வியாழன், 6 அக்டோபர், 2022

பெரைடோலியா

 ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு உடல்மொழி இருக்கும்.  நாம் கவனித்திருக்க மாட்டோம்.  பிறர் கவனித்திருப்பார்கள்.  உதாரணமாக வீட்டில் கலந்துரையாடலில் நான் பேசப்போகிறேன் என்பதை புரிந்து கொண்டு சட்டென என் முகத்தைப் பார்ப்பார்கள். 

என்ன என்றால் நான் தொண்டையை ஒரு மாதிரி சத்தப்படுத்திக்கொண்டு (கனைப்பு அல்ல!) தயாராவேனாம்.  எவ்வளவு முயன்றும் என்னால் இதுவரை அதை கேட்க முடியவில்லை! 

நாம் என்னென்ன செய்கிறோம் என்று மற்றவர்களை கேட்டுப் பார்த்தால் தெரியும்!  கேட்டுதான் பாருங்களேன்!

நான் பார்த்த சிலபேர் பற்றி கதைக்கிறேன்!  சட்டென இப்போதும் மனதில் நிற்கும் பேச்சு பாணிகள், வித்தியாசமான வழக்கங்கள், உடல்மொழிகள்.

என் அப்பா மருத்துவத்துறையில் பணி புரிந்ததால் அவ்வப்போது சில மருத்துவர்கள் வீடு தேடி வருவதுண்டு.  தங்கள் சொந்த அலுவலகப் பிரச்னையாகவோ அல்லது அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் போனபோது வைத்தியம் பார்க்கவோ...  

அதில் டாக்டர் ஜமான் என்று ஒருவர்.  பெரிய மருத்துவர்.  துறைத்தலைவர் என்று நினைவு.  ஆனால் அவர் பேசுவதும் நடப்பதும் சற்றே பெண்மை கலந்த பாணியில் இருக்கும்.  நானும் என் நண்பனும் அதைப் பார்த்து ஏதோ பேசிக் சிரித்துக் கொண்டிருந்தோம்.  டாக்டரின் பெருமைகளை, உயர்வுகளை அறியாத வயது.  அவரும் எங்களை பார்த்து விட்டாலும் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.  சற்றே உடலை இடுப்புப் பகுதியில் வளைத்து, சுவரில் ஒரு கையை வைத்து, இன்னொரு கையை நாட்டிய பாணியில் ஆட்டி ஆட்டி அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.  என் பாட்டிதான் பொறுக்க முடியாமல் கேட்டார்..  "டாக்டர்..  நீங்கள் நாட்டியம் பயின்றவரோ..."  சட்டென திரும்பியவர் நாட்டிய பாணியிலேயே சொன்னார்.. "கரெக்ட்..  பரத நாட்டியம் தெரியும், அரங்கேற்றம் பண்ணி இருக்கேன்.  எப்படித் தெரிந்தது?"  உங்கள் உடல்மொழியை வைத்துதான் தெரிந்து கொண்டேன் என்றார் பாட்டி.  இது எவ்வளவு பெரிய விஷயம் என்று அப்போதும் எங்களுக்குப் புரியவில்லை.  அப்பா பாட்டியை முறைத்ததும், டாக்டரை வழியனுப்பி வைத்து விட்டு கடிந்துகொண்டதும் தனிக்கதை!

சலங்கை ஒலியில் கமலுக்கு வேலை கொடுக்கும் அந்த தெலுங்கு நாட்டிய இயக்குனர் செய்வாரே அதுபோல அவரது நடவடிக்கைகள் இருந்தன.  அந்தப் படத்தில் அவரைப் பார்க்கும்போது இவர் எனக்கு நினைவுக்கு வருவார்.  ஆனால் வரலாறு படத்தில் அஜித் அதையே சற்று அதிகமாய் - ஆனால் ரசிக்கும்படி - செய்திருப்பார்.

பின்னர் தஞ்சை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தபோது குடியிருப்பின் அசோஸியேஷனில் அப்பா பொருளாளராக இருந்தார்.  செயலாளராக இருந்தவர் பெயர் சிவசுப்பிரமணியன்.  அவர் கல்வித்துறையில் பெரிய போஸ்ட்டில் இருந்தார்.  சற்றே கனத்த உருவம்.  சைக்கிளில் வருவார்.  அதுவே கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும்...  மறுபடியும் சொல்கிறேன்..  அப்போதெல்லாம் எனக்கு சிறுவயது...  நல்லது கெட்டது பார்க்கும் வயதல்ல!  சைக்கிளில் வந்தபடியே ஒரு காலை தூக்கி கணுக்காலில் சொரிந்து கொள்வார்!

இவரிடம் எது பேசினாலும் என்ன சொன்னாலும் அதை ஒரு அதிர்ச்சி கலந்த வியப்புடன்தான்  மற்றும் சிரிப்புடன்தான்  கேட்டுக்கொள்வார்.    

அசோசியேஷன் காசு என்று மாதா மாதம் வீட்டுக்கு வீடு கலெக்ட் செய்வார்கள்.  அந்தப் பணியை அவ்வப்போது நானும் ஏற்றுக் கொண்டதுண்டு.  அது ஒரு சுவாரஸ்யமான பணி. காலை குளித்து, (இருப்பதில்) நல்ல உடையாய் அணிந்து (எப்போதாவது யாராவது "இந்த சட்டை உனக்கு நல்லா இருக்குடா" என்று சொல்லி இருப்பார்கள்!) ரசீது புத்தகமும் பேனாவுமாக கிளம்பி விடுவோம்.  பணம் பெறுபவர் கையெழுத்தாக நம் பெயரை எழுதுவதில் ஒரு பெருமை!  

அப்போது.  லீவு நாட்களில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி கதவைத்தட்டி, திறக்கப்பட்டதும் "அசோசியேஷன் காசு" என்று கேட்டு, அவர்கள் கொடுத்ததும்  ரசீது கொடுக்கும் வேலை.  எவ்வளவு சுவாரஸ்யமான வேலை என்று புரிந்திருக்கும் உங்களுக்கு.  

சிற்சில வீடுகளுக்கு 'அந்த வீட்டுல நான் வாங்கறேண்டா' என்கிற நேயர் விருப்பம் எல்லாம் வரும்!  எல்லா வீட்டிலும் இனிமையான வரவேற்பு இருந்து விடாது.  சரியாய் அவர்கள் சாப்பிடும் நேரம் அல்லது வேறு சங்கட தருணங்களில் கதவைத் தட்டி கடன்காரன் மாதிரி நின்றால் அவர்களுக்கு எரிச்சல் வரும்தானே?  அதைக் காட்டுவார்கள்.  சில்லறையாய் இல்லை அப்புறம் வா என்பார்கள்.  எங்களுக்கு அதெல்லாம் உறைக்காது.  மறுபடியும் சுற்ற ஒரு சந்தர்ப்பம்!  இத்தனைக்கும் அசோசியேஷன் மாதாந்திர காசு என்பது ஒன்றும் பெரிய தொகை எல்லாம் இல்லை.  பத்து ரூபாய்தான் என்று நினைவு.

