வியாழன், 17 செப்டம்பர், 2020

துண்டு பீடி துலுக்காணம்

அரசுப்பணியில் இனைந்து சில வருடங்கள் ஆகி இருந்தன. 

ஆரம்ப பயங்களும், தயக்கங்களும் மறைந்து கொண்டு வந்த நேரம்.

ஆரம்ப காலங்களில் யார் என்ன பதவி, அந்தப் பதவியின் வீர்யம் என்ன என்றே தெரியாத நேரங்கள்.  அப்போது யாரை எப்படி அழைப்பது என்கிற பிரச்னைகளும் இருந்தன. 

முதலில் எல்லாம் அடிப்படை நிலை ஊழியர்களுக்கும் நானாகவே முகமன் கூறிவிடுவேன்.  அல்லது கையாட்டி பேசிவிடுவேன்.  இது கெட்டபழக்கம் இல்லை என்பதால் இன்று வரை தொடர்கிறேன்!  அவர்களை மரியாதைக்குறைவாக அழைப்பதும் இல்லை.  அவர்களால் முடியாத வேலைகளை சொல்வதும் இல்லை!  சொந்த வேலைகளுக்கு ஏவுவதும் இல்லை.

மெல்ல மெல்ல சீனியர்களைப் பார்த்து, பழக ஆரம்பித்து, பின்னர் சொந்த அபிப்ராயங்களுடன் பணிபுரியத் தொடங்கினேன்.

சொந்த அபிப்ராயம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், என் சீனியர் உயர் அதிகாரிகளிடம் ஒரு அடிமை போல பேசுவார்.  ஆனால் வேலை அப்படி ஒன்றும் கிடையாது.  தான் மிகவும் கீழினும் கீழோன் என்பது போல அவர் பேசும் பாணியை நான் ஆரம்பத்திலேயே தவிர்த்து விட்டேன்!

உயர் அதிகாரி வந்ததும் உடனே அவர் அறைக்குச் சென்று வணக்கம் வைத்து வரும் வழக்கம் ஒன்று இருந்தது.   அப்படி ஒன்றும் தப்பான பழக்கம் இல்லைதான்.   ஆனால் அப்படி நாம் சொல்லும் சமயங்களில் அவர் நிமிர்ந்தே பார்க்க மாட்டார்.  சமயங்களில் நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌனமாக மறுபடியும் தலையைக் குனிந்து கொள்வார்.  சமயங்களில் நேரடியாக வந்திருப்பவரின் பெயரைக் குறிப்பிட்டு "அந்த ஃபைல் என்ன ஆச்சு?...  என்ன ஆக்க்ஷன் எடுத்துருக்கீங்க இதுவரை? அதைக் கொண்டாங்க.." என்பார்.  பதிலுக்கு முகமன் கூறுவது அவர்களுக்கு அந்தஸ்துக் குறைவாகத் தோன்றி இருக்கும் போல!

ஒரு அதிகாரி மாறி, அடுத்த அதிகாரி வந்ததும் நான் அவர் அறைக்கு வலியச் சென்று விஷ் செய்யும் வழக்கத்தை நிறுத்தி விட்டேன்.  அந்த அறைக்கு எப்போது செல்ல நேரம் வருகிறதோ, அப்போது செல்லும்போது விஷ் செய்யத் தொடங்கினேன்.  பெரிய கண்டனம் எல்லாம் எதுவும் இல்லை.  ஆனால் அதிலும் வேறொரு அதிகாரியால் பின்னர் பிரச்னையைச் சந்தித்தாலும், அவர்தான் பின்னாட்களில் எனக்கு மிக நெருங்கிய அதிகாரியும் ஆனார்!  என்னைப்பார்த்து வேறு சிலரும் என் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர்.

அதே போல என் சீனியர் பேசும்போது உயர் அதிகாரிகளிடம் "ஆமாங்க மேடம்...  ஆமாங்க ஸார்... " என்று வார்த்தைக்கு வார்த்தை மரியாதை விகுதி சேர்த்துப் பேசுவார்.  இரண்டு வார்த்தைகளுக்கு ஒருமுறை "நீங்களெல்லாம் ஆபீஸர்ஸ்...  நாங்களெல்லாம் சபார்டினேட்ஸ்..." என்று அடிக்கடி சொல்லி பணிவை பயங்கரமாகக் காட்டுவார்.

பணிவுடையன் இன்சொலன்தான்.  ஆனால் எனக்கு அளவுக்கு மீறிய பவ்யம், பணிவு போலியாகத் தெரிந்தது.    எனவே நான் அவர்களிடம் பேசும்போது தேவையில்லாத இடங்களில் வரும் 'ங்க' வை கட் செய்துவிட்டு பேசத் தலைப்பட்டேன்.  அதாவது அவர்களிடம் பேசும்போது அப்படி வார்த்தைக்கு வார்த்தை 'ங்க' சேர்க்க இயல்பாகவே எனக்கு வரவில்லை!  

அதிகாரிகள் ஒன்றும் சொல்லவில்லை.  என் ஸீனியர்தான்!  எனக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வார்!  அவர்களிடம் நான் இல்லாதபோது "இளங்கன்னு...   பயமறியாது..."  என்பார்.  ஆனாலும், நல்லவேளை அதனால் எனக்கு அதிகாரிகளிடமிருந்து பெரிய தொல்லை எதுவும் வரவில்லை.  

