வியாழன், 28 ஜூலை, 2022

டக்டக்டக்டக்கென ப்ரித்வி ராஜன் குதிரையில் வந்தாண்டி..

 ஊபர் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருக்கையில் நடுவே ஒரு  சிக்னலில் வலது பக்கத்திலிருந்து  டக்டக் டக்டக் டக்கென்று சுவாரஸ்யமான சத்தத்துடன் வந்து கொஞ்ச நேரம் எங்களுக்கு முன்னால் சென்று, இடதுபுறத்தை பிடித்து விரைந்தது அந்த ரேக்ளா. 

அப்படிதானே சொல்லவேண்டும் அதை?

ஒருவர் மட்டும்  அமரும் இருக்கை போல இருக்கும்.  இன்னும் ஒருவர் அல்லது இருவர்  கூட அமர்ந்திருப்பார்கள்.  (பாவம் குதிரை..  தெனாலிராமன் குதிரை மாதிரி இருந்தால்  இன்னும் பாவம்!)

அவ்வப்போது சில வண்டிகளை இப்படி சாலைப்போக்குரத்தில் பார்க்கிறேன்.  ஒருவரோ, இரண்டு பேரோ வண்டியில் அமர்ந்து வருவார்கள்..

என் ஊபர் பைக் ஓட்டுநர் ஒரு நொடி ஜெர்க் ஆகி அவரை, அந்த வண்டியைப் பார்த்த வண்ணமே ஓட்ட, அங்ஙனமே நானும் பின்னாலிருந்து ஆர்வத்துடன் வண்டியைப் பார்த்தேன்.

'வாத்யார் இப்படி ஒரு வண்டியைதான் உரிமைக்குரலில் ஓட்டி வருவார் இல்லை' என்று தோன்றியது.

கம்பீரமாக தலையை நிமிர்த்தியபடி குதிரை அலட்சியமாக ஓடிவந்து கொண்டிருந்தது..   டக்டக் என சீராக குளம்பொலி சத்தம்.. சோனி குதிரையாய் இல்லாமல்  வாளிப்பாக, திமிறலுடன் இருந்தது.

"டக்டக்டக்டக்கென ப்ரித்வி ராஜன் குதிரையில் வந்தாண்டி...
சட்சட்சட்சட்டென சம்யுக்தாவை சிறையும் எடுத்தாண்டி...'  

மனதுக்குள் பாடல் ஓடியது.

எவ்வளவு தூரம் ஓடும் இதெல்லாம்..  எப்போ ரெஸ்ட் கொடுப்பாங்க...  எவ்வளவு தாங்கும்?

எங்களுக்கு இணையாக வந்து கொண்டிருந்த வண்டியை இருவருமே பார்த்துக் கொண்டே இருக்க, சட்டென எனக்குத் தோன்றியதை நான் சொன்னேன்.

 "பேசாமல் இதையும் ஊபரில், ஓலாவில் இணைத்து விடலாம்.."

சட்டென சிரித்து விட்ட பைக் ஓட்டுநர் "ஆமாம் ஸார்..  ஜனங்க ரொம்ப விரும்புவாங்க.. " என்றவர் சற்று யோசித்து விட்டு அந்த வண்டியை வேகமாக ஓவர்டேக் செய்தபடி  "ஆனா ரிஸ்க்கு..  எத்தனை பேர் இதுல தைரியமா  ஏறுவாங்கங்கங்கறீங்க?" என்றார்.

"பழக்கமில்லன்னா அப்படியே பின்னாடி சாஞ்சு விழுந்திடுவாங்க..."

"ஓலா, ஊபர், ரேபிடோங்கறது மாதிரி அவங்க தனியா ஒரு 'ஆப்' ஆரம்பிச்சுடுவாங்க..   ஹார்ஸ்னு பேர் வைப்பாங்க" என்றார் அவரே தொடர்ந்து.

"ப்ரித்வி னு பெயர் வைக்கலாம்" என்றேன், மனதில் ஓடிய பாடல் வரிகளின் தொடர்ச்சியாய்.

"அதென்ன ஏவுகணையா?  ஆனா வைக்கலாம்..  வேகமாய் போவும்னு ஃபிலிம் காட்டலாம்..  அப்படிதானே வியாபாரம் செய்யணும்?" என்றார் கொஞ்சம் அலுப்பாய்.

சீரியஸாகவே இதை யாராவது இணைத்து தங்களுக்கு போட்டியாகி விடுமோ என்று பயந்தவர் போல இருந்தாரோ என்று தோன்றியது.

"பெட்ரோல் என்ன விலை விக்குது..  அதைப் போடவேண்டாம்..  டீசல் செலவு இல்லை..  வசதிதான்..  கொள்ளு புல்லு போட்டால் போதும்" என்றார் தொடர்ந்து.

"அவ்வளவு ஈஸியா குதிரைகளை மெயின்டெய்ன் செய்ய முடியும்னு நினைக்கறீங்களா?  மேலும் பைக் மாதிரி அந்த வண்டியிலும் ஒருத்தர்தான் ஏறமுடியும்..  அதற்கும் தில்லு வேணும்" என்றேன்.

"கரெக்டு..  மக்கள் எது வந்தாலும் ஆதரவு கொடுப்பாங்க..  பெட்ரோல் ஏறும் விலைல நல்ல சாய்ஸ்தான்"

"அப்போ வண்டி கூட வேண்டாம்.  பேசாம குதிரையை மட்டும் ஓட்டிக்கிட்டு வந்து கஸ்டமர்களை ஏற்றிக் கொண்டு போகலாம்"

மறுபடியும் சிரித்த ஓட்டுநர் ஒருமுறை என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

முன்னால் சென்று கொண்டிருந்த வண்டியை ஓவர்டேக் செய்ய ஹார்ன் அடித்தவர் "ரேக்ளாவில்  வைத்திருப்பது போல பாம் பாம் என்றாவது ஹார்ன் அடிக்கலாம்.  குதிரையில் போனால்...?"

"மூக்கணாங்கயிறை ஒரு இழு இழுத்தால் குதிரை ஒரு கனைப்பு கனைத்தால் முன்னால் போறவன் நடுங்கிப்போய் ஓரமா ஓடிடுவான்!" என்றேன்.

"சமீபத்துல மும்பை வெள்ளத்தில் வண்டிகள் ஓடலைன்னதும் ஒரு ஸ்விக்கிக்காரர் குதிரைல போய் Food டெலிவரி செஞ்சாராமே..."

"குதிரை ஓட்ட பயிற்சி நிலையம் அமைத்து காசு பார்க்கலாம் லைசன்ஸும் வாங்கி கொடுப்பாங்க"

"குதிரை ஓட்ட மட்டும் இல்லை, அதில் ஏறி உட்காரவும் பயிற்சி கொடுக்கவேண்டியதாய் இருக்கும்...!"

