வியாழன், 1 செப்டம்பர், 2022

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று..

 திங்கள் அன்று அண்ணனுக்கு பேரன் பிறந்தான்.  எங்கள் வீட்டு  குலதெய்வத்துக்கான நட்சத்திரத்திலேயே பிறந்ததது வியப்பு.  இன்னொரு ஒற்றுமை அண்ணன் மகன் தன் மனைவியை பெண் பார்க்க சென்றது பங்குனி உத்திரம்.  அவர்களுக்கு மகன் பிறந்திருப்பதும் அதே நட்சத்திரத்தில்!

அன்று பணி முடிந்து திரும்பும் நேரம், மற்றவர்களின் நேரம் என்று கிளம்ப முடியாமல் செவ்வாய் அன்று சென்று பார்த்து வந்தோம்.

ஆனால் அவன் எங்களுக்கு பேட்டி தர மறுத்து தனியறையில் பள்ளிகொண்டான்! திங்கள் பிறந்தவனுக்கு செவ்வாய் அன்றே டிஸ்சார்ஜ் என்று பிரசவ டாக்டர் சொல்ல, 

'நீ என்ன உன் இஷ்டப்படி நீ பாட்டுக்கு சொல்வது..  நான் ஒருத்தி இருக்கேன்ல' என்று அந்த குழந்தை மருத்துவர் குழந்தையை குப்புறப்போட்டு, மல்லாக்கப்போட்டு பக்கவாட்டில் போட்டு, உட்காரவைத்து, தள்ளிவிட்டு சோதித்து, ரொம்பக் கத்தினானா, வீறிட்டு அழறானா அடிக்கடி கத்தறானா என்றெல்லாம் கேள்வி கேட்டு சக்ஷன் போட்டு எடுத்ததில் மண்டையில் சிறு தடம் இருப்பதாக சொல்லி, ஆப்ஸர்வேஷனில் வைக்கவேண்டும் என்று அவனைத் தனியறையில் வைத்து பூட்டி,  டிஸ்சார்ஜை தள்ளி வைத்தார்.  ஆசுபத்திரி நிர்வாகம் அவருக்கு சிறப்புப் பரிசு வழங்கும் என்று எதிர்பார்ப்போமாக...

கிளம்பும் முன்னரே விஷயம் கேள்விப்பட்டாலும், முன் வைத்த காலை பின் வைத்து எங்கள் பரம்பரைக்கு பழக்கம் இல்லாததால் திருத்தணி சென்று தாயைப் பார்த்த நாங்கள், சேயைப் பார்க்க அனுமதிக்கு காத்திருந்தோம்.  அரைமணி அங்கிருந்த சம்பந்தி, மருமகள், அண்ணன் மகன் என்று அனைவருடனும் அளவளாவியபின் நர்ஸ் வந்து 'பையன் அழறான்' என்று அறிவித்தார்.  அதாவது குழந்தைக்கு பாலூட்டும் நேரம்.  அவன் தாய் இருந்த தளத்துக்கு மேல் தளத்தில் அவன் இருந்தான்.  Male என்பதால் மேல்தளத்தில் இருந்தான் போல...  ஹிஹிஹி..

அப்படியே குழந்தையைப் பார்த்து விடலாம் என்று எங்களையும் மருமகள் அழைக்க, அவருடன் நாங்கள் நால்வர் குழந்தைக்கு பாலூட்டக் கிளம்பியதை பார்த்த செவிலி அ) அ(மி)ரண்டு போனார் ஆ) வியந்து போனார் இ) நொந்து போனார்.

மேல் தளத்தை அடைந்த எங்களை அங்கிருந்த காத்திருப்போர் சோபாவில் அமரச்செய்தார் அங்கிருந்த பொறுப்பு செவிலி.  அங்கு  வசனம் காது கேட்காமல் டீவியில் ஓடிக்கொண்டிருந்த 'அவன் அவள் அது' படத்தை  செவிலியுடன் சேர்ந்து நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம்.  நேரம் ஓடிக் கொண்டிருந்தது.  ஸ்ரீப்ரியாவும் லக்ஷ்மியும் சிவகுமாருக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.  மௌன நடிப்பிலும் லக்ஷ்மியின் நடிப்பு உயர்தரமாயிருந்தது.

