வியாழன், 24 செப்டம்பர், 2020

நான் மட்டும் என்ன சொன்னேன்?

இந்த வாரம் சொல்லவந்த விஷயத்தைச் சொல்வதாகச் சொல்லி இருந்தேன்.  

பொதுவாக எல்லோரிடமும் ஜோக் அடித்துக்கொண்டு பழகி, பேசிக்கொண்டிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா?  வெளியில் ஜீப் அல்லது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டால் எட்டிப்பார்த்து விட்டு பரபரப்பாக 'அதிகாரி விசிட் வந்திருக்கிறார்' என்று சொல்லி வேகமாகச் செல்வேன்.  அனைவரும் பரபரப்படைந்து அவரவர் இருக்கையில் சரியாய் அமர்ந்து வேலைகளில்  கவனமாக இருப்பதுபோல இருந்து வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  அப்புறம் ஒன்றுமில்லை என்றதும் இறுக்கம் தளர்ந்து சிரிப்பார்கள் அலலது கண்களால் என்னை எரிப்பார்கள்!

சமயங்களில் அவர்களும் அப்படி என்னை வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.  சொல்லப்போனால் இப்படி பயமுறுத்தும் விளையாட்டை ஆரம்பித்தது வேறொரு சீனியர் ஊழியர்தான்!

அதே போல ஒருமுறை என் நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தபோது அவர் ஆடிட்டுக்கு வந்திருக்கிறார் என்று சொல்லி அனைவரையும் கொஞ்ச நேர பரபரப்புக்குள்ளாக்கினேன்.

அதே அலுவலகத்தில் என் வயதொத்த ஒருவர் வேறு அலுவலகத்திலிருந்து மாறுதலில் வந்து சேர்ந்தார்.  அவர் பெயர் மாணிக்கம் என்று வைத்துக் கொள்வோம்.   நானும் அவரும் சற்றே நெருக்கமானோம்.  அடிக்கடி நானும் அவரும் அரட்டை அடிப்பது வாடிக்கை.  சேர்ந்து கடைகளுக்கும், புத்தகக் கண்காட்சிக்கும் சென்று வந்திருக்கிறோம்.

அவர் ஒரு தனி பிஸினஸ் வைத்திருந்தார்.  அரசு அலுவலர் அப்படி வைத்துக்கொள்ளக் கூடாது என்பதால் வெளியில் சொல்லாமல் நடுவில் ஓரிரு மணிநேரம் காணாமல் போய்வருவார்.   இப்போது வேலையை விட்டுப் போய்விட்டார் என்பதால் சொல்லலாம்!

ஒருமுறை அவர் அப்படி மதியம் லன்ச் முடித்து காணாமல் போய்விட்டு மூன்றரை மணி சுமாருக்கு வந்தார்.  அருகிலிருந்த ஓய்வறையில் முகம் கழுவிக்கொள்ளச் சென்றவர் சற்றே கண்ணயர்ந்து விட்டார்!  நான்கு மணிக்கு இயக்குநர், ஒரு டி டி, ஒரு ஜே டி என்று விசிட் வந்து விட்டார்கள்!

அவர்கள் முதல் அறையில் வந்து அமர்ந்திருக்க நாங்கள் அவரை அங்கு சந்தித்து மரியாதை செலுத்தினோம்.  அப்போதெல்லாம் காலை, மாலை இரண்டுவேளை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும்.  வருகைப் பதிவேட்டை சோதனை செய்தவர்கள், சட்டென  எழுந்து கொண்டார்கள்.  ரௌண்ட்ஸ் போகப்போகிறார்கள் என்று பொருள்!

இயக்குநர் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு முன்னே நடக்க, வலது புறம் டெபுடியும், இடதுபுறம் ஜாயிண்ட்டும் நடக்க, நாங்கள் பின் தொடர்ந்தோம்.  ஒவ்வொரு அறையாக விசிட் செய்ய, நாங்கள் எந்த அறையில் என்ன என்று சொல்லிக் கொண்டு வந்தோம்...

