்லாம் நாங்களும் தங்கி, சமைச்சித் சாப்பிட்டு வைகையில அவரு இறங்குனதுக்கு அப்புறம்தான் கிளம்பி வருவோம்... எப்படி இருக்கும் தெரியுமா? அதெல்லாம் இப்பப் போச்சு...' அப்படின்னு சந்தோஷமாப் பேசிக்கிட்டு வந்தார்.


பேத்திகளுக்கு அழகர் ஏன் மதுரைக்கு வர்றாருன்னு கதை சொல்லிக்கிட்டு வந்தார்.


'என்னடா...  இது இன்னைக்கு கோபப்படாம இவ்வளவு சந்தோஷமா இருக்காரே’ன்னு எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

அவங்க நினைச்ச நேரம் எதிரே வந்த வண்டிக்காரன் நேரே மோதுவது போல் வந்து ஒடித்துத் திரும்ப.. கோபத்தில் கத்தி, வண்டியை நிறுத்தி இறங்கி நிப்பாட்டாமல் போனவனைப் பார்த்து அவனே இவனே என்று கத்திவிட்டுத்தான் வண்டியில் ஏறினார்.


‘அட வாங்க... ரோட்டுல நின்னு கத்திக்கிட்டு...’ என்று சத்தம் போட்ட மனைவிக்கு காருக்குள் ஏறிய பின்னர் சரமாரி திட்டு விழ, அதன் பிறகு அவரிடம் யாரும் பேசவில்லை. அவரும் யாரிடமும் பேசவில்லை.


திருப்பவனத்தின் அருகே வந்தபோது 'தாத்தா... எனக்கு பசிக்குது... எதாச்சும் வாங்கித் தாங்க...' என்றாள் இளைய பேத்தி.


'இங்க என்னடா கிடைக்கும்... கொஞ்சத் தூரம்தானே சிவகங்கை போனதும் ஹோட்டல்ல சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாம்... சரியா... செல்லக்குட்டியில்ல... அம்மாக்கிட்ட ஜூஸ் வாங்கிக் குடிங்க...?' என்றதும் அவள் மறுபேச்சு பேசாமல் கொஞ்சமாய் ஜூஸைக் குடித்துவிட்டு
வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.


அவருக்குப் பிடித்த கண்ணதாசன் பாடல்கள் மெல்லிய சப்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது.  சிவகங்கை வந்ததும் சாப்பாடு நல்லாயிருக்கும் ஒரு பெரிய ஹோட்டலின் முன்னே நிறுத்தினார்.  இறங்கிக் கொண்டிருந்தவர்களை ‘சீக்கிரம் இறங்குங்க... இப்பத்தான் மெல்ல இறங்கிக்கிட்டு..’ எனக் கத்த,  இறங்கிக்கிட்டுத்தானே இருக்காங்க... எதுக்கு கத்துறீங்க...?' என்ற மனைவியை எரித்து விடுவது போல் முறைத்தார்.


'அத்தை எதுவும் பேசாதீங்க... அவரே அந்தக் கார்க்காரன் மேல கோபத்துல இருக்காரு...  அதையெல்லாம் இங்க எறக்கி வச்சிருவாரு... பாத்துக்கங்க...'  மெல்லக் கதைக் கடித்தாள் செல்வி.


'ஆமாடி ஆத்தா... எப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறும்ன்னு தெரியல...' டேபிளில் அமர்ந்து ஆர்டர் செய்தாச்சு....  இலை போட்டபின் தண்ணீர் தெளித்தவன் தவறுதலாக கொஞ்சம் தண்ணீரை டேபிளில்
சிந்திவிட, 'என்னடா வேலை பாக்குறே... தண்ணிய ஊத்தி விடுறே... சாப்பாட்டை வச்சிட்டு இப்படி ஊத்தியிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்....' என ஆரம்பித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த,  பையன் ‘சாரி சார்’ எனச் சொல்லிக் கொண்டே நின்றான். 


முகத்தில் பயம் சூழ ஆரம்பித்தது.

அவரைத் தெரிந்திருந்த ஹோட்டல் முதலாளி, கோபமே படாத அவர் இவ்வளவு கோப்பபடுறார் என்றால் பையன் மேல் தான் தவறிருக்கும் என எல்லார் முன்னாலும் அந்தப் பையனைத் திட்டி...  ‘உள்ள போடா நாயே... போ... போயி கிச்சன்ன்ல வேலை பாத்துக்கிட்டு பார்த்தீபனை வரச்சொல்லு...’  எனக் கத்தி, அடிப்பது போல் கையைத் தூக்க அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

‘விடுங்க சார்... சின்னப்புள்ள... நாயி... அது இதுன்னுக்கிட்டு...’ கமலம் சொல்ல, முறைத்தார்.

'இவதான் பசிக்குதுன்னு... இல்லேன்னா இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பேன்... தண்ணி தொளிடான்னு சொன்னா வீட்டு வாசலுக்கு சாணி தெளிக்கிற மாதிரி தொளிக்கிறான்...' என்று மற்ற டேபிளில் இருப்பவர்களுக்குத் கேட்காமல் மெல்லத் திட்ட, இளைய பேத்தியின் கண்களில் நீர் கட்டியது.


'எதுக்கு இப்ப அவளைத் திட்டுறீங்க..? இப்ப என்னாச்சு..? அந்தப் பையன் மேல என்ன தப்பு..?  சின்னப்புள்ள தவறுதலா கொஞ்சம் சிந்திட்டான்... எத்தனை முறை மன்னிப்புக் கேட்டான்...  விட்டீங்களா...? ஏங்க என்னாச்சுங்க உங்களுக்கு..? வேலையில இருக்க வரைக்கும் இப்படியா
இருந்தீங்க... அப்ப இருந்த அந்த குணம் எங்க போச்சு...? உங்கள வீட்டுல யார் என்ன சொல்றாங்க... உங்க போக்குலதானே இருக்கீங்க... மூத்தவன் நீங்க எதுக்கெடுத்தாலும் கோபப்படுறதாலதான் உங்ககிட்ட இப்பப் பேசமா ஒதுங்கி இருக்கான் அது தெரியுமா உங்களுக்கு...? அவன் உங்கள ஒதுக்கிட்டான்னு நினைக்கிறீங்களா... அதுதான் இல்லை  நீங்களாத்தான் எல்லார்க்கிட்டயும் ஒதுங்கி நிக்கிறீங்க... ஏங்க... எதுக்கு இந்த கோப முகமூடி...  இந்தா கடைக்காரர் உங்களைப் பற்றித் தெரிந்ததாலதானே அந்தப் பையனை அம்புட்டுத் திட்டினாரே... இதே வேற யாராவதா இருந்தா என்ன சொல்லியிருப்பாரு... என்ன சார்...  கொஞ்சம் தண்ணி சிந்துனதுக்கு இப்படிக் கத்துறீங்கன்னு சத்தம் போட்டிருக்க மாட்டாரா...?' என்றாள் கொஞ்சம் வேகமாக...  அதே சமயம் பக்கத்து இருக்கைகளுக்கு கேட்காதவாறு.