இப்படி காசு கலெக்ட் செய்து மாதம் ஓரிரு படங்கள் போடுவார்கள்.  அது ஒரு ஜாலியான அனுபவம்.  சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்றி விளையாட்டுப் போட்டிகள், மாலை கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.  சுமார் 60 பிளாக்குகள் இருந்தன.  ஒவ்வொரு பிளாக்கில் குறைந்தது நான்கு வீடுகள், அதிகபட்சம் எட்டு வீடுகள்.  எப்படியும் 275 லிருந்து 300 வீடுகள் தேறும்!

கேட்க வேண்டுமா கொண்டாட்டத்துக்கு?  யூனிட் நடுவே ஒரு பார்க் இருக்கும்.  ரேஷன் கடை ஒன்றும், அயர்ன் கடை, துணிக்கடை காய்கறி கடை ஒன்றும் இருந்தன. அப்புறம் ஒரு சிறிய கேன்டீன்.

எங்கேயோ போய்விட்டேன்..   இப்படி காசு கலெக்ட் செய்து கொண்டு வந்து கொடுக்கும் சமயம் இவர் இருந்தால் இவரிடம் பேசுவதே தனி அனுபவம்.  யார் யார் வீட்டில் என்னென்ன சொன்னார்கள் என்று சொன்னால் தனது சிறிய கண்களை பெரிதாக விரித்து முதலில் ஒரு 'அட' போடுவார்.பின்னர் ஏதாவது ஒற்றை வார்த்தையில் நாங்கள் சொல்வதற்கு பதில் சொல்லி வியந்து போவார்.  இப்போது யோசிக்கும்போது பாக்யராஜ் படத்தில் கூட இப்படி ஓரளவுக்கு ஒத்துப்போகும் கேரக்டர் வரும்.  ஆனால் ஓரளவுக்குத்தான்.

பல வருடங்களுக்கு பிறகு நாங்களும் பெரியவர்களாகி, திருமணமும் ஆனதும் கூட அவருடன் தொடர்பு இருந்தது.  அப்போதும் அவர் அதே போலதான் வியந்து வியந்து பேசிச் சிரிப்பார்.  எங்களிடம்தான் இப்படி.  அவர் மகன்களிடம் அவர் டெரர்!  வேலையாட்களிடம் அவர் கோபப்பட்டு பார்த்ததில்லை.  வெளியாட்களிடம் அவர் கோபம் என்பது என்னவென்றால் சிரிக்காமல் இருப்பதுதான். கொஞ்சம் கூட சிரிக்காமல் ரஜினி மாதிரி ஸ்பீடாய் பேசுகிறார் என்றால் அவர் கோபமாய் இருக்கிறார் என்று அர்த்தம்!  எங்களிடம் அப்படி ஒருக்காலும் பேசியதில்லை.

நாங்கள் அடிக்கடி  இவரை இமிடேட் செய்து வீட்டில் பேசிச் சிரிப்பதுண்டு.  மறுபடி சொல்கிறேன், இவர் கல்வித்துறையில் பெரிய போஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவ்வப்போது ஒன்றிரண்டாய் தொடர்கிறேன்.

==============================================================================================================

சமீப காலங்களில் அனைத்து போது மீடியாக்களில் பரவலாகப் பகிரப்படும் செய்தி இது  இங்கு தினமலரும், ஹிந்து தமிழ் திசையும்...

இந்த வகை கேமிராக்கள் சர்வ சாதாரணமாக மார்க்கெட்டில் கிடைக்கிறது..


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த பட்டியலில் அடங்குகின்றனர். ஸ்மார்ட்போன்கள், ஹிட்டன் கேமராக்கள் போன்ற பல நவீன சாதனங்கள் நன்மையை தருவது மட்டுமின்றி குற்றச் சம்பவங்களுக்கு மறைமுகமாக வழிவகுக்கின்றன. சாதாரண கேமரா வசதியுள்ள போன் இருந்தாலே போதும், பெண்களை ஆபாசமாக போட்டோ அல்லது வீடியோ எடுத்துக்கொண்டு மிரட்டும் நிகழ்வுகள் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. இதில் நவீன ஹிட்டன் கேமராக்கள் வேறு லெவலில் உள்ளது.

எனவே வெளியிடங்களுக்கு செல்லும் போது உஷாராக இருக்க வேண்டியுள்ளது. ஹோட்டல் அறைகளில் தங்கும் போது, ஷாப்பிங் மால், ரெடிமேடு ஷோரூம்களில் உடைகளை அணிந்து பார்க்கும்போது கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில நிமிடங்கள் செலவழித்தாலே போதுமானது; இந்த மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை எளிதாக உணரலாம்.

ஹோட்டல் அறைக்குள் நுழைந்தவுடன் அனைத்து பொருட்களையும் நிதானமாக ஒரு பார்வை பார்க்கவும். அங்கு, ஸ்குருவின் தலைப்பகுதி, பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், கதவின் கைப்பிடி, புத்தகங்கள், டிவி, டேபிள், சுவர் அலங்காரம், அழகுச் செடிகள், சுவர் கடிகாரம், கண்ணாடி, படுக்கை மெத்தைகள், மேஜை மற்றும் அலமாரிகள், அலங்கார விளக்குகள், ஹேர் டிரையர், ஹேங்கர்கள், மேற்கூரை போன்ற அனைத்து இடங்களையும் நிதானமாக பார்க்கவும்.

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, அறை முழுவதையும் உங்கள் செல்போனில் வீடியோ எடுங்கள். பின், அதை ஓட விட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா உள்ளது என அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடக்கவும். அப்போது செல்போனில் இரைச்சல் சத்தம் கேட்டால் அருகில் ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளன என அறியலாம்.

உடை மாற்றும் டிரையல் அறைகளில் உள்ள கண்ணாடி சாதாரணக் கண்ணாடியா அல்லது வேவு பார்க்கும் கண்ணாடியா என்பதை அறிய... கண்ணாடி மீது உங்களின் விரலை வைத்துப் பாருங்கள். கண்ணாடியில் உங்கள் விரல் ஒட்டாவிட்டால் அது சாதாரணக் கண்ணாடி. கண்ணாடியில் உங்கள் விரல் ஒட்டினால் அது வேவு பார்க்கும் கண்ணாடி.

நவீன தொழில்நுட்பம் காரணமாக விதவிதமான சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மலிவான விலைகளிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கேமரா டிடெக்டர் மூலமாகவும் பரிசோதனை செய்யலாம்.

