சனி, 23 ஜூலை, 2022

பஜ்ஜி சுட்ட எண்ணெயில்...  மற்றும்  நான் படிச்ச கதை ( JC )

 இங்கு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உழைப்பின் வழியே கண்ணியம் கண்டு, வானுலகை வென்று நிற்கும் அசாத்திய பெண்மணி இவர்.

மயிலாப்பூர் சாந்தோம் பீச் கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு
வரை படித்த இவர் !

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்து வீதிகளில் அன்றாடம்
காணும் பவானி பாட்டி எனும் 78 வயது மூதாட்டி நம்மை
ஆச்சரியத்தில் அசத்துகிறார் !!  தினமும் 6 மணி நேரம் நடந்தே சென்று அனைவரிடமும் பொறி உருண்டை - முறுக்கு போன்ற நொறுக்கு தின்பண்டங்களை விற்று வருபவர். "மூலையில் படுத்து, முடங்கி சாவதை விடஉழைத்து, துருப்பிடித்து சாவதே மேல்…"  என்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திர பாட்டி ! தெருவெங்கும் தனது வடிக்கையாளர்களிடம் ஆங்கிலம், ஹிந்தி , கன்னடம் மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் அசராமல் பேசி வியாபாரம் செய்கிறார் !!  வாழ்வதற்கு வழி அறியா கணவன் இரு சிறு குழந்தைகளையும் பவானி பாட்டியை விட்டு விலகினாலும், தன்னம்பிக்கையோடு இரண்டு பிள்ளைகளை வளர்த்து இன்றும் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு இவர் ஒரு முன் மாதிரி .

உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது இந்த நடைப்பயிற்சி
என்பதால் மனநிறைவோடு வீதிகளில் அயராமல் நடந்து
நொறுக்குத்தீனி விற்கிறார் இவர்.  வாழ்க்கையில் வாழ்வதற்கு துணிவின்றி சோர்ந்து விழுந்த இளம் வயது பெண்களை தட்டி எழுப்புகிறது 79 வயது நிரம்பிய வயதான இந்த பெண்மணியின் ஆங்கிலமும் தமிழும் கலந்த கணீர் குரல்.  கடவுள் கொடுத்த வாழ்க்கையில் என்ன அமைத்திருக்கிறானோ அந்த வாழ்க்கையை‌ ஏற்று மன அமைதியோடு வாழ்ந்து கர்மாவை நிறைவு செய்யுங்கள்.. என மிகவும் தெளிவோடு துணிவோடு பேசும் இவரது குரல் நிச்சயம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கட்டும்.   (நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்)

==============================================================================================

ஆழ்கடலில் காணப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் மீன் வடிவிலான சிறிய ரோபோவை, சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.


தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள், உருவாக்கியுள்ள தொடுவதற்கு மிகவும் மென்மையான இந்த ரோபோ மீன், 1.3 செ.மீ.,நீளம் கொண்டவை. இவை ஏற்கனவே ஆழமற்ற நீரில் மைக்ரோ பிளாஸ்டிக்கை உறிஞ்சும் திறன் கொண்டவையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழு உறுப்பினர்களில் ஒருவரான வாங் யுயான் கூறுகையில், ஆழமான பெருங்கடலில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சவும், ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள மாசு குறித்த உண்மையான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்பதே குழுவின் நோக்கமாக உள்ளது.  
அத்தகைய இலகுரக சிறிய ரோபோவை நாங்கள் உருவாக்கினோம். இது பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, அபாயகரமான நேரங்களில், ரோபோவை மனித உடலுக்குள் செலுத்தி சில நோய்களை குணப்படுத்த கூட பயன்படுத்தலாம்.  
கருப்பு நிறத்திலான சிறிய ரோபோ, அகச்சிவப்பு ஒளிகதிர் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளிகதிர் அதன் துடுப்புகளை மடக்குவதற்கும் அதன் உடலை அசைப்பதற்கும் உதவுகிறது. விஞ்ஞானிகள், ஒளியை பயன்படுத்தி ரோபோ மீன் இயக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, அதனை வேறு மீன் அல்லது கப்பலோடு மோதாமல் தவிர்க்க இயலும்.  ஒருவேளை, எதிர்பாராத விதமாக வேறு மீன், ரோபோ மீனை முழுங்கிவிட்டால் கூட, முழுவதும் பாலியூரிதீன் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளதால், செரிமானம்

ஆவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.  மீன் கழிவுகளை உறிஞ்சி, சேதமடைந்தாலும் தன்னைத்தானே மீட்டெடுக்கும் திறன் கொண்ட இந்த ரோபோ, மற்ற ரோபோக்களை விட வினாடிக்கு 2.76 நீளம் வரை நீந்தும் திறன் கொண்டது. நாங்கள் பெரும்பாலும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் சேகரிப்பில் இதனை பயன்படுத்துகிறோம். இது ஒரு மாதிரி ரோபோ தான். இதனை மீண்டும் பயன்படுத்த முடியும்.
=============================================================================================================
பெங்களூரு :பெங்களூரைச் சேர்ந்த ஒருவர், வறுத்த எண்ணெயில், தன் காரை ஒன்பது ஆண்டுகளாக ஓட்டி வருகிறார். இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை ஓட்டியும் காருக்கு எந்த பழுதும் ஏற்படவில்லை.
கர்நாடகாவில், பெங்களூருவைச் சேர்ந்தவர் அவினாஷ் நாராயணசாமி, 40. இவர், தன் காரை ஒன்பது ஆண்டுகளாக, வறுத்த எண்ணெயில் ஓட்டி வருகிறார்.

இதற்காக இவர் ஹோட்டல்களில் போண்டா, பஜ்ஜி சுடுவதற்கு பயன்படுத்தி, மீந்து போன எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்குகிறார். அதன்பின், பல்வேறு கட்டங்களில் சுத்திகரித்து, அந்த எண்ணெயை எரிபொருளாக மாற்றுகிறார்.

இதன்படி, 1 லிட்டர் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மி.லி., வரை எரிபொருள் கிடைக்கிறது. இதற்கான செலவும் லிட்டருக்கு, 60 முதல் 65 ரூபாய்தான். இவர், 2013 முதல் தன் காருக்கு இந்த எண்ணெயை தான் பயன்படுத்துகிறார். இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை ஓட்டி உள்ளார். இதனால், காரின் இன்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீ., வரை, 'மைலேஜ்' கிடைக்கிறது. இதை அனைத்து டீசல் வாகனங்களிலும் பயன்படுத்தலாம். மற்ற டீசல் வாகனங்களை விட புகையும் குறைவாக தான் உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பயோ' எரிபொருள் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.

இது தவிர சமையல் எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் போது, வீணாகும் கழிவுகளில் இருந்து கை கழுவும், வீட்டை சுத்தம் செய்யும் கிருமி நாசினியையும் தயாரிக்கிறார். இதன் வாயிலாக இவர், 'இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

=========================================================================================================================================================================================

 

நான் படிச்ச கதை

ஜெயக்குமார் சந்திரசேகரன்
***************

அவரோட ராத்திரிகள்!

கதையாசிரியர்கிரேஸி மோகன்


முன்னுரை

இன்றைய பதிவு ஒரு உப்பு சப்பில்லாத அழல் அமுதகம் பதிவாகத் தோன்றலாம். கதையை பற்றி ஒரு ஆராய்ச்சியோ, ஆசிரியர் அறிமுகமோ இல்லாமல்  Sirukathaigal இல் இருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட ஒரு விவரணம். விவரணம் என்பதை குறித்துக் கொள்ளவும். இது கிரேசி மோகன் எழுதியது. விகடன் பிரசுரம். கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், ‘ஊதுவத்தி ஸ்டாண்டையே முழுங்கிட்டான்போன்ற திடுக்கிடும் நகைச்சுவைகளை தருபவர் அவர். அது போல் தான் இந்தஅவோரட ராத்திரிகளும்’.

விவரணம் என்று சொன்னதற்குக் காரணம் இது கதையே அல்ல. சிறுகதைக்கான இலக்கணங்கள் ஒன்றும் கிடையாது. ஒரு மனிதரின் குணாதிசயமும் (character), அவர் படும் பாட்டையும் (திருடனும் அவரைத் தேடியே வருவது)  நகைச்சுவை நாடகம் போல் என்றாலும் நாடகம் அல்ல, துணுக்குத் தோரணமும் அல்ல. ஆகவே விவரணம் என்று சொன்னேன்.