அவர் கமலத்தை முறைக்க...  'முறைக்காதீங்க... நீங்களே மனசுக்குள்ள யோசிச்சுப் பாருங்க... உங்களுக்கே தெரியும்...  ரிட்டையர்மெண்ட்ங்கிறது எல்லாருக்கும் வர்றதுதாங்க... சாகிற வரைக்கும் பணியில இருக்க
முடியாதுங்க... உங்க குணத்துக்குத்தான் இந்த ஊரே உங்க ரிட்டையர்மெண்டுக்கு விழா எடுத்துக் கொண்டாடுச்சு... எந்த அரசு அதிகாரிக்குங்க சொந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து விழா எடுத்திருக்காங்க சொல்லுங்க... காசு வாங்காத மனுசங்கிறதைவிட சிரிச்ச முகத்தோட பேசுற மகராஜன்... ஏழைக்கு ஒரு பிரச்சினையின்னா தானே முன்னின்று அதை முடிச்சிக் கொடுக்கும் மனுசனய்யா இவருன்னு பேசுறதைத் தாங்க நாங்க கேட்டிருக்கிறோம்' எதுவும் பேசாமல் இருந்தார்... சாப்பாடு வந்தது.


'மூத்தவன் காலேஜ் புரபஸரா இருந்தாலும்... இந்த ஊருல எல்லாருக்கும் தெரிஞ்சவனா இருந்தாலும்... உங்கள மாதிரியே கோபப்படாமல் சிரிச்ச முகத்தோட இருந்தாலும்... உங்களோட பையன் அவன்னும் உங்க புத்திதான் அவனுக்கு இருக்குன்னு உங்க வளர்ப்பு சோடை போகுமான்னு மத்தவங்க பேசுறதைக் கேக்கும் போது எங்களுக்கு எம்புட்டுச் சந்தோஷம்
தெரியுமா... இந்தக் கோபம் உங்களோட இத்தனை வருச வாழ்க்கையை எரிச்சிருங்க...  வேண்டாங்க நீங்க தாசில்தாரா இருக்கும்போது எப்படியிருந்தீங்களோ அப்படியே எங்கிட்ட இருங்க... ரிட்டையர்மெண்ட் உங்க வயசுக்குத்தான்... மனசுக்கு இல்லை... அதை நெனச்சிக்கங்க...'
இப்பவும் மறுபேச்சு பேசாமல் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினார்.


'அத்தை விடுங்க... மாமா மனசு வருத்தப்படப் போறாங்க... நாம அவங்களுக்கு புத்தி சொல்லக்கூடாது... அவங்கதான் நமக்கு புத்தி சொல்லணும்... உங்க மகனை வளர்த்த மாதிரி எம்புள்ளைகளுக்கும் நல்லதைச் சொல்லிக் கொடுக்கணும்... இவங்க பேத்திகன்னு ஊர் பேசணும்... சாப்பிடுங்க...  மாமா நீங்க சாப்பிடுங்க...  அத்தை எதாவது பேசியிருந்தாலும் கோபப்படாதீங்க... ரொம்ப நாளா உங்ககிட்ட பேசணும் பேசணும்ன்னு சொன்னதை இப்பக் கொட்ட வேண்டிய சூழல்... அதான் கொட்டிட்டாங்க...' என்று இடைப்புகுந்தாள் செல்வி.


அவளை ஏறெடுத்துப் பார்த்தவர் எதுவும் பேசவில்லை.


அப்போது 'சார்... எப்படியிருக்கீங்க....?' என ஓடி வந்து அவரின் இடது கையைப் பிடித்து கண்களில் வைத்துக் கொண்டார் அவரின் உதவியாளராக இருந்த பஞ்சு.


'வாங்க பஞ்சு...  ஏ... என்ன இது... என் கையை வணங்கிக்கிட்டு... எப்படியிருக்கீங்க...  உக்காருங்க... சாப்பிடுங்க....' என்றார்.


'குடும்பத்தோட வந்திருக்கேன் சார்... அந்தப் பக்கம் உக்கார போயிட்டாக... உங்களப் பாத்ததும் ஓடியாந்தேன் சார்... எம்புட்டு நாளாச்சுப் பாத்து... கெரங்கிப் பொயிட்டீங்களே சார்...  ரிட்டையர்மெண்ட சந்தோசமா அனுபவிங்க சார்... என்ன கவல உங்களுக்கு...  உங்க பேர் சொல்ல புள்ளய தல எடுத்துட்டாங்க... ராஜா காலேசுல புரபஸர் ராதாகிருஷ்ணன்னா அம்புட்டுப் பேர் இருக்கு தெரியுமா... பேரம் பேத்திகளோட சந்தோசமா இருங்க சார்... எனக்கும் ரிட்டையர்மெண்டுக்கு இன்னும் ஒரு வருசம் இருக்கு சார்.... எப்படா ஒரு வருசம் முடியும்ன்னு இருக்கு சார்... வேலக்கிப் போகவே வெறுப்பா இருக்கு சார்...'


'ஏன்... என்னாச்சு.... நாம பாக்குற வேலை தவம் மாதிரி... அதுமேல நமக்கு எப்பவும் வெறுப்பு வரக்கூடாது...'


'இல்ல சார்... இப்ப வந்திருக்கவரு சரியான லஞ்சப் பேர்வழி சார்...  எதுக்கெடுத்தாலும் பணம்தான் சார்... ஏழ பணக்காரன்னுல்லாம் இல்ல... எல்லாரும் கொடுக்கணும்... கொடுத்தாத்தான் எதுவும் நடக்கும்.  வேலயில சின்ன தப்பு வந்தாலும் எல்லாருக்கும் முன்னால காட்டுக்கத்தாக் கத்துறாரு சார்... உங்ககிட்ட வேல பாக்கும் போது தப்புச் செய்யாமயா இருந்தோம்... நீங்களே சரி பண்ணி சிரிச்சிக்கிட்டே இத இப்படிச் செய்யுங்கன்னு சொல்லிக் கொடுப்பீங்க இல்லயா சார்... அந்தக்
கொணம் இல்ல சார்... உங்க கொணம் யாருக்கும் வராது சார்...' கண்களில் நெகிழ்ச்சி.