மாற்றாக அவர்கள் என்னிடம் சகஜமாக உரையாடத் தொடங்கினார்கள்.  சமயங்களில் வெளியில் நின்று பொது விஷயங்கள் எல்லாம் பேசுவார்கள்.  ஸீனியரிடம் அப்படி அவர்கள் பேசியதில்லை என்பதால் அவர் கொஞ்சம் 'காண்டா'வார்!  ஆனாலும் எனக்கும் சீனியருக்கும் இடையில் ஒரு அன்பும், நட்பும் புரிதலும் இருந்தன.  

மதுரையிலிருந்து சென்னை வந்த புதிது என்பதாலும், இன்னும் திருமணமாகாத நிலை என்பதாலும் அலுவலகத்திலேயே தங்கி இருந்தேன்.  அதனால் சக ஊழியர்களுடன் நல்ல நட்புறவு இருந்தது.  

ஆரம்ப பயங்கள் மறையத்தொடங்கிய நேரம் என்னில் இருந்த மாற்றங்கள் என்றால், எல்லோரிடமும் சகஜமாகப் பேசுவேன்.  மரியாதைக் குறைவாக யாரிடமும் பேசமாட்டேன்.  நிறைய ஜோக்ஸ் அடிப்பேன்.  விளையாட்டுத்தனமாக பேசி அவர்களை அவ்வப்போது ஏமாற்றுவது உண்டு.

இந்த நிலையில் நடந்த சில தொலைபேசி சம்பவங்களை முன்னர் எழுதி இருக்கிறேன்.  ஜூனியர்கள் புதிதாக ஏதாவது செய்தால், வேலையை முடித்து விட்டால் சீனியர்கள் அதற்கு சொந்தம் கொண்டாடுவது வாடிக்கையாக இருந்தது.  "என்னை கேட்டார்...   நான் சொன்னேன்..." என்பார் ஒருவர்.  நாமும் இருக்கும்போது சொன்னால் "நீங்க எங்க சொன்னீங்க?  நான் எங்க உங்களைக் கேட்டேன்?" என்று கேட்டுவிடுவேன்.  நாம் இல்லாதபோது சொன்னால்?  அப்புறம் காதுக்கு வரும்போது வருத்தமாக இருக்கும்!  அதே சமயம் ஜூனியர்களான நாங்கள் செய்யும் தவறுகளுக்காக அந்த சீனியர்கள் காத்திருப்பார்கள்!  அதிகாரிகள் அல்ல, சீனியர்கள்தான் காத்திருப்பார்கள்!  இது எங்கள் அலுவலக அனுபவம்!


ஓரளவு, இது எல்லா அலுவலகங்களிலுமே பொதுவான நடைமுறையாக இருக்கலாம்!  நான் இப்போது சீனியர்.  ஆனால் நான் அப்படி நடந்து கொள்வது இல்லை.  அதாவது மோசமான மாமியார் இல்லை!  ஆனால் பாருங்கள், எனக்கு இன்னும் சரியான மருமகள் கிடைக்கவில்லை.  அதாவது ஜூனியர் அமையவில்லை!  தனியாகவே தவிக்கும் நிலை!

வழக்கம்போல சொல்லவந்த விஷயத்துக்கு முன்னுரை எழுதியாச்சு!  அடுத்த வாரம் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்!

================================================================================================

பாஸ் தன் வாட்ஸாப் குழுமத்தில் இருப்பவர்களுக்கு 'குட்நைட்' அனுப்ப அவ்வப்போது சில வாசகங்கள் கேட்பார்.  நானும் தோன்றியதை எழுதித் தருவேன்.  அபப்டி எழுதித் தந்த சிலவற்றில் இரண்டு இங்கே இப்போது...

(1)
மயங்கும் இரவில்
உறங்கும் கண்கள்
மறுநாள் விடியலில்
மலரும் கண்கள்

(2)
குவியும் இரவில்
கவியும் உறக்கம்
புவியும் மயங்கும்
புலரும் வரைக்கும்..

இதை நாமே எடுத்த ஏதாவது ஒரு படத்தில் இணைத்து 'குட்நைட்' சேர்த்து தந்துவிடுவேன்!  இப்படி அனுப்புபவற்றில் ஒன்றிரண்டு எப்போதாவது எங்களுக்கே வேறிடத்திலிருந்து திரும்பி வரும்!  முதல் 'கவிதை'யில் இரண்டு முறை கண்கள் என்று வராமல் வேறு யோசித்துப் பார்த்தேன்.  சரியாக அமையவில்லை.  விட்டுவிட்டேன்!

=================================================================================================

இந்த வாரம் 'புதிய பறவை' படத்தின் விமர்சனம் படிப்போமா?  அப்போது வந்த விமர்சனம்.  அப்போதைய கல்லூரி மாணவர் சீனிவாசன் எழுதி இருக்கிறார்.  இப்போது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறாரோ!  பாடல் காட்சிகள் விரசம் என்கிறார்.  நம்மையே நாணப் படவைக்கும் அளவு விரசம் என்கிறார்!  சிட்டுக்குருவி பாடல் மட்டும் நன்றாய் இருக்கிறதாம்!  முக்கியமான காட்சியின் முரணைச் சுட்டிக் காட்டுகிறார்...




============================================================================================

அழகான, இளமையான எம் ஜி ஆர்.  1947 களில் எம் ஜி ஆர் இப்படிதான் இருந்தார்.  குண்டூசி பத்திரிகையில் வெளிவந்த படம்.







பிரபல பாடகர் வி வி சடகோபன் பல்துறை வித்தகர்.  அவருடைய வாழ்க்கையே ஒரு மர்மமும் கூட.  அவர் பத்திரிக்கைத் துறையிலும் இருந்திருக்கிறார்.  அப்போது அவர் இப்படித்தான் இருந்தார். 





