செவ்வாய், 14 ஜூலை, 2020

புதுமைப் பெண்களடி ..... -- ஜீவி


 புதுமைப்   பெண்களடி .....

                                             -- ஜீவி    

                                                
ன்ன,  நீங்க பீடி பிடிப்பீங்களா?" என்று அதிர்ச்சியுடன்  கேட்டாள்  வித்யா.      

சற்றுமுன் முன் மூக்கைச் சுளித்தபடி வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்த அவன் முகப்பக்கம் வந்து வந்து மோப்பம் பிடிக்கும் தோரணையில் அவள் ஆராய்ந்ததின் அர்த்தம் இப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது. 'பீடி' என்று அவள் சொன்னது வேறு அவன் அந்தஸ்த்தை அதல பாதாளத்தில் தள்ளியது போலிருந்தது அவனுக்கு.

"பீடி இல்லை; சிகரெட் பழக்கம் உண்டு" என்று கூலாகச் சொன்னான் சுரேஷ்.

"பீடி, சிகரெட், சுருட்டு---  எந்தச் சனியனா இருந்தா, என்ன?..   எல்லாம் ஒன்றுதான்...   ஏங்க உங்க புத்தி இப்படிப் போறது?" என்று விரோதத்துடன் அவனைப் பார்த்து முறைத்தாள் அவள்.

தனிப்பட்டத் தாக்குதலைத் தாங்காது நிலை குலைந்து போனான் சுரேஷ்.   'கல்யாணம் ஆகி முழுசாக நாலு  வாரம்  கூட ஆகவில்லை. அதற்குள் இவள்  அட்டகாசம் இவ்வளவா' என்று அவன் மனம் குமைந்தது.     இதற்குப் பயந்து விடக்கூடாது என்று ஆணின் பெளருஷம் மனசில் மூர்க்கமாய்த் தலைதூக்கியது.

"எல்லாம் உங்கள் நல்லத்துக்குத்தான் சொல்றேன்.." என்று பவ்யமாய் சொன்னாள் வித்யா. அவள் பணிவு இன்னும் இவன் ஆத்திரத்தைக் கூட்டியது. "என்ன பொல்லாத நல்லதுக்கு?" என்று சீறினான்.

"புதுசா உங்களுக்குத் தெரியாததை என்ன சொல்லிடப் போறேன்?.  'புகை பிடிக்கிறது, உடல் நலனுக்குக் கேடு'ன்னு நீங்க பிடிக்கற பீடி பாக்கெட் மேலேயே எழுதியிருக்கறது கண்ணுக்குப் படலயா?"

"பீடி இல்லே, சிகரெட்" என்று உறுமினான் சுரேஷ்.

"சரி. எதுவோ ஒண்ணு.. சிகரெட்ன்னா ஒண்ணும் உசத்தி ஆகிடப்போறதில்லே.. உங்க அந்தஸ்த்தும் அதுனாலே ஒண்ணும் உசந்திடப்போறதில்லே..." என்று ஏற்கனவே  எரியற  நெருப்பில்  எண்ணெய் ஊற்றினாள்  வித்யா.

"சிகரெட் பிடிச்சா வியாதி வரும்னா, அப்போ சிகரெட் பிடிக்காதவனெல்லாம் எந்த வியாதியும் இல்லாம இருக்காங்கங்கறையா?"

"இதோ பாருங்க..    இப்படி விதண்டாவாதம் செய்யறதை விட்டு விஷயத்தை புரிஞ்சிக்கங்க.. வியாதியே இல்லாத, மனுஷரில்லை.. ஒத்துக்கறேன். அதுவா வர்றது ஒண்ணுன்னா, நாமே ஏன் வரவழைச்சிக்கணும்ங்கறது தான் என்னோட கேள்வி.. கான்ஸர் அது இதுவென்று பெரிய வியாதியெல்லாம் வந்து நானும், நாளைக்கு நமக்குப் பொறக்கப் போற குழந்தையும் கண்கலங்கி நிக்கணும்ங்கறீங்களா?  ஆஸ்பத்திரி சார்ஜெல்லாம் சகட்டுமேனிக்கு எகிறிப்போயிடுச்சு, தெரியுமில்லையா?.. நாலு காசு சம்பாதிக்கறைச்சேயே, பெரிய சிந்தனாவாதி மாதிரி இப்படி ஊதிகிட்டு ஆட்டம் போடற வேலையை விட்டுட்டு, எந்த வியாதி வருமோன்னு பயந்திண்டு இப்பவே அதுக்கும் சேர்த்து சம்பாதிக்கற வழியைப் பாருங்க.. அதுதான் புருஷ லட்சணம்..தெரிஞ்சிக்கங்க.."  

"ஏய்! என்ன அதிகமாப் பேசறே?"-- என்று  வேகமாக ஆரம்பித்தவன், வித்யாவின் வழுவழுப்பான வட்ட முகத்தின் அழகை நேர்கொண்டதும், சுருதி குறைந்து சுருண்டு போனான்..    அதிக அலட்டல் அவளது அசூயையைக் கூட்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இவளை சாகஸமாக சமாளிக்க வேண்டும் என்று கணக்கு போட்டவன், "உங்க அப்பா உதடைப் பார்த்தா சிகரெட் பிடிக்கற மாதிரித் தெரியுதே?" என்று சுற்றி வளைத்து ஆரம்பித்தான்.

"என்ன உளர்றீங்க?.. இது என்ன உதடு ஜோஸ்யமா?"

"வித்யா! கூல்.. ரொம்ப எகிறாதே!.. அகத்தின் அழகு முகம் காட்டும் என்பாங்க.. அதே மாதிரி சிகரெட் சமாச்சாரத்திலும் ஒரு சீக்ரெட் இருக்கு..  இழுக்க இழுக்க இன்பம்ன்னாலும், இறுதிலே வெள்ளை வெள்ளையா உதட்லே படியற நிகோடின் திட்டை மறைக்க முடியாது. தெரிஞ்சிக்கோ.."

"தெரியுதுலே..  பின்னே ஏன் இதைக் கட்டிண்டு அழறீங்க.." என்று அவனை மடக்கியவள், எச்சரிக்கும் தொனியில் தொடர்ந்தாள்: "தாலி கட்டின பெண்டாட்டி வேணுமா, இல்லே இந்த சிகரெட்டோடையே வாழ்க்கை நடத்தலாமான்னு நீங்களே தீர்மானிசிக்கங்க.." என்று கோபத்துடன் சொல்லியபடியே கட்டிலிலிருந்து எழுந்தாள்.

"ப்ளீஸ்..ப்ளீஸ்.. வித்யா..ஒரு நிமிஷம்.." என்று பற்றியவனின் கரத்தை உதறினாள் அவள்.."எனக்கு உங்க பக்கத்லே வந்தாலே குமட்டிண்டு வர்றது..சீச்சீ..  என்ன நாத்தம்?..  நாலு வார பழக்கத்திலே இன்னிக்குத் தான் தெரிஞ்சது  உங்களோட  இந்த லட்சணம்..  இப்படியே போச்சுனா நான் வாந்தி எடுத்தே செத்திடுவேன்.."

"பழகிடும், வித்யா!..  சொன்னாக் கேளு..   என்ன,   உங்க அம்மா பழகிக்கலையா?"

