செவ்வாய், 27 டிசம்பர், 2022

சிறுகதை : வீடு - துரை செல்வராஜூ

 வீடு

துரை செல்வராஜூ 

** **

" நல்லாத் தான் இருக்கு!.. "

" அப்போ டாக்குமெண்ட் போட்டுடலாமா.. நாளைக்கு நல்ல நாள்!.. "

அந்த அம்மாளுக்கு அவசரம்.. ஆர்வம்...  தங்க நிறக் கண்ணாடியையும் மீறிக் கொண்டு கண்கள் பளபளத்தன.. அவருக்குப் பின்னால் அவரது கணவர் - சிவனே!.. என்று..

கோபியை மெல்லக் கிள்ளினாள் மஞ்சு..  

அவள் முகத்தை நோக்கினான் கோபி..

பேசாமல் இருக்கவும்!.. - என்று பேசாமல் பேசினாள்..

கோபிக்கும் மஞ்சுளாவிற்கும் கல்யாணம் ஆகி இன்னும் கொடி பெருக்கிப் போட வில்லை.. அண்ணன் அண்ணியுடன் வாடகை வீட்டில் வளர்ந்த கோபி இப்போது தனக்கென ஒரு கூட்டைத் தேடிக் கொண்டிருக்கின்றான்..

அண்ணன் ஒரு பக்கமும் இவன் ஒரு பக்கமுமாக கடந்த நான்கு நாட்களாகத் தேடிக் கொண்டு இருக்கின்றனர்.. 

அவர்களது இலக்கு தனி வீடாக இரண்டு அல்லது மூன்று வருட ஒத்தி அனுபவத்திற்கு.. ஒத்தி அனுபவம் என்றால் மொத்தமாக ஒரு தொகையைக் கொடுத்து விட்டு பேசிக் கொண்ட காலம் முடிந்ததும் பணத்தைக் கையில் வாங்கிக் கொண்டு வருவது..

ஆனால் எதிர்ப்படுவன எல்லாம் மாதாந்திர வாடகைக்குத் தான்..
இதில் வாடகைத் தொகையை நினைத்தாலே  நடுத்தர மக்களின் அடி வயிறு கலங்கும்..

ஆயினும்  வீடு அற்றவர்களுக்கு வேறு வழியில்லை.. வாடகை கொடுத்தே தேய்ந்து போன குடும்பங்கள் ஆயிரம்.. பல்லாயிரம்..
 
கட்டிட உரிமையாளர்கள் சொல்வதெல்லாம்
சொத்து வரி
பத்து வரி..
சுரைக்காய் வரி
சுண்டைக்காய் வரி..

பால் விலை
பருப்பு விலை..
சிலிண்டர் விலை சீயக்காய் விலை.. 
- என்பது தான்..

அட.. என்னங்கடா இது!?.. - என்று கேட்டால்  அந்தப் பக்கம் யோகா ஸ்கூல் இந்தப் பக்கம் யுனிவர்சிட்டி.. எதிர்ப்புறம் டயாலிசிஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி பின்புறம் பெர்டிலிட்டி சென்டர் என்கிறார்கள்..

சரி... இங்கே தான் இப்படி என்று மாநகராட்சி குப்பைக் குடோனுக்குப் பக்கத்துல  போய்ப் பார்த்தால் அங்கேயும் தலை தெறிக்கும் படிக்கு வாடகை..

வாடகைக்கு வீடு தேடி அலைவதை மட்டும் சொல்லி முடியாது.. 

எப்படியோ கேள்விப்பட்டு கோபியும் மஞ்சுவும் வந்திருக்கின்றனர்.. கீழே வீட்டு உரிமையாளர் வசிக்க மேல் தளத்தில் இரண்டு பகுதிகள்.. ஒன்றில் யாரோ குடியிருக்க மற்றொன்று காலி.. அதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்..

" முன் கூடத்தைத் தானே பார்த்திருக்கிறோம்.. மற்ற இடத்தை எல்லாம் பார்க்க வேண்டாமா?..."  - மஞ்சு கேட்டாள்..

" ஓ.. பார்க்கலாமே!. " - அந்தக் கண்ணாடி அம்மாளிடம் பரபரப்பு..

