வியாழன், 14 ஜூலை, 2022

கம்முனு இருந்த அம்மிணி

 "அதென்ன பேரு அம்மணி?  நீங்க கோயமுத்தூரு பக்கமோ?"

'வேலைக்கு வரவா' என்று இந்த வீடு தேடி வந்து அவள் கேட்ட முதல் நாளே புனிதாவின் கேள்வி!

"இல்லீங்கம்மா...  நாங்க ஆந்திரா பக்கம்"

"அப்போ உன் பேரு அம்மிணியோ?"

வேலைக்கு சேர்ந்து விட்டாலும் அவ்வப்போது இந்த பெயர் ஆராய்ச்சி தொடரும்!

"தெரிலீங்கம்மா..  எல்லோரும் எப்படி கூப்பிடறாங்களோ அப்படி.."

"அப்பாம்மா வச்ச பேர்தானே?"

புனிதா களைந்த அரிசியை வெங்கலப்பானையில் சல் சல் என கொட்டியபடியே கேட்டாள்.

"அப்படிதான் இருக்கும்மா..."

"அதென்ன அவ்வளவு விட்டேத்தியா சொல்றே அம்ணி?"  அரிசி களைந்த பாத்திரத்தை அவளிடம் நீட்டியபடியே புனிதா அவளை பார்த்து விட்டு சிப்பில் தட்டை வைத்து பானையை மூடினாள்.  அவள் பேச்சு வழக்கில் இவள் அம்மணியுமில்லை, அம்மிணியுமில்லை..  அம்ணி!

"கூப்புடறதுக்கு ஒரு பேரு..  அவ்வளவுதானே புனிதாம்மா?" சிரித்தபடியே தேய்த்த பாத்திரங்களை வலைக்கூடையில் கவிழ்த்துவிட்டு, இந்தப் பாத்திரத்தை வாங்கி குழாயில் நீட்டினாள் அம்மிணி.

அது புதிதாக உருவாகிக் கொண்டிருந்த நகர்.  நிறைய அபார்ட்மெண்ட்ஸ் இருந்தாலும், பல வீடுகள் காலியாக இருக்க, இருக்கும் பல்வேறு அபார்ட்மென்ட்களில் வெவ்வேறு ஆட்கள் வேலைக்கு அமர்ந்திருக்க, இவளும் தன் பங்குக்கு அங்கங்கு அலைந்து வேலை கேட்டு, தேடித் சேர்ந்திருந்தாள்.

வரும் வருமானம் அவள் குடும்பத்துக்கு போதவில்லை.  கணவன், மனைவி இருவருமே படிக்காதவர்கள்.  இரு குழந்தைகளையும் அங்கிருந்த சுமாரான பள்ளி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

முதலில் கேட்டபோது புனிதா வேலைக்கு ஆள் தேவை இல்லை என்றுதான் சொன்னாள்.  அப்பார்ட்மெண்ட்டைப் பெருக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்த அம்மிணிக்கு ஒரு தை வெள்ளிக்கிழமைக்கு புடைவை, ரவிக்கை மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தாள்.  அப்புறம் புனிதாவின் மாமியாரின் நினைவு நாளுக்கு அம்மிணிக்கு  நூறு ரூபாய் கொடுத்து சாப்பாட்டுக்கு என்று தந்தாள்.  அப்போதெல்லாம் இவள் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டு கடைசியில் இரக்கப்பட்டு அவளை வேலையில் வைத்தாள்.

இவள் நிலையைப் பார்த்து கிட்டத்தட்ட இவளுக்கும் ஒரு பங்கு என்றே சமையலில் 'ஒரு கை' கூட போட்டு சமைப்பாள் புனிதா.   வீட்டாருடனும், இவளுடனும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பாள்.

இப்படி கலகலவென இருக்கும் வீட்டில் அன்று அம்மிணியின் முகம் சோபை இழந்திருந்தது.  மௌனமாக ஏதோ சிந்தனையுடன் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தவள் புனிதாவின் கேள்விகளுக்கு சுரத்தில்லாமல் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

புனிதா புதிரானாள்!  காரணம் கேட்டாள்.  அம்மிணி சோகப் புன்னகை சிந்தி, வேலைகளைத் தொடர, மீண்டும் கேட்டாள் புனிதா. 

"முந்தானைல முன்னூறு ரூபாய் முடிஞ்சு வச்சிருந்தேன்மா...   எங்க விட்டேன்னு தெரில..  காணோம்...."  சொல்லும்போதே அம்மிணியின் கண்களில் கண்ணீர் வந்தது.

"என்னாச்சு...   எங்க விட்டே?  எப்போ கடைசியாய்ப் பார்த்தே?  இங்க நம்ம வீட்டில பெருக்கின இடமெல்லாம் பார்த்தியா?"

"இல்லம்மா..   மாமி வூட்ல தேய்க்கறதுக்கு முன்னாடியே எங்கியோ வுட்டுட்டேன் போலமா..   அங்கன உள்ள நுழையும்போதே காணும்"

".............................................................."  முன்னூறு ரூபாய் என்பது அம்மிணிக்கு எவ்வளவு பெரிய தொகை என்று புனிதா அறிவாள்.

" நாலு நாளா யார் கிட்டயும் பேச முடியல...  ஃபோன் ரீசார்ஜ் செய்யணும்..   அதுக்கு நூறு ரூவா..  மாமியாருக்கு மாத்திரை வாங்கணும்..  அதுக்கு நூறு ரூபாக்கு மேல ஆகும்..  பொண்ணு வேற இஸ்கூலுக்கு நூறு ரூவா கேட்டுக்கிட்டிருந்தது..    பாயம்மா கிட்ட மூணு நாளா கேட்டு இன்னிக்கிதாம்மா கொடுத்தாங்க.."