"ஓ டி பி சொல்லி குதிரைல ஏற்றிக்கலாம்..  ரோட்ல கடகடன்னு போயிடலாம்"

"இதற்கு லைசன்ஸும் தேவையில்லை"

"இப்போ தேவை இல்லை..  ஆனால் ரெண்டு மூணு குதிரைங்க வந்துட்டா போலீஸ்காரங்க உஷார் ஆயிடுவாங்க..  லைசன்ஸ் வாங்கச் சொல்வாங்க.."

"வாங்கினாப்போச்சு..  மன்னர் காலம் போல ரெண்டு ரெண்டு பேரா குதிரைல பறக்கலாம்"

"பெட்ரோல் புகைன்னு ஊரும் நாசமாகாது... " 

"குதிரையை சரியா பராமரிக்கல்லைன்னா தொத்தலா ஆயிடும்.  அப்புறம் கஸ்டமரை பிக்கப் செய்ய வரும் குதிரைக்காரர்கள் கஸ்டமர் கொஞ்சம் குண்டா, 100  கிலோ 'வெயிட்'டில் இருந்தால் ட்ரிப்பை கேன்சல் செய்துடுவாங்க..  அந்த அபராதமும் கஸ்டமர்ஸ் தலையில் விழும்!"

"ரொம்ப யோசிக்கறீங்க..   ஆனால் வரமாட்டாங்க சார்...  இவங்க எல்லாம் பீச்ல ஒரு சுற்று சுற்றி வந்தாலே 100 ரூபாய் வாங்கறாங்க...அங்கே அவ்வளவு சம்பாதிக்க முடியும்போது இங்க வரமாட்டாங்க.."

"எல்லோரும் வீட்டில் கார் பைக்  வாங்கறதுக்கு பதில் குதிரை வாங்கி கட்ட ஆரம்பிச்சுடுவாங்க.."

அவரை அவரே ஆறுதல் படுத்திக்க கொள்கிறாரோ என்று தோன்றியது.  ரொம்பவே சீரியஸாய் யோசித்து விட்டார் போல!  எவ்வளவு குதிரைக்காரர்கள் கடற்கரையை ஆக்கிரமிக்க முடியும் என்று கேள்வி கேட்க நினைத்து விட்டு விட்டேன்.  

பொதுவாக இப்படி வாடகை வாகனத்தில் பயணிக்கும்போது பேசுவதில்லை.  இன்று பேச்சு கொஞ்சம் நீண்டு விட்டது.  எம்ஜிஆர் வீட்டைத் தாண்டும்போது காம்பௌண்டை உடைத்து விட்டிருந்தார்கள்.  வலைகளால் மூடிய  ஒரு மைதானம் தெரிந்தது.  உள்ளே கிரிக்கெட் ஸ்டம்ப்புகளும் சில ஆட்களும் தெரிந்தார்கள்.  அவரே பேச்சை மாற்ற விரும்பினார் போல...

"ஒரு காலத்துல எம் ஜி ஆர் வீடு எவ்வளவு மூடுமந்திரமா இருந்தது...  ரகசியமா இருக்கும்.. உள்ளே என்ன இருக்கும், என்ன நடக்குதுன்னே தெரியாது..  எப்படி ஆயிடுச்சு பாருங்க..  வாரிசு இல்லன்னா கஷ்டம்தான்..  " என்றார்.  நானும் அதையேதான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் பேச்சில் லேசான அரசியல் கலந்ததில் மௌனம் காத்தேன்.

"இப்போ பாருங்க ஜெயலலிதா வீட்டை விற்கணும்னு நினைச்சாலும் வாங்க ஆளில்லை..  யார் வாங்குவாங்க..  என்னென்ன பிரச்னை வருமோ..  இல்லை?  என்ன சொல்றீங்க?" என்று திரும்பிப் பார்த்தார்.

மியாட் ஆஸ்பத்திரி அருகே ஒரு கட்டிடத்தை இடித்துக் கொண்டிருந்ததை பார்த்த நான் சட்டென பேச்சை மாற்றி "அங்க திறந்து வச்சிருக்காங்க..  இங்க மூடி வச்சு இடிக்கறாங்க...  நல்ல கட்டிடம்..  பெரிசா இருக்கு..  ஏன் இடிக்கணும்?  என்னென்னவோ நடக்குது" என்றேன்.

"ஆமாம்..  ஆமாம்"  என்றவர் தொடர்ந்து "சீக்கிரமே சென்னை நாசமாப்போயிடும் ஸார்" என்று அதிர வைத்தார்....

"ஏங்க..  நாமளும் இங்கதான் இருக்கோம்..  நம்ம ஊரை ஏன் அப்படி சொல்றீங்க?"

=========================================================================================================

கல்கியில் 'காலச்சக்கரம் நரசிம்மா' ஒரு புதிய மிக சுவாரஸ்யமான தொடரைத் தொடங்குகிறார்.  'பராக் பராக்' எனும் அத்தொடரில் பொன்னியின் செல்வன் கதை நிகழ்ந்த இடங்களுக்குச் சென்று, அந்த இடங்களைக் காட்டி அது பற்றி பேசுவது போல நிகழ்ச்சி அமையுமென்று சொல்கிறார்.  அதுபற்றி நிறைய தகவல்களை அவ்வப்போது பேஸ்புக்கில் கொடுத்து வருகிறார். அவற்றில் ஒன்று இங்கே...  

நமது வலைபபதிவர் RVS கூட இப்போது கல்கியில் பணியில் இணைந்து விட்டார் தெரியுமோ...
 