மண்டையாட்டல்களும், குறுக்கு கேள்விகளும், பதில்களும் என்று நடக்க, இயக்குனருடன் வந்திருந்த க்ளெர்க் அதைக் குறிப்பெடுத்துக் கொண்டே வந்தார்.

குழு அந்த ஓய்வறையை நெருங்கும்போது எனக்கு விபரீதம் உறைத்தது!  

மாணிக்கம்!  

பனியனுடன் இருப்பார்.  அல்லது இந்நேரம் முகம் கழுவி தயாராயிருக்கலாம்.  எதற்கும் முன்னே சென்று எச்சரிக்கை செய்துவிடுவோம் என்று நான் முன்னே சென்று அதைக் கதவைத் தட்டினேன்!

இரண்டாவது முறை சற்றே பலமாகத் தட்டியபின் மாணிக்கம் கதவைத் திறந்தார்.  பனியனுடன் இருந்தார்.  கண்ணாடி போடாமல் இருந்தார்.  அந்த சோடாபுட்டி கண்ணாடியை மாட்டாவிட்டால் அவருக்கு பகலில் பசுமாடு தெரியாது!

என் பின்னால் நிற்கும் குழுவை அரைகுரைப் பார்வையில் கவனித்தவர், நான் எதுவும் சொல்லும் முன்பாகவே   "ஐயோ...   ஸ்ரீராம் ஸார்...  இத்தனை பேருக்கும் லிஸ்ட் சரி பார்க்கணுமா?  வரிசைல நிர்க்கச் சொல்லுங்க...   டோக்கன் வாங்கிட்டாங்களா?  இந்த நேரத்துல இவ்வளவு பேரா? இதோ வந்துட்டேன் இருங்க..." என்று உள்ளே திரும்ப யத்தனித்தார். அவர் கையைப் பிடித்து நிறுத்தி, 

"ஸார்...  டைரக்டர்..." என்றேன் எச்சரிக்கையான குரலில்..

வழக்கமான எங்கள் 'புலி வருது' கதை வினையானது இங்கேதான்!

"ஹா...  ஹா..  ஹா..  டைரக்டரா?  எந்தப் படத்துக்கு?  எனக்கு சான்ஸ் கிடைக்குமா?  நான் ஹீரோ வேஷத்தில்தான் நடிப்பேன்..  இருங்க..  கால்ஷீட் இருக்கான்னு பார்க்கறேன்..." என்று உள்ளே செல்லத் திரும்பியவரை "நான்சென்ஸ்" என்கிற டைரக்டரின் உரத்த குரல் நிறுத்தியது.  

"யார் மேன் நீ?   என்ன டெசிக்னேஷன்?  சூப்பரின்டென்டென்ட் எங்கே?  கூப்பிடுங்க அவரை..."

வந்தவரின் கோபம் மாணிக்கத்தைத் தாக்கியது.

அவசர அவசரமாக கண்ணாடியை எடுத்து மாட்டியவர் வெலவெலத்துப் போனார்.  சட்டையை எடுத்து தலைகீழாக மாட்டிக்கொண்டு ராமதாஸிடமிருந்து தப்பிக்க நினைக்கும் ஜெயந்தி போல பதற, 

"ட்ரெஸ்ஸை மாட்டிகிட்டு முதல் ரூமுக்கு வாங்க" என்று சொல்லி விட்டு இயக்குநர் படுகோபமாகத் திரும்பிச் சென்றார்.  டெபுடியும், ஜாயிண்ட்டும் புன்னகையை மறைத்துக்கொண்டு அவரைப் பின்தொடர, இதில் எனக்கொரு சிறு லாபம்.  அடுத்த அறைதான் என் டிபார்ட்மென்ட்.  இந்தக் களேபரத்தில் என் அறை விசிட் நின்று போனது!  அந்த ரணகளத்திலும் ஒரு சிறு கிளுகிளுப்பு!!!  

மாணிக்கம் "ஸார்...   டைரக்டர் வந்திருக்கார்னு சொல்லக் கூடாதா ஸார்...?" என்றார் அழாக்குறையாக.  

"நான் மட்டும் என்ன சொன்னேன்?"

"நிஜமாகவே டைரக்டர் வந்திருக்கார்னு சொல்லி இருக்கணும் நீங்க.." அவர் குரலில் துக்கம் தெரிந்தது.  

