புதன், 11 ஏப்ரல், 2012

ரசித்த கவிதைகளும் என் கவிதைகளும்.. - பாஹே

                   
கணையாழி கவிதைகள் - ஏப்ரல் 12 இதழ்.
 

நாய்களின் நன்றி
மான்களின் மானம்
காகங்களின் ஒற்றுமை
புலிகளின் வீரம்
கதைகளைக் கேட்ட மகன்
என்னை ஆழ்ந்து பார்த்தான்
"உன் குணமாக எதுவுமில்லையா?"
என்று கேட்பது போல.  (இசாக்)
  
[பின் செருகல் : நல்லவேளை, அவனுக்கு நரி ஞாபகம் வரவில்லை]

வேசியாக்கப்பட வேண்டுமென்று
நான் எந்தக் கடவுளிடமும்
மனு கொடுத்ததில்லை (தமிழச்சி)

திருடிய முத்தங்களின் இனிமை
இன்று கசக்கிறது.
இந்த அலைகளின்
ஓடிப்பிடித்து விளையாட்டு 
ஓய்வதில்லை.

பற்கள் நிரந்தரம் என்றாலும்
புன்னகை தற்காலிகம்
அழுகையும் எனக்கொரு
சுவைதான்.
தழும்புகளைத் தடவிப் பார்ப்பது கூட
வீரனுக்கு இனிதுதான்.

[பின் செருகல் : புறநானூற்றில் மட்டும்]

நடிகர்கள் ஊர்திரும்பினர்
திரை சுருட்டி வைக்கப் பட்டது. (நீலமணி)

ஆனந்த விகடன் 'சொல்வனம்' - 11-4-12
  
கூண்டுக்கிளி
உங்களிடம்
என்ன பேசிவிடப் போகிறது?
'திறந்து விடுங்கள்' என்பது தவிர.


இனி, சொந்தக் கவிதைகள் சில....

(அ) 
திரும்பிப் போய்விடலாம்
போகவேண்டிய பாதை
புரியவில்லை -
சரி, இதுவரை
வந்த பாதை எது?

(ஆ)
மீனம்பாக்கக்
குடியிருப்பில்
விமான இரைச்சலுக்கு
அலுத்துக் கொண்டால் எப்படி? 
[மிச்ச வரிகள் இப்போது நீக்கம்]

(இ)  
  
வடைக்கிழவி
நரியை
வாத்சல்யத்துடன் பார்த்தாள் -
"இந்தா நீ சாப்பிடு" -
சுட்டுக் கொடுத்த வடையை
சப்புக் கொட்டிற்று -
உப்பு அதிகமானது தெரியாமல்
காக்கா கிட்டே புதுக் கதையும் கேட்கலாமே!
  
(ஈ)
எதிரே அமர்ந்திருந்தவர்
எழுந்து போனபிறகு
கீழே அம்பாரமாகக் 
கொட்டிக் கிடக்கிறது
அவர்
எடுத்துக் கொள்ளாதவை...
[1992 இல் எழுதப் பட்ட என் மிகப் பழைய 'குப்பை'க் கவிதையிலிருந்து]

(உ)
  
கருவறை இருட்டில்
கண்ணும் தெரியாமல்
காதும் கேட்காமல்
நின்று கொண்டிருக்கின்றன
கருங்கல் சிலைகள்.

எதிரே சன்னதியில்
தரிசன பாவத்தில்
பக்த கோடிகள் -
கருப்பு பிஸினஸில்
கொடிகளும்
கன்னிகள் 'சைட்'டில்
குட்டிக்களுமாய்.

(ஊ)
அடுத்த நொடி எனக்குண்டா?  
அதை நானும் அறிவதுண்டா? - அது
எடுத்தென்ன கொண்டுவரும்?
இனிமையா மற்றொன்றா?

(எ)
இமயத்திலிருந்து இறங்கி
அடிவாரம் கால் பதித்தேன் -
நிமிர்ந்தால் எதிரே
நியூயார்க் எம்பயர் -
ஓரம் ஒதுங்கி நின்றதும்  
எங்கள் கிராமத்து ஓடம்போக்கி ஆறு -
தேம்ஸ் பிடிக்குமே
திரும்பினேன் மிஸிஸிபி
  
சிந்துநதியின்மிசை நிலவும்
சேர நன்னாட்டிளம் பெண்களும்

என்னாங்கடாது -
இருதுருவங்களையும் எட்டிப் பார்த்தால் 
கருணாநிதியும் ஜெயலலிதாவும்
தருமமிகு சென்னையும் -
ஓடிப் போயிடலாம் வர்றீங்களா...?
                     

10 கருத்துகள்:

  1. கவிதைகள் எல்லாம் நன்று. படித்து ரசிக்க (பெருமூச்சுவிட) முடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. எங்கே போவது. எல்லா இடத்திலும் எல்லோரும் இருக்கிறார்கள்.:)

    ரசிக்கமுடிந்த எளிமைக் கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை.

    பின் செருகல்கள் நன்று:)!

    /கருவறை இருட்டில்
    கண்ணும் தெரியாமல்
    காதும் கேட்காமல்
    நின்று கொண்டிருக்கின்றன
    கருங்கல் சிலைகள்./

    பிடித்த வரிகள்!

    பதிலளிநீக்கு
  4. எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருக்கின்றன. முக்கியமாய்க் கருவறை இருட்டில் நிற்கும் சிலைகள்.

    அவற்றுக்குக் கண்ணும் தெரியும்; காதும் கேட்கும். வாயடைச்சுப் போய் நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
  5. அது என்னமோ தெரியலை; திடீர்னு உங்க ப்ளாகே காணாமல் போச்சு; தேடிக் கண்டு பிடிச்சேன். :))) நீங்க எழுதின கவிதைகளைப் பார்த்தோ???

    பதிலளிநீக்கு
  6. சித்தப்பா அசோசியேடட் எடிட்டரா இருந்தப்போ கணையாழி படிச்சது; அப்புறமா ஒரு சில படைப்புகளை மட்டும் மின் தமிழின் மூலம் படிக்கிறேன். புத்தகத்தை இன்னமும் பார்க்கவில்லை. முழுப் புத்தகமும் படிக்கவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கவிதைகளைப் படிக்கிறப்போ இன்னும் இன்னும் எழுதிப் பழகணும்,பாக்கணும்ன்னு இருக்கு !

    பதிலளிநீக்கு
  8. அழகை ஓலி நயத்தோடு தட்டும்போது
    கவிதை பிறக்கிறது.....
    அனுபவத்தை கவிநயத்தோடு
    சொல்லும்போது ஆனந்தம் பிறக்கிறது.........

    பதிலளிநீக்கு
  9. இப்போதும் திரும்பத் திரும்ப வாசிக்கிறேன்.எத்தனை அற்புதாமான சிந்தனைகள் !

    பதிலளிநீக்கு
  10. எல்லாமே நல்லா இருக்கு. உங்க கவிதைகளில் 'ஊ' மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!