கடம்பூர் மாளிகை என்று ஏன் பெயர் வந்தது ?
-----------------------------------------------------------
பொன்னியின் செல்வன் திரைப்படம் வரப்போகிறது என்றவுடன், சமூக ஊடகங்களில் பொன்னியின் செல்வனை பற்றி பல்வேறு விவாதங்களும், சர்ச்சைகளும், கருத்துகளும் சுற்றி வருகின்றன. அதில் நடிக்கும், நடிக, நடிகையரை பற்றியும், செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதற்குத்தான் பயந்தோம்.! சரித்திர சம்பவங்களை தாண்டி, ஆதித்த கரிகாலன் மருத்துவமனையில் அனுமதி, குந்தவையின் பேட்டி என்றெல்லாம் சரித்திர பெயர்களில் இன்றைய தனிப்பட்ட முறையில் நடிக நடிகரை அழைத்து வருகின்றனர். . இதனால் வருங் காலத்தில் குந்தவை த்ரிஷா மாதிரி இருப்பார் என்று நினைத்து கொள்வார்கள் என்றுதான் கவலைப்பட்டோம். அப்படிதான் நடக்கிறது.
போதாத குறைக்கு, வந்தியத்தேவன் கார்த்தியும், குந்தவை த்ரிஷாவும், ட்விட்டரில் ஒருவரையொருவர் நையாண்டி செய்கிறார்கள். விளம்பரத்திற்காக என்றாலும், சரித்திர ரீதியாக நம் மனதில் கோலோச்சும் உயர்ந்த பாத்திரங்களை இப்படி விளம்பரத்திற்காக சந்தி சிரிக்க வைக்கிறார்களே என்று வருத்தமாகவும் உள்ளது
அம்மன் வேடமென்றால் கே ஆர் விஜயாவை அழைப்பது போன்று, நாளை சோழர் படம் என்றால் த்ரிஷாவை அழையுங்கள் என்றாகி விட்டால் என்ன செய்வது என்றுதான் அச்சப்பட்டோம். , நாம் நம் மனதில் வடித்திருந்த வந்தியத்தேவனின் உருவத்திற்கு, மாறாகத்தானே இன்றைய திரைப்பட பாத்திரங்கள் உள்ளன.
நல்ல வேளை ! கல்கி குழுமம் தயாரிப்பில் நான் எழுதி தொகுத்து வழங்கும் ''பராக் பராக் பொன்னியின் செல்வன் -- , அனுபவ பயண தொடர், இம்மாதிரி அனாவசிய buildup-கள் இன்றி, உங்களுக்கு, நிறைய பயனுள்ள, அறிவுபூர்வமான தகவல்களை தரப்போகிறது.
உதாரணத்திற்கு, கடம்பூர் மாளிகையின் சதித்திட்டங்களை பற்றி பலரும் பேசுகிறார்கள். கடம்பூர் மாளிகை என்று ஏன் பெயர் வந்தது ! அந்த மாளிகை கடம்பூர் என்கிற பகுதியில் இருந்ததால், கடம்பூர் மாளிகை என்று பெயர் வந்தது.
ஆனால் கடம்பூர் என்கிற பெயர் எப்படி வந்தது ?! அந்த பகுதியில் கடம்ப மரங்கள் அதிகமாக காணப்பட்டதால், கடம்பூர் என்று பெயர் வந்தது. கடம்ப மரங்களின் பின்னால் உள்ள ரகசியங்கள் என்ன ? பொன்னியின் செல்வனுக்கும், கடம்ப மரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ?
இது உதாரணம்தான் ! கல்கி குறிப்பிட்டிருக்கும், பல சம்பவங்களுக்கு அடிப்படை காரணங்கள், ஊர் பெயர்கள் எப்படி மருவி போனது, கல்கி கொடுத்திருக்கும், CLUE-க்கள் என்று பல ருசியான தகவல்கள்.
சினிமா கவர்ச்சி இல்லாமல், அறிவுபூர்வமான தகவல்களும், ஏன், எங்கே, எப்போது, எதனால், எப்படி என்கிற முக்கிய தகவல்களுடன், உங்களை விரைவில் சந்திக்க வருகிறேன்.
கல்கி தெரிவித்த தகவல்களுக்கு ஒப்பனை செய்து build up செய்யாது, இந்த கல்கி குழுமம் வழங்கும் நிகழ்ச்சி.
தெரியாத புதிய தகவல்களை தந்து, இப்படித்தான், இதனால்தான்...என்கிற முடிவை கூறும் நிகழ்ச்சி.
மாமேதை கல்கியின் படைப்புக்கு ஒரு கோனார் உரைநடையாக எனது நிகழ்ச்சி என்று வேண்டுமானால் வைத்து கொள்ளுங்கள். !
கல்கி குழுமம் வழங்கும். --
பராக் பராக் ...கல்கியின் பொன்னியின் செல்வன் --
வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம்.
படம் : மர்மங்களை தன்னுள் புதைத்து கொண்டிருக்கும் கடம்பூர் மாளிகைக்கு பெயர் வருவதற்கு காரணமான . கடம்ப மரம்

காலச்சக்கரம் நரசிம்மா முகநூலில்
===================================================================================================

ரசனையான புகைப்படங்கள்...




=========================================================================================================

அந்த நாள்...
--------------------------
ஒய்வு பெற்று
ஒரு மாதமான இடைவெளியில்
அலுப்போ, ஏக்கமோ
ஏதோ ஒன்றைத் தந்தது தனிமை
யாருக்கும்
தேவை இல்லையோ
இனி நான்
என்ற எண்ண ஏக்கத்தில்
நினைவுக்கு வந்தது
பணியின் அலுப்பு
தந்த வெறுப்பில்
"விருப்ப ஒய்வு கொடுத்து விடலாம்
என்று பார்க்கிறேன்"
என்று சொன்ன நாட்கள்

=============================================================================================



===========================================================================================



==========================================================================================

கடந்த சனிக்கிழமை மாலை வல்லிம்மாவை சென்று சந்தித்து வந்தோம். வல்லிம்மா சென்னை வந்து ஒரு மாதமாகப் போகிறது. அவருக்கு இந்த ஊர் பால் ஒவ்வாமையால் சில உடல்நலப் பிரச்னைகள் வர, உடனே அவரைச் சென்று சந்திக்க முடியாதிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பி விடுவார் என்ற நிலையில் அவர் சௌகர்யத்தையும் கேட்டுக் கொண்டு அவரைச் சென்று சந்தித்தோம். வழக்கமான அன்புடன் வரவேற்றார், பேசினார். கீரைவடை, போண்டா, பில்டர் காஃபி தந்து உபசரித்தார். இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் அம்மா. சுமார் ஒருமணி நேரம் பேசிக்கொண்டிருந்த விட்டு அவரை ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பினோம். என்னுடன் வந்திருந்த இன்னொரு பதிவர் சற்று முன்னரே கிளம்பி விட்டார்.

அவர் தங்கி இருந்த இடத்தின் பால்கனியிலிருந்து சென்னை...





==================================================================================================

இன்று ஆடி அமாவாசை என்பதால் இரண்டே ஜோக்ஸ்தான்!




100 கருத்துகள்:

  1. ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் குதிரை வண்டி இருந்தது என்று சொல்வது செல்வந்தர் வீடு என்பதற்கான அறிகுறி.

    பிறகு அதுவே குதிரை வண்டிக்காரன் என்று இழிவாக பார்க்கப்பட்டது.

    மீண்டும் நீங்கள் சொல்வது போல் உயர்ந்த நிலையில் வரலாம்.

    வல்லிம்மாவை சந்தித்ததில் மகிழ்ச்சி இன்னொரு பதிவர் தில்லையகத்தாரா ?

    லாரியின் பின்னால் கம்பி எவ்வளவு பெரிய ஆபத்து.

