சனி, 16 ஜூலை, 2022

விவசாயத்தில் கோடி ரூபாய்... மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

 

சாதனைகளுக்கு வயது தடை அல்ல ! 

94 வயதான ஹரியானா ஓட்டப்பந்தய வீராங்கனை பகவானி தேவி பின்லாந்தில் இந்தியாவுக்காக 3 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார்.

வயதை நிரூபிப்பது வெறும் எண், 94 வயதான இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை பகவானி தேவி, தம்பேரே உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.

100 மீட்டர் தூரத்தை 24.74 வினாடிகள் நேரத்தில் ஓடி  , அவர் தங்க பதக்கத்தை வென்று வந்தார்.

குண்டு எறிதலில் பகவானி வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

"இந்தியாவின் 94 வயதான #பகவானிதேவி ஜி வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்! அவர் #உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் 100மீ ஸ்பிரிண்ட் போட்டியில் 24.74 வினாடிகளில் தங்கப் பதக்கம் வென்றார். அவர் ஷாட்காமில் ப்ரோன்ஸெட் பட்டத்தை வென்றார். !," என்று விளையாட்டுத் துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.


 பின்லாந்தில் நடைபெற்று வரும் 2022 உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் இரண்டு பதக்கங்களை வென்ற 94 வயதான பகவானி தேவிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.

= = = = = ==================================================================================

தஞ்சாவூர்-'கஜா' புயலில் வீடு சேதமடைந்து, சிரமப்பட்டு வந்த மாணவர் குடும்பத்துக்கு, தஞ்சாவூர் கலெக்டர் முயற்சியில், புதிய வீடு கட்டித் தரப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 47; இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகன் வேல்முருகன், 17; பிளஸ் 2 முடித்து, மேற்படிப்புக்காக, தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லுாரியில் விண்ணப்பித்துள்ளார்.கடந்த, 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில், இவர்கள் வசித்த கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது. தொடர் மழையால், கூரை வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது

.குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்திய தமிழ்செல்வி, சேதமான வீட்டிலேயே மகன் வேல்முருகன் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.கடந்த ஆண்டு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் மொபைல் போன் எண்ணுக்கு, மாணவர் வேல்முருகன், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தன் கஷ்ட நிலையை தெரிவித்தார்.இதையடுத்து, மாணவரின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்த கலெக்டர், அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பசுமை வீடு கட்டும் திட்டத்துக்கு, மாணவரை விண்ணப்பிக்க வைத்தார்.

அதன்படி, வீடு கட்டும் ஆணை பெற்று, அரசு சார்பில் மானியமாக, 1.80 லட்சம் ரூபாய் கிடைத்தது. கூடுதல் தொகை தேவைப்பட்டதால், தொண்டு நிறுவனத்திடம் தெரிவித்து கலெக்டர் ஏற்பாடு செய்தார். இரண்டு மாதத்தில் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, மாணவர் வேல்முருகன் குடும்பத்தினரிடம் புதிய வீட்டை கலெக்டர் ஒப்படைத்தார். ஏழை குடும்பத்தினர், கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

====================================================================================================

புதுக்கோட்டை:புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவியின் செயல்பாடுகள் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின், ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 18; பி.ஏ., வரலாறு படிக்கிறார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் -1 படித்த போது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.


அதற்கு உதவ முன் வந்த கிராமலாயா என்ற தொண்டு நிறுவனத்திடம், 'கிராம மக்கள் பலர் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், வீட்டுக்கு ஒரு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுங்கள்' என்று கூறினார். இதையடுத்து, கிராமலாயா தொண்டு நிறுவனம், 126 வீடுகளுக்கு கழிப்பறை கட்டி கொடுத்ததால், அதற்கு காரணமான மாணவியை பலரும் பாராட்டினர்.

மாணவி ஜெயலட்சுமியின் செயல் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின், ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது. இதை, சிவா என்பவர் எழுதியுள்ளார். பாடம் வெளியானதற்கு மாணவி ஜெயலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.