அறையில் அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஸ்பாட் விளக்குகளை மட்டும் ஒளிரச் செய்து புகைப்படம் எடுக்கவும். பின்னர், அனைத்து புகைப்படங்களும் ஒரேமாதிரி உள்ளதா என சரிப்பார்க்க வேண்டும். ஏதாவது ஒரு ஸ்பாட் விளக்கில் வித்தியாசம் தெரிந்தால் அங்கு ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

===========================================================================================================================

மனக்கண்ணாடி 

ஆயிரம்தான் அனைத்தும் தெரியும் 
என்று 
அகந்தை காட்டி 
வெளியில்  நடந்தாலும் 
உள்ளே ஆழ்மனதில் 
எதையும் 
முறையாய் அறிந்திடாத மனம்  
துண்டு கட்டி 
அனைத்தையும் அறிந்து கொள்ள 
யாசகனாய் நிற்கிறது 

மனதை மறைத்து 
மமதை காட்டியே திரிகிறேன் 
என்று நிர்வாணப்பட்டு போவேனோ...

============================================================================================================
மஹாபாரதத்தை வெண்முரசு என்று ஜெமோ எழுதியபோது தன் இஷ்டத்துக்கு சில மாறுதல்களை செய்திருக்கிறார், தன் கற்பனைகளையும் அதில் புகுத்தி இருக்கிறார் என்று பேச்சு அடிபட்டது.

பொன்னியின் செல்வனில் கூட திரைப்படம் ஆகும்போது சில மாறுதல்கள் உண்டு என்றும் சொல்கிறார்கள்.  இப்படி ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற காவியத்தில் பின்னர் வருபவர்கள் மாறுதல் செய்வது சரியா என்கிற கேள்விக்கு நேரடியான அல்லது சரியான பதில் எப்போதுமே கிடைக்காது.

பேரறிஞர் அண்ணா தம் முன்னுரையில் முன் குறிப்பிட்டது போல சிலப்பதிகார சிந்தனையில் நெடுநேரம் ஈடுபட்டுவிட்டு அச் சிந்தனைகட்கு உடனடிக் காரணமாய் இருந்த கலைஞரின் எழுத்தோவியத்தை எண்ணியதும் மடை திறந்தாற் போல் அவர் மனம் திறந்ததும் வந்த சொற்களின் முதல் பகுதியைத்தான் இப்போது பார்த்தோம் அதில் இரு கூறுகள் 1) பெருங கலைஞர் சிலப்பதிகாரக் காப்பியத்தை உரைநடை நாடகமாக ஆக்குவதற்கு பெற்றுள்ள உரிமை-  பேரறிஞர் அண்ணாவின் ஆராய்ச்சியில் அந்த உரிமைக்குரிய தகுதிகள் 1) தமிழ் ஆளுந்திறன், 2)  பாத்திரங்களை படைக்கும் உயர்தனி ஆற்றல்.  இந்த இரு திறனுமே 'ஊரும் உலகமும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது; என்று அந்தாதித்தொடையில் போற்றப்படுகிறது. 

 இனி கலைஞர் கதையில் செய்த மாற்றங்களுக்கும் காரணம் சொல்கிறார் பேரறிஞர் அண்ணா. அது, இது.  1) நம்மால் விளக்கம் அளிக்க முடியாதது போலவும் நமக்குத் தேவையில்லாதது போலவும் தோன்றுகின்ற சம்பவங்கள் சிலவற்றிற்கு 1) காரண காரிய தொடர்புடையதும் 2) நம்பத்தக்கதுமான மாற்றங்களை செய்து இருக்கிறார். 

பேரறிஞர் அண்ணாவின் சொற்கள் எவ்வளவு அளவை நெறி லாஜிக்கல் பற்றிய என்பது பகுப்பாய்வுத்திரம் அனலிட்டிகள்Analytical பற்றியன என்பதும் தெளிவு. 

இனி கலைஞர் கதையில் செய்த முதல் பெரு மாறுதலை - கிரேக்க வணிகன் பாத்திரத்தை - நியாயப்படுத்துகிறார். அதில் தான் எவ்வளவு அறிவு!! ஆற்றல்;  துருப்புச் சீட்டை தூக்கி எறிவது போல தானாக மாதவி வீட்டுக்கு போக விரும்பாத கோவலனை அறிவுரை புகட்ட போகுமாறு கண்ணகியே தூண்டுகிறாள் என்று கலைஞர் கூறுவதை எடுத்துக்காட்டி அத்தகைய பாத்திர பண்பில் அடியோடு ஈடுபட்டு பேசுகிறார் அண்ணா. 

இன்னொரு முக்கியமான மாறுதல் ; சிலப்பதிகாரத்தில் கண்டுள்ள ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதியால் சிறப்பு மிகுமுறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

 சிலப்பதிகாரம் தரும் விளக்கப்படி அரண்மனையின் தலைமை பொற்கொல்லர் தான் உண்மையான குற்றவாளி என்பது அறிந்த ஒன்று.  இதனால் -  இப்பழியால் பொற்கொல்லர் சமுதாயத்தின் சுயமரியாதையே பாதிக்கப்படும் உணர்வு ஏற்படுகிறது.

 இளங்கோவடிகளுக்கு அத்தகு உள்நோக்கம் இருந்ததென யாரும் கூறிட முடியாதெனினும் அந்த பொற்கொல்லர் சமுதாயம் முழுமையுமே பெரியதொரு வெறுப்பை ஏற்க வேண்டி இருக்கிறது. 

இந்த வெறுப்பை பழியை கருணாநிதி துடைத்தார்.  பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள நல்லெண்ண நல்லுறவில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராதலால் இப்பழியை துடைத்திட விரும்பினார்.  அவரது எழுத்தோவியத்தில் போற்றத்தகும் முறையில் அந்த நற்பணியைச செய்தார்.  

பொற்கொல்லர் அல்ல - பாண்டிய நெடுஞ்செழியனின் அரண்மனை காவலன் ஒருவன் தான் உண்மையான குற்றவாளி என இந்தூலில் குறிக்கப்படுகிறது.

 சமூக நீதிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது.  இத்தகைய மாற்றங்களை பழம்பெரும் இலக்கியங்களில் செய்வது மிக மிக நியாயமானது;  தேவையானது. இந்த மாற்றம் மிகச் சிறந்த நோக்கோடு 
செய்யப்படுகிறது. 

இந்த மாற்றத்தை பாராட்டி வாழ்த்தியவர்கள் வழிகூறப்பட்ட அந்த சமுதாயத்தினர் மட்டுமல்லர்;  பழம்பெறும் இலக்கியங்களினை நவீன முறையில் தருபவர்களும் வாழ்த்தியுள்ளனர்;  பாராட்டியுள்ளனர். 

ஆம், பேரறிஞர் அண்ணா பாரதியின் பாஞ்சாலி சபதம் போன்ற பல நூல்களைப் படித்தவர் தானே!  அதனால் பேரறிஞர் அண்ணாவின் புகழுரை முற்றிலும் பொருந்தும். இங்கு கருதத்தக்க சிறப்பெல்லாம் அப்புகழுரையின் உயிராய் ஒளிரும் ஆய்வுரையே ஆகும். அவ்வாயுரையின் பயனாக பெருங் கலைஞரின் சமுதாயப் பொது உள்ளம் ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப்படுவதை தாங்காத உயர்ந்த உள்ளம் மலை மேல் வைத்த மணி விளக்கு ஆகின்றது அல்லவா?