    விபத்து நடந்த பிறகு போலீஸ் பிடித்து என்ன செய்ய ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரை வண்டிக்காரன் என்று இழிவாய் பார்க்கப் பட்டதாய்த் தெரியவில்லை. ஒரு அந்தஸ்துதான். பின்னர் மற்ற வாகனங்களின் வருகையால் வழக்கொழிந்தது! நன்றி ஜி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். வாங்க கமலா அக்கா.. பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியை உங்கள் இருவரின் சுவாரஸ்யமான உரையாடல் காரணமாக டக், டக் டக் வென குதிரை வேகத்திலேயே படித்து விட்டேன். இன்னொரு தடவை நிதானமாக படிக்க வேண்டும். தங்களின் கற்பனை உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சென்னை மட்டுமல்ல... எல்லா இடங்களிலும் குதிரை ஓட்டிகளுடன் என் கற்பனையும் விரிந்தது.:))) ) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. வாத்தியார் குதிரை வண்டியில் பாட்டு பாடி வருவது என் அண்ணன் திரைப்படத்தில்.

    https://www.youtube.com/watch?v=7bYk

    பாட்டுக்கு பாட்டு

    விருப்ப ஒய்வை
    விரும்பியதில்லை
    கட்டாய ஒய்வு
    கசக்கவில்லை
    ஆயிற்று
    12 வருடங்கள்
    நிரந்திர ஒய்வை

    எதிர்பார்த்து.

    MGR என்னதான் பணக்காரர் ஆனாலும் பணம் என்பதும் ஒரு காகிதம் தான் என்பதை உணர வைத்தது ஜப்பான் அனுபவம்.

    ஒரு சின்ன சந்தேகம். இரன்டு பேரும் ஹெல்மெட் போட்டிருக்கும் போது ஒருவர் பேசுவது மற்றவருக்கு சரியாக கேட்குமா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்யார் ரேக்ளாவில் வருவது உரிமைக்குரல் படத்தில். ஓய்வுக்கவிதை என் அனுபவமல்ல! ஓட்டுநர்தான் ஹெல்மெட் போட்டிருப்பார். அதுவும் பல சமயங்களில் போடுவதில்லை!

      நீக்கு
    2. என் அண்ணன் படத்தில் குதிரை வண்டியில் பாடிக் கொண்டே ஓட்டி வருவார்.​ உரிமைக்குரல் படத்தில் வாத்தியார் ஒட்டி வருவதுதான் ரேக்ளா வண்டி!

      நீக்கு
  6. அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. இன்று ஆடி அமாவாசை.. முன்னோர்களின் நல்லாசிகளுடன் நலமும் வளமும் பெருகட்டும்..

    பதிலளிநீக்கு
  8. // சரித்திர ரீதியாக நம் மனதில் கோலோச்சும் உயர்ந்த பாத்திரங்களை இப்படி விளம்பரத்திற்காக சந்தி சிரிக்க வைக்கிறார்களே..//

    இன்றைய தராதரம் இவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  9. //உடனே வரைச் சென்ட்ரஸ்
    தொடரைஹ்
    செல்வன் அஃதை// முடிஞ்சா நேரம் இருக்கையில் திருத்துங்க.

    பதிலளிநீக்கு
  10. அமாவாசை வேலைகள் காத்திருக்கின்றன. ஆனால் இந்தப் பழைய கணினி இப்போத் தான் (காலை மட்டும்) வேலை செய்யும் என்பதால் இன்னிக்குக் காலையிலேயே வந்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  11. எங்க பெரியப்பா (அப்பாவின் அண்ணா) வீட்டில் குதிரை வண்டி இருந்தது. பெரியப்பா கோர்ட்டுக்குப் போக, வர, பின்னர் வீட்டில் பெண்களை வெளியே அழைத்துப் போகனு வைச்சிருந்தார். பின்னர் சில வருடங்கள் சைகிள் ரிக்‌ஷா (மதுரை ரிக்‌ஷாக்கள் வசதி போல எங்கும் பார்க்க முடியாது)

    பதிலளிநீக்கு
  12. சுவையான உரையாடல் தொகுப்புக்கு நன்றி. காலச்சக்கரம் நரசிம்மாவின் அறிவிப்புக்களை முகநூலிலும் படிக்கிறேன். வல்லி தங்கி இருக்கும் இடத்திலிருந்து தெரியும் சென்னையின் அழகு நேரிலும் இப்படி இருக்குமா?
    நகைச்சுவைத்துணுக்குகள் எல்லாமே படிச்சவை தான்.
    கீழாம்பூரின் நினைவுகளையும் அவ்வப்போது படிப்பேன்.
    பணி ஓய்வு பெற்றவரின் கவிதையையும் முன்னாடியே படிச்சிருக்கேன். ஆனால் நம்மவர் பணி ஓய்வு பெற்றதும் சந்தோஷமாகவே இருக்கார். ஏனெனில் வீட்டில் அதற்கு மேல் வேலைகள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி.  நரசிம்மாவின் தொடரை காணொளியாகத்தான் பார்க்க முடியும் என்பதால் கல்கி ஆன்லைனில்தான் வரும் என்று நினைக்கிறேன்.  நிச்சயம் சுவாரஸ்யமான தொடராய் இருக்கும்.  ஒய்வு பெறும் நாளை எதிர் நோக்கிதான் நானும் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. //ஒய்வு பெறும் நாளை எதிர் நோக்கிதான் நானும்// - இக்கரைக்கு அக்கரை பச்சை.... நம்மை நாமே பிஸியா வச்சுக்கணும். அப்படி இல்லைனா கஷ்டம். மனைவிக்கு, ஆளை அபீஸ் அனுப்பிச்சோமோ கொஞ்சம் அக்கடான்னு இருக்கோமான்னு தோணும். வீட்டில் இருந்தால் கொஞ்சம் அசௌகரியம்தான். ஹா ஹா

      நீக்கு
    3. அதுவும் சரிதான்.  பரபரப்பன பணியிலிருந்து சற்றே ஓய்வான பணியில் இப்போது நான் இருக்கும்போதே கொஞ்சம் உடம்பு சண்டி செய்கிறது.

      நீக்கு
  13. //எல்லோரும் வீட்டில் கார் பைக் வாங்கறதுக்கு பதில் குதிரை வாங்கி கட்ட ஆரம்பிச்சுடுவாங்க....//

    ஒண்டுக் குடித்தனக்காரன் எல்லாம் எங்கே போறது.. கால் நீட்டிப் படுக்கவே இடம் போதாது.. பேசாமல் ஊர்க்காடு பக்கம் போயிடலாம்.. மெட்ராசுக்குள்ளயும் நாத்தம் குறையும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்து யோசித்திருக்கிறீர்கள்!!  அப்போதும் கூட இரவுகளில் குதிரையைப் பூட்டி வைக்கும் இடங்கள் வாடகைக்கு விடுவதும் பிஸினஸாகலாம்!  அதுசரி, தலைப்பு சொல்லும் பாடல் எதுவென்று கண்டுபிடித்தீர்களா?