கிரேஸி மோஹனைப் பற்றி பி வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும். கூடுதல் விவரங்கள் தரவில்லை. ரங்கபாஷ்யம் என்ற இக்கதையின் நாயகர் அவருடைய பெயரில் உள்ள ரங்காச்சாரி (மோகன் ரங்காச்சாரி) தானோ என்று ஒரு சின்ன சந்தேகம்.

இந்தக் கதை (விவரணம்) எனக்கு பிடித்ததின் காரணம் இது போன்ற சில அனுபவங்கள் எனக்கும்  ஏற்பட்டது என்பதாலும் தான். 

அவரோட ராத்திரிகள்!

கதையாசிரியர்: கிரேஸி மோகன்

தின/வார இதழ்: விகடன்

அவரோட ராத்திரிகள்’ – இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு .வி.சசியின் அவளோட ராத்திரிகள் மலையாள அடல்ட்ஸ்ஒன்லியின் சாயலை எதிர்பார்த்து விகல்பமான எண்ணத்தோடு வாசிக்க வருபவர்கள் ஏமாற்றமடைவீர்கள்.

தலைப்பில் உள்ள அவர் மயிலாப்பூரில் உள்ள எங்களது காலனியில் முன்பு குடியிருந்த திருவாளர் ரங்கபாஷ்யம்தான். நம்முடைய ரங்கபாஷ்யம் ராத்திரி நேரங்களில் உறங்குவது இல்லை. காரணம், கள்வர் பயம். எவருடைய இல்லத்துக்கு அதிக தடவை திருடன் வந்துள்ளான் என்று ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தால் உலக சாதனைப் புத்தகமானகின்னஸில்ரங்கபாஷ்யத்தின் பெயர் சேர்க்கப்பட்டாக வேண்டும். கேவலமான கறிவேப்பிலை திருடனில் ஆரம்பித்துகன்னம் வைத்துத் திருடும் கொள்ளைக்காரர்கள்வரை பலதரப்பட்ட திருடர்கள் இவர் வீட்டுக்கு விஜயம் செய்தாகிவிட்டது.

எனக்குத் தெரிந்து ரங்கபாஷ்யம் வீட்டுக்கு இதுவரை வருகை தராதவர் பூலான்தேவி மட்டும் தான்!

பூலான் தேவி சரண் அடைந்த செய்தி கேட்ட சந்தோஷத்தில் மனிதர் காலனியில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒருவேளை ரங்கபாஷ்யம் போன ஜன்மத்தில் இருளன், ஒற்றைக் கண் காட்டேரி போன்ற ஏதாவது பெயரில் பயங்கரமான தீவட்டிக் கொள்ளைக்காரனாக இருந்து பல அப்பாவிகள் சொத்தைச் சூறையாடியதால் இந்த ஜன்மத்தில் அவரைத் தெய்வம் நின்று கொல்கிறதோ என்னவோ..?

எந்த நேரமும் எந்த இடத்திலும் திருடன் ஒளிந்திருப்பான் என்பது ரங்கபாஷ்யத்தின் அசைக்க முடியாத வாதம். அவரோடு ஒரு நாள் முழுவதும் இருந்து அவரதுதிருடனைத் தவிர்க்கும் உபாயங்களைக் கவனிப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் திருட்டுப் போய்விடுமே என்ற பயத்தில் கைவசம் காலணா காசு கூட அவர் வைத்துக் கொள்வதில்லை. பிச்சைக்காரனுக்குக்கூடசெக்வெட்ட வேண்டிய நிலை!

கறிகாய்க்காரியாக இருந்தாலும் சரி. குடை ரிப்பேர்க்காரனாக இருந்தாலும் சரி; எல்லோரிடமும் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு மாதக் கடைசியில் தான் அவர்செக்விநியோகிப்பார்.

தினமும் கனகாரியமாகபாங்க்குக்குச் சென்று தனது அக்கவுண்ட்டிலிருந்து அன்றைய செலவுகளான பஸ் சார்ஜ்லஞ்ச்நேர டிபன், மனைவிக்கு மல்லிகைப்பூ, மகனுக்கு சிலேட்டு பல்பம் முதலியவற்றுக்குத் தேவையான பணத்தை பாங்க்கிலிருந்து எடுத்துக்கொண்டு ஆபீசுக்குச் செல்வது வழக்கம்.