===============================================================================================================================



=================================================================================================================

பொக்கிஷம் :

எதுவும் புதுசில்லே..  எல்லாம் பழசு, ஏற்கெனவே படிச்சது!


இதுவும் ஜோக்குதான்!  குமுதம் ஜோக்!


இரண்டு மடங்கு புத்திசாலி!


ஜோக்குதாங்க...   சின்ன கட்டத்துக்குள்ள வந்துருக்கு பாருங்க..


இரட்டைக்கிளவி!

அப்போதைய அரசியலில் குமுதத்தின் பக்கம்!


121 கருத்துகள்:

  1. படித்துக் கொண்டு வரும்போது சலங்கை ஒலி ஞாபகம் எனக்கும் வந்தது.

    கேமரா தகவல்கள் பயனுள்ளவை.

    விரல் ஒட்டினால் சாதாரண கண்ணாடி, ஒட்டவில்லை என்றால் ஒரிஜினல் பெல்ஜியம் கண்ணாடி என்று படித்து இருக்கிறேன்.

    கவிதை அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படித்துக் கொண்டு வரும்போது சலங்கை ஒலி ஞாபகம் எனக்கும் வந்தது.//

      ஹா..  ஹா...  ஹா..   அப்படியா?  கவிதைப் பாராட்டுக்கு நன்றி தேவகோட்டைஜி.

      நீக்கு
  2. உடல் மொழி என்பது ஆங்கில மொழியின் நேரடி தமிழ் மாற்றம்.
    இதற்கு தமிழ்ச் சொல் ஒன்று வழக்கத்திற்கு வந்தால் நல்லது. எபி வாசகர்களும் முயற்சித்துப் பார்க்கலாமே!. (புதன் கேள்வியாக்கலாம் என்று
    நெல்லை யோசித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு சிலருக்கு எ.எ.புதன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதும்போது ஏனோ எனக்கும் தோன்றி, ஒரு மாற்று வார்த்தை உபயோகிக்க நான் கூட கொஞ்சம் யோசித்தேன் ஜீவி யார்.  சட்டென தோன்றவில்லை.  மேலும் ஞாயிறும், திங்களும் கடும் ஜுரத்தில் வேறு இருந்தேன்.  எனவே முஅயற்சியை கைவிட்டுவிட்டேன்!

      நீக்கு
    2. அருந்தும் நீரில் கவனம் கொள்ளுங்கள், ஸ்ரீராம்.

      நீக்கு
    3. இப்போது நலமா? உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    4. உடம்பு களைப்பும் வலியும் மிச்சம்!  ஜுரம் இல்லை.  சுவை தெரியவில்லை!

      நீக்கு
  3. ஸ்ரீராம் பாட்டி அவர்கள் நிச்சயம் உடல்மொழி என்ற வார்த்தையை உபயோகித்து இருக்க மாட்டார். இதற்கு அந்த காலத்து சொல்லே வேறே அது என்ன? இதுவும் இதை வாசிப்பவர் யோசனைக்கே. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நீங்க பேசும்போது உடம்பை அசைக்கறது' என்று சொன்ன நினைவு!

      நீக்கு
    2. அவ்ளோ சுத்தத்தமிழ்ல பேசலீங்க..

      நீக்கு
    3. சின்னஞ் சிறு குழந்தைகள் கைகால் ஆட்டி மழலையில் மிழற்றும் பொழுது சேஷ்டை என்ற வார்த்தையை அந்தக் காலத்தில் உபயோகிப்பார்கள்.

      நீக்கு
  4. கமல் மாதிரி..
    அஜீத் மாதிரி..
    ரஜினி மாதிரி...
    (ஒரு 'மாதிரி'யை விட்டு விட்டேனோ என்று சந்தேகம். யாராவது சுட்டிக் காட்டாமலா இருக்கப் போகிறார்கள்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

      நீக்கு
  5. குமுதம் எப்போதுமே (அப்போது) காங்கிரஸ் ஜால்ரா. இப்போது பாஜக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்நாளைய இந்திரா பக்தர்!

      நீக்கு
    2. சிலர் குமுதத்தை வெளிக்குத் தான் சீண்டுவார்கள். உள்ளுக்கு உள்ளே அவர்கள் 'டேலண்ட்டை' ரசிப்பார்கள். இது கூட இன்னொரு மனக்கண்ணாடி சமாசாரம் தான்.

      நீக்கு
    3. என் அப்பா கூட இந்திராவுக்கு செம பக்தராய் இருந்தார் ஒரு நேரம். அது குமுதத்தின் இஷ்டம் யாரை ஆதரிப்பது என்று. குமுதத்தில் சிலர் ரசிப்பதற்கு ஒன்று, சிலர் ரசிப்பதற்கு வேறொன்று, இன்னும் சிலர் ரசிப்பதற்கு இன்னும் ஒன்று...

      நீக்கு
  6. மனக்கண்ணாடிக்கு மாற்றுக் கவிதையை
    ஜெஸி ஸார் பொறுப்பில் விட்டு விடலாமோ?
    ஆமென்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாம்.  ஆனால்...   ஆனால்...

      ஆனால்..

      இது சரியில்லையா?

      நீக்கு
    2. சரியில்லை என்றில்லை.
      நமக்கு இன்னொன்று கிடைக்குமல்லவா?
      அதற்காக. ஜெஸி ஸார், நான் -- இந்த இருவரைத் தவிர இந்த விஷயத்தில் வேறு யாரும் முயற்சிக்காததாலும்.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. எழுதப்பட்ட காவியத்தில் மாறுதல் செய்வது சரியா?

    கூடாதுன்னா, கீதா சாம்பசிவம் மேடம் வெறும் சாதம் மாத்திரம் வடித்து தினம் சாப்பிடவேண்டியதுதான், திப்பிசமில்லாமல் அவர் ஏதேனும் செய்கிறாரா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறொரு லெவலில்
      ஒரு விஷயத்தைக் கையாளும் பொழுது சடாரென்று தலைகீழாகப் புரட்டுகிற மாதிரி..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    கவிதை அருமை. மனம் உணர்த்தும் உண்மை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. 'பேரறிஞர் அண்ணா என்று ஆரம்பிக்கும்'
    அந்தப் பகுதியை எழுதியது யார்? பேரறிஞர் அண்ணா என்று திரும்பத் திரும்ப எழுதத் தெரிந்தவருக்கு இன்றும் நாம் அடிக்கடி நினைவு கொள்ளும் பாரதிக்கு ஒரு
    பட்டம் அளித்து அழைக்க மனம் வரவில்லை போலும்.