வேலை முடிந்து கிளம்பும்போது ஓரளவுக்கு எதிர்பார்த்தபடியே புனிதா இவளிடம் முன்னூறு ரூபாயை நீட்டினாள்.  சற்றுத் தயங்கி விட்டு வாங்கி கொண்டாள் அம்மிணி.  ஏனென்றால் முன்னர் ஒருமுறை ஃபோனுக்கு டாப் அப்  செய்ய 'சம்பளத்தில் கழித்துக் கொள்ளச் சொல்லி' நூறு ரூபாய் வாங்கியதையும், இன்னொரு சந்தர்ப்பத்தில் பையனுக்கு பிறந்த நாள் என்று நூறு ரூபாய்  வாங்கியதையும் அம்மிணி நினைவுபடுத்தியும் புன்னகையுடன் புனிதா சம்பளத்தில் பிடித்தம் செய்யவில்லை.  அந்த சங்கடம் இப்போது அதிகம் தெரிந்தது அம்மிணியிடம்.  இவள் கேட்காமலேயே இன்னொரு முறையும்  ஃபோனுக்கு தானாய் டாப் அப் செய்திருந்தாள் புனிதா.

அன்று மாலை அம்மிணி வீடு திரும்புவதற்குள் அவள் தொலைத்த முன்னூறு ரூபாய் அவளுக்கு கிடைத்து விட்டது.    இவள் வேலை முடிந்து வந்த பிறகு அந்த அப்பார்ட்மெண்ட்டை கூட்டி சுத்தம் செய்ய வந்த அவள் கணவன் ராமு பணத்தைக் கண்டெடுத்து இவளிடம் சொல்ல, அது தான் தொலைத்த பணம்தான் என்பதை ராமுவிடம் சொன்னாள்.  புனிதா பணம் கொடுத்தத்தைச் சொல்லவில்லை.

மறுநாள் புனிதாவிடம் சொல்லி இருக்கலாம்.  அவள் தந்த பணத்தைத் திருப்பித் தந்திருக்கலாம்.  ஆனால் அம்மிணி கொஞ்சம் தயங்கி விட்டாள்.  அவசரச் செலவுக்கா பஞ்சம்?  பாழும் தேவை அவளை உண்மையை மறைக்க வைத்தது.  நியாயத்தை மறக்க வைத்தது.

எல்லோரும் செய்யும் சில பொதுவான சோதனைகளைக் கூட புனிதா இவளிடம் செய்ததில்லை.  ஐம்பதோ, நூறோ பணத்தை மறந்தது மாதிரி வைத்து சோதிப்பது, கிளம்பும்போது இவள் பையில் ஏதாவது எடுத்துச் செல்கிறாளா என்று நைஸாக நோட்டம் விடுவது எல்லாம் புனிதாவிடம் வழக்கம் கிடையாது.

மாறாக, இவளுக்கு அவள் பழைய புடைவைகள் என்ற பெயரில் ஏராளமான நல்ல புடைவைகள் கொடுத்திருக்கிறாள்.  இரண்டு மூன்று வீட்டில் தொடர்ந்து வேலை செய்து ரொம்ப களைப்புடன் வரும் சில சமயங்களில் ஒரு தட்டில் சோற்றைப்போட்டு சாம்பார் ஊற்றி, பொரியலோ, வடகமோ போட்டு சாப்பிட வைத்திருக்கிறாள்.

அதுமட்டுமல்லாமல் யாரும் சொல்லாத ஒன்றையும் சொல்லி இருந்தாள் புனிதா.  அது, 'ஞாயிற்றுக் கிழமைகளில் நீ இங்கு வரவேண்டாம்.  உனக்கு லீவு!'
'இல்லைம்மா..   வந்துடறேன்மா..' என்று பதறிய அம்மிணியைக் கையமர்த்தி "கவலைப்படாதே..   சம்பளத்தில் பிடிக்க மாட்டேன்"

எனவே அவளிடம் சொல்லாதது அம்மிணிக்கு உறுத்தியது.  சகஜமாக பேச முடியவில்லை.  பேசாமல் இருந்தாலும் மறுபடியும் தனக்கு ஏதாவது பணப்பிரச்னையோ என்று அவள் எண்ணிக் கொள்வாளோ என்கிற கவலையும் எழுந்தது.

"அம்ணி...  நேற்று நீ தேய்த்த பாத்திரத்தில் கசடு அப்படியே இருக்கு பாரு...  என்ன தேய்க்கறே...   தேச்ச இடத்தை சரியா க்ளீன் பண்றதே இல்லை நீ...  அப்புறம் இந்த சுவரைக் கொஞ்சம் க்ளீன் பண்ண பத்து நாளா சொல்லிக்கிட்டிருக்கேன்...   மண்டைய ஆட்டறே..   பேசாம போயிடறே....."  புனிதாவின் குரலில் குறை தெரிந்தது.

அவ்வப்போது இதெல்லாம் புனிதா சொல்வதுதான் என்றாலும் இன்று ஏனோ அது உறுத்தியது அம்மிணிக்கு.   அந்த மாதம் சம்பளம் கொடுத்தபோது புனிதா ஒன்றும் கேட்கவில்லை.  பிடித்தம் செய்யாமல் முழு சம்பளம்தான் கொடுத்தாள்.  இவளும் ஒன்றும் சொல்லவில்லை.

இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன.  அம்மிணியால் இயல்பாக இருக்க முடியவில்லை.  இடையில் சிறு சிறு தேவைகள் வந்தபோது வழக்கமான உரிமையுடன் புனிதாவிடம் கேட்கவோ, இல்லை, அதைவிட அந்த கஷ்டங்களைப் பற்றி புனிதாவிடம் பேசக்கூட முடியவில்லை அம்மிணியால்.

புனிதா இயல்பாக இருப்பது போலதான் தோன்றினாலும் இல்லை என்பது போலவும் தோன்றியது அம்மிணிக்கு.  உறுத்தல் அதிகமாகிக் கொண்டே வந்தது.

இடையில் அவர்கள் வாங்கியிருந்த கேக்கும், சிறு ஸ்நாக்ஸும் இவளிடம் தந்தனுப்பியதை அம்மிணியின் மகனும், மகளும் ரசித்துச் சாப்பிட்டதைப் பற்றி மறுநாள் புனிதா விசாரித்தபோது லேசாகச் சொல்லப்போக, புனிதாவின் மகன் இரண்டு மூன்று தின்பண்டங்கள் கால் கால் கிலோ வாங்கி குழந்தைகளுக்காக இவளிடம் தந்து அனுப்பச் சொல்லி புனிதாவிடம் கொடுத்து விட்டான்.

