சனி, 27 ஏப்ரல், 2013

பாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 21, 2013 முதல், 27, ஏப்ரல் 2013 வரை



எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


1) பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஜின்னா:   நான், பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தேர்வு முடித்த மாணவர்கள், கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்த, சில பயிற்சி வகுப்புகளுக்கு செல்வர். இதுபோல், பார்வையற்ற மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற சிந்தனையில், "இந்தியன் அசோசியேஷன் பார் பிளைண்ட்' என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கினேன்.
                                                   

இந்நிறுவனம் மூலம், "சாதனா சிறப்பு பயிற்சி பள்ளி'யை உருவாக்கி, பார்வையற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து, வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம். பார்வையற்ற மாணவர்களை கையாளத் தெரிந்த ஆசிரியரை நியமித்து, இலவசமாகவே பயிற்சி தருகிறோம்.பார்வையற்ற மாணவர்கள், அரசு பணியில் சேர முன் போட்டித் தேர்வுகளை எழுத தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பார்வையற்ற மாணவர்களும், மற்றவர்களோடு போட்டித் தேர்வு எழுதியே, பணிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுக்கு பயிற்சி தரும் தனியார் பயிற்சி பள்ளிகளில், பிரெய்லி புத்தகங்கள், பயிற்சி உபகரணங்கள் என, பார்வையற்றோருக்கு எந்த வசதியும் கிடைக்காததால், பார்வையற்ற மாணவர்களுக்கு என, தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தேன்.


அரசு துறை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்றார் போல், ஆங்கில அறிவை வளர்க்க, "ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கணினி பயிற்சி என, சாதாரண மனிதர்களோடு பார்வையற்ற மாணவனும் போட்டி போடும் அளவிற்கு, பயிற்சி தருகிறோம். "யுனைட்டட் வே ஆப் சென்னை' என்ற நிறுவன உதவியுடன், 25 கணினிகள் வாங்கி, பார்வையற்ற மாணவர்களுக்கான கணினி மையத்தையும் நடத்துகிறோம். கோடையில் நடத்தப்படும் இவ்வகுப்புகளை, இனி ஆண்டு முழுவதும் நடத்த முயற்சித்து வருகிறோம்.தொடர்புக்கு: 96008 22994.

2) ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை :

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும்,அதை வெளிக்கொண்டு வந்து பாராட்டினால் போதும்,அவர் திறமையின் மிச்சத்தை காட்டுவார்,விரைவில் உச்சத்தை தொடுவார்.


 அந்த வேலையைத்தான் நமது இணையதளத்தின் பொக்கிஷம் செய்து வருகிறது.அந்த வரிசையில் வருகிறார் வெங்கடேஷ்.கோவை சிங்கநல்லூரைச்சேர்ந்தவர்,வயது 27,ஏழாவது வரை படித்துள்ளார்.அங்குள்ள தங்க நகை கடையில் நகை செய்யும் தொழிலாளியாக உள்ளார்,காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குள் நுழைந்தால் இரவு பத்து மணி வரை வேலை,வேலைதான். வெங்கடேஷ்க்கு ஏதோ ஒரு வகையில் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,அது பற்றிய சிந்தனையில் இருந்தபோது உடன் வேலை செய்பவர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை ஆச்சர்யத்துடன் படித்துள்ளார்.


செய்தியில் இருந்த ஆச்சர்யம் என்னவென்றால் ஒருவர் இரண்டு கிராம் எடையில் தங்கத்தில் சைக்கிள் செய்து சாதனை படைத்துள்ளார் என்பதுதான்.இதைப்படித்ததும் இதைவிட குறைவான எடையில் நாம் ஏன் சைக்கிள் செய்யக்கூடாது என்று முடிவு செசய்து 180 மில்லி கிராமில் ஒரு தங்க சைக்கிளை செய்துவிட்டார்.,இந்த சைக்கிளின் ஹேண்டில் பாரை திருப்பமுடியும்,பெடலை சுழற்ற முடியும்,சக்கரமும் சுற்றும்.
இவ்வளவு நுணுக்கமாக வெங்கடேஷ் உருவாக்கிய சைக்கிளை பார்த்து முதலில் பாராட்டியவர் இவரது முதலாளி அம்பிகாபதிதான்.இவர் தந்த ஊக்கத்தால் 150 மில்லியில் கிரிக்கெட் உலககோப்பை,கோணியம்மன் கோவில் தேர்,கிட்டார்,தாமரை பூ மற்றும் துப்பாக்கி.
ஊதினால் பறந்துவிடும் 170 மில்லிகிராம் எடையில் இவர் செய்துள்ள துப்பாக்கியை, நிஜ துப்பாக்கி போல மடக்கி திறக்கலாம்,குண்டு போடும் இடத்தை சுழற்றலாம்.

