செவ்வாய், 26 ஜூலை, 2022

சிறுகதை : நடக்குமென்பார் - பானுமதி வெங்கடேஸ்வரன்

 நடக்குமென்பார்...

- பானுமதி வெங்கடேஸ்வரன் -


திருமணமாகி அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பொழுது பெண் பிறக்கவில்லையே என்று மனைவிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் பத்மநாபனுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்தான். மூன்று பெண்களுக்கு திருமணம் முடிக்க தான் பட்ட சிரமங்களை தன் மகன் பட வேண்டாமே? 

ஆனால் இருபத்தேழு வருடங்களில் காலம் மாறிப் போய் விடும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. மகன்கள் இருவரும் படித்தார்கள், வேலையும் கிடைத்தது. பெரியவருக்கு இருபத்தைந்து வயதான பொழுது ஜாதகத்தை மேட்ரிமோனியல் வெப் சைட்டில் பதிந்து விடலாம் என்று நினைத்த பொழுது அவன் ஒப்புக் கொள்ளவில்லை. இருபத்தேழில் பதிவு செய்தார்கள். அது தவறோ என்று இப்போது தோன்றுகிறது. 

விளையாட்டுப் போல இரண்டு வருடங்கள் ஓடி விட்டன, எதுவும் தகையவில்லை. இவர்களை அழைத்தவர்கள் குறைவாக இருந்தார்கள். இவர்கள் விரும்பி தொடர்பு கொண்ட பெண்கள் வீடுகளிலிருந்து தகவல் வரவில்லை. 

நண்பர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் பையன்களும், பெண்களும் வேலை பார்க்கும் இடத்தில் காதல் திருமணம் செய்து கொள்வதை கேள்விப்படும் பொழுது அப்படியாவது ஒன்று நடந்தால் பரவாயில்லையே என்று தோன்றியது. 

இந்த நேரத்தில் வீட்டிற்கு வடுமாங்காய் கொண்டு வந்த பெண் சும்மா இல்லாமல் மன குட்டையை குழப்பி விட்டு விட்டு சென்று விட்டாள். 

பத்மநாபன் வீட்டில் வேலை செய்யும் பெண் மாவடு போடுவீங்களாம்மா? என்று ராதாவிடம் கேட்டிருக்கிறாள்.

"ஏன் போடாம..? ரெண்டு வருஷமா போட முடியல.." என்றதும்

"எங்க வீட்டுக்கு பக்கத்துல நல்ல தோட்டத்து வடு கிடைக்கும். சொன்னா கொண்டு வந்து தருவாங்க" என்றவளிடம், "கொண்டுவரச் சொல்" என்று ஒப்புதல் அளித்ததால், மறுநாள் வேலைக்கு வந்த பொழுது தன்னுடன் நடு வயது பெண் ஒருத்தியை மும் அழைத்து வந்தாள். 

அவள் கொண்டு வந்த மாவடுவில் ராதா தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு, மிச்சமிருந்ததை அக்கம், பக்கத்தில் விற்று கொடுத்தாள். அது அவளுக்கு அதிக சந்தோஷத்தை தந்திருக்க வேண்டும். 

"ஒங் கையால் மொத போணிய பண்ணின, எல்லாம் வித்துப் போச்சு, கொஞ்சம் தண்ணி குடு.."

"ஜில்லு தண்ணியா? சாதா தண்ணியா?"

"ஜில்லுனே குடு.."

தண்ணீரை வாங்கிக் கொண்ட அந்தப்பெண் உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டாள். கண்களை மூடி, சன்னதம் வந்தது போல்," மகனுக்கு கல்யாணத்துக்கு பாக்குருயா..?"

"ஆமாம், ஆனா ஒண்ணும் அமைய மாட்டேங்குதே.."

"அமைஞ்சுடும்.., கல்யாணம் நெருங்கி வந்துட்டிருக்கு" என்றவள் தொடர்ந்து, "விவேக் யாரு..?" என்றாள்.

"என் பையன்தான்"

"அவருக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி விடும் "

அந்தப் பெண் தீர்மானமாக சொல்ல ராதாவுக்கு முகம் விழுந்து விட்டது. "அவனுக்காக..? அவனுக்கு மூத்தவன் இருக்கானே? அவனுக்கு தான் பெண் பார்த்துக் கிட்டிருக்கிறோம்.." சுரத்தில்லாத குரலில் கூறினாள்.