    பதிலளிநீக்கு
  11. நம்முடைய குறை நிறைகள் யாராவது நமக்கு சொன்னால் தான் தெரியும். ஆனால் அப்படி யாராவது சொல்லும் போது சிலர் ஆத்திரப் படலாம். சிறு பிராயத்தில் இந்த எதிர் வினைகளைப் பற்றி கவலைப் படாமல் நானும் பலரையும் கேலி செய்தது உண்டு. என்னையும் பலர் கேலி செய்தது உண்டு. அது தவறு என்று அப்போது தோன்றவில்லை. உங்கள் வீட்டிற்கு வந்த டாக்டர காண்பித்த உடல் மொழியை நாகேஷ் திரைப் படத்தில் செய்தால் சிரித்திருப்போம் அல்லவா?

    பாட்டுக்கு பாட்டு.

    அகத்தின் அழகு
     முகத்தில் தெரியும்
     அகம் நிறைந்தால்
     முகத்தில் தெரிவது
     அகந்தை எனினும் 
    இன்னும் பசி ஆறவில்லை
     என அடக்கம்
    அதனை மட்டுப்படுத்தும்

    பசி நல்லதே
     அது அறிவுப் பசியாயினும்
     பசித்துப் புசி 

    சிலப்பதிகாரக் கட்டுரை  நீங்கள் எழுதியது போல் தோன்றவில்லை. நடை வித்தியாசம் தெரிகிறது. 

    pareidoliya பற்றி தெரிந்து கொண்டேன். கானல் நீர் போலும்? தமிழில் மாயக்காட்சி என்று மொழி பெயர்க்கலாம்.? 

    உடல் மொழி என்பதை "பாவனை" என்று கூறலாமோ? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமா? அடப்பாவமே!! அவர் எங்கிருந்தோ அதை எடுத்து இங்கு போட்டிருக்கிறார். உரை நடையில் 1) 2) -- என்று எண் போட்டு எழுதுவதைப் பார்க்கும் பொழுது ஆசிரியர் பணி செய்த ஆசாமி போல் தோன்றுகிறது.

      நீக்கு
    2. இதுக்காக எவ்வளவு ஆதாயம் கெடச்சுதோ!..

      நீக்கு
    3. சிறுவயது.  அதுதான் சிரிப்பு.  மற்றபடி இதுபோன்ற குணநலன்களை அவதானித்த அனுபவம் பற்றி எழுத நினைத்தேன்.  உதாரணமாக இரண்டாவதில் சிரிக்க ஒன்றுமில்லை.  ரசிக்க இருக்கிறது.

      நாகேஷாயிருந்தாலும் பின்நாட்களில் ஒருவர் உடல்குறையைப்பற்றி நகைச்சுவை செய்யக்கூடாது என்கிற பேச்சும் வந்தது!

      கவிதை..   நான் சொல்ல வந்திருக்கும் கருத்தோடு இது உடன்படவில்லை!  எதிர்க்கவும் இல்லை!   அதாவது நான் சொல்ல வந்த கருத்து புரிந்து கொள்ளப்படவில்லை என்று தோன்றுகிறது!

      சிலப்பதிகாரக்கட்டுரையெல்லாம் எழுதும் அளவு நான் விதகனல்ல.  இது 1970 களில் வெளிவந்த கட்டுரை.  அதில் சொல்லப்பட்டதை கலைஞர் மாறுதல் செய்து புல்லரிக்க வைத்திருக்கிறார்!  அவ்வளவே!

      மாயக்காட்சி..... ஓகே.

      நீக்கு
  12. வித்தக வியாழன்..

    அன்பின் வணக்கங்களுடன்,
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  13. வாரியத்தின் குடியிருப்புக் கோலாகலம் என்றும் இனிமை...

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. புலவர் சொன்னதும் பூவையர் ஜாடையும் கலைகள் சொல்வதும்

      நீக்கு
  15. நல்லவேளை..

    மாதவிக்கு காதலன் இன்னொருவனும் இருந்தான் என்று யாரும் எழுதி வைக்க வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலும் நல்லவேளை கண்ணகிக்கே காதலன் இருந்தான் என்று சொல்லாதது!

      நீக்கு
  16. தஞ்சை பெரிய கோயில் உள் பிரகாரத்தில் தீட்டப்பட்டிருந்த சோழர்களது ஓவியத்தை மறைத்து நாயக்கர்கள் மேல் பூச்சு பூசி வேறெதையோ எழுதினர்..

    நிலைத்ததா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ அவுங்க மனசு வருத்தப்படுமே.. ன்னு..

      நடந்ததை மாத்திடலாமா!?..

      மறந்திடலாமா!?

      நீக்கு
    2. ​நாயக்கர் சொன்னதும் பொய்யே பொய்யே...

      நீக்கு
  17. // ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப் படுவதை தாங்காத உயர்ந்த உள்ளம்.. //

    !?..

    இன்று ஒரு சமுதாயத்தினருக்கு ஒரு உதவியும் கிடையாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்ந்த உள்ளங்களாய் வெளியில் உருவம் காட்டி உலவி வரும் உத்தமர்களில் எத்தனைபேர் உண்மை உருவமாய் உள்ளே சுயநலமிகள் என்பது உலகத்தாருக்கு தெரியாதா என்ன..

      நீக்கு
  18. 'சிலப்பதிகார காப்பியத்தை உரை நடை
    நாடகமாக ஆக்குவதற்கு பெற்றுள்ள உரிமை..'
    --- வேடிக்கை தான். யாரிடமிருந்து இந்த உரிமையைப் பெற்றாராம் அவர்?..

    பதிலளிநீக்கு
  19. எதற்குக் கல்லெடுத்துப் போடுவது என்று அன்றிருந்த ஆன்றோர்கள் விலகிப் போனார்கள்..

    அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லது பாதிப்பேர் பார்வைக்கே வந்திருக்காது..

      நீக்கு
  20. சமீபத்தில் நடந்த விஷயத்தை படமாக்கிய போது உண்மைக்கு மாறாக பெயர் வைத்தார்களே

    அந்த மாதிரியா??..

    அன்றோடு விட்டு விட்டேன் அவனது படத்தைப் பார்ப்பதை!..

    என் மனம்..
    என் பணம்!..

    பதிலளிநீக்கு
  21. சமீபத்தில் நடந்த விஷயத்தை படமாக்கிய போது உண்மைக்கு மாறாக பெயர் வைத்தார்களே

    அந்த மாதிரியா??..

    அன்றோடு விட்டு விட்டேன் அவனது படத்தைப் பார்ப்பதை!..

    என் மனம்..
    என் பணம்!..

    பதிலளிநீக்கு
  22. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பார்கள்...

    ஆனால் ,
    அதற்குப் பிறகு தான் பாராட்டு விழா எல்லாம் நடத்தி ஏதேதோ பரிசு எல்லாம் கொடுத்தார்களாமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டு விழா யாரோவா நடத்தினார்கள்?!!

      நீக்கு
    2. அவரோட நெருங்கிய நண்பர் தேர்வுக்கமிட்டியின் உறுப்பினர் என்பதால் கணவன்.மனைவி இருவருக்குமே பரிசுமழை! :(

      நீக்கு
  23. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  24. அந்தக் காலத்துல ஒரு ஆள்
    பேசுனார்...