ஒன்றும் சொல்லாமல் பஞ்சுவைப் பார்த்தார். ஓரக்கண்ணால் கமலத்தையும் பார்த்தார்.


'உங்களப் பத்திப் பேசாத நாளேயில்ல சார்... எல்லாருக்கும் உங்கள பாக்க வரணுமின்னு ஆசை சார்... ஒருநா வீட்டுக்கு வர்றோம் சார்... நாளக்கி ஆபிசுல உங்களப் பாத்தேன்னு சொன்னா எல்லாரும் சந்தோஷப்படுவாங்க சார்....  சரி சார்... சாப்பிடுங்க சார்... நா வர்றேன்...' என்று கிளம்பினார் பஞ்சு.

'பாருங்க... இதுதாங்க வேணும்... உங்க குணந்தானே பேசுது... இப்ப இருக்க மாதிரி சிடுசிடு மூஞ்சியா இருந்திருந்தா... இன்னைக்கு காட்டுக்கத்தா கத்துறாருன்னு ஒருத்தரைச் சொல்றாரு பாருங்க... அந்த இடத்துல நீங்களும் இருந்திருப்பீங்க... தெரிஞ்சிக்கங்க...'  அதன் பிறகு யாருமே பேசலை...

சாப்பிட்டு முடித்ததும் கை கழுவிட்டு வந்தவர் இளைய பேத்தியின் தோளில் கை போட்டபடி 'ஸ்வீட்ஸ் எதுவும் வேணுமாடா செல்லம்...' என்றார் சமாதானப்படுத்தும் விதமாக.


அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.


‘குட்டிம்மாவுக்கு என்ன கோபம்...? ஐயா மாதிரியே கோபக்காரியோ..?’ எனச் சிரித்தபடி அவளைப் பார்த்து உருட்டி முழித்தார்.


உர்ரென்று உட்கார்ந்திருந்தவளின் முகத்தில் லேசாய் புன்னகை.
பில் பணம் கொடுக்கும் போது 'சார்... அந்தப் பையனை கொஞ்சம் கூப்பிடுங்களேன்' என்றார்.


'எதுக்கு சார்... நான் நல்லாத் திட்டிட்டேன் சார்... எப்படி நடந்துக்கணும்ன்னு எத்தனை தடவை சொன்னாலும் திருந்தமாட்டானுங்க சார்...' என்றார் கல்லாவில் இருந்தவர்.


'இல்லை... இல்லை...க... சும்மா கூப்பிடுங்க...' என்றதும் அந்தப் பையன் அழைக்கப்பட மிரட்சியுடன் வந்தவன் மீண்டும் ‘சாரி சார்’ என்றான். 


அழுதிருப்பான் போல கண்ணெல்லாம் சிவந்திருந்தது. முகத்தில் கண்ணீர் ஓடிய கோடு இருந்தது.  அவனை அருகே அழைத்து அவன் தோளில் கை போட்டபடி 'ஏதோ கோபத்துல திட்டிட்டேன்ப்பா... மன்னிச்சுக்க... நீ என்ன செய்வே... வேணும்ன்னா செஞ்சே...
வயசாயிடுச்சில்ல... அதான் கோபம் வர ஆரம்பிச்சிடுச்சி...’ என்று சொல்லி நூறு ரூபாய் நோட்டை அவனின் கையில் வைத்து 'திட்டுனதுக்கு லஞசம் கொடுத்து சமாதானம் பண்ணுறேன்னு நினைச்சிடாதே... எனக்கு லஞ்சம் பிடிக்காது... இது அன்பால கொடுக்குறது...  வச்சிக்க...' என்று அவனிடம் கொடுத்துவிட்டு ‘சார்... பாவம் சின்னப்பையன்... இனித் திட்டாதீங்க...” என்றபடி கல்லாவில் இருந்தவரைக் கும்பிட்டு விட்டு படியிறங்கினார்.



அவர் முதுகுக்குப் பின்னே 'தாசில்தார் எப்பவுமே கோபப்பட மாட்டாரு... எதாவது நெனைப்புல இருந்திருப்பாரு...  நல்ல மனுசங்க எப்பவும் இப்படித்தான்... வயசு பாக்காம சின்னப் பயலுக்கிட்ட மன்னிப்பு கேட்குற கொணம் யாருக்கு வரும்ங்கிறேன்' என கல்லாவில் இருந்தவரிடம்
இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.


கமலத்துக்கும் செல்விக்கும் ஏக சந்தோஷம்.


இளைய பேத்தி தாத்தாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
தாசில்தார் இராஜகோபாலாக படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்.  அவரது கோபமும் அவருள் இருந்து இறங்கிக் கொண்டிருந்தது.


**************

'பரிவை' சே.குமார்.

80 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்

    அட இன்று குமாரின் கதையா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை இன்று கீதாக்கா துரை அண்ணா எல்லோரையும் முந்திக் கொண்டு வந்துவிட்டேன்..தள்ளிவிட யாரும் இல்லை!!!..பூஸார் காதில் விழணும்!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      YES!

      நீக்கு
    3. பாத்தீங்களா கீதா ரங்கன்... குட்டிச்சாத்தான் மந்திரித்த தாயத்து கட்டணும்னு நினைத்த உடனேயே கணிணி சரியாயிடுச்சு. நீங்களும் சீக்கிரமே கமெண்ட் போட முடிந்தது....