"விவேக்ங்குற தம்பிக்கு தான் பொண்ணு மாலையோட காத்துக்கிட்டிருக்கா.."

லோட்டாவில் மிச்சமிருந்த தண்ணீரை கொஞ்சம் கையில் ஊற்றி, முகத்தை துடைத்துக் கொண்டு, " நான் வரேம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கும், கவலைப்படாதீங்க.." என்று சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள். ராதாவுக்குதான் அழாத குறை. 

"விக்ரம் இருக்கும் போது அவனுக்கு ஆகாமல் அவன் தம்பிக்கு கல்யாணமா? அநியாயம் என்று புலம்பினாள். 

"இதுல அநியாயம் என்பதற்கு என்ன இருக்கு? அண்ணனுக்கு முன்னால் தம்பிக்கு கல்யாணம் நடப்பதெல்லாம் எப்பவோ வந்தாச்சு." என்று அவளை சமாதானப்படுத்தினாலும் பத்மநாபனுக்கும் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு அசௌகரியம் இருந்தது.

மாவடு விற்ற பெண் கூறியதை புறக்கணித்து தங்கள் வேலைகளை தொடர்ந்தனர். 

****

அன்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய மூத்தவன் விக்ரம், முகம் கழுவிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்ததும் அவனுக்கு காஃபி கலப்பதற்காக ராதா எழுந்து கொண்டாள்.

"காபியெல்லாம் வேண்டாம், உட்கார்" என்றவன் தன் லேப் டாப்பை திறந்து  தன் பெற்றோர்கள் பக்கம் திருப்பி, "இந்தப் பெண் எப்படி?" என்றதும் பத்மநாபனும், ராதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   

"நன்னாதான் இருக்கா?, யாரு?"

"இவ பேர் ஸ்வர்ணா, எம்.சி.ஏ. படிச்சுட்டு விவேக் கம்பெனியில்
ஒர்க் பண்றா. வயசு இருபத்தஞ்சு,ஒரு தம்பி சீஏ படிக்கிறான், என்ன...நம்ம ஜாதி கிடையாது...கன்னட பிராமின்"

ராதாவின் முகம் சலனமற்று போக, பத்மநாபன் ஒரு கலவையான உணர்ச்சிக்கு ஆளானார்.

"நீயே எல்லாத்தையும் மூடிவு பண்ணிட்ட..  நாங்க என்ன பண்ணனும்? ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வரணுமா?"

பத்மநாபன் கோபமாக கேட்க, "சே சே! அதெல்லாம் வேண்டாம்பா. நம்ம முறைப்படிதான் கல்யாணம். அவங்க வீட்டில் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க, அவங்க அம்மாக்கு ஹெல்த் இஷ்யூஸ் இருக்கு".

"அது வேறயா?  என்னவாம்?"

"ப்ரஸ்ட் கான்சர், ஆபரேஷன் பண்ணி க்யூர்ட்..பட் அவங்க கல்யாணத்தை சீக்கிரம் பண்ணிட்டா நல்லதுன்னு நினைக்கிறாங்க.." 

"சீக்கிரம்னா? நாளைக்கா?"

"கம் ஆன்..அவ்வளவு மோசம் இல்லை.. ஆறு மாசத்துக்குள்ள.."

"நாங்க பொண்ணை பார்க்க வேண்டாமா?" ராதா மெதுவாக தன் ஆவலை வெளியிட

"தாராளமா பார்க்கலாம்,ஆனா அங்க போயி நட்சத்திரம்,ஜாதகம்னு எதுவும் பேசக்கூடாது"

சற்று நேரம் மௌனமாக கழிந்தது. பிறகு ராதா,"விவேக் ஆஃபீஸில் வொர்க் பண்ணும் பெண்ணை நீ எப்படி புடிச்ச?" ராதா கேட்டாள்.

"மை காட்! நான் முதலில் தெளிவா சொல்லியிருக்கணும். நான் யாரையும் புடிக்கல, விவேக்கிற்காக நான் பேசினேன். ஸ்வர்ணா இஸ் விவேக்ஸ் லவர்"

"வாட்!!" 