"அடச்சீ..   இன்னொரு தடவை எங்கப்பாவை இழுத்துப் பேசாதீங்க..தெய்வம் அவர்.. தெரிச்சிக்கங்க.. நாலு வருஷம் முன்னாடி ஆட்டோலே போகறச்சே, ஒரு ஆக்ஸிடெண்ட்..   உதடு கிழிஞ்சு, தையல் போட்டு..அதெல்லாம் உங்ககிட்டே என்ன விளக்கம் வேண்டியிருக்கு.." என்று வித்யா அதிர்ந்தாள்.

அவன் அசரவில்லை  என்று தெரிந்ததும்  சீறினாள்:  "தீர்மானமாச் சொல்றேன்...   என்னாலே இந்த நாத்தத்தைச் சகிச்சிக்க முடியாது.. சிகரெட்டா, நானான்னு நீங்களே தீர்மானிசிக்கங்க.."என்று படீரென்று கதவு சாத்திக் கொண்டு சென்றாள்.

மாமனார்  பார்த்துப் பார்த்து  வாங்கிக் கொடுத்த  மழமழ  கட்டில்.  மெத்து மெத்து  ஸ்லீப்வெல்  மேட்ரஸ்.   கொஞ்ச நேரத்திற்கு முன்
அவள்  வாளிப்பான உடல்  எந்த இடத்தில் சாய்ந்து  படுத்திருந்ததோ
அந்த இடத்தில்  புஜம் பட்டதற்கே  சொக்கிப் போனான் அவன்.  சிகரெட்டும் இன்னொரு  சொக்கல்  தான்.     இந்த இரண்டில் எதை இழக்கவும்  அவன் மனம்  இணங்கவில்லை.    இரண்டையும்  தக்க வைத்துக்  கொள்ளவதற்கு  சாதுர்யமான  நடவடிக்கை  ஏதாவது  உண்டா என்று மனம்  யோசித்தது.   

சுரேஷ் குழம்பினான்.    இந்த ஜென்மத்தில்  சிகரெட்டைப் பிடிக்காமல் விட்டு விட முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. 'எப்படியாவது இவளைச் சரிப்படுத்த வேண்டும். நாற்றம் என்கிறாளே?..என்ன ஜென்மம் இவள்?..   இந்த வசீகர வாசனையை அவளுக்கும் பழக்கப்படுத்துவதே ஒரே வழி; அதை ஒரு தரம் அனுபவித்து விட்டாளானால்,  எல்லாம் சரியாகப் போய்விடும்' என்று நினைத்தான்.

பாண்டிபஜாரில்  ஃபாரின்  சரக்குகள் விற்கும்  பகுதியில்  மேற்கத்திய பெண் ஒருத்தி சிகரெட் பிடிக்கும்  தோரணையில்   படம் போட்ட 
சிகரெட் டப்பா ஒன்றைப்  பார்த்தது   அவன்  ஞாபகத்தில் பதிந்திருந்தது..  அந்த மாதிரி சிகரெட்டில் எல்லாம்  சுகந்த மணம் கமழும்  என்று  இந்த மாதிரி விஷயங்களில்  கைதேர்ந்த நண்பன்  ஒருவன் சொன்னது நினைவுக்கு வந்தது..   அதை வாங்கி புகைத்தால் போயிற்று என்று நினைப்பு  ஓடி  வேறு என்னன்னவோவாக வடிவெடுத்தது.    

 டுத்த நாளுக்கு அடுத்த நாள்.

ஆபிஸ் விட்டு வீடு திரும்பிய சுரேஷூக்கு வீட்டு வெளி ஹாலிலிலேயே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

வித்யா சோபாவில் அமர்ந்து எதிரில் உட்கார்ந்திருக்கும் யாருடனோ ரொம்ப சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

உள்ளே நுழைந்த அவனைப் பார்த்து முகம் மலர்ந்தவள், அந்நிய ஆடவனை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். "சுரேஷ்! இவர்தான் மிஸ்டர் ஸ்ரீகாந்த்!  நான் வேலை செஞ்ச கம்பெனிலே என்னோட ஒண்ணா ஒர்க் பண்ணினவர்..  இவர் அவசரமா கம்பெனி வேலையா டூர் போகவேண்டியிருந்ததனாலே, நம்ப கல்யாணத்திற்கு கூட வரமுடியாம போயிடுத்து."

"ஐ..ஸீ.." என்று ஒரு இழுப்பு இழுத்த சுரேஷ், ஸ்ரீகாந்தின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவனை லேசாக ஆராய்ந்தான். 

கொழுகொழுவென்று கோயில் காளை  போல அரும்பு மீசையும் அதுவுமாக அம்சமாக இவனை விட அழகாக அவன் இருந்தது வேறு இவனுள் எரிச்சலை அதிகப்படுத்தியது. இருந்தாலும், வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், "ஓகோ.." என்று ஒப்புக்குச் சொல்லி வைத்தான்.

வித்யாவே தொடர்ந்தாள்: "சுரேஷ்! ஸ்ரீகாந்த் வெரிகுட் ஜெண்டில்மேன்..   பழகறத்துக்கு   ரொம்ப ரொம்ப இனிமையானவர்.. இவரது நடவடிக்கைகள் பலது என்னை ரொப்பவே இம்ப்ரஸ் பண்ணும்..இதில் விசேஷம் என்னன்னா, இவரும் பல  விஷயங்களில் என்னைப் போலவே.   எனக்குப் பிடிக்காதது பலதும் இவருக்கும் பிடிக்காது.. குறிப்பா சொல்லணும்னா, ஒரு சின்ன  ஒற்றுமையைச் சொல்லலாம்.." ஒரு நிமிஷம் நிறுத்தித் தொடர்ந்தாள் வித்யா...

"எங்க ரெண்டு பேருக்குமே சிகரெட் பிடிக்கறவங்களைக் கண்டா அறவே பிடிக்காது.... யாராவது பத்த வைச்சா, நாங்க ரெண்டு பேருமே எழுந்து தூரப் போயிடுவோம். அவ்வளவு ஒற்றுமை எங்க ரெண்டு 
பேருக்கும்.."" என்று கலகலவென்று சிரித்தாள்.

சுரேஷூக்கு விளக்கெண்ணெய் குடித்தமாதிரி முகம் கோணிற்று. ஜிவுஜிவுவென்று சிவந்த முகத்தை மறைத்துக் கொள்ள, "ஒரு நிமிஷம்--முகம் அலம்பி வருகிறேன்" என்று உள்ளே போகத் திரும்பின்னான். 

அவன் பாத்ரூம் பக்கம்  போய்விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு "என்ன ஸ்ரீகாந்த்! ஏதோ தொலைக்காட்சி சீரியல்லே நடிக்கப்போறதா சொன்னீங்க..ஷூட்டிங் ஆரம்பிச்சாசா?" என்றாள் வித்யா.

"அட்வான்ஸ் பணம் கூட வாங்கிட்டேன், வித்யா!..  என்னை மதிச்சு ஆக்ட் பண்ண நீங்களும் ஒரு துண்டு வேடம் கொடுத்திட்டீங்க..  இந்த அனுபவத்திலே நிஜ ஷூட்டிங்னு வரும் பொழுது ஜமாச்சிடமாட்டேனா?.. இப்போ சொல்லுங்க..எப்படி என் ஆக்டிங்?"