18 காரட் தங்கத்தை உபயோகித்து, இப்படி இவர் செய்யும் தங்க மினியேச்சசரின் மதிப்பு ஐநூறு ரூபாய்க்குள்தான்,ஆனால் இதன் பின்னணியில் உள்ள இவரது உழைப்பு மிகவும் பெரியது.ஒரு மினியேச்சர் செய்ய சமயத்தில் ஒரு நாள் கூட ஆகிவிடுமாம்.வேலை இல்லாத நாளில்,நேரத்தில் இது மாதிரி பொருட்களை இவர் உருவாக்குகிறார்.இவரது தங்க மினியேச்சர் அனைத்துமே நிச்சயம் கின்னஸ் ,மற்றும் சாதனை புத்தகங்களில் இடம் பெறக்கூடியதுதான்.,ஆனால் அதற்கு முதலில் பத்திரிகையில் இது பற்றிய செய்தி வரவேண்டும் என்பது முதல் விதி,நீங்கள் என் சாதனை கனவு,நனவாக வழிகாட்டுவீர்களா என்ற வெங்கடேஷ்க்கு தந்த பதில்தான் இந்த கட்டுரை.வெங்கடேஷின் தொடர்பு எண்:9943971200.



3) காது கேளாதவர்களும் செல்போனை பயன் படுத்துவதற்கான கருவியைக் கண்டு பிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள் !!

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.                                                     

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

இவர்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?
 
 (எடுத்துச் சேமித்து வைத்திருந்த படம் எங்கே போச்சு?)


“எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு சரியாகக் காது கேட்காது. அவருக்காக நாம் ஒரு கருவி கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனையின் விளைவே இந்தக் கருவி” என்கிற சிவனேஷ், “அரைமனசோட அவர் என் கருவியைப் பயன்படுத்தி செல்போன்ல பேசுனப்ப அவர் முகத்துல வெளிப்பட்ட சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்கின்றபோது, சிவனேஷின் முகத்தில் சாதித்த பெருமிதம் அலையாடியது.

எப்படி இயங்குகிறது இந்தக் கருவி?

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

“பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்” என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள். 

4) ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்:

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு

உலகத்தில் பல சோலார் கண்டுபிடிப்பு வந்தாலும் அது மிக ஸ்லோவாக தான் நடை முறை படுத்தும் காரணம் அதன் விலை. சோலார் எனர்ஜியை மின்சாரமாக மாற்றுவதற்க்கு கண்ணாடி, சிலிக்கான் போன்ற பல மினிரல்கள் சேர்த்து தான் ஃபொட்டோ வால்ட்டிக் என்னும் சோலார் கன்வெர்ஷன் செய்து மின்சாரம் பெறப்படுகிறது. இப்போது ஐபிஎம் ஒரு புது வகை சோலார் டெக்னாலஜியை கன்டுபிடித்துள்ளது. இதற்க்கு பெயர் High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000 மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான சில மெட்டல்கள் மூலம் அமைத்துள்ளனர். 