" இது அட்டாச்டு பெட்ரூம்..  நீங்க குடி வந்தீங்க.. ன்னா உங்க இஷ்டத்துக்கு ஹீட்டர், ஏசி - வச்சுக்கலாம்.. "

" ம்.. "

" இது கிச்சன்.. சொல்ல வேண்டியது இல்லை.. கீழே மேலே எல்லாம் ஃபைபர் கிளாஸ் செல்ஃப்.. இந்த ஓரமா  பிரிட்ஜ் வச்சுக்கலாம்!.. "

" ரொம்பவும் சின்ன கிச்சன்..  அம்மி வைக்கறதுக்கு இடம் இருக்காது போல இருக்கே... கிரைண்டர் வைக்கவும் இடம் இல்லையே!.. "

மஞ்சு முணுமுணுத்தாள்..

" அம்மியா!.. அது எதுக்கு?.. "

கண்ணாடி அம்மாளிடம் அதிர்ச்சி..

" எந்தக் காலத்துப் பொண்ணு..மா  நீ!.. டெக்னாலஜி எல்லாம் மாறிப் போய் தேங்காய் சைஸுக்கு மிக்ஸி வந்துடுச்சி.. இந்தக் காலத்துல நீ வந்து அம்மிக் கல்லு ஆட்டுக் கல்லு.. ன்னு தேடிக்கிட்டு.. "

" மழ நாள்.. கரண்ட் இருக்காது.. அதுக்காக சமையல் செய்யாம குழம்பு வைக்காம இருக்க முடியுமா?.. "

" மசாலாப் பொடி வாங்கி வச்சுக்க வேண்டியது தான்!.. "

" எனக்கு  அம்மி அவசியம்!.. "

நோ.. நோ!.. அம்மியி.. ல எதையாவது  வெச்சு சரட்.. புரட்.. ன்னு இங்கே அரைச்சா கீழே நாங்க எப்படி குடி இருக்கிறது?.. அதனால அம்மி எல்லாம் வைக்கக் கூடாது!.. புருசன் பெண்டாட்டி கை நிறைய சம்பாதிக்கப் போறீங்க.. சமையலுக்கு ஏது நேரம்.. எதுக்குக் கஷ்டம்?..  "

கண்ணாடி அம்மாளிடம் குதர்க்கம்.. வக்கிரச் சிரிப்பு..

" சரி.. அத விடுங்க..  ரெண்டு குடம் தண்ணி பிடிச்சு வைக்கிறதுக்கு
கிச்சன்.. ல எடம் எங்கே?.. "

" எதுக்கு தனியா தண்ணி பிடிச்சு வெச்சுக்கணும்?.. டூ இன் ஒன் வாட்டர் டிஸ்பென்சர் ஒன்னு வாங்கி வச்சுக்கிட்டா ஏது பிரச்னை?.. கூல் வாட்டரும் ஹாட் வாட்டரும் சிங்கிள் மினிட்.. ல கிடைக்குமே!.. "

" ஓ.. குட் ஐடியா.. சாலரி.. ய எடுத்து அப்படியே மினரல் வாட்டருக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் கொடுத்திடலாம்!.. " - சிரித்தாள் மஞ்சு..

" டேங்க் தண்ணிய விட மினரல் வாட்டர் தான் நல்லது.. ன்னு இன்னிக்கு சொல்றாங்களே!.. "

" சொல்றவன்  ஆயிரம் சொல்வான்... அவனுக்கும் பிசினஸ் நடக்கணுமே!.. "

" கிச்சன்.. ல வாஷ் பேஸின் சின்னதா இருக்கே.. "

" குடும்பத்துல ஒரு குக்கர் ரெண்டு கப் ரெண்டு பிளேட் டம்ளர் தான் இருக்கப் போவுது.. அதைக் கழுவுறதுக்கு இது போதும்!.. "

" வார்த்தைக்கு வார்த்தை பதில்  சொல்றீங்க!.. "
உள்ளூரக் கடுப்பு ததும்பியது.. ஆனாலும் மஞ்சு சிரித்து வைத்தாள்..