"பிச்சு உதறிட்டீங்க..'செவசெவ'ன்னு மூஞ்சி போன போக்கைப் பார்த்தபோதே, மனுஷர் திருந்திடுவார்ன்னு எனக்குத் தெரிஞ்சுபோயிடுத்து..   தேங்ஸ் அ லாட் ஸ்ரீகாந்த்!"

"இப்படி ஒரு ஆக்ட் கொடுக்க சந்தர்ப்பம் கொடுத்ததுக்கு நான் தான் தேங்ஸ் சொல்லணும்.. என்னை எங்கே பேசவிட்டீங்க?...  நீங்களே சமாளிச்சு தூள் கிளப்பிட்டீங்களே?"

"எல்லாம் சொந்த வயித்துவலி ஸ்ரீகாந்த்!..  ஆரம்பத்திலேயே இப்படி ஒரே போடா போட்டு வழிக்குக் கொண்டுவர்லேன்னா, பின்னாடி 'அம்மா,அப்பா'ன்னு அவஸ்தைப்படறது யாரு?..  இது ஹெல்த் சமாச்சாரமில்லையா?..  ஒரு குடும்ப நலனே இதுலே ஊசலாடிக் கொண்டிருக்கு இல்லையா?..  அதான் அப்படி ஒரு கடுமையான 'டோஸா' கொடுக்க வேண்டியதாயிடுத்து.. ....  ஓ.கே..ஸீ..யூ..ஸ்ரீகாந்த்!..  தேங்ஸ்.."

"நான் தான் சொல்லவேண்டும். எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்ததுக்கு, தேங்ஸ்."  எழுந்து செருப்பு மாட்டிக்கொண்டு வெளியே போகிறவனை நன்றியுடன் பார்த்தாள், வித்யா.

டுத்த நாள் காலையில் சுரேஷ் விரலுக்கிடையில் எதையோ இடுக்கியபடி, யோசித்தவாறு ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

"ஆபிஸ் கிளம்பலையா?" என்று ஹாலுக்கு வந்த வித்யா, "என்னங்க, கையிலே?  சாக்பீஸா?..எதுக்கு இது?" என்று ஆச்சரியம் காட்டினாள்.

"வித்யா! ரெண்டு நாளா சிகரெட்டைத் தொடவே இல்லே. அதுக்குப் பதிலாத்தான் இந்த சாக்பீஸ்.. சிகரெட்டைக் கையிலே வைச்சிருக்கிற மாதிரியே இருக்கு..  எல்லாம் அந்த சனியனை மறக்கத்தான்..  நீயே பாரேன்..  போகப்போகச் சரியாயிடும்..  நானும் ஸ்ரீகாந்த் மாதிரி, உனக்குப் பிடிச்ச மாதிரி..." என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறுபவனின் கற்றை நெற்றிக் குழலைக் கோதி விட்டாள், வித்யா. .

============================

89 கருத்துகள்:

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.

      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.  வாழ்வில் எல்லா நலனும், வளமும் இன்பமும் உங்களுக்கு கிடைக்க பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. அன்பின் நல்வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நலமுடனும் வளமுடனும் அனைவரும் வாழ்வதற்கு நானும் வேண்டிக் கொள்கிறேன்..

      நீக்கு
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா...

      நீக்கு
    4. அன்பின் தனபாலன்..
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. தம்பி துரை செல்வராஜூக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசிகள்.
      அவர் எல்லா நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

      நீக்கு
    6. அன்பின் ஜீவி அண்ணா ....
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஜீவி அண்ணா அவர்களது கதை..

    புகை தான் கதை.. ஆனாலும் கனமான கதைக் களம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராமுக்கும் அன்பின் துரைக்கும்
      இனிய நற்காலை வணக்கம்.

      எப்பொழுதும் நலம் காக்க சமயபுரத்து அம்மா உதவுவாள்.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா.....   இனிய காலை / மாலை வணக்கம்.

      நீக்கு
    3. ஜீவி சாரின் கதையா இன்று.
      புகை எப்பொழுதும் தம்பதிகளுக்குப் பகை. மிக நல்ல கரு.
      புதுமண மோகத்தில் விட்டுக் கொடுக்காமல்
      மனைவி போராட,
      கணவனும் தணிந்து போகிறானே.
      நிறைய குடும்பங்களில் இது நடந்திருந்தால் எத்தனையோ நன்மை
      நடந்திருக்கும்.

      அவன் நல்ல படியாக எடுத்துக் கொண்டான்.
      நிறையக் கணவர்களுக்கு மனைவிக்கு
      இன்னோரு சினேகிதன் இருப்பதே
      பிடிக்காது.
      இந்தக் காலங்கள் மாறி இருக்கிறது
      போலும்.
      கோவையில் நாங்கள் இருக்கும் போது,
      பக்கத்து வீட்டு நல்ல மனிதருக்கு

      புகையினால் தொண்டையில் பெயர் சொல்லாதது வந்து
      45 வயதில் இறைவனிடமும் சென்று விட்டார்.

      மனம் நிறை பாராட்டுகள் ஜீவி சார்.
      Strike the iron while it is hot''... தான் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    4. @ துரை செல்வராஜூ

      ஆமாம், புகை தான் கதை.. வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாக புகை கக்குபவர்களைப் பார்த்திருப்பீர்கள்.. அந்த மாதிரி சுழல் சுழலாக புகை,
      புகை வண்டியென பயணிக்கும் கதை..

      நீக்கு
    5. @ வல்லிசிம்ஹன்

      //புதுமண மோகத்தில் விட்டுக் கொடுக்காமல்
      மனைவி போராட,
      கணவனும் தணிந்து போகிறானே.//

      யாரோ அப்பாவி வேறே இந்த மோகத்திற்கு முப்பது நாள் தான் என்றூ கெடு வேறே வைத்திருக்கிறான்! அந்த முப்பது நாட்களுக்குள் சடசட என்று வேண்டியதை முடித்துக் கொள்ள வேண்டுமே என்ற அவசரம் வேறு துரத்தித்தா?..

      கரும்புக் கணைபின் சக்தியே சக்தி! தணிந்து போவதைத் தவிர வேறே வழி?..

      //நிறைய கணவர்களுக்கு..... மாறி இருக்கிறது போலும். //

      எந்தக் காலத்தும் மாற்றமிலா விதி இது.. அதனால் தான் அந்த ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆயிற்று.

      நீக்கு
    6. //Strike the iron while it is hot''... //

      Yes. Yes. That is why that treatment was given.

      நீக்கு
  4. புகை... பூமிக்குப் பகை...

    இங்கே எந்நேரமும் புகைத்துக் கொண்டிருக்கும் அரபிகள், எகிப்தியர்கள், பங்களாதேஷிகள் -
    என பலதரப்பட்ட பன்னாடைகளைக் கண்டிருக்கிறேன்...

    அரபு நாட்டில் நோன்பு மாதமாகிய ரமழான் மாதத்தில் மட்டும் தான் விடியற்காலையில் இருந்து மாலைப் பொழுது வரை பொது இடங்கள் புகை இல்லாமல் இருக்கும்...

    இதற்கும் மேலாக குளிர் காலத்தில் மேல் சட்டையெல்லாம் நாற்றம் அடிக்கும் அளவுக்கு புகைத்து - திரிவர்...