அதுவும் எப்படி…. அந்தப் பணத்தை எவனும் ஜேப்படி அடித்துவிட முடியாதபடி பர்ஸை மேனியில் அவருக்கு மட்டுமே தெரிந்த மர்ம இடங்களில் பதுக்கி வைத்துவிடுவார். கஸ்டம்ஸ் அதிகாரிகள் கூட கண்டு பிடிப்பது கஷ்டம்.

திருட்டுப் போவதைத் தவிர்ப்பதற்காக ரங்கபாஷ்யம் கையாளும் முன்னெச்சரிக்கைகள் நமக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவை நினைவுபடுத்தும்.

சாதாரணமாக நமது வீட்டில் உள்ள கதவுகள் உள்புறமாகத் திறந்து கொள்ளும். ரங்கபாஷ்யம் ஸ்பெஷலாகத் தச்சனிடம் சொல்லி, கதவுகளை வெளிப்புறம் திறக்குமாறு அமைத்துக் கொண்டிருக்கிறார்.

கதவைத் தட்டுபவன் கள்வனாக இருக்கும் பட்சத்தில் ரங்கபாஷ்யம் படாரென்று கதவை உள்ளிருந்து வெளிப்புறம் திறந்து திருடனைச் சுவரோடு சுவராகத் தேய்த்துவிடுவார்.

ரங்கபாஷ்யத்தை மிகவும் அறிந்தவர்கள் அவர் வீட்டுக்கு வந்தால் கதவைத் தட்டி விட்டு உடனே தொலைவாக ஓடிவிடுவது வழக்கம். இந்தக் கதவு ஆபத்துக்குப் பயந்து விருந்தாளிகள் பலர் வருவதில்லையாதலால் ரங்கபாஷ்யத்துக்கு வீண் செலவுகளும் மிச்சம்.

சாதாரண பூட்டைப் போட்டால் குடைக்கம்பியால் திறந்துவிடுவார்கள் என்ற பயத்தில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆலய நிர்வாகிகளிடம் விசாரித்துப் பிரமாண்டமான சைஸில் பூட்டு தயாரித்து வைத்திருக்கிறார் ரங்கபாஷ்யம்.

அத்தனை பெரிய பூட்டைப் போட்டுப் பூட்டியும் நம்பிக்கை வராமல் ரங்கபாஷ்யம் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் பூட்டைப் பிடித்துத் தொங்கி அரைமணி நேரம் ஊஞ்சல் ஆடிவிட்டுச் சரி பார்ப்பார்.

இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களுக்குக்கூட ரங்கபாஷ்யம் பூட்டு போடுவதாக ஒரு வதந்தி நம்பகமான வட்டாரங்களில் உலவுகிறது.

இத்தனை பாதுகாப்புகளையும் மீறித் திருடன் வந்தால், அவன் திருடுவதற்கு ரங்கபாஷ்யத்தின் வீட்டின் உள்ளே ஒரு துரும்புகூடக் கிடையாது. தட்டுமுட்டுச் சாமான்களில் ஆரம்பித்து தங்கம், வெள்ளி வரை அனைத்தையும் ரங்கபாஷ்யம் ஒரு பிரபல வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் போட்டு வைத்திருக்கிறார். ஒரு கல்யாணம் கார்த்திகை என்றால் கூடப்பட்டுப்புடவை கட்டிக்கொள்ள ரங்கபாஷ்யத்தின் மனைவி வங்கிக்குச் செல்ல வேண்டும்.

சைக்கிள் திருடர்களுக்குப் பயந்து வீடு திரும்பியவுடன் தன் சைக்கிளின் இரண்டு டயர்களிலும் உள்ள காற்றைப் பிடுங்கி விட்டுவிடுவார். அப்படியும் விடாக் கொண்டனாகத் திருட வரும் போது சைக்கிள்பம்ப்போடு வந்து டயருக்குக் காற்றடித்துத் திருடும் திருடர்கள் சீட்டில் ஏறி அமர்ந்தவுடன் அலறிப் புடைத்துக் கொண்டு கீழே குதித்து சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

ரங்கபாஷ்யம் சமயோசிதமாக சைக்கிள் சீட்டின் அடியில் கண்ணாடித் துண்டுகளைப் பரப்பி வைத்திருப்பது தான் காரணம்!