      நீக்கு
    4. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    5. நெல்லை ஹா ஹா ஹா ஹா...அந்தக் குட்டிச் சாத்தான் மீண்டும் மீண்டும் புகுந்துவிடுகிறதே...கொஞ்சம் கீழ எட்டிப் பாருங்க ...அதுவும் மேல கமென்ட் போடவே காலைல எழுந்ததுலருந்து கணினி ஓப்பன் செய்து மூடி, மீண்டும் ஓப்பன் செய்து....மூடி என்று பல முறை ....வேலைகளுக்கு இடையில் வந்து வந்து பார்த்து...அப்புறம் கரெக்ட்டா 6 மணிக்கு முன்ன ஒழுங்கா வந்துச்சு...சந்தோஷப்பட்டேன் உடனே சாத்தான் புகுந்துவிட்டது...
      நெல்லை...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அதுக்கும் ஏதேனும் மந்திருக்கணுமா சொல்லுங்க!! புலியூர்மடம் பூஸானந்தா வந்து சொல்வதற்குள் சாத்தான் முழுவதும் ஆக்ரமித்துவிடாம இருக்கணும்...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    6. @கீதா ரங்கன் - அது ரொம்ப சுலபமான விஷயம். இந்த மாதிரி 'மாந்திரீக விஷயங்களை' காசு பெற்றுக்கொள்ளாமல் பிறருக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை. நீங்க ரொம்ப தெரிஞ்சவராகப் போயிட்டீங்க. ஸ்ரீராம் வேறு, உங்களுக்கு உதவி செய்யச் சொல்லிச் சொன்னார்.

      "ஸ்ரீ..க்லீம்..ஹ்ரீம் கணிணியே நமஹ" என்ற மந்திரத்தை காலையில் குளித்துவிட்டு, தொடர்ந்து 18 மணி நேரம் கணிணியின் முன்பு அமர்ந்து தொடர்ந்து சொன்னால், 18 வருடங்களில் இந்த பிரச்சனை 100% தீர்ந்துவிடும். அப்படியும் தீரவில்லை என்றால் என்னை அணுகவும். நான் கேரண்டி. புது கணிணியே வாங்கித் தந்துவிடுகிறேன்.

      நீக்கு
  2. அருமையான கதை குமார்! சூப்பர். ஒரு சிலருக்கு இப்படித்தான் ரிட்டையர்மென்ட் வரும் போது என்னவோ ஒரு சின்ன காம்ப்ளேக்ஸ் உருவாகும் அதனால இப்படிக் கோபம்...அது கிட்டத்த்டட்ட 60 வயது என்பதாலோ என்னவோதான் 60 பேய்க்குணம் என்று சொல்லுறாங்க போல!...

    அட்லீஸ்ட் ராஜகோபால் அவர் மனைவி சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டு யோசித்துப் பார்க்கிறார். ஆனால் ஒரு சிலர் அப்படியும் இல்லை. அதீட ஈகோவுடன் இருப்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாமல் தாங்களும் கஷ்டப்ப்ட்டு தங்களுடன் இருப்பவர்களையும் கஷ்டப்படுத்துவதும் நடக்கிறது..

    சூப்பர் கதை குமார், வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கதை வாசித்து ஒரு கருத்தும் போட்டாச்சு இன்னும் யாரையும் காணவில்லையே.

      வெங்கட்ஜி என்னாச்சு பிசி போலும் கணினி டிம் ஆகி ஹேங்க் ஆகுது இந்தக் கருத்து போகுமா தெரியலை.பின்னர் வருகிறேன் ஆஃப் செய்து மூண்டும் ஆன் செய்து....

      கீதா

      நீக்கு
    2. 40 வயசு நாய்க்குணம், 60 வயசு பேய்க்குணம் - இது பெண்களுக்கில்லையோ? ஆண்கள்தான் திருமணமான பிறகு அடக்க ஒடுக்கமாக, மனைவிகிட்ட அடங்கிக்கிடக்கறாங்களே...

      நீக்கு
    3. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    4. நினைச்சேன் ஹா ஹா ஹா ஹா கண்டிப்பா நெல்லை வந்தால் இதற்கு ஏதேனும் சொல்லுவார் என்று....அதே அதே...

      நெல்லை பெண்களுக்கு மட்டுமில்லை...ஆண்களுக்கும் உண்டு இது பொதுவானது....ஹலோ கோபம் வந்தால் அங்கு மனைவியாவது பேயாவாது சாத்தானாவது....கோபம் புத்தியை மறைக்கும்...

      இந்த 60 வயது கோபம் ஆண்களுக்கு அதிகம் வருவதுதான்.. சிலர் தங்கள் மனதை வேறு வகையில் திருப்பிக் கொள்கின்றனர்.

      ரிட்டையர் ஆனாலும் சிலர் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டில் சும்மா இருக்க முடியாது என்று. இந்த இயலாமை வரும் போதுதான் கோபம்..

      அந்த இயலாமை எந்த வயதிலும் வந்தாலும் கோபம் வரலாம் தான்...சிலருக்கு அது மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது...இது ஆண்களுக்குக் கூடுதலாகச் சொல்லப்படுகிறது...

      .அதற்குத்தான் பொதுவாகவே இரு பாலருக்கும் மனதைப் பக்குஅப்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவது....

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  5. குமார் அவர்களின் கை வண்ணம் அருமை....

    அவரும் படிகளில் இறங்க
    அவருடைய கோபமும் படிப்படியாக
    இறங்கிக் கொண்டிருந்தது...

    அருமை.. அருமை....

    பதிலளிநீக்கு
  6. //அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதைப் பார்க்கப் போய் விட்டு திரும்பி வரும் போது 'அழகு மலையான் என்ன அழகு... அதுவும் தங்கக் குதிரை தகதகன்னு ஜொலிக்க, அது மேல அவர் வரும் அழகே தனிதான்... பாத்துக்கிட்டே இருக்கலாம்... நாங்கள்லாம் சின்னப் புள்ளையா இருக்கும்
    போது எங்க ஊர்ல இருந்து எல்லாரும் வண்டி கட்டித்தான் போவாங்க.... எங்க தாத்தாவும் மயிலக்காளை பூட்டுன வண்டியல எங்களக் கூட்டிக்கிட்டுப் போவாரு... அழகர் கிளம்புறதுக்கு முன்னாடியே கோயிலுக்குப் போயிருவோம். அவரு கிளம்பி வரும் போது பின்னாடி ஆயிரக் கணக்குல மாட்டு வண்டி வரும்... அவரு தங்குற இடத்துல எல்லாம் நாங்களும் தங்கி, சமைச்சித் சாப்பிட்டு வைகையில அவரு இறங்குனதுக்கு அப்புறம்தான் கிளம்பி வருவோம்... எப்படி இருக்கும் தெரியுமா? அதெல்லாம் இப்பப் போச்சு...' அப்படின்னு சந்தோஷமாப் பேசிக்கிட்டு வந்தார்.//

    ஆமாம் , நீங்கள் சொல்வது உண்மைதான். அந்தக்கால காலகாட்சிகள் கண்ணில் விரியுது.தல்லாகுளத்தில் பெருமாள் கோவில் எதிர் சேவைப் பார்க்க இரவு வாணவேடிக்கைப் பார்க்க என்று எவ்வளவு கூட்டம் வரும்!