அப்போது...

25 அல்லது 26 மதிக்கத்தக்க நாகரீக உடையணிந்த வனப்பான ஒரு அழகிய இளம்பெண் எங்களைத் தாண்டி அறைக்குள் சென்றார்.  'அவர்தான் பீடியாட்ரிஷியன்' என்று அண்ணன் மகன் கிசுகிசுத்தான்.  நான் அவரை மறுபடி பார்க்கும் ஆவலிலும் ஏதாவது சந்தேகம் கேட்கும் ஆவலிலும் ஆழ்ந்தேன்.  நான் எழமுடியாதபடி என் கையை அழுத்திக்கொண்டு பாஸ் வசனம் கேட்காத அ அ அ வில் ஆழ்ந்தபோது நாங்கள் வந்த வழியே இன்னொரு நைட்டி அணிந்த இளம்பெண்ணும், துணைக்கு ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர்.

அவர்களை பார்த்த கையோடு, சே..  பார்த்த கண்ணோடு திரும்பி என்னைப் பார்த்தார் பாஸ்.

"என்ன..   இங்கே பிரசவம் ஆனாலே குழந்தையை ஏதாவது சொல்லி இங்கே கொண்டு வந்து  வைத்து விடுவார்களோ?" என்று பாஸ் தன் சந்தேகத்தை வெளியிட்டார்.  

பொ செ யின் ஆணைக்கிணங்க அவர்களும் எங்கள் அருகில் சோபாவில் அமர்ந்து காத்திருக்க, கொஞ்ச நேரத்தில் பாஸின் சந்தேகம் திசை மாறியது.  மேலே போர்டைக் காட்டினார்.  அந்த ஆசுபத்திரியில்  சட்டபூர்வமான கருக்கலைப்புக்கும் வசதி உண்டு என்றும் 'ரகசியம் காக்கப்படும்' என்றும் இருந்தது.

பாஸ் அந்தப் பக்கம் அமர்ந்திருந்த என் தங்கையிடம் 'அபார்ஷனா இருக்குமோ?" என்று கிசுகிசுக்க, நான் திரும்பிப் பார்த்தேன்.  அப்போது  ஒரு பெண் வந்து அந்தப் பெண் கண்ணில் இரண்டு சொட்டு மருந்து விட்டார்.  அவர் எழுந்து கீழே செல்ல லிஃப்டை நோக்கி தன் பாதுகாவலர்களுடன் நடக்க, 

"அபார்ஷனா இருந்தா கண்ல சொட்டு மருந்து விடுவார்களா என்ன?" என்று பாஸிடம் ரகசியமாகக் கேட்டேன்.  

பாஸும் தங்கையும் ஏன் வி.வி சத்தமில்லாமல் சிரித்தார்கள் என்று தெரியவில்லை!

அதற்குள் பொறுப்பு செவிலி குழந்தையைப் பார்க்க எங்களை அழைக்க, ஒவ்வொருவராகவா என்று கேட்டோம். 'அதற்கெல்லாம் நேரமில்லை.  மொத்தமாக வாருங்கள்' என்றார்.  நால்வரும் சென்று எங்களிடமிருந்து ஐந்தடி தள்ளி ஏஸி அறைக்குள் செவிலியின் கைகளில் துணிப்பொதிக்குள் பொதிந்து இருந்த அந்தக் கள்ளனை தரிசித்தோம்.  திருப்பதி ஜருகண்டியை விட விரைவாக கிளம்ப எங்களை ஊக்குவித்தார் அந்த செவிலி.  ஸ்ட்ரிக்ட்டாமாம்....

ம்ம்ம் ம்ம்ம்ம் என்று ஏதோ மிழற்றியவன் எதிர்பாரா ஒரு புன்னகையை எங்களுக்கு வழங்கி விட்டு செவிலியின் கைகளில் சுகமாக உறங்க உள்ளே சென்று விட்டான் அவன்!