    நீருக்குள் புகையை உறிஞ்சி இழுக்கும் ஷீஷா என்னும் பழக்கமும் உண்டு...

    மாலையிலிருந்து நள்ளிரவைக் கடந்தும் இதற்கான கடைகள் திறந்திருக்கும்...

    ஒவ்வொரு மூன்று பேருக்குப் பின்னும் அந்த ஷீஷா பாட்டிலின் தண்ணீரை மாற்றுவர்...

    அந்தத் தண்ணீர் கடுமையான நாற்றம் அடிக்கும்... பொது புகைக் குழாய்... ஒவ்வொருவரும் வாயை வைத்து உறிஞ்சிக் கொள்வர்...

    கொரானா புண்ணியத்தில் ஐந்து மாதங்களாக இந்த பொது புகைக் கடைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன...

    புகைப் பழக்கம் கடுகி ஒழிக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஷீஷா' வர்ணிப்பு பிரமாதம். அந்நாளைய சில சினிமாக்களில் தான் பார்த்தது.

      சிகரெட்டைக் கூட ஆளாளாக்கு ஒரு இழுப்பு என்று மாற்றிக் கொள்கிறார்கள்.

      தனிமனித ஆரோக்கியத்திற்கான ஆபத்துக்கள் போர்க்கால மேகம் போலச் சூழ்ந்திருக்கும் காலம் இது. எதைத் தான் எதிர்த்துப் போராடுவது என்று திகைப்பு மிஞ்சி இருக்கும் காலமும் இது தான்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சென்னையில் கணிசமான அளவுக்குக் குறைந்திருப்பதாகச் சொல்கின்றனர். அதே சமயம் தென் மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. விரைவில் நோயின் பிடியிலிருந்து அனைவரும் விடுபடப் பிரார்த்திப்போம். இடைவிடாமல் பிரார்த்தனைகள் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  6. அன்புத்தம்பி துரைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இனி வரும் காலங்களில் மன மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கவும் பிரார்த்தனைகள்.

    நேற்றே எபி குழும வாட்சப் பேச்சு வார்த்தையில் இன்று ஜீவி சார் கதையோ எனத் தோன்றியது. இங்கே வந்தால் உண்மை ஆகிவிட்டது. கதையை இன்னும் படிக்கலை. படித்துவிட்டுக் கருத்துச் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எபியில் செவ்வாய்க்கிழமை முக்கியமான நாளாகியிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. இந்த பளபளப்பின் வீச்சு பத்திரிகை அம்சம் மாதிரி மின்நிலாவில்
      பிரதிபலிப்பையும் பார்க்கலாம். அதனால் தான் வாட்ஸாப்பில் ஏதாவது ஒரு வழியில் திங்கட்கிழமையே செவ்வாய்க் கிழமையை நினைவுறுத்துகிற மாதிரி....

      அந்நாட்களில் 'இந்த வார ஆனந்த விகடன் வாசித்தீர்களா?' என்று ரயில் நிலைய பிளாட்ட்பாரங்களில் நீலநிற பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் தகரப் பலகைகள் தொங்கிக் கொண்டிருப்பது உங்கள் நினைவுக்கு வருகிறதா?

      அந்த மாதிரி 'நாளை செவ்வாய்க் கிழமை! நினைவிருக்கிறதா?' என்று எபி வாட்ஸாப் பகுதியில் எபி தளகர்த்தர்கள் ஏதாவது செய்தால் கூட தேவலை என்று தோன்றுகிறது.

      எபியின் செவ்வாய்கிறமை சிறுகதைப் பகுதி, வாரப் பத்திரிகை பிரசுரங்களை விஞ்சி இருக்கப் போகும் ஒளிமயமான எதிர்காலமும் கண்ணுக்குத் தெரிகிறது!

      நீக்கு
  7. நல்ல அதிர்ச்சி வைத்தியம். என்றாலும் அவனுக்கும் சிகரெட்டை விட வேண்டும் என்று தோன்றியதே! ஏட்டிக்குப் போட்டியா இல்லாமல்! சில இடங்களில் ஓரிரண்டு எழுத்துப் பிழைகள். அதே போல் சில இடங்களில் ஃபான்ட் மாறி எழுத்துக்களும் ரொம்பவே சின்னதாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல அதிர்ச்சி வைத்தியம். என்றாலும் அவனுக்கும் சிகரெட்டை விட வேண்டும் என்று தோன்றியதே! ஏட்டிக்குப் போட்டியா இல்லாமல்...//

      இரண்டில் எதற்கு முக்கியம் என்பதின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆணின் தேர்வைப் பொறுத்தது இது. அந்த சமயத்தில் ஏட்டிக்குப் போட்டி என்றாகாது.
      ஆனால் பிற்காலத்தில் தன் மனைவிக்குத் தெரியாதவாறாவது மாறலாம். வாழ்க்கை பூராவுக்குமான முடிவு என்று எதுவுமே இல்லையாதலால் இந்த சமயத்தில் இது என்ற அளவில் கொள்ள வேண்டும். கதைகளின் பங்கும் அவ்வளவு தான். சம்பந்தப்பட்டவர்களின் அறிவுபூர்வமான முடிகளே இந்த
      விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

      நீக்கு
    2. எல்லா ஆண்களும் மனைவி சொன்னவுடனே மாற மாட்டார்கள் ஜீவி ஐயா! மனைவிக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுமானால் நினைப்பார்கள். அதனால் தான் அவனுக்கும் தோன்றியதே என ஓர் "உம்"சேர்த்துச் சொன்னேன். உடனே விடவும் கூடாது, விடவும் முடியாது. படிப்படியாகவே குறைக்க வேண்டும்.

      நீக்கு
    3. வித்யாவை அவ்வளவு சாதாரணமாக நினைக்காதீர்கள். இந்த கல்யாண புதுக்கருக்கு நேரம் தான் சரியான நேரம் என்று அவளுக்குத் தெரியும். கொஞ்சமே அசிரத்தையாக இருந்து ஏமாந்தாலும் விழலுக்கு இறைத்த நீராகி விடும் என்று அவளுக்குத் தெரியும்.

      அடுத்த நாள் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வருகிற அவன் இந்த நாற்றத்தோடு வந்தானானால் என்ன நடக்கும் என்பதை அவன் அறிவான். படுக்கையைத் தூக்கிக் கொண்டு வாசல் திண்ணைக்குப் போக வேண்டியது தான்.

      எல்லாம் தெரியாத்தனம் தான். இளவயசு ஆட்டம். கண்டித்துச் சொல்ல ஆள் இல்லா அவலம். அன்புக் கணவனும் இன்னொரு குழந்தை தான், ஆசை மனைவிமார்களுக்கு. அந்த நேசத்தையும் பாசத்தையும் வித்யா வர்ஷிக்கும் பொழுது சுரேஷ் புது மனிதனாவான்.

      புரிந்து கொண்டவர்களுக்கு வாழ்க்கை ரொம்பவும் சோபிதமானது. அந்த சோபிதம் தான் சந்தோஷ வாழ்க்கைக்கான ஆதாரப் புள்ளி.

      ஒரே மாத காலம் தான். அவன் முகத்தை கண்ணாடியில் பார்க்க அவனுக்கே ஆச்சரியமாக இருக்கும். சோர்ந்து போன கண்கள் சோபை பெரும். நல்ல வேளை, காப்பாற்றினாளே என்று அன்பு பெருகும்.