=================================================================================================================

திருவாரூர் : திருவாரூர் அருகே, 100 வயதான முதியவர், தன்னம்பிக்கையுடன், கொல்லுப்பட்டறை நடத்தி சம்பாதித்து, மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

திருவாரூர் அருகே அலிவலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு, 100. இவரது மனைவி அம்சவள்ளி, 87. இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள். அவர்களில் ஒரு மகன், மகள் இறந்து விட்டனர். மகனும், மகளும் காரைக்கால் பகுதியில், அவரவர் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இளைய மகன் காரைக்காலில் வெல்டராக பணிபுரிகிறார். அலிவலம் கிராமத்தில், மூன்று தலைமுறையாக, கோவிந்தராசு குடும்பத்தினர் கொல்லுப்பட்டறை நடத்தி வருகின்றனர். இங்கு, அப்பகுதி விவசாயிகள், அரிவாள், மண்வெட்டி போன்ற விவசாய கருவிகளை கூர்மைபடுத்தி செல்கின்றனர்.


இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, மனைவியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார் இந்த முதியவர்.கோவிந்தராசு கூறியதாவது:நான், 15 வயதில் கொல்லுப்பட்டறை தொழிலுக்கு வந்தேன். அன்று முதல், இத்தொழிலை செய்து வருகிறேன். இதில் கிடைத்த வருமானத்தை வைத்து தான், மகன்கள், மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தேன்.முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஒருவரும் உள்ளார். முதல் மனைவி இறந்த பின், 32 வயதில், இரண்டாவது திருமணம் செய்தேன்.

ஒரு நாளைக்கு, 200 - 300 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுவும் நிரந்தரம் அல்ல. சில நாட்கள் வருமானம் வராது. கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறோம்.வயதாகி விட்டதால் வேலை செய்ய முடியவில்லை. முதியோர் உதவித்தொகை, 1,000 ரூபாய் கிடைக்கிறது. அந்த தொகை, மருந்து, மாத்திரை வாங்குவதற்கு சரியாகிவிடும். என் மகன், மகள் அவ்வப்போது வந்து பார்த்துச்செல்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.

=============================================================================================================

விவசாயத்தில் கோடி கணக்கில் ரூபாய் அள்ளமுடியுமா?

அது மட்டும் இல்லாமல் தனது முருங்கை சாகுபடியில் good லீப் என்ற நிறுவனத்தை நிறுவி முருங்கையில் பல்வேறு விதமான byப்ராடக்ட்ஸ் கொண்டு வந்து இன்றைய பெண்மணிகளுக்கு ஒரு அசத்தலாக இருக்கிறார்.  குழந்தையில் இருந்து தீபிகா தான் வசிக்கும் கிராமத்தில் விளைபொருட்களை விற்க போதுமான சந்தைகள் கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் பல சோதனைகள் மற்றும் இன்னல்களைப் பார்த்துள்ளார்.

தனது தந்தையும் விவசாயி என்பதால் விவசாயம், விளைபொருட்கள் அதன் வர்த்தகம் குறித்து அவரிடம் நிறையப் பேசியுள்ளதாகவும், அப்போது கரூர் பகுதியில் முருங்கை அதிகப்படியான விளைவது குறித்துத் தனது தந்தை கூறியுள்ளதாகவும் தீபிகா குறிப்பிடுகிறார மதிப்பு கூட்டுப் பொருட்கள் அப்படிப் பேசும் போதும் விவசாயத்தில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் மற்றும் அதன் மூலம் உருவாக்கும் வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தீபிகாவிற்குத் தனது தந்தை விளக்கியுள்ளார்.