" இல்லேன்னா எல்லாத்தையும் கட்டி ஆள முடியுமா?.. இது ஸ்டோர் ரூம் மாதிரி.. நீ வேணா வேற எதுக்கும் யூஸ் பண்ணிக்கலாம்.. "

" ஜன்னல் ஒன்னு கூட இல்லையே!.. "

" ஸ்டோர் ரூமுக்கு ஜன்னல் எதுக்கு?.. "

" இது சிங்கிள் டாய்லெட்... "

" சிங்கிள் டாய்லெட் இவ்ளோ சின்னதா இருக்கே.. வாஷிங் மெஷின் வைக்கிறது எங்கே?.. "

" வேற எங்கே?..  எக்ஸ்ட்ரா பைப் லைன், பவர் பாய்ண்ட் எல்லாம் இங்கே தான வெச்சிருக்கு.. " 

" வாஷிங் மிஷின வச்சிட்டா உள்ளே போக முடியாது போல இருக்கே.. " - மஞ்சு சந்தேகம் கிளப்பினாள்..

கண்ணாடி அம்மாளுக்கு எரிச்சலான எரிச்சல்.. இருந்தாலும் பொறுமையை இழக்கவில்லை.. காரியம் ஆக வேண்டுமே.. பின்புறம் வந்து கொண்டிருப்பவரின் கையில் மிக்ஸர் இல்லையே தவிர ஏகத்துக்கும் அமைதி..

அஞ்சு லட்ச ரூபாய்.. மூனு வருஷம் ஒத்திக்கு என்று பேச்சு.. புருஷன் அப்பாவியா இருக்கான்.. இவ புள்ளப் பூச்சி மாதிரி துளைச்சு எடுக்கிறாளே!.. இந்தப் பார்ட்டியை விட்டுடாம அமுக்கி டாக்குமெண்ட் போட்டுடனும்...  கண்ணாடி அம்மாளின்  மனதிற்குள் காட்டுக் குருவி கத்தியது..

" டைனிங் டேபிள் சேர் போடறதுக்குக் கூட இட வசதி இல்லையே.. "

மேலும் ஒரு குறை மஞ்சுவிடம் இருந்து..

" அதெல்லாம் அட்ஜஸ் பண்ணிக்கத் தான் வேணும்.. ஆயிரத்து முன்னூறு சதுர அடிக்குள்ள இன்னும் என்னதான் பண்றது?.. கிச்சனுக்கு சைடுல பாருங்க.. நாலுக்கு பத்து பால்கனி.. ஈவினிங்.. ல டைம் இருந்தா நல்லா பாஸ் ஆகும்!.. "

கண்ணாடி அம்மாளுக்குப் பெருமிதம்.. 

" துணி காயப் போடணும்.. ன்னா மேலே மொட்டை மாடி .. சேப்டிக்காக பூட்டி வைச்சிருக்கேன்..  சாவி வந்து வாங்கிக்கணும்.. மறக்காம திருப்பிக் கொடுத்துடணும்.."

" ஓஹோ.. "

" என்னம்மா புடிச்சிருக்கா?..  தம்பிக்கு வீடு இஷ்டம்.. ன்னு நெனைக்கிறேன்!.. " கண்ணாடி அம்மாளின் விழிகளில் எதிர்பார்ப்பு ..

" பெட் ரூம் தவிர மற்றது எல்லாம் வசதி குறைச்சலா இருக்கே!.. " 

கண்ணாடி அம்மாளுக்கு கோபம் வந்த விட்டது..

" என்ன குறைச்சலா இருக்கு?.. இதே மாதிரி தான் அடுத்த போர்ஷனும்.. அங்கே ரெண்டு பேர் குடித்தனம் நடத்தலையா?.. "

" அடுத்தவங்களப் போல எல்லாம் வாழ முடியாதுங்க... முதல்ல இந்த போர்ஷனுக்கு EB மீட்டர் எங்கே.. வாட்டர் டேங்க் எங்கே?..  அஞ்சு லட்ச ரூபாயக் கொடுத்துட்டு ஒவ்வொரு நாளும் உங்க வீட்டு வாசல்..ல வந்து நிக்க முடியுமா தண்ணி வேணும்.. ன்னு?.. " - மஞ்சுவின்  வார்த்தைகள் கூர்மையாகின..