இதில் 30% சூரிய சக்தியை மின்சாரக மாற்றியும் மீதி உள்ள சூடில் உப்பு தண்ணீரை சேலினேட் முறையில் நல்ல தண்ணீராக மாற்றியும் மிச்சம் உள்ள எனர்ஜியில் குளிர்ந்த காற்று கிடைக்குமாறு 3 இன் 1 ஆக அமைத்திருக்கிறார்கள்.
அதாவது பொதுவாக இப்போது உள்ள ஒரு முழு சோலார் ஃபோட்டோவால்டிக் பிளேட் மூலம் 300 வாட்ஸ் கிடைக்கும் ஆனால் இங்கு 1 சென்டி மீட்டரில் 200 முதல் 250 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு இரண்டடிக்கு இரண்டி இருந்தால் முழு வீட்டுக்கு 8 மணி நேர சூரிய சக்தியில் 24 மணி நேரமும் கிடைக்கும் என்றால் பெரிய கண்டுபிடிப்பு தான். அதாவது ஒரு ஊருக்கே ஒரு டிஷ் போது. இவர்கள் சஹாரா பாலைவனத்தில் 2% சதவிகித இடம் கொடுத்தால் உலகத்தின் மொத்த மின்சார தேவையும் எந்த ஒரு எனர்ஜி இல்லாமல் 100% கிடைக்குமாம்.
இதை அமைக்க வெறும் 12,500 ரூபாய் தான் ஒரு ஸ்கொயர் மீட்டருக்கு ஆகும் செலவு அது போக 1000 யூனிட் கரென்ட்டுகு வெறும் 5 ரூபாய் தான் செலவு.கூடவே தண்ணீர் பஞ்சம் மற்றூம் இயற்கை ஏசி வேறு கிடைக்கும் 



(எங்கள் டெக்னிகல் ஆசிரியர் இதில் சில சிறு சந்தேகங்களைச் சொல்லியுள்ளார். ஆனாலும் வரவேற்கத்தக்கச் செய்தியே என்பது அவர் கருத்து)

5) அதிக விலையில் விற்கும் வெளிநாட்டு மருந்துகளுக்கு, முற்றுப்புள்ளி வைத்த பெண் வழக்கறிஞர், ராஜேஸ்வரி: நான், சென்னையை சேர்ந்தவள். புனே சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை முடித்த பின், "காப்புரிமை' தொடர்பான வழக்குகளில் வாதாடுவது வழக்கம். பல வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், காப்புரிமையால் கொள்ளை லாபம் பெறுவதை தடுத்ததன் மூலம், இந்தியாவின் பல லட்ச ஏழை நோயாளிகள், குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்று பயன்பெறுவர். 


                                           
 

புற்றுநோய்களில் மிகவும் கொடியது, "பிளட் கேன்சர்' எனப்படும், ரத்த புற்றுநோய். இந்நோய் தாக்கியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வெள்ளை அணுக்கள் உடனடியாக குறைவதால்,நோய் கண்டறியப்பட்ட சில மாதத்திலேயே மரணமடைவர். 

வாழ்நாளை நீட்டிக்க சுவிஸ் நாட்டின், "நோவார்டிஸ்' என்ற மருந்து நிறுவனம், 1992ல், "இமேடினிப் மெசிலேட்' என்ற மருந்தை விற்க ஆரம்பித்தது. இம்மருந்தை வாங்க, ஒருவரின் மாத செலவு மட்டும், 1.20 லட்சம் ரூபாய்.நல்ல லாபம் பார்த்த நோவார்டிஸ் நிறுவனம், பெரும்பாலான நாடுகளிலும் விற்க ஆரம்பித்து, காப்புரிமையையும் பெற்றது.

1997ல், இந்திய கண்டுபிடிப்பாளர் பதிவு ஆணையத்திடமும் விண்ணப்பித்தது. ஆனால், "நாட்கோ' என்ற இந்திய நிறுவனம், நோவார்டிசுக்கு இணையான, ரத்த புற்றுநோய்க்கான மருந்தை, 2002ல் கண்டுபிடித்து, விற்பனை செய்தது. இம்மருந்தின் மாத செலவு வெறும், 8,000 ரூபாய்.நாட்கோவை விட, 15 மடங்கு அதிக லாபத்தில் வெளிநாட்டு நிறுவனம் விற்பனை செய்வதால், அதற்கு காப்புரிமை தரக்கூடாது என, நாட்கோ சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, வெற்றி பெற்றேன்.
காப்புரிமை மூலம் மருந்துகளை அதிக லாபத்தில் விற்று வந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, நஷ்டஈடாக, பல கோடி ரூபாய் தர வேண்டும் என்ற பயத்தில் இருந்த இந்திய நிறுவனங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம், வெளிநாட்டு மருந்துகளுக்கு இணையாக, உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் தயாரிக்க முயலும்.