      கொஞ்ச நாட்களில் அவனே இந்த பழக்கம் உள்ள நண்பர்களுக்கு உபதேசம் பண்ண ஆரம்பித்து விடுவான், பாருங்களேன்.

      நீக்கு
  8. பெண்களும் வெளிப்படையாகப் புகை பிடிக்க ஆரம்பித்துவிட்ட இந்தக் காலத்திற்குத் தேவையான கதை இது. புகையிலையின் பிடியிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா... நான் குவைத்துக்கு கணிணி வேலையாகப் போயிருந்தபோது அந்த டிவிஷன் மேனேஜர் (ஃப்ரான்ஸ்), நான் கணிணியில் வேலை பார்க்கும்போது ஊதிக்கொண்டே இருந்தாள். ப்ளீஸ்... இந்த வாசனைல நான் வேலை பார்க்க முடியாது என்று சொல்லவேண்டியதாகப் போயிற்று (இவன் என்ன வில்லேஜர் என்று அவள் நினைத்திருக்கலாம்)

      நீக்கு
    2. புகையிலையை வாயில் அதக்கிக் கொள்ளும் பெண்களையும் ஆண்களையும் நமக்குத் தெரியும். ஏனோ அது தொன்று தொட்டு வரும் நம் நாட்டுக்குச் சொந்தமான பழக்கம் மாதிரியும் இது மட்டும் ஏனோ அந்நிய இறக்குமதி மாதிரியும் நமக்குத் தோற்றம் கொடுக்கிறது. அவ்வளவு தான். வெற்றிலை--பாக்கு கூட நெருங்காத ஆண்கள் இருக்கிறார்கள். எது ஒன்றும் பழக்கத்தின் அடிப்படையில் ஏற்படும் பிடிப்பு சம்பந்தப்பட்டு இருக்கிறது. அந்த பிடிப்பிலிருந்து ஒருவர் மனப்பூர்வமாக விலகும் கமிட்மெண்ட் பொறுத்து இருக்கிறது. கதைகள் எல்லாம் வெற்று அறிவுரைகள் போன்றது தான். தனி மனிதரின் உணர்தல் தான் முக்கியமாகிப் போகிறது.

      சிகரெட்டைப் பொறுத்த மட்டில் வெளிநாட்டு தடப வெட்ப நிலைமைகளை சமாளிப்பதற்கு உதவும் பொருளாக அது உருவாகியிருக்கிறது. நமக்கு காபி மாதிரி அது அவர்களுக்கு. இன்னொருவருக்கு அதனால் பாதிப்பு என்ற கோணத்தில் பொதுவில் அதை உபயோகாத்தீர்கள் என்ற அளவில் தான் நெல்லை சொல்வதை எடுத்துக் கொள்ள வேண்டும். என் பார்த்த ஒரே வெளிநாடு அமெரிக்கா தான். அங்கு சர்வ சாதாரணமாக பொது இடங்களில் சிகரெட் ஊதுபவர்களை அவ்வளவாக பார்த்ததே இல்லை. ரெஸ்ட் பிளேசில் கூட ஒதுங்கிப் போய் சிலர் உபயோகிக்கிறார்கள். நம்மை மாதிரி சிகரெட் பற்ற வைத்த நிலையில் வாயில் தொங்கிய நிலையில் உதட்டசைவுக்கு ஏற்ப அது நர்த்தனமிடும் அவலங்களைப் பார்த்ததே இல்லை. இதெல்லாம் சினிமா காட்சிகள் என்றே ஆகிவிட்டது. மது விற்பனையில் அவர்கள் கொண்டுள்ள கட்டுப்பாடுகள், ரெஸ்ட்ரிக்ஷன் எல்லாம் நமக்கு பாடமாகக் கூடியவை.

      நீக்கு
  9. பதில்கள்
    1. ஆமாம் அதிரடி வைத்தியம் தான்! அந்தப் பெண் வித்யா உபயோகிக்கும் வார்த்தைகளை அதற்காகத் தான் கடுமையாக்கினேன். எந்த ஆணும் இன்னொருவர் மத்தியில் கூனி குறுகிப் போகும் நிலை அவர் மனசில் வடுவாகப் போனால் அது நல்லதுக்காக என்றானால் அதனால் விளையும் பலன்கள் அதிகம்.

      நீக்கு
  10. அன்பின் துரைக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். உடல் நலமும் மன அமைதியும் பெருக ஆசிகள். நன்றி கீதாமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  11. புகை உடலுக்குப் பகு என்ற தீமில் கதையை ஊதித் தள்ளிவிட்டார் ஜீவி சார். பாராட்டுகள்.

    ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டைக் கொண்டு வரவில்லைனா பிற்காலத்தில் அதனைக் கட்டுப்படுத்தவே முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊதித்தள்ளி விட்டார்! :)) ஹாஹாஹா.

      இரண்டாவது சொல்லியிருக்கிறீர்களே, அது கரெக்ட்! கட்டுப்பாடுகள் என்பதே மாயை. தனிமனிதர் சுதந்திரத்தில் தலையிட்டு கட்டுப்படுத்தும் அத்துமீறல்கள் அல்ல இவை. சம்பந்தப்பட்டவரின் உடல் உள்ள நலன்களுக்கான பரிந்துரைகள். சொந்த வம்சாவளிகளைக் கூட பாதிப்பவை. அந்த கோணத்தில் ஒரு புரிதல் ஏற்பட்டு விட்டால், புகையிலை, மது போனற அனாவசிய உபயோகங்கள் பெருமளவில் உபயோகமற்றுப் போகும்.

      சிவசங்கரி அவர்களின் 'ஒரு மனிதனின் கதை' வாசித்திருக்கிறீர்களா?.. தியாகு -- நாயகன் பெயர் கூட மறக்கவில்லை.

      நீக்கு
  12. என் கசின், சிறிய வயதில் புகைக்கக் கற்றுக்கொண்டான். தில்லியைச் சேர்ந்தவர்கள். அவன் அம்மா, இது வெளியில் தெரிந்துவிடக்கூடாதே என்று மறைக்க முயன்றார்களே தவிர (இரவு சாப்பிட்டாச்சுனா அவனுக்கு காலார நடந்துட்டு வரணும்) அந்தப் பழக்கத்தைப் போக்கடிக்கணும் என பாடுபடவில்லை.

    எனக்கு எப்போதுமே சிகரெட் வாசனையே பிடிக்காது. பிடிக்கும் நண்பர்களுடனும் நடந்து வரமாட்டேன், என் பேர் கெட்டுப்போய்விடும் என்ற நினைப்பில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என் பேர் கெட்டுப்போய்விடும் என்ற நினைப்பில்.. //

      எஸ். இது தான் தனிமனிதரின் உணர்தல். அந்நாட்களின் சமூக உணர்தல்களை எப்படியெல்லாம் அமுல் படுத்தியிருக்கிறார்கள் என்று கொஞ்சமே யோசித்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. ரொம்ப சர்வ சாதாரணமாக 'இதெல்லாம் தீங்கான செயல்கள்' என்ற உணர்வுகளை மக்கள் மனசில் விதைத்திருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.