புனிதாவுக்கோ இவள் மௌனம் வேறு வகையான சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.  இரண்டு வருடங்களாய் வேலை செய்கிறாள்.  சம்பள உயர்வு என்று ஏதும் நினைக்கிறாளோ..    மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் அவர்கள் நினைப்பது போல நினைத்துக் கொள்வது புனிதாவுக்கு வழக்கம்தான்! 

எனவே வரவர அவளிடமும் சற்று மாறுதல் தென்பட ஆரம்பித்தது.

அம்மிணியின் வேலைகளில் திருத்தங்கள் சொல்வதற்கு தயக்கமாகவும் இருந்தது, சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.  அப்படி தான் சொல்வதால்தான் அம்மிணி உம்மிணியாக இருக்கிறாள் என்றும் தோன்றியது புனிதாவுக்கு.

பெரும்பாலும் அம்மிணியின் வேலைகள் சுத்தமாக இருக்கும் என்பதும், அவளிடம் நேர்மைக்கு குறைவில்லை, எதிலும் கைநீட்டும் பழக்கம் அவளிடம் இல்லை என்பதும் புனிதாவுக்கு அம்மிணியிடம் பிடித்த விஷயங்கள்.

தான் சமீபத்தில் ஏதாவது கெட்டுப் போன பண்டத்தைக் கொடுத்து விட்டோமோ, இல்லை, வேறு ஏதாவதோ என்று புனிதாவும் குழம்பித்தான் போனாள்.

அம்மிணி சங்கடத்தில் உச்சியில் தவித்தாள்.  அந்த வீட்டுக்குள் இருப்பது முள்ளின்மேல் இருப்பது போல இருந்தது.

மூன்றாவது மாதம் சம்பளம் வாங்கும் நாள் நெருங்கி கொண்டிருந்தது.  அம்மிணி தீர்மானித்தாள்.  மனதுக்குள் இருமுறை ஒத்திகை பார்த்துக்கொண்ட பின் வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்துடன் புனிதாவிடம் "ஆ...ங்..   அம்மா சொல்ல மறந்துட்டேனேமா..  சொல்லணும்னு நினைப்பேன்..  அப்புறம் ரண்டு நாள் கழிச்சு வீட்டுல இருக்கும்போது ஞாபகத்துக்கு வரும்.. .."

கொதித்துக் கொண்டிருந்த குழம்பில் பச்சை வாசனை போய் விட்டதா, உப்பு சரியாய் இருக்கிறதா என்று கரண்டியில் கொஞ்சம் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த புனிதா இவள் பக்கம் திரும்பிப் பார்த்தாள்..

அவள் தன் பக்கம் திரும்பியதும் அம்மிணியின் வார்த்தைகள் தடைப்பட்டன.  தேய்த்த பாத்திரத்தை குழாயில் காட்டி கழுவதில் கவனமாவதுபோல அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டவள்,  "முன்னூறு ரூபாய் காணோம் என்று சொன்னேனில்லையாம்மா..   அது கிடைச்சுட்டுது..."

சொல்லி விடலாம் என்று முடிவெடுத்தாளே தவிர சரியாக திட்டமிடவில்லை.  எனவே இப்போது தன்னை அறியாமல் பணம் எப்போது கிடைத்தது என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது.   பாயம்மாவும் இவளும் எங்கே சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள் என்று மனதுக்குள் எண்ணம் ஓட, "அங்கே பாயம்மா வீட்டு வெளில ஷூ ராக்குக்கு பின்னால விழுந்துருக்கு..  ஒரு வாரம் கழிச்சு  எடுத்தேன்..."

அவள் முதலில் சொல்லி இடைவெளி விடவுமே ஏதோ சொல்ல வந்த புனிதா அம்மிணி தொடரவும் சொல்ல வந்தததை நிறுத்திய இவளை ஏறிட்டாள்.

"ஒரு வாரமா?"

"ஒரு வாரமோ நாலஞ்சு நாளோ கழிச்சும்மா..."

"ஓஹோ...  " என்று மட்டும் சொன்ன புனிதா தன் வேலைகளில் கவனமானாள்.  

'இவள் ஏன் என்னிடம் இதை மறைக்க நினைத்திருந்திருக்கிறாள்?' என்று அவளுள் எண்ணம் ஓட, ஒருமுறை அம்மிணியைத் திரும்பிப் பார்த்தாள்.

சரியாக அதே சமயம் அவளும் இவளை பார்க்க, சட்டென திரும்பிக் கொண்டாள் புனிதா.  இருவருக்குமே எதிராளியின் மன ஓட்டம் ஓரளவு புரிந்தது போலிருந்தது.

அப்புறம் ஒன்றும் பேசவில்லை.

கிளம்பும் சமயம் அம்மிணி 'தயக்கமாக ,"ஏன்மா..  முன்னயே சொல்லலீனு கோவமா?  தப்பா நினைச்சுட்டீங்களா?"

"இல்ல அம்ணி..  நேத்து வரைக்கும், ஏன், இன்னிக்கி கூட நான் அப்படி நினைக்கல.. அதுல தப்பாவும் நினைக்கல...   ஆனா...  இன்னிக்கி...   இன்னிக்கி உன் மனசுல என்னன்னு யோசிச்சேன்.."

"ஏன்மா..."  

"பணம் கிடைத்தது எனக்கு அது கிடைத்த அன்னிக்கே தெரியும்.  கண்டு எடுத்ததும் நீயில்லை, உன் புருஷன் ராமு.    அன்னிக்கி அங்க பெருக்கிட்டு நம்ம பில்டிங் வந்தப்ப ராமுவே என்கிட்டே சொல்லிடிச்சு..  நீ ஏன் இப்போ இப்படி சொல்றேன்னு .நினச்சேன்".

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

படித்ததன் பகிர்வு..