இருட்டாகவும், அதே சமயத்தில் குறுகலாகவும் இருக்கும் தெருக்கள், புதர் மண்டிக் கிடக்கும் மைதானங்கள் போன்ற இடங்களைக் கூடிய மட்டும் ஒதுக்கிவிடுவார். அப்படி ஒரு வேளை அம்மாதிரி இடங்களுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பங்களில் தனியாகச் செல்லாமல் நண்பரோடு செல்வார். அம்மாதிரி சமயங்களில், பதுங்கியிருக்கும் திருடர்களைப் பயமுறுத்துவதற்காக அனாவசியமாக நண்பரிடம் டெபுடி கமிஷனர், சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டேபிள் போன்ற வார்த்தைகள் நொடிக்கு ஒரு தரம் உரக்கச் சொல்லிக்கொண்டே வருவார். பார்ப்பவர்களுக்கு ரங்கபாஷ்யத்தின் நண்பர் டமாரச் செவிடோஎன்று நினைக்கும் அளவுக்கு உரத்துப் பேசுவார். பஸ், டாக்ஸி, ஆட்டோ ஸ்டிரைக் காலங்களில் இரவில் அலுவலகத்திலிருந்து தனியே நடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஜன சந்தடியற்ற வீதிகளை விலக்கி, நடக்கும் சிரமத்தைப் பார்க்காமல் பரபரப்பான பிரதான வீதிகளின் வழியாக வருவதுதான் ரங்கபாஷ்யத்துக்கு வழக்கம்.

நாமெல்லாம் அலுத்துக் கொள்கிற அண்ணா சாலை ஊர்வலங்கள் ரங்கபாஷ்யத்துக்கு அல்வா துண்டு போல இனிக்கும். ஊர்வலத்தோடு ஊர்வலமாகக் கலந்து நிம்மதியாக வீடு வரலாம் அல்லவா?

ஒருமுறை நவராத்திரியின் போது பொம்மைகளைப் பரணிலிருந்து எடுக்கும் போது (பொம்மைகளைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துக்கொள்ள பாங்க் மறுத்ததால்…) ஒருவேலை பரணில் பதுங்கியுள்ள திருடன் பாய்ந்துவிடுவானோ என்ற அச்சத்தில் ரங்கபாஷ்யம் போலீஸ் பந்தோபஸ்தைக்கூட நாடியதாகக் கேள்வி.

ஏன் என்றே தெரியவில்லை, ரங்கபாஷ்யம் குடி வருவதற்கு முன்பு எங்கள் காலனியில் அவ்வளவாகத் திருட்டுப் பயம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் ரங்கபாஷ்யம் மயிலாப்பூருக்குக் குடி வந்த காரணமே, தாம் முன்பு இருந்த பாலவாக்கத்தில் திருட்டுப் பயம் அதிகமாக இருந்தது என்பதால் தான்.

பாலவாக்கத்தில் இவர் இருந்த போது ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியவர் வாசல் கதவு விரிய திறந்து கிடப்பது கண்டு உள்ளே ஓடியிருக்கிறார்.

நடு ஹாலில் மனைவியும், இரு மகள்களும் வாயில் கர்சீப்போடு கை கால்களில் கயிறு கட்டப்பட்டு ஒரு மூலையில் தஞ்சாவூர் பொம்மை போல புவியீர்ப்புத்தானத்தை எதிர்த்துப் பக்கவாட்டில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து வாயைப் பிளந்தவர், மூத்த மகளின் கண் ஜாடை காட்டிய தனது படுக்கை அறையில் சப்தம் போடாமல் நுழைந்திருக்கிறார்.

அங்கு ஒரு திருடன் சுத்தமாக சம்மணமிட்டு அமர்ந்து பீரோவிலிருந்து எடுத்துப் போட்ட பணம், நகைகள், பாத்திரங்களைச் சாவதானமாகப் பிரித்து, தனித்தனியே கூறு போட்டு ஏதோ மறந்துவிட்டு, வைத்ததை எடுத்துச் செல்ல வந்தவன் போல சுவாரஸ்யமாகத் திருடிக் கொண்டிருந்தான். ரங்கபாஷ்யமும் விடாமல் அவன் எதிரில் சென்று அமர்ந்து, “ஏம்பா திருடா, உனக்கே இது நல்லா இருக்கா? இப்படி பட்டப் பகல்ல அநியாயம் பண்ணறியே?” என்று வினவஅவனும் முகத்தில் எந்தவித அதிர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல், “ஸாரி சார்…. நீங்க வந்ததை நான் கவனிக்கலைமன்னிச்சுடுங்கஎன்று கூறிவிட்டு, எதையும் தொடாமல் நைஸாக நழுவிவிட்டான். இதற்கு மேலும் பாலவாக்கத்தில் குடியிருந்தால் தான் எப்பொழுது ஆபீசிலிருந்து திரும்பினாலும் மனைவியையும் மகள்களையும் எவனாவது மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒய்யாரமாகக் களவாடிக் கொண்டிருப்பார்கள் என்ற பீதியில் பரபரப்பான மயிலாப்பூருக்கு வந்தார்.

