வெள்ளி, 18 டிசம்பர், 2009

அன்புள்ள அடுத்த இருக்கை ரசிகருக்கு ...

நான் கேட்கத் தீர்மானித்த கச்சேரியையே நீங்களும் கேட்கத் தீர்மானித்தது சந்தோஷமாக உள்ளது. அந்த சந்தோஷத்தை நீடிக்கச் செய்ய - உங்களிடம் சில வேண்டுகோள்கள்.

அ ) கச்சேரி ஆரம்பிக்கு முன் வந்து, இருக்கையில் சப்தமில்லாமல் அமருங்கள். கச்சேரி ஆரம்பித்த பின் வந்து என்னைக் கால்களை மடக்கி அடக்கி ஒடுக்கி - உங்களுக்கு வழிவிடும் நேரத்தில் - கச்சேரியின் சில இனிமையான கணங்களை நானும், நீங்களும் இழக்கவேண்டியதாகிறது. இது கச்சேரியை அமைதியாக - ஒரு தியானம் போல அனுபவித்துக் கேட்கும் என் போன்ற ரசிகர்களை இடைஞ்சல்படுத்தும்.

ஆ ) கச்சேரி கேட்க ஆர்வம் இல்லாத சிறுகுழந்தைகளை தயவு கூர்ந்து வீட்டிலோ அல்லது அவர்களின் ஆர்வம் அதிகம் உள்ள ஓரிடத்திலோ விட்டுவிட்டு வாருங்கள்.

இ) உறவினர் புடை சூழ வருகிறீர்களா? - எல்லோரும் மௌனவிரதம் தியானம் எல்லாம் செய்யத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோடு வருபவர்களும், சபாவுக்கு வெளியே பேசக்கூடிய விஷயங்களை வெளியிலேயே பேசலாமே! 

ஈ) உங்க மொபைல் ஃபோனை சைலண்ட் மோட்ல வையுங்க, அல்லது ஆப் செய்து வைத்துவிடல் உத்தமம்.

உ) பாடகர் என்ன ராகம் பாடுகிறார் என்பது உங்களைப் போலவே நானும் பாட்டைக் கேட்டு, இராகத்தைக் கேட்டு யூகிக்கவேண்டும்; அடுத்த சீட்டுக்காரர்களுடன் உரத்தக் குரலில் விவாதங்கள் வேண்டாம். பாடகர் ஒன்றும் எங்களைப்போல் சரியாக இராகம் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு பாயிண்டுகள் கொடுக்கப்போவதில்லை.;-)

ஊ) ஐயா / அம்மா,  நீங்க பாட்டுத் தெரிந்தவர்கள்தான். அதற்காக - பாடகர் இராகம் இழுக்கும்பொழுதோ, பாடும்பொழுதோ, நீங்க இங்கே உடன் ஹம பண்ண வேண்டாமே!
வேண்டுமானால் சபா செகரட்டரியிடம் சொல்லி ஒரு பகல் நேரக் கச்சேரி ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். நானும் வேறு கச்சேரி எதுவும் வாகாக வாய்க்கவில்லை என்றால் உட்கார்ந்து அதைக் கேட்கத் தயார். ஆனால் காசு வாங்காமல், இந்த மாதிரி எல்லாம் 'உடன் பாடுதல்' அதுவும் அடுத்த இருக்கைக்காரர்களுக்கு கேட்கும் வால்யூமில் வேண்டாமே!

எ) கச்சேரி நடந்துகொண்டிருக்கும்பொழுது பர பரவென சிப்ஸ் பாக்கெட் திறப்பது - நற நற வென்று சப்தமாக சிப்ஸ் மெல்லுவது - ஐயோ - நினைத்தாலே உடம்பும் மனதும் சிலிர்க்கிறது - செய்யவே செய்யாதீங்க. டிஸ்டர்பன்ஸ் மட்டும் இல்லை, எனக்குக் கொடுக்காம நீங்க சாப்பிடறதுனால - உங்களுக்கு வயிற்று வலி வரும். (நீங்க கொடுத்து நான் சப்தமில்லாமல் சாப்பிட்டாலும் - எனக்கும்  வயிற்று வலி வரும்.)