நம் முன்னோர்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தினமும் குளத்தில் குளிக்கும் போதும் குளித்து முடித்த பின்னும், ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரைக்கு வெளியே போட்டு விடுவார்கள்.
இப்படி செய்வது, குளத்தினை தினமும் தூர்வாருவதற்கு சமம். குளிக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வெளியேற்றும் போது, குளம் எப்போதும் ஆழமாகவே இருக்கும். நீர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்தளவிற்கு அப்போது பொறுப்பான சமூகம் இருந்தது.

அதேபோல் ஆற்றிலோ, குளத்திலோ சிறுநீர் கழிப்பதோ, மலம் கழிப்பதோ, மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வது போன்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். அது குடிநீர், குளிக்கும் நீர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நீர் நிலைகளை தெய்வமாக மதித்து அருகில் கோயில் கட்டினார்கள். 'மரங்களுக்கு சந்தனம் பூசி, ஆடை கட்டி அதனை வழிபட்டு, அது தெய்வம், வெட்டாதே,' என அறிவுறுத்தினார்கள். எல்லாவற்றையும் நாம் தவறாக புரிந்து கொண்டோம். இன்று ஆறுகள், குளங்கள் எல்லாமே கழிவுகளின் சங்கமம் ஆகி விட்டன. பிளாஸ்டிக் குப்பை அடைத்து பூமித்தாய் பிளாஸ்டிக் போர்வையால் போர்த்தப்பட்டு விட்டாள். ஒரு சொட்டு தண்ணீர் கூட பூமிக்குள் இறங்காதோ என்ற நிலைதான் இன்றைய சூழ்நிலை. ஆற்றிலோ, வாய்க்காலிலோ, குளத்திலோ தண்ணீர் தேங்க முடியாத அளவிற்கு நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டோம்.

================================================================================================================


மறுபடியும் கொஞ்சம் ஹேமா சுவிஸ் கவிதைகள்..

மௌனங்கள்
மொழி உடைத்துக்
காத்திருக்கின்றன.
நீ...
விட்டுப் போன
வார்த்தைகளோடு !


நகர மறுக்கிறது
நிமிடங்களும் நொடிகளும்.
நீ வரும் வரை
என்னோடு விரதமாம் அவைகளும்.
வந்துவிடு !


நீ ...
தராமலேயே போனாயோ
தந்து வராமல் போனதோ
உன் முத்தங்கள்
எனக்குக் கிடைக்கவே இல்லை ! 
 

====================================================================================================


அற்புதமான உயிரினங்களில் ஒன்றாகத் தேனீக்கள் கருதப்படுகின்றன. அநேக வனங்களில் காணப்படும் இந்தச் சிறிய வகைப் பூச்சிகள் தேனை உட்கொண்டு வாழ்கின்றன. தேனீக்கள் மலர்களில் அடங்கியிருக்கும் தேனை எடுத்து அதன் கூட்டில் சேமித்துக்கொள்கின்றன.
தேன் கூட்டை நாம் உற்றுப் பார்த்தால் அது அறுகோண வடிவிலாளான கண்ணறைகளால் அமைக்கப்பட்டுக் காட்சியளிப்பதை அறியலாம். ஏன் அறுகோணச் செதில்களைத் தேனீக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? இதற்கான விடையை அறிய முயல்வோம்.
அறுகோண வடிவம் கணித அடிப்படையில் முக்கியமானது. கொடுத்த இடத்தில் இடைவெளி இல்லாமலும் ஒன்றின் மேல் மற்றொன்று குவியாமலும் இருக்க வேண்டுமானால் அதற்குச் சில வடிவங்கள் உள்ளன. முக்கோணம், சதுரம் மற்றும் அறுகோண வடிவங்களே அவை. மற்ற வடிவங்களில் ஒன்று இடைவெளி தோன்றும் அல்லது ஒன்றின் மீது மற்றொன்று குவிந்து காணப்படும்.
தேன் அதிக அடர்த்தியும், பாகு நிலையும், ஒட்டும் தன்மையும் கொண்ட பொருளாக விளங்குகிறது. ஆகையால் அதைத் தேக்கி வைக்கத் தகுந்த கொள்ளளவைக் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதிக அடர்த்தியும், பாகு நிலையும் கொண்ட தேனை எந்த வடிவுடைய பொருளைக் கொண்டு பாதுகாக்க முடியும்?
மேற்கூறிய மூன்று வடிவங்களில் அறுகோண வடிவமே அதிகக் கொள்ளளவு கொண்டது. கொடுத்த மேற்பரப்பில் அதிகக் கொள்ளளவைக் கொண்டிருக்கும் உருவமாகக் கோளம் அமையும் என்பது கணித உண்மை. எனவே கொடுத்த பொருளை (தேனை) அதிகக் கொள்ளளவில் அடைக்க அறுகோணக் கண்ணறைகளாலான கோளம் போன்ற வடிவ உருவம் கொண்ட தேன்கூடு மிகவும் உதவிகரமானது. இதில் அறுகோண அமைப்பு தேனைக் கீழே சிந்தாமல் பாதுகாக்கவும், கோளம் போன்ற அமைப்பு அதிக அளவில் தேனைச் சுமக்கவும் உதவுகின்றன. இவ்வமைப்பை உடைய உண்மையான தேன்கூட்டை மேற்கண்ட படத்தில் காணலாம். இரு அரிய கணிதப் பண்புகளைக் கொண்ட அறுகோண வடிவைத்தான் தங்களது வாழ்வாதாரமான தேனைப் பாதுகாக்கத் தேனீக்கள் பயன்படுத்துகின்றன.
தேனீக்கள் இந்த வடிவை எப்படி முடிவுசெய்தன? அனுபவத்தின் அடிப்படையில் இருக்கலாம். வெவ்வேறு முயற்சிகளில் ஆகச் சிறந்த முயற்சியை அனுபவத்தில் கண்டுகொண்டு அதையே தமக்கான வடிவமாக முடிவுசெய்திருக்கலாம்.
அல்லது தேனீக்கள் கணிதம்கூட அறிந்திருக்கலாம். யார் கண்டது!
- தி இந்து ஜூன் 17, 2014 -

========================================================================

ரசித்த ரசனையான புகைப்படம்... நன்றி இணையம்


======================================================================================

பழைய பத்திரிகைகள்....