==============================================================================================================

'எங்கள் மதுரை' பக்கத்திலிருந்து....

வைகையின் பெருமை !

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?
வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.
ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”
அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.
இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.
அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார்.‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.
மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.
எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.
(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)
==============================================================================================

மாசப்பிறப்பு அன்று கூட ஒரு கவிதை இல்லாவிட்டால் எப்படி!




இரு..

விழிகளை ஈரமாக்கிக் கொள்ளாதே
உன் கனவுகளுடன்
என் கனவுகளும்
சேர்ந்தே
கரைந்து விடப்போகிறது..

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாரோ அரசியல் தலைவர் நல்லது கெட்டது என்று ஏதோ பேசியிருந்தார் என்று நினைவு.. சரியாய் நினைவில்லை. அதை பேஸ்புக்கில் பகிர்ந்து, அதில் முடிக்கும்போது என் கமென்ட்டாய் "அவ்வையே.. நல்லது எது, கெட்டது எது?" என்று சும்மா ஜாலியாய் முடித்திருந்தேன். அதற்கு வந்த பதில் ரொம்ப சுவராஸ்யமான கமெண்ட். 'பெயர் சொல்ல விருப்பமில்லை' என்று தளம் வைத்திருந்த வெங்கடேசன் சீனிவாச கோபாலன் கவிமழை பொழிந்திருந்தார். தரமானதாக இருந்த அந்தக் கவிதை..

================================================================================================

முதுகு வலிக்கு மருத்துவம்..



================================================================================================

1944 விகடன் புத்தகத்தின் துளிகள்...

காண்டேகர் கதையைப் படிக்க அப்போதே சற்று பொறுமை வேண்டும்!
பி எஸ் ராமையா ஓகே, வ ரா யார்? சந்திரசேகர், ஸேனாபதியையும் அறியேன்! சரி, இந்த பிரசுரங்களில் அலையன்ஸ் இன்னமும் இருக்கிறது தெரியும். மற்றவை?







=========================================================================================================





85 கருத்துகள்:

  1. தாத்தா ஆகி "பெருசு" குரூப்பில் சேர்ந்ததற்கு வாழ்த்துக்கள். 

    //"அபார்ஷனா இருந்தா கண்ல சொட்டு மருந்து விடுவார்களா என்ன?" //  இந்த மாதிரி வடிவேலு வசனம் பேசினால் யார் தான் சிரிக்க மாட்டார்கள்

    நல்லது தீயது விளக்கும் வெங்கடேசன் பாட்டு அருமை. ஜோக்குகள் அபாரம். அதிலும் கோதுமை கோந்து, குடைக்குள் குடை இரண்டும். 

    பாட்டுக்கு பாட்டு. 

    உன் விழியும் என் விழியும் சந்தித்தால்
    உன் கனவும் என் கனவும் சேர்ந்து 
    செம்புல பெய நீர் போல ஓர் கனவாய் 
    இருவர் கண்ணிலும் ஊருமன்றோ!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! இந்த வாரம் பெரிய குறை எதுவும் இல்லை என்று தெரிகிறது! கவிதையும் அருமை.

      நீக்கு
  2. பேரன் வந்த வேளை, உங்க வீடு மகிழ்ச்சியில் மலரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த வார ஜோக்குகள் அருமையான செலெக்‌ஷன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. முதுகு வலி.... கழுத்து வலி.... இவைகள் வராத கணிணி பொறுயாளர்களைத் தேட வேண்டியதுதான். ரொம்ப நேரம் சேரில் அமருகிறேன். அதற்கு மாற்று கண்டுபிடிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பப்போ எழுந்து கைகளை ஸ்ட்ரெட்ச் செய்து , நடந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்து அமரலாம்.

      நீக்கு
  5. வெங்கடேசன் ஶ்ரீநிவாசகோபாலன் கவிதைகள் நன்று.... சந்தம் சரியில்லாதபோதும்.

