செவ்வாய், 20 ஜூலை, 2021

கோபாலய்யங்கார் மனைவி - மறக்கவியலா சிறுகதை - அப்பாதுரை

 

கோபாலய்யங்கார் மனைவி

     டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தமது மனைவி மீனாட்சியுடன் தஞ்சைக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. ஊரெல்லாம் பரபரப்பு. ஒரே பேச்சு. கோபாலய்யங்கார் இடைச்சியைக் கல்யாணம் செய்து கொண்டார் என்பதே. எல்லாம் கிசுகிசு என்ற பேச்சு. நேரில் பேச முடியுமா? சிலர் "போயும் போயும் இடைச்சியா அகப்பட்டாள்!" என்று பேசிக் கொண்டார்கள். "யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார்" என்று சிலர் அபிப்பிராயப் பட்டார்கள். பியூன்களுக்கு அய்யங்கார் என்றால் இளக்காரம். அவர் முதுகுப்புறம் சிரிப்பார்கள்.

இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரிய சந்தர்ப்பம் இல்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஒரு கிருஸ்தவ உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பரிசாரகன் சொல்லிக் கொள்ளாமல் ஓடி விட்ட படியால் ஒரு நாள் மீனாட்சி தன் குலாசாரப்படி சமைத்தாள். லவங்கப்பட்டை பெருஞ்சீரகம் இத்தியாதி பொருள்களுடன் தன் கைப்பாகமாக மிகுந்த ஜாக்கிரதையுடன் வைத்திருந்தாள்.

கோபாலய்யங்கார் குடிகாரர் என்றாலும் மாமிச பட்சணியல்ல. மீனாளின் கண்களைப் பார்த்துக் கொண்டு இரண்டு கவளம் வாயில் போட்டார். அவ்வளவுதான். குழம்பின் வாடை மாமிச உணவின் பாகம் என்ற நினைப்பை ஏற்படுத்தியதால் குடலைப் பிடுங்கியது போல் ஓங்கரித்து வாந்தி எடுத்தார். மீனாள் பதறித் தன் கணவன் தலையைத் தாங்கினாள்.

கோபாலய்யங்கார் போஜனப் பிரியர். எனவே பசி காதலை வென்றது. அவளை உதறித் தள்ளி விட்டு வெளியே சென்று சேவகனைக் கூப்பிட்டு, பிராமண ஹோட்டலில் இருந்து சாப்பாடு தருவித்தார். மூன்று பொறியல், தேங்காய்த்துருவல் மிதந்த வாழைக்காய்க்கூட்டு, வாழைத்தண்டு பச்சடி, பொறித்த அப்பளம், வடை, குல்கந்து, பூசணிக்காய் சாம்பார், தக்காளி பருப்பு ரசம், தயிருடன் போஜனமான பிறகுதான் கோபாலய்யங்காருக்குத் தமது காதல் திரும்பியது. "மீனா" என்று கூப்பிட்டார்.

"சாமீ" என்று எழுந்தாள் மூலையில் உட்கார்ந்திருந்த காதலி. அவள் கண்களில் இரண்டு துளிகள் அவர்களிருவருக்கும் இடையே இருக்கும் அகழியை எடுத்துக் காண்பித்தன. மீனாட்சி பணிப்பெண். அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் கோபாலய்யங்காரை வைக்கவில்லை. தனது தெய்வம் என்ற ஸ்தானத்தில், அதாவது தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடத்தில் தன்னை மறந்த பாசம், லயம் பிறந்ததே கிடையாது.

"அப்படிக் கூப்பிடாதே என்று உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன்? கண்ணா, இப்படி வா! என்ன மீனா! ஏன் இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?" என்றார்.

"கறி இல்லிங்களே, இப்படித்தான் எங்க வீட்டிலே பருப்புக் கொளம்பு வைப்பாங்க" என்றாள்.