====================================================================================

பழைய பேஸ்புக் பகிர்வு ஒன்று...! KGG யின் கமெண்ட் பார்க்கவும்!




===========================================================================================================


எதெதற்கு எல்லாம் சந்தோஷப் பட வேண்டி இருக்கிறது!


லாஸ்வேகாஸ் பற்றி பாடம் இருக்குமா?


அட முயற்சித்துப் பார்த்துடுவோமே....


செல்லமே....

115 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம்

    பதிலளிநீக்கு
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்.. நன்றி..

      நீக்கு
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இன்று பிறந்தநாள் காணும் சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நாளும் ஆரோக்கியத்தோடு வளமாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அன்புடன் வாழ்த்து வழங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

      நீக்கு
    3. அன்பின் கௌதமன் அவர்களுக்கும் நன்றி.. நன்றி..

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. அம்மிணி கதை நிஜமா அல்லது கதையா அல்லது நிஜக்கதையா? (நிஜம் + கற்பனை)

    முதல் கவிதை மட்டும் தான் கவிதையாக  தெரிகிறது. அடுத்த இரண்டும் வார்த்தைகளை மடக்கிப்போட்ட வாக்கியங்களாக தெரிகின்றன.  

    புகைப்படம் ஏரிக்கரையில் எடுத்தது போல் உள்ளது. அலைகள் இல்லை. composition is top!.

    ஜோக்குகள் சாதாரணம். கொஞ்சம் வடிவேலு சாயலும் உள்ளது (ஓசி டிக்கெட்- (ஜாமீன்), தெரு விளக்கு )

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை 100% கற்பனை. கவிதை ஹேமா உபயம். படம் கூகுள் உபயம்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    படித்ததின் பகிர்வு உண்மை... நம் முன்னோர்களின் இயற்கை பூர்வமான செயல்களை நாம் இன்றைய கால கட்டத்தில் இழிவாக பேசி, புறக்கணித்து விட்டதை எண்ணி மன வருத்தந்தான் மேலோங்குகிறது. என்ன செய்வது? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

    கவிதைகள் அருமை. மனதின் ஆழங்களில் இருந்து உதயமான எழுத்துக்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. //அப்புறம் புனிதாவின் மாமியாரின் நினைவு நாளுக்கு அம்மிணிக்கு நூறு ரூபாய் கொடுத்து// இதே மாமியாருக்கு மருந்து வாங்க நூறு ரூபாய்! //ஃபோன் ரீசார்ஜ் செய்யணும்.. அதுக்கு நூறு ரூவா.. மாமியாருக்கு மாத்திரை வாங்கணும்.// திருத்துங்க ஶ்ரீராம். நானெல்லாம் க.வி.எ. ஊத்திண்டு பார்ப்பேனாக்கும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவு நாள் எஜமானியின் மாமியார், மருந்து பணியாளரின் மாமியாருக்கு! அவை பழைய சம்பவங்கள். ஆனாலும் அப்புறமா வந்து என்ன குழப்பம்னு பார்க்கிறேன்!

      நீக்கு
    2. ஓஓ, சரி, நான் தான் சரியாப் புரிஞ்சுக்கலை. தப்பாய்ப் புரிஞ்சுண்டேன். :( மன்னிக்கவும். அவசரம்!

      நீக்கு
    3. குழப்பம் எதுவும் இல்லை. ஸ்ரீராம் சொல்லியிருப்பது சரி. புனிதாவின் மாமியார் நினைவுநாள் அன்று, ஆமணிக்கு அன்பளிப்பாக (!) புனிதா 100 ரூபாய் கொடுக்கிறார். ஆமணி சொல்லும்போது 300 ரூபாய்க்கு செலவு : " 100 - ஃபோன் ரீ சார்ஜ் 100 - ஆமணியின் மாமியாருக்கு மருந்து வாங்க; 100 ஆமணி பெண்ணின் ஸ்கூல் செலவு " ( கீ சா : - அ வ சி ? )

      நீக்கு
    4. குழப்பம் தீர்ந்தால் சரி. நன்றி கேஜிஜி.

      நீக்கு
    5. குழப்பம் தீர்ந்து இதுக்கு பதிலும் கொடுத்திருந்தேன். காலம்பரத் தெரிஞ்சது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போக் காணோம். மெயில் பாக்ஸில் பார்க்கணும்.

      நீக்கு
    6. //( கீ சா : - அ வ சி ? )// ஹெஹெஹெஹெ! இல்லையே!

      நீக்கு
    7. காணாமல் போன கமெண்ட்டுகளை

      மறுபடியும் இங்கு கொண்டு வந்து சேர்த்தது

      உங்கள்......

      நீக்கு
  8. அம்மிணியின் கதை படிச்சுட்டு அதிர்ந்து போனேன். ஆறு மாசம் முன்னால் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு கருத்து வேற்றுமை. ஆனால் பண விஷயம் மட்டும் அல்ல. அதிலிருந்து எனக்குக் கொஞ்சம் அவங்களிடம் மனவேறுபாடு ஏற்பட்டதோடு அல்லாமல் பழகுவதையும் குறைத்துக் கொண்டுவிட்டேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னைக்குக் கூட அவங்க என்னோடு சகஜமாகப் பேச முயற்சி செய்து கொண்டிருந்தாங்க. என் மனசு இந்தக் கதை(நிகழ்வு?) யையே நினைத்துக் கொண்டிருந்தது. என்னால் முடியறதில்லை. :(

      நீக்கு
    2. சரியாய்ப் போயிருக்குமோ என்று எண்ணும் நேரம் இந்த கதை வந்து கெடுத்து விட்டதோ!

      நீக்கு
    3. அப்படி எல்லாம் இல்லை ஶ்ரீராம். என் மனசில் ஒதுக்கம் வந்துவிட்டது என்றால் நான் ஒதுங்கியே இருப்பேன். வீட்டு வேலைக்கு வேறு ஆளைப் போய்த் தேடி மாற்றுவது என்பதெல்லாம் பிடிக்காது என்பதால் விட்டுட்டேன். பேசுவேன்/பேச மாட்டேன் என்பதே என்னோட நிலை.