" நாங்க எங்களுக்காத் தானே இப்படி கட்டினோம்.. நீங்க  பார்க்க வந்திருக்கீங்க.. ன்னு  வீட்டைக் காட்டிக்கிட்டு இருக்கேன்.. தண்ணி பிரச்னைய பேசித் தீர்த்துக்கலாம்!.. "

" இருந்தாலும் - ஒத்தி அனுபவத்துக்கு எடுக்கும் போது இதெல்லாம் பிரச்னையில வந்து முடியும்.. நாளா வட்டத்துல நமக்கு  மனசு கசந்து போனா நீங்க தண்ணியி.. ல கை வைப்பீங்க.. ப்யூஸ பிடுங்கி விடுவீங்க.." 

கண்ணாடி அம்மாளுக்கு சுருக் என்றது..

" வீட்ல ஒரு கடிகாரம் மாட்டக் கூட ஆணி கிடையாது.. "

" கடிகாரம் எதுக்கு?.. செல் போன்.. ல தான் டைம் பார்க்கலாமே!.. "

" மற்றபடி இந்த போர்ஷனுக்கு.. ன்னு தனி வாசல் வசதி இல்லை.. சமயத்துல - நடு ராத்திரியில வந்தா  வெளிய இருந்து நாங்க கத்தணும்.. உள்ளே இருந்து வந்து நீங்க கதவைத் தெறந்து விடணும்... எத்தனை நாளைக்கு இப்படி கதவைத் தெறந்து விடுவீங்க?.. "

" நைட்.. ல லேட்டா வர்ற அளவுக்கு அப்படி என்ன வேலை!.. "

" நானும் அவரும் ஹோட்டல் பார்க்.. ன்னு போவோம்.. மிட்நைட்  மசாலா என்ஜாய் பண்ணிட்டு விடிகாலை ல வருவோம்!.. " - சடார் எனப் பதில் சொன்னாள் மஞ்சு..

பேச்சு திசை திரும்புவதை உணர்ந்த கண்ணாடி அம்மாளிடம் இருந்து கேள்வி..

" இப்போ முடிவா என்ன தான் சொல்றீங்க?.. "

" நாலு பேர் கூட சேர்ந்து இருக்க முடியாதபடிக்கு இருக்குங்க!.. "

" நாலு பேரா... அது யாரு?.. "

" நான், இவங்க, என்னோட அம்மா, நாளைக்குப் பொறக்கப் போற குழந்தை..  இடையில பெரிய அத்தான் அக்கா, பிள்ளைங்க எல்லாம் வந்துட்டுப் போவாங்க!.. "

" ம்ஹூம்... இது சரி வராது.. ரெண்டு பேர் கூடுதலா ஒரு குழந்தை..  அவ்வளவு தான்.. "

" சரி... நாங்க வேற இடம் பார்த்துக்கறோம்!... "

" பாருங்க.. பாருங்க!.. "

கோபியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு விறுவிறு  என்று படிகளில் இறங்கினாள் மஞ்சு..

" அந்த  வீடு நல்லாத் தானே இருக்கு மஞ்சு?.. "

" அது வீடு இல்லடா செல்லம்.. கட்டடம்!.. "  - என்றபடி கோபியின் இடுப்பில் கிள்ளினாள் மஞ்சு..


மாடியில் இருந்து இறங்கும் போது -  பின்னால் ஒலித்த  வசவு மொழிகள் இன்னும் காதுகளைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.. 
 
ஆனாலும்,
கோபியின் முதுகில் சாய்ந்தபடி - இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்  மஞ்சுவின் மனதிற்குள் ஆனந்தப் பரவசம்..

கோபியின் மனதிலும் தான்..

***

53 கருத்துகள்:

  1. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக்களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று மறுபடியும் எனது ஆக்கத்தினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. வாசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஆர்வம் விளைந்தால் சரி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நினைத்துதான்.... விளையும் என்று நம்புவோம்.