நன்றி தினமலர்
6) கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.
                                                


இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும் இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.

தங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண்.இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.! (முகநூல்)



7) விதை எடுத்து மரம் பெருக்கும் திட்டம்:-
பறவை இனங்கள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் மரத்தின் விதைகளை எடுத்து நீர் நிலை பகுதிகளில் கொண்டுசேர்ப்போம் .
                                        


இதை பல இடங்களில் எடுத்து சொல்லி உள்ளேன்.இம் முயற்சியில் பெங்களூர் செல்வராஜ்,பெங்களூர் வீதி மரங்களில் 30,000 விதை பொருக்கி,கோவை "பசுமை கரங்கள்" ,பீளமேடு வசம் ஒப்படைத்தார். (முகநூல்)


8) இந்தவார 'மனிதர்களுக்கு ஒரு பாடம்' ('எபி' ஆசிரியர் ஒருவர் வீட்டில் நடந்தபோது அலைபேசியில் எடுத்த வீடியோ. பாடல் சேர்த்தவர் தலை(யில்)மை(தடவாத) 'எபி' ஆசிரியர்)

   
         

11 கருத்துகள்:

  1. முதல் தங்கம் ஆப்பிரீகப் பெண்ணுக்கு. இரண்டாவது ஐபிஎம் நிறுவனௌதுக்கு
    மூன்றாவது காதுகேட்கவைத்தவர்க்க்கு
    நான்காவது கண் தேர்வாளருக்கு,
    விதைகளைச் சேர்த்து மரங்களுக்கு விட்டிட்ட பெங்களூர் செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    கடைசி வீடியோவில் காக்கா சண்டையா இல்லை காப்பாற்றுகிறதா ஸாரி புரியவில்லை

    பதிலளிநீக்கு
  2. Advocate Rajeswari deserves our
    hearty congratulations for her efforts .
    Drug Manufacturers spend a lot in pushing their products thro' those who prescribe them thro' unknown routes.

    Some twenty or thirty years ago, their expenses were thro gifts packages while pleading for their prescription.

    Drug Manufacturers are a generous group however. Mostly on their generosity those who prescribe their drugs enjoy holiday resorts in far off lands as they go for conferences

    Everyone knows but none sees in this direction.

    subbu thatha

    பதிலளிநீக்கு
  3. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஜின்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கோவை வெங்கடேஷ் அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள். அவர் செய்த சாதனங்களை பார்த்தேன் அருமை.
    புதுக்கோட்டை மாணவர்கள் கண்டு பிடித்தகருவி மிகவும் பயனுள்ளது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம் வாழ்க.
    வழக்கறிஞர், ராஜேஸ்வரி அவர்களின் சேவை வாழ்க!
    கென்யா நாட்டு வீராங்கனையின் மனிதநேயம் வாழ்க!
    பெங்களூர் செல்வராஜ் முயற்சி வாழக்!
    குப்புறவிழுந்து விட்ட காக்காவை நிமிர்த்துகிறதா?
    உதவி செய்யும் காகத்திற்கு வாழ்த்துக்கள்.
    நல்ல செய்திகளை தேடி தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  4. அனைத்துமே அருமையான செய்திகள்.......

    தொடரட்டும் உங்கள் அருமையான பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான செய்திகள்! உற்சாகம் தரும் பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அனைத்து தகவல்களும் எனக்கு தெரியாதவை நன்றி சாரி கடைசி வீடியோ மாடும் புரியவில்லை எதற்கு என்று

    பதிலளிநீக்கு
  7. நல்ல செய்திகள்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையும், கண்டுபிடிப்பும் சிறப்பு.

    வீடியோவில் காகங்களிடமிருந்து மனிதருக்கான பாடம், புரியவில்லை எனக்கும்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் அருமையான செய்திகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  9. என்னோட கமெண்ட்ட காணோம் காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா என்ன....

    பதிலளிநீக்கு
  10. அருமையான செய்திகள். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  11. என்னோட கமென்டையும் காணோம், ஆனால் ஃபாலோ அப் மட்டும் வருது! :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!