      நீக்கு
    4. ஆமாம். மனதில் ஒன்று விழுந்து விட்டால் மாற்றுவது மாறுவது கஷ்டம்.

      நீக்கு
  9. இப்போவும் அவங்க தான் வேலைக்கு வராங்க! ஆனாலும் பழையபடி என்னால் பழகமுடியலை. :(

    பதிலளிநீக்கு
  10. ஹேமாவின் கவிதைகள், தேனீக்கள் பற்றிய விபரங்கள் (ஏற்கெனவே படிச்சாலும்) எல்லாம் அருமை. குலாலர்களுக்கெனத் தனிப் புத்தகம் வந்தது இன்னிக்குத் தான் தெரியும். மற்றவை பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். சுரங்கப்பாதை பற்றிய தகவலும் கேஜிஜியின் கருத்தும் இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா தளத்துக்கு நீங்க வந்திருக்கீங்களா? பார்த்த ஞாபகமே இல்லை!!

      நீக்கு
    2. இங்கே படிச்ச ஹேமாவின் கவிதைகள்!

      நீக்கு
    3. அதுதானே பார்த்தேன்.

      சுரங்கப்பாதை அப்புறம் இன்றைய நிலையில் என்ன ஆச்சுன்னு பார்க்கணும்.

      நீக்கு
  11. ரசித்த படத்தை மீண்டும் ரசித்தேன். குளத்திலிருந்து கைப்பிடி மண் எடுத்துப் போடுவது பற்றியும் படிச்சிருக்கேன். அந்தக்கால எழுத்தாளர் யாரோ எழுதினதுனு நினைக்கிறேன். வரேன். பின்னர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா குளத்திலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்துப் போடச் சொன்னது பரமாசாரியார் அவர்களா? அ.வ.சி. துரை சொன்னதும் தான் நினைவில் வருது.

      நீக்கு
    2. ​நான் நினைத்தேன். பிடி அரிசி திட்டம் போல இதுவும் அவர் சொன்னது என்று... சரிதானா என்று தயங்கினேன்.

      நீக்கு
  12. சகோதரர் துரை செல்வராஜுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உடல் நலம் சீராகி வீட்டிற்கு மருமகளும் கிடைக்கப் பெற்றுப் பேரன்கள்/பேத்திகளோடு மனஅமைதியுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. எப்படியோ அம்மணிக்கு மனசு இருந்து உறுத்தி இருப்பது நன்று...

    பதிலளிநீக்கு
  14. வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது...

    - ஔவையார்

    தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை - இவைகளோடு தேன் கூட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்...!

    பதிலளிநீக்கு
  15. சில குழப்பங்கள் நேர்மையான மனிதர்களையும் தவறு செய்யாமல் குற்றவாளிகள் ஆக்கி விடுவது உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. கடினமான சந்தர்ப்பங்கள்! நன்றி ஜி்

      நீக்கு
    2. உண்மை கில்லர்ஜி. நான் அனுபவிச்சிருக்கேன். அனுபவித்துக் கொண்டும் இருக்கேன். எதுவுமே செய்யாமல் "பலி ஆடு" போலக் குற்றவாளிக்கூண்டில் என்னை நிறுத்தினவங்க இன்னமும் வெளியே இறக்கலை! :( தப்பு/குற்றம் நடக்கலைனு தெரிஞ்சும்.

      நீக்கு
    3. எல்லோருமே அந்நிலையை ஒரு தரமாவது அனுபவித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  16. ஸ்ரீராம் ப்ளீஸ் உங்கள் கதைகளை செவ்வாய்ல போடுங்களேன். நீங்க உடனே அது கேவாபோக ...அதுல எப்படி எபி ஆசிரியர் என் கதை போட ன்னு கேட்டீங்கனா...அதுக்கு.....வாகேபோசொக அல்லது வாகேக....எபிஆக ன்னு தலைப்புல இடைல போட்டுக்கோங்க!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் கீதா? என்ன ஆச்சு? ஏன் அப்படிச் சொல்றீங்க?!

      நீக்கு
    2. சரி.. இனி முயற்சிக்கிறேன். எழுதி ரொம்ப நாளாய் வைத்திருந்தது.. இருக்கும் ஆபீஸ் நெருக்கடியான நேரசூழலில் இதை வைத்து இரண்டு வாரம் சமாளிக்கலாம் என்று தோன்றியது...

      நீக்கு
  17. இன்றைய கதம்பம் வழக்கம் போல அருமை..

    பதிலளிநீக்கு
  18. குளித்தபின் குளத்தில் இருந்து இரண்டு கை மண்ணெடுத்து கரையில் போடுவது தர்மம் என்று சொல்லியவர் காஞ்சி மகா பெரியவர் அவர்கள்..

    பதிலளிநீக்கு
  19. தர்மம் என்பதற்காக நடுக்குளத்தில் மூழ்கி மண் எல்லாம் எடுக்கப்படாது..

    சில அபிஷ்டுகள்
    அந்த மாதிரியும் செய்வார்கள் என்ற யோசனையின் விளைவு தான் குளங்கள் எல்லாம் காணாமல் போனது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணத்தை விடுத்து காரியத்தில் கவனமாயிருந்திருப்பார்கள்.

      நீக்கு
  20. // இன்னிக்கி... இன்னிக்கி உன் மனசுல என்னன்னு யோசிச்சேன்.. //

    எளிய, இனிய நடையில் கதை அருமை..

    பதிலளிநீக்கு
  21. // தேனீக்கள் இந்த வடிவை எப்படி முடிவு செய்தன? அனுபவத்தின் அடிப்படையில் இருக்கலாம்.. //

    இல்லாவிட்டால் வெள்ளைக்காரன் இசுக்கூல்.. ல படிச்சதால கூட இருக்கலாம்!..

    பதிலளிநீக்கு
  22. கதை அருமை.. ஆரம்பம், முடித்தவிதம் எல்லாம்

    பதிலளிநீக்கு
  23. கதை மிக அருமை ஸ்ரீராம்.....முடிவும் செம...இப்படி முடிப்பது எனக்குப் பிடித்த விஷயம்.