ஏ) நல்லி கடையில் வாங்கிய கச்சேரி கையேடு - என்னிடமும் உள்ளது. உங்க கிட்டயும் இருக்கா? வெரி குட். ஆனால், அதைப் பரபரவென்று சப்தம் எழும் வகையில் பிரித்து, பாட்டைக் கண்டுபிடித்தால் - உரக்கப் படித்தும், காணவில்லை என்றால் - என்னடா புத்தகம் போட்டிருக்காங்க என்று முணுமுணுப்பதும் வேண்டாம். என் புத்தகத்தை நான் சப்தமில்லாமல் பிரித்து ரெஃபர் பண்ணும்பொழுது நீங்க என் தோள்பட்டை வழியாக அதை எட்டிப் பார்த்து என் மீது உஷ்ணமான மூச்சுக் காற்று விடாதீர்கள். 

ஐ) பாடகரின் கச்சேரியை நீங்க பத்து வருடங்களுக்கு மேலாகக் கேட்பவராக இருக்கலாம். அதற்காக அவருடைய முந்தைய கச்சேரிகளையும், இன்றைய கச்சேரியையும் ஆய்வு செய்து - விமரிசனங்கள் செய்துகொண்டு இருக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? மௌனமாகக் கேளுங்கள்; பிடிக்கவில்லையா - வேறு கச்சேரி - (பிடித்ததாக ஒன்று) கேட்கச் செல்லுங்கள்.

ஒ) இரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பாடகர் அபூர்வமான சங்கதிகள் போடும்பொழுது (மட்டும்) ஆஹா / ஓஹோ / சபாஷ் கூறுவதில் தவறில்லை. ஒவ்வொரு ராகம் பாடிமுடித்தபிறகும், வயலின் வாசிப்பு, மிருதங்க ஆவர்த்தனம் முடிந்தபின்னும் - ஊக்கப்படுத்த கைதட்டுதலும் தவறு இல்லை. தனியாவர்த்தன நேரத்தில் எழுந்து போதல் எனக்கும் நாகராஜ் போன்ற என் ஆர்க்குட் நண்பர்களுக்கும் பிடிக்கவே பிடிக்காது.

ஓ) கச்சேரி நன்றாக இருந்தால், அப்படியே ஒன்றிப்போய், கண்ணயர்ந்துவிடுவது, சில சமயங்களில் எனக்கும் நேர்ந்தது உண்டு. நீங்க அப்படி கண்ணயர்ந்தால் - தயவு செய்து குறட்டைவிட்டு, என் அமைதியான தூக்கத்தைக் கெடுத்துவிடாதீர்கள்!

அவ்வ்வ்வவ்வ்வ்வ் --- வளவுதான்! இப்போதைக்கு (மீதி இருந்தால், நாளை துவங்கி உங்க நடவடிக்கைகளைப் பார்த்து, பிறகு எழுதுகின்றேன்)

27 கருத்துகள்:

  1. கச்சேரிக்குப் போகும் எல்லோருக்கும் தேவையான அறிவுரைகள்தான்..............வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. உங்க இந்த கச்சேரி பற்றிய இடுகைகள் படிக்கும்பொழுது ஒரு நாளும் ஒரு பொழுதும் சபா பக்கமே எட்டிப்பாக்காத எனக்கும் போய் சங்க்கீத கச்சேரி கேக்கணும்ன்னு ஆசையா இருக்கு ம்ம் என்ன செய்ய நான் ஊருக்கு வரும் பொழுது சபா இருக்காதே,....