    வீரபாண்டிய கட்டபொம்மனா எங்க ஆளு நடிச்சிருந்தா பானர்மேனை தூக்குலப் போட்டுருப்பார்..ன்னு..

    எவ்ளோ அறிவு!..

    பதிலளிநீக்கு
  25. மகாபாரதத்தை உல்ட்டா பண்ணி கர்ணனை காப்பாத்துனாங்க...
    ராமாயணத்தை உல்ட்டா பண்ணி ராமனுக்கு டாட்டா காட்டுனாங்க!..

    இனிமே,
    அந்தப் பக்கத்தில இருந்து ஒருத்தர் வந்து பெரிய கோயிலைக் கட்டுனார்..
    அப்படி..ம்பாங்க!..

    காது இருக்குதுல்லே..
    கேட்டுக்க வேண்டியது தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒண்ணுக்கு ரெண்டா காதுகள் இருக்குதுல்லே.
      பூ சுத்திடுவானுங்க.

      நீக்கு
  26. //உடல் மொழி என்பதை "பாவனை" என்று கூறலாமோ?..//

    கூடாது.. கூடாது..

    பாவனை... ங்கறது ஆரியம்..
    உடல் மொழிய ஹிந்து ஆக்குறாங்களே..ஏ!..

    பதிலளிநீக்கு
  27. கசப்பு, உவப்பு, வெறுப்பு, விருப்பு, பகை, நட்பு போன்ற பலவற்றைக் காட்டும் முகம் போல் அறிவுத்திறம் வேறெதற்கும் உண்டோ?

    கேட்பது தாத்தா :-

    முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
    காயினும் தான்முந் துறும்

    பதிலளிநீக்கு
  28. // யாசகனாய் நிற்கிறது //

    இவ்வாறு அறிந்தாலே போதுமே, "மனத்துக்கண் மாசிலன்" ஆகி விடலாம்...

    பதிலளிநீக்கு
  29. இன்றைக்கு பதிவு முழுவதும் வித்தியாசமான சிந்தனைக்களமாக இருக்கிறது!
    இன்றைக்கும் தஞ்சையில் ஓல்ட் ஹெளசிங் யூனிட் இருக்கிறது. அந்த வழியாக போகு நேரிடும்போது உங்களை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்!
    நகைச்சுவையைக்காட்டிலும் அதற்கான படங்களை மிகவும் ரசிக்கத் தோன்றுகிறது! எத்தனை திறைமையாக படம் வரைந்திருக்கிறார்கள் அந்தக் கால ஓவியர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   அதன் வழி செல்வீர்களா?  சரபோஜி கல்லூரி சாலையில் சென்றால் இடப்புறம் சாலையை ஒட்டி நிற்கும் ஒன்றாம் பிளாக்கைப் பாருங்கள் அதில் நான்காம் நம்பர் வீடு எங்களுடையது!!!!  பால்கனியில் நான் தெரிகிறேனா சொல்லுங்கள்..

      நீங்கள் படங்களின் சிறப்பை உணர்ந்து ரசிக்கா விட்டால்தான் ஆச்சர்யம்.  நீங்களே ஓவியர்.

      நன்றி மனோ அக்கா.

      நீக்கு
  30. "கோவலனை கொண்டு வா" என்றே பாண்டிய மன்னன் சொன்னாரா...?

    இல்லை...

    "கோவலனை கொன்று வா" என்று காவலாட்களுக்கு கேட்டதா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலையையே மனதில் கொண்டவர்களுக்கு எப்படி கேட்குமோ அப்படி..

      நீக்கு
    2. 'கொணர்க ஈங்கென' என்பது சிலப்பதிகார வரி என்று மனப்பாட நினைவு.

      நீக்கு
  31. சில நாட்களாக "சந்தித்ததும் சிந்தித்ததும்" பதிவுகள் காணவில்லையே. ஏன் என்று தெரியுமா?

    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வெங்கட் நாகராஜன் பதிவு எழுத இடைவேளை விட்டிருக்கார். நைமிசாரண்யத்துலயே பதிவு நிற்குது

      நீக்கு
    2. சொந்த மற்றும் அலுவலகப் பிரச்னைகள் காரணமாக சிறு இடைவெளி என்று யூகிக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம். அவர் தந்தை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தாராம். எங்களுக்குமே இப்போத் தான் தெரியும். ஆகவே தில்லிக்கும்/ஶ்ரீரங்கத்துக்கும் ஷட்டில் அடிச்சுண்டு இருக்கார்! :(

      நீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் வித்தியாசமான சிந்தனைகளுடன் வழக்கம் போல அருமை.

    முதல் பகுதி எண்ணங்கள் சிறப்பு. ஆம்.. அவரவர்களுக்கு ஒரு முத்திரை அமைந்து விடும். பிறர் பார்வையில் அது கண்டிப்பாக கேலியாகவோ, அடையாளமாகவோ சுட்டிக் காண்பிக்கப்படுவதும் மனித இயல்புதான். நாங்களும் சிறுவயதில் (அறியா வயதில் அல்லது அறிவு முதிராத வயதில். அதுவும் அவர்கள் அறியா பொழுதினில். ) பிறரை இவ்வாறு சுட்டிக் காணபித்திருக்கிறோம். இப்போது நம்மை பிறர் அவ்வாறு சொல்வார்களோ என்ற கூச்சமும், அச்சமும், வரும் போது அந்த பழையவைகளின் நினைவுகள் வரும். சற்று எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மையும் வரும்.

    பொதுவாக அந்த காலத்தவர்கள் இப்படிப்பட்ட அவர்களின் எதிரிலேயே "இப்படி உடம்பை அஷ்ட கோணல் பண்றியே... எப்ப பார்த்தாலும் என்ன கொனஷ்டையோ? என கேட்டு விடுவார்கள். அவ்வாறு கேட்பது அவர்களின் இயல்பு அது. அதை மாற்றவும் முடியாது. நமக்குத்தான் அவர்கள் இப்படி கேட்டு விட்டார்களே..!! அவர்கள் எப்படி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற மனவருத்தம் ஏற்படும்.

    மனதின் நினைப்புக்களை நன்றாக எழுதி உள்ளீர்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் சிலரது வழக்கங்களை பார்த்து நாம் சிரிக்காமல் இருக்கலாம்.  நமக்குத் பழகிப் போயிருக்கலாம்.  உண்மையில் அதனைப் பற்றி பேசவே விழைந்தேன்!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  33. கதம்பம் நிறைய செய்திகளை சொல்கிறது.
    ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும் பேசும் போது, சிரிக்கும் போது. உணர்ச்சிகளை ஒவ்வொரு மாதிரி வெளிபடுத்துவார்கள்.
    நல்ல பழகிய மனிதர்களுக்கு அவர்களின் பழக்க வழக்கம் தெரியும்.
    முக பாவனைகளை வைத்து அவர் என்ன பேச போகிறார் என்று கூட கணிப்பார்கள்.

    மனக்கண்ணாடி சரியாக சொல்லும்.