      நீக்கு
  13. பதில்கள்
    1. வாங்க, டிடி. ரத்ன சுருக்கமாக சொல்லி விட்டீர்கள்.
      அளவான டோஸ் தான் என்றும் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. //பீடி இல்லே, சிகரெட்" என்று உறுமினான் சுரேஷ்.//

    ஹா.. ஹா.. இப்படியொரு பெருமையா ?

    நல்ல யோசனைதான் ஆனாலும் சிலருக்கு ஸ்ரீகாந்த் மீது வேறு மாதிரியான சந்தேகம் வந்து சுரேஸுக்கு வராதவரை நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ரொம்பத் தான் ரசித்திருக்கிறீர்கள்.

      ஸ்ரீகாந்தின் மீது சந்தேகம் என்பது தன் மனைவி மீதான சந்தேகம் தானே அது?..
      நீங்கள் சொல்வது நியாயம் தான். போதை சமாச்சாரங்களின் உபயோகிப்பு மனிதனை எந்த கீழான நிலைக்கும் தள்ளூம் தான்.

      அப்படிப்பட்ட சந்தேகம் சுரேஷுக்கு வந்தாலும் அவன் தான் நொந்து நூலாவான்.
      ஒரு சிறுகதையே ஆயினும் இந்தக் கதையின் நாயகியின் முன் கூட்டிய யோசனைகளை (Advance thinking) சாதுர்யமாக காய் நகர்த்துவதை அவளது
      வார்த்தையாடல்களிலிருந்து எப்படிப்பட்ட தீர்மானமான பெண் அவள் என்பது தெரிந்திருக்கும்.

      எது வந்தாலும் அவள் பார்த்துக் கொள்வாள். அந்த உறுதி இருக்கும் பெண்கள் தான் இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசவும் சின்ன வயதிலிருந்தே பழக்கப்பட்டிருப்பார்கள். ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட நலன் சார்ந்த நியாயம் அவள் நடவடிக்கைகளில் இருப்பதால் இயல்பான வெற்றியும் அதற்கு உண்டு. It itself got natural developments. அதில் சந்தேகமே வேண்டாம்.

      நீக்கு
  16. கதை நல்ல விஷயத்தை சொல்கிறது.

    புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளில் உடல் நலமும், குடும்ப நலமும் கெட்டுப் போகும் என்பதை அழகாய் கதையில் சொல்லி இருக்கிறார் ஜீவி சார்.

    புகைபிடிப்பவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தீமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலத்தில் சம்பந்தப்பட்டவருக்குத் தானே கெடுதல்கள் என்று நினைத்திருந்தோம். காலத்தின் வளர்ச்சி இன்னும் கூடுதல் பாதுகாப்புகளைக் கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்கு எடுத்துரைத்திருக்கிறது. நீங்கள் சொல்வது சரி தான். நல்ல செயல்கள் இயற்கையாகவே நல்ல பலன்களை தன்னுள் கொண்டிருக்கும் என்று நம்புவோம். நன்றி, கோமதிம்மா.

      நீக்கு
  17. அருமையான நீதிக்கதை போல உள்ளது. இவ்வாறாக மாற வாய்ப்புள்ளது. பலர் இவ்வாறாக மாறித் திருந்தலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேர்மறை சிந்தனையில் கதையைப் பார்த்திருக்கிறீர்கள். நன்றி, ஐயா.

      நீக்கு
  18. அனைவருக்கும் காலை வணக்கம். நேற்று என்னுடைய லச்சா பரோட்டாவை ரசித்தவர்களுக்கு நன்றி. தாமதமான நன்றிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா.வெ! பாதை மாறி வந்து விட்டீர்களே! இந்தப் பாதை 'லச்சா' ஊருக்குப் போகாதே!

      நீக்கு
  19. அது லாச்சா பரோட்டா இல்லை லச்சா பரோட்டா என்று திருத்திய ஏகாந்தன் சாருக்கு நன்றி.
    நெல்லையாக இருந்திருந்தால் லாச்சாவோ,லச்சாவோ அச்சாவாக,இருந்தால் சரி என்று கூறியிருப்பார். ஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையை வேறு உசுப்பி விட்டு விட்டார்களே! இறைவா! அவர் வேறு இங்கு வந்து இதற்கு பதில் சொல்லாமல் இருக்க வேண்டுமே!

      நீக்கு
    2. நேற்று என் பெண், ஆலு பராத்தா செய்தாள். எனக்கு வயிற்றில் இடமே இல்லை என்றே சொல்லியிருந்தேன். பிறகு 1 பராத்தா மட்டும் சாப்பிட்டேன், ஆவக்காய் ஊறுகாய் சாற்றோடு. ரொம்பவே நல்லா இருந்தது.

      ஆனாலும் நம்ம ஊர் உணவு போல வராது என்பது என் எண்ணம் (அரிசி உப்புமா, தோசை, பூரி மசால்.....)

      நீக்கு
    3. எபியில் பதிவுகளின் பின்னூட்டங்கள் மூன்று நாட்கள் வரை கூட நீண்டு கொண்டிருக்கின்றன. அந்த செளகரியத்தை பா.வெ.வும், நெல்லையும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாமே!

      நீக்கு
  20. இன்றைய கதைக்கு வருகிறேன். நல்ல தீம். உண்மையில் சிகரெட் புகை, புகைப்பவர்களை விட அருகில் இருக்கும் passive smokersகளைத்தான் அதிகம் பாதிக்கும் என்பார்கள். வித்யா எடுத்த அதிரடி நடவடிக்கை சுரேஷை மாற்றி விட்டது. என்ன செய்தாலும் திருந்தாத சுரேஷ்கள் உண்டு. இப்போது பெண்களும் புகைக்க ஆரம்பித்து விட்டார்களே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன செய்தாலும் திருந்தாத சுரேஷ்கள் உண்டு. இப்போது பெண்களும் புகைக்க ஆரம்பித்து விட்டார்களே!!//

      திருந்துவதற்குத் தானே அந்தத் திற்ந்தாதவைகள் ஒருவரில் படிகின்றன, பா.வெ?
      ஒருவருக்கு எது தேவையோ அந்தத் தேவையை நோக்கித் தானே அவர் செயல்பாடுகள் அமையும்?..

      பணத்தட்டுப்பாடு இருந்தால் தானே ஒருவர் பண சேகரிப்பில் இறங்குவார்?
      அந்த மாதிரி விஷயம் இது.

      பெண்களும் என்று ஒரு 'உம்மை' போட்டு பெண்ணினத்திற்கு மனசில் பெருமை சேர்த்திருந்த எண்ணங்கள் நொறுங்கிப் போகின்றன போலும். கவலை கொள்ள வேண்டாம். இந்தக் கதையின் நாயகி மாதிரி புதுமைப் பெண்கள் ஒருபக்கம்
      உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்!

      ஏதாவது விடிவு பிறந்தால் பெண்களால் தான் அது முடியும்; அவர்களால் தான் அதை நிகழ்த்தி வைக்க முடியும் என்ற அசையாத நம்பிக்கை நிறைய பேருக்கு உண்டு. அதை வாழ்த்தி வரவேற்போம்.

      நீக்கு
  21. புகை நமக்குப் பகை. நல்லதொரு கதை.

    துரை செல்வராஜூ ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ....
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. புகை நமக்குப் பகை.. இந்த வார்த்தைத் தொடர் நன்றாக இருக்கிறதே?