*********

டெயில் பீஸ்:

இப்போதெல்லாம் ராதாவுக்கு "காலையிலிருந்து கையில் போட்டிருந்த மோதிரத்தை காணவில்லை, கிடைக்குமா?"

"ஆறு மாதமாக படுக்கையில் இருக்கும் மாமியார் எத்தனை நாட்கள் தாக்கு பிடிப்பார்?" போன்ற கேள்விகளுக்கு அருள். வாக்கு வழங்குவது அந்த மாவடு விற்ற பெண்தானாம்.

*******

33 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. எல்லா கதைகளிலும் கொஞ்சம் நிஜம் உண்டு. நன்றி.

      நீக்கு
    2. நிஜமின்றி அமையாது கதகு... ஐ மீன், கதை !

      நீக்கு
    3. அப்போ ஐப்பசி மாதம் எ பி ஆசிரியர் வீட்டில் டும் டும் அப்படித்தானே

      நீக்கு
    4. பானுமதி வெங்கடேஸ்வரன்26 ஜூலை, 2022 அன்று PM 5:36

      உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் ஜெயக்குமார் சார். நாம் எல்லோரும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

      நீக்கு
    5. ஏகாந்தன், உண்மைச் சம்பவங்களே கதையாக ஆகும். எல்லோரும் எழுதுவார்கள். ஆனால் நான் எழுதினால் மட்டும் பிரச்னை ஆகும். :( பல கதைகள் இந்தக் காரணத்திற்காகவே காத்திருக்கின்றன. என்னோட வலைப்பக்கமாவது வெளியிடணும். பார்க்கலாம். :)

      நீக்கு
    6. //..ஆனால் நான் எழுதினால் மட்டும் பிரச்னை ஆகும். :( பல கதைகள் இந்தக் காரணத்திற்காகவே காத்திருக்கின்றன.//

      நீங்கள் எழுதினால் ப்ரச்னையாகிவிடுமா! இதென்ன கூத்து! ஸ்ரீராமுக்கு அனுப்பித்தான் பாருங்களேன்...

      நீக்கு
  3. அந்த மாவடு பெண்ணை தேவகோட்டை பக்கம் அனுப்பி வையுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்26 ஜூலை, 2022 அன்று AM 9:06

      ஹாஹா! ஸ்ரீராம் உங்களுக்கு உதவக்கூடும்.‌ நன்றி சகோ!

      நீக்கு
  4. பானுமதி வெங்கடேஸ்வரன்26 ஜூலை, 2022 அன்று AM 7:23

    அனைவருக்கும் வணக்கம். என்னுடைய கதையா? நல்ல வேளையாக என்னுடைய பெயரில் வெளியாகியிருக்கிறது. பழக்க தோஷத்தில் பெயரில்லா என்று வரவில்லை:)))

    பதிலளிநீக்கு
  5. இளங்காலைப் பொழுதில் அன்பின் வணக்கங்களுடன் -

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  6. குட்டியூண்டு கதைக்குள் சுற்றியடிக்கும் சூறாவளி..

    அத்தி பூத்தாற்போல எபியில் கதை எழுதி அடித்து விளையாடி இருக்கின்றீர்கள்..

    கதையின் திருகு அருமை..

    பதிலளிநீக்கு
  7. பானுமதி வெங்கடேஸ்வரன்26 ஜூலை, 2022 அன்று AM 9:07

    ஆஹா! கவிதையாய் ஒரு கருத்து! நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரி

    கதை நன்றாக உள்ளது. இறுதியில் எதிர்பாராத திருப்பம். இனி மாவடு விற்கும் பெண்ணிற்கு குறி சொல்லும் வேலையும் எளிதாக வந்து இணைந்து கொண்டு விடும்.

    இந்த மாதிரி கதை ஒன்று சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் எழுதிய நினைவு வருகிறது. சில வீடுகளில் இப்படி நடப்பதுதான். இளையவனுக்கு பெண் வந்த யோகம் மூத்தவனுக்கும் கல்யாண சுபவேளை கூடி வரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாதிரி கதை ஒன்று சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் எழுதிய நினைவு// ஸ்ரீராம் எழுதிய ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து புனையப்பட்டதுதான் இந்த கதை. நன்றி கமலா.