      நீக்கு
  14. எம்ஜிஆருக்கென்ன? டாலருக்காகக் கவலை.
    அந்த லாரியின் பின்னால் கம்பிகளைக் கட்டி வேறொரு வண்டியில் வைத்துப் பாதுகாப்பாகக் கொண்டு போயிருப்பது நன்மையே. எங்க மாப்பிள்ளையின் அப்பா இப்படி ஒரு லாரி செல்லுகையில் அந்தக் கம்பிகள் உடலில் துளைத்துத் தான் இறந்தார். மாப்பிள்ளைக்கு அப்போப் பத்து வயசாம். மஹாராஷ்ட்ராவின் சைனிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாராம். இதை நேரிலேயே பார்த்ததின் தாக்கம் அவரிடம் இன்னமும் இருப்பதாகச் சொல்லுவார். எனக்கு எங்கேயானும் இப்படிக் கம்பிகள் நீட்டியபடி லாரிகள் வந்தால் இதான் உடனே நினைவில் வரும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் நடக்குமா என்ற எண்ணத்தை உடைத்தது நீங்கள் எழுதியிருக்கும் உண்மைச் சம்பவம். பரிதாபமான பயங்கரமான முடிவு

      நீக்கு
    2. என் கல்லூரி நண்பன் சொல்லுவான், அவன் அப்பா, அம்மாவை சைக்கிள் பிற்புறம் வைத்துக்கொண்டு நெல்லை மேம்பாலத்தில் செல்கையில் பஸ்ஸில் அடிபட்டு இறந்தார், அவன் கண் முன்னாலேயே என்று

      நீக்கு
    3. உண்மை.. இந்த மாதிரி லாரியில் நிறைய வைத்துச் சென்ற கம்பிகள்... அதன் அருகிலேயே பஸ் பயணத்தில் ஜன்னலோரமாக அமர்ந்து கொண்டு ஒரு ஊருக்கு சென்று கொண்டிருந்த என் நாத்தானாரின் மாப்பிள்ளையின் தோளபட்டையை தாக்கி விட அவர் ஆஸ்பத்திரி, அறுவை சிகிச்சை என்று பல மாதங்கள் சிரமப்பட்டதை என்னாலும் மறக்க இயலாது.

      நீக்கு
    4. கீதா அக்கா நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவம் அதிர்ச்சி தரக்கூடியது. வருத்தத்திற்குரியது.

      நீக்கு
    5. நெல்லை..  விபத்துகளில் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு அதிர்ச்சியைத் தரும்.  எழுபதுகளில் என் நண்பர்களோடு தஞ்சை ஹவுசிங் யூனிட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன்  அந்தக் கால ஸ்டைலில் வெள்ளை நிற பெல்பாட்டம் அணிந்து ஸ்டைலாக இருசக்கர வாகனத்தில் சென்று திரும்பியதை பார்த்தோம்.  முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியிலிருந்து இரும்புத்தகடு விடுபட்டு வந்து இவர் தலை துண்டானதை பார்த்து அரித்த தலைகுனிந்தோம்.வெண்ணிற பெல்பாட்டம் செந்நிறமானது, சாலையெங்கும் ரத்த ஆறு.  துண்டான தலை மண்ணில் புரண்டு..  மறக்க முடியாத காட்சி..

      ஆமாம், நெல்லை என்ன உங்கள் வேறு கமெண்ட்ஸ் எதையும் இன்று காணோம்?

      நீக்கு
    6. நேற்று (இன்று அதிகாலை) இரவு 3 மணிக்கு திருப்பதியிலிருந்து வந்துசேர்ந்தேன். 3 1/2 நாட்கள் கர்நாடகா உணவு (அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க? உணவு அருமை, ஆனால் எனக்கு அந்த டேஸ்ட் பிடிக்காது). கடைசி நாள் கோவிலில் காலையில் சாப்பிட்ட பிரசாதம் ப்ளஸ் ஒரு லட்டு. கொஞ்சம் உடம்பு வேறு சரியில்லை. இங்க வந்தால், இன்று அமாவாசை, கரண்டியும் பிடிக்கணும், பையன் ஒர்க் ஃப்ரம் ஹோம். அதனால் படித்தாலும் எதையும் எழுதலை

      நீக்கு
    7. சரி சரி...  இப்போ எழுதுங்க!

      நீக்கு
  15. இன்னொரு ஆளைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளும் வலிமை எத்தனை பேருக்கு இருக்கும்? பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உண்மை,. விழுந்தால் இருவருக்கும் அடிபடும்!

      நீக்கு
  16. // மூக்கணாங்கயிறை ஒரு இழு இழுத்தால் குதிரை ஒரு கனைப்பு கனைத்தால்..//

    மாட்டுக்குத் தான் மூக்கணாங்கயிறு.. குதிரைக்கு லகான்..

    குதிர மேல சவாரி போறதுன்னா அவ்வளவு சுலபம் இல்லை..அதுக்குப் பயிற்சி பள்ளி எல்லாம் வேணும்...

    கூடிய சீக்கிரம் அந்த நிலை (1950/60) வரும்.. சென்னையோட அரிதாரம் சீக்கிரமாவே கலையணும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  லகான் என்று சொல்ல வேண்டும்.  தெரிந்திருந்தும் எழுதும்போது தோன்றவில்லை பாருங்கள்.  ஆனால் சென்னையெல்லாம் அப்படி மாறாது!

      நீக்கு
  17. நடந்த உரையாடலால் "ப்ரித்வி" வந்துடும் போல்...

    குதிரை வைத்திருப்போர்க்கு 18%

    சாலை பராமரிப்பு வருடத்திற்கு 12%

    குதிரை விபத்து காப்பீடு 5%

    முக்கியமாக புல்லுக்கு 26%

    சாணத்திற்கு...? உயர்மட்ட ஆலோசனையில் உள்ளது...

    குதிரை... வரிக்குதிரை...!

    போரத் மீதா கீ ஜீ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  உண்மை.  ஆனால் இந்த எதிர்ப்புணர்வைக் காட்டும் ஆர்வத்தில் பதிவு பற்றி ஒன்றும் சொல்ல தோன்றவில்லை பாருங்கள்!

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. ஜே என்று சொல்ல மாட்டீர்கள் என்றுதான் நானும் அழுத்தி மாற்றி உச்சரித்தேன்!!