    பதிலளிநீக்கு
  3. நன்றி பெ சொ வி! கூட்டமாகக் கச்சேரி கேட்க வருகின்ற சிலர் - இந்த வகையில் நம்மை வருத்திவிடுவது உண்டு.
    வசந்த் - கச்சேரியை சபாவுக்குச் சென்று இரசிப்பது ஒருவகை. டி வி யிலோ வானொலியிலோ கேட்டு இரசிப்பது இன்னொரு வகை. அல்லது சி டி / டி வி டி கிடைத்தால் அதைக் கம்பியூட்டரில் / டி வி டி பிளேயரில் போட்டுக் கேட்பது ஒருவகை. நாங்க இந்த எல்லா வகையிலும் கேட்டு இரசிப்பது உண்டு. நீங்களும் முயற்சி செய்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கல்யாணக் காலம் போல கச்சேரி காலம் போலும். ஆரவாரமாகத் தயாராகிறீர்கள்... கச்சேரிகள் பற்றி தெரியாவிட்டாலும் நீங்கள் எழுதி இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. ///பாடகர் ஒன்றும் எங்களைப்போல் சரியாக இராகம் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு பாயிண்டுகள் கொடுக்கப்போவதில்லை.;-)///
    சரியா சொன்னீங்க.
    அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. ரவி நல்ல நேரத்தில் ஞாபகப்படுத்தினீர்கள் - சொல்ல மறந்தது - கர்நாடக இசைக் கச்சேரி எங்கே எப்படிக் கேட்டாலும், கல்யாண வீடுகளில் மட்டும் வேண்டவே வேண்டாம். ஹேராம் - catch my point?

    பதிலளிநீக்கு
  7. நன்றி தியாவின் பேனா;
    புலவன் புலிகேசி - அது என்ன ராகம் ம்ம்ம்ம் ?
    திவ்யா அது என்ன லிங்க்?

    பதிலளிநீக்கு
  8. இருங்க ஸ்ரீராம்.எனக்கு இப்பவே நித்யஸ்ரீ கச்சேரி கேக்கணும்.என்ன செய்ய.போட்ட C.D யையே போட்டுப் போட்டுக் கேக்கணும்.இல்லாட்டி இணையம் உதவி.

    பதிலளிநீக்கு
  9. கடைசி பாயின்ட் என்னை மனசுல வச்சு எழுதினிங்க போல

    பதிலளிநீக்கு
  10. அப்புறம்... இந்த கலர் கலரா தெரிய ரசிகர் (கை)களை சைட் அடிக்க வேண்டாம். அடிப்பதால் இருந்தாலும் சங்கீதம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டாம்

    பதிலளிநீக்கு
  11. அடேங்கப்பா !
    சார் இதை எல்லா சபா விலும் வெளியே ஒட்டி வெக்கலாமே.
    அல்லது துண்டறிக்கையாக எல்லாருக்கும் கொடுக்கலாம்.
    பிரமாதம் போங்க. நீஙக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் என்று இதிலிருந்து
    தெரிகிறது.அதுமட்டும் இல்லை . இசையின் மீது உங்களுக்கு உள்ள ஒரு பக்தியையும்
    இது காட்டுகிறது.

    அப்பாதுரை சார். அதெப்படி சார். இவ்வளவு காலையில் இப்படி எல்லாம் உஙகளுக்கு
    தோன்றுகிறது
    இனியன் பாலாஜி
    9176085807

    பதிலளிநீக்கு
  12. எல்லாம் ஒரு இது தான்.. அதாவது இசை மேலே இருக்கும் ஒரு பக்தி தான் பாலாஜி. ஹி ஹி.

    பதிலளிநீக்கு
  13. //இந்த மாதிரி எல்லாம் 'உடன் பாடுதல்' அதுவும் அடுத்த இருக்கைக்காரர்களுக்கு கேட்கும் வால்யூமில் வேண்டாமே!//

    ஐயோ இதை ஏன் சொல்லுகின்றீர்கள். "சோனி" கம்பெனியின் நிறுவனர் வாக்மேன் கண்டிபிடித்ததே நாம் தனியாக இசையை அல்லது நமக்கு பிடித்தாக கேட்ப்பதற்கு !

    சிலர் ஐபோனையும் ஐபாடையும் வைத்து கொண்டு ஊருக்கே பாட்டு வைத்து கேட்ப்பார்கள். இங்கு வந்து உள்ள நம் தேசத்தவர் எடிசன் நியூஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்லும் போது 'பிரம்மா முக்கடு பிரம்மா முக்கடு' என்று ஸ்பீக்கர் போனில் வைத்தோ அல்லது ஊருக்கு வைத்து கேட்டு வரும்போது எல்லா வெள்ளையர்களும் ஏதோ நம்மவரை ஜந்துவை பார்ப்பார்கள். ஆனால் அவர்களும் அதே ஜந்து தான். ட்ரெயின் கம்பர்ட்மெண்ட் முச்சூடும் கேட்கும்படி அவர்கள் ஒரு நாராசமான பாட்டை கேட்கும் பொது நல்ல தூக்கத்தில் இருக்கும் எனக்கு கடுப்பு வராதா இல்லையா ?