    பதிலளிநீக்கு
  6. வைகையின் பெருமை கட்டுரைப் பகிர்வு அருமை. பரமக்குடியில் வைகையில் குளித்த தருணங்கள் நினைவுக்கு வருது. அதைவிட, பரந்துவிரிந்த மணல் வெளியில் வெள்ளம் வர ஆரம்பிக்கும்போது, விபரீதம் புரியாமல் வெள்ள நீருக்கு முன்னால் மணலில் ஓடியதும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  7. பேரன் பிறந்த வேளை உங்கள் இரு மகன்களுக்கும் நல்ல இடத்தில் பெண் அமையட்டும். தாத்தாவாக ஏற்கெனவே (தங்கை பேத்தி) உயர்வு பெற்றிருந்தாலும் இது பிள்ளை வழி என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. வைகை ஏன் கடலில் சேர்வதில்லை என்பதற்கு இன்னொரு காரணம். எல்லா நதிகளையும் பெண்பாலாகவும் கடலை ஆண்பாலாகவும் கருதிச் சொன்ன உவமை இது. அனைத்துப் பெண்களையும் ஏற்கும் ஆணைப் போன்ற கடலில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே கொள்கையாகக் கொண்ட வைகை ஏற்கவில்லை. ஆகவே வைகை நதி பிறன் மனை நோக்கும் கடலைச் சாராமல் ஒரே ஒருவனாகிய ஓர் ஏரியில் போய்க் கலந்து விட்டாள். ராமநாதபுராம் அருகே உள்ள அந்த ஊரின் பெயரை மறந்துட்டேனோ? கடலில் கலக்காத ஒரே நதி வைகை தான். ராமநாதபுரம் மாவட்டத்தில் நீரிணையோ என்னமோ பெயரில் வரும். அங்கே தான் வைகை கலக்கிறது. இப்போது அந்த இடம் மேடாகி நதி கலப்பது ஓர் பிரச்னையாக இருப்பதாகச் செய்திகளில் வந்திருந்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைகை ஆறு இராமநாதபுரம் அருகே அழகன்குளம் என்ற இடத்தில் பாக் ஜலசந்தியில் கலக்கிறது என்று இணையம் சொல்கிறது.

      நீக்கு
    2. ஓ, அப்படியா? கூகிளில் தேடிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. சுவையான தகவல். அதற்கான பாடல் இருந்தால் பகிரலாமே..

      நீக்கு
  9. வெங்கடேசன் ஸ்ரீநிவாசகோபாலன் எழுதி இருக்கும் கவிதைகள் அருமை, அர்த்தம் பொதிந்தவை. அந்தக்காலத்து நகைச்சுவைகள் ரசிக்கும்படி இருக்கின்றன. இதை எல்லாம் சித்தப்பாவிடம் இருந்த பழைய விகடன் தொகுப்புக்களில் பார்த்து/ரசித்து/படித்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  10. வ.ரா. பாரதியை மிகவும் புகழ்ந்து போற்றியவர். தமிழறிஞர். கம்யூனிசச் சார்பு உடையவர். வ.ராமசாமி ஐயங்கார் என்பது முழுப் பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இன்று காலை அது தெரிந்தது. அண்ணாவின் தம்பிகள் என்கிற புத்தகத்தை PDF ல் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் சந்தடி சாக்கில் இந்த விவரம் கிடைத்தது!

      நீக்கு
  11. மங்கள நூலகம் தான் முன்னர் கல்கி, தேவன் எழுத்துக்களை வெளியிட்டு வந்தது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அவர்கள் இப்போது புத்தக வெளியீடு செய்வதில்லை. எங்க பையருக்கு அந்த வீட்டின் ஒரு பெண்ணை/பேத்தி முறை பார்த்தோம். ஜாதகம் அவங்களுக்குப் பொருந்தவில்லைனு சொன்னாங்க. தமிழ்ப்பண்ணையும் பிரபலமானதே. இப்போது இருக்கானு தெரியலை அலையன்ஸ் இப்போவும் இருக்கு. கலைமகள் இப்போவும் இருக்கு. ஜோதி நிலையம் இருப்பதாகத் தெரியலை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மங்கள நூலகம் கேள்விப்பட்டதில்லை. மற்றவையாவது பெயர் அறிமுகம் இருக்கிறது!