    யதார்த்தம். கொஞ்சம் உங்கள் அனுபவமோ என்றும் தோன்றியது. ஒரு வரி பாஸை நினைவுபடுத்தியது!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை கற்பனை. கேரக்டர்களில் அறிமுகமானவர்கள் தெரியும் வாய்ப்பு.

      நீக்கு
  24. படித்ததன் பகிர்வு..- டிட்டோ செய்கிறேன். அப்படியே வழி மொழிகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஹேமா அவர்களின் கவிதைகளை ரசித்தேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. தேனீக்கள் அதிசயமானவை! இயற்கையின் அற்புதத்தை விவரித்திட இயலாதுதான். இந்த உலகின் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு சிறப்பு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் கல்வித் தந்தையின் கல்லூரியிலும் படிக்காத இயற்கை இன்ஜினியர்கள்!

      நீக்கு
  27. அந்தக்காலப் பத்திரிகைகளின் பெயர்கள் ஈர்க்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் முதல் பகுதியான கதை அருமை. அந்த இருவரின் மனவோட்டத்தை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். முடிவையும் ரசித்தேன்.

    தேனீக்கள் பற்றிய செய்தியும் நன்றாக உள்ளது. படிக்கையில் ஏற்கனவே இதை எங்கோ படித்த நினைவும் வந்தது.

    ரசித்த புகைப்படம் ரசனையாக உள்ளது. ஜோக்ஸ் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. திரு. துரை செல்வராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    கதை இறுதியில் சுலபமாக முடிந்துள்ளது. அம்மணிக்கு உறுத்தியதே பெரிய விஷயம்.

    ஜோக்ஸ் 'செக்கோ ஸ்லோ வாகியா' செம சிரிப்பு.:)

    ஹேமாவின் கவிதை அசத்தல்.

    பல தகவல்களுடன் பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
  30. கதை நன்றாக இருக்கிறது.
    //பாழும் தேவை அவளை உண்மையை மறைக்க வைத்தது. நியாயத்தை மறக்க வைத்தது.//

    புனிதா உதவிகள் செய்து வருகிறார். சம்பளதினத்தில் பிடித்தம் செய்வதும் இல்லை. சொல்லி இருக்கலாம் அம்மிணி. பணம் கிடைத்தவிவரம் சொல்லி இருந்தால் மகிழ்ந்து இருப்பார் புனிதா.
    ராமு சொல்லி விட்டார் புனிதாவிடம் என்றால் மறு நாள் அம்மணியிடம் புனிதா கேட்டு இருக்கலாம். பணம் கிடைத்து விட்டதாமே என்று.

    உடனே சொல்லி இருந்தால் இந்த உறுத்தல், அம்மணிக்கு ஏற்பட்டு இருக்காது.
    மெளனம் நல்ல உறவை கெடுத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  31. மதுரை பக்கம் ஒரு கோயிலுக்கு போனோம். அங்கு ஆற்றிலிருந்து கைபிடி மண் எடுத்து போட்டு விட்டுதான் அங்கு இருக்கும் இறைவனை வணங்குவார்கள். அந்த மண் மலை போல காட்சி அளித்தது.
    முகநூலில் அதை பகிர்ந்தேன். அந்த ஊர் பேர் எல்லாம் தேடி பதிவு போட வேண்டும்.

    ஆற்று நீரை புனிதமாக கருதி அசுத்தம் செய்யக்கூடாது என்பார்கள்.

    கவிதை, தேனி பற்றிய செய்தி, நகைச்சுவை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடிப் பதிவிடுங்கள். அனைத்தையும் ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  32. சகோ துரை செல்வராஜூ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பிரர்த்தனைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நலமே வாழ்க..

      நீக்கு
  33. சாலைக்கு அடியில் இருக்கும் அந்த நீரோட்டம் பாலம் பகுதி இருந்திருக்கும் கண்டிப்பாக....வானொலி நிலையம் அருகில்தானே கூவம் ஆறு இருக்கிறது. பாருங்கள் நாம் எத்தனை நீர்த்தடங்களை அழித்து அதன் மேலேயே கட்டிடங்கள் கட்டியிருக்கோம் அப்ப ஏன் சென்னையில் வெள்ளம் வராது,? அது ஒரு வேளை பக்கின்ஹாம் கால்வாயின் வடிகால் வழியாக அப்போது இருந்திருக்கலாம். நான் பக்கிங்க்ஹாம் கால்வாய் பற்றி பதிவு போட்டிருந்தேன்.

    இதே பக்கிங்க்ஹாம் ஆந்திராவின் வட்லமுடி கிராமத்தின் அருகில் ஓடுகிறது எப்படி ஓடுகிற்து தெரியுமா!!! சுற்றி வயல்கள்...அழகாக ஓடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னர்கள் காலத்தில் இப்போதை விட அழகாக நீர் மேலாண்மை செய்திருந்திருக்கிறார்கள்.

      நீக்கு
  34. கௌ அண்ணாவின் பதில் வாசித்துச் சிரித்துவிட்டேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஜோக்ஸ் ரசித்தேன் - ஆனா பாருங்க ஸ்ரீராம் மனைவிகளைக் கலாய்த்துதான் பெரும்பாலும் ஜோக்ஸ். ஏன் கணவர்களைக் கலாய்த்து ஜோக்ஸ் வருவதே இல்லையோ!!! நெல்லை இந்தக் கருத்தைப் பார்த்து வருவார் பாருங்க!!!

    இரண்டாவது - கடி!!! (இப்போ)

    கடைசி - புன்சிரிக்கவைத்தது!! பாயின்ட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணவனைக் கலாய்த்து அப்பவும் இப்பவும் நிறைய ஜோக்ஸ் உண்டு கீதா.. ஒரு உதாரணம் "உருளைக்கிழங்கை அடுப்பில போடுங்க"

      நீக்கு
  36. துரை அண்ணாவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள்வாழ்த்துகள்! உடல்நலம் என்றும் நலமுடன் மகிழ்வாகப் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பிரர்த்தனைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சகோ..

      நீக்கு
  37. கதை மிகவும் அருமை. Psychological thriller என்று கூட சொல்லலாம்.