      பகையே, சுற்றி நில்லாதே போ! என்று பாரதி மாதிரி சூளுரைப்போம்!..

      நீக்கு
  22. துரை செல்வராஜு சாருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நோயற்ற நீண்ட ஆயுளை அவருக்கு அருள அம்பிகையை,வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. சகோ துரை செல்வராஜூ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே எங்கும் நிறைக..

      தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. அன்பின் குவைத் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி....
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. பெரும்பாலான பெண்களுக்கு சிகரெட் வாசம்பிடிப்பதில்லை ஆண் குனிந்து சென்று விடுகி றான் பெண்ணிடம்கொண்ட மையல் காரணமாயிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  26. துரை செல்வராஜுவுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துகள் நீடூழி வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. @ ஜிஎம்பீ

      பெண்ணிடம் கொள்ளும் மையல் எவ்வளவு தீவிரம் கொண்டது என்று தெரியாதா, ஐயா?

      நல்ல காரியங்களுக்கு அதுவே நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படும் நேரங்களும் இருக்கத் தான் செய்கின்றன. சொல்லப் போனால் வாழ்க்கையே அந்த மையலை நடுநாயகமாகக் கொண்டு தானே இருக்கிறது?

      நீக்கு
  27. திரு துரை செல்வராஜூஅவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். புகைப் பழக்கம் தீது என்று தெரிந்தும் வருடா வருடம் புதிதாய்ப் புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பவர்களும் இருக்கின்றனரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ அபயாஅருணா..
      தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
    2. எத்தனை புதியாய் வந்தாலும் அதற்கென்று தனியே போக்கிடம் இல்லை தானே?
      பழையதில் தானே இதுவும் ஒன்றாய் சேரும்?.. சேர்க்கை சரியில்லாதவைகள் தாமே அதற்கான பலன்களைக் கொள்ளும் என்பது தான் இயற்கை விதி.

      அந்த கோட்பாட்டில் நம்பிக்கை கொள்வோம், அபயா அருணா!

      நீக்கு
  28. இந்த அதிர்ச்சி வைத்தியம் நிஜத்தில் வேலைக்கு ஆகாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேலைக்கு ஆவதைப் பற்றிய கதையிது இல்லை, எல்.கே.

      ஒரு புதுமைப்பெண்ணின் சாதுர்யத்தைச் சொல்ல வந்த கதை இது.

      வேலைக்கு ஆகாதவைகளை வேலைக்கு ஆக்குவதே அவள் மேற்கொண்ட பணி.

      இந்தக் காரியங்களுக்காகவே பெண்ணினத்தில் பலர் அவதரிக்கிறார்கள். தங்கள் பணியில் வெற்றியும் கொள்கிறார்கள்.. அவர்களைப் பற்றிய அரிய சரிதங்கள் பல நம்மில் உண்டு.

      அவர்கள் பல்வேறு பெயர்களில் வாழ்கிறார்கள். இந்தக் கதையில் அவளுக்குப் பேர் வித்யா.

      என்ன புதுசாகவா சொல்கிறேன்?.. பாரதநாட்டின் சரிதமே இது தான்!..

      நீக்கு
    2. அது சரி. உங்களுக்கு ஒரு விஷயம் . இன்றைய இளம் பெண்களில் பாதி பேர் இந்த புகை / குடியை கண்டுக்கறது இல்லை .

      நீக்கு
    3. தனி நபர்களைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் குடும்ப அமைப்புகளில் கூட அப்படியாகத் தான் இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்?..

      நீக்கு
    4. அந்த இளம்பெண்களும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள் தானே! இன்னும் சொல்லப் போனால் புதுமைப் பெண்ணுக்கு இதுதான் பொருள் என்றும் நினைப்பவர்கள். பெண்ணியம் பேசுபவர்கள், பெண் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள்.

      நீக்கு
    5. எவனுடன் வேண்டுமானாலும் உரிமை எடுத்துப் பேச இது ஒன்றும் பொதுச்சேவை அல்ல. தன் கணவன், தன் குடும்பம், அதன் எதிர்கால நலன் என்று வித்யாவுக்கு பந்தம் ஏற்பட்டதால் தான் அவளால் இந்த அளவுக்குப் பேச முடிகிறது. மனைவி என்ற உரிமை தான் அவளுக்கு பிரயோகிக்கக் கிடைத்த
      ஆயுதம்.

      அதற்காகவே கணவன்--மனைவி உறவுடனான உரையாடலாக கதை எழுதப் பட்டிருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள்.

      கணவனாச்சே என்று கண்டதை சகித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இப்படியாக சாதிக்கும் பெண்கள் புதுமைப்பெண்களே.

      நீக்கு
    6. :)))))) அவர்களுக்கும் குடும்பம் என்பது உண்டெனில் அதில் கணவனும் அடக்கமே! மனைவியையும் குடிக்குப் பழக்கப்படுத்திவிடும் ஆண்களும் உண்டு! அதையே தனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமாக நினைக்கும் பெண்களும் உண்டு. இங்கே அந்த சுரேஷ் அடிப்படையில் நல்லவன். ஏதோ கெட்ட சகவாசத்தில் ஏற்பட்ட புகைப்பழக்கம். அவனுக்கே உறுத்தலாக இருந்திருக்கலாம். அதை விடலாமா வேண்டாமானு நினைக்கையில் மனைவியின் அதிர்ச்சி வைத்தியம் அதைச் செய்து விடுகிறது. அவனும் விரும்பிப் புகைப்பழக்கத்தை விடவேண்டும் என நினைக்காமல் எதுவும் நடக்காது.

      நீக்கு
    7. முதல் விஷயம் இந்தக் கதைக்கு சம்பந்தமில்லாதது. ஆகையால் இந்தக் கதை பற்றிய விவரங்களுக்கு வருவோம்.

      எப்படியோ சுரேஷின் மேல் உங்களுக்கு ஒருவகை அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது.
      அதற்கு வித்யாவின் அதீத சாடல் காரணமாக இருக்கலாம். ஒரு ஆம்பளையை --அதுவும் புருஷனை -- அவமானப்படுத்துகிற மாதிரி இப்படித் திட்டலாமா என்பதின் எதிர்வினையாக சுரேஷின் மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. அதற்காக ஒரு காரணம் கற்பித்திருக்கிறீர்கள். அவ்வளவு தான்.

      வித்யாவிற்கு ஒரு நீண்ட கால நல்ல நோக்கம் உண்டு. ஆனால் சுரேஷூக்கு அந்த சமயத்தில் அவன் முக்கியமாக நினைக்கும் ஆசைக்கு எதன் பொருட்டும் பங்கம் நேரிட்டு விடக்கூடாது, அப்படி ஏற்பட்டால் அது அவனை பெரிதாக பாதிக்கும் என்று உணர்கிறான்.

      சுரேஷை தீர்க்கமாக ஆராய்ந்தால் இந்த சமயத்தில் வித்யா முக்கியமானது தான் இனிமேல் சிகரெட் பக்கம் போக வேண்டாம் என்ற எண்ணத்தை அவனில் ஏற்படுத்தியிருக்கிறது. வித்யாவிற்கு எதன் மேல் அதீத வெறுப்பு இருக்கிறதோ அதன் நாற்றத்துடன் அவளை நெருங்குவது முதலுக்கே மோசமாகி விடும் என்ற சுய அறிவு ஆழ்மனதில் பதிந்து விட்டதின் அடையாளமே 'இந்த சனியனை மறக்கத்தான்' என்று வார்த்தைகளாக வெளிப்பட்டிருக்கிறது.