      நீக்கு
  6. //பின்புறம் வந்து கொண்டிருப்பவரின் கையில் மிக்ஸர் இல்லையே தவிர ஏகத்துக்கும் அமைதி//

    ஹா.. ஹா.. இரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் ஆனந்த ரசனையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
    2. இது ஒரு தெக்கினிக்கு. மனைவியை விட்டு கறாரா பேச்ச் சவல்வது. தான் அப்பாவி போல நின்றுகொண்டிருப்பது. தகையவில்லை என்றால் தன் மீது குற்றம் வராது பாருங்கள்.

      நீக்கு
    3. ஆமாம்..

      தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி நிற்பது - பரம்பொருள் மாதிரி..

      நீக்கு
  7. எதுக்காக மஞ்சுவும் கோபியும் வீடு பாக்க வேந்தர்க்காங்க? சும்மா டைம் பாஸ்?..
    நேரம் கிண்டலும் கேலியுமா ஜாலியாக் கழிந்தது என்பதற்குத் தான் அந்த இடுப்பில் கிள்ளலும் ஆனந்த பரவசமுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இளநெஞ்சங்கள் சிலவற்றுக்கு அன்றைய பொழுது அலுப்பில் அசதியில் கழிந்தால் அதற்கப்புறம் முக்கியமான ஒன்றில் மூழ்கி விடுவார்கள்..

      அண்ணா அறியாததல்ல...

      அது தவிர்க்க முடியாதது.. வீட்டுக்குத் திரும்பியதும் சந்தோஷம் .. கொண்டாட்டம் ....

      தலை வாழையிலையில் விருந்து தான்..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
    2. அலுப்பில் அசதியிலா கழிந்தது?
      இடுப்புக் கிள்ளல் சந்தோஷத்தில் விளைவது அல்லவா?

      நீக்கு
    3. அலுப்பு அசதி - மனதில்...

      அதற்கு ஒரே warm up இடுப்பில் கிள்ளல் தான்!..

      நீக்கு
  8. வந்தாங்க? -- வேந்தர்காங்கன்னு ஆயிடுச்சு. திருத்தி வாசிக்கவும், ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
  9. இது -
    இல் வாழ்வினோர் தம்மைக் குறிக்கின்ற கதை..

    அதிலும் சிறிசுகள்..

    சந்தோஷமாக இருக்கத்தான் விடுவோமே!..

    பதிலளிநீக்கு
  10. இல்வாழ்வினோ தம்மைக் குறிக்கின்ற- வா?
    அபுரி.
    விளக்கமா சொல்ல முடியுமா, தம்பி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. மனை மாட்சி என்பதன் மறுவடிவம் தான் இல் வாழ்தல்..

      அது இல்லையேல்
      வாழ்தல் இல்..

      வார்த்தையை மாற்றிப் போட்டால் வாழ்வே மாறி விடும்..

      இதுவே தமிழ்..

      இது பற்றி
      நிறையவே பேசலாம்!..

      நீக்கு
  11. வீடு.... அவங்க எதிர்பார்ப்பு அதிகமில்லையோ?

    வீடு தேடும் படலம் ரசனையாக எழுதியிருக்கீங்க. உரிமையாளருக்கு வீடு பற்றிப் பெருமிதம். ஒத்திக்கு வாங்க வந்தவருக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். கடைசியில் கூட்டுக்குடித்தனமே போதும்னு தோணிடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு..

      அவங்க எதிர்பார்ப்பு அதிகமில்லையோ?..

      இல்லை..

      ஏன் கூடுதல் எதிர்பார்ப்பு என்பதற்கு மஞ்சு பதில் சொல்கின்றாள் கதைக்குள்..

      நீக்கு
    2. அன்பின் நெல்லை அவர்களது வருகையும் துள்ளலான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. கோபியின் இடுப்பில் கிள்ளினாள் - கௌதமன் சார் மாற்றிப் புரிந்துகொண்டு படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரோ?

    முதல் படம் நல்ல முயற்சி. மிக்சர் மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
  13. வீடு தேடும் படலம்! கதைக்கரு. கதை நன்று....அனுபவமாகச் செல்கிறது.

    வீடு தேடுதலினூடே ஒரு சில விஷயங்கள்...அம்மி...