"நிஜமாவே...  நிஜமாவே டைரக்டர்...!  அப்படிச் சொல்லி இருந்தா மட்டும் நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிருப்பீங்களாக்கும்?"

அந்நிலையிலும் தன் ஈரமுகத்தில் அவர் அப்பிக்கொண்ட பாண்ட்ஸ் பௌடர் இயக்குனர் முன் அவர் நின்றபோது காய்ந்து, வெள்ளை வெள்ளையாகத் தெரிந்ததை என்னால் சொல்லவும் முடியவில்லை.  இயக்குனரால் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை!

என்ன நடந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ!

======================================================================================================

இரண்டாம் பாகத்தில்தான் அனுஷ் என்று தெரிந்ததும் அப்போதைய என் நேயர் விருப்பம்...

 


================================================================================================

அதுசரி..   இந்த ஆராய்ச்சி முடியும்வரை அது நம்மை விட்டு வைக்கணுமே!




============================================================================================

அட, இடத்தைச் சொல்ல விடமாட்டேங்கறாங்களே...!


ஆ...  வட்டி என்னாச்சு!


அப்போது அவர் குழந்தை!


78 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். அன்பு ஸ்ரீராம், கௌதமன் ஜி
    மற்றும் வரப்போகும் அனைவருக்கும் இன்னாள் இனிய நாளாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட? ரேவதி ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! நான் இல்லை!

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா... துரை ஸாரைக் காணோம். நெல்லையையும் காணோம்..

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று நான் தான் முதல் போணியா?

    பதிலளிநீக்கு
  3. அலுவலக அனுபவங்கள் அருமை. இப்படி எல்லாம் நடக்கவும் நடக்கும். நல்லவேளையா ஸ்ரீராம் இயக்குநரின் சோதனையில் இருந்து தப்பினார். அரசு அலுவலக ஊழியர்கள் இப்படி மறைமுகமாகத் தொழில்கள் செய்வது இன்றளவும் தொடரத்தான் செய்கிறது. பெண்களிலேயே பலர் புடைவை வியாபாரம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாரிகள் போனதும் ஆபீஸே ரொம்ப ஜாலியாய் இதைப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தது.

      நீக்கு
  4. இஃகி,இஃகி,இஃகி! அனுஷ்கா பற்றி ஸ்ரீராம் சொல்லி/பேசி/எழுதி ரொம்ப நாளாச்சு என நினைத்துக்கொண்டே வந்தால்! இஃகி,இஃகி,இஃகி.
    நகைச்சுவைத்துணுக்குகள் இரண்டும் நல்லா இருக்கு. என்ன இருந்தாலும் அந்தக்காலத்துத் துணுக்குகள் ஆச்சே. பாம்பு பற்றிய விபரங்கள் அருமை. சுப்புக்குட்டிகளைப் பார்த்தே சில வருஷங்கள் ஆகின்றன.

    காங்கிரஸ் அரசு பேருந்துகளைத் தனியார் மயம் ஆக்கியதை (அதாவது சென்னையில் மட்டும்) என் பெரியப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். நான் சென்னை வரும்போதெல்லாம் மதுரைப் பேருந்துப் போக்குவரத்தைப் பற்றி உசத்திச் சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்போது சொல்லுவார். அப்புறமா மதுரையிலும் அரசு மயமாக ஆகிவிட்டது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ் பற்றி காணோமே என்று நீங்கள் கவலைப் படுவீர்களே என்றுதான் இணைத்திருந்தேன்!

      அந்தக்கால ஜோக்குகளுக்கு நம் மனதில் தனி இடம்தான். மதுரை டி வி எஸ் பேருந்துகள் விசேஷம்தான் இல்லையா?!

      நீக்கு
  5. சேட் ஜோக், அடிபட்ட இடம் ஜோக் ஹாஹ்ஹாஅஹா.
    அனுஷ் மேலே இத்தனை ஹ்ம்ம்ம்.

    பண்ருட்டி குழந்தையா இருந்தது எந்தக் காலமோ.
    ஆனால் கங்கிரஸ் ஆட்சியில் பஸ்கள்
    அரசுடமை ஆனது நன்றாக நினைவிலிருக்கிறது.