      நீக்கு
    2. சுமார் ஐம்பது ஆண்டுகள் முன் வரை ரொம்பவே பிரபலமானது. பிரபலமானவர்களின் எழுத்தைத் தான் வெளியிட்டு வந்தார்கள். இப்போவும் நுங்கம்பாக்கத்தில் அவங்க வீடு இருக்குனு கேள்விப் பட்டேன்.

      நீக்கு
  12. //அபார்ஷனா இருந்தா கண்ல சொட்டு மருந்து விடுவார்களா என்ன)) ஹா.. ஹா.. ரசித்தேன் ஜி பெயரனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அண்ணாவின் பெயரனுக்கு என்று சொல்லுங்க. இல்லைனா 'பொடிப் பையர்' ஸ்ரீராமுக்கு வயசான மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங் வருது. ஹி ஹி ஹி

      நீக்கு
    2. பெயரன் வந்தாலே தாதாவானாலும், தாத்தா தான் தமிழரே...

      நீக்கு
    3. இப்படி ஸ்ரீராமைச் சொல்றவங்க எங்கியாச்சும் நம்மளையும் சொல்லிடுவாங்களோன்ற பயம் நெல்லைக்கு!!!! ஹாஹாஹாஹா

      பொடிப்பையனா இருந்தாலும் தாத்தாவாகக் கூடாதா!! தாத்தாவானால் எப்பவுமே ஸ்ரீராம் பொடிப்பயல்தான்!

      கீதா

      நீக்கு
    4. கீதா ரெங்கனுக்கு ஜே.. அவர் கருத்தைத்தான் நான் ஆதரிக்கிறேன்!

      நீக்கு
  13. பேரனுக்கு வாழ்த்துகள்...

    கவி வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  14. ஏற்கனவே தாத்தாதான் நீங்க, அதனாலென்ன, புன்னகை சிந்தி தரிசனம் கொடுத்த பேரனின் வரவிற்கு வாழ்த்துகள்!

    பகுதியை மிக மிக ரசித்து வாசித்தேன். சில பகுதிகளில் சிரித்தும் விட்டேல் வீட்டில் எல்லாரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள்!!!! (இது வழக்கமா நடக்கறதுதான்!)

    எதுக்குச் சிரித்தேன்னு சொல்கிறேன் ..வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பகுதியை மிக மிக ரசித்து வாசித்தேன். சில பகுதிகளில் சிரித்தும் விட்டேல் //

      உழைப்புக்கு பரிசு. சந்தோஷம் தரும் வார்த்தைகள்.

      நீக்கு
  15. அழகான பெண்கள் வரப்ப, பாஸ் உங்க கையை பிடிச்சு அழுத்தி.....அந்தப் பகுதி வாசிச்சதும் ....சிரித்துவிட்டேன்..

    அபார்ஷனுக்கு கண்ணுல சொட்டு மருந்தா///

    ஹாஹாஹாஹ்...ஹையோ.....

    ஆமா எதுக்காக தங்கையும் பாஸும் சிரிச்சாங்க!!!ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அந்த ஆசுபத்திரியில் சட்டபூர்வமான கருக்கலைப்புக்கும் வசதி உண்டு என்றும்//

    சட்டபூர்வமான - இதுக்கு விளக்கம் கொடுத்திருந்தாங்களா? இல்லைனா உடான்ஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்குத் தெரியும்?  எனக்கு இப்போ தேவை இல்லாததால் நான் ஜாரிக்கவில்லை!

      நீக்கு
    2. //எனக்கு இப்போ தேவை இல்லாததால் // - அடடா என்னமாதிரியான பதில்..ஹி ஹி ஹி

      நீக்கு
    3. ஹாஹாஹாஹ சிரிச்சு முடிலப்பா....