    இன்று தெரிந்து கொண்டது , இரட்டை கிளவி எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  34. இன்றைய பகிர்வில் பலதும் பத்தும் அவதானம்,சுவாரசியம், ஜோக்ஸ், என கலந்து சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. ஆஹா பேச முன்னமே கனைப்பவரா நீங்கள் ஹையோ அது கனைப்பு இல்லை ரெடி பண்ணுதல் ஆக்கும்:)).. அதாவது மனதில் ஒத்திகை செய்வது வெளியே தெரிஞ்சிடுதோ ஹா ஹா ஹா..

    உண்மைதான் ஒருவரைப் பார்த்ததும் சில விசயங்கள் கண்டு பிடிச்சிடலாம், பொது வெளியில சிலர் நம்முடன் பேச முனைவது தெரியும், ஏதோ நம்மிடம் இருக்கும் பொருளைப் பார்ப்பது.. கள்ளராக இருக்குமோ எனும் சந்தேகம் வரும்.. இப்படி உடல் மொழிகள்[இதைத்தானே பொடி லங்குவேஜ் என்கிறோம்] நிறையச் சொல்லலாம்.. குறிப்பிட்டுச் சொல்வதற்கு நினைவு வருகுதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கனைப்பு போல இல்லாமல் மூக்கடைப்பை சரி செய்து கொள்வது பல இருக்கும் என்கிறான் என் மகன்!

      நீக்கு
  36. //ஹோட்டல் அறைக்குள் நுழைந்தவுடன் அனைத்து பொருட்களையும் நிதானமாக ஒரு பார்வை பார்க்கவும். ///

    ஹா ஹா ஹா ஓவர் சந்தேகமும் நிம்மதியைக் கெடுக்கும்:)).. நாம் டெல்லியில் இருந்து பஞ்சாப் புறப்பட்டபோது 10 மணி நேரப் பயணம் ஆனா ஆடிப்பாடிப் போகலாம் நன்றாக இருக்கும் என வழியில் தங்கும் ஐடியா இல்லாமல் பஞ்சாப்பில் தங்க என நல்ல ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணிட்டோம்...

    ஆனா போகும் வழியில லேட் ஆகிட்டுது, அப்போ ஒரு நைட் தங்கலாம் என வழியில நின்றே ஓன்லைனில் ஒரு பக்கத்தில இருந்த ஹொட்டேல் புக் பண்ணிப் போனோம்.. அது 5 ஸ்டார் அல்ல 4 ஸ்டார்.. சூப்பராகத்தான் இருந்துது, ஆனாலும் அறைக்குள் போனதும், நடு அறையில் கட்டிலுக்கு பக்கத்தில் தேவையில்லாமல் ஒரு தூண்போல செய்து அதில் புல் லா பெரிய கண்ணாடி, மறைப்பு போடலாம் எனப் பார்த்தாலும், அப்படி ஏதும் போட இடமில்லை, ஹோட்டேல் நடத்துவோர் முழுக்க கண்ணில் பட்டதெல்லாம் யங் ஆட்கள்.. எனக்கு என்னமோ மனதில ஒரு டவுட்.. இந்த இடத்தில் ஏன் முகம் பார்க்கும் கண்ணாடி என... நெட்டில் தேடினால், இப்படிக் கண்ணாடிக்குப் பின்னால், ஆட்கள் உள்ளுக்குள் ஒளிந்திருந்து வீடியோ எடுக்கலாமாம் என சொல்லிச்சுது... ஹையோ ஆண்டவா தேவையில்லாமலோ என்னமோ நிம்மதி போச்சு.. சரி எடுத்தால் எடுக்கட்டும் என்ன பண்ணப்போறாங்கள் என நினைச்சுத் தங்கிட்டோம் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடித்தால் சிறியதாய் ஆகும் சைசில் கொசுவலை டைப்பில் நாம் ஒரு மூடுதிரை கொண்டு செல்லவேண்டும்.  உடைமாற்றவோ, படுக்கையிலோ  சட்டென அதை விரித்து உள்ளே பதுங்கி விடவேண்டும்! 

      நீக்கு
  37. //ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, அறை முழுவதையும் உங்கள் செல்போனில் வீடியோ எடுங்கள். பின், அதை ஓட விட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா உள்ளது என அர்த்தம்.///

    இந்த ஆராட்சியும் பண்ணினோம் ஹா ஹா ஹா.. இப்படி யோசிச்சதிலேயே பல மணி நேரம் போச்ச்ச்ச் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  38. ///கண்ணாடி மீது உங்களின் விரலை வைத்துப் பாருங்கள். கண்ணாடியில் உங்கள் விரல் ஒட்டாவிட்டால் அது சாதாரணக் கண்ணாடி. கண்ணாடியில் உங்கள் விரல் ஒட்டினால் அது வேவு பார்க்கும் கண்ணாடி.//

    ஹா ஹா ஹா இதைத்தான் பிள்ளைகள் செய்து பார்த்தார்கள்.. அருண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ... என்பதுபோல ஆச்சு... விரல் ஒட்டுவதுபோலவே காட்டிச்சுது ஹையோ ஆண்டவா இப்போ நினைச்சால் எனக்கு சிரிப்பை அடக்க முடியல்ல:))...

    நான் மகனிடம் சொன்னேன், உங்கட ரூம்மில லைட்ஸ் ஐ ஓவ் பண்ணிட்டே உடுப்பு மாத்துவது குளிப்பது செய்யுங்கோ என, மகனாட்கள் சொல்லிச்சினம், வீடியோ எடுத்தால் எடுக்கட்டுமே எனக்கு இதுக்கெல்லாம் பயமில்லை என ஹா ஹா ஹா இப்போதைய ஜெனரேசன் இப்படி நினைக்குதோ என்னமோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்கள் உடை மாற்றினால் யார் பார்க்கிறார்கள்?  இந்த எச்சரிக்கை எல்லாம் மகளிருக்கு மட்டும்தான்!

      நீக்கு
  39. //மனதை மறைத்து
    மமதை காட்டியே திரிகிறேன்
    என்று நிர்வாணப்பட்டு போவேனோ...//

    நன்றாக இருக்கு..

    பதிலளிநீக்கு
  40. ///ஒரு புகழ்பெற்ற காவியத்தில் பின்னர் வருபவர்கள் மாறுதல் செய்வது சரியா என்கிற கேள்விக்கு நேரடியான அல்லது சரியான பதில் எப்போதுமே கிடைக்காது.//

    இப்படித்தானே அனைத்துக் காவியங்களும், பல கற்பனைகளைப் புகுத்தியே எழுதப்பட்டு வந்திருக்கின்றன எனச் சொல்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  கதைகளை புகுத்தலாம்.  மூலத்தில் கைவைக்கக் கூடாது!

      நீக்கு
  41. குமுதம் ஜோக் சிரிக்க வைக்கிறது.