=============================================================================================

ரொம்ப ஆரம்பகால மதன் ஜோக்...  முதலில் எனக்கு ஜோக்  புரியவில்லை.  பின்னர்தான் புரிந்தது. முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத்திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு போல இதை அவர் தொடர்ந்திருந்தால் 'துண்டு பீடி துலுக்காணம்' என்று தொடர்ந்திருப்பார்!!!




===============================================================================================

113 கருத்துகள்:

  1. பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    முதலில் கண்களில் பட்டது அழகான குட் நைட் கவிதை. நாலு வரிகளில் மிக அருமையாக உள்ளது. அது சுற்றிச்சுற்றி உங்களுக்கே வந்த போது நன்றாகத்தான் இருந்திருக்கும்.

    இரண்டு கண்களுக்குப் பதிலாக இறுதியில் விழிகள் வரலாம் என நினைக்கிறேன். உங்களுக்கே சொல்வதாக தவறாக நினைக்க வேண்டாம். ஏதோ எனக்கு தோன்றியதை எழுதி விட்டேன்.தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    அடுத்து அழகான எம்ஜிஆர். ஆமாம். அப்போது மிக அழகாகத்தான் இருக்கிறார். அவருக்கு அழகு ஆண்டவன் தந்த பரிசு. 47ல் நான் பிறககவேயில்லை. அருமையான பொக்கிஷங்கள். மற்றதை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஸ்ரீராம், அன்பு துரை, அன்பு கமலாமா.
      அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      எல்லோரும் எப்போதும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. கமலா அக்கா

      கவிதைப் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கதம்பம் மணக்கிறது. து.பீ.து. பார்த்த நினைவில் இல்லை. புதுசா இருக்கு. விமரிசனம் பொடி எழுத்தில் இருப்பதால் பெரிசாக்கிப் பின்னர் படிக்கிறேன். அமாவாசை வேலைகள் இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. அலுவலகம் சம்பந்தப்பட்ட வரை ஶ்ரீராம் சொல்லி இருப்பது சரிதான். அநாவசிய மரியாதையும் வேண்டாம். அவமரியாதையும் வேண்டாம். ஆனால் அவர் வடமாநிலங்களிலும் ராணுவத்திலும் பார்த்ததில்லை. வடமாநிலங்களில் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தங்களை விடப் பெரிய அதிகாரிகளிடம் அடிக்கொரு முறை சர்ஜி, சர்ஜி (Sirji) என்பார்கள். ராணுவத்திலோ கேட்கவே வேண்டாம். எல்லாவற்றுக்கும் ஹாஞ்சி (Haanji) தமிழில் "ஆமாம், ஐயா" தான். எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஆமோதிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா அலுவலகங்களிலும் கூழைக் கும்பிடு ஆசாமிகள் உண்டு. அவர்களை ஆதரிக்கும் அதிகாரிகளும் உண்டு.

      நீக்கு
    2. நீங்கள் சோல்வதை கற்பனைக் கண்களில் பார்க்க முடிகிறது கீதா அக்கா.

      நீக்கு
  6. அலுவலகம் பிடிபட சில வருடங்களாவது ஆகும்.
    நீங்கள் இப்போது மாமியாராக ஆன பிறகும்
    அப்படி நடந்து
    கொள்ளாதது நன்மையே.

    முன் எப்பவோ படித்த கட்டுரையில் அரசு அதிகாரிகளைப்
    பற்றி அத்தியாயங்களாக வர்ணித்திருப்பார்கள்.

    எப்பொழுதும் பணிய வேண்டும் என்று நினைப்பவர்களை
    வைத்து வீட்டில் புலி வெளியே எலி படம் கூட வந்தது:)

    என்றுதான் மனிதர்கள் மாறுவார்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்கள் மாற மாட்டார்கள். மனிதர்களுக்கு தக்கபடி நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

      நீக்கு
  7. உங்கள் பாஸுக்காக எழுதும்போது, நீங்கள் நிஜமாகவே கவிஞராகிவிடுகிறீர்கள் என்பது இன்று தெரிந்தது. இரண்டாவது கவிதையை சாகித்ய அகாடமியே கவனித்துவிடும்போலிருக்கிறதே!
    பாஸ் உங்களை அடிக்கடி எழுதச் சொல்வாராக..

    பதிலளிநீக்கு
  8. அப்படி ''சோப் போடுவது'' என்று முன்பு
    சொல்லும் ஒரு வழக்கம் சில பேருக்குக் கைவந்த கலை.
    தெரியாதவர்கள்

    முன்னேற முடியாமல் தவிப்பதும் உண்டு.
    முதலாளிக்குக் கதவு திறந்து விடுவது,
    முதலாளி வீட்டுக்கு வேண்டிய உதவிகள் செய்வது
    எல்லாமே முற்காலத்தில்
    பெரிய பதவிகளை அடைய வழியாக இருந்ததையும்
    பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ரஸாயன வகுப்பில் இருந்து விமரிசனம் எழுதியதால், சினிமாவின் ரஸாயனம் சீனிவாசனுக்குப் புரியவில்லை!

    பதிலளிநீக்கு
  10. புதிய பறவை விமரிசனம் படித்த நினைவு இல்லை.
    ஸ்ரீனிவாசன் என்ற பெயர் நினைவு இருக்கிறது.
    மாணவர்கள் பங்கெடுத்த இதழ்கள்.