இதை அடி மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட நிலையில் படிப்பை முடித்ததும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தகத்தில் இறங்குவது என முடிவு செய்தார். படிப்பு டூ பிஸ்னஸ் தீபிகா Actuarial Science பிரிவில் எம்எஸ்சி பட்டம் பெற்ற பின்னர்க்கரூர் பகுதியில் அதிகம் விளையும் முருங்கையில் அனைத்து விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பது, அதை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாமல் இருப்பதும் உணர்ந்துள்ளார். தனது தந்தை ரவி வேலுசாமி இதன் மூலம் முருங்கையை அடிப்படையாகக் கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்த தீபிகா, 2018ல் தனது தந்தை ரவி வேலுசாமி உடன் இணைந்து நிறுவனத்தைத் துவங்கி இன்று கோடிகளை அள்ளுகிறார் என்றால் மிகையில்லை. GOOD LEAF நிறுவனம் தீபிகா தனது தந்தை உடன் இணைந்து GOOD LEAF என்ற நிறுவனத்தை உருவாகி, முருங்கையில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உடன் பல்வேறு அழகு சார்ந்த பொருட்களைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.  200 விவசாயிகள் கரூர், திண்டுக்கல், வேலூர் எனப் பல பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து முருங்கை சார்ந்த பல பொருட்களைக் கிலோவிற்கு 5 முதல் 100 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்து வருகிறார். இதுமட்டும் அல்லாமல் பல ஏக்கரில் முருங்கை விவசாயமும் செய்து வருகிறார். முக்கிய வர்த்தகப் பொருட்கள் தீபிகாவின் GOOD LEAF நிறுவனம் தற்போது முருங்கை பவுடர், முருங்கை பாட் (POD), முருங்கை ரைஸ் மிக்ஸ், முருங்கை சட்னி பவுடர், முருங்கை டீ வரையிலும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் முருங்கை கேப்ஸ்யூல், சோப், பேஸ் ஸ்கிரப், ஹேர் ஆயில், ஹேர் சீரம் முதல் முருங்கை பேஸ் பேக்ஸ் எனப் பல பொருட்களைத் தயாரித்துள்ளார். முருங்கை ஹெர்பல் டீ தற்போது முருங்கை ஹெர்பல் டீ மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், பேஸ் பேக்ஸ் 250 முதல் முதல் 490 ரூபாய் வரையில் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுவதாகத் தீபிகா கூறியுள்ளார்.  GOOD LEAF பொருட்கள் தற்போது ரீடைல், ஆன்லைன் என அனைத்து வர்த்தகச் சந்தையிலும் விற்பனை செய்து வருகிறார் தீபிகா. கோடி ரூபாய் வர்த்தகம் தீபிகாவின் GOOD LEAF நிறுவனத்தில் தனது தந்தையும் துணை நிறுவனராக இருக்கிறார். இந்நிறுவனத்திற்குக் கரூர்-ல் 10 பேர் பணியாற்றும் உற்பத்தி தளம் உள்ளது. இந்தக் கட்டமைப்பைக் கொண்டு தீபிகா கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறார்.  (நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்)

==================================================================================================== 

 

நான் படிச்ச கதை

ஜெயக்குமார் சந்திர சேகரன்

*****************

மருமகள் வாக்கு

 

தலைப்பில் சிலேடை உள்ளது. வாக்கு என்பது சொல் அல்லது பேச்சு என்றும், ஓட்டு என்றும் இருவிதமாக பொருள் கொள்ளும்படி கதை அமைகிறது. அதுபோன்று பல உதாரணங்கள்  உபமேயங்கள், பகடிகள் கதையில் இருக்கின்றன. கதையை ஆழ்ந்து படிப்பவருக்கே அவை புலப்படும். கட்டுரையின் கடைசியில் எனக்குப் புரிந்த சிலவற்றை விளக்குகிறேன்.

கதை மாமியார் மருமகள் கதை தான். இனி கதை ஆசிரியர் கண்ணோட்டத்தில் கதை மாந்தர்களை  விவரிப்பதைக் காண்போம்.

 மாமியார் மீனாட்சி அம்மாள்

 மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்குக் கிரயம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன், ஸாது. தகப்பன் வேலையைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் போட்டுக் கொடுத்துவிட்டது அவனுடைய அதிர்ஷ்டந்தான். கல்யாணமும் பண்ணி வைத்துவிட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா?

மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால்படிப் பாலை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கந்தான். கடனுக்குத்தான் இந்தக் கடங்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே!