      கீதா

      நீக்கு
  17. இப்பகுதியை ரொம்ப ரொம்ப அழகா ரசனையா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வைகையின் பெருமை அசத்தல். அருமை. ரசித்து வாசித்தேன். என்ன ஒரு கற்பனை!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கவிதை அட்டகாசம். ரசித்தேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வெங்கடேசன் ஸ்ரீநிவாஸன் கோபாலன் அவர்களின் கவிதை செம...ஒலி அமைப்பு கொஞ்சம் இடறுகிறது ஆனா ரசித்தேன் செமையா எழுதியிருக்கிறார்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அவர் எழுதியதற்கான என் ஸ்டேட்டஸ் என்ன என்று நினைவில்லை என்பது எனக்கு குறை!

      நீக்கு
  21. இப்பல்லாம் எண்ணை எங்கேதேய்த்துக் கொள்ள, ஊரில் இருந்த வரை அம்மா, மாமி அல்லது அத்தை பாட்டி என்றுதேய்த்துவிடுவாங்க .....

    இப்ப அதுக்குத்தான் மசாஜ் பார்லர்கள் வந்திருக்கோ?!!!

    ஆஅமாம் கம்ப்யூட்டரில் ரொம்ப நேரம் உட்கார்ந்தால் வரும். இடையிடையே எழுந்து போய் கை காலை நீட்டி, மடக்கி என்று செய்யணும். கண்ணிற்கும் பயிச்சி முக்கியம்.

    சம்மணம் போட்டு உட்கார்தல் தினமுமே உண்டு வீட்டில் அவ்வப்போது. தரையில் அமர்ந்துதான் சாப்பாடு.
    ஸ்ரீராம் உங்க வீட்டிலும் தரையில் அமர்ந்துதானே...சாப்பாடு. அது நல்ல பழக்கம்

    அப்பகுதியில் கருத்துகள் அனைத்தும் நல்ல கருத்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசாஜ் பார்லர்ல எண்ணெய் தேச்சு விடறாங்களா? ரொம்ப அப்பாவியா இருக்குதே இந்த அக்கா

      நீக்கு
    2. நன்றி கீதா. ஆம், எங்கள் வீட்டில் தரையில் அமர்ந்து தான் சாப்பாடு.

      நீக்கு
    3. // மசாஜ் பார்லர்ல எண்ணெய் தேச்சு விடறாங்களா? ரொம்ப அப்பாவியா இருக்குதே இந்த அக்கா //

      ஹா.. ஹா.. ஹா...

      நீக்கு
    4. /எங்கள் வீட்டில் தரையில் அமர்ந்து தான் சாப்பாடு.// - ஆஹா... அருமையான மெதட். பேசாமல் நானும் இப்படி ஆரம்பிச்சுடலாமா என்று பார்க்கிறேன். இப்போல்லாம் தட்டை எடுத்துக்கொண்டு, தனியாக உட்கார்ந்துகொண்டு (படுக்கையில்), தொலைக்காட்சியில் ஏதேனும் பார்த்துக்கொண்டு, ஆனால் சாப்பாட்டை நன்கு ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறேன்.

      நீக்கு
    5. In this regard, முன்னெல்லாம் Indian toilet (பதின்ம வயதில்..... சின்ன வயதில்.... தாமிரவருணி நதிக்கரைதான் ஹிஹி) உபயோகிக்க சுலபமா இருந்தது. சமீப காலங்களில் யாத்திரையில் வெஸ்டர்ன் இல்லைனா...கதிகலங்குது. பழக்கம்தான் கால் கை flexibilityக்குக் காரணம். அதனால் தரையில் அமர்ந்து சாப்பிடுவது சூப்பர். ஏனென்றால், பெரும்பாலான இடங்களில் நிறையபேருக்கு தரையில் உட்காரவே முடியவில்லை, உட்கார்ந்தால் எழுந்துகொள்ள முடியாது என்று சேர் கேட்கிறார்கள்.