    அப்போது இரண்டு கட்சி.ஒன்று எம்.ஜி.ஆர்
    மற்றொன்று சிவாஜி.

    ரசிகர்களைப் பொறுத்து விமரிசனமும் அமையும்.
    இப்போது எழுதச் சொல்லி இருந்தால் நானும் இதே போலத்தான்
    எழுதி இருப்பேன்
    என்பது வேறு விஷயம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இப்போது எழுதச் சொல்லி இருந்தால் நானும் இதே போலத்தான்
      எழுதி இருப்பேன்// இப்போதா - அப்போதா ?

      நீக்கு
    2. நானும் அதே கேள்வியைக் கேட்கிறேன் வல்லிம்மா..

      நீக்கு
  11. இரவு வணக்கக் கவிதைகள் மிக அருமை.
    உறங்கச் செல்லும் மனங்கள்
    மலர்ந்து விழிக்கும் புதிய காலையில் .
    கனவுகள் மட்டும் நல்லவைகளாக இருக்க வேண்டும்:)
    மதன் துண்டு ஜோக் பிரமாதம்.

    எம் ஜி ஆர் நல்ல அழகுதான்.
    வி வி.சடகோபன் மிகப் பேசப்பட்ட துடிப்பான மனிதர்.
    அவர் மனைவி
    என் மாமியாருக்கு உற்ற தோழியாக இருந்தார்.
    மகள்களும் நல்ல நிலமையில் தான் இருக்கிறார்கள்.
    நான் அங்கே இருந்தவரை
    அவர் எங்கோ இமயமலையில் இருப்பதாகச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  12. இஸ்லாத்தில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று முன்னவர் சொல்லி விட்டால் அடுத்தவர் "அலைக்கும் ஸலாம்" என்று சொல்லியே ஆகவேண்டும்.

    இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துபாய் போன புதிதில் ஃபெர்ஃப்யூம் கம்பெனியில் சாஃப்ட்வேர் செக் பண்ணிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த அரபி கஸ்டமர் என்னைப் பார்த்து அஸ்லாமு அலைக்கும்னு சொன்னார். நான் இவன் என்னடா எங்கிட்ட ஏதோ நான் கடைக்காரன் மாதிரி பேசறான் என என் வேலையில் மும்மரமாக இருந்தேன் (உனக்கும் அமைதி கிட்டட்டும் என்று நான் வாழ்த்தாத்தால் வந்த கடுப்பு போலிருக்கு). கன்னா பின்னான்னு சத்தம் போட ஆரம்பித்தான். பிறகு கடை ஓனர் நிலைமையைப் புரிய வைத்து சமாதானப்படுத்தினார்.

      நீக்கு
    2. அப்படித்தான்!...

      ஆனாலும் அப்படி திரும்பச் சொல்லாமல் - ம்... என்று சொல்லி விட்டுப் போகும் ஆட்களும் உண்டு...

      மேலும் இவன் முஸ்லீம் அல்லாதவன் என்று தெரிந்தால் அவனிடம் பேச்சைக் குறைத்துக் கொள்ளும் ஆட்களும் உண்டு.

      நீக்கு
    3. வாங்க கில்லர் ஜி. அறிவேன் நீங்கள் சொல்லி இருப்பதை. அதையும் இன்ஷா அல்லா (சமயங்களில் இன்ஷா முருகா என்பேன்)வையும் நான் சொல்வதுண்டு.

      நீக்கு
  13. அலுவலக அனுபவங்கள் சுவை. எனக்கும் அப்படிப்பட்ட அனுபவங்களை எழதலாம் என்று தோன்றுகிறது. நான் பணி புரிந்த அலுவகத்தில் பல மாநிலங்களை சேர்ந்த அலுவலர்கள் இருந்ததால் எங்களது பொது தொடர்பு மொழி ஆங்கிலம் தான். ஆங்கிலத்தில் இந்த போலி மரியாதைகள் மற்றும் வஞ்ச புகழ்ச்சிகள் குறைவு. ஆகவே அனுபவங்கள் வித்தியாசமானவை.


    //மயங்கும் இரவில்
    உறங்கும் கண்கள்
    மறுநாள் விடியலில்
    மலரும் கண்கள்//

    மயக்கும் இரவு.
    உறங்கும் தாமரை 
    விடியலில் மலரும்.
    கதிரவன் என்ற 
    காதலனைக் கண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      நீக்கு
  14. உங்களுடைய கவிதை விடுகதை போல உள்ளதால் விடையாக நானும் சொன்னேன். 

    பதிலளிநீக்கு
  15. புதிய பறவை திரைவிமர்சனம் நன்று. மீண்டும் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

    அதுதான் குமுத்த்தின் வெற்றி. யாரையும் காயப்படுத்தாமல்.. ஆனால் அதே சமயம் ரசனைக்குரிய விமர்சனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமுதமா! எனக்கு அப்படித் தோன்றவில்லை. விகடன் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. விகடனில் மாணவர் திட்டம் செயல்பட்டப்போ எழுதினதுனு நினைக்கிறேன். இன்னும் படிக்கலை விமரிசனத்தை1 படிச்சுட்டு வரேன்.

      நீக்கு
    3. விகடனில் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 1978,79 இல் தொடங்கப் பட்டது. அதில் அறிமுகமானவர்கள்தான் பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார் இன்று மேடைப் பேச்சாளராக காலக்கிக் கொண்டிருக்கும் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் (அப்போது அவர் ஜெயந்தஸ்ரீ பாரதி)போன்றவர்கள். புதிய பறவை படம் 60களில் வெளியானது இல்லையா?