    சுற்றுபுற கிராமங்களிலிருந்து மக்கள் வண்டிகட்டிக் கொண்டு அழகர் பின்னால் வருவதைப் பார்த்து இருக்கிறேன். வண்டிகள் மேல் சமையல் பாத்திரங்கள் எல்லாம் கயிரில் கட்டித் தொங்கும். வண்டி மாடுகள் கொம்பில் மணி, கழுத்தில் மணியோடு அந்த பெரிய இரட்டை மாட்டு வண்டிகளை இப்போது பார்க்க முடிவது இல்லை, குட்டி யானை என்று சொல்கிற வேன், மினி வேன் . பெரிய வண்டிகள் வருது.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பரிவை குமார் கதை.
    மகிழ்வைக் கொடுக்கிறது.
    எத்தனை விவரம். மனித உணர்ச்சிகள் மாறும் விதமே அதிசயம்.

    வேலையில் ஓய்வு என்பது எல்லோருக்கும் ஒரு பரீட்சைக்காலம் தான்.
    சரியான நேரத்தில் கோபம் தணிவது இறை அருள்.
    மிக அருமையாக நிகழ்ஸ்சிகளைத் தொகுத்து இருக்கிறீர்கள்.

    மனைவி,மருமகள்,மகன் எல்லோரும்
    அருமையாக அவரை நடத்திச் செல்ல,மனைவியின் நேர்ப்பேச்சில்
    மனம் தழைவதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    நல்லதொரு கதை தந்த உங்களுக்கு மிக நன்றி.
    அன்பு ஸ்ரீராமுக்கும் நன்றி. இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. //'அத்தை விடுங்க... மாமா மனசு வருத்தப்படப் போறாங்க... நாம அவங்களுக்கு புத்தி சொல்லக்கூடாது... அவங்கதான் நமக்கு புத்தி சொல்லணும்... உங்க மகனை வளர்த்த மாதிரி எம்புள்ளைகளுக்கும் நல்லதைச் சொல்லிக் கொடுக்கணும்... இவங்க பேத்திகன்னு ஊர் பேசணும்... சாப்பிடுங்க... மாமா நீங்க சாப்பிடுங்க... அத்தை எதாவது பேசியிருந்தாலும் கோபப்படாதீங்க... ரொம்ப நாளா உங்ககிட்ட பேசணும் பேசணும்ன்னு சொன்னதை இப்பக் கொட்ட வேண்டிய சூழல்... அதான் கொட்டிட்டாங்க...' என்று இடைப்புகுந்தாள் செல்வி.//

    மாமாவின் மனதை புரிந்த கொண்ட நல்ல மருமகள்.

    பதிலளிநீக்கு
  9. //'தாசில்தார் எப்பவுமே கோபப்பட மாட்டாரு... எதாவது நெனைப்புல இருந்திருப்பாரு... நல்ல மனுசங்க எப்பவும் இப்படித்தான்... வயசு பாக்காம சின்னப் பயலுக்கிட்ட மன்னிப்பு கேட்குற கொணம் யாருக்கு வரும்ங்கிறேன்' //

    மிக சரியாக சொன்னீர்கள். மன்னிக்கவும், மன்னிப்புகேட்பதும் நல்ல குணம். அதுவும் காலம் தாழ்த்தாமல் கேட்டு விட வேண்டும் .

    நல்ல கதையை எழுதி கொடுத்த குமாருக்கும், கேட்டு வாங்கி கொடுத்த ஸ்ரீராமுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும், வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. குமார் கதையா? பக்கத்து வீட்டு நிகழ்வைப் பார்ப்பது போல் இருக்கும். இதுவும் அப்படியே! அதுவும் பணி ஓய்வு பெற்றவரின் மனோநிலையை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கார். இது பலருக்கும் நேர்வது தான். ராஜகோபாலன் உணர்ந்து விட்டார். பலரும் உணர்வதில்லை. அருமையான கதை!

    பதிலளிநீக்கு
  12. அறுபதுகளின் அழகர் திருநாள் கண்ணெதிரே வந்தது. மாடுகள் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு கழுத்து மணி குலுங்க வருவதெல்லாம் நினைவில் நிழலாட்டம்! கடைசியில் தாசில்தார் தான் திட்டிய இளைஞனையே கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டது தான் கதையின் உச்சகட்டம். பணம் கொடுத்தது தான் என்னளவில் நெருடல்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். ப.சே.குமாரின் படைப்பா? வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு கதை நண்பரே...

    ராஜகோபாலின் நிலைப்பாட்டில் நானும் இருக்கிறேனோ... என்ற ஐயம் எனக்கும் சற்று தோன்றுகிறது....

    முயல்கிறேன் எனது கோபத்தையும் நீக்க... கமலமின்றி.

    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  15. கிச்சனை - சிக்கனா மாத்தியிருக்கு. சரி செய்துடுங்க.

    கதை நல்லா இருக்கு. ரிடையர் ஆனபிறகு அதிகாரம் எதுவும் இல்லாததால் வந்த கோபமோ?

    பதிலளிநீக்கு
  16. ஹோட்டல் பையனிடம் சாரி சொல்லி சமாதானப்படுத்தியதோட நிறுத்தியிருக்கலாம். காசு கொடுப்பது, நன்றாக இல்லை. பதிலுக்கு காசை அவன் திருப்பிக் கொடுப்பதாகவும் சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  17. எப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறும்ன்னு தெரியல//

    ராஜகோபாலுக்கு வேதாளம் ஏறினாலும் கடைசியில் உணர்ந்து அந்த வேதாளம் படிப்படியாக இறங்குகிறது. அதைச் சொன்ன அந்தக் கடைசி வரி சூப்பர் குமார். படியில் இறங்கினார் கோபமும் படிப்படியாக இறங்கியது. பற்றிக் கொண்ட வேதாளத்தை இறக்கிவிடுகிறார்.

    இராஜகோபால் போன்றவர்கள் உணர்கிறார்கள்...