    பஸ் ரூட்களைப் பறி கொடுத்த சில முதலாளிகள்
    நஷ்டப் பட்டதும் நினைவில். சேலம் ராமஜயம், மற்றும் சில என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ் மேல் இத்தனை ஹ்ம்ம்ம.. என்றால்?! சும்மா ஜாலிக்குதான்மா.. பண்ரூட்டி குழந்தையாயிருந்திருப்பார் என்று நக்கலடிக்கிறது குமுதம்.

      நீக்கு
    2. வல்லிம்மா இது பற்றி என் குறிப்பைப் பார்க்கவும்.

      ஆனால் பஸ் முதலாளிகள் இதில் நஷ்டப்படவில்லை. திமுக ஆட்சியில் டிவிஎஸ்ஸின் ஓட்டை உடைசல் பஸ்களை அதன் முக விலைக்கே (Face Value)வாங்கியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. போகப்போக திமுகவின்
      போக்குவரத்துத் துறை தேசியமயமும் சவசவத்தது. 150 கிலோ மீட்டருக்கான தூரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பர்மிட் வாங்கி பேருந்தை ஓட்டினார்கள். காஞ்சிபுரத்திலிருந்து ஆர்க்காடு வரை ஒரு தனியார் பஸ் போனால் அதே தனியார் பஸ் ஒன்று ஆர்க்காடில் தொடர் பயணத்திற்குக் காத்திருக்கும். காஞ்சிபுரத்திலிருந்து சேலம் வரை ஒரே பயணச்சீட்டாக வழங்கி
      அந்தந்த பஸ் நிலையங்களில் பயணிகள் மட்டும் வேறு பஸ்ஸுக்கு மாறிக் கொள்வார்கள்.

      நீக்கு
  6. சாயந்திர நேரம் பெயர் சொல்லாததைகளைப்
    போட்டு பயமுறுத்துவதைக் கண்டிக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வெறும் தகவல்தானேம்மா! அப்புறம் பெயர் சோல்லாதது என்று இன்னொன்றையும் சொல்வார்கள், நினைவிருக்கிறதா?

      நீக்கு
    2. குழந்தைகளின் உரை மருந்துகளில் ஒன்று.. இல்லையா?

      நீக்கு
  7. அடக் கடவுளே மாணிக்கத்தின் மேக் அப் நிஜமாகவே வெளுத்துப் போச்சு:)

    அவர் போலவே இருவேலை பார்த்தவர்கள்
    இது போல மாட்டிக் கொள்வதுதான் நியதி.
    அப்படியே கண்முன்னால் நடப்பது போல
    இந்தக் காட்சியை விவரித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மாணிக்கத்தின் மேக் அப் நிஜமாகவே வெளுத்துப் போச்சு:) //

      ஹா... ஹா... ஹா்..

      // அப்படியே கண்முன்னால் நடப்பது போல
      இந்தக் காட்சியை விவரித்திருக்கிறீர்கள். //

      நன்றி அம்மா.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இரண்டாம் பாகத்தை பார்த்த பின் முதல் பாகத்தை பார்த்து புரிந்து கொள்வதா? அனுஷ்காவிற்காக என்று தெரிந்திருந்தால் முதல் பாகத்திலும் அனுவையே நடிக்க வைத்திருக்கலாம் என்று திரைப்படம் எடுத்தவர்கள் நினைத்திருப்பார்கள்.

    / அட, இடத்தைச் சொல்ல விடமாட்டேங்கறாங்களே/

    தங்கவேலு பழைய காமெடி நினைவுக்கு வருகிறது. ரசித்தேன். பிறகு மீண்டும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. அனுவுக்கு டபுள் ரோல் கொடுத்திருக்கலாம்!!

      அந்த வரியை நானும் தங்கவேலுவை நினைத்துதான் எழுதினேன்!

      நீக்கு
  10. திரு. மாணிக்கத்தின் செயல் சிரிப்பை வரவைத்தாலும், பாவமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி.... அவர் கொஞ்சம் அப்பாவிதான். ஆனால் இதற்கெல்லாம் அவர் ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை!