      நீக்கு
    4. @பானுமதி, 80களின் மத்தியில் என நினைக்கிறேன். 84 அல்லது 85 ஆம் ஆண்டாக இருக்கலாம். இந்தப் படம் வந்த ஆண்டு சரியாகத் தெரியாமல் விகடனாக இருக்கும் என்னும் நினைப்பில் சொல்லி இருக்கேன். நீங்க சுட்டிக் காட்டியதும் தான் புரிந்தது. ஆனால் விகடனில் ஆரம்ப காலங்களில் சேகர்-சந்தர், முனுசாமி-மாணிக்கம், ஷண்முகசுந்தரம்-அவர் மனைவி பெயர் மறந்துட்டேன். இவங்க படத்தைப் பற்றிப் பேசிக்கிறாப்போல் விமரிசனங்கள் வரும். இந்த விமரிசனத்திலேயும் அப்படி ஓர் பெயரைப் பார்த்ததும் விகடன் என நினைக்கக் காரணமாய் இருந்திருக்கும்.

      நீக்கு
    5. சுவையான விவாதம். நீளமாக பதில் எழுத ஆசை இருந்தாலும்...

      நீக்கு
  16. மயங்கும் இரவில் உறங்கும் கண்கள்
    மறுநாள் திட்டங்களை எண்ணிக்கொண்டு
    அதற்குத் தெரியுமா மறுநாள் நிகழ்வு?

    இது சோகமா இருக்கு.

    மயங்கும் இரவில் உறங்கும் கண்கள்
    மறுநாள் மலரும் என்ற நம்பிக்கையோடு

    பதிலளிநீக்கு
  17. பிரபல பாடகர் என்று சொல்லியிருப்பதால் சில பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1.Anirai Meyka 2. Enda veduko 3.Kanavenum 4.Kannan Mugam 5.Nadamadi thirintha 6.Parthasarathy 7.Rama Bhajanai

      V V Sadagopan : Born on 29-1-1915.

      Gone with the wind
      "He got off the train at Gudur in Andhra Pradesh on 11 April 1980, on his way from Delhi to Chennai. Afterwards there was no information about his whereabouts. His family still believes that he lives somewhere," said T.K. Venkatasubramanaian, retired Professor of History of the Delhi University.

      Rumours of sighting him in Varanasi and in the Himalayas and consequent searches have yielded no results.

      நீக்கு
    2. பத்திரிகை ஆசிரியர். கூடவே பாடகர் என்கிறீர்கள். படத்துக் கீழே நடிகர் என வருகிறது. மர்மம்..டெல்லி, ஆந்திரா, இமயமலை.. புரியவில்லையே ஒன்றும்!

      நீக்கு
    3. நடிகர், பாடகர், பத்திரிகை ஆசிரியர் all in one.
      https://en.wikipedia.org/wiki/V._V._Sadagopan

      நீக்கு
    4. தினமணியில் சாருகேசியின் கட்டுரையில்:
      .. ஒரு படத்துக்கு வி.வி.சடகோபனைக் கதாநாயகனாக நடிக்கத் தீர்மானித்த பிறகு எம்.ஜி.ஆரை அணுகினார்களாம். "சடகோபன் மெத்தப் படித்தவர். மிக அழகானவர். அவரை புக் பண்ணிய பிறகு எனக்கு எங்கே சான்ஸ் இருக்கப்போகிறது?'' என்று சொல்லிவிட்டாராம் எம்.ஜி.ஆர். இதைத் தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அத்தனை அழகான ஹீரோ வி.வி.எஸ்.

      நீக்கு
    5. இவ்வளவு ஈடுபாட்டுடன் வாழ்க்கையக் கழித்தவர் திடீரெனச் சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் ஏற்கக் காரணம் என்னனு தெரியலை. உண்மையாவே மர்மம் தான். விக்கிபீடியாவில் இவரைப் பற்றி நானும் படிச்சேன்.

      நீக்கு
    6. முன்னமே நாம் நம் தளத்தில் இவர் பற்றி பேசி இருக்கிறோம்.

      நீக்கு
  18. அலுவலகப் பணியாளர் குறித்த செய்திகள் அருமை..

    ஜால்ரா... ஜிஞ்சா!... என்ற சொல்வழக்குகள் அனைவரும் அறிந்ததே...

    பதிலளிநீக்கு
  19. மேலதிகாரிகள்ட எலி, தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடத்தில் புலி. என்பதுதான் பெரும்பாலானவர்களின் மேனேஜ்மென்ட் ஸ்கில்லா இருக்கு. அப்படிப்பட்டவர்கள், அபூர்வ தருணங்களில் அவங்க மேலதிகாரிட்ட பம்முறதைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  20. எனது முந்தைய அலுவக நினைவுகள் பல ஞாபகத்திற்கு வந்தது.... சரியான மருமகள் கிடைத்தார்களா...?

    கவிதை பிறப்பிற்கு காரணமும் புரிந்தது... அருமை மற்ற பகுதிகளும்...

    பதிலளிநீக்கு
  21. குண்டூசி படம் ஏதாவது ஷூட்டிங்கில் எடுத்தாத இருக்கலாம். இயல்பாக எம்.ஜி.ஆர் இப்படி இருக்கவே மாட்டார்.