      இந்த மாதிரியான சில பழக்கங்கள் வேறொரு கெட்ட பழக்கத்திற்கு 'ஷிப்ட்' ஆவது பெரும்பாலும் வாடிக்கையான விஷயம் தான். ஆனால் அப்படிப்பட்ட எந்தப் பழக்கமும் சுரேஷைப் பொறுத்த மட்டில் வெளிப்பட எந்த ரூபத்திலும் வித்யாவிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமாகிப் போகும்.

      இதெல்லாம் தொடர்ச்சியாக நாம் யோசிக்கறது தானே தவிர ஒரு சிறுகதை என்றால் பட்டென்று எந்த இடத்தில் முடிந்து விடுகிறதோ, அதையே அந்தக் கதையின் முடிவாகக் கொள்வது தான் வழக்கம்.

      வித்யா, சுரேஷ் -- இரண்டு பேருமே மனோதத்துவ ரீதியான உருவாக்கங்கள்.
      அதனால் தான் மனரீதியான சில செயல்பாடுகளின் வெளிப்பாடாக அவர்கள் உலா வருகிறார்கள்.

      வித்யா, சுரேஷ் -- இந்த இரண்டு பேருக்கும் இருக்கும் பொருத்தம் இரண்டு பேருமே காரியவாதிகள். அவர்கள் அந்த சமயத்தில் (நல்லதுக்காகவோ, கெட்டதற்காகவோ) நினைப்பது நடக்க வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்போக்கு கொண்டவர்கள்.
      இதனால் இரண்டு பேருமே அவரவர்களுக்கு அந்தந்த சமயத்தில் தேவையானவைக்கு விட்டுக் கொடுத்து மாற்றி மாற்றி சாதித்துக் கொள்வார்கள்.

      இது இரண்டு பேருக்குமான ஒரு நல்ல அம்சம். அதனால் எலியும் பூனையுமான நிலை இருக்கவே இருக்காது. தனக்காகத்தானே இன்னொருத்தர் விட்டுக் கொடுக்கிறார் என்ற பரிவே இரண்டு பேருக்கும் பிணைப்பாக மாறி நாட்பட நாட்பட இறுகி கெட்டி தட்டிப் போகும்.

      உங்களுக்கே உரிய ஈடுபாட்டோடு கதையை வாசித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கீதாம்மா.

      இந்த எல்.கே.-யைப் பாருங்கள்! 'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?' என்று ஆரம்பித்து விட்டு நெல்லிக்காய் துவையலுக்குப் போய் விட்டார், பாருங்கள்!

      நீக்கு
  29. இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
    துரை செல்வராஜு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்..
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    உங்களுக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் சிறப்பாக ஆரோக்கியமான உடல் நலத்துடன், மனகவலைகளற்ற இனிதான நாட்களாக இனிவரும் எல்லா நாட்களும் உங்களுக்கு அமைய வேண்டுமாய், இன்றைய நாளில் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இன்று இப்போதுதான் என்னால் வலை பக்கம் வர முடிந்தது. எனவே தாமதமாய் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். தவறாக எண்ண வேண்டாம் சகோதரரே. நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏன் தவறாக நினைக்கப் போகிறேன்...

      தங்கள் அன்பின் வருகையும் ஆறுதல் வார்த்தைகளும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    சகோதரர் ஜீவி அவர்களின் இன்றைய கதை நன்றாக உள்ளது. புகை பிடிப்பது என்பது ஆரோக்கியமான செயல் அல்ல.. இந்த மாதிரி மதியூக மனைவியின் செயலால், அது தவறென உணர்ந்து இளைஞர்கள் தன் தவறை உடனே திருத்திக் கொண்டால் அவர்கள் குடும்பமே வளமாக அமையும்.

    ஒரு குழந்தை பிறந்த பின் அந்த மனைவியால், இந்த மாதிரி தன் கணவனை அவன் தவறை சுட்டிக் காட்டி திருத்த இயலாது. ஏனெனில் புதிதாக வந்த பந்தத்தில் அவளுக்கும் பொறுப்புகள் கூடி விடும். அந்த பொறுப்பின் சுமையில் தவறுகளை தளர்த்திக் கொள்ள, மனமும் விதியின் செயல் என அடி பணிந்து விடும். இந்த கதையில், அப்படியாகிய விதியின் வசம் தவறுதலாக இருவரும் மாட்டாவிடினும், இந்த இடத்திலும் அவர்களின் விதி உடன் நின்று நல்லபடியாக உதவியுள்ளது. அது அவளின் அதிர்ஷ்டமும் கூட...! இதுதான் எந்த ஒரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பெண்ணின் (மனைவியின்) ஆவலான வேண்டுதலும், எதிர்பார்ப்பும் கூட...! அருமையான கருத்துள்ள கதையை தந்த சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    இன்று மிகவும் தாமதமாக வந்து கதை படித்து கருத்திடுகிறேன். மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. தங்கள் அன்பான கருத்துரைக்கும் வாசிப்பு அனுபவத்திற்கும் மிக்க நன்றி, கமலா சகோ.

    பின்னூட்டங்களுக்கு பதிலாக என்னில் வெளிப்பட்ட கருத்துக்களை வெகு சுருக்கமாக
    லாவகமாகச் சொல்லி விட்டீர்கள்.

    எங்கே உங்களைக் காணோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். கண்டது கண்டு மகிழ்ச்சி.

    மனம் நெகிழ்ந்த நன்றி, சகோதரி!

    பதிலளிநீக்கு
  33. திரு துரைராஜ் அவர்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
    இநத மாதிரி விடமுடியாத பழக்கங்கள் விட்டு ஒழிக்க வித்யாவின் வழிதான் சரி.
    ஆனால் இது ஒருநாளில் மறந்துவிடக்கூடாது கூடிய சமாச்சாரம் இல்லை. வித்யா தொடர்ந்து கணவனை கண்காணிக்க வேண்டும்.
    நல்ல கதை ஜீவி வார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  34. விட முடியாத பழக்கம் என்பது எதுவே பிரமை தான். அது இன்னொரு பழக்கத்திற்கு மாறி முந்தையை பழக்கத்தை ஓவர் டேக் பண்ணும்.
    சரேஷ் போன்றவர்களுக்கு வித்யா தான் சரி. அவர்கள் எந்த விதத்தில் ஒன்று படுகிறார்கள் என்பதை கீதாம்மாவுக்கான பின்னூட்டத்தில் ஓரளவு கணிக்க முடிந்திருக்கிறது.
    தங்கள் பார்வையில் பட்டு வாசித்துப் பார்த்ததிற்கு சந்தோஷம். கருத்தும் சொன்னதில் வெகுவான திருப்தி. நன்றி, சகோதரி!

    பதிலளிநீக்கு
  35. சிகரெட்டை வைத்து ஒரு அருமையான கதை நகர்த்தல்... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  36. சிகரெட் பழக்கத்தை கைவிடுவது பற்றி. நன்றி, பரிவை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!