"அதை அப்பொழுதே சொல்லி இருக்கக் கூடாதா? ஹோட்டலில் சாப்பாடு எடுத்துவரச் சொன்னால் போகிறது. அது கிடக்கட்டும், இப்படி வா!". அவளை ஆரத்தழுவி தமது மடிமீது இருத்தி முத்தங்களைச் சொரிந்தார். மீனாள் செயலற்ற பாவை போல் இடங்கொடுத்தாள். கணவன் கலெக்டர் என்ற பயம். அவர் இஷ்டம் போல் இருக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட பயம்.

"என்ன மீனா! நீ ஒரு முத்தமிடு"

மீனாள் தயங்கினாள். ஒரு பயந்த முத்தம் கோபாலய்யங்காரின் கன்னத்தை ஸ்பரிசித்தது. யோசித்தார். "என்ன மீனா, இன்னும் பயமா? உன் பயத்தைப் போக்குகிறேன் பார். இந்த மருந்தைக் குடி" என்று ஒரு கிளாசைக் கொடுத்தார்.

குடித்தாள். சிறிது இனிப்பும் காரமும் தெரிந்தது. மறு நிமிஷம் உடல் பூராவாகவும் ஏதோ ஒன்று பரவுவது போல் பட்டது.

"என்னமாக இருக்கிறது?"

"கொஞ்சம் இனிச்சுக்கிட்டு காரமா இருந்துச்சு. என்னமோ மாதிரியா இருக்குதே?...நல்லாத்தான் இருக்குது"

அவளும் வாலிபப் பெண்தானே? ஒயின் உதவியுடன் அன்று சிறிது சிறிதாகப் பயத்தைக் குறைத்தாள். அன்று அவளுக்குக் கோபாலய்யங்காரின் மீது ஏற்பட்ட மோகம் வாலிபத்தின் கூறு. குடித்த திராட்சையின் சாறு. கோபாலய்யங்கார் மீனா தன்னைக் காதலிப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.

மறு நாள் கோபாலய்யங்கார் ஒரு பிராமணப் பரிசாரகனை நியமித்தார். சாப்பாட்டுப் பிரச்னை ஒருவாறு முடிந்ததும் கோபாலய்யங்கார் தமது கலெக்டர் தொழிலையும் காதல் கனவையும் அனுபவிக்க முயன்றார். கலெக்டர் வேலை பரிச்சயமானது தான். ஆனால் காதல்? மீனாளுக்கு பயமும் கோபாலய்யங்கார் பயிற்சி செய்வித்த மருந்தினால் அவர் மீது மோகமும் தான் இருந்து வந்தன.

     ஒருநாள் மாலை. கோபாலய்யங்கார் ஆபீசிலிருந்து வந்து தமது ஆங்கில வேஷத்தைக் களைந்து கொண்டிருந்தார். அப்பொழுது மீனாள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அய்யங்கார் உடையலங்காரம் செய்வதைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு பிரேமை. ஆச்சரியம். கோபாலய்யங்கார் மீனாளிடமிருந்து தன்னிச்சையான ஒரு முத்தத்தை எதிர்பார்த்தார். கிடைக்காததால் ஏமாற்றமாகவிருந்தது.

"மீனா! என் பேரில் உனக்குக் காதல் இருக்கிறதா?" என்றார்.

மீனாவுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது தயங்கினாள். "அப்படின்னா?"
கோபாலய்யங்காருடைய ஏமாற்றம் சிறு கோபமாக மாறியது. "என் பேரில் பிரியமில்லையா?".

"என்ன சா.. என்னாங்க அப்புடிச் சொல்லுறிய? உங்கமேல பிரியமில்லாமலா?" என்று சிரித்தாள் மீனாள்.

"வந்து இவ்வளவு நேரமாக ஒரு முத்தமாவது நீயாகத் தரவில்லையே!"

"எங்க ஜாதியிலே அது கிடையாது" என்றாள்.

கோபாலய்யங்காருக்கு சுருக்கென்று தைத்தது. ஒரு பொம்மைக்கு காதலுயிர் எழுப்பப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்.