    இப்ப அடுத்த வீடு தேடி போகணும் போல!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்து வீடுகளில் அம்மி மேடை என்று சமையல் கட்டின் ஒரத்தில் இருக்கும்.. ஆட்டுக்கல் தாழ்வாரத்தில் அல்லது அந்தந்த வீடுகளின் அமைப்புக்குத் தக்கபடி அமைக்கப்பட்டிருக்கும்.. இப்போது அப்படியெல்லாம் இல்லை..

      தரை தளத்தில் தனி வீடு எனில் பக்கவாட்டில் அம்மியை வைத்துக் கொள்ளலாம்.. நம்ம ஊர் மின்சாரத்தைப் பற்றி நன்றாகவே நமக்குத் தெரியும்.. மசாலா அரைக்க முடிய வில்லை எனில் எங்கள் வீட்டில் மிகவும் சிரமம்.. கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டுகளை வாங்குவதே இல்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  14. இங்கு வீடு தேடிய போது உரல்கள், அம்மிகள் அதாவது பங்களூரின் வடக்குப் பகுதிகளில் தனி வீடு என்றால் இருக்கின்றன கொஞ்சம் பழைய வீடுகள் என்றால் இருக்கின்றன.

    முந்தைய வீட்டில் உரல் இருந்தது. அடுக்களைக்குள்ளேயே. நான் அரைத்ததும் உண்டு.

    இங்கும் ஒத்தி தான் பல வீடுகளுக்கு.

    கதையில் 1300 சதுர அடின்னு சொல்றீங்களே அண்ணா அப்ப நல்ல பெரிதாக இருக்க வேண்டுமே வீடு. வீடுகளில் ஆணி இல்லை என்று அந்தப் பெண் சொல்வது கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்போ ஹாஹாஹா

    வீட்டில் ஆணி அடிக்காமல் இருப்பது நல்லதுதானே. பெரும்பாலும் புதிய வீடுகளில் உடமஸ்தர்கள் ஆணி அடிக்க விடுவதில்லை. நாமும் ஆணி அடிக்கும் பழக்கம் கிடையாது. இப்போதெல்லாம் ஒட்டும் ஹூக்ஸ் வந்துவிட்டதே...மாட்டிக் கொள்ள.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆணி இல்லை என்று அந்தப் பெண் சொல்வது கொஞ்சம் கூடுதல் !.. //

      இருக்கலாம்.. மஞ்சுவைத் தான் கேட்க வேண்டும்..

      // இப்போதெல்லாம் ஒட்டும் ஹூக்ஸ் வந்துவிட்டதே.... //

      அவைகள் தரமானவை என்றால் சரி..

      நீக்கு
  15. துரை அண்ணா, கதையில் கிச்சன் சிறிது போலத்தான் இங்கும் பல வீடுகளில் கிச்சன் மிக மிகச் சிறிது எந்த வசதியும் இருக்காது, கேட்டால் பெரும்பான்மையோர் வெளியில்தானே வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்ற பதில் வந்தது. சமீபத்தில் வீடு தேடிய படலத்திலும்...

    வாட்சப்பில் ஒரு கார்ட்டூன் வந்தது. இரு அடுக்கு மாடி வளாகம். பெட் ரூம், ஹால் எல்லாம் இருக்கும் அடுக்களை தவிர....வளாகங்களின் பெயர்கள் - ஸ்விக்கி, ஜொமாட்டோ....!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புருசனும் பெண்டாட்டியும் கை நிறைய சம்பாதிக்கும் போது சமைத்துச் சாப்பிட தலையெழுத்தா?..

      என்ற கேள்வி இன்றைக்கு சர்வ சாதாரணமாக இருக்கின்றது..

      அதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்..

      அன்பின் வருகையும் கருத்துகளும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  16. கதை இன்றைய நிலையை சொல்கிறது. மஞ்சு கேட்கும் கேள்விகள் எல்லாம் சரிதான். நான் ரசித்து படித்தேன். நன்றாக இருக்கிறது கதை.

    ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி கொண்டு இருக்க வேண்டும்.
    இந்த வீடு வீட்டு உரிமையாளரிடமும் ஒவ்வொன்றுக்கும் நிற்க வேண்டும் போல.
    வீட்டுக்கு விருந்தினர் வந்தால் கூடுதல் தண்ணீர் செலவு ஆகும் என்று கணக்கு பார்க்கும் வீட்டில் எப்படி குடியிருப்பது?

    //மற்றபடி இந்த போர்ஷனுக்கு.. ன்னு தனி வாசல் வசதி இல்லை.. சமயத்துல - நடு ராத்திரியில வந்தா வெளிய இருந்து நாங்க கத்தணும்.. உள்ளே இருந்து வந்து நீங்க கதவைத் தெறந்து விடணும்... எத்தனை நாளைக்கு இப்படி கதவைத் தெறந்து விடுவீங்க?.. "//

    என் தங்கை முன்பு இப்படி ஒரு வீட்டில் இருந்தாள், மாடியில் இரண்டு வீடு, கீழே வீட்டுஉரிமையாளர். அவர்கள் முன் கதவுக்கு மூன்று சாவி இருப்பதால் வாடகைக்கு இருப்பவர்கள் எந்த நேரம் வந்தாலும் திறந்து கொண்டு வரலாம். அழைப்பு மணி தனி தனியாக மூன்று. தெரியாமல் அடித்து விட கூடாது என்று கதவு எண் கொடுக்கப்பட்டு இருக்கும்.தங்கை பால்கனி வழியாக சாவியை கூடையில் போடுவாள் நாங்கள் திறந்து கொண்டு மாடிக்கு போவோம்.

    குடி வைக்க ஆசை படுபவர்கள் அதை எல்லாம் கவனித்து கட்டினால் யாருக்கும் சிரமம் இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வீட்டுக்கு விருந்தினர் வந்தால் கூடுதல் தண்ணீர் செலவு ஆகும் என்று கணக்கு பார்க்கும் வீட்டில் எப்படி குடியிருப்பது?.. //

      தாங்கள் சொல்லியிருப்பவை அனைத்தும் உண்மை.. இப்படியான பிரச்னைகள் உள்ள வீடுகள் அநேகம்..

      ஆனாலும் தேவையிருப்பவர்கள் அடங்கித்தான் போகின்றார்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. கதையில் வரும் வீட்டுக்கார அம்மாவின் ஆளுமை குணத்தை சரியாக வரைந்து விட்டார் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...
      கௌதம் ஜியின் திறமை அபார்ம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. வீடு தேடும் படலம் ரசனையாக செல்கிறது உரிமையாளருடன் உரையாடல் ரசித்துப் படித்தேன் .

    பல இடங்களிலும் இன்றைய கால வீடு தேடும் படலம் இப்படித்தான் இருக்கும் .

    இறுதியில் ஆனந்தப் பரவசத்தில் அவர்கள் திரும்புவது என்று முடிவது எமக்கும் சிரிப்பை வரவழைக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. // பல இடங்களிலும் இன்றைய கால வீடு தேடும் படலம் இப்படித்தான் இருக்கும் . //

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  20. வீடு என்பது ஒரு கட்டிடம் மட்டும் அல்ல எனப் புரிந்து கொண்டிருக்கும் மஞ்சுவுக்கு இத்தனை வயது ஆகியும் வீட்டை ஒரு பணம் சம்பாதித்துக்கொடுக்கும் இடமாகவே பார்க்கும் வீட்டுச் சொந்தக்கார அம்மாவுடன் எப்படி ஒத்துப் போகும்? மஞ்சு கேட்ட கேள்விகள் எல்லாமும் சரியே! வீட்டிற்கு யாருமே வரக்கூடாது என்று சொல்ல முடியுமா? மஞ்சு அந்த வீட்டை நிராகரித்தது சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை... வீடு என்பது கட்டிடம் அல்லவே...

      உணர்வுகளாலும் உறவுகளாலும் பின்னிப் பிணைந்ததல்லவா வீடு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  21. வீட்டுக்கார அம்மாவையும் அவர் கணவரையும் படம் வரைந்து காட்டி இருக்கும் கௌதமன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதம் அவர்களின் திறமை அபார்ம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. தாமதமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!