மருமகள் ருக்மிணி

ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக்கில்லாமல் செய்துவிடுவாள். சமையலில் அவளுக்கு நல்ல கை மணம். வெறும் வற்றல் குழம்பும் கீரைக் கறியும் பண்ணிப் போட்டால் கூடப் போதும்; வாய்க்கு மொரமொரப்பாக இருக்கும். (மாமியார்கள் எப்போதும் ஏதேனும் குற்றம் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாம் மருமகள்காரிகள் திருந்துவதற்கும் மேலும் மேலும் முன்னேறுவதற்கும் தானே.) ருக்மிணிக்குப் பால் கறக்கவும் தெரியும்.

மாமியாருடைய ஆளுமை

பலரும் பேசுவார்கள்; ஒன்றையும் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது, பதில் பேசவும் கூடாது. ஏன் யாரிடமும் எதுவுமே பேசாமலிருப்பது ரொம்ப ரொம்ப உத்தமம். நாம் உண்டு, நம் காரியம் உண்டு என்று இருந்துவிட வேண்டும்.” இப்படி, மருமகள் வந்த அன்றே மாமியார் புத்திமதிகள் கூறியாகிவிட்டது.

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உள்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்க்ஸில் பணம் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான்.

ருக்மிணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, `பெண்டிற்கழகு உண்டி சுருக்குதல்என்று மீனாட்சி அம்மாள் அட்சரச் சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவதுபோல் தோன்றும் ருக்மிணிக்கு. மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச் சதை போட்டுவிடும் என்று மாமியார் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று மருமகள் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

இரவு நேரத் திண்ணை வம்புகளின்போது, “மாட்டுப் பெண் எப்படி இருக்கா?’’ என்று துளைக்கிறவர்களிடம், “அவளுக்கென்ன, நன்னார்க்கா’’ என்று மேல் அண்ணத்தில் நா நுனியை அழுத்திப் பதில் சொல்லி அடைத்துவிட்டு அடுத்த விஷயத்துக்கு நகர்ந்து விடுவாள் மீனாட்சி அம்மாள். “அவளா? அவளை ஜெயிக்க யாரால் முடியும்?’’ என்பார்கள் ஊர்ப் பெண்கள், ஒருவித அசூயையுடன்.

கதைத்  துவக்கம்.

மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டு பட்டு நின்றது……

தேர்தலுக்கு முன்தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. “ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?’’ என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. “ஏண்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா?’’ என்றாள் மீனாட்சி அம்மாள். “ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?’’ என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. “பொண்டுகளா, என்னயும் அவளயும் பிரிச்சாப் பேசறேள்? நானும் அவளும் ஒண்ணு, அது தெரியாதவா வாயிலே மண்ணு’’ என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

தேர்தல் நாள்

மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வோட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டாள்.

மத்தியான உணவுக்குப் பிறகு வழக்கமாகிவிட்ட சாப்பாட்டு மயக்கத்தில் மீனாட்சி அம்மாள் தாழ்வாரத்து நிலைப்படியில் தலைவைத்துப் படுத்துக் கிடந்தாள். ருக்மிணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக் கொண்டிருந்தாள்.

நான் இன்னிக்கு ஓட்டுப் போடப் போறேன். ஒனக்கு அந்த ஒபத்ரவம் ஒண்ணும் கெடையாது. நான் ஆருக்குப் போடணும் நீ சொல்லு. செல்லுவியா? நீ ஆருக்குப் போடச் சொல்றயோ அவாளுக்குப் போடறேன். ஒனக்குப் பூனை பிடிக்குமோ? கிளி பிடிக்குமோ? சொல்லு, எனக்கு ஆரப் பிடிக்குமோ அவாளைத்தான் ஒனக்கும் பிடிக்கும், இல்லையா? நெஜமாச் சொல்றேன், எனக்குக் கிளியைத்தான் பிடிக்கும். கிளி பச்சப்பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதுமாதிரி பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா, அதைவிடக் கிளியைப் பிடிக்கும். ஆனா பூனைக்குக் கிளியைக் கண்டாலே ஆகாது.’’

பசு அவளை நிமிர்ந்து பார்த்து, `ம்மாஎன்று கத்திற்று. “போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக்குட்டியைக் குடிக்க விடறேன். மணி மூணுகூட இருக்காதே. அதுக்குள்ள ஒனக்கு அவசரமா?’’ பால் கட்டி மடி புடைத்துக் காம்புகள் தெறித்து நின்றன.

மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல, இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். கிணற்றடியில் கை, முகம் எல்லாம் கழுவிக்கொண்டு ருக்மிணி வீட்டுக்குள் வந்தாள். “சரி, சரி, தலய ஒதுக்கிண்டு, நெத்திக்கிட்டுண்டு பொறப்படு’’ என்று மாமியார் முடுக்கவும்,.....படி இறங்கியவளைக் கையைத் தட்டி, “இந்தா, சொல்ல மறந்துட்டேனே, ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ’’ என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, “ஞாபகம் வைச்சிண்டிருக்கியா? தப்பாப் போட்டுடாதே. ஒரு சீட்டு தருவா. பூனப் படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனப் படத்துக்குப் பக்கத்திலெ முத்திரை குத்திடு. வழிலெ இதுகள்கிட்ட வாயெக் குடுக்காத போ’’ என்றாள்.

ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளைக் கண்டவள் இல்லை. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே! ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்துகொண்டிருந்தது.

ருக்மிணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அனிச்சமரத்தின் ஒரு நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி சிவந்த மூக்குடன் பறந்து வந்து உட்கார்ந்து கிரீச்சிட்டது கிளை மேலும் கீழுமாக ஊசலாடியது. என்ன ஆச்சரியம்! `கிளியே, வா! நீ சொல்ல வேண்டியதில்லை. என் ஓட்டு உனக்குத்தான். முன்பே நான் தீர்மானம் செய்தாயிற்று. ஆனால், என் மாமியாரிடம் போய்ச் சொல்லிவிடாதே. பூனைக்குப் போடச் சொல்லியிருக்கிறாள் அவள். நீயே சொல்லு, கிளிக்குப் போடாமல் யாராவது பூனைக்குப் போடுவார்களா? என் மாமியார் இஷ்டத்துக்கு வித்தியாசமாக நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்ய, சொல்லு?....

கடைசியில் ஒரு ஸ்கிரீன் மறைப்புக்குள் எப்படியோ தான் வந்துவிட்டதை ருக்மிணி உணர்ந்தாள்.

ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. ‘ஸ்வாமி. என்ன அவஸ்தை இது!’ பற்கள் அழுந்தின. `ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமேஎன்ற நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்க மருகும் பசுவும், கட்டிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் `ம்மாம்மாஎன்று அவள் செவிகளில்அலறிப் புடைக்கலாயின.

, கிளி! கிளிக்கு எதிரே முத்திரை நெருங்கிவிட்டது. இப்போது ஒரு கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட்டு, `யாரது?’ என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால், அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்தது என்னவோ நிஜந்தான். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்துவிட்டது. ! ருக்மணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு!

பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள். அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், “ருக்கு, யாருக்குடி போட்டே?’’ என்று ஒருத்தி கேட்க, “எங்க மாமியாருக்கு’’ என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயிலிருந்து வெளிப்படவும் கூடி நின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள்

 நான் கதை ஆசிரியர் பெயரை தலைப்பில் கூறவில்லை என்பது தெரியும் அல்லவா? ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.

1.    அசோகமித்ரன் 2. சுந்தர ராமசாமி  3. கிருஷ்ணன் நம்பி

கதையில் பல உருவகங்கள், உபமேயங்கள், பகடிகள் உள்ளன என்று முன்பே சொல்லியிருந்தேன். எனக்குப் புரிந்த சில.

வாக்கு: சொல், ஓட்டு. ருக்கு சொல்வதுஎனக்கு கிளியைப் பிடிக்கும். கிளிக்குத்தான் என் ஓட்டு.” இது வாக்கு, ஒட்டு போட்டது யாருக்கு !!!

பூனை, கிளி: ஆசிரியர் மாமியாரை பூனையாக, மருமகளை கிளியாக காட்ட வேண்டி பூனை, கிளி சின்னங்களை தேர்ந்தெடுத்தார் என்பது என் ஊகம்.