     மீனாளுக்கு இந்தச்சைவச் சாப்பாட்டுத் திட்டம் பிடிக்கவில்லை. தான் பணிப்பெண்ணாக இருந்த பொழுது கிடைத்த இதே பிராமண உணவு, இப்போது வெறுப்பைத் தந்தது அவளுக்கு வியப்பாக இருந்தது.

 தகப்பனார் வீட்டுச் சமையலை எண்ணி ஏங்க ஆரம்பித்தாள். தனக்குத் தானே சமைத்துக்கொள்ள கோபாலய்யங்காரிடம் அனுமதி கேட்கவும் பயம். வீட்டினுள் இருந்து கண்ணீர் விடுவாள்.

இதை எப்படியோ குறிப்பால் உணர்ந்து கொண்ட அனுபவம் உள்ள ஆபீஸ் பியூன் கிழவன் ஒரு நாள் ரகசியமாக மாமிச உணவு தயாரித்து வந்து அவளுக்குக் கொடுத்தான். ரகசியம் கேட்டை விளைக்கும் என்று உணர்ந்து மீனாளுக்கு ஒரு தந்திரம் கற்பித்தான். அய்யங்கார் குடி போதையிலிருக்கும் போது சிறிது சிறிதாக மாமிச உணவைப் பழக்கப்படுத்த வழி சொல்லிக்கொடுத்தான்.

இப்படி மீனாள் பிராமணப் பெண் ஆவது போய் கோபாலய்யங்கார் இடையனானார்.

     கோபாலய்யங்கார் மாமிசப் பட்சணியான பிறகு, மீனாள் உண்மையில் கிரகலட்சுமி ஆனாள். காலம் அவர்களுக்குச் சிட்டாகப் பறந்தது. மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரி ஆனாள். கோபாலய்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார். இப்பொழுது அவர்கள் தென்னாற்காடு ஜில்லாவிலே இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியே. இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால், கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.

"ஏ! பாப்பான்!" என்று மீனாள் கொஞ்சுவாள்.

"என்னடி எடச்சிறுக்கி!" என்று கோபாலய்யங்கார் காதலுரை பகருவார்.
இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள்.

**

     மேலே தந்திருப்பது புதுமைப்பித்தன் எழுதி 1934ல் வெளிவந்த கதை. தமிழ்க்கதையை என் பாணியில் சொல்லக்கூடாதென்று அசோகமித்திரன் கதையைச் சொன்ன அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

 புதுமைப்பித்தன் கதையை நிறைய சுருக்கியிருக்கிறேன், ஒன்றிரண்டு சொற்களை மாற்றியிருக்கிறேன், மற்றபடி அவர் நடை. அவர் கதை. புதுமைப்பித்தனின் கதையைப் படித்தவர்கள் என் சுருக்கத்தில் குறை இருந்தால் என்னை மன்னிக்கும்படி தாழ்ந்து வேண்டிக்கொள்கிறேன்.

இந்தக் கதைக்கு, கதாசிரியர் புதுமைபித்தன் எழுதிய முன்குறிப்பு:
பாரதியார் தமது சந்திரிகை நாவலிலே, கோபால அய்யங்காருக்கும் வீரேசலிங்கம் பந்தலு வீட்டுப் பணிப்பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு 'கண்டதும் காதல்' என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ என்னவோ? மனிதன், 'காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே' அனலை விழுங்கலாம். புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை.

     புதுமைப்பித்தனின் இந்தக் கதை மறக்க முடியாத சிறுகதையானதற்கு சில காரணங்கள் சொல்வேன். முதலில் இது பாரதியார் எடுத்துக் கொடுத்த கதை. பாரதியார் 'சந்திரிகையின் கதை' என்று ஒரு சமூக புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய நாவலை எழுதி முடிக்குமுன் மறைந்து போனார். "நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்" என்று வரியை முடிக்காத குறையாக எழுதி வைத்து இறந்து போனார் பாரதி என்பதைப் படிக்கையில் கதையை எழுதும்போது அவசரமாகத் திருவல்லிக்கேணி கோவில் போகும் நினைவு வந்து எழுந்து போனாரோ என்ற எண்ணம் தோன்றும். இந்தக் கதைக்கும் அவருடைய மரணத்துக்கும் தொடர்பு இருப்பது போன்ற உணர்வு இலேசாக அச்சமூட்டும். புதுமைப்பித்தன் பாரதியார் கதையின் பாத்திரங்களை வைத்து இரண்டாம் பாகம் போல் இக்கதையை எழுதினார்.