      நீக்கு
  11. ஐயோ பாவம் மாணிக்கம்! அதற்குப் பிறகாவது அவர் திருந்தினாரா?பழைய நகைச்சுவை துணுக்குகள் அருமை! ஓவியங்களில் என்ன ஒரு பாவம்(bhavam)!நீ....ண் ... ட    நாட்களுக்குப் பிறகு அனுஷ்கா!! ஆனால் கொஞ்சம் களைப்பாக காணப்படுகிறார்..??!! கவிதை எங்கே?? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை? காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சோ...!!

      வாங்க பானு அக்கா... அனுவுக்கு மனசு சரியில்லையாம்.. அதான் டயர்டா இருக்காங்க!

      நீக்கு
  12. அலுவலக அனுபவங்கள் ரசிக்க வைத்தது.
    அவரின் நிலைதான் பரிதாபம்...

    பதிலளிநீக்கு
  13. அடிக்கடி காணாமல் போவதால் தண்டனை...

    அடடே அனுஷ்...! ரசிகனுக்கு ஒரு கணினி கூட அனுப்பக் கூடாதா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா..்் எத்தனை ரசிகர்களுக்கு என்னென்ன அனுப்புவார்.. பாவம்!

      நன்றி DD.

      நீக்கு
  14. அலுவலக அனுபவம் - ஸ்வாரஸ்யம். பல சமயங்களில் இப்படி மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் நபர்கள் எங்கள் அலுவலக்த்திலும் உண்டு!

    அனுஷ் - ஆஹா.... :)

    நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. அலுவலகங்களில் இதுமாதிரி நிறைய அனுபவங்கள் கிடைக்கும்!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  15. டைரெக்டர் விசய்ம் அருமை...ராமதாஸ் ஜெயந்தி உதாரணம் மிக மிக அருமை (புன்னகை தானே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரமணி ஸார். புன்னகையேதான்! பொருந்தாப் பாடல் கொண்ட காட்சி.

      நீக்கு
  16. நீண்ட இடைவெளிக்குப்.....நெருங்கிய உறவில் அபலச் சாவு இறந்தவர் அனைவருக்கும் உதவும் ஒருவர் பத்து வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். சிறிது கோபத்தில் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டான் சற்று மூளை சரிஇல்லாத ஒருவன்.
    அலுவலக அனுபவம் ஜோக்ஸ் அனைத்தும் ஹா...ஹா...

    பதிலளிநீக்கு
  17. காலைல 4 1/2க்கு எழுந்தவன் இப்போதான் தளத்துக்கு வர நேரம் கிடைத்தது.

    வியாழன் பதிவு ரொம்பவும் நல்லா இருந்தது என்று சொல்வதே சாதாரணமாத்தான் இருக்கு.

    அலுவலக அனுபவம் - ஹாஹா.

    இன்றைக்கு கவிதை மிஸ்ஸிங். உடனே ஒரு கவிதை எழுத முனைந்தேன், ஆனால் கவிதை படம் கொண்டுவந்தேன் என்று ஜொள்ளவேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. காணோமே என்று பார்த்தேன். இன்னும் துரை செல்வராஜு ஸாரைக் காணோம்.

      கவிதை... பழசு எதையாவது சேர்த்திருக்கலாமோ!

      நீக்கு
  18. பண்ருட்டியாருக்குப் பாவம் அப்போது தெரிந்திருக்குமா... கிடைத்த கட்சிகளிலெல்லாம் எதிர்காலத்தில் பயணம் செய்யப்போகிறோமே...இப்போது எதற்கு பேருந்தை முன்னிட்டு காங்கிரஸிடம் வம்பை விலைகொடுத்து வாங்கவேண்டும் என்று?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்ழூட்டியார் ஆரம்ப காலங்களில் திறமையானவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். பாவம் பின்னாட்களில்...

      நீக்கு
  19. நகைச்சுவைகள் -எளிய ஆனால் சிரிப்பை வரவழைப்பவை. யார் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை.