      நீக்கு
  9. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்!
    அருமையான கதை! சிலர் போகிற போக்கில் சொல்வது நிஜமாகிவிடுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்27 ஜூலை, 2022 அன்று PM 6:31

      நன்றி காயத்ரி

      நீக்கு
  10. பல இடங்களிலும் நடக்கும் சம்பவம்தான் . நன்றாக சொல்லியுள்ளார்.

    மாவடு விற்கும் பெண் அறிந்த உண்மை ராதாவின் காதில் எட்டவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கு முதலில் பெண் வருகிறாள் என்பது பிரச்சினை இல்லை. கிடைத்தால் ஸரி. அம்மாதிரியான காலமிது.

      நீக்கு
    2. பானுமதி வெங்கடேஸ்வரன்26 ஜூலை, 2022 அன்று PM 5:44

      நன்றி மாதேவி.

      நீக்கு
    3. பானுமதி வெங்கடேஸ்வரன்26 ஜூலை, 2022 அன்று PM 5:47

      @காமாட்சி மாமி: நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. யாருக்கு முதலில் பெண் கிடைக்கிறதோ அவருக்கு திருமணம் முடித்து விடுவதுதான் சரி.

      நீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது.
    மாவடு விற்கும் பெண் அருள்வாக்கும் சொன்னது அது பலித்து விட்டது .
    இனி அவரை ராதா சொல்லி அக்கம்பக்கத்தில் மாவடு வாங்கியவர்கள் எல்லாம் விடமாட்டார்கள்.
    எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. பானுமதி வெங்கடேஸ்வரன்26 ஜூலை, 2022 அன்று PM 5:50

    இது கூட வியாபார உத்தியோ? நன்றி கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  13. நேத்திக்கே இந்தக் கதையைப் படிச்சுட்டு ஒரு பத்துத்தரம் கருத்தும் சொல்லி இணையம் படுத்தல்/ப்ளாகர் படுத்தல் காரணமாக கணினியில் உட்காரவே முடியவில்லை. இப்போவும் இது போகுதானு தெரியாது. பிள்ளையாரை வேண்டிக் கொண்டு ஶ்ரீராமஜயம் சொல்லிக் கொண்டு வந்திருக்கேன். என்னனு பார்க்கலாம். :( ஆனால் பின் தொடரும் கருத்துகள் மட்டும் மெயில் பாக்சுக்கு வந்திருக்கின்றன. :)

    பதிலளிநீக்கு
  14. அப்பாடா! போயிடுச்சு. பானுமதி எழுதின கதை தான் என் தம்பி வீட்டில் போன நவம்பரில் நிஜமாக ஆகி இருக்கிறது. கல்யாணத்துக்குப் போயிட்டு வந்த கதையையும் எழுதினேன். மழையில் மாட்டிக் கொண்டதெல்லாம். தம்பியோட இரண்டாவது பிள்ளைக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகிறது. ஆனால் முதல் பிள்ளைக்கு? அந்த மாவடு மகமாயி தான் மனசு வைக்கணும். ஜோசியர்களைப் பார்த்துக் கேட்டு அலுத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்27 ஜூலை, 2022 அன்று PM 6:25

      என்னடா கீதா அக்கா கருத்தே போடவில்லையே.. நம்மை புறக்கணிக்கிறாரா?? அவர் அப்படியெல்லாம் செய்யக் கூடியவர் இல்லையே.. என்றெல்லாம் நினைத்து விட்டேன். பிளாகர் நாடு பெரும் நாடாகக் தான் இருக்கிறது.

      நீக்கு
  15. கதை மிக நன்று. இப்படிச் சிலர் சொல்வதும் நடக்கிறதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்27 ஜூலை, 2022 அன்று PM 6:29

      நன்றி துளசிதரன்

      நீக்கு
  16. கதை வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது பானுக்கா. ஸ்ரீராம் சொல்லியிருந்தார் ஒரு பதிவில் அவர் வீட்டு உதவியாளர் சொன்னதாக.

    கதை நன்றாக இருக்கிறது பானுக்கா. ஒரு சின்ன கருத்து கதையாய் அழகான உருவில்..டக்குனு எழுதிட்டீங்களே பானுக்கா அது பெரிய திறமை!!!

    கொஞ்சம் அவசரமாக எழுதிட்டீங்களோ? ஆறப் போடவில்லையோ!!!! இல்லை எனக்கு அப்படித் தெரிகிறதோ?

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!