      நீக்கு
    6. எனக்கும் உட்கார்ந்து எழுவது சிரமமாகத்தான் இருக்கிறது.  ஆனாலும் தரையில் அமர்ந்துதான் வட்டமாக சாப்பிடுகிறோம்.  இந்தியன் டாய்லெட்டை இப்போதெல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை! :((

      நீக்கு
    7. எனக்கு எங்கு சென்றாலும் இந்தியன் டாய்லெட் இருக்கா என்று கேட்டுவிடுவது வழக்கம். விருப்பம் அதுதான். பல தொற்றுகள் வராமல் பாதுகாக்கும். அப்படியே வேறு வழி இல்லை என்றால் வெஸ்டர்னை இந்தியன் டாய்லெட் போல!!!!!!!!

      வெஸ்டர்ன் பயன்படுத்துபவர்கள் இந்த இரு யோகா ஆசனங்களைச் செய்யலாம். சுவாமி ஐயப்பன் இட்கார்ந்திருப்பது போன்ற ஆசனம், அடுத்து ஸ்க்வாட் பண்ணுவது.....இந்த இரண்டுமே கணையம் இரைப்பை எல்லாவற்றையும் நன்றாக அழுத்திக் கொடுக்கும் நல்ல ஆசனங்கள், முட்டி, தொடை இவற்றிற்கும் பயன்படும்.

      தொப்பை குறையும்

      கீதா

      நீக்கு
    8. முடியாத காரியத்துக்கு முக்குவதில்லை கீதா!!!

      நீக்கு
    9. நம் வீட்டில் கையேந்திபவனும் உண்டுதான் நெல்லை.

      கீதா

      நீக்கு
  22. ஜோக்ஸ் செம ....ரசித்துச் சிரித்தேன். அந்தப் பொடிசுகள் தூங்கும் படம் ..பழைய நினைவுகளைக் கிளறியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. //ம்ம்ம் ம்ம்ம்ம் என்று ஏதோ மிழற்றியவன் எதிர்பாரா ஒரு புன்னகையை எங்களுக்கு வழங்கி விட்டு செவிலியின் கைகளில் சுகமாக உறங்க உள்ளே சென்று விட்டான் அவன்!//

    பேரனுக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
    சின்ன தாத்தா, பாட்டியைப்பார்த்து பேசி, புன்னைகை புரிந்து உங்களை மகிழ்ச்சிபடுத்தி விட்டானே !
    சின்ன கண்ணன் நலமாக வீடு திரும்பி இருப்பான்.
    எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்.

    பதிலளிநீக்கு
  25. முகநூல் பகிர்வுகள், விகடன் ஜோக்ஸ் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராம்ஜி, உங்கள் அண்ணன் மற்றும் உங்கள் குடும்பத்தில் புதிய வரவான பேரனுக்கு வாழ்த்துகள்! இறைவன் எல்லா நன்மைகளையும் குழந்தைக்கு நல்கிட பிரார்த்தனைகள்.

    பேரனைப் பார்க்கச் சென்ற நிகழ்வையும் சுவையாகச் சொல்லியதை ரசித்து வாசித்தேன். உங்கள் எல்லோரையும் புன்சிரிப்புடன் வழி அனுப்பியிருக்கிறாரே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  27. வைகை உவகை அளிக்கிறது. மதுரை நினைவுகளுக்குக் கொண்டு சென்றது. வைகை ஏன் கடலில் கலக்கவில்லை என்பதற்கு இது வரை அறிந்திராத நல்ல அருமையான விளக்கம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. உங்கள் கவிதை அருமை, ஸ்ரீராம்ஜி. எப்படி இப்படி அழகான கற்பனை மனதில் உதிக்கிறது என்று வியக்கிறேன். உன் விழிகளில் நான் இருக்கிறேன் என்ற பொருளுடன். எம்ஜி ஆர் பாடலும் நினைவுக்கு வந்தது விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. கோபாலன் அவரின் கவிதைகள் மிக அருமை. நகைச்சுவைத் துணுக்குகளையும் ரசித்தேன். முதுகு வலியைத் தடுப்பதற்கான குறிப்புகள் அனைத்தும் பயனுள்ளவை.

    அனைத்தும் அருமை, ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. புது வரவுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்.

    நல்ல பகிர்வு கவிதை நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!