    அவர் Pant--ல் காட்சியளித்ததே 'தாய் மகளுக்குக் கட்டிய தாலி' படத்திற்கு அப்புறம் தான். அதுவும் ஷூட்டிங் தருணங்களில் தான். எப்பொழுதும் வேட்டி, ஜிப்பா தான்.
    காலரில்லாத அந்த ஜிப்பா கட்டுமஸ்த்தான அவர் உடலழுக்கு மேலும் அழகூட்டும்.
    படியவே படியாத சுருட்டை முடி எம்.ஜி.ஆருக்கு. ஒரு கர்ச்சீப்பை சுற்றிக் கட்டி அதைப் படிய வைப்பத்திருப்பார். தவறாமல் கருப்பு--சிவப்பு சின்ன கைத்துண்டு ஒன்று தோளைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

    பொதுக்கூட்ட மேடைப் படிகளில் துள்ளி ஏறும் பழக்கம் அவருக்குண்டு. மைக் முன்னால் வந்ததும் கூட்டத்தினரைப் பார்த்து அவருக்கே உரித்தான ஒரு ஸ்டைலில் அவர் கையசைத்துமே கூட்டம் களை கட்டி விடும்.

    பதிலளிநீக்கு
  22. புதிய பறவையின் வெற்றிக்கு அந்தப் படத்தை இயக்கிய தாதா மிராசிக்கு பெரும் பங்கு உண்டு.
    இரத்த சிவப்பு எழுத்துக்களில் டைட்டில் கார்டு போடும் பொழுதே இயக்குனரின் திறமை வெளிப்படத் துவங்கி விடும்.
    கடைசி காட்சி அந்த confessing statement பொழுது சிவாஜி, நடிகர் திலகமாக ஜொலிப்பார்.
    அந்தக் காட்சியில் தொடர்ந்து பேசிக் கொண்டே வரும் பொழுது தொண்டை அடைத்துக் கொண்ட மாதிரி ஒரு தடவை மூக்குறிஞ்சுவார் பாருங்கள், அப்பொழுது கைத்தட்டல் பறக்கும். இப்படித் தான் இந்தக் காட்சி படமாக்க வேண்டும் என்பதில் தாதா மிராசி குறியாக இருந்தது ஒவ்வொரு காட்சியிலும் புரிபடும்.

    பதிலளிநீக்கு
  23. //அதாவது மோசமான மாமியார் இல்லை!..//

    மோசமான மாமியாரா?.. இந்த வரியைப் பார்த்த சடுதியில் இந்தக் குற்றச்சாட்டைப் போக்கவே ஒரு சிறுகதையை எழுதி கே.வா.போ.கதை பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்றளவில் ஆவேசம் கொண்டேன்.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருமகளை மோசமாக நடத்தும்/நடத்திய மாமியார்கள் பலர் இருக்கின்றனர். தன் பிள்ளையைப் பங்கு போட்டுக்கொள்ள வந்தவள் என்னும் எண்ணம் எப்போதும் இருக்கும். ஆனால் 2,3 பிள்ளைகள் இருந்தால் மூத்த பிள்ளையிடம், மூத்த மருமகளிடம் மட்டுமே அவங்க அதிகாரத்தை முழுமையாக் காட்டுவாங்க. மற்றப் பிள்ளைகள் இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்டுவிடுவதாலோ என்னமோ அவங்களிடம் இவங்க தன் வேலையைக் காட்ட முடியாது. அடங்கியே இருப்பார்கள். மூத்த பிள்ளை கல்யாணம் செய்து கொண்டதே தப்பு என்னும்படியா அவங்க எண்ணம், செயல் எல்லாம் இருக்கும்.

      நீக்கு
    2. நன்றி, கீதாம்மா.. உங்கள் ஸ்டேட்மெண்ட்டையும் கருத்தில் கொண்டு கதையை உருவாக்குகிறேன். விரைவில் வாசிக்க உங்களுக்குக் கிடைக்கும்.

      நீக்கு
    3. நெல்லைக்காக ஒரு குமுதக் கதை
      உங்களுக்காக ஒரு மாமியார் --= மருமகள் கதை.

      இவை இரண்டுமே இப்போதைக்கு கே.வா.போ.கதை பகுதிக்காக நினைவில் ஆழப் பதிந்துள்ளது. நன்றி.

      நீக்கு
    4. எப்படி வேண்டுமானாலும் கதை எழுதுங்கள். ஆனால் கதையில் நல்லவராகக் காட்டப்போகும் மாமியார்கள் நிஜத்தில் வெகு குறைவு. அங்கே, இங்கே ஒன்று இருக்கலாம். வேலைக்குப் போகும் மருமகளுக்கு இரவு வரும்போது சாப்பாடு வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டுக் கொட்டிக் கவிழ்த்திக் காலிப் பாத்திரங்களை வைக்கும் மாமியாரைப் பற்றிச் சில வருஷங்கள் முன்னர் தான் என்னோட பதிவில் எழுதினேன். அதோடு இல்லாமல் கணவன், மனைவிக்கு இடையில் தலையீடும் இருக்கும். கணவனுக்கு உணவு பரிமாறுவது, மற்றச் சின்னச் சின்ன உதவிகள் செய்வது என மனைவி இருந்தால்பிடிக்காத மாமியார்கள் உணவு பரிமாறுவதைத் தாங்களே எடுத்துக் கொண்டு உதவிகள் செய்யத் தங்கள் மகளைக் கூப்பிட்டு வைத்துக் கொள்வது உண்டு. வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஓர் முடியாத விஷயம். எழுதப் போனால் பத்தி பத்தியாக வரும். நல்லவர்களும் உண்டு. ஆனால் கொஞ்சமே கொஞ்சம்! அவங்களையும் அடிமையாக நடத்தும் மருமகள்கள் உண்டு.