இவர் வந்த நாளிலிருந்து இங்கும் திருட்டு ஜாஸ்தியாகிவிட்டது. வந்த முதல் நாளே எங்களின் இரவு தூக்கத்தை இவரது, “திருடன், திருடன்என்கிற தீனக்குரல் தான் கலைத்தது.

எழுந்து வந்து பார்த்தால், இவர் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கையில் இவரைவிட உயரமாக ஒரு கம்பை வைத்துக் கொண்டு (திருடனை அடிப்பதற்கா, இல்லை அவனுக்குப் பயந்து போல்வால்ட் ஜம்ப் செய்து தப்பிப்பதற்கா. தெரியவில்லை….) “திருடன் திருடன்என்று கத்திக் கொண்டிருந்தார். மறுநாள் காலை விசாரித்ததில் இருவர் வீடுகளில் சொக்காய் நிஜார்கள், கொல்லைப்புறம் போட்டிருந்த வெந்நீர் தவலை, மரத்தில் காய்த்த இரண்டு பலாப்பழங்கள் திருட்டுப் போனது தெரிந்தது.

இப்படிச் சாதாரணமாக ஆரம்பித்த திருட்டுப் பயம், படிப்படியாக விசுவரூபமெடுத்து எங்கள் காலனியில் உள்ளவர்களைக் கதிகலங்க வைத்தது. ரங்கபாஷ்யத்தைப் போல அத்தனைச் சாமான்களையும் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் போட்டுவிட்டு நம்மால் வேட்டியும் சொக்காயுமாக எளிமையாகத் திரிய முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களை வாட்டியது.

திடீரென்று ஒரு நாள் திருவாளர் ரங்கபாஷ்யம் தான் புது வீடு சொந்தமாகக் கட்டிக்கொண்டு கே.கே.நகருக்குச் செல்வதாகக் கூறினார். கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்கிறேன். அவர் சென்ற நாளிலிருந்து இன்றுவரை எங்கள் காலனியில் எதுவும் திருட்டுப் போகவில்லை.

பி.கு: ரங்கபாஷ்யம் கே.கே நகரில் கிரகப்பிரவேசம் நடத்திய அன்று வெளியான பத்திரிகைகளில் கீழ்க்கண்ட செய்தி பிரசுரமாகியிருந்தது:

கேகே நகரில் வழிப்பறி. கே.கே நகருக்கருகே சைக்கிளில் வந்த திருடர்கள்…’

- ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடைவிகடன் பிரசுரம்

22 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. பவானி பாட்டி பிரமிக்க வைக்கிறார் வாழ்க வளமுடன்.

    ராமர் பிள்ளை மாதிரி இவருக்கும் பிரச்சனை வராமல்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    தன் முயற்சியால், வீதிகள்தோறும் அலைந்து திரிந்து நொறுக்குத்தீனிகளை விற்று, தன் குடும்பத்துக்காக தன் உழைப்பை தந்து திருப்தியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் 79 வயதான அந்த பெண்மணியை வாழ்த்தி, வணங்குவோம். சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த பகிர்வுக்கு நன்றி.

    விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மீன் வடிவ ரோபோ பற்றிய செய்தி அருமை.

    எண்ணெய் பலகாரங்களில் மீதமாகும் எண்ணெயைக் கொண்டு எரி பொருளாக உற்பத்தி செய்து சாதனை படைத்த பெங்களூர் இளைஞரையும் பாராட்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும். அருமை. கிரேஸி மோகன் அவர்களின் நகைச்சுவை எப்போதுமே நன்றாக இருக்கும். இன்று அவர் எழுதிய கதையும் இடையிடையே நகைச்சுவை மிளிர படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. நம் நினைப்பும், எண்ணங்களுமே என்றும் பலிதமாகி விடும் என்ற கருத்தை கதை வலியுறுத்துகிறது.படித்து ரசித்தேன்.