    ஆனால் இந்த வேதாளம் ஒரு சிலருக்கு 60 என்றில்லை 30 லிருந்தே கூடத் தொங்கிக் கொண்டிருக்கும் ஹா ஹா ஹா....அவர்கள் அதை இறக்கியே விட மாட்டார்கள். சுமந்து கொண்டேதான் நடப்பார்கள். அப்படிச் சுமக்கும் போது எத்தனை நாள் தான் அந்தச் சுமையை சுமக்க முடியும்...மனமும் கோபப் பட்டு பட்டு சந்தோஷத்தை இழந்துவிடும்.

    ராஜகோபல் இயல்பாகவே நல்ல மனமும் நல்ல அட்டிட்யூட் இருப்பதால் சிந்திக்க முடிந்திருக்கிறது. என் மகன் படித்த ஒரு பள்ளியில் ஒரு வாசகம் பெரிதாக எழுதிப் போட்டிருப்பார்கள் அதுவும் நுழைவு வாயிலிலேயே....அட்டிட்யூட் இஸ் எவ்ரிதிங்க் என்று. அது எத்தனை உண்மை!

    அவர் உணர்வதாக முடித்ததும், கூடவே அந்த ஹோட்டல் பையனிடம் மன்னிப்பு கேட்பதும் ஹைலைட். இதுவும் பலருக்கும் வந்துவிடாது. ஈகோ அறிவுக் கண்ணை மறைக்கும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கேஸாக...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் வீட்டு முருங்கி மரத்தில் வேதாளம் இல்லை!! நல்லகாலம்!!! வேதாளத்திற்கு அதில் இடம் இல்லையாம். ஹா ஹா ஹா ஹா...!! (ஸ்ரீராம் இது சும்மா உங்க வீட்டு முருங்கி மரம்....கலாய்க்க!!)

    கீதா





    பதிலளிநீக்கு
  19. ஹோட்டல் பையனுக்குக் காசு கொடுப்பதாகச் சொல்லியிருக்க வேண்டாமோ? என்னதான் அது லஞ்சம் என்றில்லை அவர் சொன்னாலும்...அது மட்டும் கொஞ்சம் வேண்டாமோ என்று தோன்றியது அவனைத் தட்டிக் கொடுத்து வேலையை நன்றாகச் செய்யச் சொல்லி விட்டிருக்கலாமோ என்று தோன்றியது. டிப்ஸ் கொடுப்பதே கூட ஒரு வகை லஞ்சம் தானே இல்லையா அதனால் அப்படித் தோன்றியது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பையன் காசைத் திருப்பிக் கொடுத்திருந்தால் அவர் மனதிலும், நம் மனதிலும் உயர்ந்திருப்பானோ..ராஜகோபாலும் கூட அவனைப் பாராட்டியிருப்பார் இல்லையா....ஏனென்றால் ராஜகோபாலும் லஞ்சத்திற்கு எதிரானவர் இல்லையா...

      கீதா

      நீக்கு
    2. தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. அவரது குழந்தைகளும் நல்ல குழந்தைகள் என்றால் வந்த மருமகளும் புரிந்து கொண்டு நடக்கிற நல்ல மருமகள்...வெரி பாசிட்டிவ். எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு வீட்டில் மாமனாரோ மாமியாரோ கோபப்பட்டால் முதலில் மனம் சுருங்கி தவறாக எடுத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு உடனே நியூஸை சொல்லி ஊதும் மருமகள் என்று நடைமுறையிலும் இருக்கு...கதைகளிலும் வரும்...நீங்கள் பாசிட்டிவாகச் சொன்னது சூப்பர் குமார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம்.
    இங்கு நிறையப் பேர் அவர் பணம் கொடுத்தது சரியல்ல என்ற கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.
    ஏற்றுக் கொள்கிறேன்.

    லஞ்சம் வாங்காதவர் பணம் கொடுப்பது என்பது முரண்தான்.

    இருந்தாலும் கதையின் போக்கில் அதைக் கொண்டு சென்றதால் இப்படியான முடிவும், அவர் படியிறக்குதலும் தேவை எனப்பட்டது.

    இருப்பினும் கதை இப்படியிருப்பதைவிட, அந்தப் பையன் வாங்க மறுத்திருந்தால்.... என்ற யோசனை யோசனையாக இருந்தது.

    எந்தக் கதையுமே உங்களின் விமர்சனம் முன்புதான் முழுமை பெறும் என்பதை உணர்வேன்.

    நட்புக்காக... உறவுக்காக... ஆஹா...ஓஹோ எனச் சொல்லாத விமர்சனம் இங்கு மட்டுமே கிடைக்கிறது என்பதே உண்மை.

    கதை அனுப்பியதும் ஸ்ரீராம் அண்ணா சில விஷயங்கள் கேட்டார். சில மாற்றம் செய்தோம்.

    இதெல்லாம் யாரும் கேட்பதுமில்லை... சொல்வதுமில்லை... கொடுப்பதை அப்படியே போடுவார்கள். இங்குதான் வாசித்து விரிவாய்... விளக்கமாய் கருத்துக்கள் வரும்... அதற்கு அனைவருக்கும் நன்றி.

    என்னையும் கதையாசிரியனாக ஏற்றுக் கொண்டிருக்கும் எல்லாருக்கும் மீண்டும் நன்றி.

    கதை இப்படி முடிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்....

    முடிவை மாற்றுவோம்...

    அடுத்த கருத்தில் மாற்றிய முடிவு இருக்கு வாசிச்சுச் சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  22. அழுதிருப்பான் போல கண்ணெல்லாம் சிவந்திருந்தது. முகத்தில் கண்ணீர் ஓடிய கோடு இருந்தது. அவனை அருகே அழைத்து அவன் தோளில் கை போட்டபடி 'ஏதோ கோபத்துல திட்டிட்டேன்ப்பா... மன்னிச்சுக்க... நீ என்ன செய்வே... வேணும்ன்னா செஞ்சே...வயசாயிடுச்சில்ல... அதான் கோபம் வர ஆரம்பிச்சிடுச்சி...’ என்று சொல்லி நூறு ரூபாய் நோட்டை அவனின் கையில் வைத்து 'திட்டுனதுக்கு லஞசம் கொடுத்து சமாதானம் பண்ணுறேன்னு நினைச்சிடாதே... எனக்கு லஞ்சம் பிடிக்காது... இது அன்பால கொடுக்குறது... வச்சிக்க...' என்று அவனிடம் கொடுத்தார்.

    பையன் வாங்க மறுத்தான்.

    "பிடிப்பா... இது உன்னைத் திட்டுனதுக்கோ... இல்ல நீ திட்டு வாங்குனதுக்கோ இல்லை... வச்சிக்க... உனக்கு வேண்டியதை வாங்கிக்க..." என்றபடி அவன் கையில் திணித்தார்.