      நீக்கு
    5. உண்மை நிகழ்வுகளின் கொடுமைகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றை நல்லபடி வழி நடத்துவதற்காக கற்பனை துணை கொண்டு எழுதப்படுவது தான் கதைகள்.

      அதனால் தான் கதைகளில் உண்மை நிலைகளின் சாயல்கள் மட்டுமே தெரியுமே தவிர அவையே உண்மையாகி விடாது. நல்லவைகள் நடக்க வேண்டியதற்கான ஒரு முயற்சி. அவ்வளவு தான். அந்த முயற்சிகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தப்பட்டவர்களின் வேலையாகிப் போய் விடுகிறது.

      உண்மை நிகழ்வுகளையே படம் பிடித்துக் காட்டுவதற்கு உண்மைக் கதைகள் என்று தற்காலத்தில் பெயர் கொண்டுள்ளார்கள்.

      நீக்கு
  24. ஸ்ரீராம் பாஸுக்கு என எழுதித் தரும் கவிதைகளை மட்டும் ஒன்றாகச் சேர்த்து ஒரு கவிதைப் புத்தகமாக வெளியிட்டு விடுங்கள். இரண்டு கவிதைகளும் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  25. புதிய பறவை படம் எப்போவோ பார்த்தது. ஆனாலும் இரவு விடுதியில் சௌகார் ஆடுவார் என்பது நினைவில் இருப்பதோடு அல்லாமல் இதைப் பற்றிக் கேட்டு ஜிவாஜி ரசிகர்களிடம் (வீட்டிலே உள்ளவங்க தான்) வாங்கிக் கட்டிக் கொண்டதும் நினைவில் இருக்கு. இதிலெல்லாம் லாஜிக்கே பார்க்கக் கூடாது என்பதும் புரிந்தது. இஃகி,இஃகி,இஃகி! ஆனால் இப்படி ஓர் விமரிசனம் வந்திருந்தது தெரியாமல் போச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தான் கொலைச்செய்த மனைவியை செளகார் வடிவில் கண்ணால் பார்க்கும் சிவாஜி அதிர்ச்சியுறுகிறார். செளகார் உண்மையிலேயே ஒரு ஸி.ஐ.டி. ஆபிஸர். அவர் சிவாஜியின் காதலியாகி உண்மையைக் கண்டுபிடிக்கிறார். இது தான் கதை. செளகார் பற்றித் தெரியும் கடைசிக் காட்சியில் "போயும் போயும் காதலியாக நடிக்கத் தான் உனக்குத் தோன்றியதா?" என்று சிவாஜி கேட்கும் இடம் கிளாஸ். எம்.ஆர்.இராதாவும் துப்பறியும் ஆபிஸர். பர்மாக்காரர் பாணி உடையில் பிரமாதமாக நடித்திருப்பார். உண்மையில் ஏதோ ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் கதையம்சம்.

      'பார்த்த ஞாபகம் இல்லையோ?.. பருவ நாடகம் தொல்லையோ?.." பாடல் தான் நீங்கள் குறிப்பிடும் விடுதிக் காட்சிக்கான பாடல்.

      நீக்கு
    2. கதையை மாற்றிவிட்டீர்கள். வெளிநாட்டில் சிவாஜி கல்யாணம் செய்துகொண்ட சௌகார், குடிப்பழக்கம், இஷ்டத்துக்கு சுற்றுவது என்பது போன்ற காரணங்களால் சிவாஜியால் வெறுக்கப்படுகிறார். ஒரு முறை குடித்துவிட்டு தாறுமாறாக கார் ஓட்டிச்செலலும் சௌகாரை பின் தொடர்ந்து வந்த சிவாஜி, அவரை ஒரே ஒரு அறை கொடுத்ததும் சௌகார் உயிரை விடுகிறார். பிறகு அருகில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ரயில் வரும்போது சிவாஜி சௌகார் உடலை ரயில்வே டிராக்கில் போட்டு, தற்கொலை என்று நம்ப வைக்கிறார். கப்பலில் அவர் இந்தியா திரும்பும்போது சரோஜா தேவி அறிமுகமாகிறார். சரோஜா தேவியை கல்யாணம் செய்துகொள்ள எல்லா ஏற்பாடுகளும் தயாராகி உள்ள நிலையில், சௌகாரைப் போன்றே தோற்றம் உள்ள (அவருடைய சகோதரி ) வந்து எல்லோர் முன்னிலும், தான்தான் சிவாஜி கல்யாணம் செய்து கொண்டவர் என்று கூறி ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்.
      இறுதியில், சரோஜாதேவி, அவர் அப்பா எம் ஆர் ராதா எல்லோருமே போலீஸ் சி ஐ டி , சகோதரி சௌகார் உண்மையைக் கண்டு பிடிக்க போலீசுக்கு உதவ வந்தவர் என்பது வெளியாகிறது.
      இறுதிக் காட்சியில் சிவாஜி / சரோஜாதேவி நடிப்பு & வசனங்கள்தான்.
      அப்பொழுது பிரபலமான " கோப்பால் .. " வசனம்தான் இன்றும் விஜய் டீ வி காமெடி ஷோ முதல், வை கோ மீமஸ் உள்பட எல்லாவற்றிலும் வருகிறது.

      நீக்கு
    3. //கதையை மாற்றிவிட்டீர்கள்.//

      ஹி..ஹி.. அதானே!...