    பாம்பைப் பற்றிய தகவல் - வேஸ்ட் என்பது என் எண்ணம். பாம்பைப் பார்த்தாலே எந்தப் பக்கம் ஓடலாம் என நினைக்கும் மனதிடம், இரு இது ஆண் பாம்பா, பெண் பாம்பா என்று ஆராய்ச்சி பண்ணுகிறேன் என்றா சொல்ல முடியும்? நேற்றுத்தான் முதன் முதலாக பெண் பாம்பு பிரசவிப்பதை (குட்டிகள் போடுவதை) தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்தப் பாம்பு நிச்சயம் பெண் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

    பாம்பு ஒன்றுதானா, குழந்தை பிறந்ததும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லும் உயிரினம்? வேறு என்ன உயிரினம் அப்படிச் செய்கிறது? (இது நேற்று தொலைக்காட்சி பார்த்தபோது மனதில் உதித்த கேள்வி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாம்பு பற்றி நீங்கள் சொல்லி இருப்பதைதான் நானும் பேஸ்புக்கில் சொல்லி இருந்தேன்!

      அடுத்த பாராவில் உள்ள கேள்வி புதனுக்கானதா?!!

      நீக்கு
    2. பாம்புகள் முட்டைதானே இடும்? குட்டிகள் ஈனும் பாம்புகள் எங்கே பார்த்தீர்கள் ?

      நீக்கு
    3. // நேற்றுத்தான் முதன் முதலாக பெண் பாம்பு பிரசவிப்பதை (குட்டிகள் போடுவதை) தொலைக்காட்சியில் பார்த்தேன்.// !!!

      நீக்கு
    4. நானும் நினைச்சேன். ஏனெனில் நம்ம தோட்டத்தில் முட்டைகளைப் பார்த்த நினைவு. சட்டைகளும் உரித்துப் போடப்பட்டிருக்கும். அதெல்லாம் தொடவேண்டாம்னு நம்மவர் சொல்லுவார்.

      நீக்கு
  20. ராமதாஸ்-ஜெயந்தி - உண்மையாச் சொல்றேன்.... எனக்கு மனதில் தோன்றியது பாமக டாக்டர் இராமதாஸும், ஜெயந்தி நடராஜனும்தான். பிறகுதான் நடிக நடிகை என்று மனதில் உதித்தது. இருவரையும் பார்த்த நினைவு இல்லை.

    பதிலளிநீக்கு
  21. என்னுடைய டைரக்டர் அடிக்கடி என் ரூமிற்கு  வருவார். என்னுடைய 50 வயதுக்கு மேல் மதியம் உண்ட களைப்பு தீர ஒரு 15  நிமிடம் இருக்கையில் அமர்ந்தவாறே உறங்குவது எனது வழக்கம். அது அவருக்கு தெரிந்தாலும் ஒன்றும் ஆக்சன் எடுத்ததில்லை. 

    மண்டையாட்டல் எனும் பதப்பிரயோகத்திற்கு பதில் தலையாட்டல் எழுதியிருக்கலாம். 

    பஸ்களை தேசிய மயமாக்கவில்லை. பஸ் ரூட்டுகளைத்தான் தேசிய மயமாக்கினர். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... திருத்தத்துக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      பஸ் ரூட்டுகளைதான்... சரிதான். உண்மை.

      நன்றி ஸார்.

      நீக்கு
  22. //சட்டையை எடுத்து தலைகீழாக மாட்டிக்கொண்டு ராமதாஸிடமிருந்து தப்பிக்க நினைக்கும் ஜெயந்தி போல பதற, //

    ஜெயந்தி "ஆணை இட்டேன் நெருங்காதே" என்று பாடுவாரே!

    சிரிப்பாக இருந்தாலும் புலி வருது கதை போல் ஆச்சு.

    நேயர் விருப்பம் நன்றாக இருக்கிறது.

    //அதுசரி.. இந்த ஆராய்ச்சி முடியும்வரை அது நம்மை விட்டு வைக்கணுமே!//

    அதானே!

    சிரிக்க வைத்தன இரண்டு சிரிப்பு துணுக்கு.

    பதிலளிநீக்கு
  23. சிரிக்க வைத்தன இரண்டு சிரிப்பு துணுக்குகளும்.