    //அப்படி தான் சொல்வதால்தான் அம்மிணி உம்மிணியாக இருக்கிறாள் என்றும் தோன்றியது புனிதாவுக்கு.//
    அம்மிணி உம்மிணி - என்னே வார்த்தை ஜாலம். மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரசித்த என் வரி! மனம் மகிழ்கிறது. நன்றி.

      நீக்கு
  38. ரேவதி உடல்நிலை தேவலை என்றாலும் கணினியில் உட்காரக் கஷ்டமாக இருக்கும் என்கிறார். சோர்வு/அசதி இருக்கு என்றார். கணினியில் கவனம் செலுத்திப் பதிவுகள் படிக்கவும் கருத்துகள் சொல்லவும், பதிவுகள் எழுதவும் இன்னும் சில நாட்களாகலாம் என்றார். மற்றபடி அவர் மகள் குடும்பம் உடல்நலம் தேறி சிகாகோவுக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. பையர்களும் இவரும் இருக்கின்றனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல மறந்துட்டேன். அனைவரின் கனிவான விசாரிப்புக்கும் தன் நன்றியையும் தெரிவிக்கச் சொன்னார். விரைவில் அவர் பூரண உடல் நலம் பெற்றுப் பதிவுகளைப் பார்க்கவும், பகிரவும் ஆரம்பிப்பார் என நம்புவோம்.

      நீக்கு
    2. வல்லியம்மா அவர்கள் விரைவில் நலம் பெறுவதற்கு வேண்டுவோம்..

      நீக்கு
    3. வல்லிம்மா விரைந்து நலம்பெற பிரார்த்தனைகள்.  ஆர்வமாக சென்னை வந்தார்கள்.  அவர்கள் உற்சாகத்தைக் குறைக்கும் வகையில் உடம்பு படுத்துகிறது.

      நீக்கு
    4. ஆமாம் வல்லிம்மா விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்..

      கீதா

      நீக்கு
  39. ஸ்ரீராம்ஜி கதை மிக அருமை. ஒரு வீட்டில் நடப்பது கண் முன்னில் விரிகிறது. புனிதாவைப் போன்று எத்தனை பேர் நல்ல மனதுடையவர்களாக இருப்பார்கள்? எழுதியவிதம் மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  40. நீர்நிலைகள் எப்படிக் காக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கும் விஷயம் எவ்வளவு அருமையான கருத்து. இப்போதைய நிலை மிகவும் வேதனைக்குரியது.

    ஹேமா சுவிஸ் கவிதைகள் அருமை. முதலும் மூன்றாவதும் இன்னும் அருமை

    தேனீக்கள் அற்புதமான் உயிரினம்தான். எங்கள் தோட்டத்தில் தேனீ வளர்ப்பு செய்கிறோம். நல்ல தேன் கிடைக்கிறது.

    சென்னையின் பூமிக்கடியில் பாலம் இருந்ததா? ஆச்சரியமாக இருக்கிறது அதன் மீதா சாலையும் கட்டிடங்களும்?
    நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர் நிலைகளின் நிலை இன்னுமும் போகப்போக ம்சமாகலாம் சுயநல மக்களாலும், ஆட்சியாளர்களாலும்!  அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி ஜி.

      நீக்கு
  41. ஸ்ரீராம் நான் காலையில் போட்ட கருத்து மிஸ்ஸிங்க் ...

    பல வரிகளை ரசித்தேன் ரைமிங்க் வார்த்தைகள்...அதுவும் அந்த அம்மிணியின் மூட் "உம்".
    கதையை வாசித்து வரும் போதே அவள் கணவன் மூலம் புனிதாவிற்குத் தெரிந்திருக்கும் என்பது கொஞ்சம் ஊகிக்க முடிந்தது...

    இப்படியான் முடிவுகள் பிடிக்கும் என்று சொல்லியிருந்தேன் என்று நினைக்கிறேன் அதன் பின் சொன்ன கருத்து.....

    அத்தனை நாள் அம்மிணி உண்மையைச் சொல்லாமல் இருக்கிறோமெ என்ற குற்ற உணர்வில்

    கடைசி வரி நச்...அதன் பின் அம்மிணி ரொம்பவே குற்ற உணர்வில் சிக்கியிருப்பாள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புனிதா திட்டியிருந்தாலோ அல்லது கேள்வி கேட்டிருந்தாலோ அது வேறு விதமாகியிருந்திருக்கும். அந்த அமைதியான ஹேன்ட்லிங்க்தான்...முடிவு மறைமுகமாகப் பல சொல்கிறது.

      கீதா

      நீக்கு
    2. நன்றி கீதா.  ஸ்பாமில் வேறு எதுவும் கமெண்ட்ஸ் இல்லை.

      நீக்கு
  42. புனிதாவிற்கும் அம்மிணிக்கும் இடையே இருந்த நல்லதனத்திற்கு இடையில் கண்ணாடித் திரை விழுந்துவிட்டது. அம்மிணியும் மன்னிப்பு கேட்டிருக்கலாம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  43. பானுமதி வெங்கடேஸ்வரன்15 ஜூலை, 2022 அன்று AM 3:14

    கதை சிறப்பு! (இயல்பான உரையாடல்) கவிதையும். வழக்கமாக ஆ.வி யின் ஜோக்குகளைத்தான் பகிர்வீர்கள். இன்று குமுதம் ஜோக்குகள். சாவி.ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் அக்கரை சிரிப்பு என்று ஆங்கில பத்திரிகைகளில் வந்த வசனமில்லா கார்டூன்களை பகிர்ந்தார். கிடைத்தால் பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா.  'ஆ வியின் சிரிப்புகளே சிரிப்பு மற்றதெல்லாம் வெறுப்பு' என்றில்லை!  கையில் கிடைத்ததை பகிர்ந்தேன்...  அஷ்டே...  அக்கரைச் சிரிப்பு பார்த்த நினைவு இருக்கிறது.  சாவி தொகுப்பு என்னிடம் இருக்க வாய்ப்பு குறைவு..  நிர்வாண நகரம் இருக்கலாம்!  பார்க்கிறேன்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!