      நீக்கு
    4. ஜீவி ஸார்

      நிறைய சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்கள் செய்திருக்கிறீர்கள். என்னால்தான் விளக்கமாக பதிலளிக்க இயலவில்லை. மன்னியுங்கள்.

      நீக்கு
    5. அதெல்லாம் ஒன்றுமில்லை, ஸ்ரீராம் உங்கள் வசதிப்படி வாருங்கள்.

      நீக்கு
  26. எம்ஜிஆரின் இந்தப் படம் பார்த்த நினைவு. ஆனால் எதிலேனு எல்லாம் நினைவில் இல்லை. வி.என்.ஜானகியோடும் ஒரு படத்தில் நடிச்சிருக்கார் போல! அந்தப் படமும் பார்த்திருக்கேன். முன்னெல்லாம் குண்டூசிப் பத்திரிகை, பேசும்படம் இரண்டும் ரொம்பவே பிரபலம். ஆனால் எங்களுக்கெல்லாம் தடை செய்யப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. v v சடகோபன் என் தாய் வழி பாட்ட்டியின் நண்பர் என்று சொல்லக்கேள்வி

    பதிலளிநீக்கு
  28. //நான் இப்போது சீனியர். ஆனால் நான் அப்படி நடந்து கொள்வது இல்லை. அதாவது மோசமான மாமியார் இல்லை! ஆனால் பாருங்கள், எனக்கு இன்னும் சரியான மருமகள் கிடைக்கவில்லை. அதாவது ஜூனியர் அமையவில்லை! தனியாகவே தவிக்கும் நிலை!//

    நல்ல சீனியராக( நல்ல மாமியார்) இருப்பது மகிழ்ச்சி.
    நல்ல ஜூனியர்(நல்ல மருமகள்) கிடைக்க வாழ்த்துக்கள்.

    கவிதை அருமை.

    புதியபறவை விமர்சனம் படித்தேன்.

    எம் ஜி ஆர் பழைய படம் நன்றாக இருக்கிறது.
    வி.வி சடகோபன் அவர்களைப்பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    துண்டு பீடி துலுக்காணம்' ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  29. இன்றைய  கதம்பம் வழக்கத்தை விட சற்று இளைத்திருக்கிறது. அலுவலகங்களில்  வேலை செய்து பெயரெடுப்பவர்கள் உண்டு, காக்கா பிடித்தே காலத்தை ஓட்டுபவர்களும் உண்டு. அதிகாரிகளின் அகங்காரத்தை விசிறி விடுபவர்கள் இவர்கள்தான். மனைவியைப் பற்றி கவிதை எழுதுபவர்களை தெரியும். மனைவிக்காக கவிதையா? பேஷ்! பேஷ்!மதன் ஜோக் சிறப்பு!புதிய பறவை விமர்சனம் குமுதம் பாணியில்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  30. காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ், பாலையாவுக்கு கதை சொல்லும் காட்சிக்கு இன்ஸபிரேஷன் தாதா மிராஸி கதை சொல்லும் விதம்தானாம். அவர் அனிமேட்டடாகத்தான் கதை சொல்வாராம். அதை நகைச்சுவையாக்கலாம் என்று கோபு   ஸ்ரீதரிடம் கூற, ஸ்ரீதர், "அந்தப் பையனிடம்(நாகேஷ்) சொல்லி விடு என்று கூறினாராம். கோபு சொன்னதை நாகேஷும் கச்சிதமாக புரிந்து கொள்ள, காட்சி ஹிட் ஆனதாக கோபு  பொதிகையில்  நினைவு கூர்ந்தார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அப்படியா! தகவலுக்கு நன்றி.

      நீக்கு
    2. நன்றி பானு அக்கா...

      மத்யமரில் உங்கள் அகத்திக்கீரைக் கட்டுரை ரசனை.

      நீக்கு
    3. நன்றி ஸ்ரீராம்! இது பழைய பதிவு. எங்கள் பிளாகில் பகிர்ந்தேனா என்று தெரியவில்லை. அப்புசாமி.காமில் வெளியானது. 

      நீக்கு
    4. அட? அப்படியா? எங்கேயோ படிச்ச நினைவு இருந்தது. ஆனால் எங்கேனு புரியலை.

      நீக்கு
  31. அலுவலகம் குறித்த செய்திகளை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  32. இன்னும் அரசு அலுவலகங்களில் அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ற கேள்விக்கு பிள்ளையாரின் பதிலே சரியானதாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  33. அலுவலக அனுபவங்கள் எப்போதும் போலவே சுவாரஸ்யம். சொல்ல வரும் விஷயத்தை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. சரிதானா என அடுத்த வியாழன் அறிந்து கொள்கிறேன்:).

    மறுநாள் விடியலில் மலரும் ‘இமைகள்’!

    மற்ற பகிர்வுகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  34. அலுவலக அனுபவங்கள் - தமிழகம் மாதிரி இங்கே அலுவலகங்களில் அத்தனை பணிவு காண்பிப்பதில்லை. சீனியர்களிடமும் அதிகாரிகளிடமும் பெரும்பாலும் சாதாரணமாகவே பழகுவது வழக்கம். நான்கு ஐந்து நிலை தாண்டி நேரடியாக அதிகாரிகளிடம் பணி சம்பந்தமாக கலந்து பேசுவது இங்கே சகஜம்!

    இமைகள் - கண்களுக்குப் பதிலாக - ராமலக்ஷ்மி சொன்னது தான் எனக்கும் தோன்றியது.

    துண்டு பீடி துலுக்காணம்! ஆஹா...

    பதிவின் வழி சொன்ன விஷயங்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!