    பதிலளிநீக்கு
  24. அலுவலக நிகழ்வுகள் இதழ்களை விரிக்க வைக்கின்றன எல்லமே ரசிக்க வைப்பவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னர் அலுவலக அனுபவங்கள் ஒரு தொடர் போல நிறையவே எழுதி இருக்கிறேன் ஜி எம் பி ஸார்.

      நீக்கு
  25. அலுவலக அனுபவம் அருமை :).

    சுவாரஸ்யமான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராமலக்‌ஷ்மி... நீங்கள் ஏதோ யூகித்து வைத்திருப்பதாய் சென்ற வாரம் சொல்லி இருந்தீர்கள். சரியாக இருந்ததா?

      நீக்கு
    2. சற்றும் சரியல்ல :). என்ன யூகித்தேன் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்:).

      நீக்கு
    3. அதைத் தெரிந்துகொள்ளத்தானே கேட்டேன்!

      நீக்கு
  26. Net pack முடிந்து விட்டது...
    மதியம் வேலை முடிந்து இப்போ தான் வந்தேன்...

    சமையல் முடித்து விட்டு வருகிறேன்.. அதற்குள் முதல் சாமம் கடந்து விடும்...

    பதிலளிநீக்கு
  27. துணுக்குகள் அருமையோ அருமை! அந்த அலுவலக அலம்பல்......டிடி/ஜேடியும் உள்ளுக்குள் நகைத்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்துப் பாராட்டி இருப்பதற்கு நன்றி பரமசிவம் ஸார்.

      நீக்கு
  28. நகைச்சுவைத் துணுக்குகள் இனிமை..
    என்றும் பசுமை...

    பதிலளிநீக்கு
  29. //அந்த ரணகளத்திலும் சிறு கிளுகிளுப்பு..//

    ஆகா!...

    பதிலளிநீக்கு
  30. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா முதல்வரானார். அவர் காலத்தில் தான் பேருந்து வழித்தடங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன. அப்பொழுது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் கலைஞர். பஸ் முதலாளிகள் நீதிமன்றத்தை அணுகிய பொழுது நாங்கள் பேருந்துகளை தேசியமயமாக்கவில்லை. வழித்தடங்களைத் தான் தேசியமயமாக்கியிருக்கிறோம் என்று அண்ணா சொன்னார். 75 கிலோமீட்டருக்கு மேலாக தனியார் பேருந்துகளுக்கு வழித்தட அனுமதி இல்லை என்றே சட்டம் வரையறுக்கப்பட்டது. அதற்குள்ளாக தனியார் பேருந்துகள் இயக்கிக் கொள்ளலாம்.

    சென்னை நகரத்து பஸ் போக்குவரத்தை தனியார் கம்பெனிகளிடமிருந்து காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொண்டது என்பது அடிப்படையிலேயே தவறான வாதம். அண்ணா செய்தது வழித்தடங்களையே தேசியமயமாக்கியது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி எப்பொழுது இதைச் செய்தது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  31. சோழன் உங்கள் தோழன்,
    பல்லவன் அவன் நல்லவன் என்றெல்லாம் கயிறு விட்டுக்கொண்டு திமூகா அரசு போக்கு வரத்துக் கழகங்களைத் தொடங்குவதற்கு முன்பே மாநிலத் தலைநகரில் இருந்து மாவட்டத் தலைநகர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து என்று பேருந்துகள் இயக்கப்பட்டது தெரியும்... விரைவுப் பேருந்தில் ஏறி தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்துக்கு வந்து இறங்கும் போது ரொம்பப் பெருமையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  32. அரசு சார்பில் பேருந்துகளை இயக்குவது என்பது வேறு; வழித்தடங்களை அரசுடைமையாக்குவது என்பது வேறு. இயல்பாகவே கான்கிரஸ் வேட்பாளர்கள் மிட்டா மிராசுதாரர்கள். பஸ் முதலாளிகள். தியேட்டர் ஓனர்கள். எளியவர்களை இவர்களுக்கு எதிராக களமிறக்கிய திமுக-வின் எழுச்சி என்பது தமிழக அரசியலில் அசாதாரணமானது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!