    "இல்ல சார்... எனக்குப் பணமெல்லாம் வேண்டாம் சார்... பாக்குற வேலைக்கு மொதலாளி சம்பளம் தர்றாங்க... அது போதும்..." என்றான்.

    அவனை ஆச்சர்யமாகப் பார்த்தார் இராஜகோபாலன்.

    "டேய்... சார் எவ்வளவு பெரிய மனுசன்... லஞ்சமே வாங்கதவரு உனக்கு அன்பால கொடுக்கிறாருன்னா... அவரு கையால பணம் வாங்க கொடுத்து வச்சிருக்கணும்... வாங்கிக்க..." என்றார் முதலாளி.

    "இல்ல வேண்டாண்ணே... இப்ப வாங்கினா... அப்புறம் எதாவது தப்புப் பண்ணித் திட்டு வாங்கினா... போகும் போது பணம் கொடுப்பாங்கன்னு நினைப்பு வந்திருச்சின்னா... அடிக்கடி இது மாதிரி செய்யச் சொல்லும்... படிப்பு வரலைன்னுதான் எங்கய்யா இங்க வேலைக்கு அனுப்புனாங்க... உண்மையா உழைக்கனுமின்னு சொல்லித்தான் அனுப்புனாங்க... நான் இப்படியே இருக்கேண்ணா... இன்னைக்கு தண்ணி சிந்தி வாங்குன திட்டு மனசுல என்னைக்கும் இருக்கும்... இனிமே இந்தத் தப்பு நடக்காதுல்ல... " என்றான் அவன்.

    இராஜகோபாலுக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்... இந்த சின்னப் பையனுக்குள்ள இம்புட்டு அறிவா... இவனுக்கு எவன் படிப்பு வரலைன்னு சொன்னான்... அதான் பண்பு வந்திருக்கே... இதைவிடவா படிப்பு முக்கியம்... படிச்சவனெல்லாம் அம்பதுக்கும் நூறுக்கும் கை நீட்டிக்கிட்டு நிக்கிறான். வறுமை இருந்தாலும் சும்மா கிடைக்கிற காசை வாங்க மறுக்கும் இவனல்லவா சிறந்தவன்.

    பணத்தை பையில் வைத்துக் கொண்டு ‘தம்பி... உண்மையிலேயே நீதான்டா பெரியவன்... வயசு வித்தியாசம் பாக்காம இப்பவே உன்னோட கால்ல விழுந்துடணும்ன்னு தோணுது... லஞ்சம் வாங்கவே மாட்டேங்கிற நானும் கூட இந்த இடத்துல பணத்தை எடுத்து நீட்டி அதை நீ வாங்கிருவேன்னு எதிர்பார்த்துட்டேன் பாரு... அங்கதான் நான் சறுக்கிட்டேன்... பாக்குற வேலைக்கு சம்பளம் கொடுக்குறாங்கன்னு சொன்னே பாரு... நீ உயர்ந்துட்டே..." என இழுத்து அணைத்துக் கொண்டார்.

    அவன் மீதிருந்த ஈரமும் அழுக்கும் அவர் மீது ஒட்டினாலும் அது கறையாகத் தெரியவில்லை.

    "ஆமா உன் பேரைக் கேக்கலையே... பேரென்ன..?”

    "செல்வம்"

    "செல்வம்... ம்... இந்த குணத்தோட இருந்தியன்னா செல்வம் உன் காலடி தேடி வரும்" என்றார்.

    "சார் இவனையின்னு இல்லை... உங்ககிட்ட வேலை பாக்குற யாரையும் இனித் திட்டாதீங்க..." என்றபடி கல்லாவில் இருந்தவரைக் கும்பிட்டு விட்டு படியிறங்கினார்.

    அவர் முதுகுக்குப் பின்னே 'தாசில்தார் எப்பவுமே கோபப்பட மாட்டாரு... எதாவது நெனைப்புல இருந்திருப்பாரு... நல்ல மனுசங்க எப்பவும் இப்படித்தான்... வயசு பாக்காம சின்னப் பயலுக்கிட்ட மன்னிப்பு கேட்குற கொணம் யாருக்கு வரும்ங்கிறேன்' என கல்லாவில் இருந்தவரிடம் இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

    கமலத்துக்கும் செல்விக்கும் ஏக சந்தோஷம்.

    இளைய பேத்தி தாத்தாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

    அவர் தாசில்தார் இராஜகோபாலாக படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார். அவரது கோபமும் அவருள் இருந்து இறங்கிக் கொண்டிருந்தது... செல்வம் என்னும் சிறுவன் மனசுக்குள் படி ஏறிக் கொண்டிருந்தான்.

    ----------------------

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்...

      நிறைவான விளக்கம் .. வித்தியாசமான மாற்றம்...

      வாழ்க நலம்..
      வளர்க நலம்..

      நீக்கு
    2. நன்றி ஐயா...
      வேலை இல்லை... கொஞ்சம் ஓய்வு...
      அதான் விளக்கம் கொடுக்க முடிந்தது.
      கதையில் மாற்றமும் செய்ய முடிந்தது.

      நீக்கு
    3. மாற்றிய முடிவிலும் சின்னப் பிழைகள்... :) இருக்கத்தான் செய்யுது.... :) மன்னிச்சூ...

      நீக்கு
  23. நெல்லைத் தமிழன் அண்ணாச்சி... கதையில் இருக்கும் பிழைகளுக்கு நானே பொறுப்பு.

    கிச்சன் சிக்கனானதும் கூட...

    எழுத்துபிழை எப்படித் திருத்தினாலும் எங்காவது மாட்டிவிடுகிறது...

    திருத்தச் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. இயல்பான நிகழ்ச்சிகளோடு மிகவும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் கதை. பல வீடுகளில் நிகழ்வது. கோபமே வராத தன் கணவருக்கு ரிட்டையர்மெண்டுக்குப் பிறகு என்ன ஆனது? என்று வியக்கும் பல மனைவிகளை பார்த்திருக்கிறேன்.