    கதையைப் பற்றியும், கதாசிரியர் பற்றியும், சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த விளக்கங்களும் நன்றாக உள்ளது. இன்றைய இக்கதை பகிர்வுக்கு சகோதரருக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம் நினைப்பும், எண்ணங்களுமே என்றும் பலிதமாகி விடும் என்ற கருத்தை கதை வலியுறுத்துகிறது.படித்து ரசித்தேன்.// 
      ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது வேறு ஒன்று என்றே எனக்கு அமைகிறது. 
      Jayakumar

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உண்மை. நான் சொன்னது பொதுவாக அனைவருக்கும். எனக்கும் நினைப்பது ஒன்றாக, நடப்பது ஒன்றாகத்தான் அமைகிறது. என்ன செய்ய? விதி வழியே பயணம் என்கிற மாதிரி எதையும் அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவரும் ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. முதல் இரண்டு செய்திகளும் அறியாதவை. அவர்களைப் பாராட்டுவோம். பவானிப் பாட்டியின் மனோபலம் பார்த்து இன்றைய இளைய தலைமுறை திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. சுட்ட எண்ணெயில் வண்டி ஓட்டும் செய்தி படிச்சேன் முன்னாடியே. அதான் ஏற்கெனவே பாமாயில் போன்ற சில சமையல் எண்ணெய்கள் க்ரூட் ஆயிலில் இருந்து தயாரிப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்காங்களே! அதனால் இது ஒண்ணும் ஆச்சரியமாக இல்லை.

    பதிலளிநீக்கு
  8. மீந்து போன எண்ணெய்...?!!!!

    வெங்கோலன் கும்பலுக்கு குறிப்பாக, இவறல் தலைமைக்கு தெரிந்தால் 28% GST...

    பதிலளிநீக்கு
  9. கிரேசி மோகனும் இப்படி எல்லாம் சுமாராக எழுதுவார் என்பதை ஏற்கெனவே படிச்சுத் தெரிந்து கொண்டிருக்கேன். :(

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  11. திருமதி.பவானியின் நேர்மையும் உழைப்பும் மனதை நெகிழ வைக்கிறது! அவரின் மன உறுதி இன்றைய இளைஞர்களுக்கு பரவ வேண்டும்!
    அவினாஷ் நாராயணசாமியின் சாதனை பிரமிக்க வைக்கிறது1

    பதிலளிநீக்கு
  12. வயதானாலும் மனம் தளராது உழைக்கும் கரத்தை வாழ்த்துகிறோம்.

    கதை செம சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  13. முதல் செய்தியில் பவானி அவர்களை பற்றி படித்து இருக்கிறேன், அவர்கள் பேட்டியும் கேட்டு இருக்கிறேன்.
    இரண்டாவது செய்தி இப்போதுதான் படிக்கிறேன்.
    பெட்ரோல் விலை ஏறி கொண்டே இருக்கிறது சுட்ட எண்ணெயில் கார் ஓடுவது நல்ல செய்திதான்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  15. ஆடிக் கிருத்திகை..

    கோயிலுக்குச் சென்று வந்ததில் தாமதம் ஆகி விட்டது..

    பதிலளிநீக்கு
  16. முறுக்கு விற்கும் மூதாட்டி மனதில் நிற்கின்றார்..

    பதிலளிநீக்கு
  17. கிரேசி மோகன் மனதை ஈர்த்ததில்லை..

    அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
  18. கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.

    புதிதாக போன இடத்தில் திருடன் வந்து விட்டான்.

    எண்ணம் போல திருடன் வந்தான் போலும்.

    பதிலளிநீக்கு
  19. பானுமதி வெங்கடேஸ்வரன்25 ஜூலை, 2022 அன்று AM 7:39

    பவானி அவர்களைப் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். அவினாஷ் அவர்களின் கணாடுபிடிப்பு ஒரு மைல் கல்.

    பதிலளிநீக்கு
  20. பானுமதி வெங்கடேஸ்வரன்25 ஜூலை, 2022 அன்று AM 7:42

    கிரேஸி மோகனின் கதை கிச்சு கிச்சு மூட்டியது. சனிக்கிழமை படிச்ச கதை பகுதிக்கு தவறாமல் பங்களிப்பதன் மூலம் சனிக்கிழமை சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பு திரு.ஜெயகுமார் அவர்களுக்கு இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!