 புதுமைப்பித்தனின் எண்ண ஓட்டமும் மகாகவியின் எண்ணங்களைக் கிண்டல் செய்யும் பாவனையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பாரதியார் எடுத்தாண்ட விதவைமணம், கலப்புமணம் போன்றவற்றை ஒரு படி மேலே எடுத்துச்செல்லும் பாவனையில் அது ஒவ்வாது என்று மறைவாகச் சொல்கிறாரோ என்ற இலக்கிய மற்றும் சமூக அடையாள அலசல்களுக்கு புதுமைப்பித்தன் தந்த அடித்தளம் இந்தக்கதை. சாதி வேறுபாட்டைப் புறக்கணிக்கத் தூண்டும் புரட்சி எழுத்தை முன்வைத்தார் முண்டாசுக்கவி. புதுமைப்பித்தனோ சாதி வேறுபாட்டில் புதைந்திருக்கும் இயலாமையையும் தோல்வியையும் தன் கோணத்தில் எழுதி வைத்தார்.      என் இளம் வயதில் இலக்கியம் என்ற அர்த்தமில்லாத படிமத்தின் பிம்பங்களாக இது போன்ற எழுத்துக்களை நிறைய விவாதித்திருக்கிறேன். அந்நாட்களில் அதுவும் சென்னைப் பெண்கள் கல்லூரிகளில் இந்த விவாதங்கள் நடந்தால் நிறைய பக்கபலன்கள் கிடைக்க வாய்ப்பிருந்ததால் தேவையில்லாமல் இலக்கியம் பேசுவோம்.
இலக்கியம் பற்றிய புதுமைபித்தனின் விளக்கம்: "இலக்கியம், மன அவசத்தில் தோன்றி புறவுலகின் அடிமுடியை நாட முயலும் ஒரு பிரபஞ்சம்".

இதைப் படித்த நாளிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். புரிந்தால் தானே?

     நான் படித்த மறக்கவியலாத சிறுகதை #5.

29 கருத்துகள்:

  1. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்..

    குறள் நெறி ஓங்குக...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க
    இறைவன் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. சட்டென்று தூக்கிப் போடவைக்கும் எழுத்து நடை!!
    வித்தியாசமான எழுத்து.
    கவி பாரதி ஆரம்பித்துப் புதுமைப் பித்தன் முடித்தாரா?

    எனக்கு இந்த எழுத்து பழக்கம் இல்லை.
    அதனால் அதிசயமாக இருக்கிறது.
    நடைமுறையில் சாத்தியமானதோ.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதித்த ஸ்ரீராமுக்கும், பகிர்ந்து கொண்ட அப்பாதுரை ஜிக்கும் மிக மிக நன்றி.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. புதுமைப்பித்தனின் வீச்சு எப்போதுமே அபாரம்!. மூலத்தை படிக்க ஆவல் வருகிறது. எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  7. புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய நாவலை எழுதி முடிக்குமுன் மறைந்து போனார். "நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்" என்று வரியை முடிக்காத குறையாக எழுதி வைத்து இறந்து போனார் பாரதி என்பதைப் படிக்கையில் கதையை எழுதும்போது அவசரமாகத் திருவல்லிக்கேணி கோவில் போகும் நினைவு வந்து எழுந்து போனாரோ என்ற எண்ணம் தோன்றும். இந்தக் கதைக்கும் அவருடைய மரணத்துக்கும் தொடர்பு இருப்பது போன்ற உணர்வு இலேசாக அச்சமூட்டும்./////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////அதிர்வுகள் கொடுக்கும் வரிகள். நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  8. இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரிய சந்தர்ப்பம் இல்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஒரு கிருஸ்தவ உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பரிசாரகன் சொல்லிக் கொள்ளாமல் ஓடி விட்ட படியால் ஒரு நாள் மீனாட்சி தன் குலாசாரப்படி சமைத்தாள். லவங்கப்பட்டை பெருஞ்சீரகம் இத்தியாதி பொருள்களுடன் தன் கைப்பாகமாக மிகுந்த ஜாக்கிரதையுடன் வைத்திருந்தாள்.////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