    இப்போது வரும் செல் போன்களில் (கைத்தொலைபேசி) உள்ள ரேடியோ மற்றும் பாட்டுக்களை வைத்து செய்யும் கூத்து அதை விட கொடுமை.

    இரண்டு மாதம் முன்பு இந்தியா வந்தபோது தாய் தந்தையரை கூட்டிக்கொண்டு திருமலா திருப்பதி சென்றேன். ஒருவர் காலை ஆறு மணிக்கு தன்னுடைய செல் போனில் ஏதோ டப்பா பாட்டை handsfree இல்லாமல் வைத்து கொண்டு வந்து என்னிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் ??

    இந்தியாவில் எல்லோரும் விதவிதமாக செல் போன் வாங்குகின்றார்கள் ஆனால் ஏன் யானை வாங்கி விட்டு அங்குசம் போல் handsfree வாங்குவிதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

    - சாய்

    பதிலளிநீக்கு
  14. பலே பலே... SOS [somebody on shoulder] என்பது இளைஞிகள் chat -ல் பயன்படுத்தும் ஒரு சங்கேதக் குறிப்பு. எப்பேர்பட்ட சங்கதிகளைப் பேசிக்கொண்டிருந்தாலும், SOS என்று எழுதிவிட்டால், சடுதியில் subject சாத்வீகமாகிவிடும்! குட்டிப் புத்தகம் பிரித்ததும், எட்டிப் பார்க்கும் முகங்களைப் படித்ததும்,
    "தமிழ் என் மூச்சு; ஆனால் அதைப் பிறர் மீது விடமாட்டேன்" என்ற வரிகள் ஞாபகம் வந்தது.

    நல்ல ஆலோசனைகள். இரசிகர்கள் கவனிப்பார்களாகுக. படம் நன்றாக இருக்கிறது. அந்தக் கச்சேரிக்கு ரசிகாஸ் வலைத்தளத்தில் எழுதிய விமர்சனத்தை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், பாருங்கள்.

    ஈரோடு நாகராஜ்.

    பதிலளிநீக்கு
  15. திவ்யாவுக்கு நன்றி...

    ஹேமா...நித்யஸ்ரீ பிடிக்குமா? (ஆனால் படத்தில் இருப்பது அவர் இல்லை தெரியும்தானே...)

    தூக்கத்தை சொல்றீங்களா துரை?

    உங்கள் ரசனைக்கு நன்றி பாலாஜி...அப்பாதுரை எப்பவுமே சுறுசுறு சார்...

    சாய் எந்த ஊரிலுமே மக்கள் இசைக்கு அடிமைதான் போல...இல்லை?

    நன்றி EN சார்...விமர்சனம் பார்க்கிறோம்...

    பதிலளிநீக்கு
  16. திவ்யா...ஸ்கூல்ல எப்பவும் முதல் பெஞ்ச்தானா...'சட்' டுனு சரியான பதிலோட வந்துடறீங்களே....

    பதிலளிநீக்கு
  17. no last bench.
    but in college second year searching for first bench.

    பதிலளிநீக்கு
  18. //சாய் எந்த ஊரிலுமே மக்கள் இசைக்கு அடிமைதான் போல...இல்லை?//

    சார் இசையை கேட்பதை குறை கூறவில்லை. ஆனால் உங்கள் இசை எனக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது போல் என்னவோ நம்மூரு பிள்ளையார் சதூர்த்தி - திருவிளையாடல் போல் வாக் மெனில் அல்லது கைத்தொலைபேசியில் கேட்பது தான் தான் தவறு என்று சொல்லவந்தேன் !

    பதிலளிநீக்கு
  19. உண்மைதான் சாய்.....உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  20. ஈரோட் நாகராஜ் சார் - நீங்க அனுப்பிய விமரிசனத்தை, http://kasusobhana.blogspot.com வலைப்பதிவில் வெளியிட்டுவிட்டோம். நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!