      நீக்கு
  19. பானுமதி வெங்கடேஸ்வரன்28 ஜூலை, 2022 அன்று AM 8:23

    வணக்கம். வேலைப்பளு குறைந்து விட்டதா? நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய உற்சாகத்தில் வியாழன் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போன வாரமும் நல்லா இருந்ததே... நெல்லை

      நீக்கு
    2. வேலைப்பளுவை விட பயணப்பளு அதிகம்!

      நீக்கு
  20. // எங்கேயானும் இப்படிக் கம்பிகள் நீட்டியபடி லாரிகள் வந்தால்.. //

    அதெல்லாம் அவரவர் விதிப்படி தான்..

    போக்குவரத்து, உணவு பாதுகாப்பு மற்றெந்தத் துறைகளாகட்டும் நமது நாட்டில் உருப்படுவதற்கு விட மாட்டார்கள்.. கெட்டுப் போனவை என்று தெரிந்தும் விற்கின்றார்கள்.. நாக்குத் தொங்கிப் போனதால் நாட்டு மக்களும் அதற்காக அலைகின்றார்கள்.. பிறந்த நாள் என்று வாங்கித் தின்றவன் மேலே போய்ச் சேர்ந்த பிறகு ஆ.. ஊ .. என்று கூச்சல்..

    நாம் தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்..

    இந்தக் கருத்துக்கான பதிவு இது இல்லை என்றாலும்
    உணவகங்களின் சீர்கேட்டினால் இந்தக் கருத்து..

    மேலே அன்பின் தி.த. சொல்லியிருப்பது மாதிரி வரிக் குதிரைக்கும் வரி.

    கூடிய விரைவில் கல்யாணம் (மு.இ) தொடங்கி முடிவில் பத்தாம் நாள் காரியம் வரை எல்லாவற்றுக்கும் GST.. தாளித்து விடுவார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஏற்கெனவே உலவும் தகவல் உண்மையா பொய்யா தெரியவில்லை.  மின் மயானத்தில் உடலை எரிக்க ஜி எஸ் டி என்று செய்தியும் கிண்டலும் பார்த்தேன்.  

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    கவிதை யதார்த்தம். ஓய்வு பெறும் போது முக்கால்வாசி அனைவரின் மனதிலும் எழும் போராட்டங்களை அப்படியே விளக்குகிறது. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களை நீங்கள் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நலமாக உள்ளார்களா? மறுபடி வெளிநாட்டு பயணத்திற்கு தயாராகி கொண்டுள்ளாரா? அவரின் அன்பான பதிலகளே அவரின் அன்பான குணாதிசயங்களை பிரதிபலிக்கும். அவர் வீட்டு மாடி பால்கனியில் இருந்து எடுத்தப் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    பொன்னியின் செல்வன் எழுத்துலகத்திலேயே மாபெரும் படைப்பு. அதன் கதாபாத்திரங்களை உணர்த்தும் போது மிக கவனமுடன் இருக்க வேண்டும். அதை குறித்த நல்ல கட்டுரை. ரசித்துப்படித்தேன்.

    ரசித்த படங்கள் இரண்டும் ரசிக்க வைக்கிறது.

    ஜோக்குகள் இரண்டும் அருமை. முதல் ஜோக்கில் அவரின் பெயர் பொருத்தம் நன்றாக அமைந்துள்ளது. ஹா ஹா ஹா.

    இரண்டாவது ஒரு எட்டணா வுக்கு எப்படி அக்கறை எடுத்துக் கொள்கிறார் என வியக்க வைக்கிறது. அதைவிட அதை அவர் துருவி கேட்ட விதம் ரசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனைவருக்கும்.

      இன்று என் பதிவாக...ஒன்று. . பதிவுகளை எப்போதும் முதல் நாள் இரவே வெளியிடும் நான் இன்று சற்று தாமதமாக.... . அதனால் என் பதிவுக்கு வரும் அன்புள்ளங்கள் கவனியாமல் இருக்க நேர்ந்து விடுமோவென இங்கு குறிப்பிட்டுள்ளேன். மன்னிக்கவும். இதுவும் ஒரு விளம்பரமாகத்தான்.... வேறு ஒன்றுமில்லை. . மறுபடியும் மன்னிக்கவும். முடிந்த போது வந்து படித்து கருத்திட்டால் மகிழ்வெய்துவேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. என்னோட அப்பாப் பத்துப் பைசாவானாலும் விட மாட்டார். தேடிக் கண்டு பிடிச்சுட்டுத் தான் மறுவேலை. :)

      நீக்கு
    3. ஜோக்கை விட்டு விட்டு சீரியஸாக யோசித்திருக்கிறீர்களா.  ஆனாலும் காந்தி போல அபப்டிக் பட்டவர்களும் இருந்திருக்கிறார்கள்..  இல்லையா?

      நீக்கு
  22. இனிமே குதிரை, மாட்டு வண்டிகள் ஓட்டுபவர்கள் எல்லோரும் கூட ஊபர், ரெட் டாக்சினு ஏதாவது ஒன்றில் சேர்ந்துவிடுவார்கலோ?பயமா இருக்கு பாவம் அதுங்க, அந்தக் குதிரைபரிதாபமாக இருக்கிறது,..

    சைக்கிள் ஓட்டுபவர்கள் கூட ஒரு ஆளை ஏற்றிக் கொள்கிறேன் என்று ஊபர், ஓலா அலல்து தனிப்பட்ட முறையில் கூட செய்யத் தொடங்கிவிடுவாங்க என்று ஒரு கற்பனை..ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் சும்மா இணையத்திலிருந்து எடுத்துப் போட்டது கீதா..   நான் பார்த்த வண்டியும், குதிரையும் ஜம்மென்று இருந்தது.

      நீக்கு
  23. சோனி குதிரையாய் இல்லாமல் வாளிப்பாக, திமிறலுடன் இருந்தது.//

    ஆஆ சோனி!!// பிராண்டட் குதிரை என்று, சோனி கம்பெனியாச்சேன்னு நினைத்துவிட்டேன்!!! ஹாஹாஹாஹா...

    நல்லா தீனி போட்டிருப்பாரோ அதன் முதலாளி!!

    ஓ மை !!! ஸ்ரீராம்!!! ஹையோ என்ன ஒரு Great minds!!! think alike!!!! மேலே வாசித்து சொல்லிவிட்டுக் கீழே வர வர உங்கள் வரி

    //"பேசாமல் இதையும் ஊபரில், ஓலாவில் இணைத்து விடலாம்.."//

    ஹைஃபைவ் ஹைஃபைவ்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. நான் சொல்ல வந்ததும் அடுத்தடுத்த வரிகளில் பைக் ஓட்டுநரும் நீங்களும் பேசிட்டீங்க..!!!

    அதான் பெட்ரோல் விலை.....இதுக்கு புல்லு கொள்ளுன்னு..