மாடு, பால்: ருக்மணி மாடாய் உழைத்து தரும் பலன்கள் (பால்), பயனை அனுபவிப்பது மீனாட்சி மாமியார் தான் (உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு என்று சரியான சாப்பாடு போலும் இல்லாதாக்குவது)

தேர்தல்: தலைமை யாருக்கு என்பதை தீர்மானிப்பது. வீட்டின்  தலைமை பொறுப்பு சொன்னாலும் சொல்லா விட்டாலும் மாமியார் எப்படியாவது எடுத்துக் கொள்வார். (பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்துவிட்டது. ! ருக்மணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு! )

ஆசிரியர் யாரென்று ஊகித்து விட்டீர்களா?

கதை அசோகமித்திரன் நடையில் இருந்தாலும் எழுதியது கிருஷ்ணன் நம்பி என்ற நாகர்கோயில் காரர்.

கதையின் சுட்டிகள்:

அழியாச் சுடர்கள்: மருமகள் வாக்கு-கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன்-நம்பி  (சுட்டி)

எஸ்ரா இக்கதையை நூறு சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அசோகமித்திரன் தொகுத்தபுதிய தமிழ்ச் சிறுகதைகள்தொகுப்பிலும் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.

ஆசிரியர் பற்றிய குறிப்பு

 


கிருஷ்ணன் நம்பி என்கிற அழகிய நம்பி (1932-1976) குமரி மாவட்டத்தில் அழகிய பாண்டிபுரத்தில் பிறந்தவர்.  பூதப்பாண்டி, நாகர்கோயில் (கிருஷ்ணன் கோயில்) ஆகிய ஊர்களில் வசித்தவர். சிறிது காலம் நவசக்தி இதழில் ப்ரூப் ரீடர் ஆக சென்னையிலும் இருந்தவர்.

இவரும் சுந்தர ராமசாமியும் 25 வருட நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இலக்கிய இரட்டையர்கள் என அறியப்பட்டனர்.

நகுலன் :
எந்த விஷயங்களையும் கலா பூர்வமாக உருவாக்குவதில் நாம் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இலக்கியத் தன்மையைப் பெற்றிருப்பது அவருடைய கதையின் சிறப்பு. இதனால்தான் அவருடைய கதைகளை முதல்முறை படிப்பதிலிருந்து அவைகளின் சிறப்பை நம்மால் உணரமுடிவதில்லை. ஒரு முறைக்கு இரு முறையாக நின்று நிதானமாகப் படிக்கையில் நமக்கு அவை ஒரு தனி இலக்கிய சுகத்தைத் தருகின்றன.”
 

20 கருத்துகள்:

  1. 94 அகவை பகவானி தேவி பிரமிக்க வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். தொற்றில்லாத ஆரோக்கிய வாழ்வுக்குப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. கொல்லுப்பட்டறைத் தாத்தாவைத் தவிர்த்த மற்ற செய்திகள் படித்தேன். இங்கேயும் படித்தேன். பகிர்வுக்கு நன்றி. அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கதை நான் படிச்சதில்லை. இன்னிக்குத் தான் முதல் முதலாக. ஆனால் சித்தப்பா(அசோகமித்திரன்) என்றெல்லாம் எண்ணவில்லை. கடைசியில் கிருஷ்ணன் நம்பி எனத் தெரிந்து கொண்டேன். அவர் கதைகளும் படிச்ச நினைவு இல்லை. அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    வயது சாதனைகளுக்கு தடையில்லை எனும் 94 வயது பெண்மணி வணக்கத்துக்குரியவர்.

    அதுபோல் நூறு வயதிலும், தன்னம்பிக்கையுடன் உழைக்கும் பெரியவரையும் வணங்குவோம்.

    புதுக்கோட்டை ஜெயலட்சுமி அவர்களைப்பற்றி செய்தியை முன்பு எ. பியில் படித்துள்ளேன்.அவரின் திறமை பற்றி கல்வி நிலையத்தில் பாட புத்தகத்தில் நூலாக வந்தமைக்கும் அவருக்கு பாராட்டுக்கள்.