    //இரட்டைக்கிளவி!// ஹா ஹா ஹா அப்போ இது தமிழ் லிட்டேஜர் ரெட்டைக்கிழவி இல்லையோ:)).. நானும் ரெட்டைக் கிழவி எண்டால் இரண்டு கிளவிகள் எனத்தான் நினைச்சிருந்தேன் பல காலமாய்:))...

    இப்போதான் பாகிஸ்தான் எல்லையைத் தொட்டுப்போட்டு வந்தேனாக்கும்:)).. ரயேட்டாகிட்டேன் ச்சோஓஒ பின்பு வாறேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகிஸ்தான் எல்லை வீடியோ கண்டு ரசித்தேன்.  ஆனாலும் ரொம்ப லாங்ஷாட்.  ஏதோ ஒரு முரளி சிம்ரன் அடித்த படத்தில் இதை ஒரு காட்சியில் காட்டுவார்கள்.

      நீக்கு
    2. அது ஸ்ரீராம், ஏகப்பட்ட வீடியோக்கள் எடுத்து எடிட் பண்ணாமல் வச்சிருக்கிறேன், அதனால இந்தியா ட்ரிப்பில் வீடியோ எடுக்கும் ஐடியாவே எனக்கிருக்கவில்லை, ஆனா அங்கு போனதும் மனசு எங்கே நம் சொல் கேட்குது, மொபைலாக கன்னாபின்னா என எடுத்ததுதான்:)).. சூட்டோடு சூடாக இதையாவது போட்டுவிடவேண்டும் எனத்தான், கஸ்டப்பட்டு கையைக் கட்டி மனதைக் கட்டி:) எடிட் பண்ணிப் போட்டுக் கொண்டிருக்கிறேனாக்கும்:))

      நீக்கு
  42. பேராசிரியர் ந. சஞ்சீவி. அறிவேன். நான் சேலத்தில் வசித்த காலம் அது. அவர் எழுதிய கம்பன் நம்மவன் என்ற நூல் நினைவுக்கு வருகிறது. இந்த 'நம்மவனுக்கு' அர்த்தம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
  43. மேனரிஸம், பேசுவது ...ஆம் ஸ்ரீராம் நானும் நிறைய பார்த்ததுண்டு. அதை நான் கல்லூரியில் படிக்கும் சமயம் நாடகம் அல்லது மோனோ ஆக்டிங்கில் பயன்படுத்தியதுண்டு....அதன் பின் எல்லாமே போயே போச்!!! அந்த கீதாவே வேறு...வாழ்க்கைச் சக்கரம் சுழற்றி அடித்து...

    வியந்து பார்த்து சிரித்து ஒருவர் சொல்லியிருக்கீங்களே...அவரைப் போல்தான் என் அப்பா...எது சொன்னாலும் ஓ ..ஓஹோ...அப்படியா என்று சிரிப்பார்....சமீபத்தில் காது கேட்க்காததால் சிரிக்கும் சமயம் நாம் பேசுவதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும்....ஆனால் டெரர் கிடையாது சுத்தமா கிடையாது.

    கீதா



    பதிலளிநீக்கு
  44. போன வியாழன் தண்ணி ப் பிரச்சனை வாசித்தென் ஸ்ரீராம், அது பயங்கரமான விஷயமாருக்கே....ஒவ்வொரு வீடு பார்க்கும் போது மழைத்தண்ணீர் சேகரிப்பையும் நாம் சோதிக்க முடியுமா...!!! பாருங்க இது ஒரு படிப்பினை இனி வீடு பார்க்கறவங்க அதையும் சோதிக்கனும் போல!!!

    அந்த பில்டர் நல்லா 'பில்டப்' கொடுத்து கூடவே அல்வாவும் கொடுத்திருக்கிறார்....வீடு வாங்கியும் நிறைய செலவு வைத்திருக்கிறதே....என்னவோ போங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  45. ரகசிய கேமராக்கள் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கும்தான்...ட்ரையல் ரூம் விஷயம் எல்லாம் இந்த இளைய தலைமுறைக்கு மற்றும் இப்போதைய அம்மாக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் நம் வீட்டில் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறேன்...பலரும் ட்ரையல் ரூம் பயன்படுத்துபவர்கள்.

    பெண்களுக்கு ரொம்ப முக்கியம்....ஆண்கள் தப்பித்துவிடுவார்கள் ஆனால் ஆண்களும் பெண்களும் காதலர்கள் நட்புகள் இப்படியான இடங்களில் ரொம்பவெ கவனமாக இருக்க வேண்டும்

    இரண்டாவது, கேமராவை விடுங்கள், எனக்கு என்னவோ இது பிடிப்பதில்லை...இப்படி ஒவ்வொருவரும் போட்டு பார்த்திருந்தால்...இது ஆரோக்கியத்துக்கு நல்லதா?

    கீதா

    பதிலளிநீக்கு
  46. கவிதை அருமை பொருள் பொதிந்த ஒன்று ரசித்தேன் ஸ்ரீராம்

    மனக்கண்ணாடியும் ஒரு ரகசியக் கேமராதான்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனக்கண்ணாடிக்குள்ளும் ரகசிய கேமரா உண்டு!!!!!

      கீதா

      நீக்கு
  47. வரலாறு காவியங்கள் புராணங்கள் எல்லாவற்றிலும் இடைச்செருகல்கள் உண்டுதான்...அவரவர் காலகட்டத்திற்கேற்ப புரிந்துகொண்டதன் அடிப்படையில் இணைப்பது நடக்கிறதுதான்....இதில் சில அக்காலகட்டத்து/இக்ககாலகட்டத்து மக்கள் புரிந்து கொள்ளும் நிலையில் அதை வடிவமைப்பது நல்லதுதான் ஆனால் மூலம் சிதையாமல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ஜோக்ஸ் ரசித்தேன்..

    சாப்பாட்டுக்குப் பதிலா விட்டமின் மாத்திரை - இது பற்றி சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரையே வந்தது. எதிர்காலத்தில் சாதம் சாம்பார் எல்லாம் கேப்ஸ்யூல் வடிவில் வந்துவிடும் என்று. விண்வெளிக்குச் செல்பவர்கள் கூட இப்படி ஏதோ சாப்பிட கொண்டு செல்வார்கள் என்று எங்கோ வாசித்த நினைவு..

    கீதா

    பதிலளிநீக்கு
  49. என் கண்ணில் இருபது அறுபதாகத்தான் தெரிகிறது!! ஹிஹிஹிஹி

    பெரைடோலியா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  50. பொதுவாகவே நாட்டியம் கற்கும் ஆண்களில் சிலர் அப்படியான பாவனைகளில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் - முதல் பகுதிக்குச் சொல்ல விட்டுப் போச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
  51. //ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப்படுவதை தாங்காத உயர்ந்த உள்ளம்.. //

    இது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஏன் என்று சொல்வதை பொதுவெளி என்பதால் தவிர்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  52. //ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப்படுவதை தாங்காத உயர்ந்த உள்ளம்.. //

    இது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஏன் என்று சொல்வதை பொதுவெளி என்பதால் தவிர்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!