    ஆனா குதிரையைப் பழக்குவது எளிதல்ல. குதிரை டாக்டரும் வேனும். ஒரு வாரத்திற்கு முன், குவைத்தில் பணிபுரியும் குதிரை மருத்துவர் என் கஸின் வந்திருந்தார் இங்கு ந்ம் வீட்டின் அருகில் உள்ள குதிரை ஆஸ்பத்திரியில் குதிரை ஒன்றிற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய அவர் வந்திருந்த போது நாங்கள் சென்று பார்த்தோம். அறுவை சிகிச்சையை அல்ல....குதிரை லாயம் பெரியது. அதைப் பற்றி பதிவில் சொல்கிறேன் படங்கள் எல்லாம் எடுத்திருக்கிறென். அப்போது தெரிந்து கொண்டது.... பழக்குவது என்பது தனி...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. உங்கள் உரையாடல்கள் அனைத்திற்கும் ஹைஃபைவ். நானும் என் கஸினும் அதைத்தான் பேசிக் கொண்டிருந்தோம். அப்பதான் சொன்னான் குதிரை வைத்தியமும் அதற்கு உண்டான பயிற்சி எல்லாம். குதிரை வளர்த்தல் என்பது பராமரிப்பது எல்லாம் ராஜாவாகப் பரம்பரைப் பணக்காரராக இருக்க வேண்டும்.

    அதற்கான உடல் உழைப்பும் முக்கியம் அதே சமயம் ஓய்வும் அவசியம்.....நல்ல தீனி....அதன் மூட் எல்லாம் இருக்கிறது,

    பாவம் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலத்தில் கார் வைத்திருப்பதற்கு நல்ல பணக்காரனாய் இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம்..   இப்போது?  அதுபோல ஆகிவிடும் குதிரைக்கதையும்!

      நீக்கு
  26. பொன்னியின் செல்வன் பற்றி காலச்சக்கரம் அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இப்போது அப்படித்தான் செய்திகள் கதாபாத்திரப் பெயர்கள் கொண்டேதான் செய்திகள் வருகின்றன.

    கல்கியில் அவர் தொடர் - ஆஹா...ஆன்லைன் கல்கியில் வருமோ? பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. படங்களை ரசித்தேன்...அதிலும் லாரி கம்பி எடுத்துச் செல்லும் படம் செம....பரவால்ல நல்ல ஐடியா. இல்லை என்றால் கம்பி அப்படியே மேலும் கீழும் ஆடும் லாரி வேகமாகச் ச்ல்லும் போதும். ரோட்டில் நான் இரு சக்கரத்தில் ஓட்டிச் சென்ற போதெல்லாம் இப்படி கம்பிகள் சுமந்து லாரிகள் அலல்து இருசக்கர வாகனத்தில்யேயே நீளமான பைப், கம்பிகள் எல்லாத்தையும் நீட்டமா சுமந்து கொண்டு வருவார்கள், பபயமாக இருக்கும். நான் ஒதுங்கி தள்ளிச் செல்வேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. அந்த நாள் - கவிதை நன்றாக இருக்கிறது.

    இக்கரைக்கு அக்கரை பச்சை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. ஜப்பான் பற்றிய தகவல்கள் அருமை. எப்படிச் சுத்தமோ அது போல கைச்சுத்தமும் உண்டு மக்களிடம் என்பது என் தம்பியின் அனுபவம். அதை எல்லாம் கேட்ட போது ஏக்கமும் கூட வே வந்தது. நம் நாடு இப்படி இருக்கே என்று. ரோட்டில் துப்பாமலாவது போக மாட்டாங்களா....ஹூம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. கீழாம்பூர் - தகவல் சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஆமாம் ஸ்ரீராம், வல்லிம்மாவின் பிரச்சனை போல ஒரு சிலருக்கு வெளிநாட்டில் பால் சாப்பிட்டுப் பழகிவிட்டால் இங்கு ஒவ்வாமை வருகிறது. எங்கள் உறவினர்களிலும் உண்டு இப்படி பிரச்சனைகள். லண்டனில் வளர்ந்த உறவினர்களுக்கும் இங்கு வந்தால் பால் தயிர் சாப்பிட மாட்டார்கள்.

    படங்கள் சூப்பர் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர்ப் பாலுக்கு அவ்வளவு பெருமை!!  அதைக் குடிக்கும் நாம் செமையா இம்மியூன் ஆகி இருக்கோம்!!

      நீக்கு
  32. குதிரை வண்டி , குதிரை சவாரி உங்களுக்கும், ஓட்டுனருக்கும் நடந்த உரையாடல் எல்லாம் அருமை.
    நிறைய விஷயங்கள் அலசி உள்ளீர்கள் இருவரும்.

    மாட்டுபொங்கல் அன்று ரேக்ளா ரேஸ் உண்டு பூம்புகாரில்.
    கடம்பூர் மாளிகை பெயர் காரண பகிர்வு, படித்தேன்.
    உங்கள் அந்த நாள் கவிதை பணியிலிருந்து ஓய்வு பெறும் போது உள்ள மன உண்ர்வை சொல்கிறது.

    வல்லி அக்காவை பார்த்து வந்த விவரம் அறிந்து கொண்டேன். அங்கு எடுத்த படங்கள் அருமை.

    வல்லி அக்கா ஊருக்கு போவதற்குள் உடல் நலமடைய வேண்டும்.

    நகைச்சுவை பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  33. //எம் ஜி ஆர் வீடு எவ்வளவு மூடுமந்திரமா இருந்தது..// - தாசில்தார் வீட்டு நாய் செத்தால் எவ்வளவு கூட்டம் வரும்? அதில் நூறில் ஒரு பகுதி கூட தாசில்தார் செத்தால் வராது என்பதைப் படித்த நினைவு வருகிறது. அரசியலில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் சுயநலவாதிகள். ஆர் எம் வீரப்பனும் அப்படிப்பட்ட துரோகியாக இருந்திருக்கிறார் என்பது ரொம்பவே மனதை வருத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் ஒன்றுதான் பிரதானம் என்று இருப்பவர்களை என்ன சொல்ல..

      நீக்கு
  34. லண்டன் போலீஸில் குதிரையில் வரும் காவலர்கள் உண்டு. நிறைய பார்த்திருக்கிறேன். படம் எடுத்திருப்பேன். பகிர்கிறேன் (நவீன சிந்துபாத் முடிந்ததும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவிலும் குதிரைப்படை உண்டு. குடியரசு தினத்தன்று ராஷ்ட்ரபதி கொடி ஏற்ற வரும்போதும் திரும்பக் கொடி இறக்க வரும் அன்றும் அருமையான குதிரைகளில் ராணுவ வீரர்களின் அணி வகுப்பைப் பார்க்கலாம். "Beating Retreat" எனப்படும் அந்தக் கொடி இறக்கும் நாளின் நிகழ்ச்சியை அநேகமாக யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். கட்டாயமாய்ப் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி அது. நான் வருஷம் தவறாமல் பார்த்துடுவேன்.