    விவசாயத்தில் (முருங்கை கீரை இங்கேயுமா ? ... :)))
    கோடிகளை அள்ளும் திறமை வாய்ந்தவரை வாழ்த்துவோம். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்துக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. இந்தக்கதை முன்பே நூறு சிறுகதைகளுக்குள் ஒன்றாக வந்ததை நான் படித்துள்ளேன். மனதின் வேறுபாடுகளை வக்கிரங்களை உணர்த்தும் அருமையான கதை. இக்கதையை கதாசிரியர் மிகவும் உயிரோட்டமாக எழுதியிருக்கிறார். இப்போது சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த சுட்டிக்கும் சென்று படித்து விட்டு வந்தேன்.

    கதைக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த (சொல்.. வாக்கு, கிளி.. பூனை) தெளிவான விளக்கங்களும் படிக்க அருமையாக உள்ளது. ஆசிரியர் பற்றிய குறிப்பும் படித்து தெரிந்து கொண்டேன். இவ்வாறான சிறுகதைகளை சனிதோறும் சேகரித்து எங்களுக்கு படிக்கத் தரும் சகோதரருக்கு பாராட்டுகளும், நன்றிகளும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கங்களுடன்...

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. மாண்புறும் மனிதநேயச் செயல்கள்..

    தொகுப்பினுக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. செய்திகள் அனைத்தும் அருமை.
    கதையும் நன்றாக இருக்கிறது.
    மாமியார் சொல் தட்டாத நல்ல மருமகள்.

    வாக்கும் மாமியார் சொன்னது போல போட்டு விட்டார்.
    பழக்க தோஷம் மாமியார் பேச்சை தட்டமுடியவில்லை மருமகளுக்கு.

    பதிலளிநீக்கு
  12. நல்ல செய்திகள் பல வாழ்த்துவோம் அனைவரையும்.

    கதை மனதின் எண்ணப்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
    கிளி நழுவி பூனையாக மாறுவது ,கதையின் 'மருமகள் வாக்கு' என்ற தலையங்கத்துக்கு ஏற்ப கதாசிரியர்
    அமைத்து விடுகிறார்.

    பதிலளிநீக்கு
  13. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. மாணவி பற்றி பாடங்கள் மஹாராஷ்டிரா மாநில தமிழ்ப்பாடத்தில் வந்திருப்பது பெருமைக்குரியது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. கதை பற்றிய விமரிசனமும் அறிமுகமும் நன்று "மருமகள் வாக்கு" முதலில் மருமகள் வாக்கு பெரிதாகக் கருதப்படுகிறது என்ற ரீதியிலோ, மருமகள் வாக்கு பலித்தது என்ற ரீதியிலோ கதை போகுமோ என்று நினைத்தேன் ஆனால் வித்தியாசமான கதை. இரு பொருள் என்பது விளங்கியது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. இன்றைய செய்திகளில் விவசாயம் பற்றிய செய்தி நல்ல செய்தி. மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்த ஒரு காணொளி சமீபத்தில் பார்த்த போது தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம், உழாமல் செய்யும் விவசாயம், multi crop என்று பல நடந்திருப்பது தெரியவந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வீராங்கனை 94 வயதான இளம் குமரி!!!!! பற்றி நானும் கூகுள் அனுப்பிய செய்திகளில் வாசித்தேன்..பாட்டி செம!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கிருஷ்ணன் நம்பி அவர்களின் இந்தக் கதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். எங்கூர்ப்பக்க எழுத்தாளர்!!!!

    எஸ் ரா அவர்களின் 100 கதைகள் தொகுப்பிலிருந்து. ஜெகே அண்ணா சொல்லியிருப்பது போல் கதையில் பகடி...

    நானும் ஒரு வேளை என் மனம் ஒத்துழைத்தால் இங்கு பிராபல்யமான எழுத்தாளர் அல்லாத எழுத்தாளர் அல்லது வளர்ந்து வரும் எழுத்தாளர் கதை பற்றித்தான் எழுத நினைத்திருந்தேன். எழுத முடியவில்லை.

    எழுத்தாளர்கள் பெயர் சொல்லுங்கள் என்றால் டக்கென்று வராத ஆசிரியரின் கதைகள் எல்லாம் ஜெகே அண்ணா தேர்ந்தெடுத்துக் கொடுப்பது நன்றாக இருக்கிறது! குடோஸ் உங்கள் உழைப்பிற்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. பாராட்டுகளும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன். நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!