    படிக்கப் படிக்க சிரிப்பே வந்தது. மீண்டும் நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து தொற்றுக் குறைந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. எங்கேயோ படிச்சிருக்கேனே என நினைச்சுண்டே படிச்சேன். கடைசியில் தான் புரிந்தது. அப்பாதுரை பாணியும் அநாயாசம். பாரதியைப் புதுமைப் பித்தன் கிண்டல் செய்திருக்கார் என்பதே அப்பாதுரை எழுதி இருப்பதைப் படித்துத் தான் புரிந்து கொண்டேன். சந்திரிகையின் கதை முடியலை என்னும் வருத்தம் எனக்கும் உண்டு. ஒரு முறை புதுமைப்பித்தனின் மூலக்கதையையும் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. பகிர்ந்து கொண்ட அப்பாதுரைக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட விதத்திற்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. நான் சந்தித்த ஒரு பெண், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்," இந்த மாதிரி திருமணங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் மற்றவர் வழிக்குச் மாற வேண்டும்" என்று கூறியது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  13. நல்ல கதையா இருக்கே... அப்படியே இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  14. மிகவும் கனமான அழுத்தமான எழுத்துகள்...

    இருவரும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    நல்லதொரு எழுத்து நடையுடன் கூடிய கதை. கலப்பு மணங்களில் ஒருவர் அனைத்தையும் விட்டுத் தந்தால்தான் வாழ்க்கை சுமூகமாகும் என்பதை புரிய வைக்கும் கதை. மற்றும் நிறைவான எழுத்துக்களில், நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! எல்லோரும் நலமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  17. அருமையான கதை! பாரதியாரின் பரந்த மனப்பான்மையும் , அவருடைய மதசார்பற்ற சிந்தனையும் சரியானதே. ஒரு கடவுளை போல, காக்கை, குருவியிலிருந்து, மனிதர்கள் அனைவரையும் சமமாக பாவித்தார். அவர் சொல்ல வந்ததை புரிந்துகொள்ளுகின்ற தகுதி தான் மக்களுக்கு இல்லாமல் போயிற்று. அவர் சொல்ல வந்த சரிசமம் எங்கே போயிற்று? சட்டத்தில் செய்த ஒரு பிழையால் இன்று நன்றாக படித்தும், நிறைய மதிப்பெண் பெற்றும் எத்தனை பேர் தனக்கு தகுதியான வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறைந்த மதிப்பெண் பெற்றும், தனக்கு தகுதியில்லாத வேலையில் எத்தனை பேர்? அரசு இயந்திரம் எப்படி நன்றாக இயங்கும்? குடியின் பிடியில் சிக்கி தள்ளாடியவன் போல முடங்கித்தான் போகும்.
    என்னைப் பொருத்தவரை அவரவர் ஜாதி , அவரவர்க்கு. கலப்பு மணத்தால் எத்தனை தொல்லை. இடைச்சி , இடைச்சியாகவே தனக்கு பிடித்ததை சாப்பிடலாம். ஒரு பிராமணரை அல்லவா மாற்றிவிட்டாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தான் பாவம். புதுமைப் பித்தனின் கிண்டல் நடையில் அமைந்த கதையை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமொருமித்தல் இருக்கட்டும், காதலுக்கு அடிப்படை சாப்பாடு என்ற கருத்தில் எழுதப்பட்ட நையாண்டிக் கதை என்றே இதை நினைக்கிறேன். (அதுவும் பிராமணன் போஜனப்பிரியன் என்ற வசனம் வேறே உண்டு). தவிர, சாதி வேற்றுமை பார்க்கக் கூடாது என்ற கருத்தையே பாரதியும் புதுமைபித்தனும் முன் வைத்தார்கள் என்று நினைக்கிறேன்.