    முடிவை மாற்றியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. நம் வீட்டிலேயே கூட சில சமயம் குழந்தைகளை அளவிற்கு அதிகமாக தண்டித்து விட்டோம் என்று தோன்றும் பொழுது தாங்கள் தடை போடும் சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை வாங்கி கொடுக்கும் தாத்தா, பாட்டிகள் உண்டே. இந்த கதையில் கூட "ஸ்வீட்ஸ் எதுவும் வேண்டுமாடா செல்லம்?" என்று பேத்தியை கேட்கிறாரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.
      முடிவு இப்படி இருக்கலாமோ என்ற யோசனைதான்...
      கருத்தில் மட்டுமே மாற்றப்பட்ட முடிவு...
      என்னிடம் இருக்கும் கதையில் முடிவு பழையதுதான்...
      நன்றி.

      நீக்கு
  26. சின்ன கரு. பணி ஓய்வு பெற்றவரின் கோபம் பற்றியது. அவர் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிற ஆசாமி அல்ல; பணி ஓய்வுக்குப் பிறகு ஏன் இப்படி?' என்பது தான் கொக்கி.

    'ராஜகோபால் மூணு மாசத்துக்கு முன்னாடி தாசில்தார் ராஜகோபால்'
    என்ற இடத்தில் கூட கதையை ஆரம்பித்திருக்கலாமோ என்று தோன்றியது.

    நேர்மையான மனிதருக்கு வேண்டாத கோபத்தைக் களைய ஆசிரியர் ரொம்பவும் மெனக்கெட்டிருப்பதான உணர்வு.

    சிறுகதை என்று வரும் பொழுது அதை இவ்வளவு நீட்டி முழக்கியிருக்க வேண்டாமோ?...

    'சிக்'கென்று முடித்திருந்தால் சொல்ல வந்ததிற்கு இன்னும் எஃபக்டிவ் கூடியிருக்கலாம். வாழ்த்துக்கள், பரிவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா...
      இனி வரும் கதைகளில் மாற்றிக் கொள்கிறேன்.

      நீக்கு
  27. கோபம்,தாபம்,கொண்டாட்டம். வீர்யமான கதை.அழகு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. திரு பரிவை சே.குமார் அவர்களின் எழுத்தினைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவரது பாணியே தனி. நான் அதிகம் ரசித்துள்ளேன். அவ்வகையில் இதனையும் ரசித்தேன். அவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. கதையின் மாற்றமும் நன்றாக இருக்கிறது.
    செல்வம் பேரில் மட்டும் அல்ல குணத்திலும் செல்வம் தான்.

    பதிலளிநீக்கு
  30. கோபமிருக்கு மிடத்தில் குணம் இருக்குமென்பதை குணமிருக்குமிடத்தில்கோபமும் இருக்கும் எனலாமோ

    பதிலளிநீக்கு
  31. கருத்துரையில் மாற்றிய கதையும் அருமை...

    பதிலளிநீக்கு
  32. நல்ல கதை. பாராட்டுகள் பரிவை குமார்.

    பகிர்ந்து கொண்ட எங்கள் பிளாக் நண்பர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    சகோதரர் பரிஙை சே.குமார் அவர்கள் எழுதிய கதை மிகவும் அருமையாக இருந்தது. அவர் எழுதிய கதைகளை நான் படித்திருக்கிறேன். கிராமிய பண்பாடோடு, அருமையான கருத்துக்களை கொண்டிருக்கும் அவரின் எழுத்துக்கள் படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.

    வேலை ஓய்வு பெற்று விட்டால். சிலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. அதன் விளைவு கோபங்கள், யாரிடமும் பழகாமல், ஒதுங்கி இருப்பது.. இப்படியான குணங்கள் இயல்பாகவே வந்து விடுகிறது. அதை கதையின் மூலம் சகோதரர் குமார் அவர்கள் உணர்த்தி உள்ளார். அவர் எழுதிய கதையில் முடிவு பணம் கொடுப்பதாக இருப்பது.. வேலையிலிருக்கும் போது லஞ்சம் வாங்காதவர், உணவகத்தில் வேலை பார்க்கும் பையனுக்கு பணம் கொடுத்தது சிறு குறையாகக் தெரிகிறது என கருத்துக்களில் சுட்டிக்காண்பித்ததற்கு உடனே முடிவை மாற்றி எழுதியதையும் படித்தேன். அதுவும் மிக மிக அருமையாக இருந்தது.

    ஒரு சிறந்த எழுத்தாளரால்தான், இந்த மாதிரி முடிவை உடனடியாக வேறு ஒரு கோணத்தில் சிந்தித்து அழகாக மாற்ற முடியும். அத்தகைய சிறந்த எழுத்தாளரான சகோ சே. குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. அப்பாடா இங்கு வந்து சேர எனக்கு இவ்ளோ நேரமாகிவிட்டது.

    மிக அழகாக எழுதப்பட்ட கதை, நிறையக் குடும்பங்களில், பலர் மனதால நல்லவர்களாக இருப்பார்கள், ஆனா இந்தக் கோபத்தால அனைவரிடமிருந்தும் ஒதுக்கி வைக்கப் பட்டு விடுவார்கள்.. என்னதான் குணமிருக்கும் இடத்திலதான் கோபமிருக்கும்.. உரிமை உ?ள்ள இடத்திலதான் கோபத்தைக் காட்ட முடியும் என்றெல்லாம் வசனம் பேசினாலும்.. கோபம் என்பது குறைக்கப்பட வேண்டிய ஒன்றே. அது தாமாக நினைத்து திருத்தினால் தவிர.. மாற்றுவது கஸ்டமே.

    கோபத்தைக் கருவாக வைத்து எழுதப்பட்ட கதை அருமை.

    பதிலளிநீக்கு
  35. பணிஓய்வு பெற்றவர்கள் குறிப்பாக ஆண்களுக்கு இப்படி எமோஷனல் பிரச்சினைகள் வரும் .அதற்கு தாசில்தார் அவர்களும் விதிவிலக்கல்ல .மிக அழகாக ஒரு ஓய்வுபெற்ற ஆணின் மனஉணர்வுகளை எழுதியிருக்கீங்க குமார் .ஆனால் பெரும்பாலானோர் போல் மேலே கதையின் இறுதி எனக்கும் திருப்த்தியில்லை ஆனால் கருத்துரையில் கொடுத்திருந்த முடிவு சூப்பர் .

    பதிலளிநீக்கு
  36. இயல்பான கதை படித்த நிறைவு ...

    தினம் தினம் காணும் நிகழ்வு இது...இவர் கோபப்படுவது சிலர் இனி நான் என்ன முக்கியமா என்னும் கேள்வி எழுப்பி சங்கப்படுத்தும் நிகழ்ச்சிகளும் உண்டு ....


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!