      நீக்கு
  35. //கடம்பூர் மாளிகை என்று பெயர் // - பொன்னியின் செல்வன் படித்த நினைவுடன், அந்தப் பகுதிக்கெல்லாம் சென்றுபார்த்தால் நம் உணர்வு (அந்தச் சரித்திரத்தில் ஆழ்ந்திருந்தால்) அவ்வளவு ஒன்றிப்போயிருக்கும். அதில் மிகவும் முக்கியமானதாக நான் கருதும் சிவன் கோவில்கள் (அனேகமாக பள்ளிப்படை) சிலது கும்பகோணம் தஞ்சாவூர் பாதையில் உள்ளன. படங்கள் அனுப்புகிறேன். இடையில் (இடைச்செருகலாக) ஞாயிறு வெளியிட வாய்ப்பிருந்தால்

    பதிலளிநீக்கு
  36. எம் ஜி ஆர் - வெளிநாடுகளில் படங்கள் எடுத்தபோது, தனக்கு உதவியாக இருந்தவர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஸ்டில் போட்டோகிராபர்கள் என்று அனைவருக்கும் பரிசுகளை வாரிவழங்கியிருக்கிறார். அவர் வள்ளல் என்பது உண்மை. கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று அவரை அழைப்பது மிகவும் பொருந்தும். காமராஜர், கக்கன், ஜீவா, எம்ஜிஆர் போன்றவர்கள் அபூர்வ பிறவிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமராஜ், கக்கன் வரிசையில் எம் ஜி ஆரை வைக்க முடியாது எனினும் இன்றைய நிலையோடு ஒப்பிடும்போது நிச்சயம் நல்ல தலைவர்..

      நீக்கு
  37. பிருத்விராஜன் குதிரையில் வந்தாண்டி என்ற தலைப்பைப் பார்த்ததும் கேரள நடிகர் பிருத்விராஜ் தான் ஏதேனும் ஷூட்டிங்கிற்காக அப்படி வந்தாரோ என்று நினைத்தேன்.

    போக்குவரத்து மிகுந்த சாலையில் குதிரை வண்டியா? குதிரை பயப்படவில்லையா? பழகியிருக்கும். நீங்கள் சொல்லியிருப்பது போல் குதிரை வண்டியும் ஊபர் ஓலா என்று சேர்த்துவிடுவார்களாக இருக்கும். குதிரை வண்டியில் 3 பேர் ஏற முடியும் என்று நினைக்கிறேன். மின்சார கார்கள்/பாட்டரி கார்கள் பைக்குகள் போல ஹார்ஸ் பவரை! சார்ஜ் செய்ய செலவு என்னாகும் என்று யோசித்தால் மீண்டும் அந்தக்காலம் வந்துவிடலாம்.

    பொன்னியின் செல்வன் படம் வேறு வருகிறதே. வந்தியத்தேவன் குதிரை என்றும் பெயர் வைத்துவிடுவார்களாக இருக்கும்.

    பொன்னியின் செல்வன் பற்றி வரலாற்றுத் தகவல்கள் வரப் போவது ஆர்வத்தை எழுப்புகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு ஒரு பழைய டி எம் எஸ் பாடல் துளஸிஜி...குதிரைப்பிகள் எஜமான் கட்டளைக்கு கீழ்படிகின்றன போலும்.  எனவே தங்கள் பயணத்தை அவை தடையின்றி தொடர்ந்தன.

      //பொன்னியின் செல்வன் படம் வேறு வருகிறதே. வந்தியத்தேவன் குதிரை என்றும் பெயர் வைத்துவிடுவார்களாக இருக்கும்./

      ஹா..  ஹா..  ஹா..

      நீக்கு
  38. உங்களுக்கும் பைக்கை ஓட்டியவருக்கும் நடந்த உரையாடல்களை ரசித்து வாசித்தேன்.

    ஸ்ரீராம்ஜி, உங்கள் கவிதை வழக்கம் போல் அருமை. என்னையும் அதில் இருத்திப் பார்த்தேன். நான் ரிட்டையர் ஆன பிறகும் அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல்தான் வீட்டிற்கு அருகில் உள்ள கல்லூரியில் பணிக்குச் சேர்ந்துவிட்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி.   எண்ணங்கள் அனுபவங்கள் ஆளுக்குத்தக்கபடி மாறக்கூடியவை.  இந்த மாதம் ஓய்வுபெறப்போகும் எங்கள் அலுவலக மாது ஒருவர் இதே கருத்தை பிரதிபலித்தார்.  'இன்னும் கூட நான் வேலை செய்யத்தயார்...  பணத்துக்காக அல்ல' என்றார்!

      நீக்கு
  39. எம்ஜிஆர் தகவல்கள் மற்றும் கீழாம்பூர் எஸ் சங்கர சுப்பிரமணியன் தகவல்கள் Very Interesting.

    நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்தேன். ஆடி அமாவாசை இன்று நாங்களும் வழிபாடு செய்தோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  40. ரேக்ளா, குதிரை எல்லாம் எங்கள் நாட்டில் இல்லை இருந்தால் இப்பொழுதுள்ள எங்கள் நாட்டு எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும் . மூன்று நாட்கள் லைன்னில் நிண்டு எடுத்தோம் .பெற்றோல் நிரப்பும் அவலநிலையில் நாங்கள்.

    சமையல் எரிவாயு பன்னிரண்டு மணித்தியால லைனில் நிண்டு எடுத்தோம் உபயோகிக்க மனமில்லாமல் பெரும்பாலும் எலெக்ரிக்கில்தான் செய்கிறோம்.

    நான் மீண்டும் பொன்னியின் செல்வன் படிக்கிறேன் இறுதிப் பாகத்துக்கு வந்துவிட்டேன்.

    நெல்லை படங்கள் போட்டால் மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னியின் செல்வன் நானும் மறுபடி படிக்க ஆரம்பித்துள்ளேன். ஒரு பாகம் முடிந்து இரண்டாம் பாகம் ஆரம்பிச்சிருக்கேன். கொஞ்சம் மெதுவாகவே படிக்கிறேன்.

      நீக்கு
  41. ஓட்டுநருடனான உரையாடல் வெகு சுவாரஸ்யம்.

    கவிதை நன்று. எதன் அருமையும் அது இருக்கும் போது புரிவதில்லை.

    வல்லிம்மாவை சந்தித்தது அறிந்து மகிழ்ச்சி.

    தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!