      புபியின் கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதையில் அவருடைய சாதி வேற்றுமை பற்றிய பார்வை புலப்படும்.

      நீக்கு
  18. பாரதி நிறைய கற்பனைகளிலேயே வாழ்ந்து மறைந்தும் விட்டார். நடைமுறை சாத்தியங்களை அவர் யோசிக்கவில்லை. எத்தனை பேசினாலும் கலப்புத் திருமணங்களில் நிறைய இடர்பாடுகள் தான். முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில். எங்கேயோ படித்திருக்கிறோமோ இந்தக் கதையை என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இப்போது நினைவிற்கு வருகிறது.
    சில மாதங்களுக்கு முன் பாரதி எழுதிய இந்தக் கதையை முடித்து வையுங்கள் என்று ஒரு இணையதளம் அல்லது பேஸ்புக் எங்கேயோ பார்த்த நினைவு. சந்திரிகை கதையை முழுக்கக் கொடுத்திருந்தார்கள்.
    புதுமைப் பித்தனின் கதையில் நிறைய இடங்களில் சிரித்துவிட்டேன். பாரதிக்குத் தெரிந்திராத நடமுறைச் சிக்கல்களை புதுமைப் பித்தன் அறிந்து வைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  19. இப்போதுதான் இந்தக் கதையைப் படிக்கிறேன்.

    மணவாழ்வுக்கு மிக முக்கியமானது சமையல் என்று நான் நினைக்கிறேன். உணவுப் பழக்கத்தில் ஒத்த கருத்து இல்லையென்றால் அது சிக்கல். மற்றபடி காதல் எல்லாம் பிறகுதான்.

    நைஜீரியாவில் லோக்கல் வேலைப் பெண்களை வைத்துக்கொள்ளும் (சமையல் வேலை, வீட்டு வேலைகளுக்கு) பேச்சிலர்கள், முதலில் நம் சமையலை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துவிடுவார்களாம்.

    பதிலளிநீக்கு
  20. ..சென்னைப் பெண்கள் கல்லூரிகளில் இந்த விவாதங்கள் நடந்தால் நிறைய பக்கபலன்கள் கிடைக்க வாய்ப்பிருந்ததால், தேவையில்லாமல் இலக்கியம் பேசுவோம்.
    இலக்கியம் பற்றிய புதுமைபித்தனின் விளக்கம்: "இலக்கியம், மன அவசத்தில் தோன்றி புறவுலகின் அடிமுடியை நாட முயலும் ஒரு பிரபஞ்சம்".//

    இளம் வயதில் போதை தந்திருக்கிறது உங்களுக்கு இந்த இலக்கியம்! இப்போது போதை தெளிந்துவிட்டது போலிருக்கிறது.. ஆனாலும் போதை தந்த அந்த விஷயத்தின் ரகஸ்யக் கூறுகள் இன்னும் புரிந்தபாடில்லை!

    பதிலளிநீக்கு
  21. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மூலக் கதையை ப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. கலப்பு திருமணங்களால் ஏற்படும் சில கஷ்டங்கள், விட்டுக் கொடுத்தல், சகிப்பு தன்மை, தியாகம் தேவை என்பதை கதை சொல்கிறது.
    புதுமை பித்தன் கதை படித்த நினைவு இல்லை. பகிர்வுக்கு நன்றி.
    சிவசங்கரி வேற்று மததத்தை சேர்ந்த இருவர் திரு௳ணம் செய்து கொண்டு இரு வீட்டாரிடம் படும் அவதிகளை சொல்லி இருப்பார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!